10

     தந்தையின் நாட்குறிப்புக்கள் அடங்கிய டைரிகளைப் படிப்பதற்கு முன் அவற்றைத் தனசேகரன் இரண்டு வகையாகப் பிரித்து வைத்துக் கொண்டான். ராஜமான்யம் ஒழிக்கப்படுவதற்கு முந்திய காலத்து நாட்குறிப்புக்கள் அடங்கிய டைரிகள். ராஜமான்யம் ஒழிக்கப்பட்ட பின் எழுதப்பட்ட நாட்குறிப்புகள் அடங்கிய டைரிகள் என்று அவற்றைப் பகுத்துக் கொண்டால் தான் நிலைமைகளைக் கண்டறிய ஏற்றபடி இருக்கும் என்று அவன் மனத்தில் பட்டது. ராஜமான்யம் கிடைத்தவரை சமஸ்தானத்தில் அவ்வளவு பணக்கஷ்டம் இருந்திருக்க முடியாது. வரவு செலவுகளில் அதிகமான குழப்பமும் இருந்திருக்காது. பணத்தட்டுப்பாடு வந்த பின்னால்தான் இந்த வரவு செலவுச் சிக்கல்கள் எல்லாம் வந்திருக்க வேண்டும் என்று கூடத் தோன்றியது.

     அந்நியர்களான பிரிட்டிஷ்காரர்களின் தொடர்பும் பிரிட்டிஷ் நாகரீகத்தை இமிடேட் செய்வதும் பெருமையாகக் கருதப்பட்டு வந்த தலைமுறையைச் சேர்ந்தவராகையினால் அரைகுறையாக ஆங்கிலம் தெரிந்திருந்தும் தன் டைரிகளை எல்லாம் தப்புத் தப்பான ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தார் தந்தை. அந்த அரைகுறை ஆங்கிலத்தைப் பார்த்துத் தனசேகரன் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான். வெள்ளைக்காரர்கள் செய்ததை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இமிடேட் செய்த இந்திய சமஸ்தானாதிபதிகள் தாங்கள் அந்நியர்களிடம் இருந்து இமிடேட் செய்பவை எல்லாம், இந்தியச் சூழ்நிலைக்கு, எந்த அளவு ஏற்கும், எந்த அளவு ஏற்காது, என்றெல்லாம் கூடச் சிந்தித்துப் பார்க்கவில்லை. வெள்ளைக்காரர்கள் செய்பவை எல்லாமே பெருமைக்குரியவையாகத்தான் இருக்கவேண்டும் என்று குருட்டுத்தனமாக எண்ணுகிற மனப்பான்மைதான் அன்று எல்லா இந்திய ராஜாக்களையும் பிடித்திருந்தது. அடிமைத்தனம் என்பது கேவலமாகவும், வெட்கப்படுவதற்குரியதாகவும் கருதப்படுவதற்குப் பதில் ஒரு கெளரவமாகவும், நாகரீகமாகவுமே கருதிப்பட்டு அநுசரிக்கப்பட்ட காலத்தைப் பற்றிய நாட் குறிப்புக்களைத் தான் அப்போது தான் புரட்டிக் கொண்டிருப்பதாகத் தனசேகரனுக்குத் தோன்றியது. தன் தந்தை மட்டுமல்ல: எல்லா இந்திய மன்னர்களும் சமஸ்தானாதிபதிகளுமே அந்தக் காலகட்டத்தில் அப்படித்தான் அந்நிய அடிவருடிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது தனகேகரனுக்குத் தெளிவாகப் புரிந்தது. பீமநாதபுரத்தின் கலாசாரப் பெருமையை இந்த ஆங்கில அடிமை மனப்பான்மை அதிகம் பாதித்து விடவில்லை, என்றாலும் தன்மானத்தை நிறையப் பாதித்திருந்தது. தன் தந்தையைப் பற்றியும் அவருடைய குணங்களைப் பற்றியும், இனிமேல் புதிதாகத் தெரிந்து கொண்டு. ஆகவேண்டியது எதுவும் இல்லை என்றாலும் அவருடைய டைரிகளைப் படிக்கத் தொடங்கிய பின்னர் தனசேகரனுக்கு அவர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் மேலும் மேலும் குறைந்து கொண்டே வந்தது. டைரிகளில் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா விஷயங்களையும் எழுதி வைத்திருந்தார் அவர். ஒரு தந்தையைப் பற்றி மகன் தெரிந்து கொள்ள அவசியமில்லாத - தெரிந்து கொள்ளக்கூடாத - தெரிந்து கொள்ள வேண்டாத பல விஷயங்கள் கூட அந்த நாட்குறிப்புக்களில் இருந்தன. நாட் குறிப்புக்களைப் படிக்கப் படிக்கத் தாயின் மேல் அதிக மரியாதையும் தந்தையின் மேல் படிப்படியாக வெறுப்பும் அவனுள்ளே வளர்ந்தன.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.