பாதையில் பதிந்த அடிகள் - Paathaiyil Pathintha Adigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



17

     ஆண்டு 1944, மே மாதம் மூன்று, நான்கு தேதிகளில், மன்னை நகர் அதுகாறும் காணாத விழாக் கோலம் கொண்டது. அதுகாறும் திருவிழா என்பது, நகரில் கோயில் கொண்டுள்ள இராஜகோபால சுவாமி கோவில் சார்ந்து வெண்ணெய்த்தாழி உற்சவமாகவே இருந்து வந்திருக்கிறது.

     ஆனால் இந்த விழா புது மாதிரியான விழா. உழைக்கும் மக்கள் பள்ளுப் பறைகள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் ஆயிரமாயிரமாகத் திரண்டு வந்த விழா. இந்த விழாவில், பூசை, அலங்காரம், பட்டுப்பாவாடை அணிந்தவர்களின் அணிகள் ஏதும் கிடையாது. ஒரு சிலரின் ஆடம்பர விழா அன்று இது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வோர் ஏழையும், தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வழி காணும் விழாவாகவே நினைத்து, தங்கள் காணிக்கைகளைச் சுமந்து வருகின்றனர். பாற்குடங்கள், தயிர்க்குடங்கள், அரிசி, பருப்பு, காய்கறி வகைகள் என்று அலங்காரச் சீராக மன்னை நகரின் மாநாட்டுப் பந்தலுக்கு மேள தாளங்கள், கொம்பு, தாரை தப்பட்டைகளுடன் வந்து சேருகின்றன. அனைத்து உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு இதைவிட அரியதோர் விளக்கம் வேறு எங்கேனும் காண முடியுமா? மணி இம் மாநாட்டுக்காக உண்டியல் குலுக்கியிருக்கிறாள். ஆனால், கிடைக்கும் கூலி நெல்லில் ஒரு பகுதியைச் சேமித்து, துளிகளைப் பெருவெள்ளமாக்கி இந்த மாபெரும் வேள்வியில் தம்மை ஈடாக்கிக் கொண்ட அந்த எளியவர்களைக் கண்டு மனமுருகி நிற்கிறாள் மணி. தீண்டாமை என்ற ஓர் அரணுக்குள் கண் விழிக்கும் இளம் குருத்துகள் அதுகாறும் வெளியே தடுப்பு மீறி வந்து தொட்டால் நீரும் அசுத்தமாகி விடும் என்பதை எப்படி ஏற்றிருப்பார்கள்?

     தொட்டுப் பார்க்கலாம், மேல் சாதித் தெருவுக்குள் வாருங்கள்! என்று திராவிட இயக்கம் இவர்களை ஊக்கியது உண்மையே. ஆனால் அதற்கு மேல் ஆண்டான் அடிமைக் கொடுமைக்கு முடிவு கட்ட இந்தப் பேரியக்கம், இவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல, இந்த மன்னை நகரில் விழாக்கொடி ஏற்றுகிறது.

     முதல் விவசாயிகள் சங்க மாநாடு! விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு!

     இந்த மாநாடு வெறும் பொருளாதார அடிப்படையில் துண்டாக நின்றுவிடாமல், மக்கள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் முழுமையாக இணைக்க வழி செய்கிறது. தலைவர்கள் உரைகள், திட்டங்கள், தீர்மானங்கள் என்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, மக்களின் பிரபுத்துவ - அடிமை மனப்பான்மையையும், நிராசையில் அவிழ்ந்த சோர்வையும் புரட்டிவிடும் ஒரு சுறுசுறுப்பைத் தோற்றுவிக்கக் கலை நிகழ்ச்சிகள், அனைத்து மக்களையும் பரவசம் கொள்ளச் செய்கிறது. கந்தன் காட்டிய வழி - சுப்பனார் - சோவியத் வீராங்கனை - தான்யா என்று பல்வேறு நாடகங்களை, மக்களுக்காகவே மக்களே நடிக்கின்றனர். எழுச்சித் தத்துவம் இந்தக் கலை வடிவங்களை மேலும் பரிமளிக்கச் செய்கின்றன.

     இந்த மாநாடு, ஒடுக்கப்பட்டவர்களை ஊக்கி எழுச்சி கொள்ளச் செய்யும் பொது உடைமை இயக்கத்தின் வெற்றியாகப் பரிணமிக்கிறது. பிரபுத்துவக் கூறுகள் வாளாவிருக்குமோ? எளிய மக்களின் கட்டமைப்பு அரணை வன்முறை அதிரடிகள் கொண்டு தகர்க்க முற்படுகின்றனர். மணியின் உறவுக் குடும்பங்கள் இவளுக்கு எதிரான அஹிம்சை காங்கிரசின் அணியில் இருக்கின்றன. இவள் அவர்களை எதிரிட்டுக் கொள்ளச் சிறிதும் தயங்கவில்லை.

     “நெல்லைத் திருடினான் என்று கட்டி வைத்துத் திருக்கை மீன்வால் சாட்டை கொண்டு அடிப்பார்கள். அதாவது அவன் பெண்சாதிக்கு முன் கட்டிவைத்து அடிப்பார்கள்! அவன் பெண்சாதியையே சாணி கரைத்து வரச்சொல்லி, அவன் பொய் சொன்னான் என்று வாயில் செருப்பு வைத்து அதன் வழி அதை ஊற்றுவார்கள். பிறகு, ஓரணாக்காசை விட்டெறிந்து அவளிடம் கள் வாங்கி வந்து அவனுக்கு மானம் மரியாதை மரத்துப் போக ஊற்றுவார்கள். இந்த ஆள்கள்... அஹிம்சைக் காங்கிரஸ்!” என்று பண்ணை அருகிலேயே கூட்டம் போட்டுத் தோலுரிக்கிறாள். பண்ணையாள் கூலி, ஒப்பந்தத்தில் கண்டபடி உயர்த்திக் கொடுக்க, ஒரு மிட்டா மிராசும் ஒப்பவில்லை. குத்தகை வார விவசாயிகளுக்கு, நியாயமாகப் பெற்றுக் கொண்ட நெல்லுக்குக் களத்து மேட்டிலேயே ரசீது கொடுக்க வேண்டுமே?... அதைப் பற்றியும் அந்த வர்க்கம் சிரத்தை கொள்ளவில்லை.

     ஒப்பந்தம் என்பது, இந்த வாயில்லாப் பூச்சிகளுக்காகப் பரிந்து வரப் புறப்பட்டிருக்கும் தலைவர்களை அப்போதைக்குச் சரிக்கட்டப் பயன்படுவது. காலம் காலமாக இவர்கள் அனுபவித்துவரும் உடைமை உரிமைகளின் மீது அவர்கள் எப்படியும் கை வைக்க முடியாது என்று பிடிவாதமாகவே நிற்கிறது பண்ணை வர்க்கம்.

     எனவே, இந்த வர்க்கம் அடியாள்களை வெளிப்பிரதேசங்களில் இருந்து தருவித்து வைத்துக் கொண்டு வன்முறைக்குச் சோறு போடுகிறது. இந்த அடியாள்கள் யார்? பாசன வசதிகள் இல்லாமல், மானம் பார்த்த சீமையில் பிழைக்க வழியின்றி வயிறு பிழைப்பதற்காகச் சகோதரர்களையே கொல்லத் துணிந்து விட்ட, அடிமை வர்க்கத்தினர்தாம்.

     உடைமை வர்க்கம், இவ்வாறு, உழைப்பாளரைக் கூறுபோட்டுக் கொக்கரிக்கையில், உழைப்பாளருக்காகவே ஒன்று திரண்டு வரும் மனித சக்தி வாளாவிருக்கலாமா?

     இந்த உழைப்பாளிகளின் சங்கங்களில் உடல்பயிற்சி, தற்காப்புக்கான சிலம்பம் போன்ற விளையாட்டுகள் இளைஞரிடையே ஊக்குவிக்கப்படுகின்றன. இவர்கள் பரம்பரை விளையாட்டுகளை, இந்தச் சங்க அமைப்புகள் புதிய திருந்திய நோக்குடன், எல்லா இளைஞருக்கும் பயிற்றுவிக்க, தொண்டர் பயிற்சி முகாம்களை நடத்துகின்றன. பள்ளி மாணவராகவே இயக்கத்தில் பங்கு கொண்டு மணியுடன் உற்சாகமாகப் பணி செய்ய வந்த இளைஞன் கோபிக்கு இவள் மீது அளப்பரிய வியப்பு!

     இத்தொண்டர் பயிற்சி முகாமொன்று, நாகையின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒதுக்கமானதொரு தென்னந்தோப்பில் நடக்கிறது. நிலவு நாள்கள். அறுவடை முடிந்து, மக்கள் கிராம தேவதைகளுக்கு விழா எடுக்கும் காலமும் இதுதான். சிக்கல்சிங்காரவேலனின் திருவிழாவும், சித்திரா பௌர்ணமியுடன் நடக்கும் எட்டுக்குடி வேலனின் காவடி உற்சவங்களும், அந்தக் கீழ்த்தஞ்சை பிரதேசங்களையே விழாக்கோலம் கொள்ளச் செய்யும். இந்தத் தெய்வ விழாக்களில், சுவாமி பவனி வரும்போது, வீர விளையாட்டுகளை இளைஞர் ஆடிக் காண்பித்து மக்களின் மனங்களில் களிவெறியும் உற்சாகமும் பெருக்கெடுக்கச் செய்வது வழக்கம்.

     மணியைப் பொருத்த வகையில், அவள் எந்தத் தெய்வத்தையும் கும்பிடச் செல்வதில்லை. அந்தப் பூசைப்பெட்டியை ஒதுக்கித் தள்ளிய பிறகு, மானுடமே மேலான தெய்வம் என்று உறுதியாக நிற்கும் ஒரு பண்பு அவளுள் மேவியிருக்கிறது. அந்தப் பண்பு மேல் வர்க்கம் கொண்டாடும் எந்த ஆலயத்திலும் நேர்மையில்லை என்ற தெளிவை இவளுக்கு ஊட்டியிருக்கிறது. ஆனால்... இந்தக் கீழ் வர்க்கம்... அறியாமையும் மூட நம்பிக்கைகளுமாக அழுத்த, பூச்சியாக நசுங்கிக் கொண்டிருக்கும் மானிட உயிர்கள். அந்த மானிடத்தை மீட்க, அறியாமை நம்பிக்கைகளை அகற்றிக் கொள்ளும் முன்பு, மேலும் மேலும் புறத்தே வரும் தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தத் தற்காப்புக் கலைகள், இவர்கள் தெய்வ நம்பிக்கை சார்ந்தே காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

     மணி தொண்டர் பயிற்சி முகாமில் அமர்ந்து இளைஞர் கம்பு சுழற்றுவதைப் பார்வை இடுகிறாள்.

     நல்ல நிலாக் காலம். கடற்காற்று குளிர் சாமரமாக மேனியை வருடும் இதம். ஏதோ பழவாசனை போல், இலுப்பை மலர்களின் மணம். ஊடே பெண்கள் அணிந்திருக்கும் மல்லிகையின் மணம் பிரிக்க முடியாதபடி கலந்து கொள்கிறது.

     அம்மா உட்கார ஒரு கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருக்கிறது. தீவர்த்திக் கம்புடன் ஓராள் நிற்கிறான்.

     இந்த இளைஞர்களுக்குக் கழி சுழற்றும் ஆட்டம் கற்பித்த ஆசான் சாம்பான், ஓரமாக நிற்கிறான்.

     “உட்காருங்கள் தோழர்!...”

     கட்டிலில் அவனை உட்காரச் செய்கிறாள். நெருக்கமாக... இடம் கொடுக்கும் அளவுக்கு.

     கழி சுழற்றிக்காட்ட வந்திருக்கும் இளைஞர் அனைவருமே ஊட்டத்தினால் கொழுத்த பலாட்டியர் இல்லை. சிதறல் நெல் அரிசியும், உப்பும் புளியும், நண்டும், மீனும், நேர்மை என்ற உரமும் தாம் இவர்கள் வலிமை.

     ஆசானின் கால்களைத் தொட்டுக் கும்பிடுவதுடன் அம்மாவையும் கும்பிட்டு கிருட்டிணன் கம்பு சுழற்றுகிறான்.

     மணி உன்னிப்பாகப் பார்க்கிறாள். கைகள் அசைகின்றனவே ஒழிய, உடல் இலாகவமாக வளையவில்லை. இந்த விளையாட்டின் தத்துவமே, பிறர் தாக்குதலுக்கு உள்படாமல் தன்னைக் காத்துக் கொள்வதென்றுதான் மணி உணர்ந்திருக்கிறாள்.

     கால் மணி கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பையன் தளர்ந்து போவதைக் காண்கிறாள்.

     “என்னடா பசங்க... நீங்க. சோம்பேறிக் கையாலாகாத பசங்க ஆடற ஆட்டமா இருக்கு!...”

     அம்மாளின் இந்தக்குரல், அவர்களைத் திகைக்கச் செய்திருக்கிறது என்பதை உணர்ந்த மணி புன்னகை செய்கிறாள்.

     “கொண்டா அந்தக் கழியை, நான் காட்டுகிறேன் எப்படீன்னு?” ஆசானான சாம்பான் திகைக்க, இளைஞன் கோவிந்து, “அம்மா? உங்களுக்கு... உங்களுக்குக் கம்பு சுழற்றத் தெரியுமா?” என்று வினவுகிறான்.

     “இப்ப நாலு பேரைக் கூட்டிட்டு வந்து மோதவிடு. நான் எப்படிச் சமாளிக்கிறேன் பாரு!...”

     மணிக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகிறது. எழுந்து இடுப்புத் துண்டைச் சட்டைக்கு மேல் வரிந்து கட்டுகிறாள். உயர்த்திக் கட்டிய வேஷ்டி; சிக்கென்று கம்பை வாங்கிக் கொண்டு களத்தில் துள்ளிப் பாய்கிறாள்.

     “வாங்க...? வாங்கடா...?”

     அம்மாளின் ஆட்டம் கண்டு அந்தத் தோப்பே ஸ்தம்பித்துப் போனாற்போல் இருக்கிறது. கடல் அலை ஓசை கேட்கவில்லை. காற்று வீச மறந்து போகிறது.

     “ஆகா! அபாரம்... அம்மா... அம்மா..!”

     “நீங்க மாரியாத்தாளா? நாங்க கும்புடற தெய்வமா?” எட்டு வகைப்பிடிகள், சுழற்சிகள், தாவல் என்று அற்புதம் நிகழ்த்திவிட்டு வருகையில்,

     அவளுக்கு மூச்சு வாங்குவது கூடத் தெரியவில்லை. சோடா உடைத்துக் கொண்டு வருகிறார்கள்.

     மேல்துண்டை அவிழ்த்து முகத்தில் ஒத்திக் கொண்டு மணி அமருகிறாள்.

     “... அம்மா... உங்களுக்கு இதெல்லாமும் தெரியும்னு கொஞ்சங்கூட நம்பவில்லையே இதுநாள்?”

     “ஆமாம்பா, என் வாழ்க்கையில் நான் ஒவ்வொரு நிலையும் தனியாக நின்று, இந்தச் சமுதாயத்தை எதிர்த்துப் போராடணும்னு உணர்ந்திட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் கூட்டம் என்னை எப்ப குழியில் தள்ளலாம்னு குறிவச்சிட்டிருக்கப்பா. நான் இந்தப் பொதுவாழ்க்கைக்கு என்னைத் தயார் பண்ணிக் கொள்ளும் அந்தக் காலத்திலேயே... பள்ளர்குடியில் ஒரு குருவிடம் இதை முறையாகக் கத்துக்கிட்டேன். பயிற்சியும் செய்வேன்...”

     அந்தத் தடவையில் எல்லைக் காளியம்மன் விழாவில், அம்மன் பவனி வருகையில், இந்தத் தொண்டர் படை மஞ்சள் கச்சையணிந்து, கையில் கழி பிடித்து, ஆங்காங்கு ஆட்டம் காட்டி மக்களை மகிழ்விக்கிறது. இந்தப் பவனியில் இடுப்பில் துண்டு கட்டி, மணியும் இருக்கிறாள். ஒவ்வொரு ஆட்ட வீரனும், அம்மையின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்ட நிலையில் ஆடும்போது, அது வெறும் ‘அம்மா’ சங்கத்தை நடாத்தும் தலைவி என்ற தகுதிகளுக்காக மட்டுமில்லை, வீர விளையாட்டுகளுக்கு ஆசானாக இருக்கும் அன்னையும் அவளே என்று உணர்த்தும் வந்தனம் அது என்று கோபி மனம் நெகிழ்ந்து நிற்கிறான்.

     இவளுடைய பொழுது, நாகை, திருவாரூர் என்று பெரும்பாலும் இப்போது சென்றாலும், மணலூர் குடிமக்களை மறக்கமுடியுமா?

     ...அம்மா...! அம்மா...!

     என்று இரவிலும், வாய்க்காலின் குறுக்கே தென்னை மரப்பாலத்தில் தண்ணீருக்கு மேல் நடந்து வரும் இவளைக் கண்டு கொள்கின்றனர். எந்தக் குடிலின் வாசலில் - சாணி மெழுகிய திண்ணையில் இவள் உட்காருகிறாளோ, அது மக்கள் குழுமிக் குறைகள் கூறும் நியாய அரசவையாகி விடுகிறது. முடங்கிவிட்ட குடிசைகள் அனைத்திலும் உயிர்ப்பு முகிழ்க்கிறது.

     “அம்மா! மணியம்மா வந்திருக்காங்க!...”

     “அம்மா! இந்தப் பட்டாமணியப் பண்ணைங்க பண்ணுற அக்கிரமம் சகிக்கலம்மா...! அம்மாளத்தேடி மூணு தபா திருவாரூர் போனமுங்க!”

     “அம்மா எங்களை மறந்துட்டீங்களாம்மா?”

     “ஏம்பா அழுவுறீங்க? உங்களை நான் எப்படி மறக்கிறது? உங்களுக்காகவே போராடுறதுன்னு நான் என்னிக்கோ காட்டிக்கிட்டேன்... அட... யாருடா, இவன் ராமனில்ல? என்னடா முதுகில்... பச்சிலயா போட்டிருக்கு!”

     சிம்னி விளக்கை ஏற்றி வந்து சாஞ்சி காட்டுகிறான். தோள், முதுகு, கன்னவிளிம்பு...

     “என்னடா அநியாயம் இது? என்னமோ திராவகத்தைக் கொட்டினாப்பலல்ல இருக்கு? யார்ரா செய்தது?”

     மணிக்கு உள்ளம் கொதிக்கிறது.

     “எதுக்குன்னு கேளுங்கம்மா? இந்தப் பய கொஞ்சம் துடிப்பான புள்ள. பண்ணயில குதுர, குட்டி போட்டிருக்குதுங்க. அது... இம்மாத்தம் பெரிசா இருக்குதா...? மேஞ்சிட்டிருந்திச்சிங்க. இவனுக்கு அதுல ஏறிச் சவாரி பண்ணணும்கற ஆச. என்ன செஞ்சிட்டான், ஆலமரத்து விழுதப்புடிச்சி இழுத்து முறுக்கி, அத்தப் போட்டு லகான் போல இழுத்திட்டு, அதுமேல உக்காந்திட்டான். அது வீலு வீலுன்னு உதச்சிட்டு, பாயுது. இவன் விழுதைக்கட்டி இழுத்திட்டு, பண்ண வூட்டுக்கு முன்னாடி போயிட்டான்... “அடி செருப்பால, பறப்பயலே, உனக்கு குருத சவாரியாடான்னு புடிச்சிக் கட்டி வச்சி, திருக்கைவால் சாட்ட கொண்டாந்து அடிச்சிட்டாரு...”

     “ஆரு... பாவி, இந்த மாதிரி ஒரு அசாதாரணமான தீரச் செயலுக்கு பண்ணராஜ்யத்தில் வாண்டையாரு குடுத்த சம்மானமா? இவங்களுக்குக் கேடுகாலம் காத்திட்டிருக்கு. சபாஷ் ராமா! நீ குதுர மேல ஏறி எப்படியும் அவம்முன்ன சவாரி பண்ணிட்டே!... நீ நிசமாவே பெரிய குதிரை வீரனா வருவே! குதிரை வீரன், உத்தண்டராமன்...! நீ படை வீரன்! சேனாதிபதி...! நல்ல குதிரை வாங்கி, அதில் சேணம் கடிவாளம் போட்டு, பிரமாதமா சவாரி பண்ணப்போறே. இப்ப, நல்ல மருந்து போட்டு, காயத்தை ஆற வச்சிக்கோ. அந்தப் பண்ணையாருக்கு நான் நியாயம் பண்ணுறேன்.”

     இவளை அந்த மக்கள் கண்கண்ட தெய்வமாகப் போற்றாமல் வேறு என்ன செய்வார்கள்?






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247