-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்




10

     தந்தையின் நாட்குறிப்புக்கள் அடங்கிய டைரிகளைப் படிப்பதற்கு முன் அவற்றைத் தனசேகரன் இரண்டு வகையாகப் பிரித்து வைத்துக் கொண்டான். ராஜமான்யம் ஒழிக்கப்படுவதற்கு முந்திய காலத்து நாட்குறிப்புக்கள் அடங்கிய டைரிகள். ராஜமான்யம் ஒழிக்கப்பட்ட பின் எழுதப்பட்ட நாட்குறிப்புகள் அடங்கிய டைரிகள் என்று அவற்றைப் பகுத்துக் கொண்டால் தான் நிலைமைகளைக் கண்டறிய ஏற்றபடி இருக்கும் என்று அவன் மனத்தில் பட்டது. ராஜமான்யம் கிடைத்தவரை சமஸ்தானத்தில் அவ்வளவு பணக்கஷ்டம் இருந்திருக்க முடியாது. வரவு செலவுகளில் அதிகமான குழப்பமும் இருந்திருக்காது. பணத்தட்டுப்பாடு வந்த பின்னால்தான் இந்த வரவு செலவுச் சிக்கல்கள் எல்லாம் வந்திருக்க வேண்டும் என்று கூடத் தோன்றியது.

     அந்நியர்களான பிரிட்டிஷ்காரர்களின் தொடர்பும் பிரிட்டிஷ் நாகரீகத்தை இமிடேட் செய்வதும் பெருமையாகக் கருதப்பட்டு வந்த தலைமுறையைச் சேர்ந்தவராகையினால் அரைகுறையாக ஆங்கிலம் தெரிந்திருந்தும் தன் டைரிகளை எல்லாம் தப்புத் தப்பான ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தார் தந்தை. அந்த அரைகுறை ஆங்கிலத்தைப் பார்த்துத் தனசேகரன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். வெள்ளைக்காரர்கள் செய்ததை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இமிடேட் செய்த இந்திய சமஸ்தானாதிபதிகள் தாங்கள் அந்நியர்களிடம் இருந்து இமிடேட் செய்பவை எல்லாம், இந்தியச் சூழ்நிலைக்கு, எந்த அளவு ஏற்கும், எந்த அளவு ஏற்காது, என்றெல்லாம் கூடச் சிந்தித்துப் பார்க்கவில்லை. வெள்ளைக்காரர்கள் செய்பவை எல்லாமே பெருமைக்குரியவையாகத்தான் இருக்கவேண்டும் என்று குருட்டுத்தனமாக எண்ணுகிற மனப்பான்மைதான் அன்று எல்லா இந்திய ராஜாக்களையும் பிடித்திருந்தது. அடிமைத்தனம் என்பது கேவலமாகவும், வெட்கப்படுவதற்குரியதாகவும் கருதப்படுவதற்குப் பதில் ஒரு கெளரவமாகவும், நாகரீகமாகவுமே கருதிப்பட்டு அநுசரிக்கப்பட்ட காலத்தைப் பற்றிய நாட் குறிப்புக்களைத் தான் அப்போது தான் புரட்டிக் கொண்டிருப்பதாகத் தனசேகரனுக்குத் தோன்றியது. தன் தந்தை மட்டுமல்ல: எல்லா இந்திய மன்னர்களும் சமஸ்தானாதிபதிகளுமே அந்தக் காலகட்டத்தில் அப்படித்தான் அந்நிய அடிவருடிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது தனகேகரனுக்குத் தெளிவாகப் புரிந்தது. பீமநாதபுரத்தின் கலாசாரப் பெருமையை இந்த ஆங்கில அடிமை மனப்பான்மை அதிகம் பாதித்து விடவில்லை, என்றாலும் தன்மானத்தை நிறையப் பாதித்திருந்தது. தன் தந்தையைப் பற்றியும் அவருடைய குணங்களைப் பற்றியும், இனிமேல் புதிதாகத் தெரிந்து கொண்டு. ஆகவேண்டியது எதுவும் இல்லை என்றாலும் அவருடைய டைரிகளைப் படிக்கத் தொடங்கிய பின்னர் தனசேகரனுக்கு அவர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் மேலும் மேலும் குறைந்து கொண்டே வந்தது. டைரிகளில் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விஷயங்களையும் எழுதி வைத்திருந்தார் அவர். ஒரு தந்தையைப் பற்றி மகன் தெரிந்து கொள்ள அவசியமில்லாத - தெரிந்து கொள்ளக்கூடாத - தெரிந்து கொள்ள வேண்டாத பல விஷயங்கள் கூட அந்த நாட்குறிப்புக்களில் இருந்தன. நாட் குறிப்புக்களைப் படிக்கப் படிக்கத் தாயின் மேல் அதிக மரியாதையும் தந்தையின் மேல் படிப்படியாக வெறுப்பும் அவனுள்ளே வளர்ந்தன.

     தன் தாயின் சகோதரரும் தன் மாமனுமாகிய தங்க பாண்டியன் அந்த டைரிகளைப் படிக்காதது கூட ஒரு வகையில் நல்லதாய்ப் போயிற்று என்று தனக்குத் தானே இப்போது நினைத்துக் கொண்டான் தனசேகரன்.

     பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் பீமநாதபுரம் சமஸ்தானத்தில் அடிக்கடி வெள்ளைக்கார கவர்னர்களுக்கும். அதிகாரிகளுக்கும் பிரமுகர்களுக்கும் விருந்துபசாரங்கள் நடப்பது என்பது சர்வசகஜம். தனசேகரன் அவைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சமஸ்தானத்துப் புலவர்கள் பாடியிருந்த பழங்காலத் தனிப் பாடல்கள் பலவற்றைப் புரட்டினால்கூட அவர்கள் தமிழே தெரியாத எல்லிசுத் துரை மேலும் ஆல்பர்ட்டுத் துரை மீதும் ஜான்சன் துரை மீதும், வெண்பாக்களையும் விருத்தங்களையும் பாடிப் புகழ்ந்து தள்ளியிருந்தார்கள். அவற்றில் சிலவற்றைப் பற்றி நினைத்தால் தனசேகரனுக்கு இப்போது கூடச் சிரிப்பு வந்துவிடும். எல்லீசுத்துரை மீதும் ஆல்பர்ட்டுத் துரை மீதும் மயங்கிய தமிழ்ப் பெண்கள் வசமிழந்து நிலைகுலைந்து போய் மானையும், மயிலையும், கிளியையும், குயிலையும் அந்தத் துரைகளிடம் தூதுசெல்வதற்கு அனுப்புவதாக எல்லாம் கூடப் பாடித் தள்ளி இருந்தார்கள். தமிழ்ப் பெண்கள் உண்மையில் அப்படி எல்லாம் நினைத்தார்களோ இல்லையோ, தமிழ்ப் பெண்களை வெள்ளைக்காரத் துரைகளோடு சம்பந்தப்படுத்திப் புலவர்கள் இப்படி எல்லாம் எண்ணித் தங்களையும் தங்கள் எஜமானர்களாகிய சமஸ்தானாதிபதிகளையும், அவர்களின் அபிமானத்துக்குரிய வெள்ளைக்கார விருந்தினர்களையும் திருப்திபடுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. அந்தக் காலக்கட்டத்து டைரிகளைப் படித்துக் கொண்டு வந்த போது தந்தை எழுதியிருந்த சில குறிப்புக்கள் தனசேகரனுடைய மனத்தைப் பெரிதும் புண்படுத்தின.

     வெள்ளைக்கார கவர்னர் ஒருவன் தன் மனைவியோடு, ஒய்வெடுப்பதற்காகவும், பீமநாதபுரம் சமஸ்தானத்தைச் சுற்றி இருந்த காடுகளில் வேட்டையாடுவதற்காகவும் ஒரு வாரகாலம் சமஸ்தானத்தில் வந்து கெளரவ விருந்தினனாக தங்கி இருந்த காலத்தில் அந்த நாட்குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன. பொதுவாக எழுத்தில் வடிப்பதற்குக் கூச வேண்டிய அந்த விஷயத்தைத் தன் தந்தை எப்படி மனம் அருவருப்பு அடையாமல், கைகூசாமல் எழுதினார் என்பதே தனசேகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எதன் காரணமாகத் தொடக்க முதலே தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது இப்போது தனசேகரனுக்கு ஒரளவு புரியத் தொடங்கியது.

     பழைய நாட்குறிப்பில் தந்தை பின்வருமாறு எழுதியிருந்தார்:

     ‘ஏற்கெனவே கடித மூலமாக அறிவித்திருந்தபடி எல்லிசுத்துரை தன் அழகிய இளம் மனைவியோடு பீமநாதபுரம் வந்து முகாம் செய்து விட்டான். அவனையும் அவன் மனைவியையும் நன்றாக உபசரிக்க வேண்டும்; அவர்களை முறைப்படி உபசரிப்பதற்கு என் மனைவியும் பட்டத்து ராணியுமாகிய வடிவு பெரிய இடையூறாக இருக்கிறாள். வட இந்திய சமஸ்தானாதிபதிகளில் சிலர் செய்திருப்பது போல் லண்டனில் இரண்டு மாதம் தங்கி யாராவது ஒரு வெள்ளைக்காரக் குட்டியை நானும் கூட இழுத்துக் கொண்டு வந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் போலி ருக்கிறது. இங்கே சமஸ்தானத்தின் பட்டத்து ராணி என்ற பெயரில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிற பத்தாம் பசலிக்கு ஓர் இழவும் தெரியவில்லை. துரைக்கும் துரைச்சாணிக்கும் முன்னால் இந்த நாட்டுப் புறத்துக் கட்டையை வைத்துக் கொண்டு நான் வீணே தலைகுனிய வேண்டியிருக்கிறது. இவளுக்கு அவர்களோடு ஒரு வார்த்தை அரை வார்த்தை பேசுவதற்குக் கூட இங்கிலீஷ் அறவே தெரியவில்லை. டேபிள் மேனர்ஸ் பூஜ்யம். துரை ஆசையோடு அருகே வந்து கை குலுக்குவதற்குக் கையை நீட்டினால் பயந்து கூசி நடுநடுங்கிக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு பத்தடி பின் வாங்கி நடந்து சென்று கைகூப்புகிறாள் இவள். துரையின் மனைவி என்னோடு கைகுலுக்கிவிட்டு என் பக்கத்தில் அமர்ந்து குஷாலாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது இவள் பதிலுக்குத் துரையின் பக்கத்தில் அமர்ந்து அப்படிப் பேசிக் கொண்டிருந்தால்தான் நன்றாகவும், மரியாதையாகவும், முறையாகவும் இருக்கும். இவளோ படிதாண்டாப் பத்தினியாக நடந்து கொள்கிறாள். எல்லாரும் குடித்துக் கொண்டிருக்கும்போது இவள் சும்மா உட்கார்ந்து கொண்டிருக் கிறாள். விஸ்கி வாடையே இவளுக்கு ஆவதில்லை. சரி! விஸ்கி தான் வேண்டாம், தொலையட்டும். ஒரு மரியாதைக்கு ‘டோஸ்ட்’ சொல்லி ‘சீர்ஸ்’ கூறிக் கொண்டு கிளாஸ்களை நெருக்கிப் பிடிக்கும் போது கூடப் பிடிப்பதற்காக ஒரு கிளாசில் கொஞ்சம் பீரையோ, ஒயினையோ ஊற்றிக் கொண்டு உட்காரச் சொன்னால் கூட அதற்கும் மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறாள். துரை ஆசைப் படுகிறானே என்று நான் முயல் கறியும், மான் கறியும் பண்ணச் சொல்லி டைனிங் டேபிளில் வைத்தால் அன்றைக்குப் பார்த்து ‘இன்னிக்குச் சோமவார விரதம்’ எனக்குத் தனியாக அவல் உப்புமா பண்ணச் சொல்லியிருக்கிறேன் என்கிறாள். இந்த நாட்டுப்புறத்தைக் கட்டிக் கொண்டு என்ன பண்ணித் தொலைப்பது? இந்த நிலைமை புரியாமல் துரை என்னை உயிரை எடுக்கிறான். நேற்றிரவு கூடச் சீட்டாடிக் கொண்டிருக்கும் போது நமக்குள் என்ன வித்தியாசம்? இருவரும் மிகவும் நெருங்கிப் பழகி விட்டோம். எனக்கு என் மனைவியின் முகத்தையே தினம் பார்த்து அலுத்துப் போயிற்று. அதேபோல உனக்கும் உன் மனைவியின் முகம். உடல் எல்லாம் தினம் பழகிப் பழகி அலுத்துப் போயிருக்கலாம். இரண்டு பேருக்குமே ஒரு புதுவிதமான சுகானுபவமாக இருக்கட்டுமே? இன்றிரவு மட்டுமே இந்த ஏற்பாடு, உன் மனைவி என்னோடு உறங்கட்டும். என் மனைவி உன்னோடு உறங்கட்டும். எனக்கு ஓர் ‘இந்தியப் பெண்ணின் சுகம் கிடைக்கட்டும், உனக்கு ஓர் ஆங்கிலேயப் பெண்ணிடம் சுகம் கிடைக்கட்டும்’ என்று ஆசையோடு குழைந்து கெஞ்சிக் கேட்டான். எனக்குப் பூரண சம்மதம். துரையின் மனைவியைப் பற்றி நீறுபூத்த நெருப்பு மாதிரி என்னுள்ளே அவளைப் பார்த்த மறுகணத்திலிருந்து இப்படி ஓர் ஆசைத் தீ மனத்தில் பற்றி எரிகிறது. அந்த வெள்ளைக்காரியின் ரோஜா இதழ்களை அப்படியே கடித்து முழுங்கி விடத் தவிக்கிறேன் நான். தன் மனைவிக்கு இந்த ஏற்பாட்டில் முழு உடன்பாடு உண்டு என்றும் இது அவளுக்கு வழக்கம்தான் என்றும் துரை என்னிடம் உத்தர வாதம் அளிக்கிறான். அவர்கள் இருவருமே ஃப்ரீமேலான் கிளப்புகளில் எல்லாம் உறுப்பினர்களாம். இம்மாதிரிப் பழக்கம் அவர்களுக்கு ஒன்றும் புதுமை இல்லையாம். ஆனால் இதையெல்லாம் இங்கே என் பட்டத்து ராணி என்ற பெயரில் உட்கார்ந்து கொண்டிருக்கிற கோட்டானிடம் எப்படி நான் எடுத்துச் சொல்லி விளக்குவது?”

     -இந்த இடத்தைப் படிக்கும்போது தனசேகரனுக்கு இரத்தம் கொதித்தது. தந்தை மட்டும் இப்போது உயிரோடு இருந்திருப்பாரேயானால் அவனே ஓடிப்போய் அவர் கழுத்தை நெரித்துத் திருகி அவரைக் கொலை செய்திருப்பான். ஆனால் அவர் ஏற்கனவே செத்துப் போய்த் தொலைந்திருந்தார். தாங்க முடியாத எரிச்சலோடு இரண்டு தினங்கள் தள்ளி அந்த டைரியை மறுபடி புரட்டினான் தனசேகரன்.

     “துரையின் ஆசையையும், என் ஆசையையும் ஒருசேர நிறைவேற்றிக் கொள்ள இன்று சரியான வழி புலப்பட்டு விட்டது. பீமநாதபுரம் சமஸ்தானத்தில் இந்த சோமவார விரதக்காரி ராணியாக இருந்து தொலைக்கிறவரை இந்த ஊர் எல்லையில் அது மாதிரி எதுவும் நடக்க முடியாது. காதும் காதும் வைத்தாற்போலத் துரையையும், துரையின் மனைவியையும் நம் சமஸ்தானத்தைச் சேர்ந்த பரிமேய்ந்த நல்லூருக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டால் இந்த ஆசை நிறைவேறிவிடும். பரிமேய்ந்த நல்லூரில் நமக்கு வைப்பாட்டி முறையாக வேண்டிய நம் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அடங்கின தேவதாசிக் குடும்பங்கள் பல உள்ளன. அதில் மிக அழகிய உடற்கட்டுள்ள ஒருத்தியை இரவு டின்னருக்கு அழைத்துத் துரைக்கு முன்னாலேயே ஒரு டான்ஸும் ஆடச்சொல்லி அவனோடு படுக்கையறைக்குள் தள்ளி விட்டுவிட்டு இந்தப் பக்கம் நாம் துரை அம்மாளைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக வேண்டியது தான். இதை மிகவும் சாமார்த்தியமாகச் செய்து முடிக்க வேண்டும்.

     துரைக்கு இதில் ஒரு சிறிதும் சந்தேகம் வந்து விடக் கூடாது. பரிமேய்ந்த நல்லூர்த் தேவதாசி தன் அந்தஸ்துக்குக் குறைவான ஜோடியோ என்று துரை நினைத்து விடாமல், ‘அவர்களும் எனக்கு இளையராணிகள் முறைத் தான் ஆகவேண்டும்!’ என்று துரையிடம் இன்றிலிருந்தே பீடிகை போட்டுச் சொல்லி அவனை அந்த ஏற்பாட்டுக்குத் தயாரான மனநிலையில் கொண்டு வந்து வைத்துவிட வேண்டும். அதைச் செய்வதில் சிரமம் ஒன்றும் இராது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு வெள்ளைக் காரியின் உடலுக்காக எவ்வளவு காய்ந்து போய்த் தவிக்கிறேனோ அதைவிட அதிகமாக ஓர் இந்தியப் பெண்ணின் கறுப்பு உடலுக்காகத் துரை தவித்து உருகிக் கொண்டிருக்கிறான் என்பதை அவனுடைய அன்றாடப் பேச்சுக்களிலிருந்தே நான் தெரிந்துகொள்ள முடிகிறது.”

*****

     தன் தந்தையின் அந்தரங்க நாட்குறிப்புக்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அறவே விலகிப்போய் மிகமட்டமான பெண் தரகன் ஒருவனுடைய கீழ்த்தரமான வாழ்க்கை வரலாற்றை ஏதோ ஒரு வகை, நிர்ப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டுப் படித்துக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணுகிற மனநிலைக்கு இப்போது வந்திருந்தான் தனசேகரன். இவையெல்லாம் ஜாடை மாடையாகத் தெரிந்து அல்லது இப்படிப்பட்ட விவரங்களும் இந்த நாட் குறிப்புக்களில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்து அநுமானம் செய்து கொண்டு தான் மாமா இவற்றைத் தன்னை மட்டும் படிக்கச் சொன்னாரா அல்லது சாதாரணமாகத்தான் தன்னை இதைச் செய்யச் சொன்னாரா என்று புரிந்து கொள்ள முடியாமல் இப்போது அவனே திணறினான்.

     குடும்பப் பாங்கான நெற்றியில் இளங்கீற்றாகத் திருநீறும் குங்குமமும் துலங்கும் தன் தாயின் லட்சுமீகரமான முகம் இப்போது தனசேகரனின் மனக்கண்ணில் தெரிந்தது. ஏனோ அதையடுத்து உடனிகழ்ச்சியாக அவனுக்கு மதுரை மீனாட்சி அம்மனின் முகமண்டலம் ஞாபகம் வந்தது. அப்போது அப்பாவின் முகம் அகப்படுமானால் அதில் உடனே காறித் துப்பவேண்டும் போலவும் ஆத்திரமாக இருந்தது அவனுக்கு. அவருடைய ஆரம்பகால நாட் குறிப்புகளில் இவ்வாறு பல ஆபாசமான விவரங்கள் நிறைய இருந்தன. பின்னால் வரவர இதே விஷயங்கள் சினிமா உ ல கத்தோடு சம்பந்தப்பட்டவையாக எழுதப் பட்டிருந்தன.

     சென்னைப் பட்டணத்தில் அவ்வப்போது பிரபலமாக இருந்த ஒவ்வொரு சினிமாக்காரிக்கும் ஒரு நாகரிகத் தரகன் மூலம் அறிமுகம் கிடைத்து அவர்களோடு இவர் சரசமாடிய லீலைகள் எல்லாம் இருந்தன. தன் தாயை அவர் எவ்வளவு தூரம் படிப்படியாக ஓசைப்படாமல் அவமானப்படுத்திக் கொன்றிருக்கிறார் என்பது அந்த நாட்குறிப்புக்களிலிருந்து அவனுக்குப் புரிந்தது. இவ்வளவு மனவேதனைகளையும், குறைகளையும், பச்சைத் துரோகங்களையும் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு மறுகி உள்ளேயே வேதனையால் வெந்துதான் தன் அன்னை மரணமடைந்திருக்க வேண்டும் என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவள் உயிரோடிருந்தவரை என்றும் எந்த விநாடியிலும், எவர் முன்னிலையிலும் தன் தந்தையைக் குறைத்தோ குலைந்தோ பேசியிருக்கவில்லை என்பதையும் அவன் அறிவான். தாயின் அந்தத் தியாகம், அந்த விட்டுக் கொடுக்காத பெருந்தன்மை எல்லாம் இப்போது அவனுக்கு நினைவு வந்தன. டைரிகளை வைத்துவிட்டு அவன் தன் மணிபர்விலிருந்த சிறிய அளவிலான தாயின் புகைப் படத்தைத் தேடி வெளியே எடுத்தான். அவன் கண்களில் நீர் அரும்பியிருந்தது. உள்ளம் உணர்வுகளால் குமுறியது. அவனால் அப்போது உணர்வு மயமாவதைத் தடுக்க முடியவில்லை.