கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



11

     தனசேகரனுக்கு அப்போது தன் தாயின் மேல் ஏற்பட்ட பரிதாப உணர்வில் மேலே எந்த வேலையையும் செய்வதற்கு ஓடவில்லை. மாமா எதற்காக அந்த டைரிகளைப் படிப்பதற்கு உட்கார்த்தியிருந்தாரோ அந்த நோக்கமே கூட அவனுக்கு மறந்து போயிற்று. அவன் முற்றிலும் புதிய உணர்வுகளில் ஆழ்ந்து போய்விட்டான், தந்தையின் டைரிகளைப் படித்தபின் அவனுடைய உணர்வுகள் திசை திருப்பப்பட்டுவிட்டன. தந்தையின் மேல் இந்த விஷயங்களெல்லாம் தெரிவற்கு முன்பு அவனுக்கு இருந்த வெறுப்பு இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாகி விட்டிருந்தது. அவருடைய பக்தி, கெளரவ நோக்கு, பெரிய மனிதத் தன்மை ஆகிய விசேஷங்களை ஒவ்வொன்றாகக் கலைத்துக் குற்றவாளியாகத் தன் முன் நிறுத்தினாற் போலிருந்தது. பசுத்தோல் நன்றாக விலகிக் கண்ணெதிரே புலி தெரிவது போல் ஒரு பிரமை உண்டாயிற்று. என்றாலும் அந்தப் புலி செய்கிற அட்டுழியங்களை யெல்லாம் செய்துவிட்டுத் தானே மூத்துத் தளர்ந்து இப்போது செத்துப் போய் விட்டது என்பதும் ஞாபகம் வந்தது.

     ஆனால் மறுநாள் விடிந்த போது மாமா அவனிடம் அரண்மனை வரவு செலவுக் கணக்கு விவரங்கள் பற்றி டைரிகளிலிருந்து அவன் ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்ததா என்று ஆவலோடு விசாரித்தார்.

     தனசேகரனோ அவருக்கு அப்போது உடனடியாக எந்தப் பதிலையும் சொல்கிற நிலைமையில் இல்லை. அவன் பார்த்து முடித்திருந்த வரவு செலவுக் கணக்குகளோ முற்றிலும் வேறானவை. தந்தையின் ஒழுக்கம் சம்பந்தமான வரவு செலவுக் கணக்கில் அவர் எவ்வளவு நஷ்டப்பட்டுப் போயிருந்தார் என்பதை மட்டுமே அவன் பார்த்து முடித்திருந்தான். அதை அவன் மாமாவிடம் கூட சொல்ல முடியாமல் இருந்தது. குளித்து உடை மாற்றிக் கொண்டு வெறும் காபி மட்டும் அருந்தினான். அரண்மனைத் தவசிப் பிள்ளை எவ்வளவோ கெஞ்சி உபசரித்துச் சிற்றுண்டி சாப்பிட அவன் மறுத்து விட்டான். அவனுடைய மனநிலை முந்திய இரவில் தந்தையின் நாட்குறிப்பில் படித்தவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுப் போயிருந்தது. அரண்மனை எல்லைக்குள்ளேயே இருந்த இராஜ ராஜேஸ்வரி கோவி லுக்குப் போய் மன நிம்மதி ஏற்படுகிற வரை அம்மனையும், நவக்கிரகத்தையும் பிரதட்சணம் செய்தான் அவன்.

     கோவில் பரம்பரை அர்ச்சக ஸ்தானிகராகிய தட்சிணா மூர்த்திக் குருக்கள் அவனுக்கு விசேஷமான மரியாதைகளோடு தீபாரதனை செய்து கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனைத் தரிசனம் பண்ணி வைத்தார். ஒழுக்கமுள்ளவராகவும் ஆசாரசீலராகவும் ஆகாரக் கட்டுப்பாடு உள்ளவராகவும் இருந்ததால் வயது எழுபது ஆகியும் குருக்கள் திடகாத்திரமாகவே தோன்றினார். தனசேகரன் அவரையும் தன் தந்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான். தன் தந்தைக்கும் குருக்களுக்கும் அதிகமான வயது வித்தியாசம் இல்லை என்றாலும் இந்த குருக்கள் வாழ்ந்திருக்கும் கட்டுப்பாடான ஒழுக்கம் நிறைந்த ஆரோக்கிய வாழ்வைத் தன் தந்தையால் வாழ முடியாததற்கு என்ன காரணம் என்று தனசேகரன் யோசித்தான். தேவைக்கதிகமான பணவசதி தான் மனிதர்கள் கெட்டுப்போவதற்கு முக்கியமான காரணமோ என்று கூட அவனுக்குத் தோன்றியது. அதிக ஈரத்தில் பண்டங்கள் அழுகிக் கெட்டுப் போய் நாறுவதைப் போல் அதிகமான பணச் செழிப்பில் மனிதர்களும் கெட்டுப் போய் அழுகி நாறுகிறார்களோ என்று சிந்தித்தான் அவன்.

     அப்போது அவனுக்குச் செய்ய வேண்டிய கோயில் மரியாதைகளை எல்லாம் செய்து முடித்தவுடன் குருக்களே அவனருகே வந்து பேசத் தொடங்கினார்:

     “சின்னராஜா இன்னமே மலேசியாவிலே போய் இருக்கிறது சாத்தியமில்லே. இங்கேயே ஊரிலே தங்கி அரண்மனையோட இருந்து பொறுப்புக்களைக் கவனிக்க வேண்டியது தான். பெரியவர் அநேகமா ஒண்ணும் மீதம் விட்டு வைக்கலே. எல்லாச் சொத்துச் சுகங்களையும் சீரழிச்சுட்டார், இனிமே நீங்க தலையெடுத்து இந்தச் சமஸ்தானத்திலேயே ஏதாவது மீதப்படுத்தினால்தான் உண்டு.”

     “எனக்கு உங்க பேரன் வயதுகூட ஆகலியே குருக்களே? எதுக்கு இந்தச் சின்னராஜா, பெரியராஜாப் பட்டம் எல்லாம்? சும்மா ‘தனசேகரா’ன்னு என்னைப் பேர்ச் சொல்லிக் கூப்பிடுங்க சாமி! ராஜாவாவது, கூஜாவாவது? அதெல்லாம் இப்பக் கிடையாது. மரியாதை வேறே, பிரியம் வேறே. மரியாதை மட்டுமே காண்பிச்சிங்கன்னா நீங்க என்னை இன்னும் அந்நியமாகத்தான் நினைக்கிறீங்கன்னு அர்த்தம். பிரியம் காமிச்சிங்கன்னாத்தான் நீங்க என் மேலே உண்மையா அன்பு செலுத்தறிங்கன்னு அர்த்தம். எனக்கு உங்க மரியாதையைவிட உள்ளன்புதான் முக்கியமா இப்போ வேணும் சாமி! எங்கப்பா சங்கதி வேறே, அவருக்குப் பணம்தான் கடவுள். பணம் தான் உலகம். மானம், மரியாதை, கெளரவம் எல்லாமே பணம்தான் அவருக்கு. ஆனால் அந்தப் பண ஆதிக்கக் காலம் அவரோடு முடிந்து போய் விட்டது.”

     குருக்கள் நெருங்கிக் காதருகே வந்து நின்று கொண்டு தணிந்த குரலில், “கோவில் நகை நட்டுகளை எல்லாம் கூட வித்து சாப்பிட்டாச்சு; என்னைப் போலொத்தவங்க, எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உங்கப்பா கேட்கலே” என்று தனசேகரனிடம் சொன்னார்.

     “தெரியும் சாமி! இந்தக் கோவில்லே மட்டுமில்லே. இது தெய்வ சந்நிதானம், இங்கே நான் நிஜத்தைத் தான் பேசணும். எங்கப்பாவாச்சேன்னு பொய் சொல்லப் படாது. அவரோட ஆதிக்கத்திலே இருந்த எல்லாக் கோவில்லேயும் இதுதான் நடந்திருக்கு. ராஜ மான்யம் தொலைஞ்ச பிறகு தான் ராஜமான்யம் கிடைச்ச காலத்துலே செஞ்சதை விட அதிகமான ஊதாரிச் செலவுகளை அவர் செய்ய ஆரம்பிச்சிருக்காரு. அப்புறம் எப்படி உருப்படறது?”

     “செத்தவாளைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம். நடந்ததை எல்லாம் நீங்க தான் இனிமே எப்பிடியாவது சரி பண்ணனும், பண்ணுங்கோ, உங்களாலே அது முடியும். நீங்க உங்க அப்பாவைக் கொண்டு பிறக்கலே, உங்க அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கீங்க. உங்கம்மா சுபாவம் தான் உங்ககிட்ட நிறைய இருக்கு.”

     தனசேகரனுக்கு இந்த வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன. குருக்கள் இன்னும் சிறிது நேரம் கூடத் தன் அன்னையைப் புகழ்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது. அவனுக்கு குருக்களிடம் அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அரண்மனை அந்தப்புரத்தைச் சேர்ந்த இளைய ராணி ஒருத்தி தரிசனத்துக்காக அங்கே வந்து சேர்ந்திருந்தாள். தனசேகரன், அப்போது அங்கே நின்று கொண்டிருந்ததால் தவிர்த்த முடியாமல் அவளை அங்கே சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. அவன் நின்ற இடத்திலிருந்து நாலைந்தடி தூரம் நின்று குனிந்த தலை நிமிராமல் “சின்ன ராஜாவைக் கொஞ்சம் தனியே சந்திச்சுப் பேசணும், எப்ப முடியும்னு தெரிஞ்சா நல்லது” என்றாள் அவள்.

     சங்கீதம் போன்ற இனிய குரல், தங்கப் பதுமைபோல் அழகிய தோற்றம். இப்படிப் பேசும் பொற்சித்திரங்களைப் போன்ற இளையராணிகளை வைத்துக் கொண்டா தந்தை சினிமாக்காரிகளில் ஜிகினாப்பூச்சு அழகுகளைத் தேடிக் கொண்டு சென்னைக்கு ஓடினார் என்று தனசேகரனாலேயே நம்ப முடியாமல் இருந்தது. இப்படிப் பல பெண்களின் அழகிய இளமை வாழ்க்கையையும் பாழாக்கி விட்டுத் தான் தந்தை இறந்து போயிருக்கிறார் என்பது அவன் மனத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை உண்டாக்கி இருந்தது.

     “சின்னராஜா இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லலியே?”

     “அதுக்கென்ன? எப்ப வேணும்னாலும் பார்க்கலாம்!”

     “சரி! நான் எப்போ எங்கே வந்து பார்க்கணும்னு சொன்னால் தேவலை.”

     “நீங்க வரவேண்டாம்! அது முறையும் இல்லை. நானே அங்கே வந்து எல்லா இளைய ராணிகளையும் சந்திச்சுப் பேசணும்னுதான் நினைச்சிருக்கேன், அப்படிப் பேசறதுக்கு வர்றப்ப நிச்சயமா உங்களையும் பார்ப்பேன்.”

     தனசேகரனின் பொதுவான பதில் அந்த இளைய ராணிக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று அவள் முகத்திலிருந்து தோன்றியது. அவள் முகபாவத்திலிருந்தே அதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. தனசேகரனோ, வேண்டு மென்றேதான் பதிலைப் பொதுப்படையாக்கிச் சொல்லிருந் தான். மாமா அவனை இது விஷயமாக முன்பே எச்சரித்து வைத்திருந்தார்.

     “வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடாதே. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள முடியாது. யாரையும் எதற்காகவும் தனித் தனியாகச் சந்திக்காதே. ஊர் வாய் பொல்லாதது, கண்டபடி பேசுவார்கள். அவர்களைத் தனித் தனியாகச் சந்திப்பதால் வேறு புதிய பிரச்னைகள் உண்டாகும். ‘என்னிடம் அப்படிச் சொன்னான்’ ‘இப்படிச் சொன்னான்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் அவர்களே பேசிக்கொள்வார்கள். ஜாக்கிரதையாயிரு” என்று மாமா சொல்லியிருந்தது சமயசஞ்சீவியாக ஞாபகம் வரவேதான் அவன் அப்போது அந்த இளையராணிக்குப் பொதுப்படையான மறுமொழியைக் கூறியிருந்தான்.
     “என் நிலைமை எல்லா இளையராணிகளையும் போல இல்லே. மத்தவங்களை விட நான் வயசிலே ரொம்பச் சின்னவ. அவங்கள்ளாம் அவர் இருக்கிறப்பவும் சரி, போனப்புறமும் சரி, நிறையச் சேர்த்து வச்சிக்கிட்டிருக்காங்க. இன்னமும் உங்ககிட்டப் பேரம் பேசி நிறையக் கேட்டு வாங்கிடணும்னு இருக்காங்க. என் நிலைமைதான் பரிதாபம். நான் உங்ககிட்ட எனக்காகன்னு எதுவும் கேட்கப் போறதில்லே. என் வேண்டுகோளை நீங்க மட்டும் பொறுமையாகக் கேட்கணும். கேட்டிங்கன்னா அப்புறம் உங்களுக்கு என் மேலேயே இரக்கமாக இருக்கும்.”

     “கேட்கிறதைப் பத்தி எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்லேம்மா! ஆனால் அதை நீங்களும் நானும் தனியாத் தான் பேசணும்னு என்ன கட்டாயம்? நீங்க சொல்லப் போறதை எல்லோருக்கும் நடுவிலே நீங்க சொல்றதாலேயோ, அல்லது நான் கேட்கிறதாலேயோ எனக்கு உங்க மேலே இரக்கம் வராமப் போயிடுமோன்னு நீங்க ஏன் சந்தேகப்படறீங்க? அது தான் எனக்குப் புரியமாட்டேங்குது?’’

     “உங்களுக்கு அது இப்போ புரியாது. என் கதையை முழுக்கக் கேட்டால்தான் புரியும். தயவு செய்து நீங்க முதல்லே அதுக்குச் சம்மதிக்கணும். நான் நிஷ்களங்கமா தெய்வ சந்நிதானத்துலே வச்சு இப்போ உங்ககிட்ட வேண்டிக்கிறேன்.”

     “தெய்வ சந்நிதானத்திலே மனிதர்களை வேண்டிக் கொள்வதைவிட தெய்வத்தையே அதிகமாக வேண்டிக் கொள்ள வேண்டும். அதுதான் முறை. இந்த இடத்தில் எல்லா மனிதர்களுமே சக்தியற்று அகங்காரமற்று போய் விடுகிறார்கள்.“

     “தெய்வத்தையும் வேண்டிக் கொள்ளத்தான் போகிறேன். இப்போது உங்களையும் வேண்டிக் கொள்கிறேன். அவ்வளவுதான். முன்னதை நான் தினந்தோறும் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறேன். உங்களை இன்று தான் தனியாகச் சந்திக்கிறேன். அதனால் உங்களிடமும் ஒரு வார்த்தை கேட்டேன். இணங்குவதும் இணங்காததும் உங்கள் இஷ்டத்தைப் பொறுத்த விஷயம், நான் உங்களை வற்புறுத்தவில்லை. உங்களை மட்டும் என்ன? என் தலை எழுத்தை மாற்றிவிடச் சொல்லித் தெய்வத்தைக்கூட நான் அதிகமாக வற்புறுத்த மாட்டேன்.”

     “எந்த வேண்டுதலும் வற்புறுத்தல் ஆகாது. வற்புறுத்த முடியாதவற்றைத்தான் நாம் வேண்டிக் கொள்கிறோம்.”

     “அப்படி இல்லை யுவராஜா! திரும்பத் திரும்ப முறை யிட்டால் வேண்டுதல்கள் கூட வற்புறுத்தல் ஆகிவிடுகின்றன” என்று அவள் சிரித்துக்கொண்டே கூறியபோது அந்தச் சிரிப்பு மிக மிக நயமாகவும், நளினமாகவும் வெளிப்பட்டு மறைந்தது.

     “நீங்கள் என்னைத் தனசேகரன் என்று கூப்பிட்டால் போதும் அம்மா! முறைப்படி பார்த்தால் கூட நான் உங்களுக்கு மகன் முறைதான் ஆக வேண்டும்” என்று தனசேகரன் அவள் தன்னை யுவராஜாப் பட்டம் சூட்டிக் கூப்பிட்டதை நாசூக்காக மீண்டும் மறுத்தான்.

     இப்போது குருக்கள் மெல்ல நடுவே குறுக்கிட்டார்: “சின்னராணி என்ன சொல்றாங்கன்னுதான் அப்புறமாக் கேளுங்களேன். இவங்க எல்லாரையும் போல இல்லே. ரொம்ப நல்ல மாதிரி சுபாவம். பணத்தாசை கொஞ்சமும் கிடையாது.”

     குருக்கள் இதை தெரிவித்ததிலிருந்து மறைமுகமாக, அவளுக்காக ஒரளவு பரிந்து பேசியிருக்கிறார் என்றே தனசேகரனுக்குப் புரிந்தது. அவனும் அவருடைய இந்த வார்த்தைகளை நல்ல விதத்திலேயே எடுத்துக் கொண்டான். கடைசியாக அவன் அவளை அதிகம் சோதிக்க விரும்பவில்லை.

     “சரி! பார்க்கலாம்” என்று பொதுவாகச் சம்மதித்து வைத்தான், அவளும் அதை அவனுடைய சாதகமான பதிலாகவே புரிந்துகொண்டு அவனுக்கு நன்றி சொல்லி விட்டு ஆலயத்துக்குள்ளே தரிசனத்துக்குப் போய்ச் சேர்ந்தாள்.

     அவள் உள்ளே போன பின் குருக்கள், “இவ ரொம்ப நல்ல பொண்ணு! உங்கப்பாவோட பலவீனமான, வேளைகளிலேகூட அவரை வற்புறுத்தியோ ஏமாற்றியோ பணம் பறிக்காத சின்ன ராணி யாராவது இருக்க முடியும்னா அது இந்த அரண்மனையிலே இவ ஒருத்தி தான்” என்று மேலும் அதைத் தெளிவாக்கினார். தனசேகரனுக்கு இப்போது அவள் மேல் முழுமையாக நம்பிக்கை ஏற்பட்டது.

     ஒரு நம்பிக்கை ஏற்பட்டாலொழிய தட்சிணாமூர்த்திக் குருக்கள் இவ்வளவு தூரம் புகழமாட்டார் என்பது அவனுக்கு மிக நன்றாகத் தெரியும். குருக்கள் சாதாரணமாக ஒருவரைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டாலொழியப் புகழ்ந்து சொல்ல மாட்டார் என்பது பல முன் அநுபவங்களால் நிரூபணம் ஆகியிருந்தது.

     இங்கு அவன் இவ்வாறு கோயில் முகப்பில் குருக்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது அரண்மனையிலிருந்து வில்லையணிந்த சேவகன் ஒருவன் கோவிலுக்கே தேடிக் கொண்டு வந்து விட்டான். மரியாதையாக ஏழடி, விலகி நின்று தலைகுனிந்து உடம்பை வளைத்து வணங்கியபடி ஒரு கையால் வாய் புதைத்து வந்த விஷயத்தைத் தனிந்த குரலில் தனசேகரனிடம் தெரிவிக்கத் தொடங்கினான் அந்தச் சேவகன்.

     “காரியஸ்தரும் மாமாவும் காத்துக்கிட்டிருக்கோம்னு உங்ககிட்டத் தெரிவிக்கச் சொல்லி அனுப்பிச்சாங்க.”

     “பத்து நிமிஷத்திலே வரேன்னு போய்ச் சொல்லு...” என்றான் தனசேகரன். சேவகன் புறப்பட்டுச் சென்றான். குருக்களிடம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு தனசேகரன் திரும்பினான். கோவிலுக்கும் அரண்மனைப் பாதைக்கும் நடுவிலே இருந்த புல்வெளியிலே டிரைவர் ஆவுடையப்பன் எதிர்ப்பட்டான். அவன் தற்செயலாக எதிரே வருகிறானா அல்லது தன்னைப் பார்ப்பதற்கென்றே தான் அங்கிருப்பதைத் தெரிந்து கொண்டு வருகிறானா என்று முதலில் தனசேகரனால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. ஆவுடையப்பனோ எதிரே தனசேகரன் நடந்து வந்து கொண்டிருப்பதைக் கண்டதுமே தான் அப்படியே நின்றிருந்த இடத்திலேயே நின்று. விட்டான்.

     “என்னங்க யுவராஜா இப்படி யாருமே கூடத் துணையில்லாமே தனியா நடந்து வரலாமா?”

     “பின்னே என்ன? குடிபடைகள் புடைசூழப் பரிவாரம், யானை, குதிரை, தேர், ஒட்டகத்தோட நடந்து வரணுங்கிறியா? அதெல்லாம் இப்போ இந்த அரண்மனையிலே கிடையாது ஆவுடையப்பன்! நான் ஏதாவது பரிவாரத்தோடுதான் நடந்து வரணும்னு நீ ஆசைப்பட்டால் எங்கப்பா ஒரே ஒரு பரிவாரத்தைத்தான் எனக்கென்று மீதம் வைத்து விட்டுப் போயிருக்கிறார். அதுதான் அவருக்குக் கடன் கொடுத்திருக்கிறவர்களின் பெரிய கூட்டம். அவர்களை எல்லாம் தகவல் சொல்லி இங்கே வரவழைத்து எனக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கச் சொல்லி அழைத்துக் கொண்டு போனால் அந்தப் பரிவாரம் ரொம்பப் பெரிசா இருக்கும்.”

     டிரைவர் ஆவுடையப்பன் இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இதில் பட்டுக் கொள்ளாமல் மெளனமாக இருந்துவிட்டான். சின்ன ராஜா அவருக்கேயுரிய சகஜமான சுபாவத்தின் காரணமாகவும் தந்தையின் மேலுள்ள, வெறுப்பின் காரணமாகவும் குடும்பக் கடன் விஷயமாகத் தன்னிடம் பேசினாலும் தான் அதைக் கேட்டுக் கொள்ளவோ அதில் கலந்து கொள்ளவோ கூடாது என்பதில் ஆவுடையப்பன் ஜாக்கிரதையாக இருந்தான். தன் நிலைமைக்குத் தன்னிடம் இதைப்பற்றி எல்லாம் அவர் பேசாமல் இருப்பதே உத்தமம் என்றுகூட அவனுக்குத் தோன்றியது.

     “என்ன ஆவுடையப்பன் பதில் சொல்ல மாட்டேங்கறே? நான் சொன்னது சரிதானே?”

     தனசேகரனின் இந்தக் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லாமல், “சின்னராஜா கோவிலுக்குப் போகணும்னு சொல்லியிருந்தா நானே கூட வந்திருப்பேனே?” என்று மீண்டும் பழைய விஷயத்திற்கே வந்தான் ஆவுடையப்பன். அவனுடைய முன்னெச்சரிக்கையையும் தற்காப்பு உணர்வையும் புரிந்து கொண்டு தனசேகரன் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான். ஆனால், ‘இவனைப் போன்றவர்கள் அளிக்கத் தயாராயிருக்கும் இந்த மரியாதைக்கும் கெளரவத்திற்கும் நாகரிகத்திற்கும் கூடத் தன் தந்தை தகுதியுள்ளவர்தானா’ என்ற சந்தேகம் தனசேகரனுக்கு ஏற்பட்டது.

     ஆவுடையப்பன் பின் தொடர அரண்மனையை நோக்கி நடந்தான் அவன். கோவில் அரண்மனை எல்லாமே. கோட்டைச் சுவர்களுக்கு நடுவே உள்கோட்டைப் பகுதியில் இருந்தாலும் சில நிமிஷங்கள் நடக்க வேண்டிய தொலைவிலிருந்தது.

     உள்ளூர்ப் பொதுமக்கள் கோட்டைக்குள்ளே இருப்பவற்றுக்கு உள் பட்டணம் என்றும் வெளியே இருப்பவற்றுக்கு வெளிப் பட்டணம் என்றும் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

     தனசேகரன் அரண்மனைக்குள்ளே போய்ச் சேர்ந்த போது மாமாவும் காரியஸ்தரும் இளைய ராணிகள் சம்பந்தமான காம்பன்ஸேஷன், வாரிசு, பற்றிய ஃபைல்களை வைத்து ஏதேதோ கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். தனசேகரனைப் பார்த்தவுடனேயே அவனிடம்,

     “இந்தக் கூலிபட்டாளத்துக்குப் பணத்தைக் கொடுத்து வெளியே அனுப்பறவரை நமக்கு ஒரு வேலையும் ஓடாது. இதை முதல்லே முடிச்சாகணும்” என்றார் மாமா.

     “ஒரு நாள் பொறுத்துக்குங்க, நாளைக்கு அல்லது நாளைக் கழித்து மறுநாள் இதை முடித்துவிடலாம். நானும் அதுக்குள்ளே மீதமுள்ள டைரிகளைப் படிச்சு முடிச்சிடறேன்” என்றான் தனசேகரன்.

     மாமாவுக்கும் காரியஸ்தருக்கும் தனசேகரனின் இந்த மறுமொழி ஆச்சரியத்தை உண்டாக்கியது. தங்களைப் போலவே இதில் மிகவும் அவசரம் காட்டிய தனசேகரன் இப்போது ஏன், பின்வாங்கி ஒத்திப்போடுகிறான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. தனசேகரனோ டைரிகளைப் பார்க்க வேண்டும் என்று சாக்குபோக்காகச் சொல்லியிருந்தாலும் உண்மையில் அவன் மனதுக்குள் இருந்தது என்னவோ கோவிலில் சந்தித்த இந்த இளையராணியின் சந்திப்பு முடிவதற்கு முன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டாம் என்பதுதான். அவள்மேல் அவனுக்கு ஏற்பட்டிருந்த கருணைதான் இந்தப் பிரச்னையை மேலும் இரண்டு நாட்களுக்குத் தள்ளிப் போட வைத்திருந்தது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247