உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்) 14 கோகிலம், காந்தியிடம் மிகவும் பிரியமாகவே இருக்கிறாள். கன்னங்குழியப் புன்னகை செய்துகொண்டு அவளிடம், “சாப்பிடவேயில்லியே? கூச்சப்படாதே!” என்று சொல்கிறாள். நித்யமல்லிகைப் பூக்களைச் செண்டாகக் கட்டி அவள் கூந்தலில் கொண்டு வந்து வைக்கிறாள். ஏலம் கிராம்பு மணக்கும் பாக்குப்பொடியும் வெற்றிலை கண்ணாம்பும் தட்டத்தில் வைத்து “வா, வெத்தில போட்டுக்க காந்தி!” என்று உபசரிக்கிறாள். “...படிக்கிற பொண்ணுன்னு நா வெத்திலை பேர்டுறதேயில்ல...” காந்திக்கு அவளிடம் சகஜமாகப் பேச இயலாதபடி ஏதோ ஒரு தடை உறுத்திக்கொண்டிருக்கிறது. தீவிரமாக ஏதேனும் பேசிவிடுவாளோ என்று அவளும் அந்தப் புன்னகையுடன் நிறுத்திக் கொள்வதாகத் தோன்றுகிறது. அவளைப்பற்றி அங்கு வந்த சில நாட்களில் சாலியின் வாயிலாகவே அறிந்து கொள்கிறாள். அவள் இசை வேளாளர் மரபில் வந்தவள்தான். ஆடற்கலை பயின்று அரங்கேறியதும் உண்மைதான். நில உடமைக்காரர்களை எதிர்க்கும் கட்சியில் இருந்து ஆறுமுகம் போராடி சதிவழக்கொன்றில் குற்றவாளியாகிச் சிறைத்தண்டனையும் பெற்றவர். இதற்கு முன்பே, அவருக்குச் சொந்த மாமன் மகளுடன் திருமணமாயிருந்தது. சிலகாலம் தலைமறைவாகக் கூத்துாரிலும் மங்கலத்திலும் இருந்த காலத்தில், இட்டிலிக்கடை போட்டிருந்த பொன்னம்மாவின் அழகு மகள் திலகம் அவருக்குக் காதலியானாள். கைவிடாமல் அவளைத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி இக்காலத்தில் இறந்து போயிருந்தாள். சிறையிலிருந்து வந்தபின் அவர் புதிய வாழ்க்கை தொடங்கினார். புதிய அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தபின் அவர் கைக்கொண்ட நெல்வியாபாரம், அவருக்குச் செல்வச் செழிப்பையும் பல தொடர்புகளையும் கொண்டு வந்திருக்கிறது. கோகிலத்தின் தாயும் பாட்டனாரும் அவள் புகழ் வாழ்க்கையில் கொடிகட்டவேண்டும் என்றுதான் வற்புறுத்தி னார்கள். ஆனால் அவளோ கல்லூரியில் படிக்கவேண்டும், திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றே பிடிவாதமாக இருந்தாள். தாயும், பாட்டனாரும் இறந்த பிறகு அவள் சொத்துக்களை அநுபவிக்கவும், அவளை ஏமாற்றவுமே ஓர் அந்தண இளைஞன் சிநேகம் கொண்டிருந்தான். அந்த நிலையில் அவளிடம் தம் தொழில் நிமித்தமாகப் பழகும் சந்தர்ப்பம் ஆறுமுகத்துக்கு வாய்த்தது. இவர் தொடர்பு ஏற்பட்டபிறகு, சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. அவருக்கு உரியவளாகவே வாழ்ந்து வருகிறாள். இரண்டு முறைகள் கருத்தரித்தும் மகப்பேறு வாய்க்கவில்லை. சென்ற ஆண்டில் தஞ்சை மருத்துவமனையில் சென்று ரணசிகிச்சை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காலையில் எழுந்தால் காபி, இட்டிலி, பொங்கல் என்று பலகாரங்கள், மணக்கும் சோப்புத் தேய்த்துக்கொண்டு குளியல்: நல்ல சேலை, படிக்க விதவிதமான கதைப் புத்தகங்கள், பத்திரிகைகள், சினிமா இலக்கியங்கள். வண்டிகட்டிக் கொண்டோ மோட்டார் சைக்கிள் பின்னமர்ந்தோ கொடி மங்கலம் விஜயா டாக்கீசில் சினிமா என்று நாட்கள் சிட்டாக ஒடுகின்றன, காந்திக்கு. அங்கவஸ்திரம் மாலையாகக் கீழ்வரை தொங்க, ஆறுமுகம் அங்கே முதல்நாள் சந்திக்கையிலே சாலி அவளை அவரைக் கும்பிடச் சொன்னான். “அப்பா, இவளுக்கு பாலிடெக்னிக்ல அட்மிசன் வேணுமாம்!” அவர் சிரித்தார். “அதென்னாத்துக்குமா உன்னப்போல பெண்களுக்கு? ஒரு டீச்சர், இல்லாட்டி டாக்டர்னாலும் கவுரவமாயிருக்கும். பியூசி. பிரவேட்டாப் படிச்சிடேன்! இங்க தஞ்சாவூரிலியே மெடிகல் அட்மிஷன் வாங்கித் தாரேன்!” என்றார். காந்திக்கு இது ஆகாயத்தில் பறப்பதாக இருந்தது. பின்னர் தனிமையில் காதலனிடம், “நெறயச் செலவாகும்னு சொல்றாங்களே, டாக்டர் படிக்க?” என்று வியப்புடன் வினவினாள். “செலவானா என்ன? எங்கப்பாக்கு நீ டாக்டராகனும்னு ஆசையிருக்காதா என்ன.” அவளது கற்பனை சிறகடித்துப் பறந்தது. தான் கையில் ஸ்டெத்துடன் ஆசுபத்திரியில் நடப்பது போலும், அங்கே ஒதுங்கிப் பாவங்களாக நிற்கும் கிராமத்துப் பெண்கள் இவளைக் கண்டு வணக்கம் தெரிவிப்பதுபோலும் ஒரு கற்பனை. “நம்ம கிளியந்துற சம்முக வாய்க்காரு மகதா வூட்டவுட்டுப் போயி, டாக்குட்டரா படிச்சி வந்திருக்கு” என்று அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். அதிசயிப்பார்கள். சீக்குக் குழந்தைகளையும், கிழவிகளையும் தான் தொட்டுப் பார்த்து வைத்தியம் செய்வதுபோலும், தன் பாட்டியும் அங்கு வந்து நின்று அவளை முகத்தைத் தடவி திருட்டி சொடுக்குவது போலும் ஒரு கற்பனை. “நீங்க அநாவசியமா விரோதம் பாராட்டிக் கோவிச்சிட்டீங்கப்பா, ஊரிலியே கெடந்திருந்தா நா இப்படி முன்னுக்கு வந்திருக்க முடியுமா?...” “தப்புதாம்மா, நீ செயிச்சிட்டே!” என்று தந்தை ஒப்புக் கொள்வது போல் ஒரு காட்சி. “இனிமே என்னாடா சம்முகம்! சம்பந்தியாயிட்டே அவனவின் சவுரியத்துக்குத்தான் எல்லாமே, அந்த குடிசயில நீ என்னாத்துக்கு இருக்கணும் இனிமே? புரட்சி கிரட்சி எல்லாம் வெறும் பம்மாத்துப் பேச்சு. நம்ம முதல்ல கவனிச்சுக்கணும். அதுக்குப் பிறகுதா சமுதாயம், தேசம் எல்லாம். நீ நல்லா சந்தோசமா இருந்தாத்தானே பிறத்தியானுக்கு எதானும் செய்யமுடியும்?...” இப்படி ஒரு கற்பனை. ஊஞ்சற்பலகையில் அமர்ந்து காந்தி தனது புகுமுக வகுப்புப் பாடங்கள் பற்றிப் பல்கலைக் கழகத்துக்கு எழுதி விசாரிக்கவேண்டும் என்று சாலியிடம் கேட்பதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில் அவனே வருகிறான். “காந்தி. அப்பாக்கு, அம்பேத்கார் முன்னேற்ற சங்ககாரங்க ஒரு பாராட்டு நடத்தறாங்களாம். அவருடைய சேவையைப் பாராட்டி, பலரும் பேசுறாங்க. உன்னையும் மேடையிலேத்தணும்னு எனக்கு ஆசை.” அவளுக்கு இனம் புரியாததொரு நடுக்கம் பரவுகிறது. “வாணாங்க...” “ஃபூல் என்ன வாணாங்க? அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்தார். அந்த வழியில் இவரும் சேவை செய்கிறார்னு பேச வேண்டியதுதான். உனக்கு எப்படிப் பேசுவதுன்னு நான் சொல்லித் தாரேன். நீ பேசினா நல்லா இருக்கும். போஸ்டர்ல பேர் போட்டு, போட்டோ பிடிக்க ஏற்பாடு செய்றேன். கைதட்டி உன்னை உற்சாகப்படுத்த நிறையப் பேர் இருக்காங்க...!” “எனக்கு வெக்கமா இருக்குங்க...” “அட, என்ன நீ இப்படிச் சுத்த பயந்தாங்குளியா இருக்க! கூட்டம் திருச்சில, ஒருதரம் வெற்றியா மேடை ஏறிட்ட, பின்னால பிரமாதமான எதிர்காலம் இருக்கு. இப்பெல்லாம் பேச்சுதான் மூச்சு...” அவன் மாடிக்கு அழைத்துச் சென்று டேப்பைத் தட்டிவிட்டு, தானைத்தலைவர்கள், புலவரேறுகள் தமிழ்க் காவலர்கள் பேசிய பேச்சுக்களைக் கேட்கச் செய்கிறான். “இப்ப, பெண்கள் அரசியல் களத்தில புகுந்தால் விருவிரென்று அமைச்சர் பதவி வரை வரமுடியும். நீ படிக்கிறதுபடி, ஆனால் இதுவும் முக்கியமானது காந்தி. எப்படியும் நீ முன்னுக்கு வரணும்ங்கறது என் ஆசை.” புதிய கிளர்ச்சியில் எதுவுமே புரியவில்லை. பெரிய அச்சு போஸ்டரைக் கொண்டுவந்து காட்டுகிறான். அவளுடைய பேச்சுப் பயிற்சிக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கிறான். கோகிலமும் மகிழ்ந்து போகிறாள். விழாவுக்கு முன்னாள் மைய அமைச்சர் ஒருவரும் வருகை தருகிறார். காரில் அவள், கோகிலம் இருவரும் செல்கையில் சாலி வண்டியை ஒட்டுகிறான். திறந்த வெளி மேடையில் யார் யாரோ பேச்சாளர். பிரமுகர்கள் இருக்கின்றனர். ஆறுமுகம் விரல்களில் மோதிரம் மின்ன, மினுமினுத்த சட்டையின் மீது மேல் உத்தரீயம் விளங்க, விழா நாயகராக அமர்ந்திருக்கிறார். அவளைப் பலருக்கு அறிமுகம் செய்விக்கிறான் சாலி. ஆறுமுகத்தின் தொண்டைப் பற்றி முன்னாள் அமைச்சர் ‘தீனதயாளன்’ என்று புகழ்ந்துரைக்கிறார். பேச்சாளருக்கு சாலி தான் பெரிய மாலையைப் போடுகிறான். பிறகு ஒவ்வொருவராக வந்து புகழ்ந்து ஆறுமுகத்துக்கு மாலை, துண்டு என்று பரிசளிக்கிறார்கள். இடையில், செல்வி காந்திமதியை எழுதிக் கொடுத்திருந்த படி தலைவர் அறிமுகம் செய்துவைக்கிறார். “இளைய தலைமுறையின் பொற்சுடர், கல்லூரிப் பட்டம் பெற்றவர். தீனதயாளரின் ஆதரவில் முன்னுக்கு வரும் புகழ்த்தென்றல்..” என்று அறிமுகம் அடுக்குகிறார். காந்தி உருப்போட்டிருந்த சொற்களை இனிய குரலில் உரையாக ஆற்றும்போது, கையொலி கலகலப்பாக உற்சாக மூட்டுகிறது. புகைப்படங்கள் பளிச் பளிச்சென்று அவளை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. ஆறுமுகம் மறுமொழியுரைத்ததும், நன்றி கூறல்களும் கூட அவள் செவிகளில் விழுந்தாலும் மனதில் பதியவில்லை. தனது ஒளிமயமான எதிர்காலம் பற்றிய கனவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறாள். தான் மிக நன்றாகப் பேசியதாகப் பெருமை பூரிக்கிறது. “வெளுத்துக்கட்டிட்ட காந்தி. அப்பாக்கு ரொம்ப சந்தோசம். நாளைக்கு எல்லா பேப்பரிலும் உம் பேச்சுக்கு இம்பார்டன்ஸ் குடுத்து போட்டோ வரணும்னு சொல்லி வச்சிருக்குறேன்!” இவர்கள் இருவரையும் ஒட்டலில் விட்டுவிட்டு, கோகிலமும் ஆறுமுகமும் காரில் ஊர் திரும்புகின்றனர். “காந்தி... எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. பரிமேலழகன் இல்ல, அவரு ரொம்பப் பாராட்டினாரு அவரு ரொம்பப் பவர்ஃபுல் ஆளு. யாரு எலக்சன்ல ஜயிக்கனும்ங்கறத அவருதான் தீர்மானிக்கறாரு. ரெண்டு தடவையா அப்பாவ ஜயிக்க வச்சவர் அவருதா. இப்ப அப்பாவ நிக்கவானான்னு சொன்னவரும் அவருதா.” “ஆரு, பெரிய மாலையா போட்டு அப்பாவப் பாராட்டினாரே, பெரிய கொடுவா மீச வச்சிட்டு?” “உனக்கு அறிமுகம் செய்து வச்சேனே? அவுருதா. அவர் சொல்லிட்டார்னா சொன்னதுதான். உன்ன வார இடைத் தேர்தல்ல நிக்க வக்கலாம்னு அவர் சொன்னாலும் ஆச்சரிய மில்ல, அப்படிப் பாராட்டினாரு...” எல்லாம் மிக இன்பமாக இருக்கிறது. ஓட்டல் அறையில் அல்வாவும், தோசையும், பரோட்டாவும், பாலும் பழமும் வரவழைத்துச் சாப்பிடுகின்றனர். “நான் கொஞ்சம் வெளியே போயி ஃபிரன்ட்ஸ்கிட்ட பேப்பரில் செய்தி போடுறது சம்பந்தமா பேசிட்டு வாரேன். நீ படுத்துத் தூங்குறியா கண்ணு?...” மென்மையாக முத்த மிடுகிறான். “சீக்கிரம் வந்திடுங்க. நான் தூங்கிட்டா எழுந்து கதவைத் திறக்கிறது சிரமம்...!” “...அப்ப. நா வெளியே பூட்டிட்டுப் போயிடட்டுமா? நீ எந்திரிக்க வேணாம். உள்ளாற வந்து இப்பிடி எழுப்பட்டுமா?...” “சீ. போங்க...” “போறேன்... போறேன்...” சிரித்துக்கொண்டே மென்மையாக அவளை விட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு போகிறான். உறக்கம் உடனே வந்துவிடவில்லை. புதிய கிளர்ச்சிகளில் மனம் அலைபாய்கிறது. பேச்சு... அரசியலுக்கு அதுவே ஆயுதம். காந்தி பெரிய பேச்சாளராகி, தேர்தலுக்கு நின்று வெற்றிபெற்று அமைச்சராக வரக்கூடிய எதிர்காலம் இருக்கிறது. பள்ளர்-பறையர் கட்சி என்று சார்ந்து, கூலிப் போராட்டம், குடிப்போராட்டம் என்று எதிர்ப்புக் கொடியையே தூக்கிக் கொண்டிருந்தால் மக்கள் ஆதரவு ஏது? விளக்குகள், வசனங்கள், புதிய பகட்டுக்கள், பாராட்டுக்கள் எல்லாவற்றுக்கும்தான் மதிப்பு இருக்கிறது. பத்திரிகையில் பெயர் வரும். பெயரை அப்பா பார்த்தால்? அவர் பார்க்காவிட்டாலும் மற்றவர்கள் பார்த்துச் சொல்வார்கள். “துரோகி!” என்று பல்லைக் கடிப்பார். ஆனால் வெற்றிப் படியின் உச்சியிலே அவள் செல்வாக்கான குடைக் கீழ் வீற்றிருந்தால் அப்போதும் துரோகி என்று உதறித் தள்ளுவாரா? உறக்கம் பிடிக்கவில்லை. வெளியே கதவு தாழ் கிளிக்கென்று விடுபடும் சத்தம் கேட்கிறது. அவள் அவசரமாக விளக்கை அணைத்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு உறங்குவதாக பாவனை செய்கிறாள். சில விநாடிகளில் அவள் முகத்திரை விலக்கப்பட்டு, ஒரு காட்டு மீசைக்குத்தலின் ஆக்கிரமிப்பில் திடுக்கிட்டுத் திமிறுகிறாள். அவளுக்கு இந்நாள் பழக்கமாயிருக்கும் மதுவின் வாசனை சூழ்ந்து நெருக்குகிறது. பளிரென்று உதயமான சந்தேகம் வலுக்க அவள் தன் பலமனைத்தையும் திரட்டி அந்த முகத்தை விலக்கப் போராடுகிறாள். சாலிக்கு இத்தனை பெரிய முகமுமில்லை, இம்மாதிரியான மீசையுமில்ல. “சி, போ! யாரு நீ?...” அவன் சிரிப்பு அசிங்கமாக இருக்கிறது. “தெரியலயாடி உனக்கு இன்னும்?” “சீ போயிடு! இல்லாட்டி இப்பக் கத்திக் கூச்சலிட்டு ஊரக் கூட்டிடுவேன்!” “உங்கூச்சலுக்கு இங்க யாரும் வரமாட்டாடி பத்தினித் தங்கம்! ஆனானப்பட்ட மேச்சாதிப் பொண்ணுகளே, இந்த மன்னனுக்கு மசிஞ்சு வருவா. அரிசனச் சிறுக்கி, என்னாடி எகிறற?...” “அட... பாவி?” “ச், அழுது ஊரக் கூட்டாத. உன்ன முன்னுக்குக் கொண்டாரணும்னு சாலி சொன்னான். புத்தியா இரு. ஏங்கிட்ட வந்த எந்தச் சிறுக்கியும் நடுத்தெருவில நிக்கமாட்டா...” அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள். அவன் விடவில்லை. அவளுடைய கனவுகள், கபடமறியாத கற்பனைகள் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து தூய்மை என்று போற்றக் கூடியதொரு மரபை உடைத்து அவளைப் படுகுழியில் வீழ்த்தி விட்டதான உணர்வை அளித்துவிட்டுப் போகிறான். கண்ணாடியில் தெரியும் தன் முகம் மிகவும் கோரமாக இருக்கிறது அவளுக்கு. விம்மி இதயம் உடைய அழுகிறாள். தனது மாயக் கனவுகள் இப்படிக் குலைக்கப்பட்டதை எண்ணி எண்ணித் தேம்புகிறாள். காதலனாகக் காட்சி அளித்தவன் கயவனிலும் கயவன் என்று கண்டு பொங்கிக் குமுறுகிறாள். வெய்துயிர்க்கிறாள். அவள் இந்த நாட்களில் படித்த கதைகளில் சினிமாக்களில் வரும் கற்பழிக்கப்பட்ட நாயகிகளில் ஒருத்தியாக ஆகி விட்டாளே? ஓட்டலில் விஷமுண்டு செத்தவர்கள், ரயில் தண்டவாளத்தில் கிணற்றில், ஆற்றில், கடலில். உயிர்விட்டவர்கள். அவளும் உயிர்விடத்தான் வேண்டுமா? ஐயோ...! காதல், கலியாணம், படிப்பு என்றும் பதவி என்றும் காட்டிய ஆசை வார்த்தைகள்... இதெல்லாம் துாண்டிலில் வைத்த இரைகளா? ஐயோ, அப்பா...! அம்மா..! “காந்தி, சட்டை எடுத்து வச்சியா? காந்தி இந்தக் காகிதத்துல என்ன எழுதியிருக்கு பாரு! காந்தி உனக்கு இந்தப் பை வச்சுக்க...” “எங்க காந்தி கத்திரிச்சி ஒட்டிச்சு, இந்த லெனின் படம் காந்தி படம் அல்லாம்...” செவிகளைப் பொத்திக் கொண்டாலும் அந்தக் குரல்கள் மண்டையை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பாட்டி இதமாகக் கூந்தலைத் தடவிப் பின்னும் குரு குருப்பாய் முடி முழுவதும் பரவி அவளைக் குறுக்குகிறது. “ஏ காந்தி, என் சர்ட்டத் தோச்சி வச்சியா? உனக்கு லைப்ரரிலேந்து புத்தகம் கொண்டாந்திருக்கிறேன்!” என்று உரிமை கொண்டாடிய அண்ணன், அவன் தான் இவனை வீட்டுக்குக் கூட்டி வந்து அவள் மனசில் ஆசைப் பொறிகளை எழுப்பினான். அவனுக்கு இந்தக் கயவனின் கபடங்கள் தெரிந்திருக்குமோ! அவளுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உடனே உருப்படியாகச் சிந்திக்கத் தெரியவில்லை என்றாலும் அவன் கயமையைக் கிழித்துக் காட்ட வேண்டுமென்ற ஆத்திரம் மூண்டு நிற்கிறது. விடியற்காலையில் தலையில் ஒரு துண்டுடன் அறைக்குள் வந்த அவன் சிரித்துக்கொண்டு தன்னை அணுகும்போது எழுந்து நின்று கர்ச்சிக்கிறாள். “சீ! நில்லுங்க அங்க! நீங்க இவ்வளவு மோசமா சதி செய்யிவிங்கன்னு நா கொஞ்சமும் நினைக்கல...!” அவன் மீசையை வளைத்துப் பல்லால் கடிக்கிறான். “இப்ப என்ன வந்திடிச்சி ஒனக்கு?” “இன்னும் என்ன வரணும்? என்ன ரூமில அடச்சிட்டு ஒரு பன்னிப்பயல வுட்டிருக்கிறீங்க!” “நா வுட்டனா. நீ என்ன சொல்றன்னே புரியல. நா பத்திரிகை ஆபீசில போயி உக்காந்து பேச்செல்லாம் ஒழுங்காப் பாத்துக் குடுத்திட்டு வந்தேன். இன்னிக்கிச் சாங்கால எடிஷன்ல வருது எல்லாம். முழு சைஸ் போட்டோ!” “வூட்டவுட்டு வந்ததுக்குச் சரியான பாடம் கத்துக் கிட்டேன். அவம் மீசையும் அவனும் ஐயோ...?” நெஞ்சு வெடிக்கத் துயரம் பீறிடுகிறது. “ஷ், அழாதே காந்தி...” என்று அவளை மென்மையாக முகத்தைப் பிடித்துச் சமாதானம் கூற வருகிறான். “இப்ப என்ன ஆயிடிச்சி? ஒண்ணில்ல. போயி குளிச்சிட்டு வாடா, கண்ணு. கற்பு கற்புங்கறதெல்லாம் பொண்ணுகளைத் தளைப்படுத்தற வெலங்கு. நீ சுதந்தரமா இருக்கலாம். உனக்கு அடுத்தடுத்து மேடையில நிறையச் சந்தர்ப்பம் வந்து பெரிய புள்ளியாகப் போற...” அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். “எனக்கு மேடையும் சுதந்தரமும் வாணாம். நீங்க என்னைக் கலியாணம் பண்ணிக்கிடணும்...” “பண்ணிக்கிட்டாப் போச்சு. இப்பவே நீ என் மிஸஸ்ன்னு தான் எல்லாரிட்டயும் சொல்லியிருக்கிறேன்.” “சீ...!” “சீ என்ன சீ? நான் ப்ராட் வியூஸ் உள்ளவன்...” “நீங்க ஒரு மிக மோசமான ஆளு, பெண் சாதியையே விலைக்கு விக்கிற கீழ்த்தரமான ஆளு... அப்ப...!” அவன் பொறுமை மீறிக் குரலைக் கடுமையாக்குகிறான். “என்னடீ என்னன்னு நினைச்சிட்டு மிஞ்சுற? நா மனசு வச்சா, உன்ன இப்ப விபசார தடைச் சட்டத்துங்கீழ விலங்கு போட்டுக் கூட்டிட்டுப் போக வச்சிடுவேன்! ஜாக்கிரத...! என்ன?” |