கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



20

     பீமநாதபுரத்தின் அரச வரலாறு முடிந்து கலாசாரப் பெருமை என்ற வரலாறு மட்டும் புதிதாகத் தொடங்கியிருந்தது. புகழும் பழியும் நிறைந்த பழைய சகாப்தம் முடிந்திருந்தன. தனசேகரன் தன்னுடைய பெருந்தன்மையாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும் புதிய சகாப்தத்தைத் தொடங்கி இருந்தான். பீமநாதபுரம் அரண்மனையும், அதன் ஆட்சியும், சொத்துச் சுகங்களின் நிர்வாகமும் தந்தையின் காலத்தில் தாறுமாறாகவும், ஊழல் மயமாகவும் மாறி இருந்தாலும் சீரழிந்திருந்தாலும் தனசேகரன் பழைய தவறுகளை எல்லாம் ஒழுங்கு செய்திருந்தான். இன்ஷூரன்ஸ் பணமும் வேறு சில வரவுகளும் ஊழலைச் சரி செய்ய உதவியிருந்தன.

     தந்தை ராஜமான்யத்தையும், சொத்துச் சுகங்களையும் துறப்பதற்கே அஞ்சி, தயங்கி மேலும் மேலும் பல தவறுகளை செய்தார். தனசேகரனோ அவற்றை எல்லாம் துறந்து சொத்துச் சுகங்களைத் தாராளமாக விட்டுக்கொடுத்து இப்போது மக்களிடத்தில் நல்ல பெயர் எடுத்திருந்தான்.

     பழைய காலமுதல் அரண்மனை அந்தப்புரத்தில் இளைய ராணிகள் என்ற பெயரில் சேர்ந்துவிட்ட தண்டச்சோற்றுக் கூட்டத்தை யாராலும் கலைத்து அனுப்ப முடியாதென்று தான் எல்லாரும் நினைத்திருந்தார்கள். தனசேகரன் அதையும் செய்து முடித்திருந்தான். யாருக்கும் எந்தக் குறைபாடும் இன்றி அரண்மனை சமஸ்தானம் என்ற ஏற்பாடுகள் தீர்மானமாகக் கலைத்து விடப்பட்டிருந்தன. அரண்மனை நிர்வாகத்கிலே அடங்கி இருந்த கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, தேவாரப் பாடசாலை, வேத பாட சாலை, ஆலய நிர்வாகங்கள் எல்லாம் ஊழல் களையப் பெற்றுச் செம்மையாகி இருந்தன. அரண்மனையில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கிருந்த அரிஜனங்கள். தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு இப்போது உபரி நிலங்கள் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டிருந்தன. ஊரையும் அரண்மனையையும் எல்லையாக இருந்து தனித்தனியே வேறு வேறு வர்க்கங்களாகப் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்த கற்சுவர்கள் அகற்றப்பட்டு அரண்மனையை மறைத்துக் கொண்டிருந்த மறைப்புக்கள் நீக்கப்பட்டிருந்தன. சிலருக்கு இது மனக்குறைவாக இருந்தாலும் பெரும்பாலோர் இதை வரவேற்றார்கள். ஊரில் எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பது போல் நிலைமை மாறி உயர்வு தாழ்வுகளும் தடைகளும் தவறுகளும் வித்தியாசங்களும் நீங்கியிருந்தன.

     தன்னுடைய திருமணத்துக்காகத் தன் தரப்பிலிருந்தும் மாமாவின் தரப்பிலிருந்தும் செலவாவதற்கு இருந்த அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து, ஆளுக்கு இரண்டரை லட்ச ரூபாய் வீதம் நன்கொடையாகப் போட்டு ஐந்து லட்ச ரூபாய்க்கு ஒரு பெண்கள் கல்லூரியைத் தன் தாயின் பெயரில் தொடங்குவதற்கு இருந்தான் தனசேகரன்.

     ‘வடிவுடைய நாச்சியார் மகளிர் கல்லூரி டிரஸ்ட்’ என்ற பெயரில் அந்தப் பெருந்தொகை ஒதுக்கப்பட்டது. பல்கலைக் கழகத்தில் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதி கோரப்பட்டது. மாமா தங்கபாண்டியன் திருமண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த அதே வேளையில் தனசேகரன் பொது காரியங்களுக்கான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

     அதுவரை சமஸ்தானம், அரண்மனை என்ற பெயரில் ஒரு சிலர் மட்டுமே அடைய முடிந்திருந்த நன்மைகளை இனி எல்லா மக்களும் அடையும்படி தனசேகரன் செய்திருத்த பல மாறுதல்களை ஊர் மக்கள் வரவேற்றனர். மகிழ்ச்சியோடு பேசினார்கள்! தனசேகரனைப் பாராட்டினார்கள்.

     அந்த வாரத்தில் பீமநாதபுரம் விழாக்கோலம் பூண்டது. மியூசியத் திறப்பு விழா, தனசேகரன் திருமணம் இரண்டும் பக்கத்துப் பக்கத்து ஊர்களில் நடைபெற இருந்தாலும் இரண்டு ஊர்களிலுமே கலகலப்பும் கோலாகலமும் மிகுந்திருந்தன. கோலாலம்பூரிலிருந்தும், மலேசியாவின் பிற பகுதிகளிலிருந்தும், மாமா தங்கபாண்டியனின் குடும்பத்தினர், வேண்டியவர்கள், உறவினர்கள், எல்லாரும் வந்திருந்தனர். உள்நாட்டு நண்பர்களும், உறவினர்களும் கூட நான்கு தினங்களுக்கு முன்பே பீமநாதபுரம் வந்து சேர்ந்து விட்டனர். ஒரு வயதான மூத்த பெரியவர் மாமாவிடம் திருமண அழைப்பிதழ் அச்சிட்டிருந்த முறை பற்றிக் குறைப்பட்டு விவாதிக்கத் தொடங்கினார்.

     “பத்திரிகையிலே எந்த இடத்திலேயாவது மாப்பிள்ளை பீமநாதபுரம் அரச குடும்பத்து ‘வாரிசு’ன்னு, குறிப்பிட்டிருக்க வேணாமா? இவ்வளவு தூரம் விவரம் தெரிஞ்ச நீங்க பத்திரிகை அச்சடிச்சப்போ அதை எப்படித் தவறவிட்டீங்கன்னே தெரியலியே?”

     “நானாக அதை விடலே, மாப்பிள்ளையே வேண்டாம்னு அபிப்ராயப்பட்டதாலே தான் விட்டேன். என்ன காரணத்தாலேயோ தனசேகரன் அதை எல்லாம் போடறத்துக்குப் பிரியப்படலே பாட்டையா! வேண்டாம்னுட்டான்.”

     “அவருதான் சின்னப்புள்ளையாண்டான். வேண்டாம்னாலும் நீர் விவரந்தெரிஞ்ச மனுஷன் அதை விடலாமோ? குடும்பப் பெருமை, ராஜ வம்சம் இதெல்லாம் எல்லாருக்குமா கிடைச்சுட முடியும்?” என்று விடாமல் தொண தொணத்தார் அந்த முதியவர்.

     இப்படிப் பல முனைகளிலிருந்து பல வினாக்களை மாமா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதையெல்லாம் கேள்விப் பட்டபோது தனசேகரன் சிரித்துக்கொண்டே சொன்னான்:

     “நான் இனிமே அரசனும் இல்லை. அரசவம்சமும் இல்லை. சாதாரண மனிதன்தான்னு சொன்னா ஜனங்க கேட்க மாட்டேங்கிறாங்க. நான் அரச வம்சம்தான்னு சொன்னா அதை அரசாங்கமும் சட்டமும் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லே. இனிமே என்னதான் செய்ய முடியும்னு புரியலே.”

     இந்த விதமான தனசேகரனின் விளக்கம் கேள்வி கேட்டவர்களைத் திருப்திப்படுத்தவில்லை. ஆனாலும் அவர்களை மேலும் முணுமுணுக்க விடாமல் வாயை அடைக்கப் பயன்பட்டது.

     எளிமையையும், அன்பையும், பண்பையும் கொண்டாடுகிற மனிதனைவிட விண் பெருமைகளையும், டம்பங்களையும், ஜபர்தஸ்துக்களையும் கொண்டாடுகிற மனிதர்கள் தான் உலகில் அதிகம் இருந்தார்கள். எளிமையும் பண்பும் இலக்கியங்களிலும் எழுத்துக்களிலுமே கொண்டாடப் பட்டன. வாழ்வில் நிலைமை என்னவோ முற்றிலும் வேறாகத்தான் இருந்தது. டாம்பீகமே மதிக்கப்பட்டது. ஜம்பமே பெருமைப்படுத்தப் பட்டது. பெருவாரியான மக்களுக்கு எளிமையின் அருமையைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இன்று இந்நாட்டில் இல்லை என்று தெரிந்தது. மக்களின் இந்த மனநிலை தனசேகரனுக்கு நன்கு விளங்கியிருந்தது.

     ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற சிறுகதையில் தான் படித்த இளவரசன் கூடத் தன் எளிமைப் பண்பை மக்களுக்குப் புரிய வைக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது என்பதை தனசேகரன் நினைவூட்டிக் கொண்டு பார்த்தான்.

     நான்கு ரத வீதிகளிலும் எட்டுக் குதிரைகள் பூட்டிய பழமையான அரண்மனைச் சாரட்டில் மணமகனான தனசேகரன் ஊர்வலமாக அழைத்து வரப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் பீமநாதபுரம் நகரப் பொதுமக்கள்.

     தனசேகரனோ அந்தப் புராதனமான சாரட்டையே மியூசியத்தில் கொண்டு போய் நிறுத்தி வைத்திருந்தான்.

     தனசேகரனின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக மூன்று முக்கியமான திறப்பு விழாக்கள் பீமநாதபுரம் வட்டாரத்தில் நடைபெற்றன. பீமநாதபுரம் அரண்மனை மியூசியத் திறப்பு விழா, வடிவுடைய நாச்சியார் பெண்கள் கல்லூரித் திறப்பு விழா, நீர்ப்பாசன வசதிக்குப் புதிதாகக் கட்டப்பட்டிருந்த அணைக்கட்டுத் திறப்பு விழா மூன்றும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. முதலில் கல்லூரிக்காக அரண்மனைக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை மட்டும் எழுதி வைக்கலாம் என்றெண்ணி யிருந்தார்கள் மாமாவும், தனசேகரனும். பின்னால் யோசித்த வேளையில் பழைய நவராத்திரி விழாவின் போது பயன்படுத்திய மாளிகைகளும் கட்டிடங்களும் விருந்தினர் தங்கும் விடுதிகளும் பயனின்றி இருப்பது நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டிடங்களையும் அவற்றைச் சுற்றி இருக்கும் காலி நிலங்களையும் இப்போது புதிய பெண்கள் கல்லூரிக்கு அப்படியே பயன்படுத்தலாம் என்று தோன்றியது. சில மாறுதல்களோடு அந்தப் பெரிய கட்டிடங்களை அப்படியே கல்லூரியாக மாற்றினார்கள். திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

     அரண்மனை இடங்களில் வசந்தமண்டபத்து விருந்தினர் மாளிகையையும் அதைச் சுற்றியிருந்த தோட்டத்தையும் மட்டுமே தன் குடியிருப்பு உபயோகத்துக்கு என்று வைத்துக் கொண்டிருந்தான் தனசேகரன். மற்ற எல்லா இடங்களும் பொதுக் காரியங்களுக்காக அல்லது பொதுஉபயோகங்களுக்காக எழுதி வைக்கப்பட்டு விட்டிருந்தன.

     ஒரு பெரிய சமஸ்தானாதிபதி தன் உடைமைகளை எல்லாமே பொதுமக்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தன் அளவில் ஒரு சாதாரணக் குடிமகனாகி விட்டது போன்று இந்த மகத்தான மாறுதல் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது; விளம்பரமாயிற்று; பத்திரிகைகள் எல்லாம் தலையங்கங்கள் எழுதின. அகில இந்தியாவில் இருந்தும் ஏராளமான பெரிய பத்திரிகை நிருபர்கள் பீமநாதபுரத்தைத் தேடி வந்து முற்றுகையிட்டனர். தனசேகரனின் படமும் பேட்டிகளும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியிருந்தன. ‘ராஜமான்ய ஒழிப்புக்குப் பின்னர் மக்களுக்கு முன் உதாரணம் ஆகும் ஓர் இளவரசர்’ என்ற தலைப்புடன் பல பத்திரிகைகள் தனசேகரனைப் புகழ்ந்து எழுதியிருந்தன. சில பிரிட்டிஷ், அமெரிக்கப் பத்திரிகைகளின் நிருபர்கள் கூடப் புகைப்படக் கருவிகளுடனும், டெலிவிஷன், சினிமா, படப்பிடிப்புக்கான சாதனங்களுடனும் பீமநாதபுரத்துக்கு வந்திருந்தனர். பிரதமரும் முக்கியத் தலைவர்களும் தனசேகரனை வாழ்த்தித் தந்திகள் அனுப்பியிருந்தனர். சரித்திரத்தில் ஒரு மாறுதலை உண்டாக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து மக்களுக்குக் காட்டுவதற்கு மத்திய, மாநில அரசாங்கங்களின் செய்திப் படப் பிரிவினர் பீமநாதபுரத்தில் வந்து முகாம் இட்டிருந்தனர்.

     முறையின்மை, ஒழுக்கக்கேடு, ஊழல், ஆகியவற்றினால் தன் தந்தை இழந்திருந்த நற்பெயரைத் தனசேகரன் மீட்டான். கெட்ட பெயரைப் போக்க முயன்றான், பழைய ராஜாவின் ஊழல்கள் பீமநாதபுரத்தின் புகழுக்கே களங்கம் உண்டாக்கியிருந்தன. இப்போது தனசேகரன் தன் செய்கைகளால் அந்தப் புகழையும், பெயரையும் மீட்டுக்கொண்டிருந்தான்.

     அரண்மனையும் சுற்றியிருந்த அழகிய மிகப் பெரிய பூங்காவும். சிறுவர்க்கான மிருகக்காட்சி சாலையாகவும். மியூசியமாகவும் பொதுமக்கள் உபயோகத்துக்கான பார்க்காகவும் மாற்றப்பட்ட செய்தி அகில இந்தியாவையுமே கவர்ந்திருந்தது. ‘ஒரு சமஸ்தானம் மக்கள் உடைமை ஆகிறது’ என்றும் ‘ஒரு சமஸ்தானச் செல்வங்கள் மக்களுக்குப் பங்கிடப்படுகிறது’ என்றும் பத்திரிகைகள் விதம் விதமாகத் தலைப்பிட்டு புகழ்ந்து எழுதத் தொடங்கியிருந்தன.

     பீமநாதபுரம் அகில இந்தியாவிலுமுள்ள பத்திரிகைகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. மியூசியத் திறப்பு விழாவின் போது வந்திருந்த அமைச்சர், விழா மேடை மீது தனக்கும் தனசேகரனின் மாமாவுக்கும், தனசேகரனுக்கும் மேற்புறம் இருக்கைகள் போடப்பட்டிருந்ததைக் கண்டு, “உங்கள் வருங்கால மனைவியை மட்டும் ஏன் கீழே அமரச் செய்து விட்டீர்கள்? அந்தப் பெண்ணைக் கூப்பிடுங்கள். அவர்களும் இங்கேயே அமரட்டும்” என்றார்.

     தனசேகரன் தன் மாமன் மகளும் நாளைய மனைவியுமாகிய பெரியநாயகியிடம் சகஜமாகச் சிரித்துப் பேசிப் பழகுவதுண்டு என்றாலும் ‘கல்யாணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும்போது அப்படி எல்லாம் பேசினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்று தயங்கியபடி திரும்பி மாமாவின் பக்கம் பார்த்தான்.

     “ஏன் நீயே கூப்பிடேன். பெரியநாயகியோட நீ பேச மாட்டியா?” என்று சிரித்தபடி அவனைக் கேட்டார் மாமா.

     தனசேகரன் உடனே கீழே முதல் வரிசையிலே அமர்ந்திருந்த பெரியநாயகியைப் பார்த்து மேலே மேடையிலே வந்து அமருமாறு சைகை செய்தான். அவன் அப்படி மணமகளைச் சைகை செய்து அழைப்பதைப் பார்த்துக் கூட்டத்தில் எல்லோரும் ‘கொல்’லென்று வாய்விட்டுச் சிரித்தார்கள். தனசேகரனுக்கு வெட்கமாகப் போயிற்று பெரியநாயகி நாணப் புன்னகையோடு மேடை மீது வந்தமர்ந்தாள்.

     “இந்த மியூசியம் - அருமையான கலைப்பொருட்களையும் ஒரு சமஸ்தானத்து அரச குடும்பத்து வரலாற்றையும் மட்டுமே உங்களுக்கு எடுத்துக்காட்டவில்லை. ஓர் இதயத்தின் பெருந்தன்மையையும் சேர்த்தே எடுத்துக் காட்டுகிறது. தனக்கு உரிமையான இந்த அழகிய அரண்மனையையும் கலைப்பொருட்களையும் ஊருக்கு உரிமையாக்கியிருக்கிறார் திருவாளர் தனசேகரன். அவருடைய மனைவியாகும் இந்த இளம் பெண்ணுக்கு நான் ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் கணவர் உங்களுக்கு அரச குடும்பத்துச் சொத்துக்கள் எதையும் கொண்டு வரவில்லை. ஆனால் தன்னையே ஒர் அரும் பெரும் ஐசுவரியமாக உங்களுக்குக் கொண்டு வந்து தரப்போகிறார். இந்த பீமநாதபுரத்தின் வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய செல்வம் அல்லது சொத்து நம் நண்பர் தனசேகரன்தான் என்பதை உங்களுக்குப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பொருட்காட்சித் திறப்பு விழாவில் அமைச்சர் பலத்த கரகோஷத்துக் கிடையே பேசினார்.

     திருவிழாக் கூட்டம்போல மியூசியத்தைப் பார்ப்பதற்குக் கூட்டம் சேர்ந்திருந்தது. மைல் நீளத்திற்கு மேல் நீளமாக உள்ளே நுழைய கியூ நின்றது. பெண்கள் கல்லூரித் திறப்பு விழாவும் அணைக்கட்டுத் திறப்பு விழாவும் அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்தன. திருமணத்திற்காக வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த விழாக்களுக்கும் வந்திருந்தனர். திருமணம் பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலில் எளிமையாக நிகழ இருந்தது. தனசேகரன் எப்படி விரும்பினாலும் பெரிய ரப்பர் எஸ்டேட் உரிமையாளரான மாமா அதை அத்தனை எளிமையாக நடத்தச் சம்மதித்திருக்கக் கூடாது என்றார்கள் அவரது வியாபார நண்பர்கள். கோலாலம்பூரில் மெர்லின் ஹோட்டலில் ஒரு பெரிய வரவேற்புக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்துவிடலாம் என்றார் மாமா தங்கபாண்டியன். பரிமேய்ந்த நல்லூரில் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தங்குவதற்கு இடம், வசதிகள் எதுவும் இல்லை. பலர் பீமநாதபுரத்தில் தங்கித் திருமண நாளன்று விடிந்ததும் காரில் பரிமேய்ந்த நல்லூருக்குச் சென்றார்கள். சிலர் ஆவிதானிப்பட்டியில் தங்கியிருந்து கொண்டு காலையில் முகூர்த்த நேரத்திற்குப் பரிமேய்ந்த நல்லூர் வந்து சேர்ந்தார்கள்.

     இந்தத் திருமணத்திற்கு முந்திய நாளன்று இரவில் ஓர் உருக்கமான நிகழ்ச்சியைத் தனசேகரன் எதிர்கொள்ள நேர்ந்தது. முன்பு அரண்மனைக் கோவிலிலும் தட்சிணா மூர்த்திக் குருக்கள் வீட்டிலுமாகத் தான் சந்தித்திருந்த அதே இளையராணி தன்னை மீண்டும் அன்று அந்த இரவு வேளையில் தேடி வந்தபோது தனசேகரனுக்கு வியப்பாக இருந்தது.

     “எதுக்கும் கவலைப்படாதீங்கம்மா! உங்க மகன் கொடைக்கானல் பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலம்வரை மட்டுமில்லே, அது முடிந்தபின் கல்லூரிப் படிப்புக்குக்கூட நான் உதவி செய்யிறேன்” என்றான் தனசேகரன்.

     “நான் இப்போ சின்னராஜாகிட்ட எந்த உதவியையும் எதிர்பார்த்து இங்கே வரலே. அந்த நாளிலே உங்கம்மா பெரியராணி பிரியமாகத் தன் காதிலே அணிந்திருந்த வைரத்தோடு ரெண்டையும் எனக்குக் கொடுத்திட்டுப் போனாங்க. எனக்கு வேண்டாம்னு நான் எவ்வளவோ சொல்லியும், அவங்க கேட்கலை. இப்போ நான் அதைச் சின்னராணி அதாவது உங்க மனைவி பெரியநாயகிக்குக் கொடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்.”

     “இந்தக் காலத்துப் பெண்கள் தோடு கீடு எல்லாம் எங்கே போட்டுக்கப் போறாங்க? பெரியநாயகிக்கு இதெல்லாம் எதுக்கு? உங்ககிட்டவே இருக்கட்டுமே.”

     “இல்லே! சின்னராஜா அப்படிச் சொல்லப்படாது. உங்கம்மா சொத்து உங்க மனைவி கிட்டத்தான் இருக்கணும். நான் சொல்வதை நீங்க தட்டக்கூடாது. தயவு செய்து பெரியநாயகியை ஒரு நிமிஷம் தனியாகக் கூப்பிடுங்க. உங்கம்மா சார்பிலே ஆசீர்வாதத்தோட நானே இதை அவகாதிலே போட்டுவிடணும். நீங்க இதுக்கு ஆட்சேபணை சொல்லவே கூடாது” என்றாள் அவள்.

     தனசேகரனால் அவளுடைய அந்த வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. பெரியநாயகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அவள் முன்னால் நிறுத்தி அறிமுகப்படுத்தினான். அவள் தனக்கு சின்னம்மா முறையாக வேண்டும் என்றும், தன் அம்மாவுக்கு மிகவும் வேண்டியவள் என்றும் பெரியநாயகியிடம் தனசேகரன் பெருமையாகச் சொன்னான். தோடுகளைப் பெரியநாயகிக்கு அணிவித்துத் திருஷ்டி கழித்து வாழ்த்தினாள் அவள்.

     “இங்கே நாளைக் காலையில் திருமண நேரத்தில் நான் நேரில் வந்து வாழ்த்த முடியுமோ, இல்லையோ, இப்போதே வாழ்த்தி விடுகிறேன்.”

     “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நாளைக் காலையில் திருமணத்துக்கும் நீங்கள் இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்.”

     அவள் விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தாள்! தனசேகரன் பெரிய நாயகியிடம் அவளைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னான். தன் தாய்க்கு அவள் உடல்நலமின்றிப் படுத்த படுக்கையாயிருந்த காலத்தில் இந்த இளையராணி பெரிதும் உதவியாயிருந்ததை எல்லாம் விவரித்தான். அவள் மகன் கொடைக்கானலில் படிப்பது பற்றியும் குறிப்பிட்டான்.

     மறுநாள் பொழுதும் விடிந்தது. திருமணச் சடங்கும் முடிந்தது. திருமண விருந்து என்று எதுவும் பரிமேய்ந்த நல்லூரில் ஏற்பாடு செய்யப்படவில்லை. பீமநாதபுரத்தில் தான் சிறிய அளவில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வசந்த மண்டப மாளிகை தனசேகரனின் வீடாக மாறியிருந்ததால் அங்கேயே எளிய விருந்தும் நடந்தது. திருமணம் முடிந்ததுமே அனைவரும் கார்களில் பீமநாதபுரம் திரும்பி விட்டனர். மாலையில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பில் கூட எளிமையே கடைப்பிடிக்கப்பட்டது. தனசேகரன் அதில் கண்டிப்பாக இருந்தான். திருமணத்திற்கு மறுநாள் அரண்மனையின் பழைய ஊழியர்களுக்குத் தனியே அவனும் அவன் மனைவியும் விருந்தளித்தனர். விருந்தின் முடிவில் தனசேகரன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டான்.

     “உங்களுக்கெல்லாம் எங்களது பரம்பரையின் சார்பில் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். இனி இந்த ஊரில் உட்கோட்டை வெளிக்கோட்டை என்று பெயர்களுக்கு அர்த்தமே இல்லை. எப்போது மதில்களை இடித்தாயிற்றோ அப்போதே பேதாபேதங்கள் போய் விட்டன. மதில்கள் இருந்தவரைதான் உட்கோட்டைவாசி, வெளிக்கோட்டைவாசி என்ற வேறுபாடு இருந்தது. இனி வேறுபாடுகள் இல்லை. ஊரை - அந்தஸ்து, வாழ்க்கைத் தரம் எல்லாவற்றாலும் இரண்டாகப் பிரித்துக் கொண்டிருந்த சுவர்கள் இப்போது தகர்க்கப்பட்டுவிட்டன. அரண்மனை பொது இடமாக மாற்றப்பட்டு விட்டது. அரச வம்ச உபயோகத்துக்கான இடம், பொதுமக்கள் உபயோகத்துக்கான இடம் என்று ஊரை இரண்டாகப் பிரித்த உயரமான கற்சுவர்களை நீக்கியாயிற்று. இனி ஊர் ஒன்று, மனப் பான்மையும் ஒன்று. நான் இங்கிருந்து சமஸ்தானத்தை நடத்தவோ, சமஸ்தானாதிபதி என்ற பெருமை கொண்டாடவோ தயாராயில்லை. இனி எல்லோரையும் போல, நானும் இவ்வூர்க் குடிமக்களில் ஒருவனாக வாழ்வேன். ‘நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்’ என்ற மனப்பான்மைதான் உண்மையான பெரிய கற்சுவர். வெளியே இருக்கிற கற்சுவர்கள், கதவுகள், பூட்டுக்கள். அந்தஸ்தைப் பாதுகாக்கும் அடையாளங்கள் எல்லாவற்றையும் விட மனத்துக்குள் இருக்கும் கற்சுவர்களாகிய நினைப்புக்கள் தான் கடுமையானவை. என் தந்தையின் மனத்தில், அப்படி ராஜ வம்சம் என்ற கற்சுவர் பெரிய கர்வமாக எழும்பி உலகை மறைத்துக் கொண்டு இருந்தது. என் மனதில், அப்படி எதுவும் இல்லாததால்தான் நான் வெளியே ஊரை இரண்டாக்கிக் கொண்டிருந்த மதிற்சுவர்களையும் நீக்கினேன். உள்ளத்துக் கற்சுவர்களாகிய இறுமாப்பு ஜம்பங்களையும் நீக்கினேன். ஊர் ஒற்றுமையை இனி நீங்களெல்லாரும் சேர்ந்துதான் பாதுகாக்க வேண்டும். திருட்டும் காவலும் இல்லாத புதிய சமூகம் ஒன்று நம்மிடையே உருவாக வேண்டும். அந்தஸ்து வாழ்க்கைத் தரங்களால் மக்கள் பிளவுபடாத சமத்துவம் வேண்டும். இப்போது என் மாமாவின் தோட்டத் தொழிலை உடனிருந்து கவனிப்பதற்காக நான் மலேசியாவுக்குச் சென்றாலும் விரைவில் இங்கேதான் திரும்பி வருவேன். இப்போது நான் சில மாதங்கள் அங்கே போவதுகூட நீங்கள் சமஸ்தானம், அரசர், அரச குடும்பம் என்ற வார்த்தைகளையும், உறவுகளையும் விரைந்து மறக்க வேண்டும் என்பதற்காகத்தான்! நான் இங்கிருந்து இதே இடத்தில் வசிக்கத் தொடங்கினால் நீங்கள் பழைய வழக்கத்தை விட முடியாமல் மறுபடியும் சமஸ்தான மரியாதைகளை எனக்குச் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். உங்களுக்கு அதெல்லாம் மறக்கவேண்டும் என்பதற்காகவே நான் சில காலம் இங்கிருந்து தொலைவில் சென்று வசிக்க எண்ணுகிறேன். எனக்கும், என் மனைவிக்கும், மாமாவுக்கும் நீங்கள் இப்போது தற்காலிகமாக விடைகொடுக்க வேண்டும்” என்றான் தனசேகரன்.

     அந்த வேண்டுகோளும் விடைபெறுதலும் மிகமிக உருக்கமாக இருந்தன. காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை, மாமா தங்கபாண்டியன் எல்லாரும் அப்போது உடனிருந்தார்கள், ஒரு பத்திரிகை நிருபர் எழுந்திருந்து “அரண்மனையையும் ஊரையும் பிரித்த கற்சுவர்களை நீக்கி விட்டீர்கள். இனி நீங்கள் இங்கேயே தங்கி ஊருக்கு நன்மைகள் செய்ய வேண்டாமா? மாமன் மகளைக் கட்டிக் கொண்டு அவரோடு மலேசியாவுக்கு விமானம் ஏறிப் போகப் பார்ப்பது என்ன நியாயம்?” என்று கேட்டார்.

     “நான் எங்கும் ஓடிப் போகப் போவதில்லை. திருமன வரவேற்புக்கு அங்கே அழைக்கின்றார் மாமா. போய்விட்டுச் சில மாதங்கள் கழித்து நானும் என் மனைவியும் இங்கே வந்துவிடுவோம். இங்கே புதிதாகத் தொடங்கியிருக்கும் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கென்று பல வேலைகளை செய்ய வேண்டும். எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ளே திரும்பி வந்துவிடத் திட்டம் போட்டிருக்கிறேன்.”

     “வரும்போது நீங்களும் உங்கள் மனைவியும் மட்டும் தனியே வரக்கூடாது. பின் எப்படி வரவேண்டும்?”

     “எங்களையெல்லாம் ஏமாற்றி விடாமல் பீமநாதபுரம் அரச குடும்பத்துக்கு வாரிசாக ஒரு மகனையோ, மகளையோ பெற்றுக் கொண்டு வரவேண்டும். இது எங்கள் அன்புக் கட்டளை.”

     “உங்கள் அன்புக் கட்டளைக்கு ஒரு சிறு திருத்தத்துடனே நன்றி. எங்கள் மாமாவுக்கும் மாமிக்கும் ஒரு பேரனோ பேத்தியோ கிடைக்க வேண்டுமே ஒழிய பீமநாதபுரத்தை ஆள என்று நாங்கள் எந்த வாரிசும் பெறப்போவதில்லை. எங்கள் குழந்தை அரச வம்சத்து வாரிசாக இருக்காது. எங்கள் குழந்தையாகவும் எங்கள் பெற்றோர்களின் பேரனாகவோ பேத்தியாகவோ மட்டுமே இருக்கும். இனி பீமநாதபுரத்தில் அரசர், மக்கள் என்ற பிரிவுகள் இல்லை என்பதை நிரூபிக்கும் அடையாள நீக்கமாகத்தான் பழைய கற்சுவர்களை நீக்கினேன். பல நூறு வருஷத்து வரலாற்றை ஒருவிதமான அடக்குதல் ஆளுகையின் சின்னத்தை தரை மட்டமாக்கி நீர்த்தேக்கம் கட்டுவதற்குக் கற்களை விற்றதன் நோக்கமே அதுதான். பல நூற்றாண்டுகளாக அதிகார வெப்பத்தில் சூடேறிய அந்த மதிற்கற்கள் இனி மேலாவது, காலம் காலமாக நீர்த்தேக்கத்தின் குளிர்ச்சியில் ஆறுதல் பெறட்டும் என்பதுதான் என் ஆசை.”

     தனசேகரனின் இந்தச் சொற்களைக் கேட்டுக் கூட்டம் கரகோஷம் செய்தது. அந்தக் கரகோஷமும் வாழ்த்தொலிகளும் ஓய்வதற்குச் சில வினாடிகள் ஆயின.

முற்றும்






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247