(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

6

     வான் முகட்டில் வெள்ளைத் துணிகளைக் காயப் போட்டாற் போன்று மேகங்கள் பரவி இருக்கின்றன. இடைஇடையே எட்டிப் பார்க்கும் நீலங்கள். ஆற்றிலிருந்து கால்வாய்க்கு நீர் பாயும் மதகுச் சுவரில்தான் பாட்டி தங்கம்மா எரிமுட்டை தட்டுவாள். அந்த இடம் அவளுக்குக் குத்தகை. அங்கிருந்தபடியே வீட்டையும் ஒரு கண் பார்த்துக் கொள்ளலாம். வெயில் உறைக்காததால் முதல் நாளைய வறட்டிகளைப் பெயர்த்துக் காய வைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருக்கையில் காந்தி சோப்புப் பெட்டியுடன் ஆற்றில் குளிக்க இறங்குகிறாள்.

     “ஐயா என்ன செய்யிறார்டி?”

     “படுத்திருக்காரு.”

     “சோறு வடிச்சி வச்சிட்டே?”

     “வச்சாச்சு கொளம்பொண்ணும் இப்ப வக்கவானான்னு அம்மா சொல்லிட்டுத்தாம் போச்சி.”

     “அந்தப் பய எங்க?...”

     “அதோ கோடில புள்ளங்ககூட ஆடிட்டிருக்கிறான்...”

     கிழவி ஏதோ நினைவாகச் சூனியத்தை வெறிக்கிறாள். என்ன சோப்போ, அது நுரையே வரவில்லை. இவளுக்கு இருக்கும் சேலைகள் நைலக்ஸ் இரண்டுதான். ஒன்று பொங்கல் சமயத்தில் வாங்கியது. ஆற்று வண்டல் கலங்கிவரும் கலர். அவளுக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால் மூட்டைக்காரன் இதைக் கொண்டுவந்து நன்றாக இருக்கும் என்று சொல்லித் தலையில் கட்டிவிட்டான். ஆற்றுக் கலங்கல் நிறத்தில் சிறுசிறு நீலப்பூக்கள் போட்டிருந்தன. ஆனால் அந்த நீலம் கூர்மை இழந்து தேக்கத்தில் பாசி பூத்தாற் போல்அசிங்கமாகி விட்டது. இந்தச் சேலையைத் தான் அன்று உடுத்திச் சென்றாள். சனியன், இதற்கு அதிர்ஷ்டமே இல்லை.

     அந்த இன்னொரு பச்சைச் சேலையை உடுத்திச் சென்றிருந்தால், அவள் வாழ்க்கை ஒருகால் நம்பிக்கை மிகுந்ததாயிருக்கும்.

     வீட்டுக்கு வந்த ஆளை இப்படி விரட்டலாமா?

     ஆத்திரத்தைத் துணியில் காட்டுகிறாள். நைலக்ஸ் புஸ் புஸ்ஸென்று காற்றை அடக்கிக் கொண்டு அடங்காமல் சண்டித்தனம் செய்கிறது.

     அம்சு வெள்ளித் தூக்கை எடுத்துக் கொண்டு காலையில் நடவென்று கிளம்பி விடுகிறாள். அம்மாவும் சென்றுவிடுவாள். அம்சுவுக்குக் கையில் காசும் சேருகிறது. ஆனால் இவள் வீட்டுக்குத் தண்ணீர் சுமந்து, பைத்தியப் பையனைப் பாலித்து, அழுக்குத் துவைத்து, பெருக்கி, துலக்கி... சீ!

     அண்ணனுடன் பட்டணம் போவதைப் பற்றி ஒரு கனவும் அவளுக்கு உண்டு. ஆனால் அவன் வந்திருந்த நான்கு நாட்களில் நான்கு மணிநேரம் கூடத் தங்கியிருக்கவில்லை. நேற்றுச் சண்டை போட்டுக் கொண்டு போனவன், ஊருக்கே போய்விட்டான்.

     “என்ன பாட்டி! வெயில் காயிறீங்களா?”

     அவள் திடுக்கிட்டுத் தலை நிமிருகிறாள்.

     பொன்னடியான், வெள்ளை வேட்டி சட்டைக்கு மேல் சிவப்புத் துவாலை கண்களைப் பறிக்கிறது. நிறைய எண்ணெய் தடவிக் கிராப் வாரியிருக்கிறான்.

     “தோழருக்கு உடம்பு நல்லாயில்லையாமே? முந்தா நா புதுக்குடிக்கு வந்திருந்தாராம். ஆனா ஆபீசுக்கு வரலன்னாங்க...”

     அவன் படித்துறையில் இருக்கும் காந்தியிடம் தான் இதைக் கேட்கிறான். ஆனால் அவளுக்கு ஒரே வெறுப்பாக இருக்கிறது. அவளைவிட இரண்டாண்டுகள் முன் வகுப்பில் ரங்கநாதபுரம் பள்ளியில் படித்தான். உச்சவரம்பைச் சரியாக அமுல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடந்தபோது, அவனுடைய அப்பன் அதில் மூண்ட கலவரத்தில் வெட்டுப்பட்டுச் செத்துப் போனான். பிறகு அவர்கள் குடும்பம் அங்கிருந்து பெயர்ந்து போயிற்று. திருவாரூரில் படித்துப் புகுமுக வகுப்பை முடித்திருக்கிறான். பின்னர் முழுநேரமாக இவர்கள் சங்க வேலைக்கு வந்துவிட்டான். எங்கே கூலித் தகராறென்றாலும் மக்களை அணி திரட்டிக் கொடிபிடிக்க இவன் முன்னே செல்வான். அணி திரட்டி நிர்வகிப்பதில் மிகவல்லவன் என்று அவளுடைய தந்தைக்கு இவனிடம் மிகவும் மதிப்பு. நடவு நடும் பெண்கள், அம்சுவைப்போல், சாலாட்சியைப் போல் இளவயசுக்காரிகள், இளைஞர்களான சக தொழில்காரர்களுடன் சிரித்துப் பரிகாசம் செய்து மகிழ்வார்கள். அதே பெண்கள், இவனைக் கண்டால் சட்டாம் பிள்ளையாக மதித்து அடங்கி நிற்பார்கள்.

     “ஏம்மா? நாள அமாசிக்குக் கூட்டம் இருக்கும். தெரியுமில்ல? மாதர் கூட்டம். அல்லாம் வந்திடுங்க” என்று இவன் சொல்லும் குரலில் மன்னனின் ஆணைக்குரிய மிதப்பு பளிச்சிடும்.

     “ஏ, என்ன கொளுக்கட்டயா வாயில? கோசம் நல்லா குடுக்கணும்!” என்பான்.

     கூட்டம் இவர்கள் வீட்டு முன் தெருவிலேயே நடப்பது உண்டு. அவளுக்கு இதெல்லாம் தனக்குச் சம்பந்தமில்லை என்ற வெறுப்புத்தான் மேலிடும்.

     உள்ளே வந்து, “காந்தி, கொஞ்சம் தண்ணிகொண்டா” என்று கேட்பான். அந்தச் சாக்கில், “எம் பேச்சு நல்லா இருந்ததா காந்தி?” என்று சிரிப்பான். புதுக்குடியில் இருந்து வரும் போதெல்லாம் அவன்தான் அவளுக்குப் புத்தகம் பத்திரிகை கொண்டு வருவான். ஆனால் பிரபலமான வார மாத ஏடுகளாக அவை இருக்காது.

     அடித்தள மக்கள், புரட்சி, குமுறல், சுரண்டல், வர்க்கப் பார்வை என்ற சொற்களையே புரட்டி எடுக்கும் கவிதைகள், கட்டுரைகள் இருக்கும். அந்தச் சுவாரசிய வார மாத ஏடுகளைப் படிக்க அவள் வீரமங்கலம் உடையார் வீட்டுக்குத்தான் போக வேண்டும். சரோஜா இவளுக்குத் தோழி. உடையார் பழங்காலத்தில் நிலப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர். இப்போது பெருங்காயம் வைத்த பாண்டம்போல் அந்த மனம்தான் இருக்கிறது. சரோஜா அவருடைய இளைய மருமகள். அங்கே செல்லத் தடை கிடையாது. சேலையைக் காயப்போட்டு விட்டு, வீரமங்கலம் செல்லவேண்டும் என்ற நினைப்புடன் அவள் வீட்டுக்கு வருகையில், நடுவீட்டில் பொன்னடியான் ஐயாவுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

     “நீங்க எதுக்கும் அவனக் கொஞ்சம் வார்ன் பண்ணி வையுங்க காம்ரேட். போலீசுக்காரனுக்குச் சந்தேகம்னு புகுந்தா அடில இருக்கிறவனத்தா டவுட் கேசுன்னு புடிச்சுப் போட்டுச் சாத்துவான். இந்த சுடுகாட்டு வழிப்பிரச்சினைக்கு ஒடனே போராட்டம் நடத்தியிருக்கணும். பாடியத் தூக்கிட்டுப் போயிருக்கணும். பொண்டுவ வாணான்னிட்டாங்களாம். அட நமக்கு எத்தினியோ பிரச்சன இருக்கு. இப்ப உரவில, பூச்சி மருந்து வில கொறக்கணும்னு உண்ணாவிரதம் இருக்கிறது தீர்மானமாயிருக்கு. பிரச்சினயாயில்ல?”

     “காந்தி? சோறாக்கியாச்சில்ல?... பசியாயிருக்கு...”

     அவள் பின்புறம் சேலையைத் தொங்க விட்டுவிட்டு நடுவீட்டில் நிற்காமல் சமையலறைக்குள் செல்கிறாள்.

     தடியை ஊன்றிக்கொண்டு பாட்டன் படியேறுகிறான். கைத்துணியில் ஈரமாக மீன் தெரிகிறது. நேராகச் சமையலறைக்குள் வந்து “ஏ செவப்பி, இந்தாட்டீ, தேச்சுக் களுவி, உப்பு, மொளவா தடவி, சட்டில போட்டு...” பதம் சொல்லி அவளிடம் கொடுக்கிறார்.

     கண்களைச் சரித்துக்கொண்டு பார்க்கிறார் “யார்ராது? பக்கிரிமவன் பொன்னுவா? ஏண்டால, ஆளயே காணம்? உன்னண்ட நாஞ் சொன்னது என்னாச்சி?”

     “என்ன சொன்னிய தாத்தா?”

     “ஏண்டா, எத்தினி தபா நாகப்பட்டணம், காரக்கால் போறிய? இங்க இந்தப் பயலுவ, இன்னாமோ பொடியப் போட்டுத் தண்ணிய ஊத்திக் கலக்குறான். புஸ்ஸுனு நுர வருது. அத்த அஞ்சு லிட்டருக்கு அஞ்சு லிட்டர்னு கலந்து விக்கிறானுவ. குடிச்சா ஒடம்புக்குத் தெம்பால்ல சூர் புடிக்கணும்? இதெளவு சாஞ்சாடிட்டுத் தூக்கம் மயக்குது. சேய்! நாகபட்ணம் காரக்கால் போனா சீமப்பிராந்தி வாங்கிட்டு வாடான்னு நீ வார போதெல்லாம் சொல்றேன். வெத்துக்கையா வார. ஏதோ கெளவன், கேக்குறானேன்னு கூட இல்ல!”

     “தாத்தா, போலீசுக்காரன் வெலங்கு போட்டுக் கூட்டிட்டுப் போயிருவான்!”

     “அட. சி, போடா, சால்ஜாப்புச் சொல்ற? இப்பதா அல்லாம் பப்ளிக்கா எடுத்து எங்க பார்த்தாலும் கட துறந்திருக்காங்க? இதா வீரமங்கலம், அஸ்த மங்கலம், குமட்டூரு எங்க பாத்தாலும் கீத்துக் கொட்டா போட்டுத் துறந்து வச்சிருக்கானுவளே? நீ எனக்குப் போலீசு மயிருன்னு காதுகுத்துற?”

     “அதில்ல தாத்தா. உள்நாட்டுச் சரக்குக் குடிச்சா விலக்கில்ல. நீங்க சொல்ற சரக்கெல்லாம் வாங்கியாரக் கூடாது.”

     “மயிரு எல்லா நாள்ளயும் நாங் குடிச்சிட்டுத்தா வாரனா. எத்தினியோ கண்டம் பொழச்சி உசிர வச்சிட்டிருக்கிற. என்னிக்கின்னாலும் கொஞ்சம் ஊத்தி நல்லதாக் குடிச்சிக்கலாமேன்னு.”

     “அப்ப, இதுக்குத்தா உசிரோட இருக்கீங்களா தாத்தா?”

     “பின்னென்னல? இதபாரு, மண்ணு, பாசி எப்பிடிச் சதயத் திண்ணிருக்கின்னு!”

     கிழவனார் தேய்ந்து சுக்காகிப் பாளமாக வெடித்துப் போன தன் குதிகாலைக் காட்டுகிறார்.

     குதிகாலுக்கு மேலாக வெண்மை வரிகளாகத் தழும்புகள்.

     பொன்னடியானின் கேலி நிறைந்த ஒளி தீவிரமாகக் குவிகிறது.

     “தாத்தா அதென்ன?... அடிப்பட்ட தழும்பா?”

     “ஆமா... திருக்கை மீன் தெரியுமில்ல? அந்த வால்சாட்ட நுனில குஞ்சமாட்டுத் தொங்கும்... அதால அடிப்பாங்க பண்ணல. ஒரு காரியக்காரன் இருந்தான். அவனுக்கு ஒடம்பெல்லாம் கண்ணு. களவடில எங்க, இந்தப் பய இங்க ரெண்டு அங்க ரெண்டுண்ணு கருக்காயோடு தள்ளிடறானோன்னு பாத்திட்டே நிப்பான். நா அதுக்கு மேல. இல்லாட்டிக் காவயித்துக் கஞ்சி கூடக் கிடக்காது. கருக்காயில நாலு மரக்கா தேறும்படி பாத்துக் கிடுவேன். இத சம்முவத்துக்கு மின்ன ஒரு பய இருந்தான். நல்லா வெரப்பா அவாத்தா மாதிரி இருப்பான், சரவணன்னு பேரு வச்சிருந்தே, நல்ல துடியா இருப்பான்; அறுப்புக்கு வரப்ப, எங்க எந்தல இருக்குன்னு ரொம்ப தொலவிலியே கரீட்டா கண்டுப்பான். அரிகாவாயில போயி விழும்; வூட்டுக்குப் போய்ச் சேந்திடும். அதுக்குத்தன கட்டி வச்சி அடிப்பானுவ. மிராசு உக்காந்திட்டு காரியகாரன வுட்டு அடிக்கச் சொல்லுவாரு. பொறவு ஒரனா குடுத்து, கள்ளு வாங்கிக் குடில...ம்பாங்க. ஒருக்க. மேட்டுப்பங்குல தண்ணி நிக்கல. தாழ தண்ணி நிக்கிது. இந்தப் பய சரவண போசி மாதிரி ஒண்ண வச்சிட்டு எறச்சி வுட்டிட்டிருக்கிறா. வரப்போரமா, கருணக்கிழங்கும் சேம்பும் நட்டு வந்திருக்கு. காரியக்காரன் ஒரு சுத்துப் போயிட்டு வாரான் அல்லாம் தோண்டிப் போட்டிருக்கு, பய போசில எடுத்திட்டுப் போறதப் பார்த்திட்டான். தொறத்திட்டு ஒடியாரான். சரேல்னு எங்க பூந்தான்னு தெரியல. ஆளக்காணம். வாக்கா மதகடில ஒளிஞ்சுக்குவான். இது வழக்கந்தா, என்னப் பாத்து திட்டிப் புட்டுக் காரியக்காரன் போயிட்டான். பய கெட்டிக்காரன், வூட்டுக்குப் போயிருப்பான்னு நினைச்சிட்டு நானும் பொழுது சாஞ்சி வூட்டுக்குப் போனா, அங்க பய வரல. ஒருவேளை பண்ண வூட்டில புடிச்சிக் கட்டிப்போட்டிருக்களானுவாக்கும்னு ராவிக்கு அங்க ஓடினா காணம். மக்யாநா காலம, மதகடில கெடக்கிறான். பாம்பு கொத்தி, நீலமா கெடக்கிறான். சேம்பும் கருணயும் போசியோட.”

     பாட்டனாரின் சுருங்கிய கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிகிறது. அவர் குரல் ஒடுங்கி விட்டாலும், சோக அலைகளின் தொட்டுணர்வில் அங்கிருக்கும் எல்லா இதயங்களும் ஒன்றிப் போகின்றன.

     சிறிது நேரம் ஒர் அமைதித் திரை படிகிறது.

     “நாளெல்லாம் நெத்தமும் சதயும் தேச்சு, பச்சை சிரிக்கப் பாப்பம். ஆனா, அந்த மணி, நம்ம வயித்துப் பசிய அவிக்கல. அந்த உழப்பு நம்ம குடிய உசத்தல. இது நமக்கு உரிமைன்னு தெரியாது. மாறா, நாம இப்பிடி நண்டு நத்தயப் புடிச்சித் தின்னிட்டு, திருட்டு மணியள்ளிட்டு, திருக்கைச் சாட்டை அடிவாங்கிட்டு இருக்கத்தாம் பெறந்தோம்னு நெனைச்சிருந்தம். இப்ப, இதெல்லாம் உங்களுக்குச் சொன்னாக் கூடப் புரியாதுல. சம்முகத்துக்குக் கூடத் தெரியாது.”

     கண்ணில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டு கிழவன் சிரிக்கிறான்.

     “பொண்டுவ, நடவு நட்டிட்டே பின்னாடி போவணும். கொஞ்சம் நிமிர்ந்து வெத்திலே போடமுடியாது. காரியக்காரன் சீலயத் தூக்கிக்கச் சொல்லி வெத்துக்காலில அடிப்பான். நாங்க உழவுவோட்டுறப்ப, வெத்துல போட முடியாது. நா என்ன செய்யிவேன்? நாலு முடிப்பா வெத்தில பொயிலயக்கட்டி மாட்டுக் கழுத்தில செருவிருப்ப அங்க இங்க அவம்பாத்திருக்கிற சமயம் பாத்து, எடுத்துப் போட்டுப்பேன்.”

     சம்முகத்துக்குக் கண்கள் பனிக்கிறது. ஆனால் காந்திக்கோ இதெல்லாம் கேட்டுப் புளித்த கதைகள். அலுப்பாக இருக்கிறது. என்றோ இருந்த அவல நிலையை இன்னும் சொல்லிக் கொண்டே இருப்பதில் என்ன புண்ணியம்?...

     மீனைக் கழுவிச் சட்டியில் போட்டுவிட்டு, மிளகாய் அரைக்கக் குந்துகிறாள். இந்தக் கதை ஓயாது.

     “நாம நாயம் வேணும்னு கொடி பிடிச்சிட்டு நின்னம். அப்ப, வெளியேந்து தெக்குத்தியாளுகளக் கொண்டாந்தாங்களா? அவங்க இத்தவுடக் கொறச்ச கூலிக்கு வந்தாங்க. நாங் கேட்டேன். ஏண்டா எங்க வயித்தில மண்ணள்ளிப் போடுறிய? ஒங்களப் போல ஒழச்சிப் பிழச்சிருக்கம் நாங்க. இப்படித் துரோகம் செய்யலா மான்னு. அதுக்கு அந்தாளு சொன்னான் : “நாங்க என்ன செய்யிவம். மண்ணும் தண்ணியும் சேறா. பச்சுனு இருக்கிற பூமி, நீங்க பேசுவீங்க, போராடுவீங்க, மானம்பாத்த மண்ணுன்னா, அப்பத் தெரியும் பசிக்கொடும”யின்னான். நாம இன்னம் கரையேறாம தான் நிக்கிறோம். பெத்தவங்கன்னு ஆயியப்பனைச் சொல்லுகிறோம். மண்ணும் மானமும்தா மனுசனுக்கு பாக்கப் போனா ஆயியப்பன். அதுங்களே பராரியா வுட்டுப் போடவும் மனுசன் என்ன பண்ணுவான்? பஞ்சான குஞ்சும் குடும்பமுமா எடுபட்டு வந்தாங்க. அடியாளுங்க முச்சூடும் அங்கேந்துதா வந்திருந்தானுவ மூலையான்னு இங்கே இருக்கிறானே, அவ யாரு?”

     “ஆரு?”

     “இங்கதா கிளியந்தொறயோட வெள்ளாழத் தெருவில வீடு வாங்கிக்கிட்டிருக்கிறான். அவெ எங்க மிராசு கிட்ட, அடியாளாத்தா வந்தா. இவனும் சந்தனசாமின்னு ஒராளு, நின்னான்னா சொடலமாடன் கணக்க இருப்பா. ரெண்டு வைப்பு, அவளுவளும் வந்து இருந்தாளுவ...”

     “எங்க?”

     “இங்கியேதா, பண்ண வீட்டில வச்சிருந்தானுவ, அப்பல்லாம் இந்த அம்மங்கொளம் மாமுண்டி, தின்னா முளுக்கோளியும் படி அரிசிச்சோறும் திம்பா. சாராயங் குடிக்கமாட்டான், கள்ளுதாங் குடிப்பா. ஆளு இப்பிடித் திம்முனு இருப்பான். நம்ம பொம்பிள சாணி தட்டுறாளே அந்த மதகுக்கு இந்தண்ட மிராசு அடியாளுவ, நாங்க அந்தப் பக்கம் அரிவா, மம்முட்டி, கம்புன்னு கெடச்சதெல்லாம் வச்சிட்டு வந்தது வருதுன்னு நிக்கிறம். சந்தனச்சாமி இந்தாண்ட பூந்து வார, தடி சும்மா சுழலுறது. மாமுண்டி பாஞ்சா, ஒரே வெட்டு. இந்தப்பய முலையான், அப்ப எடுத்த ஓட்டம், பெருமா கோயில் மூலையில போயி ஒட்டிக்கிட்டாம் பாரு.. அவனுக்குப் பேரே தெரியாம மூலையான்னே பேரு வந்திச்சி...”

     கிழவர் சிரிக்கிறார்.

     “நேத்து முந்தாநா கூட வந்திட்டுப் போனாரு...”

     “நீங்க எந்த மாமுண்டியச் சொல்றீங்க தாத்தா?... இப்ப எலக்ஷனுக்கு மின்ன... கொலையாகிப் போனாரே, அவரா?”

     “ஆமா... அப்ப போலீசில புடிச்சி கேஸ் நடந்து ஏழு வருசம் உள்ள இருந்துட்டு வந்தா. அவனத்தான் குத்திப் போட்டானுவ... எங்கியோ ஆரம்பிச்சு எங்கியோ போற. அது பாரத யுத்தம்டான்னு நம்ம ஐயுரு சொல்லுவாரு... சந்தன சாமி செத்ததும் மிராசுதாரு, அந்தப் பொம்பிளகளுக்கு தலா ஆயிர ரூபா குடுத்தாராம். ஆனா? அவளுவ சொன்னாளுவளாம், நாயத்துக்குப் போராடுறவங்க அவுங்க. இவங்க இப்ப அடியாளா போறப்பவே நாங்க வாக்கரிசி போட்டுத்தா அனுப்பிச்சம்னு போயிட்டாவளாம். காசக்கூட வாங்கிக்கலியாம். அப்புடி அது உணுமயில நாயத்துக்கான யுத்தம்தா. ஆனா எதிராளிய தருமமா நடக்கல. போலீசு தருமமா பாக்கல. சரளக்கல்லப் போட்டு முட்டிக்கால் போட்டு வரச்சொல்லி அடிப்பானுவ... பொம்பிளகள. எப்பிடிச் சொல்றது? தலைப்பய! மண்ணையும் தண்ணிரையும் குழச்சி அப்பப்ப வித்தூணி உசிர்ப்பச்சை கண்டு வளத்து மணியாக்கி வயித்துப் பசி தீர்க்கிற தொழிலச் செய்யிறவன் சேத்துலதான் உழண்டிட்டிருக்கிறான். ஆனா மனசொப்பி அந்தப் பயிரயே அழிக்கமாட்டான். சுமையா இருக்குதுன்னு மனுச உயிர அழிப்பானா? செம... அநியாயக்கார வச்ச செமயக் கூடச் செமக்கிறம்...”

     சம்முகத்துக்கு உடல் சிலிர்க்கிறது. பொன்னடியான் உள்ளிருந்து வரும் மீன் வறுக்கும் மனத்தில் மூழ்கி உள்ளேயே பார்வையைச் செலுத்துகிறான்.

     “காந்தியக்கா? காந்தியக்கா?...”

     காத்தானின் மகள் பொன்னி இடுப்புக் குழந்தையுடன் கூவுகிறது.

     “த பாரு, நாவு எங்கமேலல்லாம் மண்ணெடுத்துப் போடுறான்.”

     “காந்தி, போயி அந்தப் பயலக் கூட்டிட்டுவா... போ, போ...”

     சம்முகம் அந்தப் பையனால் மற்றவருக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற உணர்வுடன் கண்டிப்பாக இருப்பார்.

     “ஏன் காம்ரேட் இவனுக்கு வயித்தியம் ஏதும் பண்ணல...”

     “...எங்கப்பா?... அப்பல்லாம் நான்தான் ஓடிட்டே இருந்தேன். பொம்பிள, பிள்ளயப் புளிய மரத்தடில கிடத்திட்டு வேலை செய்யிவா. நாலு வருசம் வரயிலும் கவனிக்கல. பிறகும்கூட, மரத்தடிலே அந்த தோசம் இந்தக் காத்துன்னு ஏதோ சொல்லிட்டிருந்தாங்க. ராவில அப்பல்லாம் ஊளயிடு வான். அப்புறம் புதுக்குடி டாக்டர்ட்ட கேட்டம். ஒண்ணும் பண்ண முடியாதுன்னுதா சொல்லிட்டாரு, என்ன செய்யிறது?”

     “அதில்ல காம்ரேட், இப்ப ஊனமுற்றோர் ஆண்டில் எதனாலும்... பாக்கலாமுல்ல...”

     “என்னத்தப் பாக்கிறது? ஊனமில்லாதவங்க வசதிக்கே பாக்க முடியல...”

     காந்தி ஆத்திரத்துடன் அழுக்கும் மண்ணுமான நாகுவை இழுத்துக் கொண்டு வந்து திண்ணையில் அதட்டி உட்கார வைக்கிறாள்.

     பிறகு அவர்களுக்குச் சோறு போடச் செல்கிறாள்.

     தட்டுக்களில் சோறு முதல் நாளின் குழம்பும் போட்டு மீன் கறியும் வைத்து மூவரிடமும் கொண்டு வருமுன் பொன்னடியான் எழுந்து தானே வாங்கி வைக்கிறான். “உனக்குத் தொந்தரவு...”

     காந்தி இந்த உபசாரத்துக்கு எந்த எதிரொலியும் காட்டவில்லை.

     “காம்ரேட், இன்டர்வியூக்குப் போனதாச் சொன்னாங்க, பணங்கட்டியாச்சா?”

     “அந்த வயித்தெரிச்சல ஏங்கேக்கிற? ரெண்டாயிரம் ரூபாக்கி எங்கே போக...?”

     “அதா, ரெண்டொரு எடத்தில் இப்பிடி டொனேசன் வாங்குறாங்கன்னு கேள்விப்பட்டேன். சும்மா கண் துடைப்பு. தாழ்த்தப்பட்டவர்ங்கறதெல்லான்னு... நமக்குத் தெரிஞ்ச ஓராள் இருக்காரு நம்ம எஸ்.என். இருக்காரில்ல, அவர் மாமா. நெல்லு வியாபாரம். இப்பிடின்னா, ரொம்பக் கொறஞ்ச வட்டிக்குக் குடுக்கிறாரு. இப்ப, இந்த மாதிரி டொனேசன் வாங்குறாங்கறத அம்பலப்படுத்தி உடக்கணுமின்னாக்கூடக் குடுத்திட்டுத்தா அத்தாட்சி காட்டணும். நா சொல்லி வைக்கிறேன். இன்னிக்குத் தேதி எட்டில்ல. பன்னண்டாந்தேதி போல நீங்க சங்கத்து ஆபீசுக்கு வந்தீங்கன்னா வந்து கூட்டிட்டுப் போறேன்.”

     “கடன் வாங்கிட்டா அடய்க்கணுமில்ல. இப்பத் தோணுது. பிறகு இவ வேலைக்கி இதுமாதிரி பணம் குடுக்கணும்னா எங்க போக? பெரிய பையன் உதவாம போயிட்டான். மூணு வருசம் படிக்கணும், அதுவரய்க்கும் சின்னவளையும் கட்டிக்குடுக்காம வச்சிருக்கிறதா? உங்கிட்ட சொல்றதில என்னப்பா? பிரச்சனை ஒண்ணோட போறதில்லை.”

     “நீங்க அவநம்பிக்கையே பட்டிருந்தா எப்பிடிப்பா? நான் படிக்கிறதுக்கும் அம்சு கலியாணத்துக்கும் என்ன ஒட்டு? அவள கட்டிக்குடுங்க?...”

     “கட்டிக் குடுக்கிறதுன்னா லேசாயிருக்கா? உங்கம்மா இப்பவே மாப்பிளக்கி வாட்ச், மோதிரம் போடணும், இருபத்தொரு ஏனம் குடுக்கணும், அப்பிடி இப்பிடின்னு பிளான் போடுறா. ஒரு அஞ்சு ஆயிப்பூடும் இதுவே, சவரன் என்ன விலை விக்கிறாங்க? தாலித் தங்கமே ஆயிப்பூடும். கடன் வாங்கிக் கலியாணம் கட்டிப் பிடறேன். பிறகு உன் புருசன் முனஞ்சி படிக்க வச்சோ வேலை வாங்கியோ குடுக்கட்டும்...” என்று பொன்னடியானைப் பார்த்துக் கொண்டு கேலியாகக் கண்களைச் சிமிட்டுகிறார்.

     “ஆமாண்டால பொன்னு, நீ கட்டிக்கிட்டுப் பொஞ்சாதியப் படிக்க வச்சிக்க மேச்சாதிலல்லாம் அப்படித்தான் செய்யிறா. கட்டிக்கிட்ட பொம்பிளய, வூடு கூட்டுற துடப்பக் கட்டன்னு நினைக்காம, அதுக்கு ஒரு அந்தசுக் குடு...” என்று கிழவர் வெளிப்படையாகப் பொன்னடியான்தான் அவர்கள் தேர்ந்திருக்கும் மருமகன் என்று உடைத்து விடுகிறார். காந்திக்குக் கோபம் வருகிறது. “எனக்கொண்ணும் இப்ப கலியாணம் வேணாம்” என்று வெடிக்கிறாள்.

     ஆசை நிழலாடும் கீழ்ப் பார்வையுடன் அமர்ந்திருக்கும் பொன்னடியான் திடுக்கிட்டாலும் சமாளித்துக் கொள்கிறான். எதுவும் பேசவில்லை.