உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 3 வயிற்றுப் பசி புதிய எரிச்சலில் தெரியவில்லை. எங்கே போகிறார்கள் என்பது உறைக்காமலேயே பஸ் நிறுத்தத்துக்கு நடக்கின்றனர். “எனக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே நல்ல எதிர்காலம்னு நினைச்சேன். நடுவில் மூணு வருசம் நிக்காம மூச்சப் புடிச்சிடிருந்தா... இதுக்குள்ள பி.காம்னாலும் மூணாம் வருசம் வந்திருக்கலாம். அப்ப பி.யூ.ஸி. எனக்கு ஈஸியா ஸீட் கிடைச்சிருக்கும்...” “அதுதா முடியலியே? இப்ப அதைச் சொல்லி என்ன பிரயோசனம்? ஏதோ இருநூறு முந்நூறுன்னா ஒழிஞ்சி போவுதுன்னு சமாளிச்சுக் குடுத்துடலாம். ஒரேமுட்டா ரெண்டாயிரம்னா எங்கே போக?” “அறுப்பானதும் திருப்பிடறதாச் சொல்லி யாரிட்டன்னாலும் புரட்ட முடியாதாப்பா?” அவளுக்கு எப்படியேனும் இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்ற துடிப்பாக இருக்கிறது. விவசாயத்துக்கே அறுப்பை நம்பிக் கடன் வாங்கியிருக்கும் நிலை. அதுவும் குறுவை ஒரு சூதாட்டம் தான். வந்தால் வந்தது; வராவிட்டால் போச்சு. பச்சை நெல்லைக் களத்திலேயே விற்றுத் தொலைக்க வேண்டும். அந்தக் கெடுபிடியைத் தெரிந்து கொண்டு வியாபாரி கொள்ளா விலைக்குப் பேசுவான். எங்கே போய்ச் சொல்லி அழ! தந்தையின் மௌனம் அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது போலும்? “ஏம்பா, நீங்க உங்க சங்கத்துக்கு கட்சிக்கின்னு எத்தினியோ உழக்கிறீங்க. எத்தினியோ பேர் உங்களுக்குத் தெரிஞ்சவங்க நல்லநிலையில் இருப்பாங்க. பதவியில் இருக்கிறவங்க கூடத்தான் யாரானாலும் இந்த ஒத்தாசை செய்ய மாட்டாங்களா? கேட்டுப்பாருங்கப்பா...” “எங்கம்மா? எஸ்.எம். இருக்காரு? டெல்லில போயிப் பார்க்க முடியுமா?” “இயக்கத்தில் சம்பந்தப்பட்டவங்க. எத்தினியோ பேர் தா அன்னிக்குத் தெரிஞ்சவங்க. ஆனா, எவ்வளவோ நல்லாத் தெரிஞ்ச வளவனே, இதுல சம்பந்தப்பட்டவரே, கட்டாயமா குடுக்கணும்னு சொல்லிட்ட பிறகு யார நம்பிம்மா போறது?...” “இந்த வருசமும் வீணாப் போகக் கூடாதுப்பா...” “பார்ப்பம். ஷார்ட் ஹான்ட் டைப்ரைட்டிங் படிக்கலாம். வேலை வாய்ப்புப் பத்தி ரேடியோவில கூடச் சொன்னாங்க, நாலு நா முன்ன. எதுக்கும் இப்ப புதுக்குடில விசுவநாதனப் போயிப் பார்ப்பம். அவருடைய அண்ணன் மகதான பெரிய டாக்டருக்குப் படிச்சி ஆஸ்பத்திரி வச்சிருக்காங்க. உனக்கு ஏதானும் நர்ஸ் வேலை, இல்லாட்டி அம்மை குத்துர சுகாதார இனிஸ்பெட்டரு வேலை முயற்சி செய்யச் சொல்ற...” “போங்கப்பா, எனக்கு சீக்கு அழுகைன்னாலே புடிக்கல...” புதுக்குடி பஸ் கிளம்பத் தயாராக இருக்கிறது. மணி இரண்டரையாகி விட்டது. அந்தக் காலத்தில் இந்த விசுவநாதன், பெரிய வீட்டுப் பிள்ளையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தவர். இளம் புரட்சியாளராக இவர்களிடையே கனல் மூட்ட வந்தார். ஒவ்வொரு அமாவாசை இரவிலும் அவர்களைத் தேடிக் கூட்டம் நடத்த வருவார். கூட்டம் முடிந்ததும் அவரைப் பத்திரமான இடத்தில் கூட்டிக் கொண்டு விடுவது அந்நாள் பதினான்கு வயதுப் பையனாக இருந்த சம்முகத்தின் பொறுப்பு. கிராமம் கிராமமாகச் செல்வதும், தலைமறைவுத் தலைவர்களுக்கு உணவு கொண்டு செல்வதும், இரகசியக் கூட்டங்களுக்குச் செய்தி கொண்டு செல்வதும் அந்த நாட்களில் இவருடைய முக்கியப் பணிகள். உயர் வகுப்பில் பிறந்த தலைவர்களுக்கு அவருடைய அம்மா சோறு சமைத்துக் கொடுத்துக் கொண்டு போக வேண்டிய சந்தர்ப்பங்கள் பல. “எல, நீ கையால தொடாம தூக்கோட குடுத்திடு, நமக்குப் பாவம்...” என்பாள். வெயில் ஊமைப் புழுக்கத்தைத் தோற்றுவிக்கிறது. பஸ் நிறுத்தம் செல்லுமுன், சன்னிதித் தெருவிலேயே இறங்கி விடுகிறார்கள். காந்திக்குப் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஓட்டலில் ஏதேனும் சாப்பிட்ட பின்னர் ஐயரைப் பார்க்கச் செல்லலாம் என்று எண்ணம். ஆனால் அப்போதைய நிலையில் தந்தையிடம் எதையும் சொல்ல அச்சமாக இருக்கிறது. பழைய தெருவானாலும் வீடுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன. இவர் வீடு மட்டும் என்றோ அடிக்கப்பட்ட பச்சை வண்ணம் மங்க, மெருகின்றித் தனியாகத் தெரிகிறது. அடுத்த வீடும் இதே போன்ற மூன்று கட்டு வீடுதான். ஆனால் அது முற்றிலும் புதுமையாக்கப்பட்டு, வாசலில் பெரிய எழுத்தில் ‘ரங்க மன்னார் ஆஸ்பத்திரி’ என்று எழுதப் பெற்ற பலகை தொங்குகிறது. டாக்டர் கீதா ரத்னம் எம்.பி.பி.எஸ். டி.ஜி.ஓ. டாக்டர் ரத்னம் எம்.எஸ். என்ற பெயர்களும் கண்களைக் கவருகின்றன. ‘இவர்களெல்லாம் உயர்சாதிக்காரர்கள்; வசதியுடையவர்கள். இந்த வசதி எனக்கு இருந்தால் நானும் இப்படி காந்திமதி எம்.பி.பி.எஸ். என்று போட்டுக்கொள்ள முடியாதா’ என்று ஒருகணம் நினைத்துக் காந்தி பெருமூச்செறிகிறாள். வாயில் வழியை ஒரு சாக்குப்படுதா மறைக்கிறது. சாக்குப்படுதா மறைப்பில் சாய்வு நாற்காலியில் கைகளை நீட்டிக்கொண்டு சாய்ந்து விசுவநாதன் புகை குடித்துக் கொண்டிருக்கிறார். கருகருவென்ற கிராப்பு முடியும், அந்தச் சிவப்பு நிறமும் ராஜ கம்பீரமும் எங்கே போயின? அந்த விசுவநாதனா? முடி முழுதும் நரைத்து, முன் மண்டை வழுக்கையாகி சருமம் வறண்டு கண்கள் குழிவிழுந்து, ஒற்றைப் பல் மட்டும் முன்பக்கம் தெரிய, அவரை அடையாளம் கண்டுகொள்வதே சிரமமாக இருக்கிறது. “வணக்கம் ஐயா...” கையிலிருந்த பீடித்துண்டைப் பக்கத்துப் பீங்கான் கிண்ணத்தில் போட்டுவிட்டு விழிகளை நிமிர்த்துகிறார். “ஆரு? அட... அட? கிளியந்துற சம்முகமா?” குரலில் உற்காசம் பீறிடுகிறது. “உக்காரு, உக்காரப்பா.” பெஞ்சியில் உட்காருகிறார். “உட்காரம்மா... நம்ப மக காந்திமதி.” “தெரியுமே? இங்க படிச்சிட்டிருந்தாளே? இப்ப என்ன கோர்ஸ் படிக்கிறா?” “எஸ்.எஸ்.எல்.சி.யோட நிறுத்திட்டமே? அதுக்குதா இன்னிக்கு வந்தது. உடம்பு ரொம்ப மெலிஞ்சி போயிட்டீங்களேய்யா?” ஒற்றைப் பல் தெரியச் சிரிப்பு. “அறுபதுக்கப்புறம் உடம்பு மெலியணும். கூடவே ஏழெட்டு ஆயிருக்குமே!” “ஆமா! உன் மூத்த பையன் என்ன பண்ணறான்? முன்ன ஒருகா அவன் வேலை சம்பந்தமா வந்த. நான் கூட இங்க சுப்புசாமி வந்தான், சொன்னேன்...!” இவர் முகம் சுருங்குகிறது. “வேலையாயிருக்கிறான், மட்றாசில, கைத்தறி போர்டில..?” “பணம் ஒழுங்கா அனுப்புறானா?” “ஏதுங்க? கலியாணம் கட்டிக்கிட்டானே?” “அப்பிடியா? அதென்ன, கட்டிக்கிட்டானேங்கற? நீங்க பார்த்துப் பண்ணலியா?” “கண்காட்சி வேலை செய்ய ஒரு பிராமணப் பொண்ணு வந்து பழகிருக்கு. கட்டிக்கிட்டேன்னு கம்முனு எழுதிட்டான். எனக்கு அந்தப் பய பேரில எப்பவோ நம்பிக்கை விட்டுப் போச்சு. ஆனா, அம்மாகாரிக்குத்தா மனசில ரொம்ப வருத்தம். ஒரு கவுரதியா படிச்ச பையனுக்குக் கலியாணம் காட்சி செய்ய முடியாமப் போச்சேன்னு...” “அப்படியா சமாசாரம்...? பிராமணப் பொண்ணுகதா பெரும்பாலும் அரிசனங்களைக் கட்டுகிறதெல்லாம்.” சிரித்துக் கொள்கிறார். “ராமசாமி எப்பிடி இருக்கிறான்? உங்கப்பாவுக்கு எழுபத்தஞ்சு வயசுக்கு மேல இருக்குமேடா?” “ஆமாங்க, கண்ணு சுத்தமாத் தெரியல...” “கள்ளுக்கடதா தொறந்தாச்சி. பொஞ்சாதிய இப்பவும் அடிக்கிறானா?” “அடிக்க மாட்டாரு. ஆனா எதானும் பே சிட்டே இருப்பாரு.” “அந்தக் காலத்தில் உங்கம்மா நல்ல உசரமா செவேல்னு எப்படி இருப்பா? இவன் சொல்லுவான். ஐயரே, இவ மட்டும் ஏனிப்படி நெறமா இருக்கா தெரியுமா? இவொ இந்த சேத்தில உழலுற அடிமப் பய ரெத்தத்தில வந்தவ இல்ல. கோட்டியூருபண்ண, தேவதானம், நூறுவேலி, பசுமடம், சத்திரம் கோயில்லாம் ஒரு ஐயிரு பாத்திட்டிருந்தாரு செவேல்னு ரோசாகணக்க... கடுக்கன் ரெத்தமாட்டுச் செவப்பு. கருகருன்னு பெரிய முடி இவாயி தொடுப்பாயிடிச்சி. புள்ள பொறந்ததும் இவப்பன் வூட்டம்மா கிட்டப் போயி நின்னானாம். துணி, கஞ்சிக்கு நொய்யரிசி, வெளக்கெண்ண, எல்லாம் குடுத்திட்டு, ‘ஏண்டா சங்கிலி பொட்டப் புள்ளன்னியே, கறுப்பா இருக்குதா, சேப்பா’ன்னு கேட்டாங்களாம். இது இங்க வெள்ளிக் குஞ்சாட்டம் இருக்குதுன்னு எப்படிச் சொல்லன்னு நின்னாராம்...” சம்முகம் இப்போது சிரித்துக் கொள்கிறார். ஆனால் காந்தி இதே கதையைத் தாத்தா சொல்லிச் சீண்டக் கேட்டிருக்கிறாள். பாட்டிக்குக் கோபம் வரும். “ஆமா, ஒங்கிட்டத்தா வந்து சொன்னாரு சும்மா பச்ச புள்ள கள வச்சிட்டு என்னா பினாத்தற...” என்பாள். “ஆனா சம்முகம், உங்கம்மா அந்தக் காலத்தில் கம்பீரமாத்தான் இருப்பா. மிராசு ஆளெல்லாம் திமுதிமுன்னு அரிவாளும் தடியும் கம்பும் எடுத்திட்டு வர போலீசு ஒருபக்கம் வளைச்சிக்க, மடியில கல்லக் கட்டிக்கிட்டு ஆம்பிளகளுக்குக் கவண் எறியக் குடுத்தவல்ல உங்கம்மா?... அவ சாயல உம் பொண்ணுக்கு இருக்கு!” சம்முகத்துக்குப் பெருமையாக இருக்கிறது. “அதொரு காலம். சாட்டையடி வாங்கிட்டு சாணிப்பால் குடிச்சிட்டு ஏன்னு கேக்கத் தெரியாம இருந்தவங்கள மனிசங்கன்னு சொல்லித் தட்டி எளுப்பவே ரத்தம் குடுக்க வேண்டி இருந்திச்சு. இப்ப அதெல்லாம் சொன்னாப் புரியாது. ரமேசு எங்க இருக்கு இப்ப? வேலையாயிட்டுதா?” “அவன் துபாய்க்குப் போயிட்டான். அவன் பணம் அனுப்பித்தான் இப்ப குடும்பம் நடக்குது சம்முகம்...?” “அடாடா? ரமேசு துபாய்க்கா போயிருக்கு? எப்ப?...” “ஆச்சே, ஒருவருசமாகப் போவுது. அவம்மா ஆன மட்டும் போகக்கூடாதுன்னு தடுத்துப் பார்த்தா. அதுக்காகவே ஒரு கலியாணத்தையும் கட்டிவச்சா. நான் வேண்டான்டின்னேன். பெண்சாதி முகத்தப் பாத்திட்டு இருந்திடுவான்னு அவ கணக்குப் போட்டா. அது தப்புக்கணக்காப் போச்சி. அவளே இவனப் போங்க, திரைக்கடலோடியும் திரவியம் தேடணும்னிட்டா. இளமையில் விரகம்ங்கறது தொடர்ந்து வருது. நீங்க அந்தக் காலத்திலே குடும்பம் பொஞ்சாதின்னு பாராம, குண்டக் கையில வச்சிட்டு விளையாடி எதிர்க்கட்சி கட்டினிங்க. பின்னால அதும் போதாதுன்னு புடுங்கி எடுத்திட்டிருக்கா. கலியாணம் பண்ணி மூணாம் மாசமே போயிருக்கிறான். அவளுக்குப் பணம் வரும். இங்கயும் எதோ பிச்சை போடுறான்.” சம்முகத்துக்கு நா எழவில்லை. “பொண் குழந்தைங்க...!” “சாவித்திரியக் கேக்குறியா? டாக்டருக்கு ஸீட் கிடைக்கல. ஃபார்வர்ட் கம்யூனிட்டின்னு ஒரு பிசுக்கு இருக்கே! ஸீட் கிடைச்சா வீட்டை வித்தாலும் படிக்க வச்சிடலான்னு பார்த்தேன். ஊஹும்... பி.எஸ்.ஸி. ஜூவாலஜி படிச்சிட்டு கிண்டர்கார்டனில் எழுபது ரூபா கொண்டாரா. கல்யாணம் பண்ணணும். காலங்கழிச்சுப் பெத்த ஒரு பொண்ணும், ஆணும் இதுக்கே ஒண்ணும் செய்ய முடியலேன்னு வயிசு காலத்தில தாபப்பட்டுப் புடுங்கி எடுக்கறா. இந்தக் கத கிடக்கட்டும். நீ எங்க, பொண்ணக் கூட்டிட்டு வந்தே!” “அத ஏங் கேக்கிறீங்கையா! நீங்க என்னமோ ஃபார்வர்ட் கம்யூனிட்டி. எடம் கிடைக்கலன்னிங்க. தாழ்த்தப்பட்ட இனம், இங்கயும் ரெண்டாயிரம் குடுத்தாதா ஸீட்னு பச்சையாக் கேட்டுட்டானுவ. எங்க போயிச் சொல்லி அழ?” “எம்.பி.பி.எஸ்.ஸுக்கு செலக்ஷனுக்கா போயிட்டு வர?” “டாக்டருக்கில்லீங்க! பாலிடெக்னிக், மூணு வருஷம் எலெக்ட்ரானிக்ஸ். வளவனைத் தெரியாதுங்களா? அவனே தான் கூசாம ரெண்டாயிரம் கொண்டாந்து டொனேசன் குடுத்திடுங்கன்னா கண்டிசனா! இது நல்ல மார்க் எல்லா தகுதியும் இருக்கு. ஆனா உள்ள பாருங்க, இப்பிடி...” “ரெண்டாயிரம் புரட்டிக் குடுத்திட்டா, படிச்சி முடிச்சிடுவ. பிறகு வேலைக்குச் சில ஆயிரங்கள். மூணு வருசத்தில் இன்ஃப்ளேஷன் கணக்குப் போடணும். பிறகு புரோபேசன் அப்படி இப்படின்னு ஆயிரங்களைக் குடுத்து ஆயிரங்களை வாங்கிச் சேர்க்கணும். இதுக்குப் போயி ஏன் அழுவுற? இப்ப புருசன் பொஞ்சாதி வெவகாரத்திலேந்து எல்லாம் வியாபாரம் தான். லாபத்தை முன்னிட்டு அடிபிடிப் போட்டிதான்...” “மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு. இப்ப என்ன பண்ணுவம்னு தெரியல. உங்ககிட்ட எதானும் கேட்டுட்டுப் போகலான்னுதா வந்தது. யோசனைதா. நாம ஒரு கொள்கை, சித்தாந்த வழி நிக்கறவங்க, பகிரங்கமா கேக்கறதுக்கு உடன்பட்டுடறது சரியில்லன்னு தோணுது...” “போடா, உன் சித்தாந்தத்தையும், கொள்கையையும் கொண்டு உடப்பில போடு...” அவர் உள்ளே எழுந்து செல்கிறார். காந்தி முகத்தைச் சுளித்துக்கொண்டு நெளிகிறாள். சம்முகமோ சுவரில் வரிசையாக மாட்டியிருக்கும் பழைய நாளையப் படங்களைப் பார்வையிடுகிறார். இளமை பொங்கும் நேரு விஜயலக்ஷ்மி, கமலா நேரு, சுபாஷ் போஸ்; காந்தி... “அந்தக் காலத்துல இவரு எப்படி இருப்பார் தெரியுமா? இவுரு பாடினா அப்படியே மந்திரத்தால கட்டுப்போட்டாப்பல அதிலியே நிலச்சிப் போவோம். அரிகேன் விளக்கொளியில் எத்தனை அமாவாசைக் கூட்டங்கள்! இவருக்கு... இந்த கதின்னா... இவங்கப்பா அந்தக் காலத்துல வக்கீல் படிச்சிட்டு காங்கிரசில் சேந்தாரு, பின்னாலே விட்டுட்டாரு. அப்பாக்கும் மகனுக்குமே எதிர்க்கட்சி, சண்டை. நாப்பது வேலி குடித்தனம்...” ‘இதெல்லாம் எதற்கு சொல்லுறீங்க?’ என்று கேட்க முடியாமல் காந்தி தலையைப் பிடித்துக் கொண்டிருக்கையில் அவர் முகக் கடுப்புடன் திரும்பி வருகிறார். பிறகு வாசற்படியில் நின்று அடுத்த சுவர் ஆஸ்பத்திரி பக்கம் எட்டிப் பார்த்து, “சிங்காரம்?... டே சிங்காரம்...?” என்று குரல் கொடுக்கிறார். “என்ன வேணுங்கையா, நான் செய்யிறேனே?” “ஒண்ணுமில்ல. நீ உக்காந்துக்க." சிங்காரம் ஆஸ்பத்திரிக்குரிய வெள்ளை உடுப்புடன் வருகிறான். “அங்க யாரிருக்கா? பழனி, இல்லாட்ட. ஆருமில்ல?” அவர் முணுமுணுவென்று பேசுவது யார் காதிலும் விழவில்லை. ஆனால் ஒட்டலிலிருந்து சாப்பாடோ எதுவோ வாங்கிவரச் சொல்கிறார் என்று சம்முகத்துக்குப் புரிந்துவிட்டது. பிறகு வந்து உட்காருகிறார். “என்ன சொல்லிட்டிருந்தேன்...” “ஆமாப்பா, எல்லாரும் மதம் மாறுறாங்களாமே? என்ன கேலிக் கூத்து பாரு? அஞ்சு நா முன்ன, சீனுவாசன் வந்திருந்தான். பூதலூரு, அவன் தாம்பா, சட்டப்படி 35-65க்கு ஒத்துக்காம சண்டியன் கோனாரு இழுக்கடிச்சி இவனும் விட்டேனா பாருன்னு கேசு நடத்தி ஜயிச்சான். உனக்குத் தெரியும்...” “ம், சொல்லுங்க?” “அவன் சொல்லிட்டிருந்தான். என்னங்க போராட்டம் போராடுகிறது? இன்னும் எங்க சேரில கோடை வந்தா குடி தண்ணி இல்ல. மனிதன் செத்தா புதைக்கச் சுடுகாடு இல்ல. ஒட்டுமொத்தமா மதம் மாறுறோம்னு அறிக்கை வுடலாம்னு பார்க்கிறேன்னு...!” சொல்லிவிட்டு ஆஹாஹா என்று சிரிக்கிறார். சம்முகத்துக்குச் சுருக்கென்று ஊசி குத்துகிறது. படலையைத் தூக்கி எறிஞ்சிட்டுத் தோப்பு வழி பொணத்தைக் கொண்டு போங்கடா என்றாரே, என்ன செய்தார்களோ? இந்த நெருக்கடிகளில் கூட விட்டுக் கொடுக்காத சண்டியர்கள் இருக்கிறார்கள். “நீங்க சிரிக்கறீங்க. அன்னிக்குப் போராடித் தலைதூக்கியது உண்மைதான். ஆனா, இன்னும் போராடுற நிலையிலேயே இருக்கிறோம்ங்கிறத நினைச்சா எதுவும் தோணல. முன்ன வெளியாளுக்கு இருந்த அநுதாபம் ஆதரவுகூட இன்னிக்கி இல்ல. உண்மை இதுன்னா நம்பக்கூட மாட்டாங்க.” உள்ளிருந்து அம்மாள் தலை நீட்டுகிறாள். “எல போட்டிருக்கு. வரச்சொல்லுங்க!” “எல இருக்கா? நா ஆளனுப்பிச்சேனே!” “வாப்பா, சம்முகம், கால் கை கழுவிவிட்டு வா! போம்மா உள்ள!” கொல்லைக் கிணற்றடியில் சென்று கை கால் கழுவிக்கொண்டு வருகையில் கூடத்தில் இரண்டு தையல் இலைகளைப் போட்டு சோறும் குழம்பும் பரிமாறி இருக்கிறாள் அம்மாள். காந்திக்குப் பசிதானென்றாலும் இப்படிச் சாப்பிட உட்காரப் பிடிக்கவில்லை. “வெறும் சோறும் குழம்பும்தானோ? ஏண்டி? ஒரு அப்பளம் பொரிக்கக்கூடாது?” “எண்ணெயில்ல!” என்று மறுமொழி வருகிறது. “என்னடி எதைக் கேட்டாலும் இல்ல இல்லன்னிண்டு! சம்முகம் எனக்கு எத்தனை நாளைச் சாப்பாட்டைக் கையில் தொடாமல் கயிற்றைக் கட்டி எடுத்துண்டு ஓடி வந்திருக்கிறான்? என் உசிரைக் காப்பாத்தியிருக்காண்டி! துப்பாக்கியால போகாத உசிர், பசில போயிடாதபடி காப்பாத்தினவண்டி!” “இப்ப நா என்ன வச்சிண்டா மாட்டெங்கறேன், அஞ்சும் பத்தும் பாத்து சாமான் வாங்கிப் போடறது தட்டுகெட்டுப் போறது.” சம்முகத்துக்கு உண்மையிலேயே வந்து அகப்பட்டுக் கொண்டோமே என்று இருக்கிறது. சாப்பிட்டு முடித்து இலையைச் சுருட்டிக்கொண்டு எழுந்திருக்கிறார். அவருக்கு முன்பே காந்தி முடித்துவிட்டாள். “ஏண்டா, மோர் ஊத்திக்காம அதக்குள்ள?” “வாணாங்க, இதுவே வயிறு நிரம்பிடுச்சி...” அவருக்குக் குரல் கம்மிப் போகிறது. “சம்முகம், புருசன் சம்பாதிக்கல, அவனால ஒரு ஆதாயமுமில்லன்னா, கட்டின பெண்சாதி கூட மதிக்கிறதில்ல...” அந்த வீடு பெண்கள் குடும்பம் குடித்தனம் என்றில்லாமல் வருபவர்களும் போகிறவர்களும் தங்குபவர்களுமாக இருந்திருக் கிறது. பல முறை போலீசார் சோதனை போட்டதுண்டு. இவரைக் குடும்பத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தார்கள். வக்கீலைப் பார்க்க வந்தாலும், ஓடி ஒளிய வந்தாலும் இந்த இடம் சொந்தம். டிபன் காரியரில் விறைத்துக் கிடக்கும் மிச்சச் சோற்றை உண்டு, அக்கிணற்றில் நீரிறைத்துத் தேய்த்து வைத்துவிட்டு நடையாகவே கிராமத்துக்கு ஓடிய நாட்கள் எத்தனை! இப்போது கிணற்றைத் தொடலாமோ என்ற கூச்சம் ஏன் வருகிறது? தாம் இங்கே வந்திருக்க வேண்டாம். அநாவசியமான உளைச்சல்கள். மீண்டும் வாயிலுக்கு வருகையில் வாசலில் ஒரு சிவப்பு, கறுப்பு வண்ணம் இசைந்த கார் நிற்கிறது. வெளியே வரவே பிடிக்காமல் அட்டையாக மனம் சுருங்கிக் கொள்கிறது. காந்தி பெஞ்சியோரம் நிற்கிறாள். தொப்பி போட்டாற் போன்று தலைமுடியும் பெரிய நிழற் கண்ணாடியுமாகச் சவடாலாக நிற்பவன் ஆறுமுகத்தின் மகன் என்று உடனே புரிந்து கொள்கிறார். “என்ன மாமா? ரமேஷ்கிட்டேந்து லெட்டர் வருதா? நம்ம ப்ரஃண்ட் ஒருத்தரு சில விவரம் கேட்டிருந்தாரு போயி எழுதறேன்னு சொன்னான். நிதம் இந்தப் பக்கம் வரதுதான் விசாரிக்க மறந்திடுவேன்...” “ஒண்ணும் வரலியே? உனக்கே போடுவான். ஏம்பா நா உங்கப்பாவப் பாக்கணுமின்னேன். ஆளைக் காணவேயில்லை. பெரிய மனுசங்களாயிட்டீங்க...!” “ஓ, அதெல்லாம் இல்ல மாமா. அப்பா சிங்கப்பூர் மலேயால்லாம் போயிட்டு போன வாரந்தா வந்தாரு. அதோட, ரைஸ்மில்ல மார்டனைஸ் பண்ணுறது சம்பந்தமா அலஞ்சிட்டி ருக்காரு. ஒருதரம் முன்ன அட்டாக் வந்ததிலேருந்து எச்சரிக்கையா வேற இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு...” “சொல்ற மாமா, நா வரட்டுமா? விசாரிச்சிட்டுப் போலான்னு வந்தேன்.” திரும்பும் போது காந்தியின் பக்கம் அவன் பார்வை நிலைக்கிறது. “பை த பை... நீங்க, கோபாலு ஸிஸ்டர்ல்ல?” அவள் கண்கள் அகலுகின்றன. “ஆமாம், அண்ணனத் தெரியுமா?” “தெரியாம? காலேஜில ஒண்ணாப் படிச்சமில்ல?” கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கைகளில் தட்டிக் கொண்டே அவளைப் பார்த்து முறுவலித்து “வரேன்” என்று விடை பெறுகிறான். அடுத்த நிமிடம் கார் கிளம்பிச் செல்கிறது. “சம்முகம்! ஏன் அங்கியே நின்னிட்ட?” “நிக்காம என்ன செய்யிறது.” “பயலத் தெரியிதல்ல? ப...லே... எமகாதகன். அப்பனின் சாமர்த்தியத்தில் மூணு பங்குகூட இருக்கும். இவம் பேரு தெரியுமா? நினைப்பு இருக்கா?” “ஏன் இல்ல, இவந்தா புல்கானின்...” “அடுத்த பையன் ஜவஹர், பிறகு காமராஜு, கடசிப் பையனுக்கு என்ன பேரு தெரியுமா சம்முகம்?” அவர் சிரிக்கிறார். இவருக்கு சிரிப்பு வரவில்லை. “வுடுங்கையா அந்தப் பேச்சை. நன்றி கொன்ற ஆளுங்களப் பத்தி என்ன பேச்சு? நாயவுடக் கேவலம். இது மாதிரி ஆளுங்களாலதா இந்த நாடே கெட்டுப் போச்சு. தலைன்னு ஒண்னு ஒழுங்கால்லாம...” “தலை நிறைய ஆயிட்டது. அதான் ஆபத்து. இந்த பிரும்மா, நாலு முகத்தை திக்குக்கொண்ணா வச்சிட்டு படச்சிப் போடுறாரு அதான் ஒருத்தன் போற வழி ஒருத்தன் போறதில்ல...” “உங்களப் பாக்கணும்னு நினைச்சேன். பார்த்தாச்சி, நா வரேன் ஐயா...” “இரு, போகலாம், நா ஒண்ணு சொல்ற, உனக்கு இரண்டாயிரம் இந்தப் பயகிட்ட ஒரு வார்த்த வுட்டாப் போதும். பேசாம வாங்கி, பெண்ணைச் சேரு. இப்ப இவனுகளுக்கு ஒரு பொருட்டில்ல அது.” சம்முகத்துக்குக் கோபம் கொள்ளவில்லை. “என்னையா! நீங்க ஒண்ணு, வெளயாடுறீங்க... காந்தி வாம்மா, போவலாம்!” “என்னடா, கோபிச்சிட்டுப் போற? இப்படி எல்லாம் பாத்திட்டு உக்காந்திருக்கிறேன். பிடுங்கல் மென்மையான உணர்ச்சிகள், தன்மானம், இல்லே நேராகப் பார்க்கும் வீரம் எதுவுமே இப்ப செல்லுபடியாகப் போறதில்ல... அதென்ன, கால்ல, நானும் அப்பவே புடிச்சிப் பார்க்கிறேன். வீங்கிருக்கிதா என்ன?” “தெரியலய்யா, ஒரே வலி, வரணுமேங்ற ஒரு நிர்ப்பந்தம், வந்தேன்...” அருகில் அழைத்துக் குதிகாலைத் தொட்டுப் பார்க்கிறார். “...கீதா ஆறு மணிக்கு மேலதா வருவா. இரேன் போகலாம்?” “டாக்டர் இங்க இல்லையாய்யா? என்னால இருக்கிறதுக்கில்ல. நடவு வேற.” “அவுங்க தஞ்சாவூர்லல்ல இருக்காங்க. இங்க வந்து போவாங்க. இங்கேயே சிங்காரம்தான் குட்டி டாக்டர். பிரசவ கேசெல்லாம் துரையம்மா பாத்திடுவா. சிங்காரத்துக்கிட்ட போயிக்காட்டி மருந்து வாங்கிட்டுப்போ. சிறங்கா வருமோ என்னமோ? எனக்குன்னா, சித்தப்பா, நீங்க அது சாப்பிடக் கூடாது. இது சாப்பிடக்கூடாது, ஸ்மோக் கூடாதுன்னு ஒரே தடையுத்தரவு. சக்கரை உனக்கொண்ணும் இருக்காது. உப்பெண்ணெய் காச்சி ஒத்தடம் கொடு.” சம்முகம் கடைசியில் சிங்காரத்தையும் பார்க்கவில்லை. |