பாதையில் பதிந்த அடிகள் - Paathaiyil Pathintha Adigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



16

     “சர்க்கார் ‘உணவு டிப்போ’ திறந்திருக்காங்களாமே? அரிசி, மண்ணெண்ணெய் எல்லாம் போடுறாங்களாமே?...” என்ற நம்பிக்கைக் குரல், பல இடங்களிலும் செய்தியைக் கொண்டு போகிறது. “எல்லோரும் சேர்ந்து கையெழுத்திடும் மகஜர் - ஒன்று சேர்ந்த ஊர்வலம் - இவை, சர்க்காரின் கதவைத் தட்டக்கூடிய மந்திரங்கள் என்று மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ‘ஸ்டீல் ரோலிங் மில்’லில், உணவுப் பொருள்களுக்குக் கூப்பன் வழங்குகிறார்கள். இந்த ஆலையைச் சேர்ந்த பண்டகசாலையில், இவர்கள் தங்களுக்கு உரிய பொருள்களைப் பெறலாம்.

     இதிலும் ஒழுங்கீனங்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பவளாக மணி, மக்களை வரிசையில் நிற்க வைத்துப் பழக்குகிறாள்.

     இந்த முன்னோடி முயற்சி, சுற்றுவட்டம் பல ஊர்களிலும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள உற்சாகமான ஊக்கத்தைத் தூண்டிவிடுகிறது. மாயவரத்தில், இவர்கள் அமைப்பைச் சார்ந்த இளம் தோழி ஜனகம், மணியை அழைக்கிறாள். இருவரும், சாரதட்டைத் தெரு வீட்டில் பெண்களை அழைத்துக் கூட்டம் கூட்டுகின்றனர்.

     மகஜருடன் பெண்கள் வருவதை அறிவிக்க மணி முன்னதாக உதவி கலெக்டரைப் பார்க்கச் செல்கையில் வாயிலில் நந்தியாக நின்று டவாலி மறிக்கிறான்.

     “கலெக்டர் காம்ப் போயிட்டாரு? ஏம்மா வம்பு பண்ணுறீங்க?”

     பெண்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்கிறார்களே என்ற எரிச்சல் அவனுக்கு.

     ஆனால் மணி இதற்கெல்லாம் சோர்ந்துவிடும் ஆளா?

     கலெக்டர் ஊரிலிருக்கும் நாளை உறுதியாக்கிக் கொண்டு, ஊர்வலத்தைத் திரட்டி வருகிறார்கள்.

     அரிசி இல்லையேல் அடுப்பங்கரையில் வேலை நடக்குமா? விளக்கெரிக்க எண்ணெய்! அடுப்பெரிக்க விறகு!

     சித்திரைப் பிறப்பு நாளில், மாயவரம் பொன்னுசாமி பூங்காவில் ஊர்வலம் வந்த பெண்கள் கூடி, ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர்கள் குரலோடு, பால் விற்பவர்கள், குடியானவர்கள், இடை நிலை வர்க்கத்தினர் எல்லாரும் கூடுகின்றனர்.

     ‘டிபுடி கலெக்டர்’ இந்தக் குரலைக் கேட்காமல் காதுகளைப் பொத்திக் கொள்ள முடியுமா?

     நாகையில் ஊர்வலத்தில் ‘தோட்டி’ வேலை செய்யும் தோழர்களைப் பார்த்ததில் இருந்து இவளுக்கு அவர்கள் நிலை உறுத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒருநாள் வேலையைச் செய்யாமல் முடக்கினால், ஊரின் நிலை எப்படி இருக்கும்? ‘ஒரு தாய், தன் மகவின் அசுத்தங்களை, முகம் சிறிதும் சுளிக்காமல் நறுமணமாகக் கருதி அப்புறப்படுத்துகிறாள். அவள் அல்லவா அன்பின் அவதாரம்! அஹிம்ஸையின் வடிவாகத் திகழ்பவள்!’ என்று காந்தி சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், இந்த மக்கள் சமுதாயத்தின் தாயாக உழைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு... யாது?

     “சீ! எட்டிப்போ! தோட்டி!...”

     கொல்லை வழிவந்து துப்புரவு செய்வான். மிச்சம் மீதி, ஊசிப்புளித்த சோறோ, குழம்போ, அதே சாக்கடையின் பக்கம் வைக்கப்படும். அவர்கள் எடுத்துப் புசிக்க!

     என்ன கொடுமை!

     ‘பரச்ரம’ ஜீவிகளாகிய - பிறர் உழைப்பில் கொழுக்கும் வர்க்கம், இவர்களைப் பூச்சியாக ஒடுக்கியிருக்கிறது. இந்த வர்க்க பேதத்தை நியாயமாக்கிக் கொண்டிருக்கும் சனாதனங்களைப் பற்றியே சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறதன்றோ?

     துப்புரவுத் தொழிலாளரை மணி கூட்டுகிறாள்.

     ‘ஒன்று சேருங்கள்! ஒடுக்கப்பட்டவர்கள்! எங்கிருந்தாலும் ஒன்று சேருங்கள்! சங்கம் அமையுங்கள்! உரிமைகளுக்குப் போராடுவோம்!’ இதுவே மணி இப்போது கைக் கொண்டிருக்கும் தாரக மந்திரம். இந்த மந்திரம், வேலை செய்கிறது; பலனளிக்கிறது.

     நாகை நகரசுத்தித் தொழிலாளரின் வெற்றி!

     பஞ்சப்படி, பிரசவ லீவு, கிராச்சுவிட்டி ஒப்புக் கொள்ளப்பட்டது!

     சர்க்கார் உணவு டிப்போக்கள் திறக்கப்பட்டன...!

     நாகை ஸ்டீல் ரோலிங் மில்லில், முறையாகத் தொழிற்சங்கம் இயங்குகிறது! தொழிற்கூட்டத்தில், கட்சியின் பல தலைவர்களும் பேசினார்கள். அவையின் முன், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

     1. ஃபர்னஸ்ஸில் வேலை செய்யும் தொழிலாளிக்குப் பாதுகாப்பாகக் கண்ணாடி, உடலைப் பாதுகாக்கும் ஏப்ரன் ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

     2. தாரில் (கீலெண்ணெய்) நடந்து வேலை செய்பவர்களுக்கு ‘பூட்ஸ்’கள் கொடுக்கப்பட வேண்டும்.

     3. விபத்துகள் நேர்ந்தால் தக்க உதவியும் நிதியும் அளிக்க வேண்டும்.

     4. வேலை செய்யும் தொழிலாளரிடம் அறுபது ரோல்கள் கட்டுவதே பெரும் பிரயத்தனமாக இருக்கும் நிலையில், சக்தி மீறி எண்பத்தைந்து ரோல்கள் கட்டப்பட வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவது நிற்க வேண்டும்.

     5. ஒவ்வொரு ‘பேட்சி’லும் தொழிலாளரை அதிகப்படுத்த வேண்டும்.

     6. வேலை ‘காயமக்க’ப்பட வேண்டும்...

     இவர்களின் சமுதாயக் குரலாக ஓங்கி ஒலிக்கும் ஜனசக்தி இதழ், இவர்கள் நடவடிக்கைகளைப் பற்றி பத்திரிகை உலகுக்கு அறிவிக்கிறது.

     இந்த 1943-ம் ஆண்டே, நாட்டின் அனைத்துக் களங்களிலும் போராட்டம் என்று தீர்ந்திருக்கிறது. ஃபாசிசத்தை எதிர்த்துப் போராடும் சோவியத் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா இரண்டாம் போர்முனையைத் துவக்க வேண்டும் என்ற கூக்குரல் செயல்படாமலே நிற்கிறது. உள்நாட்டு அரசியல் அரங்கில், வங்கப் பஞ்சம், தலைவர்கள் சிறைவாசம், கொந்தளிப்பு என்று எல்லாத் திசைகளிலும் நெருக்கடி தோன்றியிருக்கிறது.

     இதே ஆண்டில் தான் ஜூலை மாதத்தில், முதல் சென்னை மாகாண தொழிற்சங்க மாநாடு, கோவை நகரில் நடைபெறுகிறது. அடுத்து உடனே, தென்னிந்திய ரயில்வே தொழிற்சங்க மாநாடு, மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மணி, ‘நாகை ஸ்டீல் ரோலிங் மில்’ தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு மாநாட்டின் சிறப்புப் பிரதிநிதியாக அம் மாநாட்டில் பங்கு கொள்கிறாள். கதர்த் துண்டுக்கு மேல் சிவப்புத் துண்டு போர்த்தி, இரண்டரை மைல் நீளம் திரண்டிருந்த, ஆயிரமாயிரமாகக் கலந்து முடிவு கொண்ட தொழிலாளர் பேரணியில் ஓர் அணித் தலைமையேற்று, ‘தொழிற்சங்கம் வாழ்க!’ என்று உணர்ச்சி பொங்கக் குரல் எழுப்புகிறாள்.

     இந்த ஆண்டில்தான், மாணவர் சங்கத் தோழர்கள் பாரதி நாளையும் வங்கப் பஞ்ச நிவாரண நிதி வசூலையும் இணைத்துக் கூட்டங்கள் கூட்டுகின்றனர். ‘சோவியத் நண்பர்கள்’ என்ற இயக்கம் தோற்றுவிக்கப்படுகிறது. மக்களின் அரசியல் உணர்வு, ஃபாசிஸ எதிர்ப்பைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுத்தப்படுவதற்கான அனைத்துச் சக்திகளையும் திரட்ட நெறிப்படுத்தப் படுகிறது.

     இதே சூழலில்தான், தென்பரை விவசாயிகளின் எழுச்சி, ஒரு புதிய அலையைத் தோற்றுவிக்கிறது. இந்தக் கிராமம், தென்பரை உத்திராபதி மடத்திற்குச் சொந்தமானது. எல்லா நிலமும், விவசாயிகளிடம் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. விளைந்த நெல்லை அளக்கப் பொந்த மரக்காவைப் பயன்படுத்தி, விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்து, குத்தகை வசூலிக்கப்பட்டது. அவர்கள் எதிர்த்தால் குத்தகை வேறு ஆள்களுக்கு விடப்பட்டது.

     இந்த அடக்குமுறையை முதன்முதலாக எதிர்த்து வரலாறு படைத்தோர் தென்பரை கிசான் சங்கத்தினர். அமிர்தலிங்கம் என்ற இளந்தோழர் இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமையேற்கிறார். இந்த முதல் போராட்டம் வெற்றிகரமாக மன்னார்குடி, டிபுடி கலெக்டர் முன்னிலையில் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

     மணிக்கு இப்போதெல்லாம் மணலூருக்கு வந்து, விவசாய இயக்கத்தில் முழுமூச்சாகப் பங்கேற்பதற்கு நேரமே கிடைப்பதில்லை. பெருங்கடப்பனூரில்தான் பாதி நாள்கள் தங்கிவிடுகிறாள்.

     புத்தாண்டு பிறக்கவில்லை. மார்கழி மாசத்தில், குஞ்சம்மாவின் வீட்டில் பூஜை, பஜனைக்காரர்கள் வருகை என்று அமர்க்களப்படுகிறது. மணி வந்தால், உணவு கொள்வதும் தங்குவதும், வண்டி கட்டிக் கொண்டு வசதியாக நகருக்குச் செல்வதும், சொந்த வீடாகவே புழங்குகிறாள். சில சமயங்களில் குஞ்சம்மாளைக் காணவே முடியாது. அவள் வீட்டில் இப்போது ஓர் ரகசிய அறை கட்டி இருக்கிறாள். அங்கே சென்று தியானத்தில் ஆழ்ந்து விடுவதாக, சமையற்கார அம்மாள் சொல்கிறாள்.

     அன்று, காலை ஏழு இருக்கும். மணி குளிர்ந்த நீரில் நீராடிக் கொண்டிருக்கையில், ஓலக்குரல் கேட்கிறது. மாட்டு வண்டியில் ஓர் இளைஞனைப் போட்டு எடுத்து வந்திருக்கிறார்கள்.

     “அம்மா கண்ணாலம் கட்டி மூணு நாளாவல, பெரிசு தீண்டிடிச்சும்மா...? அம்மா, காப்பாத்துங்க?”

     மணி அந்தப் பிள்ளை முகத்தைப் பார்க்கிறாள். நீலம் பாரித்துக் கிடக்கிறது. வாயில் நுரை போல் தெரிகிறது.

     சமையற்கார அம்மாள் கைகளைப் பிசைகிறாள்.

     “...அவர் அந்த ரூமில தியானத்துக்குப் போயிருக்கார். எப்படிக் கூப்பிட? கூப்பிடக்கூடாதுன்னு உத்தரவு...”

     இதென்ன நான்சென்ஸ்?...

     மணி உள்ளே விரைகையில் தடுக்கிறாள் அந்த அம்மாள். “வேண்டாம்மா. அப்படி நடுவில் இடைஞ்சல் பண்ணிட்டா மூளை புரண்டு போயிடுங்கறாளே?...”

     “போகாது. நான் போகிறேன்...”

     அந்த அறை இவள் பார்த்ததில்லை. ஆனால் எல்லாப் பண்ணை வீடுகளிலும், பூமிக்குக் கீழ் நிலவறை உண்டு. இரும்புப் பெட்டி, பெரிய பெரிய பாத்திரங்கள், சாமான்கள் அங்கே வைப்பதுண்டு. மேலே பெரிய பலகை போட்டு இருக்கும்.

     மணி அந்தப் பலகையைத் திறந்து கொண்டு ஏணியில் இறங்குகிறாள். உள்ளே ஏதோ கோயில் போல் ஒரு சூழல். சிறு படிகலிங்கம் வைத்திருக்கிறாள். இவள் காவி உடுத்திய கோலத்தில், முடி சடைசடையாகத் தொங்க, கண்களை மூடி வீற்றிருக்கிறாள்.

     ...ஸ்திரீயாகப்பட்டவள், லிங்க பூஜை செய்யலாகாது! ஸ்திரீ... புருஷனின் நாமாவை ஸ்மரிச்சிண்டு... இவள் எந்த நாமாவை ஸ்மரிக்கிறாள்?

     மணி இவள் தோளை மெதுவாகத் தொடுகிறாள். “குஞ்சம்மா! ஒரு பச்சைப்பிள்ளை, பாம்பு கடிச்சுக் கிடக்கிறான். என்ன மருந்து எப்படிக் குடுக்கணும்னு சொல்லு?”

     அவள் கண்களைத் திறக்கிறாள்.

     கண்கள் சிவப்பாக இருக்கின்றன. சாமியார்கள் போல் காவி இரண்டு மாராப்புகளிலும் போட்டுக் கொண்டு உடுத்தியிருக்கிறாள். விறுவிறுவென்று வருகிறாள். அவன் மீது தண்ணீரை, குளிர்ந்த தண்ணீரைக் குடம் குடமாக ஊற்றுகிறாள். மருந்து உருண்டை - மூன்று உருண்டைகள் அவன் வாயைத் திறந்து போடுகிறாள்.

     அருகிலேயே அதே கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். மணிக்கு இதற்கு மேல் அங்கு வேடிக்கை பார்க்க இயலாது. இவளுக்கு இட்டிலி பரிமாறும் சமையக்காரம்மா, “இவன் பிழைச்சிடுவான். இப்படி எத்தனையோ வரது. ஆனா, இன்னிக்கு நீங்க இருந்தேள், போய் நிலவறையில் கூப்பிட்டேள். நாங்கன்னா கிடந்து தவிப்போம். அவாளுக்குக் கோபம் வந்தா சிவபெருமான் நெத்திக் கண்ணைத் திறந்தாப்பலதான் பயமா இருக்கும்...” என்று கூறுகிறாள்.

     மணி இந்தத் தோழியின் செயல்களை முற்றிலும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், இவளுடைய அசாதரணமான தன்மையில், பூரித்துப் போகிறாள்.

     “நேத்து நீங்க திருவாலூர் போயிருந்தீங்களாம்மா? உங்களைக் காணல, ஆபீசில?...”

     “ஆமாம்பா. ரசீதுப் புத்தகம் வாங்கிட்டு, சுருட்டுத் தொழிலாளரைப் பார்த்துப் பேசிட்டிருந்தேன். என்ன விசேஷம்...?”

     “அம்மா, தொழிற்சங்கம் கட்டி, ஒத்துமையா உசுத்துப் போறதை நிர்வாகம் எப்படியம்மா அனுமதிக்கும்? யுத்தகாலம் உற்பத்தியைப் பெருக்கணும்னு சொல்றாங்க. திடீர்னு, ராசு, பக்கிரி, மாரியப்பன், இவங்க மேல, வேலை சரியில்லன்னு குற்றம்சாட்டி, சீட்டுக் கிழிச்சிட்டாங்க. புதிசா வேற ஆள்களை நியமிச்சிருக்காங்க. திறமையுள்ள ஆள்கள் அவங்க. உண்மையில் அவங்களுக்கு பிரமோஷன் குடுக்கணும்.”

     இந்த மாதிரியான சிலும்பல்களுக்கு முடிவேயில்லை.

     இவள் இனி கலெக்டர், லேபர் கமிஷனர், என்று நியாயம் கேட்டு நடையான நடை நடக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க, வழி செய்ய வேண்டும்.

     “அந்தப் பையன் பிழைச்சிட்டானா?”

     “அவனா? அப்பவே ஏந்திருந்து உட்காந்துட்டானே?...”

     “பிரசாதம் குடுத்தேன். சாப்பிட்டுட்டுப் போய் வண்டிலே ஏறிக்கொண்டான். அவனுக்கு ஒண்ணுமில்லை!”

     இவள் வியப்பின் சிகரத்தில் நிற்கிறாள்.

     ஓடிப் போய் மனவெழுச்சியுடன் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

     “குஞ்சம்மா, நீ வேற வழின்னாலும் அசாதாரணமானவள். இந்தப் பூசை, பாஷாண்டிகள், காஷாயம்னா எனக்கு வெறுப்பு. ஆனா, நீ எனக்குத் தங்கமாயிருக்கே!”

     குஞ்சம்மா சிரிக்கிறாள்.

     “பித்தளையத் தங்கமாக்கிறது; பாதரசத்தை மணியாக்குறது, இதெல்லாம் தான் சித்தர் செய்திருக்கா. போன மாசம் ஒரு சாமிகள் வந்திருந்தார். சித்தர்... அவருக்கு எத்தனை வயசுன்னு தெரியல. திருமலை நாயக்கர் காலத்திலேயே இருந்திருக்காராம். நீ படிச்சுப் பார்னு குடுத்தார். அவர், எனக்குப் பித்தளை, தங்கம் பண்ணிக் காட்டினார். பித்தளையை உருக்கி...”

     சுவாமி பெட்டியில் இருக்கும் அந்தத் தங்கக் கட்டியைக் காட்டுகிறாள்... மணி, அவள் படித்த புத்தகத்தைப் பார்க்கிறாள்.

     சித்தர் பாடல்கள்...

     இவளுக்குச் சித்தம் பேதலித்திருக்குமோ என்ற சந்தேகம் கூடத் தோன்றுகிறது. எவனேனும் பாஷாண்டி, இவளை நன்றாகக் குழப்பிவிட்டிருப்பானோ என்று நினைக்கிறாள்.

     “ஏண்டா என்னை அப்படிப் பார்க்கறே? நீ நினைக்கிறாப்பல சித்தர்கள், பாஷாண்டிச் சாமியார்கள் இல்ல. அவா லோகத்துக்கு உபகாரமா எத்தனையோ செஞ்சிருக்கா...”

     “ஒத்துக்கறேன். நீ அந்தப் பாம்புக்கடிப் பிள்ளையை எழுப்பினே. பச்சில மருந்துன்னு, ஏழை எளிசுகளுக்கு ஒத்தாசை பண்றே. பண விவகாரமும், நீ கெட்டிக்காரியா நிர்வாகம் பண்றே. எனக்கு... உங்கிட்ட ரொம்பப் பிடிச்சது, என் இஷ்டம், நான் எனக்குச் சரின்னு பட்டதைப் பிடிவாதமாப் பண்றேன்னதுதான், குஞ்சம்மா!”

     “மணி, வாழ்க்கையிலே அந்த மனோசக்தி இல்லேன்னா, எதுவும் இல்ல. அந்தக் குழந்தை, வாயும் உதடும் பிளந்து பொறந்துடுத்து. அப்பா, சினிமா சினிமான்னு அலைஞ்சிண்டுருந்தார். இந்தப் பொண் குழந்தையை வச்சுண்டு என்ன பண்ண? பகவானே! பால் குடிக்க முடியாது குழந்தைக்கு. தூக்கிண்டு பைத்தியக்காரி மாதிரி பட்டணத்துக்கு ஓடினேன். ரங்காச்சாரி முன்னே போட்டேன். ‘டாக்டர், உங்களை எல்லோரும் தெய்வம் போலச் சொல்றா! நீங்கதான் இந்தக் குழந்தைக்கு வாயும் உதடும் ஒண்ணு போலச் செய்யணும். உங்க பொறுப்பு’ன்னு சொன்னேன். அவா வீட்டுக்குத்தான் போவேன். அந்தம்மா, ரொம்ப நல்ல மாதிரி. இது... ஒண்ணும் பண்ணறாப்பல இல்லையம்மா? உதடு மட்டும்னா, சரி பண்ணிப் பார்ப்பேன். அண்ணம் ரொம்பப் பிளந்திருக்கேம்மான்னார். தெய்வம் கிய்வம்னு சொல்லாதேம்பார். தெய்வம்னா அவருக்குப் புடிக்காது. மனுஷாளுக்கு மனோசக்தி நம்பிக்கை வேணும்பார். நான் இப்படியாகணும்னு நினைச்சால், அந்த சக்தியே அதைச் சாதிக்கும்னார். அப்படித்தான் அந்தப் பச்சைக் குழந்தைக்கு அவர் வைத்தியம் பண்ணினார். பொறுத்துப் பொறுத்து, எத்தனை ஆபரேஷன்?...”

     “நான் தான் பாத்திருக்கேனே. உன்னிப்பா பார்த்தா தான் தெரியும். ஆனால் அந்த ஒட்டுச் சிகிச்சைக்கு பின்னே இத்தனை கதை இருக்குன்னு தெரியாது குஞ்சம்மா!”

     “பார்க்கப் போனால் அது என் மூத்தா பேத்திதான். அது ஒருத்தருக்கும் தெரியாது. என் குழந்தைகளாக எல்லாரையும் பார்க்கறேன். நீ வந்து, எங்கேயோ யாரோ சொன்னான்னு, பூசைப் பெட்டியைத் தூக்கி எறிஞ்சிட்டு, கிராப் வச்சிண்டு புறப்பட்டுட்டே. ஆனா, என் நம்பிக்கையைப் பத்தி யாரோ சொன்னா நான் ஏன் கவலைப்படணும்? நான் எனக்கு எது தோணுறதோ அப்படி இருக்கிறேன். முயற்சி பண்றேன். நாலு பேருக்கு உபகாரமா இருக்கணும்... நீ சலனப்படறாப்பல நான் படமாட்டேன்.”

     மணி அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247