13

     தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டில் இளைய ராணிக்கு வாக்குக் கொடுத்து விட்டாலும் தனிப்பட்ட முறையில் அவள் ஒருத்திக்கு மட்டும் சலுகை காட்டியதாகத் தன்மேல் கெட்ட பேர் வந்துவிடுமோ என்ற தயக்கம் தனசேகரனுக்கு மனத்தில் இருந்தது. அந்த இளையராணியின் கோரிக்கை நியாயமானதாக அவனுக்குப் புரிந்த போதிலும் இந்தத் தயக்கத்தையும் முன்னெச்சரிக்கையையும் அவனால் விட்டுவிட முடியவில்லை. பல காரணங்களை முன்னிட்டு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது.

     இதற்கு மறுநாள் காலைத் தபாலில் தந்தை உயிரோடிருந்தபோது அங்கம் வகித்த சென்னை ஜாலிஜில் கிளப், கால்ஃப் கிளப், உறுப்பினர் கட்டணம் ஆண்டுக் கணக்கில் பாக்கி இருந்ததைக் கேட்டு அவர்கள் எழுதி இருந்த கடிதங்கள் வந்திருந்தன. பழைய பாக்கிகளைக் கட்டி விட்டு உறுப்பினர் உரிமையைத் தனசேகரன் பெயருக்கு மாற்றிக்கொள்ளும்படியும் அவர்கள் கோரியிருந்தார்கள். தந்தை பாக்கி வைத்திருந்த சில பட்டுப் புடவைக் கடைகள் நகைக் கடைகளின் உரிமையாளர்களிடமிருந்தும் அவனுக்கு வக்கீல் தோட்டீஸ்கள் வந்திருந்தன. தந்தையின் பொறுப்பின்மையால் தனசேகரன் அந்த அரண்மனையின் கோட்டைச் சுவர்களுக்கிடையே சிறை வைக்கப்பட்டதைப் போன்ற உணர்வை அடைந்திருந்தான், அவனால் நிம்மதியாயிருக்க முடியவில்லை. தனக்கு மட்டுமின்றிப் பெரிய கருப்பன் சேர்வை போன்றவர்களுக்கும் இனி அந்த அரண்மனையில் பணி புரிவதில் நிம்மதியோ நிறைவோ இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது. இரண்டு மூன்று தடவை தனியே சந்தித்துத் தன்னை அரண்மனைக் காரியஸ்தர் வேலையிலிருந்து விலகிக் கொள்ள அனுமதிக்குமாறு அவனை அவர் கேட்டிருந்தார்.

     வியாபாரம், வரவு, செலவு, லாப நஷ்டங்களில் நல்ல தேர்ச்சியுள்ள மாமா தங்கபாண்டியனோ அரண்மனைச் செலவுகளைச் சிக்கனமாக்க வேண்டும் என்பதில் அளவு கடந்த வேகம் காட்டினார். தனசேகரன் சற்றே நிதானமாக இருந்தான். மாமாவின் வேகத்துக்கும் தனசேகரனின் நிதானத்துக்கும் நடுவே சிக்கிக் கொண்டு காரியஸ்தர்தான் அங்கே அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது.

     இந்த வேகத்துக்கும், நிதானத்துக்கும் நடுவே சிக்கிக் கொண்டு பல விஷயங்களில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் அவர் சிரமப்பட நேர்ந்திருக்கிறது என்பதை நேரடியாக இல்லாவிட்டாலும் ஜாடைமாடையாகத் தனசேகரன் புரிந்து கொண்டிருந்தான். உண்மையிலேயே இன்னும் சிறிது காலத்தில் இந்தச் சமஸ்தானத்துக்குக் காரியஸ்தர் என்று ஒருவர் தேவையில்லாமலே போய்விடலாம். ஆனால், தந்தை காலமான பின் அரைகுறையாக இருக்கும் பல பிரச்னைகள் முடிவதற்கு முன் பெரிய கருப்பன் சேர்வை, பொறுப்பிலிருந்து விலகுவதை அவன் விரும்பவில்லை. தாங்கள் ஓர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அரண்மனையில் வாழ்ந்தவர்கள், அரச போகத்தை அநுபவித்தவர்கள், என்பதை எல்லாம் எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அவ்வளவு விரைவில் மறக்கவேண்டும் என்று எண்ணினான் அவன். புதிய சமூக அமைப்பில் ஒரு கால வழுவாக நீடிக்க அவன் விரும்பவில்லை. சாதாரண மக்களையும் தங்களையும் வேறுபடுத்திக் காட்டும் இடைவெளியாக அரண்மனையில் கற்சுவர்கள் உயர்ந்து நிற்பதை அவன் அடிக்கடி சிந்தித்தான். அந்தச் சுவர்களும் மதில்களும் ஆதிக்க உணர்வின் அடையாளங்களாக அவனுக்குத் தோன்றின. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களிடையே இருந்து தங்களைத் தனியே பிரித்தும், உயர்த்தியும் காட்டிக் கொள்ளவே அந்த மதிற்சுவர்கள் எழுப்பப்பட்டிருப்பதாக அவனுக்குப்பட்டது. சொப்பனம் முடிந்த பிறகும் கடன்பட்டாவது அதைத் தொடர்ந்து காண விரும்பினார் அவன் தந்தை, அவனோ அரச வாழ்வு, அரண்மனைச் சுகங்கள் என்ற சொப்பனங்களையே வெறுத்தான். அதிலிருந்து விடுபட விரைந்து விரும்பினான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.