(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

21

     அம்சு இரவுச் சோறுண்ட பின் தட்டை எடுத்துக் கொண்டு செல்கிறாள். ஒரு முழு நாளாகிறது. தாயும் கூடக் காந்தியிடம் பேசவில்லை.

     காந்தி மூலையில் நின்று உள்ளூறக் குமுறுகிறாள்.

     கிட்டம்மா “இடியாத் தலல வுழுந்திடிச்சுக்கா!” என்று ஓலமிட்டுக் கொண்டு வருகிறாள்.

     “வாய்க்காரு புதுக்குடி போயிருக்காரு. சொல்லிட்டுப் போவலான்னு வந்தே. நேத்தெல்லாம் ஒரே அலயா அலஞ்சிட்டம். இப்பிடி இடியா வந்திரிச்சே!”

     லட்சுமி நாகுவைச் சோறு தின்ன வைத்துக் கொண்டிருக்கிறாள்.

     “நா நல்லூரு நாயக்கர் நெலத்திலே சம்பா நடவு. நாயக்கரம்மா கூட ரெண்டு நா கூலி வருதேன்னு போயிட்டே செலவுக்கே கட்டல. இன்னிக்கு வாரப்ப வெளக்கு வச்சிப் போச்சி. பஸ்ஸு வரும்னு நின்னு பார்த்தே வரல. மழவேற தூத்தப் போட்டுக்கிட்டே இருக்கு. கடத் தெருப்பக்கம் வாரச்சேதா காதுல வுளுந்திச்சி. குஞ்சிதத்த வேற புடிச்சிட்டுப் போயிருக்காவளாம்?”

     “அவ பேச்ச எடுக்காதீங்கக்கா! என் தலக்கிக் கல்லுவுழுந்ததே அந்த நேயினாலதா. நேயி அவ புழுத்துத் தெருத் தெருவா அலஞ்சி சாவணும்! எம் வவுறு எரியிது!”

     கையைச் சொடுக்கிக் கிட்டம்மா சபிக்கையில் காந்திக்கு உடல் குலுங்குகிறது.

     “அவள ஏன் சாபம் போடுற? அவ அலஞ்சிட்டாப்பல உனக்கு நல்லாயிடுமா? நாமதா ஏற்கெனவே ஈனக்குடில பெறந்து நாயாப் படுறமே, பத்தாதா?”

     “வூட்டோட வுழுந்து கெடங்கன்னு அடிச்சிப்பே. ஆபுரேசனப் பண்ணித் தொலச்சிடே, புள்ள வாணாமுன்னு. அந்த ஆம்புல கொணந்தெரிஞ்சும்; இப்ப கையுங்களவுமாப் புடிபட்டுச் சந்திசிரிக்கிது.”

     “இப்ப இவரு புதுக்குடிக்குப் போயிருக்காரா?”

     “ஆமா. பணங்காசு தோது பண்ணணும், சங்கத்துல பேசணும்னு சொல்லிட்டுப் போயிருக்காரு...”

     கிழவி வாயிலிலிருந்து வந்து அருகில் உட்காருகிறாள்.

     “புள்ளங்களெல்லாம் வூட்டில இருக்கா?”

     “நேத்து பூரா பட்டினி. அன்னாடம் கஞ்சிக்காச்சக் கடன் வாங்குற கதியாயிருக்கு. அல்லாருக்கும் இவ வெடுக்குத் துடுக்குன்னு பேசிட்டுத் திரியிறாளேன்னு காட்டம். மாட்டி வச்சிட்டாங்க... நா என்ன பண்ணப்போற...?”

     “அழுவாதடி? இதுக்குமேல எத்தினியோ வந்திருக்கு. என்னாடா, நாம தொடுற பொம்பிளய இவனும் கை வைக்கிறதான்னு கூட மாட்டிருப்பானுவ, ஒனக்குத் தெரியாது. அந்தக் களுத கோனாம் பய ஒருத்தன நம்பி ஓடி வந்தா, அவெ வுட்டுட்டுப் போயிட்டா. நாஞ் சொன்னே செவனேன்னு இங்க ஒரு பக்கம் இருந்துக்க. இல்லாட்டி இங்க நம்ம குடில ஒருத்தனச் சேத்துக்க. காக்கா குளிச்சா கொக்காயிடுமா? மேச்சாதிக்காரனுக்குப் பொண்டாயிருந்திட்டா நீ மேச்சாதின்னு சேத்துப்பாவளாடீன்னே. பொம்புளயாப் பெறந்துட்டு சாதி என்ன சாதி? அல்லாச் சாதிலியும் பொம்புள சீரழியற சாதிதே. கட்ன பொண்டாட்டிய கண்ணும் கண்ணீருமா அடிச்சிட்டு வண்டி கட்டிட்டுப் போயி ஊருமேயுற ஆம்புள இருக்கிறப்ப பொம்புளக்கி என்ன காவந்து இருக்கு? அவனுவ மேவேட்டிய போட்டுட்டு டாவுடீவுன்னு வந்திடுவா. இவ கத இப்ப என்ன ஆச்சி? தன் சனம் ஊருநாடுன்னு இல்லாம வெரட்டிட்டிங்கன்னு நமக்கு இவ ஒழுங்கா இருந்தா ஈரம் இருக்குமில்ல? இப்ப எவன் வருவான்? போலீசு டேசன்ல அந்த நாயிங்க பொம்புளயக் கண்டா சும்மா வுடுமா?”

     காந்திக்கு உதடுகள் துடிக்கின்றன.

     குஞ்சிதத்தை அவள் பார்த்திருக்கிறாள். குளப்படியில் அழுந்தக்கால் வைக்கவில்லை எனில் எவ்வாறு கால் வழுக்கிக் கொண்டுபோய் விடுமோ, அவ்வாறே வாழ்கையும் கவனமில்லை எனில் ஊன்ற வழியில்லாமல் போய்விடும் போலும்!

     தந்தை வெறுத்து உதாசீனம் செய்தார்.

     தாய். “ஏண்டி கண்ணு...” என்று ஒரு அன்புச் சொல் உதிர்க்கவில்லை. இத்தனைக்கும், வாழ்க்கையில் கரிப்பையும், கசப்பையும் அநுபவித்துக் கொண்டிருப்பவள்...

     களகளவென்று கண்ணிர் ஊறுகிறது.

     கிட்டம்மா அவளைப் பொருள் பொதிந்த பார்வையால் பார்த்துக்கொண்டே “வாரேன்...” என்று போகிறாள்.

     “அக்கா, சாப்பிட வாயே?” என்று அம்சுதான் கூப்பிடுகிறாள்.

     லட்சுமி எதுவும் பேசாமலே நாகுவைக் கை கழுவத் தள்ளிச் செல்கிறாள்.

     அவன் காந்தியை அப்போதுதான் பார்ப்பவனாக முகம் மலருகிறான்.

     “கா...யி...கா.யி...”

     ஒரு சிரிப்பு வழிகிறது. “முயாயி... வய்யா...”

     “போடால...” என்று லட்சுமி தள்ளுகிறாள்.

     காந்தி முன்பெல்லாம் விடுதியிலிருந்து வரும்போது அவனுக்குக் கடலை உருண்டையோ மிட்டாயோ வாங்கி வருவாள். அந்தப் பழக்கம்.

     அவனுடைய பிறப்பும் வாழ்வும் ஒரு புதிய பொருளை அவளுக்கு அறிவுறுத்துகிறது. இந்த நாகு பெண்ணாகப் பிறந்திருந்தால் மூன்று வயசிலேயே வயிறு காய்ந்து இறந்து போயிருக்கும். இத்தனை நாட்கள் உயிர் வாழவே வாய்ப்பு இருந்திருக்காது.

     “ஏண்டி இப்ப என்னாத்துக்கு அழுவ?... என்னமோ, போன, வந்த இப்ப இந்தத் தலகுனிவு வந்திருக்கலன்னா, இதே கிட்டம்மா ஊரு பூராத் தமுக்கடிச்சிட்டு வருவா?”

     “இப்ப மட்டும் அடிக்க மாட்டான்னு என்ன நிச்சியம்? இவ என்னாத்துக்கு இப்ப உள்ள வந்தா? ஒளவறியத்தா!" என்று முணுமுணுக்கிறாள் பாட்டி.

     “உங்கப்பா பார்த்தாராடி?”

     “அல்லாம் பாத்தாச்சி. அடிச்சாச்சி, முள்ளு குத்திடிச்சின்னு சொல்லுறதும் கல்லு தடுக்கிடிச்சின்னு சொல்லுறதும் போல பொண்ணுதா கெட்டுப் போவுதுன்னு ஒலகம் சொல்லும். உள்மாந்திரம் என்னன்னு அறிஞ்சு தெரிஞ்ச பொம்பளையே அத நெனக்கலன்னா?”

     அம்மாளும் பாட்டியும் பேசிக்கொள்கையில் அவளுக்குக் கண்ணிர் மடையாகப் பெருகிக் கன்னங்களில் வழிகிறது.

     “வூட்டில செக்குலக்க போல நா இருக்கிறன, ஏங்கிட்டச் சொல்லிட்டுப் போனியாடீ? புதுக்குடில, கன்யாஸ்திரி, அவங்கதா டீச்சர், ஏங்கிட்டக் கேக்குறாங்க. காந்தி எப்படி இருக்குன்னு. அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க, நாயக்கர் வூட்டம்மா, எல்லாம் புடுங்கி எடுத்திட்டாங்க. வரப்புல வந்து தெறிச்சிட்டா எந்தப் பயிரையும் கண்டவங்களும் முதிச்சிட்டுத்தாம் போவா. நாத்துக்கட்டுலேந்து நழுவிடிச்சின்னு ஆரு வயல்ல கொண்டு வய்ப்பானுவ? படிச்சவ, சூடுபட்ட குடும்பத்துல தலையெடுத்துவ, அச்சடக்கமா இருக்கத் தெரியாம போயிட்டியே?”

     “என்ன மன்னிச்சிறது கிடக்கட்டும். எத்தினி சுமையோ செமக்கப் பிறந்திருக்கிற ஊரு உலகம் மன்னிக்காதே?”

     அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

     இரவில் பத்திரமான இடத்தில் படுத்திருந்தாலும் உறக்கம் வரவில்லை.

     அன்று சாலியின் பிடியிலிருந்து தப்பி ஓடி வந்த சாகசத்தை நினைத்துப் பார்க்கிறாள். இரவு தனக்கு அடைக்கலம் கொடுத்த செங்கமலத்தையும், மின் வாரிய ஆபீசிலே நாட் கூலி வேலை செய்யும் அவள் புருசனையும், குழந்தையையும் நினைக்கிறாள். அவர்களிடம் ஒரு பொய்க் கதையைச் சொல்லி இரவு தங்கினாள். காலை பஸ்ஸுக்கு தணிகாசலமே அவளைக் கூட்டிவந்து புதுக்குடியில் ரத வீதியில் விட்டான். பஸ் சில்லறை கூட வாங்கிக் கொள்ளத் தயங்கினான்.

     “ஏம்மா காதுத் தோட்டக் கழட்டித் தாரங்கற? பாவம், நாங்கொண்டு உன்னப் பத்திரமா வுட்டுடறேன்!” என்று கூட வந்தான்.

     “படுபாவிப் பயல்கள். இவங்க ராச்சியம் தானே இப்ப நடக்குது? படவாவ இந்தப் படி ஏற விட்டதே தப்பு: நீங்கல்லாம் இப்படித் தொட்டாச் சுருங்கியா ஊளு ஊளுன்னு அழுறது தாம் புடிக்கல எனக்கு! அஹிம்சை அஹிம்சைன்னு சொன்ன காந்தி கூட ‘பொண்ணுகள் தற்காப்புக்குக் கத்தி வச்சுக்கலாம். குத்தமில்ல’ன்னு சொல்லிருக்கார். நான் சாவித்திரிகிட்டக் கூடச் சொல்வேன்...” என்ற ஐயரின் சொற்கள் காதில் ஒலிக்கின்றன.

     “விபசாரத்தடைச் சட்டம்னா என்ன மாமா...” என்று அவரிடம் தான் கேட்டாள் அவள்.

     “ஏன்? நீ எதுனாலும் வெளில சொன்னா உன்ன அதுல மாட்ட வச்சிடுவேன்னு பயமுறுத்தினானா?”

     “உங்களுக்கு எப்பிடி மாமா தெரிஞ்சிச்சி?” என்று ஆச்சரியப்பட்டாள்.

     “இது தெரியாதா? இதபாரு, இந்த தருமம், சட்டம் எல்லாம் ஆம்பிளைக்கித் தப்பிச்சிக்கத்தா. உங்களப் பயமுறுத்துறதுக்கு கற்புங்கறது. அது போயிடிச்சின்னு இவனுவ இஷ்டப்படி வேட்டயாடுறது. உன்னப்போல இருக்கிற பொண்ணுக இனிமே அழக்குடாது. வேண்டியது அழுதுட்டீங்க. பொம்பிள சுமக்கத்தா மனுஷாபிமானம். அந்தப்பய... நா அவன ஏழெட்டு வயசில கூட்டிட்டு வந்திருந்தா, பாத்தேன். இதுமாதிரி ஒரு பிரயோசனமும் இல்லாத சுமய சொமக்க வந்திருக்கு. சட்டம், சமூகந்தா, நீங்க இந்த அநியாயங்கள் எல்லாம் மாத்த நிக்கணும். இவனுவ மாதர் சங்கம் அது இதெல்லாம் போலி. உங்க சங்கிலிகளை நீங்கதா அறுத்துக்கிட்டு ஏன்னு கேக்கணும். அன்னிக்கிருந்த எத்தனையோ அநியாயம் போயிருக்கு. ஆனா, ஒண்ணு மட்டும் அப்படியே இருக்கு. பெண்ணடிமத்தனந்தா. இல்லாட்ட நாக்குமேல பல்லுப்போட்டு எவனாலும் நாலாயிரம் அஞ்சாயிரம் பத்தாயிரம்னு கேப்பானா? பழகின ஆனய விட்டுப் புது ஆனய அடிமைப்படுத்துறாப்பல, உங்களுக்கு நீங்களா விலங்கு போட்டுக்கறாப்பல தொடர்ந்து வந்திட்டிருக்கு. எங்க வூட்டில, அவ பேசுறப்ப, நா பல சமயம் ஒண்ணுஞ் சொல்லாம ரசிச்சிட்டிருப்பேன். இப்பிடிப் பேசுறாளேன்னு கோவம் வந்தாகூட அடங்கிடும். பெண்ணுக்குச் சமமா பொருளாதார சுதந்தரம், பொறுப்பில் பங்கு, மரியாதை எல்லாம் உண்டு. சட்டத்த மாத்தணும். நீங்க ஏன்னு கேட்டுக் கிளம்பிட்டீங்கன்னா ஒரு பயலுக்கு மூஞ்சி கிடையாது. கற்பு பொம்பிளைக்கித்தானா? விபசாரம் பொம்பிளயாலா வருது?...”

     சாவித்திரியின் சேலையை உடுத்துக்கொண்டு ஒரு வாரம் போல் அந்த வீட்டில் அவள் அவரிடம் துணிவுப் பாடம் கேட்டாள்.

     தேவு அங்கு அடிக்கடி வருகிறான் என்பதை அப்போது தான் அறிந்தாள்.

     அவளை அங்கு கண்ட முதல் நாளே அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான்.

     “நீங்க... இங்கதா இருக்கிறீங்களா?”

     “அட்வகேட் ராமசுந்தரம் வீட்டுக்கு வருவேன். நீ... நீங்க...”

     “நீங்க அன்னிக்கு ஒட்டல் வாசல்ல நின்னிங்க. ஆனா என்னால எதுவும் சொல்ல முடியல. ஆனா, உங்களக் கண்டதும் எப்படீன்னாலும் தப்பிக்கணும்னு நிச்சயமா நினைச்சிட்டு ஓடிவந்தேன்... திரும்பி வாரப்ப உங்களக் காணல...”

     “இருந்தேன். தையக்கடயில உக்காந்து நீங்க போறதப் பார்த்தேன். ஆனா... எப்பிடி என்னால அனுமானிக்க முடியும்?”

     “அதாண்டா சொல்லிண்டிருந்தேன். நீங்கள்ளாம் இப்ப இருக்கிற சட்டங்களை ஒத்துக்கக் கூடாது. உங்க விலங்குகளை நீங்களே உடைச்சிக்கணும்னு!” தேவு சிரித்தான்.

     “சாமி, வடக்கெல்லாம் பொம்பிளய வித்து வாங்குறதுக்குச் சந்த நடக்குதாம். பொம்பிளய அடகுவச்சுக் கடன் வாங்குறாங்களாம். இப்பவும் புருசன் செத்ததும் சிதையில படுத்துக்கிறோம்னு பொம்பிளக போறாங்களாம்.”

     “அவ்வளவுக்கு இல்ல, நாம்ப மேலங்கறியா? வெளயாடலடா தேவு, நீதான் தீவிரமாப் பேசுற. இந்தப் பொம்பிளகள ஒண்ணுசேக்க முடியுமா உன்னால? அதுக்கு ஒரு மூவ்மெண்ட் வேணும். பொழுது விடிஞ்சு எத்தனை பெண் அவமானச் சங்கதிகள் கேட்கிறோம்?...” என்றார் அவர்.

     “ஏன் சாமி அவுங்களக் கூட்டுற மூவ்மென்டையும் ஆம்பிளதா ஆரம்பிக்கணமா?...” என்று தேவு சிரித்தான் அவளைப் பார்த்து.

     “ஆமாண்டா, அவங்கதா வெளில தல நீட்டவே இப்ப பயமாயிருக்குதே? அதெல்லாம் இல்ல, உங்களுக்கு நல்லது செய்ய வாரம்னு நம்பிக்கை குடுக்கலேன்னா வருவாங்களா? அதான் சொன்னேன்!”

     “ஆரம்பிச்சிட்டாப் போச்சு சாமி. இவங்க வாழ்க்கையை ஒரு சட்டம் பாதிச்சா, சமுதாயத்தின் வளமையையுந்தா பாதிக்கிது. இவங்களப் போலவங்க ஊருக்கு வந்து பொம்பிளங்க கிட்ட மனமாற்றத்தைக் கொண்டுவரணும். கிராமத்தில எதும் பேச முடியிறதில்ல?”

     “ஜமாயிடா, உனக்கு இப்பவே என் நல்லாசி. அந்த காலத்துல தேவதாசி ஒழிப்புக்கு முத்துலட்சுமி ரெட்டி சட்ட சபையில அப்படி ஒரு எதிர்ப்பைச் சமாளிச்சாங்கப்பா. தேவதாசி முறை ஒழிஞ்சாச்சின்றாங்க. ஆனா, இன்னிக்கி பொண்ணுங்கள வச்சு வியாபாரம் செய்யிறது சர்வசாதாரணமாயிருக்கு. படிக்கிறது, சம்பாதிக்கிறது எதுவும் மனசை மாத்தல. இதுக்கு முதல்ல ஆம்பிளங்க மாறவேணும். இவனுவள அடிச்சித்தான் மாத்தணும். உளுத்துப்போன சாதிப்பழக்கம், சம்பிரதாயம், சமூகப் பழக்கம், சமயப் பழக்கம் எல்லாம் மாறணும். ஒரு பொம்பிளை காவலில்லாம ஒரு தனி மனிசங்கிட்ட அம்புட்டுட்டா மானங்குலைக்கிறதா? என்ன அநியாயம்டா இன்னிக்கு நடக்குது?

     நள்ளிரவில் அவர் கேட்ட, உரைத்த சொற்கள் உயிருடன் ஒலிக்கின்றன.

     அவர் தந்த துணிவில் அவள் தேவுவுடன் திரும்பி வந்திருக்கிறாள். வந்தவுடன் முதலில் கேட்கும் செய்தி.

     “ஏண்டி தூக்கம் வரலியா, முளங்காலக் கட்டிட்டு உக்காந்திருக்கிற?”

     “என்னாடி? என்னாடி? எதுனாலும் இருந்திச்சின்னா சொல்லித் தொல. தாயப்போல சீரளிய வாணாம்.”

     “யம்மா, குஞ்சிதம். போலீஸ் ஸ்டேசன்ல இருப்பாளே. உன்னையும் என்னையும் போல பொம்பளைதான! இதுக்கு முடிவே கிடையாதா? அன்னிலேந்து இன்னி வரயிலும், காட்டுமிராண்டி காலத்தேந்து, இன்னிக்குச் சந்திரனுக்கு மனுசன் போற காலத்திலும் ஒரே நீதிதானா? இப்பல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பொம்பளையும் ராவில வச்சிருக்கக் கூடாதுன்னு சட்டம் இருக்குதாம்?”

     “சட்டம் எத்தினியோதா இருக்குன்னு சொல்றாங்க. அதொண்ணும் நமக்கு உதவுறதில்லியே?”

     “அம்மா, ஒதவாத சட்டத்த நாம் மட்டும் ஏன் வச்சுக்கணும்? ஒதவாத சட்டத்துக்கு நாம ஏன் அஞ்சி நடக்கணும்?...”

     “அஞ்சலன்னா என்னாடி செய்ய முடியும்?”

     “பொம்பளக்கிப் பொம்பளையே எதிரியா நிக்காம நம்ம எனம்னு நினைக்கணும். கிட்டம்மா குஞ்சிதத்த என்னா திட்டுத் திட்டுச்சி? குஞ்சிதம் ஏதோ ஊருலேந்து புருசன் வெரட்டி வந்திச்சின்னு பாட்டி சொல்லிச்சி. இப்பிடி வந்த உடனே அவளைக் கண்ணியமா ஆரும் வாழ விடல. கட்டின பொஞ்சாதி புள்ளகளுக்குத் துரோகம் செஞ்ச வீரபுத்திரனுக்குக் கச்ச கட்டிக்கிட்டு இப்ப எல்லாம் போராடுவாங்க. ஆனா, குஞ்சிதம்...? அவ எடுபட்ட பொம்பிள. ஆ, ஊன்னா அவ விவசாய சங்கத்துக்கு மெம்பரில்ல, மாதர் சங்கத்துல இல்ல, ஆரு செலவு செய்யிறதுன்னு கேட்டாலும் கேட்பா? நாம ஒரு பத்து நூறு பொம்பிள போயி, எண்டா பொம்பிளயை ராவில டேசன்ல அடச்சி வச்சியன்னு கேட்டா?... கேட்டா? நாங்க பூச்சிங்க இல்ல, கொட்டுற தேளுன்னு காமிச்சா?...”

     இருளில் அந்தக் குரலில் புதிய முறுக்குடன் தாயின் செவிகளில் பாய்கிறது.

     “ஏண்டி? போலிச நாம எதுத்துக்க முடியுமா?”

     “ஒருத்தரா முடியாது. பொம்பிளன்னா, அவள. அவள எப்பிடியும் நசுக்கிடலான்னு இருக்கிறத எல்லாரும் சேந்தா மாத்த முடியாதா? அம்மா ஆம்புளக வந்து நம்ம பக்கம் இருக்க மாட்டான்னு தோணுது. தப்பித் தவறி யாரோ ஒருத்தக இருப்பாங்களா இருக்கும். நாமளே சேந்து இதுக்கு ஒரு நியாயம் கேக்க இது சந்தர்ப்பம்... நாம் இத்த நழுவ விடக்கூடாது.”