பாதையில் பதிந்த அடிகள் - Paathaiyil Pathintha Adigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



24

     கடலூரில் இவளுக்கு ஒரு சிரமமும் இல்லை. குளிப்பதற்கும் வேறு சொந்தத் தேவைகளுக்கும் வசதிகள் இருக்கின்றன. ‘காவல்’ என்ற ஒரு கட்டுத்தான். தனது பழைய வேட்டி சட்டை உள்ளாடைகளைத் துவைத்து வைத்து உலர்த்துகிறாள். பின்னர் புதிய உடை உடுத்தி, இட்டிலியும் காபியும் அருந்தி உட்கார்ந்திருக்கிறாள்.

     உள்ளே... ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருகின்றார்.

     “என்னம்மா? எல்லாம் சவுகரியமா இருக்கா?...”

     இவளுக்குத் திக்கென்று நெஞ்சில் உணர்வு முட்டுகிறது.

     இவர்... இவர் யார்...? நாமம், முகம், உயரம்... மூலைக் கச்சம்...

     கண்கள் மின்ன, ம்... என்று அவள் மேலும் பேச வாயெடுக்குமுன் அவர் ஒற்றை விரலை உதட்டில் வைத்துச் சைகை செய்கிறார்.

     வியப்பில் அவள் மவுனமாகிறாள்.

     ... இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

     காவல் ஆணைக்குத் தப்பும் தலைமறைவு இரகசியங்கள், பசி, பட்டினி, உயிரைப் பணயம் வைக்கும் பயணம் எல்லாம் இவர்களுக்கு மட்டும்தானா? அந்நாளில் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பணிந்து சொந்தச் சகோதரனை அடித்துக் கொன்ற காவல் துறையானை நோக்கி, “ஏ போலீஸ் நாயே! வேலையை விடு!” என்று கூவினார்கள். சட்டம் படித்தவர்களை ‘நீதிமன்றங்களைப் புறக்கணியுங்கள்’ என்றார்கள். ஆட்சி ஸ்தம்பித்து, அன்னியன் செய்வதறியாமல் ஓடிப் போவான் என்று நம்பினார்கள். ஆனால் இன்று ஆட்சி நம்முடையது. இந்த நம்முடைய ஆட்சியில் சகோதரனைச் சகோதரன் அடிக்கிறான். அந்தக் காங்கிரஸ்காரனை விட இவன் மனிதத்தன்மையிலிருந்து பிரியும் கொடூரத்தை அனுபவிக்கிறான். எனவே, இங்கு ஆட்சி அன்னியர், சொந்தக்காரர், என்பதற்கெல்லாம் ஒரே பொருள்... வலியவன் தன் அதிகார பலத்தினால், இன்னொரு சாராரை வருத்தி வாழ, மேலும் ஓர் ஆட்சி என்பதுதான். இவர்கள் மனித உரிமைகளை மதிப்பவர்கள் என்றிருந்தால், மணி சிறைக்கு வரவேண்டாம்.

     இவளைக் கண்ணியமாகவே நடத்துகிறார்கள். வழக்கு விசாரணை எதுவுமில்லை. யாருக்கேனும் செய்தி அனுப்ப வேண்டுமா என்று கேட்டுப் பரிவு காட்டுகிறார்கள். பின்னர், வேலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப் படுகிறாள்.

     புகழ்பெற்ற வேலூர் சிறை. சிறை என்பது? திருடர்களுக்கும் கொலையாளிகளுக்குமே என்றிருந்த கரும்பெயரில் இன்று, நாட்டுக்காக உரிமைக் குரல் கொடுத்துத் தாமாகவே வந்து புகக்கூடிய ஒரு கௌரவ இடம் என்ற புதிய பரிமாணமும் இசைந்திருக்கிறது.

     பெரிய மதில் சுவர்... வட்ட வடிவமான பெண்கள் சிறை. இவளுக்குத் தனி அறை - குளியலறை, கட்டில், மேசை நாற்காலி வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. சிறையின் பெண் அதிகாரியும், ஏனைய சிப்பந்திகளும், இவளைக் கண்டதும் வியந்து முகத்தில் கை வைக்கின்றனர்.

     ‘... இவங்க... பொம்பிள... ஆம்பிளயாட்டமா இருக்காங்க?’

     ‘இவங்க பெரிய தலைவர் போல, காங்கிரஸ்காரங்களைத்தான் விட்டாச்சே? கம்யூனிஸ்டோ?...’

     இவளுக்கென்று ஏவல் பணி செய்ய ஓர் ஆர்டர்லி பெண் இருக்கிறாள். இவர்களைப் போன்று தடுப்புக் காவல் சட்டக் கைதியாக அடுத்த அறையில் மதுரைத் தோழி ஜானகி இருக்கிறாள். உடல்நிலை, ஆஸ்துமாவினால் மிக மோசமாக இருக்கிறது.

     இவர்களுக்குச் சமையல் செய்து போட உதவியாளர் இருக்கின்றனர். சூபரின்டெண்ட் அம்மா, நடுத்தர வயசுக்காரி...

     மணி வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சிகள் செய்கிறாள். நீராடி, துணி துவைத்து உலர்த்துகிறாள். காலையில் காபி ரொட்டி. நண்பகலுக்கு அரிசி பருப்பு, காய் வகைகள், தயிர் நெய் என்று எல்லாச் சாமான்களும் வருகின்றன. இவள் அடுப்படியில் இருந்து தனக்குத் தேவையான உணவைச் சமைக்கச் சொல்லலாம். மூன்று மணிக்குத் தேநீர், பிஸ்கோத்து, மாலை ஏழு மணிக்குச் சாப்பாடு. இரவு பருகுவதற்குப் பால்... அரச போகம்!

     இந்த அரச போகத்துக்கா மணி சிறைக்கு வந்திருக்கிறாள்? வட்டவடிவமான சிறையைச் சுற்றிப் பார்க்கப் போகிறாள். வரிசையான கொட்டடி போன்ற அறைகள். அனைவரும் திருட்டு, கொலை, சாராயக் குற்றவாளிகள். தகவல் பலகையில், மொத்தம் ஐந்நூற்று இருபத்து மூன்று கைதிகள் என்று கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதில், வகை வகையாக, கொலைக் குற்றவாளிகள், முப்பத்து எட்டு திருட்டுக் குற்றவாளிகள், சாராயக் குற்றவாளிகள் என்று பிரிவுப்படுத்தி விவரம் காண்கிறாள்.

     குற்றவாளிக் கைதிகளை மணி மிகுந்த பரிவுடன் நோக்குகிறாள். இவர்களில் பெரும்பான்மையோர், சாராயம் விற்பதில் உடந்தையாக இருந்த காரணத்தினால் சிறைக்கு வந்திருக்கிறார்கள். மதுவிலக்கு உண்மையில் பெண்களுக்குத்தான் வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அதை மீறி அவர்கள் ஏன் தொழில் செய்கிறார்கள்? குற்றவாளியாகிறார்கள்?

     இந்தக் குற்றவாளிகளுக்கு மாலை ஐந்து மணிக்கே இரவுக்கான உணவு கொடுக்கப்பட்டு விடுகிறது. இதற்கு மேல்தான் மணி தாராளமாகச் சிறைக்குள் நடமாடலாம். அவர்களைச் சந்தித்துப் பேசலாம் என்று கண்டு கொள்கிறாள்.

     மதுரைத் தோழியைத் தவிர்த்து, தெலிங்கானாவில் இருந்து வந்த சகோதரிகள், இளையவர்கள் இருவர் அங்கே அடுத்த அறைகளில் இருக்கின்றனர்.

     மொழி வேற்றுமை மட்டுமின்றி, அரசியல் சார்ந்த கருத்துகளிலும் அவர்கள் வேறுபாடு கொண்டிருக்கிறார்கள். நூலகத்தில் இருந்து தினமணி, சுதேசமித்திரன் பத்திரிகைகள் வருகின்றன. ஆனால் சில பத்திகள் கறுப்பு மையினால் மெழுகப்பட்டிருக்கின்றன.

     இவள் வந்த பிறகு, கட்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. வெளியே போலீசு அடக்குமுறை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. தெலிங்கானாவில் இருநூறு, முந்நூறு கிராமங்களே பொது உடமைக் கட்சியின் ஆதிக்கத்தில் வந்திருப்பதை மணி அறிவாள். அங்கே மக்கள் எந்த அளவில் குரூரங்கள் அனுபவிக்கிறார்களோ? அந்தச் செய்திகள் விவரிக்கப்படவில்லை. மாறாக, கம்யூனிஸ்ட்கள் என்பவர்கள், எறி குண்டு எறிந்தும், கத்தியால் குத்தியும், தண்டவாளம் பெயர்த்தும் நிரபராதி மக்களைக் கொலை செய்பவர்கள் என்ற கருத்தைப் பொது மக்களுக்கு நன்கு உணர்த்தும்படி செய்திகள் இருக்கின்றன. மணி புரட்சி தொடர்பான வன்முறைகளில் கருத்து வேறுபாடு உடையவள். சமுதாய ரீதியாக அடிமட்டம் வரையிலும், சமூக மாற்றங்களுக்குப் பக்குவமான மனப்பாங்கைத் தோற்றுவிக்காமல், ‘ஆயுதப் புரட்சி’ என்று கிளம்புவதில் பயனில்லை என்று கருதுகிறாள். இதனாலேயே ஆந்திரப் பெண்ணும் இவளும் ஒத்துப் போகமுடியவில்லை?

     ஒரு நிமிஷம் நின்று நிலைக்காமல் ஓடிக் கொண்டிருந்த அவளுக்கு நாள் முழுதும் அடைபட்டுக் கிடப்பது உண்மையில் பெரிய தண்டனைதான். மணிக்கு ஐந்து மணி எப்போது வரும் என்றிருக்கிறது.

     அன்று இவள் உலாவுகையில், ஓர் இளம் வயசுப் பெண் இவளையே பார்த்து நிற்கிறாள்.

     மணி பரிவுடன் அருகில் சென்று, “ஏம்மா...? உன் பேரென்ன?” என்று வினவுகிறாள்.

     மருட்சியுடன் இவளையே பார்க்கிறாள். முகத்தில் குழந்தைத்தனமே மாறாத இளமை. தலையை மொட்டை போட்டிருக்கிறார்கள்.

     இவள் என்ன பெயர் என்று தானே கேட்டாள்?

     “ஏழு வருசம்” என்று பதில் வருகிறது.

     “ஏம்மா, பெயரைத்தானே கேட்டேன்?... ஏழு வருசம் தண்டனை அனுபவிக்க நீ என்ன குத்தம்மா பண்ணினே?...”

     குத்தம்... குத்தம்...!

     நெருப்புக் கொப்புளம் வெடிப்பது போல் அவள் கண்களில் கொலை வெறி... ‘டேய்... பயலே? நீ இங்ஙன வந்து, குத்தம் என்னன்னா கேக்குறே?’

     ஒரு கணமாய்ப் பாய்ந்து மணியின் கழுத்தை நெரிக்க முயல்கிறாள்.

     “ஐயோ... ஏழு வருசக்காரி, கொல... கொல...” என்ற கத்தலும் பரபரப்பும், மணியை அவள் நெருக்கலில் இருந்து விடுபடச் செய்கின்றன. ஜெயிலர் அம்மா ஓடோடி வருகிறாள்.

     “அம்மா, இந்த ‘கான்விக்ட்’கள் பயங்கரமானவங்க... அவங்க பக்கம் போகாதீங்கம்மா... ஐயோ, ஏதானும் ஆயிருச்சின்ன, எங்க பாடு மோசமாயிடும்மா...!”

     மணி கழுத்தைத் தடவிக் கொள்கிறாள்.

     பால்மணம் மாறாத அக்குழந்தை முகத்தில்... எப்படிக் கொலை வெறி திரண்டு வந்தது? இருபது வயசு கூட இருக்காது...

     ஓ, இந்தப் பெண்கள் ஏன் கொலை செய்கிறார்கள்? திருடுகிறார்கள்? சாராயம் விற்கிறார்கள்?

     மணியினால் இரவு தூங்க முடியவில்லை. இந்தக் குற்றவாளிச் சூழல், வஞ்சிக்கப்பட்டவர்களின் உலகை அநியாய தண்டனை என்னும் நரகவாதனைக்குட்பட்டவர்களின் உலகை, மனிதத்துவம் நசித்துவிட்ட ஓர் உலகை அணுவணுவாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. பருப்பு, நெய், தயிர், வெண்டைக்காய், வெங்காயம் என்று இவளுடைய உணவுப் பொருள்கள் வரும்போதும், பணி செய்பவர் வந்து, ‘என்ன சமைக்கணும் அம்மா’ என்று கேட்கும்போதும், இவளால் சிந்திக்கவே முடியவில்லை.

     “இங்கே இதுபோல், அந்த கான்விக்ட் பெண்களுக்கு ரேஷன் கொடுப்பார்களா...?”

     ஜானகி, பதினெட்டு வயசில், அந்தச் சிறை தண்டனையை அனுபவித்தவள். “ரெண்டரை அவுன்சு கஞ்சி, குழம்பு, புளி நெளியும். வாயில் வைக்க வழங்காது. அவங்க குடுக்கற ரேஷனெல்லாம் எண்ணெய், காய், பருப்பு எல்லாம் ஆபீசிலேயே பங்கீடாகி யார் யாருக்கோ போயிடும்...” என்று இளைப்பும் இருமலுமாக அவள் தெரிவிக்கிறாள்.

     பிள்ளைக் கொட்டடி என்று ஒன்று இருக்கிறது. கைதிப் பெண்கள் மூன்று வயசுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருவார்களேயானால், குழந்தைகளுக்கென்று தனியாக அமைக்கப்பெற்ற இடம் அது. எந்தக் குற்றவாளித் தாயும், குழந்தையும் விடுதலை பெற்றுப் போனதாக வரலாறே கிடையாது என்று சொல்கிறார்கள்.

     ஏனென்றால் நருநருவென்ற சோளக் கஞ்சியைப் பிள்ளைகளுக்கு ஊற்றுவார்களாம். அது கழிச்சலில் கொண்டு விடும். நீர்ப்பசை வற்றி, யமனுலகுக்குப் பயணம் சென்று விடும்.

     “இங்கே வரும் போது எடை மெஷினில் நிற்க வைத்து குறிக்கிறார்கள். போகும்போது அதைச் செய்து ஒரே எடைன்னு சொல்வது எப்படி?”

     “ஓ, அது ஒரு தந்திரம். அந்தப் பெண்பிள்ளைகளுக்குக் குடிக்கிற தண்ணீல ஏதோ கலப்பாங்களாம். உடம்பு நீர் கொண்டுக்கும். எடை குறையாது. ஆனா, மாசவிலக்கு... சொல்ல முடியாம கஷ்டமாயிடும். நா அனுபவிச்சிருக்கேம்மா...”

     படுபாவிகளா என்று கத்தத் தோன்றுகிறது.

     “இந்த மாதிரி அக்கிரமங்கள் ஒழிய, ஏகாதிபத்திய மிச்சங்கள் தொலைய, ஆயுதப் போராட்டம் தான் தீர்வு.”

     இது தெலுங்குச் சகோதரியின் அழுத்தமான முடிவு.

     “கல்வியும் விழிப்புணர்வும் சுத்தமாக இல்லாத கோடானு கோடிகளை வைத்துக் கொண்டு, ஒரு பாரபட்ச சமுதாய அமைப்பு நம்மை வஞ்சிக்கிறது என்கிற உணர்வு ஒவ்வொருவருக்கும் இல்லாத நிலையில், ஆயுதம் தூக்குவது குழப்பத்திலும் அராஜகத்திலும் கொண்டுவிடும். கட்டுப்பாடு, கண்ணியம், மனிதாபிமான உணர்வு எதுவும் மிஞ்சாது!”

     “இல்லை, சீனத்தில் சாத்தியமாகலியா...?”

     மணியினால் ஒப்ப முடியவில்லை. அவள் ஒவ்வொரு கிராமத்தின் அனைவரையும் தொட்டு உணர்ந்திருக்கிறாள். எனவே யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை.

     தனிமை; தனிமை; தனிமை...

     இரவில் உறக்கம் தொலைகிறது. பரபரப்பும் படபடப்பும் மிஞ்சுகின்றன. சிறை மருத்துவர் பார்க்கிறார்.

     இரத்த அழுத்தம் என்று மருந்து கொடுக்கிறார்.

     ஒரு நாள், பார்வையாளர் அறையில் இவளைப் பார்க்க, அத்திம்பேர் வந்திருப்பதாகத் தெரிந்ததும், பேராவலுடன் செல்கிறாள்.

     சிறையின் தனிமையில், உறவின் அண்மை சொல்லொணா ஆறுதலைத் தருகிறது. எல்லோரைப் பற்றியும் விசாரிக்கிறாள்.

     “மீனா எப்படி இருக்கிறாள்? அவள் குழந்தை சௌக்கியமா? மதுரையில் எல்லாரும் சௌக்கியமா? வத்சலா குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? பட்டுக்கோட்டையில் மோகன் குடும்பம்; திருவாரூரில் குஞ்சு...” என்று, இயக்கம் சம்பந்தமாக எதுவும் கேட்க முடியாத நிலையில் விசாரிக்கிறாள். ஓய்வு நேரத்தில் பின்னின லேஸ் சுருளைக் குழந்தை கவுனுக்குத் தைக்கக் கொடுக்கிறாள்.

     அவர், இப்போது அவளிடம், உடைமைகளுக்கு உரியவராக, சான்றாகக் கையொப்பம் வாங்கிச் செல்ல வந்திருக்கிறார்.

     “தெற்குத் தெரு வீட்டை வாங்கி உனக்காக வச்சுடறேன், மணி. அதுபத்திக் கவலைப்படாதே...” என்று சொல்கிறார்.

     “நம்ப மரத்தில் பழுத்த மாம்பழம்... கொண்டு வந்திருக்கேன்... அவா கொடுப்பா... வேற உனக்கு என்ன வேணுமோ காகிதம் எழுது...”

     இந்தப் பரிவுகள் மேலும் மேலும் கசியச் செய்கின்றன.

     “குழந்தையைக் கூட்டி வந்திருக்கக் கூடாதா? அடுத்த தடவை வரப்ப, அவர்களையும் கூட்டிட்டு வாருங்கோ, அத்திம்பேர்!...”

     “சரிம்மா, உடம்பைப் பார்த்துக்கோ!”

     அவர் விடைபெற்றுக்கொண்டு செல்கிறார்.

     மணி அன்றிரவு கண்களையே மூட முடியாத கிளர்ச்சியில் புரண்டு படுக்கிறாள். இந்தச் சிறையில் மனித உறவின் நேயத்துக்கே வழியில்லை. ஆற்றில் இருந்து எடுத்துப் போட்ட மீனாய் ஒரு துடிப்பு. இவள் தேசம் கொண்டு உறவாடிய சேரிக் குடும்பங்கள், உத்தண்ட ராமன், கோபாலு, வீரையன்... மூக்காயி... வெந்நீர் வைத்துத் தரும், தோசை வாங்கிக் கொண்டு ஓடி வரும், அம்மா, அம்மா என்று ஆயிரம் முறைகள் ஒரு நாளில் பாசக் குரல்கள் அவள் இதயத்தில் படியும். அவர்களை எல்லாம் இந்தப் போலீஸ் என்ன செய்கிறார்களோ?

     இந்தச் சூரியாவதி சொல்வதுபோல் ஆயுதப் போராட்டம் சாத்தியமோ? அத்தனை தலைவர்களும் இதே வேலூர் சிறையில் ஆண்கள் பகுதியில் இருப்பதாக அவளுக்குப் படுகிறது.

     தங்கமணி - மோகன் - தந்தை, தாய் இருவரும் காங்கிரஸ் மந்திரி சபையில் இருப்பவர்கள்...

     உணர்ச்சியோ எதுவோ நெஞ்சைப் பந்தாக அடைக்கிறது. மூச்சு விட முடியவில்லை...

     அம்...மா... அம்...மா!

     இந்தச் சிறையில் இவள் அநாதையாக இறந்து விடுவாளோ? நெஞ்சை நீவிக் கொள்கிறாள்.

     அசையாமல் கிடக்கிறாள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247