7 அந்தச் சிறுகதையை விட்ட இடத்திலிருந்து தனசேகரன் மேலே படித்தான். வந்து எதிரே உட்கார்ந்திருந்த சாமிநாதனிடம் இளையராஜா பூபதி மேலும் மேலும் கூறத் தொடங்கினான்: “எங்க ஃபாதர் உண்மையிலேயே ஒரு பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கிறாரு? இப்பத்தான் திடீர்ப் பணக்காரன் ஆன மாதிரி எதிலேயும் ஜம்பம் கொண்டாடறாரு . இங்கேருந்து மெட்ராசுக்கு முதல் வகுப்பு ரெயில் டிக்கட் வாங்கினாலும் ரிஸர்வேஷன் சார்ட்லேயும் முதல் வகுப்புலே பெட்டியின் வெளிப்புறம் ஒட்டற ஸ்லிப்பிலேயும் இடச் சுருக்கத்துக்காக வி.ஆர்.பி.பூபதின்னு போட்டாக் கூட எங்கப்பா கோபிக்கிறாரு. ‘ராஜா விஜய ராஜேந்திர சீமநாத பூபதி’ன்னு கெஜ நீளத்துக்கு முழுப் பெயரையும் போடணும்னு வற்புறுத்தறாரு. அப்படிப் போடாட்டி அந்த ரெயிலில் ஏறிப் போக மாட்டேங்கறாரு. ரயில்வே புக்கிங் கிளார்க் மேலே புகார் செய்து கடிதம் அனுப்பச் சொல்றாரு. ஆனால் அதே சமயத்திலே அவருக்காக வாங்கற அந்த முதல் வகுப்பு இரயில்வே டிக்கட்டை நான் எப்படி வாங்கறேன். எதை விலைக்கு விற்று வாங்கறேன்னு தெரிஞ்சாலாவது அவருக்குத் தன்னுடைய உண்மைப் பொருளாதார நிலைமை ஓரளவு புரியும். நல்ல வேளையா இந்த அரண் மனையிலே பழைய விலைக்கு எடை பேசிப் போடவும், விற்கவும் இன்னும் நிறையத் தட்டுமுட்டுச் சாமான்களும், கண்டான் முண்டான் பண்டங்களும், பாத்திரங்களும் ஏராளமாக மீதமிருக்கின்றன. அந்தக் காலத்திலே நவராத்திரி சதஸ், மன்னர் பிறந்த நாள் அன்னதானம், வனபோஜனம் என்று பல விசேஷ வைபவங்களில் ஆயிரம் பேர் இரண்டாயிரம் பேருக்கு ஒரே சமயத்தில் சோறு வடிக்க சாம்பார் வைக்க என்கிற உபயோகங்களுக்காக ஏராளமான அண்டாக்கள், குண்டாக்கள், தூக்கு வாளிகள், பாத்திரங்கள் எல்லாம் இங்கே ஒரு கட்டிடம் நிறைய அடைஞ்சு கிடைக்குது. இப்போதெல்லாம் இந்த விட்டின் மாதாந்திர வரவு - செலவுகளே அப்படிப் பாத்திரம் பண்டங் கள், பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுத்தான் நடக்கிறது. கீழவெளி வீதியிலே உள்ள சோமநாத நாடார் பாத்திரக் கடையிலே பின் பக்கமாப் போய் நீங்க நுழைஞ்சா அங்கே எங்க பாத்திரங்களை அடிச்சு உடைச்சு நொறுக்கிப் புதுப்புதுப் பாத்திரமா மாத்தறதுக்காக உருக்கிக் கொண்டிருப்பாங்க. அந்தப் பழைய காலத்துப் பெரிய பாத்திரங்களிலே ரெண்டு மூணு ஆள் கூட உள்ளாரப் புகுந்து உட்காரலாம். எல்லாம் அந்தக் காலத்துப் வார்ப்படம். இப்ப விற்கிற காப்பர் விலை, பித்தளை விலையிலே அதை எல்லாம் நல்லா விற்க முடியுது. பழைய பாத்திரங்களிலே கண் பார்வைக்கு நல்லாப் படறாப்பிலே, ‘பாலஸ் சீமநாதபுரம்’னு பேர் வெட்டியிருக்காங்க. கடைக்காரரு அந்தப் பாத்திரங்களை எங்ககிட்டேருந்து பழைய விலைக்கு வாங்கி அடிச்சு உடைச்சு நொறுக்கி உருக்கறப்போ எப்படி அந்தப் பேர்கள் அழிஞ்சு போயிடுமோ அப்பிடியே எங்களைக் குறித்த காலத்துக்கும், மணிபர்ஸுக்கும் ஒத்து வராத டம்பங்களும், ஆடம்பரங்களும், இன்றும் இனி மேலும் என்றும் அழிந்துவிட வேண்டும் என்று தான் நானே ஆசைப்படுகிறேன்.
இந்த அரண்மனையும் இதன் ஜம்பங்களும், டம்பங்களும் இன்று ஒரு பெரிய ‘அனக்ரானிஸம்’ - அதாவது கால வழுவைப் போலாகிவிட்டன. இந்த நான்கு மதிற் சுவர்களுக்கும் உள்ளே இவ்வளவு பெரிய மாளிகையிலே இன்று மொத்தம் எட்டுநூறு பல்புகளும் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட டியூப் லைட்டுகளும், இருநூற்று எழுபது மின்சார விசிறிகளும், நாலு கார்களும், இரண்டு ஜீப்களும், நாலு வேன்களும், ஏழு ஃப்ரிஜிடேர்களும், ஆறு ஏர்க்கண்டிஷன் பிளாண்ட்களும் இருக்கு. இதற்கெல்லாமாக மாசாமாசம் எலெக்ட்ரிக் பில்லே ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய் ஆகுது.
இங்கே இந்த மதில் சுவர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற சமஸ்தானக் கோவில்களின் சிப்பந்திகள், அலுவலக ஊழியர்கள்ம், டிரைவர்கள், காவலாளிகள், வேலைக்காரர்கள் எல்லோருமாகச் சேர்ந்து மொத்தம் பல பேர் இங்கே மாசச் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறாங்க, அவங்களோட சம்பளம், அலவன்ஸ், விசேஷ கால போனஸ் வகையறாக்கள் மட்டுமே மாசம் கால் லட்ச ரூபாய்க்குக் கிட்டத்தட்ட வருது.” “இப்படி எல்லாம் கஷ்டங்கள் இருக்குங்கறதுனாலே தான் வருமானத்துக்கு வழி செய்யறாப்ல நான் அருமையான ஐடியா ஒண்ணோட வந்திருக்கேன்” என்று சாமிநாதன் குறுக்கிட்டுச் சொன்னார். “அடாடா! இந்த அவசரந்தானே வேண்டாங்கறேன். வருமானத்துக்கு வழிதேடி நான் இதை எல்லாம் உங்க கிட்டச் சொல்லலே மிஸ்டர் சாமிநாதன்! முழுக்க கேட்டிங்கன்னா நான் இதெல்லாம் எதுக்காகச் சொல்ல வந்தேன்னு புரியும்.” “சொல்லுங்கோ... கேட்கிறேன்.” “சமஸ்தான ஜம்பம், ப்ரீவி பர்ஸ் வருமானம் எல்லாம் அறவே நின்னு போனப்புறமும் பழைய வேலையாட்களிலே யாரையும் வேலையிலிருந்து நிறுத்தறத்துக்கு ஃபாதர் சம்மதிக்க மாட்டேங்கறாரு. இந்த வீட்டோட இன்னிக்குள்ள வரவு செலவு கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தான் பச்சையாய்த் தெரியும். எதை எதையோ விற்று, எப்பிடி எப்பிடியோ நிரந்து ஒவ்வொரு மாசத்தையும் ஒட்டிக்கிட்டிருக்கேன் நான். ஆனால் சிரமங்கள் கொஞ்சமும் புரியாமே மத்தவங்க எல்லாமே இன்னும் பழைய ராஜா ராணி மனப்பான்மையிலேயே இருக்காங்க, ஒருத்தரும் ஒரு செளகரியத்தையும் குறைச்சுக்கத் தயாராயில்லே. எதுக்குச் சொல்ல வந்தேன்னா இங்கே உள்ள இந்தக் கஷ்ட நெலமைகள் எப்பிடியோ மெட்ராஸுக்கு உங்க காது வரை கூட எட்டியிருக்குன்னு தெரியிது, அது தெரிஞ்சுதான் வசதியுள்ள வெளிநாடுகளுக்குச் சிலைகள், ஓவியங்கள், சிற்பங்கள், புராதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிற ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ கம்பெனியை வைத்து நடத்துகிற நீங்க என்னையும் ஃபாதரையும் தேடி அடிக்கடி சுற்றிச் சுற்றி வர்ரிங்க, இல்லையா?” “நோ... நோ... உங்களுக்கு இஷ்டமில்லேன்னா நான் ஒண்ணும் வற்புறுத்தலே... நல்ல விலை வருது. அதான் தேடி வந்தேன். இதுலே எனக்குன்னு தனியா என்ன வந்தது?” “அவசரப்படாதீங்க மிஸ்டர் சாமிநாதன்! நான் சொல்றதை முழுக்கக் கேளுங்க...!” “எனக்கென்ன அவசரம்? சொல்லுங்கோ...” “போனவாரம் ஒரு ஈவினிங்கிலே இந்த ஊர்ப் போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர்னு என்னைத் தேடி இங்கே அரண்மனைக்கு வந்தாரு. ஒரு வெள்ளிச் சந்தனக் கும்பாவை எடுத்துக்காட்டி அதிலே எங்க குடும்ப பரம்பரையான அரண்மனை முத்திரை இருந்ததையும் என் கவனத்துக்குக் கொண்டு வந்து, ‘இதை உங்க அரண்மனை வேலைக்காரி ஒருத்தி வெள்ளிக் கடையிலே பழைய விலைக்கு நிறுத்துப் போட வந்திருக்கா. அரண்மனை முத்திரை இருக்கிறதைப் பார்த்திட்டு கடைக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் அனுப்பிச்சிட்டாரு. நாங்க உடனே அந்த வெள்ளிக் கடைக்குப் போயி வேலைக்காரியை லாக்கப்பிலே வச்சிட்டு இங்கே உங்களைத் தேடி வந்திருக்கோம். தயவு செய்து இதுபற்றி மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைத் தெரிவியுங்கள்’ என்றார். நான் உடனே, ‘அந்த வேலைக்காரியை நான் பார்த்தால்தான் அவள் இங்கே வேலை பார்க்கிறவளா இல்லையா என்பது எனக்குத் தெரியும். முதல்லே நான் அவளைப் பார்க்கணும். இப்பவே உங்களோட போலீஸ் ஸ்டேஷனுக்கு வரேன்’னேன். ‘நீங்க வர வேண்டாம். நானே அவளை இங்கே கூட்டிக்கிட்டு வரச் சொல்றேன்’னு இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணினாரு. கால்மணி நேரத்துக் கெல்லாம் ஒரு கான்ஸ்டேபிள் அந்த வேலைக்காரியை இங்கே அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அவளை நான் விசாரித்தேன்: ‘ஏம்மா நீயா இந்த வெள்ளிப் பாத்திரத்தைக் கடைக்கு விற்கக் கொண்டு போனியா? அல்லது இங்கே அரண்மனையிலே இருந்தே உன் மூலம் யாராவது விற்கக் கொடுத்தனுப்பினாங்களா? உள்ளதைச் சொல்லிவிடு.’ அவள் பதில் சொல்லத் தயங்கினாள். கண்களைக் கசக்கிக் கொண்டு அழுதாள். நான் பொறுமை இழக்காமல் அவளை மேலும் தூண்டினேன். ‘சொல்லும்மா! பயப்படாதே. என்னாலே உனக்கு ஒரு கெடுதலும் வராது.’ மீண்டும் அவள் தயங்கினாள். நான் அவளிடமிருந்து எப்படியாவது நிஜத்தை வரவழைத்து விடலாமென்று முயன்று கொண்டிருந்தேன். கடைசியில் சிறிது நேரக் கண்ணிர் அழுகை பாசாங்குகளுக்கிடையே அவள் உண்மையைக் கூறினாள், ‘நான் ஒரு பாவமும் செய்யலிங்க. என் மேலே எந்தத் தப்பும் கிடையாது. சோப்பு. ஷாம்பு, ப்பேஸ் பவுடர், ஹேர் ஆயில் எல்லாம் வாங்கப் பணம் இல்லேன்னு சின்ன ராணி பத்மாம்பாள்தான் இதைக் கொண்டுபோய் வெள்ளிக் கடையிலே நிறுத்துப் போட்டு வரச் சொன்னாங்க. நீங்க இதை ராணிக்கிட்டச் சொல்லி என்னைக் காட்டிக் கொடுத்திங்கன்னாக் கொலை விழும் அல்லது என் வேலை போயிடும்’னு கதறினாள் அந்த வேலைக்காரி. நான் அவளைச் சமாதானப்படுத்தி அவள் வேலைக்கு ஒர் ஆபத்தும் வராதென்று ஆறுதல் கூறிவிட்டு, ‘இதில் திருட்டு ஒன்றுமில்லை. குடும்ப விஷயம். போலீஸ் தலையீடு அவசிய மில்லேன்னு நினைக்கிறேன்’ என்று இன்ஸ்பெக்டரை நோக்கிக் கூறினேன். நான் கூறியதை இன்ஸ்பெக்டர் ஏற்றுக் கொண்டார். இன்ஸ்பெக்டர் என்னிடம் வருத்தம் தெரிவித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார். வேலைக்காரியைக் காப்பாற்றுவதற்காக நானே வெள்ளிப் பாத்திரத்தை வாங்கி வைத்துக்கொண்டு சின்ன ராணிக்காகச் சோப்பு, சீப்பு, ஹேர் ஆயில், ஷாம்பு எல்லாம் வாங்க அவளிடம் என் கையிலிருந்து ரூபாய் கொடுத்தனுப்பினேன். “இதையெல்லாம் எதுக்குச் சொல்ல வந்தேன்னா ராயல் ஃபேமிலி அது இதுன்னு எங்க மேலே உங்களைப் போலொத்தவங்க வச்சிக்கிட்டிருக்கிற வீண் பிரமையை எல்லாம் இனிமேலாவது நீங்க விட்டுடணும். இனிமே எல்லோரையும் போல நாங்களும் சாதாரண மனுஷங்க தான், எங்களுக்கும் ஏழைமையும், தேவைகளும், வறுமைகளும் உண்டு. அர்த்தமுள்ள வறுமைகளும் உண்டு. ப்பேஸ் பவுடருக்காக வெள்ளிப் பாத்திரத்தை விற்கிற மாதிரி அர்த்தமில்லாத வறுமைகளும் உண்டு. அதை எல்லாம் இனி மேலாவது உங்களை மாதிரி ஆட்கள் தெரிஞ்சுக்கணும்.” “ஐ ட்டு ரியலைஸ் இட் யுவர் எக்ஸ்லென்ஸி.” “பார்த்தீங்களா? பார்த்தீங்களா? இந்த ‘யுவர் எக்ஸ்லென்ஸி’தானே வேணாங்கறேன்.” “சரி இனிமேல் அதெல்லாம் சொல்லலே, நீங்களே பிரியப்படலேங்கறபோது வீணா அதெல்லாம் எதுக்கு? அரண்மனையிலே இது மாதிரிப் பணக்கஷ்டங்கள் சிரமங்கள் எல்லாம் இருக்குன்னு ஜாடைமாடையா எனக்கே தெரிஞ்சதுனாலேதான் அந்த பிரஞ்சுக்காரனோட ஆஃபரை ஒத்துக்கலாமான்னு உங்ககிட்டக் கேட்க வந்திருக்கிறேன்.” “வந்துட்டீங்க. வந்தவரை சரிதான். ஆனால் இதுக்கெல்லாம் கிளியர் கட்டா உங்களுக்கு ஒரு பதில் சொல்லப் போகிறேன் மிஸ்டர் சாமிநாதன்! இந்த அரண்மனைங்கிற பெரிய சத்திரத்தைக் கட்டிக் காக்க நாங்கள் எதை எதையோ தெரிஞ்சும் தெரியாமலும் வெளியிலே விற்கிறோம். சோப்புச் சீப்புக்காகப் பழைய வெள்ளிப் பாத்திரத்தை ரகசியமா விற்கிறவங்க, ஒரு பாக்கெட் ஸ்பென்ஸர் சுருட்டுக்காக அரண்மனைக் கருவூலத்திலிருந்து பழைய தங்க நகையை எடுத்து விற்கிறவங்க, முதல் வகுப்பு ரெயில் டிக்கெட்டுக்காக அரண்மனைப் பழையப் பாத்திரங்களை எடைக்கு எடை நிறுத்துப் போடறவங்க எல்லாரும் இன்னிக்கி இந்த உயரமான மதிற்சுவர்களுக்குள்ளே இருக்கோம். எங்க மான அவமானங்கள் கஷ்ட நஷ்டங்களை வெளியே உள்ளவர்களுக்குத் தெரிய விடாமல் இந்த மதிற் சுவர்கள் மறைத்து விடுகிறாற்போல அவ்வளவு உயரமாக - அந்தக் காலத்திலேயே முன்னோர்கள் இதைக் கட்டி வைத் திருக்கிறார்கள். இதெல்லாம் இந்த அரண்மனைக்குள்ளே நடக்கலாம். உயரமான கற்சுவர்களின் மறைப்பையும் மீறி வெளியே உள்ள உங்களைப் போன்றவர்களுக்கும் இங்கே நடப்பவை தெரிந்து விடலாம். ஆனால் நீங்கள் எவ்வளவு பெரிய விலை பேசினாலும் என்ன செய்தாலும் சிலவற்றை நான் இங்கிருந்து விற்கவிட மாட்டேன். இங்கே அரண்மனைக்குள்ளே இருக்கும் ரேர் புக்ஸ் அடங்கியப் பெரிய லைப்ரரி; மோகினி பெயிண்டிங்ஸ் உள்பட அருமையான ஓவியங்கள் அடங்கிய சித்திரசாலை, பிரமாதமான கலைப் பொருட்கள், பஞ்சலோகச் சிலைகள் அடங்கிய மியூஸியம் இவை மூன்றை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த விலைக்கும் விற்கமாட்டேன். என் உடலில் உயிர் இருக்கிற வரை மற்றவர்களை விற்க விடவும் மாட்டேன். இவை இந்தக் குடும்பத்தில் என்றோ ஒரு தலைமுறையில் ‘இண்டெலக்சுவல்ஸ்’ இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் மிகச் சிறந்த கலாரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கும் இன்றைய அடையாளங்கள் அல்லது சாட்சியங்கள். என் கண் முன்னே என்னை மீறி இவற்றிலிருந்து ஒரு துரும்பு விற்கப்பட்டாலும் நான் தூக்குப் போட்டுக் கொண்டு செத்து விடுவேன் மிஸ்டர் சாமிநாதன். இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ப தற்காகத்தான் இவ்வளவு விரிவாகச் சொல்லுகிறேன். என் தாத்தா பாஸ்கர பூபதி பெரிய கலாரசிகர். அவர் சீமநாதபுரம் ராஜாவாக இருந்தவர் என்பதைவிட மாபெரும் கலா ரசிகராக வாழ்ந்தவர் என்பதற்காகவே நான் பெருமைப்படுகிறேன். அந்தப் பெருமையை நான் எந்த அந்நிய நாட்டானுக்கும் விலைபேசி விற்க மாட்டேன். பேரம் பேச மாட்டேன். இங்கே உள்ள ஓவியங்களிலேயே அந்த மோகினி பெயிண்டிங்க்ஸ்தான் மிக அருமையான கலெக்ஷன். அதை என்னிடம் பேரம் பேச இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள் இல்லையா...” “ஐயாம் வெரி ஸாரி! உங்களுக்கு விருப்பமில்லை என்றால் வேண்டாம். பெரிய ராஜா பெயிண்டிங்க்ஸை விலைக்குக் கொடுத்து விடலாம் என்பது போல்தான் என்னிடம் சொன்னார். அதனால்தான் இங்கே தேடி வந்தேன்.” “தேடி வந்ததற்கு ரொம்ப நன்றி! ஆனால் இந்த விஷயமாக இனிமேல் இங்கே தேடி வராதீர்கள்.” சாமிநாதன் புறப்படுவதற்காக எழத் தொடங்கினார். “ஒரு நிமிஷம் இருங்கள். குடிப்பதற்கு என்ன கொண்டு வரச் சொல்லட்டும்? காபியா? டீயா? ‘எகானமி டிரைவ்’ காரணமாக இப்போதெல்லாம் இங்கே தேடி வருகிறவர்களுக்கு நான் குடிக்க எதுவுமே தருவதில்லை. ஆனால் இன்று உங்களை நான் அதிக நேரம் காத்திருக்கும்படி செய்து விட்டேன்.” “பரவாயில்லை. எனக்கு ஒன்றுமே வேண்டாம். நான் போய் வருகிறேன்.” “சரி! உங்கள் இஷ்டம்.” அவரை மேலும் அதிகமாக வற்புறுத்தாமல் எழுந்து கைகூப்பி அவருக்கு விடைகொடுத்தான் பூபதி. வந்தவர் திரும்பிப் போனதும் உடனே வேலையாள் மருதமுத்துவைக் கூப்பிட்டு, “இந்தா மருதமுத்து காரியஸ்தர் நாகராஜ சேர்வையிடம் போய் அரண்மனை லைப்ரரி, கலைக்கூடம், சிற்ப சாலை, மூணுக்கும் உள்ள சாவிக் கொத்துக்களை உடனே வாங்கிக்கிட்டு வா. இனிமே அந்தச் சாவிங்க எங்கிட்டத் தான் இருக்கணும். இல்லாட்டி எனக்குத் தெரியாமலே சுருட்டுக்கும் விஸ்கிக்கும் ரேஸுக்குமாக ஒண்ணொண்ணா வித்துச் சாப்பிட்டுடுவாங்க” என்று அவனிடம் இரைந்து உத்தரவு போட்டான் பூபதி. பத்து நிமிஷங்களுக்குப் பின் வேலைக்காரன் மருதமுத்து மூன்று சாவிக் கொத்துக்களைப் பூபதியிடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டுப் போனான். அந்த அரண்மனையில் பூபதி மேல் எல்லாருக்கும் தனி மரியாதை உண்டு. பெரிய ராஜாவுக்கு இருந்த மரியாதையை விட அவனுக்குத்தான் அங்கே அந்த மரியாதையும் கெளரவமும் காட்டினார்கள். அதற்குக் காரணம் அவனுடைய எளிமையும் பொறுப்புணர்ச்சியும் தான். வாசனைச் சோப்பு விலையுயர்ந்த ‘செண்ட்’, சில்க் ஜிப்பா, புலிநகம் பதித்த தங்கச் சங்கிலி என்றெல்லாம் மினுக்கும் அரச குடும்பத்து இளைஞர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிய நடை உடை பாவனைகளும் பழக்க வழக்கங்களும் கொண்டிருந்ததால் பூபதி புகழ் பெற்றிருந்தான். ஆடம்பரங்களில் வெறுப்பு, எளிமையில் பற்று, காந்திய நம்பிக்கை என்று முக்கால் துறவியாக வாழ்ந்தான் அவன். அவன் தந்தையாகிய பெரிய ராஜாவிடமிருந்த போலித்தனம் எதுவும் அவனிடம் இல்லாமல் இருந்தது. ராஜாவின் எட்டாவது வைப்பாட்டியின் மூன்றாவது பெண்கூட அந்த மாளிகையின் எல்லையிலிருந்து வெளியே போகக் கார் இல்லாமல் நடந்து போகத் தயங்கும் போது பூபதி நடந்தே வெளியில் உலாவச் செல்வான். அரண்மனைக்குள்ளும், அரண்மனைக்கு வெளியிலும் எல்லாரிடமும் அன்பாகவும் சகஜமாகவும் பழகுவான். ராஜ குடும்பத்து வாரிசு என்ற செருக்கையோ கர்வத்தையோ அவனிடம் எள்ளளவு கூடக் காண முடியாது. சோம்பல் இல்லாமல் நன்றாக உழைப்பான் அவன். அவனைக் கண்டால் அவனுடைய தந்தையும் பெரிய ராஜாவுமாகிய விஜயராஜேந்திர சீமநாத பூபதிக்குக் கூடப் பயம்தான். “எங்க அப்பாவைப் போல் படுசோம்பேறிகள் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்” என்று பூபதியே தன் நண்பர்களிடம் தந்தையைப் பற்றிக் கிண்டல் செய்து பேசுவதும் உண்டு. தந்தையும் மகனும் ஒரே ரயிலில் ஒரே ஊருக்குப் போகும் போது கூடத் தந்தை ஏ.ஸி. வகுப்பு அல்லது முதல் வகுப்பிலும் மகன் மூன்றாவது வகுப்பிலும்தான் போவதும் வழக்கம்; அந்த அளவிற்கு மகன் தீவிரவாதி; சிக்கனமானவன். தண்டச் செலவுகளைத் தவிர்ப்பவன். சுயப் பிரக்ஞை உள்ளவன். ***** இந்த இடங்களை எல்லாம் படிக்கிறபோது தனசேகரனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன்னைப் பற்றியே வேறு பெயரில் யாரோ எதிரே வந்து புகழ்ந்து பேசுவது போலிருந்தது. பீமநாதபுரம் சமஸ்தானத்தைப்பற்றி விவரம் தெரிந்த யாரோதான் இந்த வாரப் பத்திரிகைச் சிறு கதையை எழுதியிருக்க வேண்டும் என்றும் பட்டது. பல இடங்களையும் சில வாக்கியங்களையும் ஒரு முறைக்கு இரு முறையாகத் திரும்பத் திரும்பப் படித்தான் அவன். தன் கொள்கைகள் சரி என்பதைப் பலபேர் தனக்கு முன்பாகவே வந்து கரகோஷம் செய்து ஒப்புக்கொண்டாற் போலிருந்தது தனசேகரனுக்கு. காலையில் மாமா தங்க பாண்டியன் தூக்கத்திலிருந்து விழித்ததும் முதல் வேலையாக அவரிடமும் அந்தச் சிறுகதையைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிவிடவேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு விட்டிருந்தான் அவன். கதையை எழுதியிருக்கும் ஆசிரியன் தங்கள் சமஸ்தான எல்லைக்குள் நன்கு பழகிக் கவனித்த யாரோ ஓர் ஆள்தான் என்பதில் இப்போது அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. |