கற்சுவர்கள் - Karsuvargal - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



3

     சினிமா டைரக்டர் கோமளீஸ்வரன் எவ்வளவோ முயன்று சொல்லியும் அவன் கூறிய சினிமா நடிகை ஜெயநளினியைத் தமக்குத் தெரியாதென்று மாமா தங்கபாண்டியன் ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

     “என்னங்க இப்படிச் சொல்றீங்க? நீங்களே இப்படிச் சொல்லலாமா? நீங்களே இப்படிச் சொன்னா என்ன செய்யறதுங்க?” என்று கோமளீஸ்வரன் மேலும் இழுத்த போது மாமா டத்தோ தங்கபாண்டியன், “அட போப்பா நீ! இப்போ எங்களுக்கு இதுதானா வேலை? வேற வேலை இல்லாமலா இப்போ நாங்க சும்மா சுத்திக்கிட்டிருக்கோம். உனக்குக் கட்டாயம் ஏதாவது சொல்லியாகணும்னு இருந்தா நாளைக்கிச் சாயங்காலமா வந்து பேசிக்கோ” என்று கறாராகச் சொல்லிவிட்டார். தனசேகரன் அந்தக் கோமளீஸ்வரனோடு பேசவே இல்லை. மாமாவுடைய கோபத்தைக் கண்டு பயந்து கோமளீஸ்வரன் மெல்ல விலகிப் போய்விட்டான். அவன் தலை அந்தப் பக்கம் மறைந்ததும், “கொஞ்சம் இடங் கொடுத்தோமோ அட்டை உறிஞ்சற மாதிரி இரத்தத்தை உறிஞ்சிப்பிடுவாங்க கொலைகாரப் பசங்க” என்றார் மாமா.

     “அவங்க என்ன பண்ணுவாங்க? எல்லாம் அப்பா கொடுத்த இடம் தானே,” என்று தனசேகரன் சொன்னான்.

     “சரி வா தம்பி! எங்கேயாவது கொஞ்ச நேரம் தூங்கலாம். காரியஸ்தர் கிட்டச் சொல்லி அந்த வசந்த மண்டபம் கஸ்ட் ஹவுஸ் சாவியைக் கொண்டாரச் சொல்லலாம். அங்கே தான் கொஞ்சம் வெளித் தொந்தரவு இல்லாமே நிம்மதியா இருக்கும்” என்று சொல்லியபடியே அங்கே தென்பட்ட அரண்மனைக் காவலாளி ஒருவனைக் கைதட்டி அருகே கூப்பிட்டார் மாமா. அவன் பயபக்தியோடு அருகே வந்து ஏழடி விலகி நின்று கைகட்டி வாய் பொத்திக் கேட்கலானான்.

     “சின்னராஜாவும் அவங்க மாமாவும் கொஞ்ச நேரம் தூங்கணும்னாங்கன்னு அந்த வசந்த மண்டபம் கஸ்ட ஹவுஸ் சாவியைக் காரியஸ்தர் கிட்டக் கேட்டு வாங்கிட்டு வாப்பா” என்று மாமா அவனுக்கு உத்திரவு போட்டார். அவன் சாவியை வாங்கிக் கொண்டு வருவதற்காகக் காரியஸ்தரைத் தேடிக் கொண்டு ஓடினான். சாவி வருவதற்காக வசந்த மண்டபம் ‘கஸ்ட் ஹவுஸ்’ முகப்பில் போய் நின்றார்கள் அவர்கள் இருவரும். அந்த அரண்மனை எல்லைக்குள்ளேயே மிகவும் சுகமானதும், ஓர் அழகிய ஏரிக்கு நடுவில் மைய மண்டபம் போல மரஞ் செடி கொடி சூழ தோட்டத்தினிடையே அமைந்திருப்பதுமான ‘வசந்தகால விருந்தினர் விடுதி’ தான் சிறப்பானது. முதல் தரமானது. ஏரிக்கு நடுப்பகுதியில் உள்ள அந்த மாளிகை வாயில் வரை நடந்து செல்வதற்கும், கார், வாகனங்கள் செல்வதற்கும் பாலம் போல அழகான சிமெண்டுச் சாலை ஒன்றும் இருந்தது. அந்தச் சாலை வழியே பேசிக் கொண்டே நடந்து தான் மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் அப்போது அங்கே வந்திருந்தார்கள்.

     பனி நிறைந்த அந்தப் பின்னிரவில் எழுதி வைத்த சித்திரம் போல அந்த வசந்த மண்டப விருந்தினர் விடுதி அமைதியாக இருந்தது.

     “சங்கதியைக் கேட்டியா தம்பீ? நீயும் நானும் மலேசியாவிலிருந்து புறப்பட்டு வரலேன்னா ஏதாவது பாத்திரம், பண்டம், நகை நட்டுக்களை அடகு வச்சுத்தான் உங்கப்பாவோட காரியமே நடக்கணும்னாரு சேர்வைக்காரரு. அப்புறம் நான் தான் மெட்ராஸ்லே ஏர்போர்ட்டுக்குக் கொண்டாரச் சொல்லி வாங்கியாந்த எமவுண்ட்லேருந்து கொஞ்சம் கேஷ் எடுத்துக் குடுத்திருக்கேன்” என்று மாமா உள்ள நிலைமையைத் தனசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

     “மாமா! எதுக்கும் கொஞ்ச சிக்கனமாகவே செலவுக்குக் குடுங்க. தாராளம் காண்பிச்சீங்கன்னா எல்லாருமாச் சேர்ந்து ஆளை முழுங்கிடுவாங்க” என்று தனசேகரன் அவரை எச்சரித்தான்.

     “இதிலே என்ன தம்பீ சிக்கனம் பார்க்க முடியும்? செத்துப் போனவருக்குச் செய்யிற காரியங்களில் ஒண்ணும் குறைவு வைக்க வேண்டாம்னு பார்க்கிறேன். அந்தக் காரியங்கள்ளாம் முடிஞ்சப்புறம் தான் நீயும் நானும் இங்கே பல பேரை விரோதிச்சுக்கிட்டாலும் பரவாயில்லேன்னு நாம ‘போல்டா’ பலதைச் செய்ய வேண்டியிருக்கும். சில விஷயங்களை முடிவு கட்டவே வேண்டியிருக்கும். அதுக்கெல்லாம் நிறைய எதிர்ப்பு வரும்.”

     மாமா பேச்சை முடிப்பதற்குள் அரண்மனைக் காவல்காரன் ஒருவன் வசந்த மண்டபத்துச் சாவியோடு வந்து கதவைத் திறந்து விட்டான்.

     “வேறே ஏதாச்சும் வேணுங்களா?”

     “ஒண்ணும் வேண்டாம்ப்பா! குடிக்கத் தண்ணி மட்டும் கொஞ்சம் கொண்டாந்து வை... போதும்.”

     காவல்காரன் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சொல்லிக் கொண்டு போனான்.

     அப்புறம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தூங்கி விட்டார்கள்.

     விடிகாலை ஐந்து மணிக்குக் காரியஸ்தர் வந்து அவர்களை எழுப்பினார். ஒரு பெரிய ‘பிளாஸ்க்’ நிறையக் கள்ளிச் சொட்டாக அருமையான காபியும் கொண்டு வந்திருந்தார்.

     “எத்தனை மணியாகுமோ, என்னவோ, அங்கே ராஜ ராஜேஸ்வரி விலாசத்துக்கு வந்துட்டீங்கன்னா அப்புறம் சாப்பிட ஒண்ணும் கிடையாது. அதான் அரண்மனை வாசல்லே இருக்கிற அம்பிகா பவன் ஹோட்டல் ஐயருகிட்டச் சின்னராஜாவுக்குன்னு, ‘ஸ்பெஷலா’ச் சொல்லி வாங்கியாந்துட்டேன்.”

     மாமாவும் தனசேகரனும் அந்த அதிகாலையில் காபியை எதிர்பார்க்கவில்லை என்றாலும் மறுக்காமல் அதை ஏற்றுக் கொண்டார்கள். பல்விளக்கி முகங்கழுவிக் கொண்டு இருவரும் காபியருந்தி முடிக்கவும் டிரைவர் ஆவுடையப்பன் வசந்த மண்டபத்து வாசலில் சர்ரென்று காரைக் கொண்டு வந்து நிறுத்தவும் சரியாயிருந்தது. “ஏன்ய்யா பெரிய கருப்பன் சேர்வை! இங்கே அரண்மனைக்குள்ளாரப் போறதுக்கும் வர்றதுக்கும் கார் எதுக்கு? நடந்தே போய்க்கலாமே?” என்று கேட்டார் மாமா.

     “இல்லீங்க. நான் ஒரு காரணத்தோடதான் சொல்றேன். அங்கங்கே ஆளுங்க நின்னுக்கிட்டும், உட்கார்ந்து பேசிக்கிட்டும் இருக்காங்க. நீங்க நடந்தே வந்தீங்கன்னாச் சில ஆளுங்க முறை தெரியாமே மரியாதை இல்லாமே நடுவழியிலேயே உங்களை நிறுத்தி வச்சுத் துஷ்டி விசாரிப்பாங்க. அதைத் தவிர்க்கலாம்னுதான் காரைக் கொண்டாரச் சொன்னேன்” என்பதாகப் பெரிய கருப்பன் சேர்வை சொல்லி விளக்கிய பின்பு மாமாவுக்கும் அவர் சொன்ன யோசனை சரியென்றே தோன்றியது.

     “ஏன் நடந்தே போகலாமே? அதிலே என்ன தப்பு?” என்று தனசேகரன் வேறு ஆரம்பித்தான்.

     “இல்லே தம்பீ! அவர் சொல்றதுதான் மொறை. போறப்ப வர்றப்ப நடுவழியிலே நிறுத்தித் துஷ்டி கேட்கிறது நல்லா இருக்காது. அதுக்கு நாமே எடங் கொடுத்திடக் கூடாது” என்று மாமா அடித்துச் சொன்னார். தனசேகரன், அதற்கப்புறம் நடந்து போவதை வற்புறுத்தவில்லை.

     முன் ஸீட்டில் காரியஸ்தரும், பின் ஸீட்டில் மாமாவும், தனசேகரனும் அமர்ந்த பின் டிரைவர் ஆவுடையப்பன் காரை ஸ்டார்ட் பண்ணினான். கார் அடுத்த நிமிஷமே கூட்டம் கூடியிருந்த ராஜ ராஜேஸ்வரி விலாச ஹால் முகப்பில் போய் நின்றது. காரை சூழ்ந்து கொண்டு வந்து ஒரு பெருங் கூட்டம் மொய்த்தது. ‘சின்னராஜாவும் அவங்க மலேயா மாமாவும் வர்றாங்க’ என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் முணுமுணுத்து ஓய்ந்தன. மகாராஜாவின் சடலத்தைச் சுற்றிலும் மொய்த்திருந்த முக்கியஸ்தர்களும், பிரமுகர்களும் விலகி வழி விட்டனர்.

     ஜில்லா கலெக்டர், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், டிஸ்ட்ரிக் ஜட்ஜ் எல்லாரும் நன்றாக விடிந்த பின் ஏழு ஏழரை மணிக்கு வந்து துக்கம் விசாரித்தார்கள். “இந்தச் சினிமா ஸ்டார்ஸுங்க கொஞ்சம் பேர் மெட்ராஸ்லேருந்து வந்திருக்காங்க. தயவு செய்து பிரேத ஊர்வலத்திலே அவங்க நடந்தோ காரிலோ பின்னால் வரவேண்டாம்னு நீங்களே கண்டிச்சுச் சொல்லிடுங்க மிஸ்டர் தனசேகரன்! அவங்க வேணும்னா ஃப்யூனரல் புரொஸஷன் புறப்படறத்துக்கு முன்னாடியே அவங்க தகன கட்டடத்துக்குக் கார்லே போயிடட்டும். அவங்கள்ளாம் புரொஸஷன்ல வந்தா கூட்டம் கண்ட்ரோல் பண்ண முடியாமல் போயிடும். அப்புறம், போலீஸ் அரேன்ஜ்மெண்ட் சரியில்லேன்னு நீங்க என்னைக் குறை சொல்லப்பிடாது” என்று சர்க்கிள் தனசேகரனிடம் வந்து வேண்டிக் கொண்டார்.

     “நீங்க கவலைப்படாதீங்க! நான் பார்த்துக்கறேன். ஸினி ஸ்டார்ஸ் யாரும் ஃப்யூனரல் புரொஸஷன்லே வரக்கூடாதுன்னு சொல்லி நானே தடுத்திடறேன். அவர்கள்ளாம் முன்னாலேயே தகன கட்டடத்துக்குப் போயிடட்டும்” என்று மாமா தங்கபாண்டியன் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்குத் தனசேகரன் சார்பில் உத்திரவாதம் அளித்தார்.

     அடுத்துப் பேரன்மார்கள் என்று சொல்லிக் கொண்டவர்களின் நெய்ப்பந்தம் பிடிக்கும் பிரச்னை மீண்டும் பூதாகரமாக உருவெடுத்தது.

     “அதெல்லாம் முடியாது! நிஜமாகவே அவருக்கு நெய்ப்பந்தம் பிடிக்கணும்னாத் தனசேகரனுக்குக் கலியாணமாகிப் பையன்கள் இருந்தால் தான் சாத்தியம். தனசேகரனுக்கு இன்னும் கலியாணமாகலே. அதுனாலே நெய்ப்பந்தம் பிடிக்கிறதுக்குப் பாத்தியதை உள்ள அசல் வாரிசு யாரும் இப்போ கிடையாது” என்று மாமாவே உரத்த குரலில் முரட்டடியாக அடித்துப் பேசி அந்தப் பிரச்னையையும் உடனே தீர்த்து வைத்தார்.

     மீசை, தலைமுடி எல்லாம் தும்பைப் பூவாக வெளுத்த எண்பது வயதுக் கிழவர் ஒருத்தர், “அரண்மனைப் பரியாறி வந்தாச்சா? தனசேகரனை மொட்டை போட்டுக்கிட்டு வரச் சொல்லுங்க. பிரேதத்தைக் குளுப்பாட்ட முறைப்படி அரண்மனை வசந்த மண்டபத்துக் குளத்திலே தான் தண்ணி எடுக்கணும். தண்ணி எடுக்கப் போறதுக்கு முன்னாடியே மொட்டை போட்டாயிடணும்” என்று கர்ம சிரத்தையாக முன் வந்து வற்புறுத்திச் சொன்னார்.

     மாமா தங்கபாண்டியனுக்கு அந்த நரைத்த தலைக் கிழவர் மேல் கோபம் கோபமாக வந்தது. கருகருவென்று சுருள் சுருளாகக் கர்லிங் விழுந்திருந்த தனசேகரனின் அந்த அழகிய கிராப்புத் தலையையும் நரைத்த தலைக் கிழவரையும் மாறி மாறிப் பார்த்தார் மாமா. தனசேகரன் மேல் மிகவும் அனுதாபமாக இருந்தது மாமாவுக்கு.

     “இந்தக் காலத்துப் புள்ளைங்களை ரொம்பத்தான் சோதனை பண்ணாதீங்க பாட்டையா! கொஞ்சம், காலத்தை அனுசரிச்சு வழக்கங்களை விட்டுக் கொடுங்க. பாவம்! தனசேகரன் ‘பிரில் கிரீம்’ போட்டு ரொம்ப அழகா முடி வளர்த்திருக்கான். ஒரே நிமிஷத்திலே அதைத் தொலைச்சுடப் பார்க்கிறீர்களே?” என்று தனசேகரன் சார்பில் அந்தக் கிழவரிடம் தானே அப்பீல் செய்து பார்த்தார் மாமா. ஆனால் கிழவர் படு பிடிவாதக்காரராக இருந்தார். “அதெப்படி விட்டுட முடியும்? முறையின்னு ஒண்ணு இருக்கறப்ப நமக்குத் தோணுனபடியா செய்யிறது?” என்று மீண்டும் வற்புறுத்தினார் கிழவர். அந்த நிலையில் தன் பொருட்டு ஒரு வீணான சர்ச்சை அங்கே எழுவதை விரும்பாத தனசேகரன், “எது முறையோ அப்படியே நடக்கட்டும். நான் மொட்டை போட்டுக்கத் தயார். ஆளைக் கூப்பிடுங்க” என்றான். அந்தச் சமயத்திலே பெரிய கருப்பன் சேர்வை அவசர அவசரமாக மாமா தங்கப்பாண்டியனைத் தேடிக் கொண்டு வந்தார்.

     “உங்க கிட்டத் தனியா ஒரு விஷயம் கன்ஸல்ட் பண்ணணுமே?”

     “என்ன? இப்படி இங்கே வந்துதான் சொல்லுங்களேன்” என்று காரியஸ்தரை அங்கிருந்த ஒரு தூண் மறைவுக்குத் தனியா அழைத்துக் கொண்டு சென்றார் மாமா.

     “பகல் சாப்பாடு எத்தினி பேருக்கு ஏற்பாடு செய்யணும்? இன்னிக்கிப் பகல் ரெண்டு மணிவரை உள் கோட்டையிலே அரண்மனைக்குள்ளார அடுப்பு எதுவும் புகையப்பிடாது. வெளிக் கோட்டையிலே வடக்கு ராஜ வீதியிலே சிவன் கோவிலுக்குப் பக்கத்திலே இருக்கிற தேவார மடத்திலே சமைக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணித் தவசிப் பிள்ளைங்களை உடனே அணுப்பணும், சொல்லுங்க.”

     “என்ன சேர்வைக்காரரே! இதெல்லாமா எங்கிட்டக் கேட்கணும், சமையலுக்குச் சொல்ல வேண்டியதுதானே?”

     “எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியலே. கூட்டத்தைப் பார்த்தாப் பயமாயிருக்கு. எரியூட்டு முடிஞ்சதும் நாலாயிரம் ஐயாயிரம் பேர் அப்படியே சாப்பாட்டுக்கு நுழைஞ்சிட்டாங்கன்னா அரண்மனைக் களஞ்சியத்தை பூரா திறந்து விட்டாலும் பத்தாது. அதான் என்ன செய்யறதுன்னு உங்ககிட்ட யோசனை கேட்க வந்தேன்.”

     “இதிலே என்ன யோசனை வேண்டிக் கிடக்கு? சாப்பாட்டு விஷயத்திலே போயிக் கஞ்சத்தனம் எதுக்கு? இன்னும் வேணும்னாக் கொஞ்சம் பணம் தர்றேன், வந்தவங்க யாரும் எரியூட்டு முடிஞ்சதும் வயிற்றுப் பசியோட திரும்பப்பிடாதுங்கறது தான்முக்கியம்.”

     “இப்போ நீங்க சொல்லிட்டீங்க. இனிமே எனக்குக் கவலை இல்லை, ஏற்பாடு பண்ணிடுவேன். உங்ககிட்ட ஒரு வார்த்தை வந்துடக் கூடாதுங்கிறதுதான் என் பயம்.”

     “இதிலே என்ன பயம்? பார்த்து ஏற்பாடு பண்ணுங்க! திங்கிற சோத்துலே போயிக் கணக்குப் பார்த்துக்கிட்டு...?”

     பெரிய கருப்பன் சேர்வை புறப்பட்டுப் போனார். அரண்மனைப் புரோகிதர் தம் சகாக்களுடன் வந்து ஏதேதோ ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். தனசேகரன் உறவினர்கள் பின் தொடர மொட்டையடித்துக் கொள்ளப் போனான். கொள்ளிச் சட்டியை வைத்துத் தூக்கிக் கொண்டு போக ‘உறி’ போல ஒன்று கயிறுகளாலும் மூங்கில் சட்டங்களாலும் கட்டிக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தது. கீழே மரத்தடியில் மகாராஜாவின் அந்திம யாத்திரைக்காகப் ‘பூச்சப்பரம்’ ஒன்றை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.

     “என்னப்பாது...? கொள்ளிச் சட்டியைக் கையிலே தூக்கிட்டுப் போறதுதானே மொறை! மைனர்ப் பையங்க சின்னஞ்சிறுசுகள் தூக்க முடியாதுன்னுதான் உறி கட்டுவாங்க. வயசானவங்க தூக்கிக்கிட்டுப் போறதுக்கு எதுக்கு உறி” என்று மீண்டும் அந்த நரைத்த தலைக் கிழவர் தொணதொணக்க ஆரம்பித்தார். சமயாசமயங்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்த வயதானவர்கள் எப்படிப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்து கழுத்தறுப்பார்களோ அப்படிக் கழுத்தறுத்துக் கோண்டிருந்தார் அந்தக் கிழவர். அவரைச் சமாளிக்க மாமாவுக்கு ஒரே வழிதான் புலப்பட்டது. மாமா தங்கபாண்டியன் அந்தக் கிழவருக்குப் பக்கத்திலே போய் உட்கார்ந்து அங்கு நடந்து கொண்டிருந்தவற்றிலிருந்து அவருடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக வேறு பழைய கால விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார். தங்கபாண்டியனின் உபாயம் பலித்தது. கிழவர் சுலபமாகத் தங்கபாண்டியனிடம் சிக்கிக் கொண்டார். சமஸ்தானத்தின் பழைய நவராத்திரி விழாவைப் பற்றியும் ஒன்பது நாட்களும் ஊர் ஜனங்களுக்கு அரண்மனையில் வடை, பாயாசத்தோடு சாப்பாடு போட்டதைப் பற்றியும் கிழவரிடம் விவரமாக விசாரித்துக் கேட்கத் தொடங்கி அவருடைய கவனத்தை எதிரே நடந்து கொண்டிருந்தவற்றின் மேல் சொல்லவிடாமல் தடுத்து விட்டார் மாமா. இல்லாவிட்டால் அந்தக் கிழவர் அப்போது விடாமல் எதையாவது தொணதொணவென்று சொல்லிக் கொண்டிருப்பார் போலத் தோன்றியது. மகாராஜாவின் பிரேதத்தைச் சுற்றிக் குவிந்துவிட்ட மாலைகளையும் மலர்வளையங்களையும் அந்தக் கூடத்தின் வராந்தாவில் இரண்டு பெரிய அம்பாரங்களாகக் கொண்டு போய் அள்ளிக் கொட்டியிருந்தார்கள்.

     தனசேகரனைப் பின்பற்றி அரண்மனையைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் மொட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மழுங்கச் சிரைத்த மொட்டைத் தலையோடு தனசேகரனை எதிரே பார்த்த போது மாமாவுக்கே முதலில் அடையாளம் புரிவது சிரமமாக இருந்தது. கருகருவென்று சுருண்ட அழகிய கிராப்புத் தலையோடு கூடிய தனசேகரனின் முகம் தான் அவருக்குப் பரிச்சயமாகியிருந்த முகம். இந்தப் புதுமொட்டைத் தலை முகம் உடனே அடையாளம் தெரிந்து மனத்தில் பதியச் சில விநாடிகள் பிடித்தன.

     மகாராஜாவின் பிரேதத்தைப் பூச்சப்பரத்தில் எடுத்து வைக்கும் போது காலை எட்டே கால் மணி. முன்பு ஒரு காலத்தில் அரண்மனைப் பாண்டு வாத்திய கோஷ்டி என்ற பெயரில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்து விட்டு அப்புறம் வெளியே தனியாகக் கல்யாண ஊர்வலங்களை நம்பிக் கடை வைத்து விட்ட ஒரு பாண்டு வாத்திய கோஷ்டிக்காரன் சோக கீதங்களை இசைத்துக் கொண்டிருந்தான். அதிர் வேட்டுக்கள் போடுவோர், தாரை தப்பட்டை வாத்தியக்காரர்கள், புலி வேஷக்காரர்கள் எல்லோரும் மகாராஜாவின் அந்திம ஊர்வலத்தில் குறைவின்றி இருந்தார்கள்.

     வெளிக் கோட்டையில் நாலு ராஜ வீதியிலும் தெருக் கொள்ளாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. வீடுகள், திண்ணைகள், மாடி, பால்கனிகள், மொட்டை மாடிகள், தெருவிலிருந்த மரக்கிளைகள் எல்லாவற்றிலும் ஜனக் கூட்டம் நெரிசல்பட்டுப் பிதுங்கி வழிந்தது. பிரேதத்துக்குப் பின்னால் பூக்களையும் காசுகளையும், வாரி இறைத்துக் கொண்டு வந்ததால் இறைக்கப்பட்ட காசுகளைப் பொறுக்குவதற்காக வேறு கூட்டம் முண்டியடித்தது. தனசேகரன் சிறிது நேரம் கொள்ளிச் சட்டியோடு பூச்சப்பரத்துக்குப் பின்னால் நடந்து பார்த்தான். கூட்டத்தின் நெரிசலில் அவனையும் கொள்ளிச் சட்டியையும் கீழே தள்ளிவிடுவார்கள் போலிருந்தது. முன்னால் திறந்த ஜீப்பில் அரண்மனைக் காரியஸ்தரோடு நின்றவாறே ஏற்பாடுகளைக் கவனித்தபடி வழி விலகிச் சென்று கொண்டிருந்த மாமா தனசேகரன் கூட்டத்தில் சிக்கித் தள்ளாடித் திணறுவதைக் கவனித்து விட்டார். வேறு வழியில்லாததால் ஜீப்பை நிறுத்தித் தனசேகரனையும் அதிலேயே ஏற்றி நிற்கச் செய்துவிட்டார் அவர். கொள்ளிச் சட்டியைத் தாங்கிய உறியைப் பிடித்துக் கொண்டு தனசேகரனும் ஜீப்பிலேயே நின்று கொண்டு பூச்சப்பரத்துக்கு முன்னால் சென்றான்.

     அந்த அந்திம ஊர்வலம் அரச குடும்பத்து மயானத்துக்குப் போய்ச் சேரும் போது பகல் பன்னிரெண்டே கால் மணி ஆகிவிட்டிருந்தது. இளைய ராணிகள் என்ற பெயரில் அந்தப்புரத்தில் அடைந்து கிடந்தவர்களில் பலர் ஏற்கெனவே திருட்டு வேலைகளில் இறங்கியிருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருந்ததினால் அந்திம ஊர்வலம் புறப்படுவதற்கு முன்னர் மாமாவும் காரியஸ்தரும் அரண்மனையில் காவல் ஏற்பாடுகளைச் சரியான முறையில் செய்து விட்டே புறப்பட்டிருந்தனர்.

     மயானத்துக் காரியங்கள் ஒரு மணிக்குள் முடிந்து விட்டன. உறவினர்களும், அரண்மனை முக்கியஸ்தர்களும் நீராடித் தலை முழுகிய பின் தேவார மடத்துக்குச் சாப்பிட வந்தார்கள். கோமளீஸ்வரனும் இன்னும் யாரோ நாலைந்து சினிமா ஆசாமிகளும் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை வழிமறித்து, “என்ன ஏற்பாடுன்னு பண்ணினீங்க? காலையிலே ஸ்டாருங்களுக்கு ஒரு காபி கொடுக்கக் கூட ஆளு இல்லே. ராஜா இருந்தப்பக் கலைஞர்கள்னா உயிரை விடுவாரு. நீங்க என்னடான்னா...” என்று ஏதோ இரைந்து கொண்டிருந்தார்கள். அதைப் பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த மாமா தங்கபாண்டியன் பொறுமையை இழந்து ஆத்திரமடைந்தார்.

     “இந்தாய்யா கோமளீஸ்வரன்! அவரிட்ட ஏனய்யா சத்தம் போடறே? உன்னையும் உன் ஸ்டார்சுங்களையும் கவனிக்கிறதைத் தவிர, இங்கே அரண்மனையிலே அவங்களுக்கு வேற வேலையே கிடையாதுன்னு நினைச்சியா? இது எழவு வீடுன்னு நினைச்சியா? அல்லது உங்களை எல்லாம் கவனிச்சு விருந்துபசாரம் பண்றதுக்குக் கலியாண வீடுன்னு நினைச்சுக்கிட்டியா?” என்று மாமா தங்க பாண்டியன் கூப்பாடு போட்ட பின்புதான் டைரக்டர் கோமளீஸ்வரன் ஓய்ந்தான். அடுத்து உள்ளூர்ப் பத்திரிகை நிருபர்கள் நாலைந்து பேர் தனசேகரனைச் சூழ்ந்து கொண்டு அரண்மனையின் எதிர்காலம், மகாராஜாவின் உயில் பற்றி எல்லாம் ஏதேதோ கேள்விகளைக் கேட்டுத் துளைத்தார்கள். தனசேகரன் சுருக்கமாகவும், அடக்கமாகவும் பதில்களைச் சொன்னான்.

     “நீங்கள் இனிமேல் தொடர்ந்து இங்கே பீமநாதபுரத்தில் இருப்பதாக உத்தேசமா அல்லது மறுபடியும் உங்கள் மாமாவோடு மலேசியாவுக்கே புறப்பட்டுப் போய் விடுவீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, “இன்னும் அது பற்றி எல்லாம் முடிவு எதுவும் செய்யவில்லை” என்று தனசேகரனிடமிருந்து பதில் கிடைத்தது.

     “உங்கள் தகப்பனார் தொடங்கிய சினிமாப் புரொடக்‌ஷன் கம்பெனியைத் தொடர்ந்து நடத்துவீர்களா?” என்று சினிமாவில் அதிக அக்கறையுள்ள ஒரு நிருபர் மெல்லச் சிரித்துக் கொண்டே கேட்டதற்குத் தனசேகரன் பதில் சொல்வதற்கு முன்பே மாமா தங்கபாண்டியன் குறுக்கிட்டு, “என்னப்பா விவரம் தெரியாத ஆளுகளா இருக்கீங்க? எந்த நேரத்தில் எதைக் கேட்கறதுன்னு தெரியலியே? அவரு காலையிலேருந்து பட்டினி. அலைச்சல் வேறே. இப்பப் போயி உசிரை எடுக்காதீங்கப்பா” என்று அந்த நிருபர்கள் கூட்டத்தை மெதுவாகக் கத்தரித்து விட்டார். “நீ வா தம்பீ! முதல்லே ஜீப்பிலே ஏறி உட்காரு. போகலாம். இங்கே நின்னுக்கிட்டிருந்தா இப்பிடியே யாராவது வந்து ஏதாவது கேட்டுக்கிட்டே இருப்பாங்க” என்று உடனே தனசேகரனை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்படச் செய்யவும் தயாரானார். நிருபர்கள் அப்போதும் விடவில்லை. “ப்ளீஸ்... அப்படியே உங்க மாமாவோட கொஞ்சம் நில்லுங்க. ஒரே ஒரு படம் எடுக்கிறோம்” என்று புகைப்படம் பிடித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.

     “நீங்கள்ளாம் நட்சத்திரேயனோட அவதாரம்பா” என்றார் தங்கபாண்டியன்.

     “தங்கள் பெண்ணை இளையராஜாவுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக ஒரு வதந்தி அடிபடுகிறதே?”

     “அட சரிதான் போய்யா. அடியும்படலே. உதையும் படலே. கலியாணப் பத்திரிகையிலே போட வேண்டியதை எல்லாம் நியூஸ் பேப்பரிலே போடறேன்னா எப்படிப்பா?”

     பத்திரிகை நிருபர்கள் சிரித்துக் கொண்டே போய் விட்டார்கள். அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையையும், வேறு இரண்டொரு முக்கியஸ்தர்களையும் ஏற்றிக் கொண்ட பின் ஜீப் அரண்மனைக்குப் புறப்பட்டது.

     “தம்பீ! வசந்த மண்டபத்திலே போய்க் குளிச்சு உடை மாத்திக்கிட்டு அங்கேயே சாப்பாட்டைக் கொண்டாரச் சொல்லிடட்டுமா? இல்லாட்டி நாமளும் தேவார மடத்திலேயே போய்ச் சாப்பாட்டை முடிச்சிட்டு வந்திரலாமா?”

     “நாம இங்கே வசந்த மண்டபத்திலே நாலு அஞ்சு பேருக்குச் சாப்பாடு மாத்தியாறச் சொன்னா அங்கே அரண்மனையிலே யாராவது நாற்பது பேருக்கு மாத்திக்கிட்டு வரச் சொல்லுவாங்க. வீணா ஆளுங்க அங்கேயும் இங்கேயுமா அலைய வேண்டியிருக்கும். தேவார மடத்துலே போயே ஒரு மூலையில் உட்கார்ந்து நாமும் ஒருவாய் சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டு வந்துடலாம் மாமா” என்றான் தனசேகரன். மாமாவும் சம்மதித்தார்.

     ஜீப் வசந்த மண்டபத்து விருந்தினர் மாளிகை வாயிலில் போய் நின்றதுமே தனசேகரனும் மாமாவும் உள்ளே போய் நீராடச் சென்றார்கள். “எனக்குப் பச்சைத் தண்ணி ஒத்துக்காது. நா கூட வீட்டுக்குப் போயி வெந்நீரிலே தலைமுழுகிட்டு வந்துடறேங்க” என்றார் காரியஸ்தர்.

     “எங்கே பார்த்தாலும் ஒரே ஜனநெரிசலா இருக்கு. ஜீப்பிலேயே போயிட்டு வந்திடுங்க” என்று மாமா காரியஸ்தரை ஜீப்பிலே போகச் சொல்லி வற்புறுத்தினார்.

     “இல்லீங்க. நான் நடந்தே போயிட்டு வந்துடறேன்” என்று மறுபடியும் தயங்கிய காரியஸ்தரை, “அது முடியிற காரியமில்லே. நான் சொல்றபடி கேளுங்க. ஜீப்பிலேயே போயிட்டு வாங்க” என்று கண்டித்துச் சொல்லி ஜீப்பில் அனுப்பி வைத்தார் தங்கபாண்டியன்.

     அன்று மாலை ஐந்து ஐந்தரை மணி வரை தேவார மடத்தில் சாப்பாட்டுப் பந்திகள் ஓயவில்லை. அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் நிறைய வந்திருந்தார்கள். காரியஸ்தர் அவ்வளவு பேருக்கும் சாப்பாடு போட விரும்பவில்லை. அப்போது அந்த சமஸ்தானம் இருந்த பொருளாதார வறட்சி நிலையில் அது கட்டாது என்ற பயம் தான் காரணம். “சாப்பாட்டிலே போய்க் கணக்குப் பார்க்க வேண்டாம்” என்று தங்கபாண்டியன் சொல்லியதால் தான் “நமக்கென்ன வந்தது” என்று சற்றே தாராளமாக விட்டிருந்தார் காரியஸ்தர்.

     அன்று பிற்பகலில் மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் இரண்டு மூன்று மணி நேரம் அயர்ந்து தூங்கினார்கள். மறுபடி அவர்கள் கண் விழித்த போது ஆறு மணி. காபியருந்தி விட்டுக் காரியஸ்தரைக் கூப்பிட்டு அனுப்பினார்கள் அவர்கள்.

     காரியஸ்தர் வரும்போது அவரோடு டைரக்டர் கோமளீஸ்வரனும் வரவே மாமாவுக்கும் தனசேகரனுக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆத்திரமே மூண்டது.

     “இந்தப் பயல் கோமளீஸ்வரன் ஏன் ஒட்ட வச்ச வால் கணக்கா இன்னும் விடாமே சுத்திக்கிட்டிருக்கான்? இவன் ஏன் இன்னும் ஊருக்குத் திரும்பிப் போகலே? இங்கே இவனுக்கு என்னா வச்சிருக்கு?”

     “அதுதான் எனக்கும் புரிய மாட்டேங்குது மாமா?”

     நல்ல வேளையாக அப்போது காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையே அவர்கள் மனநிலை புரிந்தோ என்னவோ கோமளீஸ்வரனை வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டுத் தான் மட்டும் தனியாக உள்ளே வந்தார்.

     “உட்காருங்க மிஸ்டர் பெரிய கருப்பன் சேர்வை! உங்ககிட்ட நானும் தம்பியும் கொஞ்சம் தனியாப் பேசறத்துக்காகத்தான் இப்போ கூப்பிட்டோம்.”

     பெரிய கருப்பன் சேர்வை எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். மாமா தங்கபாண்டியனும், தனசேகரனும் என்ன சொல்லப் போகிறார்களோ என்று அவர்கள் இருவர் முகத்தையுமே மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். முதலில் தனசேகரன் தான் பேசினான்:-

     “சமஸ்தானச் சொத்துக்கள் - கடன்கள் எல்லாத்துக்கும் கம்ப்ளீட்டா அஸெட்ஸ் அண்ட் லயபிலிட்டீஸ் ஒண்ணு தயார்ப் பண்ணியாகணும். அரண்மனை அந்தப்புரத்திலே இளையராணீங்கன்னும் அவங்களோட வம்சாவளீன்னும் அடைஞ்சு கிடக்கிறாங்களே அதுக்கும் ஒரு லிஸ்ட் வேணும். இப்போ அரண்மனையிலே ஆற செலவு அயிட்டங்களைப் பத்தியும் உத்தியோகம் பார்க்கிறவங்களைப் பத்தியும் கூட விவரம் வேணும்” தனசேகரன் இப்படிச் சொல்லியதும் பெரிய கருப்பன் சேர்வை,

     “ரெண்டு நாள் டயம் குடுங்க, எல்லாம் விவரமாத் தயார்ப் பண்ணித் தந்துடறேன். அதோட இன்னொரு விஷயம். இளையராணிங்க லிஸ்டிலே மெட்ராஸ்ல இருந்து வந்திருக்காங்களே அந்த சினிமா நட்சத்திரம் ஜெய நளினியைக் கூடச் சேர்த்துக்கணும் போலிருக்கே? அந்த நட்சத்திரத்துப் பேருக்கு ‘உயில்’ ஏதாச்சும் இருக்கான்னு நச்சரிச்சுக் காலைலேருந்து என் உயிரை எடுத்துக்கிட்டிருக்கான் இந்தக் கோமளீஸ்வரன். அவன் தான் இந்த நட்சத்திரத்தைப் பெரிய மகாராஜாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சானாம். அதுக்கப்புறம் திருத்தணிக் கோயில்லியோ எங்கேயோ மாலை மாத்தி அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் கூடப் பண்ணிக்கிட்டாங்களாம். அந்தப் போட்டோ கூட அவன் கிட்டே இருக்காம்” என்றார் பெரிய கருப்பன் சேர்வை.

     “இதென்ன? சுத்த பிளாக் மெயிலா இருக்கே?” என்று மாமா இரைந்தார்.

     “என்ன கண்றாவியோ? இந்தக் கோமளீஸ்வரனும் இவனோட வந்த சினிமா ஆட்களும் அந்த ஜெய நளினியும் ஒரு முழு கஸ்ட் ஹவுஸ் நிறைய அடைஞ்சுக்கிட்டுத் தொந்தரவு பண்றாங்க. அவங்களை எப்படி வெளியே அனுப்பறதுன்னே தெரியலே?” என்றார் காரியஸ்தர். தனசேகரன் கேட்டான்:

     “உண்மையிலேயே அந்தச் சினிமாக்காரி பேருக்கு உயில் ஏதாவது இருக்கா?”

     “உங்க பேருக்குத்தான் உயில் எல்லாம் இருக்கு. வேற எதுவும் இருக்கிறதா எனக்கு ஞாபகம் இல்லே.”

     “முதல்லே அந்தக் கோமளீசுவரனை உள்ளே கூப்பிடுங்க சொல்றேன்.”

     பெரிய கருப்பன் சேர்வை எழுந்து சென்று வெளியே வராந்தாவில் உட்கார்ந்திருந்த கோமளீஸ்வரனை உள்ளே அழைத்து வந்தார். அவனை உட்காரும்படி கூட ச் சொல்லாமல் மிகவும் கண்டிப்பான குரலில் மாமா பேசினார். யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் அங்கே எவளை மையமாக வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்களோ அந்த ஜெய நளினியே திடும் பிரவேசமாக உள்ளே நுழைந்தாள். ஒயிலாக அபிநயம் பிடிப்பது போல் மாமாவுக்கும் தனசேகரனுக்கும், காரியஸ்தருக்கும் தனித்தனியாக வணக்கம் செலுத்தினாள். அழகு கொஞ்சும் அந்த எழில் வடிவத்தைத் தங்களிடையே தோன்றக் கண்டதும் அவர்கள் அனைவருமே சமாளித்துக் கொள்வதற்குச் சில கணங்கள் பிடித்தன. மாமா தங்கபாண்டியன் தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவளிடம் நேருக்கு நேர் கேட்டார்:

     “ஏன்ம்மா? காலமான பெரியராஜா உங்களுக்காக எவ்வளவோ செலவழிச்சிருக்காரு. நீங்களும் அதை மறந்திருக்க மாட்டீங்க. அடையாறிலே அந்தப் பங்களா- அதான் - இப்ப நீங்க இருக்கீங்களே அதை உங்களுக்கு வாங்கி வைக்கணும்கிறதுக்காக அவர் இங்கே ஊர்லே அயனான தஞ்சை நிலங்களைப் பல ஏக்கர் வந்த விலைக்கு அவசர அவசரமாக வித்தாரு. எங்களுக்கெல்லாம் கூட அது பிடிக்கலே. ஆனா இப்போ இன்னமும் நீங்க ஏதோ கிளெய்ம் பண்ற மாதிரிக் கோமளீஸ்வரன் சொல்றானே?”

     “நோ... நோ... அப்படி ஒண்ணுமில்லே. அவரு உயில்லே என் சம்பந்தமா ஏதாவது இருக்கான்னு எனக்குத் தெரியணும். அவ்வளவுதான்...”

     “இருக்கிறதாத் தெரியல. அப்படி இருந்தால் அந்த விவரம் முறைப்படி உங்களுக்கு ‘ரெஜிஸ்தர்’ தபால்லே வந்து சேரும். நீங்க வீணா ஏன் இங்கே வந்து தங்கிக் கஷ்டப்படணும்னு தான் எனக்குப் புரியலே...”

     “எப்படி இருந்தாலும் நாங்க இன்னிக்கிச் சாயங்காலம் கார்லே புறப்படறோம். அதான் உங்க ரெண்டு பேரிட்டவுமே நேர்லே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டாள் அவள்.

     “என்னமோ எங்களையெல்லாம் மறந்துடாதீங்க. மகாராஜா மெட்ராஸ் ‘கேம்ப்’னா நான் இராப்பகலா வீடு வாசலை மறந்து அவரோட சுத்தியிருக்கேன்! என்னையெல்லாம் வெறுங்கையோட அனுப்பறது உங்களுக்கு நல்லா இருந்தாச் சரிதான்” என்று கோமளீஸ்வரன் ஏதோ பணத்துக்கு அடி போட்டான். ஆனால் அதற்குள் ஜெய நளினி அங்கிருந்து வெளியேறிச் சிறிது தொலைவு போய்விட்டாள். மாமாவுக்கு வந்த கோபத்தில் என்ன செய்து விடுவாரோ என்று பயந்தான் தனசேகரன்.

     “ஏம்பா, நீயெல்லாம் மனுஷன் தானா? செத்துப் போனவருக்குத் தரகு கேட்டுக்கிட்டு இப்போ வந்து நிக்கிறியே! நீ செஞ்சிருக்கிற மானக் கேடான காரியங்களாலே இந்தச் சமஸ்தானமே சீரழிஞ்சு போயிருக்கு. இன்னும் உனக்குத் திமிர் அடங்கலியே?”

     விநாடிக்கு விநாடி மாமாவின் குரலில் சூடேறுவதைக் கேட்டுக் கோமளீஸ்வரன் மெதுவாக அந்த இடத்திலிருந்து நழுவி நடிகை ஜெய நளினியைப் பின் தொடர்ந்து சென்றான்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247