1

     பீமநாதபுரம் நகரம் என்று சொல்லிவிட முடிந்த அதிக வசதிகள் உள்ளதும் அல்ல; வசதிகளே இல்லாத குக்கிராமமும் அல்ல; சமஸ்தானமாக இருந்த காலத்தில் அந்த ஊருக்குத் தனி அடையாளங்களும் தனிச் சிறப்புகளும் இருந்தன. நவராத்திரி விழா, புலவர்களின் கவி மழைகள், இசை, நடனம், சதிர், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, வாண வேடிக்கை எல்லாம் இருந்தன. இவை ஆண்டுக்கு ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. அரண்மனையையும், சமஸ்தானத்தையும் மையமாகக் கொண்டிருந்த ஊரின் முக்கியத்துவங்கள் அங்கிருந்து விலகி இடம் மாறின. ஊரின் முக்கால்வாசி இடம் அரண்மனை; மலைப் பாம்பு போல் வளைந்து கிடந்த கற்கோட்டைக்குள் காடாய் அடர்ந்த நந்தவனங்கள், பூங்காக்கள், மரக் கூட்டங்களுக்குள்ளே நடுவாக அரண்மனை இருந்தது. ஊரின் வளர்ச்சி, தளர்ச்சி, கடைவீதி வியாபாரம், போக்குவரத்து எல்லாம் ஒரு காலத்தில் அரண்மனையைப் பொறுத்துத்தான் இருந்தன. இன்று அது மாறிவிட்டது. வேறு சூழ்நிலைகளும் வேறு முக்கியத்துவங்களும் ஊருக்குள்ளே உருவாகிவிட்டன. பீமநாதபுரம் சமஸ்தானத்தின் ராஜமான்யமாகக் கிடைத்து வந்த ஆண்டுக்கு ஏழு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயும், பின்வழித் தோன்றல்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய்களும் நிறுத்தப்பட்ட பின் அதே கவலையில் 1972-ம் வருடம் டிசம்பர் மாதம் பனி அதிகமாக இருந்த ஒரு பின்னிரவில் மாரடைப்பினால் காலமாகிவிட்டார் அதன் மகாராஜாவாக இருந்த பீமநாத ராஜ சேகர பூபதி.

     அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் பெரிய மகாராஜா பீமநாத ராஜ சேகர பூபதியுடன் ஏதோ ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டுத் தன் தாய்வழி மாமன் ஒருவருக்கு மலேசியாவில் இருந்த ரப்பர்த் தோட்டத்துக்கு மானேஜராகப் போய்விட்ட ராஜாவின் ஒரே மூத்த மகன் திரும்பி வருவதற்காக அந்திமக் கிரியைகள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

     மூத்தமகன் விமானத்தில் புறப்பட்டு வருவதாகத் தகவலும் வந்துவிட்டது. தனசேகரன் வருவானா மாட்டானா என்று கூட அந்த ராஜ குடும்பத்தில் ஒரு சர்ச்சை இருந்தது. அவன் வருவதாகக் கேபிள் கிடைத்ததும் தான் அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவன் வருவது பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

     “ரெண்டு வருசமா எட்டிப் பார்க்காம இருந்த புள்ளையாண்டானுக்கு அப்பன் இறந்ததும் சொத்துச் சுகம், வாரிசு உரிமை எல்லாம் என்ன ஆகுமோன்னு பயம் வந்திருக்கும். அதான் ப்ளேன்ல பறந்து ஓடியாரான்.”

     “சே! சே! அப்பிடிச் சொல்லிடாதீங்க. சொத்து சுகத்தை எல்லாம் தனசேகரன் என்னிக்குமே இலட்சியம் பண்ணினதில்லே. அப்படி எல்லாம் இலட்சியம் பண்ணியிருந்தா அவன் மலேசியாவுக்கே போயிருக்க வேண்டியதில்லியே?”

     “எப்படியோ? இப்போ அவன் புறப்பட்டு வந்தால் எல்லாம் தானே தெரியுது? பெரிய ராஜா போயாச்சு. இனிமே எப்படியும் அண்ணன் தம்பி தங்கைகளுக்குள்ளே சொத்துச் சுகம் பற்றின தகராறுகளோ பேச்சு வார்த்தைகளோ ஏற்படாம இருக்கிறது சாத்தியமில்லே! தகராறு எப்படியும் வந்துதான் தீரும்.”

     “அண்ணன் தம்பி தங்கைங்கிற பேச்சுக்கே இடமில்லே. முறையான வாரிசு தனசேகரன் ஒருத்தன் தான். மற்றவங்கள்ளாம் இளையராணிகளுக்குப் பிறந்தவங்கதானே?”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.