கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



16

     அத்த இளையராணியைச் சந்திப்பதற்காகத் தனசேகரன் தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டுக்கு என்றைக்குச் செல்ல முடிவு செய்திருந்தானோ அன்று மாமாவே அங்கு வந்துவிட்டதால் குருக்கள் தனசேகரனை அன்று தன் இல்லத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டார். மாமா கல்யாண முகூர்த்தம் அமைக்கும் வேலையாகத் தட்சிணாமூர்த்திக் குருக்களிடம் போயிருந்தார்.

     அதற்கு அடுத்த நாள் காலையில் கோயிலுக்குத் தரிசனத்துக்குப் போவதுபோல் போய்விட்டுக் குருக்கள் வீட்டிற்குச் சென்றான் தனசேகரன்.

     அந்த இளையராணி தன் மகனுக்குப் பணம் நின்று போகாமல் தொடர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்ததற்காக முதலில் அவனுக்கு நன்றி சொன்னாள். அப்புறம் தனக்கு வழங்கப்பட்ட செக்கையும் வீடு கட்டிக் கொள்வதற்கான மனையையும் பற்றி அவனிடம் பிரஸ்தாபித்தாள் அவள்.

     எல்லார் முன்னிலையிலும் எல்லாருக்கும் கொடுத்தாற் போன்ற செக்கையும். நிலப் பட்டாவையும் எனக்கும் கொடுத்துக் கணக்குத் தீர்த்து விட்டீர்கள். மற்றவர்களுக்கு முன்னால் உங்களை விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளக் கூடாதே என்றுதான் அவற்றை நான் வாங்கிக் கொண்டேன். கணக்குத் தீர்த்துப் பணமும் வீட்டுமனையும் கொடுத்துவிட்டீர்கள். கணக்குத் தீர்த்துப் பணமும், விட்டு மனையும் வாங்கிக்கொண்டு இங்கிருந்து போய்விட வேண்டும் என்று நான் தவிக்கவில்லை. இந்த அரண்மனையில் பெரியராஜாவுக்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்க்கைப்பட்டவளைப் போல்தான் நான் நடந்துகொண்டிருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் நடப்பேன். இந்தாருங்கள், உங்களுடைய செக்கும் நிலப்பட்டாவும் தயவுசெய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னை உங்கள் சின்னம்மாவாகவும், ராஜசேகரனை அதாவது என் மகனை உங்கள் இளைய சகோதரனாகவும் மட்டும் நடத்துங்கள், போதும். இதை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் எங்கும் போகப் போவதில்லை. எனக்குப் போக்கிடம் ஏது? சாகிறவரை இங்கேதான் விழுந்து கிடப்பேன். இங்கே தான் சாவேன்.”

     இந்தச் சொற்களைச் சொல்லும்போது அவள் ஏறக்குறைய அழுகிற நிலைக்கு வந்து விட்டாள். அவள் கண்கள் நெகிழ்ந்து சரம் பளபளத்தன. இந்த உணர்ச்சி மயமான நிலையை எப்படி எதிர் கொள்வதென்று ஒரிரு கணங்கள் தனசேகரனுக்குப் புரியவில்லை. சிறிது தயக்கத்திற்குப் பின் அவன் சொன்னான்:

     “உங்கள் மனநிலையை நான் மதிக்கிறேன் அம்மா. அதனால் தான் விதிவிலக்காக உங்கள் மகன் ராஜசேகரனுடைய படிப்புக்கு மட்டும் தொடர்ந்து பனம் அனுப்பச் சொல்லி ஏற்பாடு செய்தேன். அதற்காக என் மாமாவிடமும் காரியஸ்தரிடமும் நான் பொய்கூடச் சொல்லும் படி நேரிட்டது. என் தந்தையின் டைரியில் உங்களைப் பற்றி மட்டும் விசேஷமாக எழுதியிருந்தது என்று சொல்லிச் சமாளித்திருக்கிறேன். உங்களுக்காக இதை எல்லாம் மனப் பூர்வமாகத்தான் நான் செய்திருக்கிறேன். ஆனால் அதற்காக வெளிப்படையாய் உங்களை மட்டும் தனியாய் நடத்தித் தனிமரியாதை செலுத்த முடியாத நிலையில் நான் இருப்பதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். அம்மா! அப்படி நடத்துவதற்கும் மரியாதை செலுத்து வதற்கும் நீங்கள் தகுந்தவராகவே இருந்த போதிலும்கூட என்னால் அதைச் செய்ய முடியாமல் இருக்கிறது. காரணம் நமது பொது மக்கள், சுற்றியிருப்பவர்கள், எல்லாருமே, எதைப் பற்றியும் சுலபமாகக் கைகால்களை ஒட்ட வைத்துக் கதைகட்டி விடுவார்கள், தராதரம் பார்க்க மாட்டார்கள். உறவுகளின் உயர்வுகளைப் பார்க்க மாட் டார்கள். மனிதர்களின் பெருந்தன்மைகளைப் பார்க்க மாட்டார்கள். எதையும் பேசிவிடுவார்கள். ஊர் வாய் மிகவும் பொல்லாதது.”

     “நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. அது எனக்குப் புரிகிறது.”

     தனசேகரன் சொல்லியதை அந்த இளையராணி சகஜமாக எடுத்துக் கொண்டதனால் நிலைமை சுலபமாயிற்று. மறுபடியும் வற்புறுத்தி அந்தச் கையும் வீடு கட்டுகிற மனைக்கான பத்திரத்தையும் அவனிடமே திருப்பியளிக்க அவள் முயன்றாள்.

     “அம்மா! இவற்றை நீங்கள் இப்படியெல்லாம் திருப்பியளிக்கக் கூடாது. ‘தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு’ என்ற பழமொழி உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் உடனடியாக வீடு கட்டிக் கொள்கிறீர்களோ இல்லையோ, பட்டாவையும் பத்திரத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். செக்கை ஏதாவது ஒரு பாங்கில் கணக்கு வைத்துப் போட்டுக் கொள் ளலாம். அது பின்னால் உங்கள் பையனின் மேற்படிப்புக்கு பயன்படும். என்னிடம் இவற்றைத் திருப்பிக் கொடுத்து விடுவதன் மூலம் நீங்கள் யாருக்காகவும் எந்த விதமான தியாகத்தையும் செய்துவிடவில்லை என்பதை உணருங்கள். வேறு எங்கும் போக விரும்பாத பட்சத்தில் தொடர்ந்து தாங்கள் இங்கேயே குருக்கள் வீட்டில் இருக்கலாம். ஆனால், அடிக்கடி என்னைக் கூப்பிட்டனுப்பவோ, அல்லது தேடி வந்து சத்திக்கவோ முயலாதீர்கள். இருவர் நன்மைக்காகவுமே இதை நான் சொல்கிறேன்.

     தனசேகரன் இதைச் சொல்லி விடைபெற்றுக்கொண்டு மறுபடி கோவிலுக்கு வந்து குருக்களிடமும் தகவல் கூறி விட்டு வசந்த மண்டபத்து மாளிகைக்கு வந்தான். அவன் உள்ளே நுழைந்த போது, மாளிகை முகப்பில் மாமா குறுக்கும் நெடுக்கு மாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததுமே அவர் உடனடியாகக் கேட்டார்:

     “ஏன் தம்பி? உன்னைத்தானே? ஷா அண்ட் படேல் என்ஜீனியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்காரனுக்கு நீ ஏதாவது அணைக்கட்டுக்குக் கல் சப்ளை பண்றதாகச் சொல்லியிருந்தியா? இங்கே பக்கத்திலே நூறு மைல் தொலைவிலேயே ஏதோ அணை கட்டறாங்களாமில்லே! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னே அவுங்க இங்கே ஃபோன் பண்ணினாங்க. கல்லைப் பார்க்கறதுக்கு நாளைக்கு என்ஜீனியரோட வர்றாங்களாம். தயாரா இருக்கச் சொன்னாங்க. ஆமாம் எந்தக் கல்லை அவங்களுக்கு விற்கப்போறே நீ? யாரையும் கலந்துக்காமே நீ பாட்டுக்கு அவங்களோட பேசிட்டியே? சமயத்திலே உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலேப்பா?”

     “நாளைக் காலையிலே தானே வரேன்னாங்க? வரட்டுமே!”

     “நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலியே? எந்தக் கல்லை அவங்களுக்குக் கொடுக்கப் போறே? அணை கட்டறத்துக்குக் கல் சப்ளைப் பண்றதுன்னா ரெண்டு சின்ன நிலையை உடைச்சாக்கூடப் போதாதே அப்பா?”

     “இந்த அரண்மனையைச் சுற்றி இருக்கிற கல் மதில் சுவர்கள் இரண்டு மலைகளைவிட அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன் மாமா!”

     “சரி அப்படியே இருக்கும்னு வச்சுக்குவோம். அரண்மனை மதிலுக்கும் அணைக்கட்டுக்கும் என்னப்பா சம்பந்தம்?”

     “மதிலை உடைக்கச் சொல்லித்தான் அணைக்கட்டுக்குக் கல் விற்கப் போகிறேன். அதுக்காகத்தான் அவங்களை வரச்சொல்லியிருக்கேன் மாமா!”

     “உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? கல் மதிலை எதுக்காக உடைக்கிறது? ஆகாக் காரியம்லாம் வேண்டாம்பா. ஊரையும் அரண்மனையையும் பிரிப்பதே கற்சுவர்கள்தான். அதை உடைச்சாச்சுன்னா ஊருக்கும் அரண்மனைக்கும் நடுவே ஒரு தடுப்பும் இல்லாமலே போயிடும். பழைய காலத்திலே எதிரிகள், கொள்ளைக்காரங்ககிட்ட இருந்தெல்லாம் இந்த அரண்மனையை அந்தச் சுவர்கள்தான் காப்பாத்தியிருக்கு. அதைப் போய் யாராவது உடைப்பாங்களா?”

     “ஊருக்கும் அரண்மனைக்கும் நடுவே தடுப்பு எதுவும் இனிமே இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தானே இந்தச் சுவர்களை எல்லாம் உடைக்கச் சொல்றேன். இந்தச் சுவர்கள் வெளியே இருந்து இதற்குள்ளே திருடர்கள் வராமல் பாதுகாத்தது என்பதை விட உள்ளே இருந்த திருடர்களை வெளியே வசித்தவர்களிடமிருந்து, அதாவது பறி கொடுத்தவர்களிடமிருந்து பறித்தவர்களைக் காப்பாற்றியிருக்கிறது என்பதே இப்போது சரியான வாதம் மாமா! சுரண்டப்பட்ட மக்களிடமிருந்து சுரண்டிய வர்க்கத்தைப் பிரித்துத் தனியே பாதுகாத்து வைத்த சுவர்கள் இவை. வெளியே என்ன நடக்கிறது என்பதை உள்ளே உழைக்காமல் சுகபோகங்களில் மிதந்து கொண்டிருந்தவர்களுக்கும், உள்ளே என்ன நடக்கிறது என்பதை வெளியே சிரமப்பட்டுக் கொண்டிருந்த பல லட்சம் மக்களுக்கும் தெரிய விடாமல் உயர்த்திக் கட்டப்பட்ட உறுதியான சுயநலச் சுவர்கள் இவை. பழமையையும் சுரண்டுகிறவர்களின் சொந்த நலனையும் பாதுகாக்க இப்படி ஆயிரம் ஆயிரம் கற்சுவர்கள் இந்நாட்டில் எங்கெங்கோ எது எதற்கோ போடப்பட்டிருக்கின்றன். இன்றும், இனி என்றும், அந்தச் சுவர்களுக்கு அவசியமில்லை. திருடுபவர்களும் காவல் புரிகிறவர்களும் இல்லாத ஒரு புதிய சமூகம் உருவாக இப்படிச் சுவர்களே தடையாக இருக்கின்றன. இவற்றை உடைத்தால் சமூகத்தை அணையிட்டுத் தடுக்கும் பாத்திகளும் வரப்புக்களும் வர்க்க பேதங்களும் உடைக்கப்படுவதாக நான் நினைப்பேன்.”

     “இந்தக் கற்சுவர்களுக்குள்ளே இருந்து ஆண்ட அனைவருமே கெட்டவர்களாகவும், திருடர்களாகவும் இருந்தார்கள் என்றா நீ சொல்கிறாய்? இந்த மதிற் சுவர்கள் உன் தந்தை காலத்துக்கும் முன்பாகப் பல நூற்றாண்டுக் காலம் முந்திக் கட்டப்பட்டவை...”

     “என்றைக்கானால் என்ன? எப்போது அகழிகள் தோண்டிச் சுவர்கள் எடுத்துச் சமூகத்திலிருந்து தங்களைப் பிரித்து உயர்த்தி வேறுபடுத்திக் கொண்டார்களோ அப்போதே திருட்டு ஆரம்பமாகிவிட்டது. நாட்பட்ட திருட்டுக்கள் இங்கே சாஸ்திரோக்தமாகி விடுகின்றன. நாட்பட்ட தவறுகளே சில சமயங்களில் சம்பிரதாயமாகவும் சட்டங்களாகவும் ஆகிவிடுகின்றன. பின்பு அதைப் புகழவும் போற்றவும் ராஜ விசுவாசிகள் என்ற பெயரில் ஒரு பரிவாரம், குடிபடைகள், புலவர்கள், பிரதானிகள் எல்லாரும் ஏற்பட்டு விடுகிறார்கள். ஏழையின் திருட்டு உடனே கண்டு பிடிக்கப்படுகிறது. பணக்காரர்களின் திருட்டு கண்டு பிடிக்கப்படுவதில்லை. மாறாக அவை சம்பிரதாயங்களாக நியாயப் படுத்தப்பட்டு விடுகின்றன. அரண்மனைகளில் விசுவாசத்துக்கு ஒரு காலும் ஒருகையுமே இருக்கின்றன. விசுவாசம் முடமாக்கப் பட்டிருக்கிறது. விசுவாசம் ஒரு வழிப் பாதையாக்கப் பட்டிருக்கிறது.”

     தனசேகரனின் உணர்வுகள் கட்டுப்பாடற்றுப் பொங்கின. மாமாவுக்கு இந்தக் கருத்துக்களை முற்றிலும் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் இதில் கொஞ்சம் நிஜம் இருப்பது போலவும் பட்டது.

     “அந்த மதிற்கூசுவரின் மொத்தச் சுற்றளவுக்குள் எட்டுக் கோவில்கள் இருக்கின்றனவே; அவற்றை என்ன செய்யப் போகிறாய்?” என்று புதுச் சந்தேகத்தைக் கிளப்பினார் அவர்.

     “ஜனங்கள் விரும்பினால் அவற்றை விட்டுவிடலாம். அவை பெரிய பிரச்னை இல்லை. மரத்தடி, மதிற் சுவர். திறந்த வெளி எல்லாவற்றையுமே இந்நாட்டில் கோவிலாக்கி விடுகிறார்கள். அதனால் எங்கும் எதுவும் செய்ய முடியாமற் போகிறது மாமா.”

     தந்தையின் நாட்குறிப்புக்கள் அவனை இப்படி மாற்றினவா? அல்லது அவன் படித்த வேறு புத்தகங்கள் அவனை இப்படி மாற்றினவா? என்பது மாமாவுக்குப் பெரிய புதிராக இருந்தது.

     அவன் பேசிய விதத்திலிருந்து மதிற்சுவர்களை எடுத்து விட்டு அரண்மனையை ஊர்ப் பொதுச் சொத்தாக்க உத்தேசித்திருப்பது போலப்பட்டது. மாமா அதை எதிர்த்து வாதிடவில்லை.

     மறுநாள் காலையில் ஷா அண்ட் படேல் இன்ஜினியரிங் கம்பெனி ஆட்கள் வந்தார்கள். அவர்களுக்கு மதிற்சுவர்களைச் சுற்றிக் காட்டினான் தனசேகரன். தாங்கள் விரும்பிய ஒரிடத்தில் மதிற்சுவரிலிருந்து சில கருங்கற்களை உடைத்துப் பார்த்துக் கொண்டார்கள் அவர்கள், அணைக் கட்டுக்கு என்று புதிதாக ஒரு மலையைத் தேடிப் போய் வெடி மருந்துக்கும் வேலை ஆட்களுக்கும் செலவழித்துக் கொண்டிருப்பதை விட இந்தக் கற்சுவர்களையே பிரித்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று அந்தக் கம்பெனியின் இன்ஜீனியர்கள் இணக்கமான ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

     அன்று காலை தனசேகரன் அவர்களை அழைத்துக் கொண்டு அரண்மனை மதிற்சவர்களைச் சுற்றிக் காட்டுவதற்குப் புறப்பட்டபோது மாமா அவர்களோடு உடன் செல்லவில்லை.

     காரியஸ்தருக்கும் அது பிடிக்கவில்லை என்றாலும் உத்தியோகம் கருதி அவர் உடன் செல்ல வேண்டியிருந்தது. விரைவில் பேசி முடிவு செய்யலாம் என்று கற்களை விற்க இருந்தவர்களும் வாங்க இருந்தவர்களும் தீர்மானித்தனர். சுவர்களைப் பிரித்துக் கற்களைச் சேகரித்துக் கொள்ளும் வேலையைக் கம்பெனியாரே செய்து கொள்ள வேண்டும். தன்னால் அது நிச்சயமாக முடியாது என்று தனசேகரன் கூறிவிட்டான்.

     சுற்றுப்புறத்து ஏழை விவசாயிகளின் பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி செய்து தரக்கூடிய ஓர் அணைக்கட்டுக்கு அந்தக் கற்கள் உபயோகமாகப் போகின்றன என்று எண்ணியபோது தனசேகரனுக்குப் பெருமையாக இருந்தது. மதில்களை உடைக்கத் தொடங்குவதற்கு நாள் குறித்தாகிவிட்டது. கற்களுக்கு விலையாக ஒரு பெருந்தொகை தருவது என்றும் உடன்படிக்கை செய்து கொண்டாயிற்று.

     உடன்படிக்கையில் இருவருமே எழுதிக் கொள்ள மறந்து விட்ட ஒரு பிரச்னை முதல் நாளே வந்து குறுக்கிட்டது. தோண்டத் தொடங்கிய முதல் இடத்திலேயே பழைய தங்க நாணயங்கள் நகைகள் அடங்கிய ஒரு பெரிய பித்தளைக் குடம் புதையலாகக் கிடைத்தது.

     என்ஜீனியரிங் கம்பெனியார் அது தங்களுக்குத்தான் சொந்தம் என்றார்கள். மாமாவும் காரியஸ்தரும் நிச்சயமாக அது அரண்மனைச் சொத்தாகையால் தனசேகரனைத் தான் சேரும் என்றார்கள்.

     தகவல் படிப்படியாகப் பரவித் தோண்டி எடுத்த இடத்தில் ஒரு பெருங்கூட்டமே கூடிவிட்டது. பத்திரிகைகளிலும் செய்திகள் படத்துடன் பிரசுரமாகிவிட்டன. இன்னும் பல இடங்களில் தோண்டும்போது இப்படியே மேலும் பல புதையல்கள் கிடைக்கக்கூடும் என்று ஜனங்கள் பேசிக் கொள்ளத் தொடங்கி இருந்தார்கள். தனசேகரன் அந்தப் பிரச்னையை எப்படி முடிவு செய்கிறான் என்பதை அறிவதில் எல்லாருமே ஆவல் காட்டினார்கள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247