(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

10

     வீரமங்கலத்துக்குச் சென்று உடையார் வீட்டில் விசாரித்துவிட்டு வடிவு திரும்புகிறான். காந்தி அங்கு வரவேயில்லையாம்.

     பொழுது சாய்ந்து இருள் பரவிக் கொண்டிருக்கிறது. சாலையை விட்டு வரப்பில் இறங்கி அவன் விரைந்து நடக்கிறான்.

     அவனுடைய கண்களுக்குச் சட்டென்று மின்னி நெளியும் அரவம் தென்பட்டு விட்டது. அதே மின்னல் வேகந்தான், கையில் வால் சிக்க, பிடித்துக் கரகரவென்று ஒர் அசுர வேகத்துடன் சுழற்றுகிறான். அந்த வேகத்தில் அது நஞ்சைக் கக்கும். சுழற்றிக் கொண்டே வரப்பில் அடித்தால் பத்தாது. மடைப்பக்கம் கல்லில் போட்டு அறைகிறான். சுழற்றல், அறைதல். பாம்பு தன் வீரியத்தை இழந்துவிட்டது. காடா விளக்கினடியில் பஞ்சமி மிளகாய் அரைக்கிறாள். மாரியம்மா பிள்ளையை மடியில் போட்டுக்கொண்டு மெல்லிய குரலில் பாடித் தட்டுகிறாள்.

     இவன் உள்ளே செல்கிறான். விளக்கை வைத்துக்கொண்டு, பின் முற்றத்தில் அதைப் பரிசீலனை செய்தவாறு வளைந்த சிறு கூரிய கத்தி கொண்டு சீராகக் கிழித்து நினத்தை வேறாக்குகிறான்.

     நல்ல பாம்பு, அவ்வளவு பருமனில்லை. என்றாலும் நீளமாக மூன்றடிக்கு மேல் இருக்கும்.

     மண்வெட்டியை எடுத்துக் குழிதோண்டி நினத்தைப் புதைத்து முடிவிட்டு, தோலைக் குளத்துப்பக்கம் கொண்டு செல்கிறான்.

     நன்றாகக் கழுவிக் கொண்டு வந்து, உப்பைச் சீராகத் தடவி கயிற்றில் தொங்க விடும் நேரத்தில் வீட்டில் அப்பன் வந்துவிடுகிறான்.

     “ஏண்டால, அந்த... யா மவன் கெரு வச்சிட்டிருக்கிறான். நீ இப்ப இத்த அடிச்சிக் கொண்டாந்த?”

     சாம்பார் சாராயம் குடித்தாலும் நிதானமே இழக்க மாட்டான்.

     “ஏழெட்டு ரூபாக்கிப் போவும். அவங் கெடக்கிறான். காலடில வந்து சுத்திச்சி. நான் புடிக்கப் போனனா?”

     “காந்திப் பொண்ணக் காணமுன்னு சொன்னாங்க?”

     “அதா வீரமங்கலம் உடயார் வூட்டுக்குப் போய் விசாரிச்சிட்டு வரச்சொன்னாங்க. அங்கொண்ணும் வரலியாம்.”

     “பொட்ட புள்ளகள வக்கிறாப்பல வக்கணும். ஒண்ணும் போற போக்கு செரியில்ல. இந்த விருத்தாலம் பய கூட மூலைப்பயலுமில்ல சேந்திட்டுத் திரிகிறான்? வீரபத்திரன் சொல்லிட்டிருக்கிறான், அம்பது ரூபா குடுக்கிறானுவளாம் அஞ்சு, நிமிட்டில அல்லாம் பேத்திட்டுப் போயிடணுமாம்! களுதப் பயலுவ, வரிக்கல்லத் தூக்கி அப்பால போடுறாப்பல நினைச்சிட்டானா?”

     “முதலாளி கம்முனு இருக்கிற வரய்க்கும் நமக்கு ஒண்ணும் பயமில்ல, அதெல்லாம் கைய வய்க்கமுடியாது.”

     மீசையைப் பல்லில் கடித்துக் கொண்டவாறு பொங்கும் மகிழ்ச்சியை வடிவு அடக்கிக் கொள்கிறான். அம்சுவே அவனுக்குச் சொந்தமாகிறாள்.

     அவருக்குத் தெரியாதா? சாடை மாடையாக லட்சுமியக்காளும் புரிந்து கொண்டிருப்பாள்.

     “நாளக்கி சம்பா ஒழவு இருக்குதாம். வீரபத்திரஞ் சொன்னான். நம்ம பக்கம் எதும் செல்லல. இங்கியும் சம்பாச் சீரெடுக்கணும். அது ஒரு ரெண்டேக்கரிருக்கு. ஆனா மொதலாளி ஒடம்பு சரியில்ல. நாளக்கி மாட்ட ஓட்டிட்டு வாரேன். கருக்கல்லன்னே...”

     ஆவி பரக்க வடித்த சோற்றைத் தட்டில் போட்டுப் பரப்புகிறாள் தங்கச்சி. வண்டியோட்டிச் சென்ற பழனிப் பயல் அசுரப் பசியுடன் வந்துவிட்டான்.

     சாட்டைக் குச்சியைக் கூரையில் பத்திரமாகச் செருகி விட்டுத் தலைத்துணியை உதறிக்கொண்டு, “சோறு வைக்கா? என்று ஆணையிடுகிறான்.

     சாராயம் குடித்திருக்கிறான். “ஏண்டால, நீ மத்தியானம் என்ன சொல்லிட்டுப் போன?”

     “என்னா சொன்னே?”

     “குடுரா காச சாங்காலம் அஞ்சு ரூபாயாக் கொண்டாந்து தாரேன்னு அரிசி வாங்க வச்சிருந்த காசத் தூக்கிட்டுப் போயிட்டா!”

     “நா என்ன இப்ப தரமாட்டேன்னா சொன்னே?...”

     வேட்டி இடுப்பில் கைவிட்டு கசங்கிய ஒரு ரூபாய் நோட்டை எறிகிறான்.

     “ஏண்டா, இதானா காசு!”

     “நாளக்கி மிச்சம் தாரேன்! சோறு... சோறு...!”

     “இந்தப் பய, நெல்லு மிசின்ல மூட்ட தூக்கிப் போட்டு நாலு அஞ்சி சம்பாரிச்சி இப்பிடிக் குடிச்சித் தொலக்கிறான். குடிசய வேற பேத்துட்டுப் போவணும்ங்கறானுவ... இன்னக்கிப் பூர ஒரு வேலையுமில்ல. ஒருமா நடவுக்கு அஞ்சாளுன்னு கணக்கு. முப்பத்தஞ்சு ரூபா கூலிக்கு பன்னண்டாளுன்னு மேச் சாதிக்காரியல்லாம் மினுக்குச் சேல கட்டிட்டு நடவுக்கு எறங்கிடறாளுவ... நா என்னாத்த அரிசி வாங்க, எண்ண வாங்க, புளி வாங்க?...”

     இதெல்லாம் யார் காதிலும்விழுவதில்லை. பழனிப் பயல் படுத்ததும் தூங்கிவிடுவான். குப்பன் பீடி குடித்துக் கொண்டு பொன்னனிடம் கொஞ்சம் குந்திப் பேசிவிட்டு வருவான். வடிவு பீடியை வாயில் வைத்துக்கொண்டு குளத்தைச் சுற்றிக்கொண்டு வெளியே போவான். மடை பார்க்கும் பொறுப்பு அவனுக்குத் தான். சில சமயம் கருக்கலில் போய்விட்டு வருவான். இரவில் முதலாளியைப் பார்த்து, சங்க சமாச்சாரம், ஊர்சேதி பொது நிலவரம் பேசி வருவான்.

     முதலாளி வீட்டுத் திண்ணையில் விளக்கெரிகிறது.

     “ஏண்டா? நீ போயி எந்நேரம் வந்து சேதிசொல்லுற? என்னாடா இருக்காளா இல்லையா. செறுக்கிமவ?...”

     வசைகள் கட்டுக்கடங்காமல் பொல பொலக்கின்றன.

     “இல்ல மொதலாளி. நா அப்பமே வரணுந்தா பொறப் பட்டே... அதுக்குள்ளாற...” தலையைச் சொறிகிறான். பொய் எதுவும் கைகொடுக்க வரவில்லை.

     “உடயாரு மருமவ இல்ல. அவுங்கல்லாம் புதுக்குடிக்கு சினிமா பாக்க போயிருக்காவளாம். அங்க என்னமோ புதுசா படம் வந்திருக்கில்ல...”

     “...யா மவ; ஐயா காலு வீங்கிக் கிடக்காருன்னு ஒரு அச்சம், கூச்சம் எதுனாலும் இருந்தா போவாளா? இவபாட்டுக்கு சினிமாக்கா போறா? வரட்டும் சொல்ற, தெருவுல நிக்க வச்சி செருப்பாலடிக்க...”

     “என்னாத்துக்கு அவன வச்சிட்டுக் கத்துறிய? சரோஜா கூட்டிருப்பா. சினிமான்னு போயிருக்கா போல. அப்படி எப்பவும் போமாட்டாளே அவ?”

     “ஏண்டால, நிசந்தாஞ் சொல்லுறியா? காந்தி வந்திச்சாமா அங்க?"

     இப்போ அவள் வரவில்லை என்று சொன்னால் அவன் மீது கோபம் பாயும்.

     “அதுதாங் கேட்டேன் மொதலாளி. ஒடயாரு அவங்கல்லாம் சினிமாவுக்குப் போயிருக்காடா, போன்னிட்டாரு.”

     “ஏண்டா, பெரியம்மா கூடவா போயிருக்கு?”

     “வூட்ட யாரும் இல்ல...”

     “சினிமான்னா, ராத்திரிவருவாகளா? அவங்க சித்தாமு வீட்டில தங்குவாங்க காலம வருவாங்க. இவ ஏம் போறா, அறிவு கெட்டவ? நீங்க ரொம்பத் தகிரியம் குடுத்துத்தா அவ இத்தினி துணிச்சலாப் போறா!”

     அவள் அவர் சந்தேகப்பட்டபடி, ஆறுமுகத்தின் வீட்டை நாடிப் போயிருக்கவில்லை என்று சம்முகத்துக்குச் சற்றே ஆறுதலாக இருந்தாலும் இரவு தங்க வாய்ப்பெடுத்ததில் சொல்லொணாத கோபம் வருகிறது.

     “காலம வந்து சேருவா. படிச்ச பொண்ணு. அவங்க கேட்டிருப்பாங்க. இவ என்ன இப்ப ஆருவூட்டுக்கோ போயிட்டாளா? மரியாதி தெரிஞ்ச சிநேதிதங்க, ஏம் போட்டுக் கத்துற?..” என்று பாட்டியும் கூறுகிறாள்.

     “அதென்னமோ, காலம அவ மொவத்தில நா முழிக்க மாட்டே... அந்தக் கழுத வந்ததும் உள்ள தள்ளிக் கதவச் சாத்தி வையி. கடனோ உடனோ வாங்கி, கட்டிக் குடுத்துத் தொலக்கணும். வடிவு! காலம எங்கூட புதுக்குடி வாடால. முத பஸ்ஸில போயிட்டு இந்தக் காலையும் டாக்டர்கிட்ட காட்டிட்டு, இவ விசயம் தோது பண்ணிட்டு வாரே. இப்பிடி செறுக்கிமவ ராத்தங்கிட்டு வாரான்னா எவ்வளவு கேவலமா எல்லாம் பேசமாட்டானுவ? நாம பேசல? அவ இவ ஒழுங்கில்லன்னு நம்மகிட்ட பஞ்சாயத்துப் பண்ணவரப்ப, நாமே இப்பிடி ஒளுங்கில்லாம போயிட்டா எந்த மயிரா மதிப்பா? ஒரு நாயமில்ல?”

     வடிவு ஒன்றும் பேசவில்லை. அவன் தங்கச்சியை ஐயனார் குளத்தில் கட்டிக்கொடுத்து மூன்று வருஷம் வாழவில்லை. கையில் குழந்தையுடன் திரும்பிவிட்டாள். அவள் புருசன் ஒரு பொட்டப் பயல், காசை வாங்கிக்கொண்டு புதுக்குடி ஆசுபத்திரியில் போய் ஆபரேசன் பண்ணிக்கொண்டு வந்திருக்கிறானாம். பெண்சாதியை வாழவைக்கத் துப்பில்லாத பயல், யாருக்கடி கருப்பமானேன்னு அடித்து இம்சைப்படுத்தியிருக்கிறான். இவள் இங்கே வந்திருக்கிறாள். பிள்ளை பெற்று ஆறு மாசமாகிறது. மாமியார் சாவுக்கும் இவள் போகவில்லை. எந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்பும் இல்லாமல் இவள் இங்கே இருக்கிறாள்.

     அம்சுவை அவன் கட்டிக்கொள்ள பஞ்சமி இங்கு இருப்பது கூட ஒரு தடையாகப் பேசக்கூடும். கிழவி மிகவும் கருவக்காரி.

     வரப்பும் மேடும் பள்ளமும் அவன் பிறவி எடுத்த நாட்களாகப் பழகிய தாய்ப்பூமி. இப்போதும் அந்தப் புளியமரம் அங்கு இருக்கிறது. முறுக்கேறிய கைவிரல்களால் அழுந்தப் பூமியைப் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஓர் அரக்கனைப் போல் இருக்கிறது. பக்கத்தில் ஓர் இலுப்பை மரம் முன்பு இருந்தது. இப்போது வெட்டிவிட்டார்கள். அதில் தான் ஏனை கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அவனும் அப்படித் தொங்கியிருப்பான். அம்கவும் அப்படித் தொங்கியிருப்பாள். நாளைக்கு அவர்களுக்குக் குழந்தை பிறந்தாலும் அந்த வயல் வெளிகளில் தான் ஓடியாடி வளரும். வரப்போரப் பொந்துகளில் நண்டைப் பிடித்து முதுகோட்டை வகிர்ந்து குடித்து விளையாடுவார்கள். மாட்டின் வாலை முறுக்கி ஓட்டிக் கூச்சல் போட்டுக்கொண்டு களிப்பார்கள். ஆற்றிலே முக்குளி இட்டுத் துளைவார்கள். குளத்தில் முங்கிச்சென்று அல்லிப் பூப்பறித்து வருவார்கள். அவன் பிள்ளையும் விடமுள்ள பாம்பைப் பிடித்துக் கரகர வென்று சுழற்றி அதை மாய்க்கக் கற்றுக்கொள்வான். இப்படியே அவன் பிள்ளை, அவன் பிள்ளை, அவன் பிள்ளை என்று இந்த வயற்காட்டில்...

     மடை பார்த்துவிட்டு வீடு திரும்பியவன் சிறிதுநேரம் கூடக் கண்ணயரவில்லை.

     கோயில் பூசாரியின் குரல் கேட்கிறது.

     “மத்தியானத்துக்குள்ளார ஆளுகளெல்லாம் வாராங்க. செங்க வண்டி மண்ணு வண்டி வரும். மரியாதியா எல்லாம் காலி பண்ணிடுங்க.”

     வடிவு துள்ளினாற்போல் எழுந்து உட்காருகிறான்.

     “காலி பண்ணலன்னா என்ன செய்திடுவீங்க?”

     “ஏண்டா? எத்தினி திமிரு உனக்கு, பன்னிப்பயலே? மூஞ்சி முகரை பேந்துபோகும்! கோயில் எடத்த காலிபண்ணிட்டுப் போங்கன்னு ஆறுமாசமா சொல்லிருக்கு என்ன வெள்ளாட்டா டா?”

     “யார்ரா வெள்ளாடுறாங்க. நீ மருவாதி வக்கணும்!”

     “வடிவு சும்மாரு!... பூசாரியய்யா, நாங்க கேட்டிருக்கிறம். ஒரு நாலஞ்சு நா. இப்பதான் எதோ கூலி எங்கக்கு வரும்? வார அமாசின்னிக்குக் காலி பண்ணிடறம்...”

     “நீ சும்மாரு. இவனுகளுக்கிருக்கிற ரயிட் நமக்கு என்ன இல்ல இப்ப?”

     “என்னடா ரயிட்டுனு பேசற? அம்மங்கோயில் வளவில உக்காந்திட்டு அசிங்கம் பண்ணிறிய..?”

     குப்பன் சாம்பார் மகனை விலக்கி விடுகிறான். “எல, உன்ன கருக்கல்ல மொதலாளி வரச் சொன்னாரில்ல? நீயே இங்க இப்ப நிக்கிற? போடா...” மகனைப் பற்றிக் குளம் சுற்றி அப்பால் தள்ளிவிட்டு வருகிறான் சாம்பார்.

     ஏதோ கைமாறிப்போன ஏமாற்றம் நேரிட்டாற்போன்று வடிவுக்குக் கோபம் வருகிறது. “திருட்டுப் பயலுவ, பத்து வருச்மா கோயில் சொத்தக் கொள்ளையடிச்சி வீடு வாசல் அது இது கட்டிக்கிட்டாங்க. இப்ப இவனுவ சாமி கும்புடறானுவளா..”

     பூமணி ஆற்றில் தண்ணிர் படி முழுக ஓடுகிறது. முகத்தைக் கழுவிக் கொள்கிறான். தொண்டையைக் காறி உமிழ்ந்து கொப்புளிக்கிறான். பளாரென்று விடிந்து பறவையினங்கள் வானில் பறந்து செல்கின்றன. அதைப் பார்த்துக் கொண்டே நிற்கின்றான்.

     மனிசனுக்குத்தான் எல்லாக் கட்டுக்காவல் சங்கடங்களும் என்று தோன்றுகிறது. கிளியும் குருவியும் தன்னிச்சையாகத் தேடித் தின்னுகின்றன. ஆண் பெண் கூடிக் குஞ்சுபொரித்துச் சந்தோசமாக இருக்கின்றன.

     ஒரு மரத்தில் கிளியும் மைனாவும் குருவியும் ஓணானும் மரங்கொத்தியும் காகமும் சொந்தம் கொண்டாடி இரைதேடிக் கூடுகட்டுகின்றன.

     கிளியும் குருவியும் சண்டை போடுவதில்லை. ஓணானும் மரங்கொத்தியும் சண்டை போடுவதில்லை. மனிசன் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் என்று இருப்பதில்லை. புதிய ஞானோதயம் வந்துவிட்டாற்போல் பூரித்துப் போகிறான். இதை அம்சுவிடம் சொல்லவேண்டும். அம்சுவிடம் எத்தனையோ பேசவேண்டும் போல் பரபரப்பாக இருக்கிறது. ஆனால்...

     வாயிலில் கிழவன், கிழவி அரண் இருக்கிறார்கள்.

     சம்முகம் கொல்லைப்பக்கம் போசி வெந்நீரில் காலை வைத்துக்கொண்டு படியில் உட்கார்ந்திருக்கிறார்.

     மாடுகளை அவிழ்த்து, படலைக்கு வெளியே முளையில் கட்டுகிறான்.

     “இன்னிக்கு ஒழவோட்ட போறமான்னு கேட்டுட்டு வாரச் சொன்னாரு அப்பா.”

     “இருக்கட்டும், சம்பாச்சீரு, முதல்ல நாளு இன்னிக்கு நல்லால்ல. கால பஸ்ஸுக்குப் புதுக்குடி போய்ட்டு வருவம். ராமலிங்கம் வண்டி தாரேன்னாரு மாட்டக்கட்டி ஓட்டிட்டுப் போவலாம். மாட்ட ஓட்டிட்டுப்போ...”

     சம்முகம் உடல் நலிவினால் மட்டுமில்லை, இந்தப் பத்துப் பதினைந்து நாட்களில் ஆடிப் போய்விட்டார். கண்கள் சோர்ந்து, சவரம் செய்யாத முகமும், தளர்ந்து தொங்கும் கழுத்துமாகப் பரிதாபத்துக்குரியவராக இருக்கிறார்.

     “அடியுரமும் யூரியாவும் வாங்க வச்சிருந்த காசை எடுத்துச் செலவழிக்க வேண்டியிருக்கு. குண்டான் ஓட்டயாயிடிச்சி. இங்க வந்தா ரெண்டு ரூவா மேல சொல்றா. கடயில பாத்து வாங்கிட்டு வரணும்னிருந்தேன்...”

     லட்சுமி முணுமுணுத்துக்கொண்டு ரூபாய் நோட்டை எண்ணிப் பையில்போட்டுக் கொடுக்கிறாள்.

     “இப்ப அதும் இதும் முணுமுணுக்காத, அந்த நாய் வந்தா இந்த ரூமில வச்சிப் பூட்டி வை! நான் டாக்டரிட்டக் காட்டிட்டு சங்கத்துக்குப் போயி பொன்னுவைப் பாத்துப் பேசிட்டு. முடிஞ்சா, அவம்மாளையும் பாத்திட்டுத்தா வருவேன். அவன் அப்படி மேல மேல எகிறுற புள்ளயில்ல. இன்னிராவில வரலன்னா, நாளக்கித்தான் வருவேன். காபந்தா இருந்துக்குங்க...”

     வெண்மையான வேட்டியும் சட்டையும் அணிந்து கொள்கிறார்.

     வடிவு வெள்ளாழத் தெருவுக்குச் சென்று ராமலிங்கத்தின் வண்டியை ஓட்டிக்கொண்டு வருகிறான். அதற்கு முன் குடிசைக்குள் சென்று சட்டையணிந்து வேறு வேட்டியை உதறி உடுத்திக்கொண்டு, பாம்புத் தோலை ஒரு சாக்குச் சுருணையில் பத்திரமாகச் சுற்றி வைத்துக் கொள்கிறான்.

     நடவுக்குச் செல்லும் பெண்கள் வண்டியில் சம்முகம் ஏறச் சிரமப்படுவதைப் பார்த்து நிற்கின்றனர்.      “எங்க போறாவ? ஆசுபத்திரிக்கா?... தஞ்சாவூருக்கா?... ஒடம்பு ரொம்ப லேவடியாப் போயிட்டாரே?”

     “புதுக்குடிக்குத்தாம் போறாரு...”

     “பத்துப் பதுனஞ்சி நாளாச்சி கண்ணிலியே காணம்.”

     “ஒண்ணுக்கும் கவலப்படாத, ஆத்தாள நினைச்சி பாரத்த போட்டுருக்கிறம். சரியாப்பூடும்..” என்று கிழவி தைரியம் சொல்கிறாள்.

     “சம்முவம், வண்டிலியா போற? நா வாரண்டால...!”

     கிழவர் தலைதுாக்கும்போது கிழவி தொட்டமுக்குகிறாள்.

     “உனக்கென்ன இப்ப? இனி அங்கிட்டுப் போயி கள்ளக் குடிச்சிட்டு ஆடிட்டு வரணுமாக்கும்! கெட சும்மா!”

     “வாரேன் லட்சுமி. எங்கடா பழனிப்பய வந்தானா?”

     “ஆமா முதலாளி. கீச்சுக் குரலில் கூறித் தாவி ஏறி அமர்ந்துகொள்கிறான் பழனி, “மருள் நீக்கில பஸ் ஏத்திவிட்டுப் போட்டு மாட்ட ஓட்டிட்டுப் போற முதலாளி.”

     “சரி, சரி.” ஏரைத் தூக்கிக்கொண்டு சின்னமயான் எதிரே வருகிறான். பழனி சாட்டையால் வீறி மாடுகளை முடுக்குகிறான். நல்ல பாதை இல்லை. ஆற்றுமேட்டுக்குக் கீழே கிழக்கே சென்று ஆற்றைக் கடக்கவேண்டும். உள்ளூரில் அவரால் நடந்து சென்று பஸ் ஏறுவது கடினம். மேலும் பலரும் பலதும் கேட்பார்கள் என்று சம்முகம் அஞ்சினார்.

     வண்டி குலுங்கி, ஆடிப் பத்தடி கடக்கவில்லை. நாகு ஓட்டமாக ஓடி வருவது தெரிகிறது. “இந்தப் பயல ஆரு துறந்துவுட்டது? எல நிறுத்துடா வண்டிய வடிவு, அவனக் கூட்டிட்டுப் போயி கதவச் சாத்திட்டு வா!”

     அதற்குள் நாகு நாக்குழம்ப எச்சில் ஒழுக வண்டியைப் பிடிக்க வந்து விடுகிறான். “நா... நா...ம். ஹை ஹை... நம்...”

     “போடா வீட்டுக்கு! போ! எடுறா கைய!”

     பழனி வண்டியை நிறுத்த, வடிவு அவனை இழுத்துப் பார்க்கிறான். ஆனால் இந்தப் பேய்ப் பயலுக்கு எத்தனை வலிமை!

     “தூக்கி ஆத்துல கடாசுடா! அடிச்சிட்டுப் போவட்டும்?”

     “நா... நாவு... நாம்... ஹைஹை...”

     ஹை ஹை என்று தான் வண்டியில் போகவேண்டும் என்று கபடமில்லாத ஆசையை அவன் வெளியிடுகிறான். ஆனால் யாருக்கும் அது உகப்பாக இல்லை. இதற்குள் லட்சுமியும் விரைந்து வருகிறாள். இருவருமாக அவன் ஊளையிட, இழுத்துக்கொண்டு செல்கின்றனர்.

     ‘மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாமல் ஒரு பயல வச்சிட்டு இப்படி வாழ்க்கையை இழுத்திட்டுப் போகவேண்டிருக்கே...’ என்று நெற்றியில் அடித்துக் கொள்கிறார்.