கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



19

     சேதுராசன் சேர்வை விருந்துக்குக் கூப்பிட்டது வேறு எதற்காகவோ தான் இருக்கும் என்று தனசேகரனுக்குள்ளே ஒரு சந்தேகம் ஏற்பட்டது சரியாகிவிட்டது. மாமா தங்கபாண்டியன் அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. தனசேகரனோ ஓரளவு எதிர்பார்த்திருந்தான். விருந்திலே நடிகை ஜெயநளினியையும், தண்டச் சோற்றுப் பேர்வழியாக டைரக்டர் என்ற பேரிலே சுற்றிக் கொண்டிருக்கும் கோமளீசுவரனையும் பார்த்ததுமே தான் நினைத்துக் கொண்டு வந்தது சரிதான் என்று தனசேகரனுக்குத் தோன்றி விட்டது. தன் தந்தைக்குச் சினிமா உலகத்தின் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே சேதுராசன் சேர்வையாகத்தான் இருக்க வேண்டும் என்றுகூட உள்ளூற அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதனால்தான் வந்தது முதற்கொண்டே அந்த விருந்தில் முழு மனநிறைவோடு அவனால் அமர்ந்திருக்க முடியவில்லை.

     ஆனால் மாமாவுக்கோ நேரம் ஆக ஆகத்தான் அது புரிந்தது. ஜெயநளினியையும் தன்னையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார வைத்து சேதுராசன் சேர்வை மெல்ல மெல்ல எதற்கு முயலுகிறார் என்று தெரிந்ததும் அவரும் ஆத்திரப்படத் தொடங்கி இருந்தார். விருந்து முடிந்ததும் சேதுராசன் சேர்வை தங்களைத் தனியே கூப்பிட்டபோது தனசேகரன் மாமாவை உறுத்துப் பார்த்தான். அநாவசியமாகத் தனசேகரன் தன்மேல் எதற்குக் கோபப்படுகிறான் என்று மாமாவுக்கே முதலில் புரியவில்லை. தனசேகரனுக்கோ மாமா ஜெயநளினியிடம் கலகலப்பாகச் சிரித்துப் பேசியதே பிடிக்கவில்லை. ‘சேதுராசன் சேர்வைக்குத் தான் இதே தொழில். மாமாவுக்கு என்ன கேடு வந்தது. அவர் ஏன் சிரித்துப் பேசி நேரத்தைக் கடத்துகிறார்? இவளிடம் அவருக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது?’ என்று உள்ளூற மனம் கொதித்துக் கொண்டிருந்தான் தனசேகரன்.

     “தனி என்ன தனி? இப்போ இங்கே வேறே யாரு இருக்காங்க? நாம நாலு பேர் மட்டும்தானே இருக்கோம்? என்ன சொல்லணுமோ அதை இங்கேதான் சொல்லுங்களேன். எங்களுக்கும் நேரமாச்சு. போகணும், நாங்க மெட்ராஸ்லே இருக்கறதுக்குள்ள இன்னும் பார்க்க வேண்டிய காரியம் நிறைய இருக்கு” என்று மாமாவே சேதுராசன் சேர்வையைத் துரிதப்படுத்தினார்.

     “இப்போ என்ன அவசரம்? மெட்ராஸுக்கு வந்துட்டு உடனே திரும்பிப் போகணும்னு பறக்கிற ஒரு பெரிய மனுஷனை நான் இப்பத்தான் முதன் முதலாப் பார்க்கிறேன். பல தொழிலதிபருங்க, வசதியுள்ளவங்க எல்லாம் சினிமா நட்சத்திரங்க இருக்கிற எடத்தைத் தேடிக்கிட்டுப் போயி ஒரு நாள், ரெண்டு நாள் அவங்களோட உல்லாசமாத் தங்கிட்டுப் போகணும்னு ஆசைப்படறாங்க. இங்கேயோ நட்சத்திரங்களே உங்களைத் தேடி வந்திருக்காங்க. அப்படி இருந்தும் நீங்க அவசரப்படலாமா?” என்று சொல்லியபடி குறும்புத்தனமாகக் கண் சிமிட்டிச் சிரித்தார் சேர்வை.

     மாமாவும் தனசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சேதுராசன் சேர்வைக்கு அவர்கள் பதிலே சொல்லவில்லை. ஆனால் சேதுராசன் சேர்வை விடாமல் தொற்றினார்.

     “பெரியவர் இருந்தப்போ இங்கே ஒரு விருந்துன்னு வந்தார்னா நிதானமா இருந்து எல்லாரிட்டவும் பேசிப் பழகிட்டுத்தான் போவார். ஏன், இதோ இந்த ஜெய நளினியே இப்படி ஒரு விருந்திலேதான் முதன் முதலா அவருக்குப் பழக்கமானாள். இப்போ நான் உங்ககிட்டப் பேசணும்னது கூட இவ விஷயமாத்தான். ஏதோ ரெண்டு தரப்பும் பழகியாச்சு. கோர்ட், கேஸுன்னு போயி நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி வக்கீலுக்கு அழறதுலே என்ன பிரயோசனம்? ஏதாவது கொடுக்கிறதைக் கொடுத்து முடியுங்க...!”

     “இந்த அட்வைஸை நீங்க எனக்கோ மாமாவுக்கோ சொல்ல வேண்டியதில்லை மிஸ்டர் சேர்வை! நாங்க முதல்லே கோர்ட்டுக்குப் போகலே. இப்போ இவங்க கோர்ட்டுக்குப் போயிருக்கிறதாலே எங்களுக்குத்தான் நல்லது” என்றான் தனசேகரன். சேர்வை விடவில்லை, தொடர்ந்து வினவினார்.

     “அதெப்படி? கேஸ்னு வந்துட்டா அப்புறம் ரெண்டு பேருக்கும்தானே அது சிரமம்?”

     “அது தான் இல்லேன்னேன். யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிற மாதிரி இப்போ இவங்க போட்டிருக்கிற கேஸினாலே ஏற்கெனவே எங்கப்பா இவங்களுக்கு எழுதி வச்சிருக்கிற சொத்துக்களைக்கூட இனிமே நாங்களே திரும்பி வாங்கிக்க வழி பிறக்கப்போகுது. கேஸ் முடிஞ்சதும் விவரமா எல்லாம் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க” என்று தனசேகரன் பேசத் தொடங்கியபோது ஜெயநளினியின் முகத்தில் சற்றே கலவரக்குறி தோன்றியது.

     அடுத்த பகுதியில் சற்றே விலகினாற்போல நின்று கொண்டிருந்த கோமளீஸ்வரன் அப்போதுதான் உள்ளே தலையைக் காட்டினான். தானும், மாமாவும், ஜெயநளினியும் சினிமா விநியோகஸ்தர் சேதுராசன் சேர்வையும் மட்டும்தான் அங்கே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த தனசேகரனுக்கு இப்போதுதான் டைரக்டர் கோமளீஸ்வரனும் அங்கே நுழைந்து நின்று கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. அவர்கள் வாய்மொழியாகவே விஷயங்களை வரவழைப்பதற்காகத் தான் தனசேகரன் அப்படிப் பேசியிருந்தான்.

     சேதுராசன் சேர்வை கொஞ்சம் அழுத்தமாக இருந்தார். அவருக்குத் தனசேகரனின் பேச்சைக் கேட்டு உடனே கோபமோ ஆத்திரமோ எதுவும் வந்துவிடவில்லை. கோமளீஸ்வரன் ஒரேயடியாகத் துள்ளினான்.

     “நளினிக்கு அந்த அடையாறு வீட்டை அவரே பிரியப்பட்டு வாங்கிக் குடுத்தாரு. இப்போ அரண்மனைச் சொத்திலே பாகம் குடுன்னு அவ கேட்டா அதுக்காக அடையாறு வீட்டை காட்டிப் பயமுறுத்தறது நியாயமில்லே!”

     “அடையாறு வீடு ஒண்ணும் ஆகாசத்திலே இருந்து குதிச்சிடலே. அதுவும் பீமநாதபுரம் அரண்மனைச் சொத்தை வித்து வாங்கினதுதான், ஞாபகம் இருக்கட்டும். ‘கேஸ்’னு வந்தாச்சுன்னா அப்புறம் எல்லாத்தையும் சந்தியிலே இழுத்துத்தான் தீரணும்.”

     தனசேகரன் இவ்வாறு கூறி முடித்ததும், “ஒழுங்கா முறையாக கேஸை வாபஸ் வாங்கிட்டா ஏற்கெனவே நீங்க ராஜா மூலமாச் சேர்த்து வச்சுக்கிட்டிருக்கிற சொத்தாவது மிஞ்சும். இல்லாட்டா அதுக்கும் ஆபத்துதான்” என்று மாமாவும் உரையாடலில் சேர்ந்து கொண்டார்.

     இப்போது சேதுராசன் சேர்வை தம்முடைய மெளனத்தைக் கலைத்துவிட்டுத் தாமே மெல்லப் பேசத் தொடங்கினார்.

     “நான் ஒருத்தன் நடுவிலே மத்தியஸ்தன் இருக்கிறேன்னு நினைக்காமே நீங்களாகவே பேசிக்கிட்டா எப்படி? எல்லா விஷயமும் தெரிஞ்சவன் நான். சொல்லப் போனால் பெரிய ராஜாவுக்கும், நளினிக்கும் சம்பந்தம் ஏற்படறத்துக்குக் காரணமா இருந்தவனே நான்தான். இதிலே என்னைக் கலந்துக்காமல் ராஜாவும் ஒண்ணும் பண்ணினதில்லே. நளினியும் ஒண்ணும் பண்ணினதில்லே. நான் உங்க ரெண்டு பேருக்குமே நியாயமா இப்போ ஒருவழி சொல்ல முடியும்னு நினைக்கிறேன். வக்கீலுங்களுக்கும் கோர்ட்டுக்கும், கேசுக்கும் கொட்டி அழறதுனாலே பணம் தான் வீணா விரயமாகும். உறவுக்குள்ளே நம்ம மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் வேண்டாம்! நாமே பார்த்துப் பேசி முடிவு பண்ணிக்கலாம்!”

     “உறவாவது ஒண்ணாவது? யாருக்கும் உறவு ஒண்ணும் கிடையாது. சும்மா அதைச் சொல்லிப் பயமுறுத்தாதீங்க” என்று தனசேகரன் குறுக்கிட்டுச் சொன்னான்.

     இதைக் கேட்டுச் சேதுராசன் சேர்வையின் முகத்தில் சுமுகபாவம் மாறியது. தனசேகரனைச் சற்றே உறுத்துப் பார்த்தார் அவர்.

     “உறவு இருக்கிறதும் இல்லாததும் உங்களுக்கு எப்படித் தெரியும் தம்பி? அதுக்கெல்லாம் கண்கண்ட சாட்சியா நான் ஒருத்தன் இருக்கேனே?”

     “உங்களுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் கூட உண்டுன்னு இப்பத்தானே தெரியுது?”

     “இந்தா தனசேகரன் போதும்! நிறுத்திக்கோ. இவரோட நமக்கு வீண் பேச்சு வேண்டியதில்லே. பார்க்க வேண்டியதைக் கோர்ட்டிலே பார்த்துக்கலாம்” என்று நடுவே புகுந்து கண்டிப்பான குரலில் சொன்னார் மாமா. நிலைமை கடுமையாகியது.

     கடைசியில் சேதுராசன் சேர்வையும் மற்றவர்களும் இறங்கி வழிக்கு வந்தார்கள். பலமணி நேரப் பேச்சுக்கும், வாக்குவாதத்துக்குப் பின்னால் ஜெயநளினி கேஸை உடனே கோர்ட்டிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்வதென்றும் ஏற்கெனவே மகாராஜா அவளுக்குக் கொடுத்து அவள் வசமிருக்கும் பங்களா, நகைகள், எதையும் அவளே தொடர்ந்து வைத்துக் கொள்வதென்றும் புதிதாக மேற்கொண்டு எதையும் கேட்கக் கூடாதென்றும் சமரச முடிவு ஆயிற்று.

     கோமளீஸ்வரனுக்கு ஏமாற்றந்தான். ஆனால் முரண்டு பிடித்தால் இருக்கிற சொத்தும் போய்விடுமோ என்று பயந்துதான் அவன் அதற்கு ஒப்புக்கொண்டாக வேண்டியிருந்தது.

     மாமாவும் தனசேகரனும் எதற்கும் மயங்கக் கூடியவர்களாக இல்லை. பச்சையாக வாய்விட்டுச் சொல்லாதது தான் குறையே ஒழிய அப்போது சேதுராசன் சேர்வை, மாமா தங்கபாண்டியனை ஜெயநளினியிடம் வகையாக மாட்டி வைத்து விட ஆன மட்டும் முயன்று பார்த்தார். அதில் அவருக்கு நாணமோ கூச்சமோ தயக்கமோ சிறிதும் இருக்கவில்லை.

     பெரிய ராஜாவின் காமக் கிழத்தியாக இருந்த ஒருவரை அவருடைய மைத்துனனாகிய மாமாவிடமே காமக்கிழத்தியாகச் சிபாரிசு செய்து பார்க்கவும் சேதுராசன் சேர்வை தயங்கவில்லை. மாமாவும் தனசேகரனும் விழிப்புள்ளவர்களாக இருந்ததனால்தான் தப்ப முடிந்தது. கேஸ் போட்டு மிரட்டியோ இழுத்தடித்தோ பணம் பறிக்க இவர்கள் ஒன்றும் இளித்தவாயர்கள் அல்ல என்பது ஜெயநளினிக்கும் புரிந்து விட்டது. கோமளீஸ்வரன் சேதுராசன் சேர்வை ஆகியோருக்கும் புரிந்துவிட்டது. அந்தக் கேஸ் வாபஸ் வாங்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறவரை மாமாவும் தனசேகரனும் சென்னையில் தங்கினார்கள். வக்கீலை மத்தியஸ்தம் வைத்து ஜெயநளினியிடம் ஓர் உடன்படிக்கை போல எழுதி வாங்கினார்கள்.

     “காலஞ்சென்ற மகாராஜா பீமநாத ராஜசேர பூபதியின் குடும்பச் சொத்துக்களில் இனி தனக்கு எந்த பாத்தியதையும் இல்லையென்றும் தன்னோடு அவர் நெருங்கிப் பழகிய வகையில் தனக்குக் கட்டிக் கொடுத்த வீடு வாசல் நகை நட்டுக்களைக் கொண்டே தான் திருப்தியடைவதாகவும்” அவள் கைப்பட எழுதிச் சாட்சிக் கையெழுத்துடன் வாங்கி வைத்துக் கொண்டான் தனசேகரன்.

     “ஒரு பிரச்னை முடிந்தது மாமா! இனிமே பீமநாதபுரத்திலே நம்ம மியூஸியத் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யணும். அதற்கு ஏற்பாடு செய்யாமே மெட்ராஸ்லேருந்து திரும்பக்கூடாது.”

     உடனே மாமா, “சரி, யாராவது மந்திரியைக் கூப்பிடலாம்” என்றார். தனசேகரன் அவர் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை.

     “பேருக்கு ஒரு நல்ல குணவானான மந்திரியைக் கூப்பிடலாம். ஆனால் ஒரு சிறந்த புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் இங்கே இருக்கிறார். அவரையும் கூப்பிடப் போறேன்” என்றான் தனசேகரன்.

     “நீ அந்த வேலையைக் கவனி. நான் கல்யாணப் பத்திரிகை வேலையைக் கவனிக்கிறேன். கேபிள் கொடுத்தாச்சு, மலேயாவிலேருந்து, எல்லாரும் இந்த வாரக் கடைசிக்குள்ளே வந்திடுவாங்க...”

     “எப்படி அதெல்லாம் உடனே முடியும்? கொஞ்சம் பொறுத்துச் செய்யலாமே மாமா? இப்போ என்ன அவசரம்? எங்கே ஓடிப்போறோம்? பரஸ்பரம் ஒருத்தருக் கொருத்தர் சத்தியம் பண்ணிக் கொடுத்த கல்யாணம் தானே? நீங்களும் நானுமா முடிவு பண்ணினோம்? எங்கம்மாவே முடிவு பண்ணிக்கிட்டுப் போன கல்யாணம் தானே மாமா இது?”

     “வாஸ்தவம்தான்! ஆனா அதை நிறைவேற்றவும் இதுதான் காலம். மறுபடி மலேயாவுக்கு விமானம் ஏறித் திரும்பறப்போ நீ என் மருமகனாகவும் நான் உன் தாய்வழி மாமனாகவும் திரும்பறதை விட மாப்பிள்ளையாகவும் மாமனாராகவுமே திரும்பறதுன்னு நான் முடிவு பண்ணியாச்சு” என்றார் மாமா.

     தனசேகரன் நாணினாற் போலச் சிறிது நேரம் தலைகுனிந்து சும்மா இருந்தான். மாமா புன்னகை பூத்தார்.

     “எனக்குப் பயமாகவேயிருக்குத் தம்பி! எங்கே பார்த்தாலும் சினிமா நட்சத்திரங்கள் வாடகை மனைவிமார்களாகவும் தற்காலிக மனைவிமார்களாகவும் ரொம்ப மலிவாகக் கிடைக்கிறாங்க. இந்தச் சூழ்நிலையிலே வயசு வந்த எந்த ஆம்பிளையையும் தனியா விடமுடியலே.”

     “எங்கப்பாவெப் பத்தித்தான் நீங்க இப்படி எல்லாம் பயப்படனும் மாமா! என்னைப்பத்திப் பயப்பட வேண்டாம்! நான் அத்தனை சுலபமாக ஏமாந்துட மாட்டேன்!”

     “சேதுராசன் சேர்வை எனக்கே தற்காலிக மனைவி ஏற்பாடு பண்றேன்னு வலை விரிக்கிறானே? அரச பரம்பரையான உன்னை விட்டு விடுவானா தம்பி?”

     “நான் ஏமாந்தால்தானே அவரு வலை விரிக்க முடியும்? அரசன், அரச பரம்பரை, இளவரசர் அதெல்லாம் இருந்தால் தான் பீடை மாதிரி இந்த விஷயங்களெல்லாம் நம்மை வந்து பீடிக்குமென்று பயந்து தானே அதிலே இருந்து தனியா விலகியிருக்கேன்! என்னை எந்தக் கெடுதலும் அணுக முடியாது மாமா...”

     “சரி தம்பீ! அதெல்லாம் புரியுது. உன்னைப் பாராட்டறேன். உங்கப்பாவுக்கு என் சகோதரியைக் கொடுத்தேன். அவரு ஒழுங்கா நடத்துக்கலே! அவளும் பாதியிலே செத்துப் போயிட்டா! அடுத்த தலைமுறையிலே நீ நல்லா இருக்கே. உன்னை யாருமே கெடுத்திட முடியாது. உனக்கு என் மகளைக் கொடுக்கிறேன். அதிலே தாமதம் எதுக்கு? உடனே அடுத்த முகூர்த்தத்திலே கலியாணம் நடக்கணும்கிறது என் ஆசை. நீ என்ன சொல்றே?”

     “சரி! உங்க இஷ்டம் போலச் செய்யுங்க மாமா ஆனா...”

     “ஆனால் என்ன? அதையும் முழுக்கச் சொல்லு.”

     “ஒண்ணுமில்லே! என் கல்யாணம் எளிமையா நடக்ககணும். சமஸ்தானத்து ஜபர்தஸ்தெல்லாம் அதிலே கூடாது. உங்க பணச் செழிப்பையும் அதிலே காட்டக்கூடாது. என் குடும்ப அந்தஸ்துங்கிற பேரிலேயும் டாம்பீகச் செலவு கூடாது. உங்க குடும்ப அந்தஸ்து என்கிற பேரிலேயும் டாம்பீகம் கூடாது.”

     “நீ இப்படி நிபந்தனை போடுவேன்னு எனக்கு முன் கூட்டியே தெரியும். அதனாலேதான் நானே பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலிலே எளிமையான கல்யாணம்னு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.”

     “ரொம்ப சரி. கல்யாணச் செலவை மிச்சப்படுத்தி நான் இரண்டு லட்சம், நீங்க ரெண்டு லட்சம் பணம் போட்டுப் பீமநாதபுரத்திலே ஒரு பெண்கள் கல்லூரி ஏற்படுத்தணும். நீங்க சம்மதிச்சா இது சுலபமா நடக்கும் மாமா! பீமநாதபுரம் வட்டாரத்திலே பெண்கள் கல்லூரியே கிடையாது. வயசு வந்த பெண்கள் அனாவசியமா நூறு மைல், இருநூறு மைல் தள்ளியிருக்கிற, நகரங்களிலே தனியாய் போய்ப் படிக்க வேண்டியிருக்கு. எங்கம்மா பேரிலே அந்த காலேஜைத் தொடங்குவோம்!”

     “ஓ எஸ்...! கண்டிப்பாகச் செய்யலாம் தம்பீ! இதெல்லாம் எங்கிட்ட நிபந்தனை போட்டுத்தான் உனக்கு நான் செய்யனுமா? என் பெண்ணைக் கட்டிக்கிட்டா இந்தச் சொத்தெல்லாம் உன் நிர்வாகத்தின் கீழேதானே வரப் போகுது?”

     காலேஜ் வைப்பதற்கு மாமா சம்மதித்ததும் தனசேகரன் திருமணத்திற்கு முழு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டான். மாமா திருமணப் பத்திரிகை அச்சடிக்க ஏற்பாடு செய்யப் போனார். தனசேகரன் மியூஸியம் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப் போனான். மியூஸியம் திறப்பு விழா அழைப்பிதழும் தனசேகரனுடைய திருமண அழைப்பிதழும் ஒரே சமயத்தில் ஒரே அச்சகத்தில் அச்சாகி முடிந்ததும் அவற்றை எடுத்துக் கொண்டு இருவரும் ஊருக்குப் புறப்பட்டார்கள்.

     பீமநாதபுரம் ஊரே மாறிவிட்டாற்போல் அந்த மியூசியம் ஊர் நடுவே ஒளிவு மறைவின்றிக் காட்சியளித்தது.

     கற்சுவர்கள் இல்லாமல் பூங்காக்களோடு கூடிய கம்பீரமான அரண்மனை இப்போது புதுப்பொலிவோடு தோன்றியது.

     முகத்திரை நீக்கிய புதுமணப்பெண் போல அரண்மனை அழகுற இலங்கிற்று இப்போது. மியூசியத்திற்கு 2 ரூபாய் நுழைவுக் கட்டணம் வைக்கவேண்டும் என்று மாமா சொன்னார்.

     “ஏழை எளியவர்கள் அவ்வளவு தர முடியாது. இருபத்தைந்து காசுகள் கட்டணமாக நியமித்தால் போதும்” என்று கூறினான் தனசேகரன்.

     மாமா ஒப்புக் கொண்டார். தனசேகரனின் பரந்த மனப்பான்மை அவரை ஆச்சரியப்பட வைத்தது. பீமநாதபுரம் மியூசியத் திறப்பன்று எல்லாப் பெரிய ஆங்கிலத் தினசரிகளிலும் தமிழ்த் தினசரிகளிலும் சிறப்பு அனுபந்தங்கள் வெளியிட ஏற்பாடு செய்தான் தனசேகரன். ‘ஓர் அரண்மனை மியூசியமாக மாறுகிறது’ என்பதுதான் அனு பந்தத்தின் தலைப்பாக இருந்தது. மியூசியத்தின் சிறப்புக்கள் அநுபந்தத்திலே விவரிக்கப்பட்டிருந்தன. படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247