சமகால இலக்கியம்
|
பாதையில் பதிந்த அடிகள் முன்னுரை ஒரு தேசிய வரலாற்றில் எந்த ஒரு மக்கள் இயக்கமும் பெண்கள் சம்பந்தப்படாததாக இருக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் இயக்கத்தை அச்சாணியாக நின்று இயக்குபவர்கள் பெண்களே என்றாலும் கூட மிகையில்லை. ஏனெனில் அதன் சாதக, பாதகமான பாதிப்புக்களை முழுமையாகத் தாங்குபவர்களும் அவர்களே தாம். ஆனால் ஒரு தேசிய வரலாற்றையோ, சமுதாய வரலாற்றையோ கணிப்பவர்களும், பதிவு செய்பவர்களும் பெண்ணின் முக்கியத்துவத்தை அத்துணை உயர்வாகக் கருதுவதில்லை. ஜான்ஸிராணியின் தீரத்தைப் பற்றி எதிராளியே குறித்து வைத்தான். வள்ளியம்மையின் மன உறுதியைப் பற்றி, தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகப் போராட்டத்தை உலகுக்களித்த காந்தியடிகளே எழுதி வைத்தார். ஆனால் அத்தகைய பெருந்தன்மையாளர் மிக மிக அபூர்வமாகக் காணப்படும் நிலையில் அரசியல் அரங்கிலும், சமுதாய அரங்கிலும் பல பெண்மணிகள் காட்டிய அசாதாரணமான மன உறுதியும், துணிச்சலும், சமூக நீதிக்காகப் போராடும் திறனும் வெளிக்குத் தெரியாமலே போய் விட்டதுதான் உண்மை. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, பெண்கள் சனாதன சமயக் கொடுமைகளுக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் உள்ளாகி ஒடுக்கப்பட்டிருப்பதால், அவற்றை மீறுவதற்கே போராளியாக மாறவேண்டி இருக்கிறது. அப்படித் தடைகள் மீறி, ஒரு முட்பாதையில், குடும்ப உறவுகள், சமுதாய உறவுகள் எல்லாம் எதிர்ப்புக்களாக மாறி விட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் (ஆண்) ஆதிக்கங்களையும் எதிர்த்து, ஒரு பெண், தேசியவாதியாக, சமுதாயவாதியாக நின்று தாழ்த்தப்பட்ட பண்ணையடிமைகளுக்கும் உழைப்பாளருக்கும் நீதி கோரிப் போராடி, இறுதியில் ஒரு தியாகியாகவே தன் இன்னுயிரையும் ஈந்தாள். ஆனால், இந்த அம்மையைப் பற்றி அவள் சார்ந்திருந்த அரசியல் கட்சியுடன் தொடர்பு கொண்டிருக்கும் இன்றைய பெண்மணிகளே அறியார்! 1979-80-81 ஆண்டுகளில் கீழ்த்தஞ்சைப் பகுதியில் உழவர் பெருமக்களின் வாழ்-நிலையை ஆராயப் போன நான் 1953ல் மரித்த மணலூர் மணியம்மாள் என்ற இந்த அரிய பெண்மணியைப் பற்றி முதன் முதலாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வோர் உழவர் குடிலிலும் இந்த அம்மையைத் தெய்வமாகக் கொண்டாடியதையும் அவருடைய செயல்களை, வீர சாகசங்களை, போராட்டங்களை, அவர்கள் கதை கதையாக விவரித்ததைக் கேட்டு வியப்பிலாழ்ந்தேன். முதலில் நொத்தூர் இராமசாமி என்ற முதியவர், வறுமையும் முதுமையும் தம்மை ஒடுக்கி இருந்த நிலையில், என்னிடம் மணியம்மையாரின் அளப்பரிய பரிவையும், துணிச்சலான செயல்களையும் பலவாறாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர், அம்மையாருக்கு ஒரு காலத்தில் வண்டி ஓட்டியிருந்தாராம். தெளிவில்லாத முதியவரின் புலம்பல் என்று தான் முதலில் நினைக்கத் தோன்றியது எனக்கு. ஆனால், நான் முற்றிலும் கேள்விப்பட்டிராத, நம்ப முடியாததொரு செய்தியாக, அவர் ஒரு கைம்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அவமானக் கொடுமையிலிருந்து வெளிப்பட்டு, ஆண் கோலத்தில், ஒடுக்கிய சநாதனங்களை எதிர்த்து நின்றார் என்ற செய்தி, சுரீலென்று என் உணர்வில் உறைத்தது. அப்பெருமாட்டியைப் பற்றிப் பிறகுதான் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த பெண்களிடமும் மற்றவர்களிடமும் நான் விசாரிக்கத் தலைப்பட்டேன். மூத்த சகோதரிகள், நான் கேள்விப்பட்ட செய்திகள் உண்மையே என்று ஆமோதித்தார்கள். நடவுப் பாடல்களை இசைக்கும், உழவர் குடிப் பெண்மக்களின் நாவிலே தவழும் ஓரிரு பாடல்களிலும் இந்த அம்மை அமரத்துவம் பெற்றுத் திகழ்வதைச் செவியுற்றேன். தேசிய சமுதாய அளவில், புரட்சிப் பெண்மணியாக, மூடப்பழமைகளை ஆதிக்கங்களை எதிர்த்துப் போராடிய இப்பெண்மணியின் பெயரைக் கூட நான் அதுகாறும் கேள்விப்பட்டிருக்கவில்லையே? இந்நாட்களில், அரசியல் சுதந்தரம், கல்வி உரிமை, பொருளாதார சுதந்தரம் எல்லாம் வந்திருந்தும் பெண் புதிய புதிய விதங்களில் சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறாள். கருவிலேயே அவளை அழிக்கும் ஒரு செயல் கூட நியாயப்படுத்தப்படும் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவற்றை எதிர்த்து நிற்கும் போராட்டச் சக்தியும் துணிவும் இன்றும் நமக்கு வரவில்லை. எனவே மணியம்மையின் வரலாற்றை எப்படியும் வெளிக்கொணர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன். இந்த என் கனவை நினைவாக்க, மேலும் சில ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியிருந்தது. பிறகு முழுமூச்சுடன் செயல்பட, எனக்கு உறுதுணையாக நின்று உதவிகள் அனைத்தும் செய்தவர்கள் பெரும்பான்மையோரும் அந்த உழவர் குலப்பெருமக்களேதாம். வில்வனம் படுகை கோபாலன் என்ற தோழர், முதன் முதலாக மணியம்மையைப் பற்றி நான் கேள்விப்பட்ட நாட்களில், என்னை மணலூருக்குக் கூட்டிச் சென்ற நாளிலிருந்து, கடைசியாக நான் வரலாற்றை எழுதி முடிக்கும் வரையிலும், என் முயற்சியில் தம்மை முழுதுமாக ஈடுபடுத்திக் கொண்டு தம் பங்கை அளித்திருக்கிறார். அவர் வாயிலாகவே, நான் அனைத்து இயக்கக்காரர்கள், நண்பர்கள், அக்கால வரலாற்றில் பங்கு கொண்டவர்கள் அனைவரையும் கண்டு கொண்டேன். |