உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாகிய ஐங்குறு நூறு தெளிவுரை : புலியூர்க் கேசிகன் ... தொடர்ச்சி - 3 ... 2. வேழப் பத்து 'வேழப் பத்து' என்னும் இப்பகுதியின் பத்துச் செய்யுட்களிலும், 'வேழம்' என்னும் சொல் தவறாமல் வருகின்றது. இதனை 'வேழக் கரும்பு', 'கொறுக்கைச்சி', 'கொறுக்காந்தட்டை' என்றெல்லாம் வழங்குவர். இதன் தண்டு உள்ளே துளையுடையது. இதன் பூக்கள் வெண்மையாகக் கரும்பின் பூப்போலத் தோன்றும். மூங்கிற் சிமிழ்போலவே, இதன் தண்டையும் முறையாக நறுக்கி அஞ்சனம் பெய்து வைப்பதும் சிறுமியர் வழக்கம் ஆகும். இதன் தண்டுகள் கனமற்றவை யாதலின், அவற்றை வெட்டி ஒன்றாக இணைத்துக் கட்டி, மிதவையாக நீரிலிட்டு அதனைப் பற்றிப் புணையாகக் கொண்டு நீராடுவர். மருத நிலத்தே, நீர் வளம் மிகுந்திருக்கும் ஆற்றோரம் குளத்தோரங்களில் இது முகுதியாக வளர்ந்து அடர்ந்து காணப்படும். ஆற்றுக் கரையோரம் நீரரிப்பு ஏற்படாதிருக்க, இதனை மக்களே இட்டு வளரச் செய்வதும் உண்டு. 11. நல்லனும் அல்லனும்! துறை: பாணன் முதலாயினார்க்குத் தலைமகனது கொடுமை கூறி வாயின்மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு, வாயில் நேர்வாள் கூறியது. (1) 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னாற் புலப்படுதல் தகாது, என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். (2). (து.வி: (1) முதற்கண் தலைவன் பொருட்டாகத் தூதுவந்தாரான பாணன் முதலாயினார்க்குத் தான் மறுப்புரை செய்து போக்கினாள் தலைமகள்; ஆனால், பின் வந்து வாயில் வேண்டிக் கூறிய பாங்கனுக்குத் தன் இசைவினைப் புலப்படுத்துகின்றாள்; அவள் கூறுவதாக அமைந்தது இச் செய்யுள். (2) 'தலைவன் ஒழுக்கம் தவறுதலுடையனாயினும், அது நின்னாலே வெளிப்படல் தகாது' என்று சொன்னாள் பாங்கி; அவளுக்குத் தலைமகள் தன்னிலையை தோன்றச் சொல்லியதாகவும் இது அமையும்.)
மனைநடு வயலை வேழம் சுற்றும் துறைகேழ் ஊரன் கொடுமை நாணி 'நல்லன்' என்றும், யாமே; 'அல்லன்' என்னும், என் தடமென் தோளே! தெளிவுரை: மனையிலே நடப்பெற்று வளர்ந்துவரும் வயலைக் கொடியானது, கொடிவீசிப் படந்து சென்று, புறத்தேயுள்ள வேழத்தினைச் சுற்றிப் படர்கின்ற துறை பொருந்திய ஊருக்குரியவன் தலைவன். அவன் செய்த கொடுமையானது அயலாருக்கும் புலனாகி அலராவதற்கு நாணினமாய், 'அவன் எமக்கு நல்லவன்' என்றே யாம் வாயாற் கூறுவோம். அப்படிக் கூறினாலும், எம் பெரிய மென்தோள்கள், தம் மெலிவாலே, ''அவன் நல்லவன் அல்லன்' என்னும் உண்மையைப் பிறரும் நன்றாக அறியுமாறு புலப்படுத்தி விடுமே! கருத்து: யான், அவன் எனக்குச் செய்துவரும் கொடுமையை மறைப்பினும், என் தோள்கள் தம் மெலிவாலே பிறர் அறியுமாறும், பழித்துப் பேசுமறும் காட்டிவிடும் என்பதாம். ஆகவே, என் துயர் அடக்க அடங்கும் அளவினதன்று என்பதாம். சொற்பொருள்: வயலை - வசலைக் கீரை; பசலைக் கீரை எனவும் கூறுவர்; இது கொடி வகை; 'இல்லெழுவயலை' (நற் 179) என்பதும் காண்க. கொடுமை - பரத்தைமை நச்சிச் சென்ற ஒழுக்கத்தால், தன்னைப் பிரிவுத் துயருட்படுத்தி நலியுமாறு செய்திட்ட தொடிய செயல். கேழ் - பொருந்திய; கெழு என்பது உகரம் கெட்டும், எகரம் நீண்டும் 'கேழ்' ஆயிற்று (தொல் குற்றிய லுகரம் 76 உரை). விளக்கம்: தலைவனின் பரத்தைமை நாடலாகிய போற்றாப் புறவொழுக்கம், மனத்துயரையும் உடல் நலிவையும் தலைவியிடத்தே மிகுவித்தல் உண்மையேனும், அதனைப் பிறர் அறியப் புலப்படுத்தாதே மறைத்து ஒழுகுவதே அவள் கற்பற நிலைக்குரிய தகுதியாகும் என, அவள் அடக்க முயல்கின்றாள். ஆயின், அவளைக் காண்பார், தாமே அவள் நலிவறிந்து உண்மையினைக் கண்டுணர அவள் தோள்கள் மெலிவு காட்டும் என்பதாம். 'சுற்றும்' - தான் படர்தற்கான மொழுகொம்பாகக் கொண்டு சுற்றிப் படரும். தன்னையும் தன்தோளையும் வேறுபடுத்தி உரைக்கும் பேச்சுநயமும் காண்க. உள்ளுறை: மனைநடு வயலைக் கொடியானது, தான் சுற்றிப் படர்தற்கு வாய்ப்பான உறுதியான பந்தர் அருகேயே இருந்தும், அதனைவிட்டு மனைப்புறத்தே படர்ந்து சென்று, உள்ளீடும் வலிமையும் அற்ற வேழத்தைப் பற்றிச் சுற்றுவது போல, தலைவனும், தலைவி தன் மனைக்கண் தன் அருகே பெருமையும் பெண்மையும் ஒளிவீசும்படி இருக்கவும், அவளைக் கைவிட்டுப் புறத்தேயுள்ள சேரியிடத்துப் புல்லிய பரத்தையரை நாடிப் போவானாயினான் என்பதாம். மேற்கோள்: கற்பின்கண் தலைவனை நீங்கி, மிகத் தனிமையுற்று அலமரல் பெருகிய காம மிகுதியின்கண், தலைவிக்குக் கூற்று நிகழ்தற்கு இளம்பூரணரும் (தொல் - கற்பு); இதனுள் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றும் கூறலின் நாடக வழக்கும், தலைவனைத் தலைவி கொடுமை கூறல் உலகியலாதலின் உலகியல் வழக்கும் உடன் கூற்றிற்' என நச்சினார்க்கினியரும் (தொல். அகத். 53) எடுத்துக் காட்டுவர். முதற் பொருள் - மருதம்; கருப்பொருள் - வேழமும் வயலையும்; உரிப் பொருள் - வாயில் நேர்தல். 12. ஆற்றுக தோற்க! துறை: உழையர் நெருங்கிக் கூறிய திறமும், தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டுப், பொருளாய்க் கருத்தழிந்து, தன்னுள்ளேயே சொல்லியது. (து.வி: அவன் தனக்காற்றிய கொடுமைகளை மறந்து, அவனை மீண்டும் ஏற்று உறவாடத் துணிந்தனள் தலைவி. அவ்வேளையிலே, அவன் மீண்டும் பரத்தையரை நாடினான் எனக் கேட்டு, அதனால் மனம் மிகவும் வெதும்பித் தன்னுள்ளேயே வருந்திச் சொல்லியதாக அமைந்தது இது.)
கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும் துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும் ஆற்றுக தில்ல, யாமே; தோற்க தில்ல, என் தடமென் தோளே! தெளிவுரை: கரையோரத்தே பொருந்தியிருக்கும் வேழமானது, வயலகத்தேயுள்ள கரும்பினைப் போலவே வெண் பூக்களைப் பூக்கின்றதான துறை பொருந்திய ஊரன் தலைவன். அவனது கொடுமையினை யாம் பெரிதும் பொறுத்தேமாய் ஆற்றியிருப்பேம்; எம் பெருமையும் மென்மையும் கொண்ட தோள்களோ, தாம் அப்பிரிவை ஆற்றவியலவாய்த் தோற்றுத் தாம் மெலிவதாயின், அவை அவ்வாறே மெலிவதாகுக! கருத்து: அவன் கொடுமையை யாம் உளத்தகத்தேயே அடக்கினும், எம் தோள்கள் தம் மெலிவாற் புறத்தார்க்குத் தோன்றுமாறு புலப்படுத்தி விடுகின்றவே! அதனையும் என்னால் தடைப்படுத்த இயலாது என்பதாம். சொற்பொருள்: கொடுமை - கொடிதான செயல். நன்றும் - பெரிதும். நன்றும்; 'உம்'; அசை நிலை 'தில்'; விழைவுப் பொருளில் தன்மையிடத்து வந்தது. தோற்க - மெலிக; மெலிவால், தொடிகளைத் தாமும் இழந்து போக என்பதாம்; தழுவிக் களித்த தோள்கள் இப்போது மெலிந்து சோர்க என்றனளுமாம். விளக்கம்: அவளைப் பிரிவால் வாடச் செய்தது மட்டுமன்றி, அவள் தரும் இன்பத்திலும் பரத்தையஅரிற் பெறும் இன்பமே சிறந்ததாமென மயங்கியும் திரிந்தமையின், தலைவனின் இப்போற்றா ஒழுக்கத்தினைக் 'கொடுமை' என்றனர். உரிமயுள்ள தனக்குக் கொடுமை செய்துவிட்டுப் பொருளழித்துப் புல்லிய பரத்தையரை அதனை நாடிப் போகும் தலைவனின், அறமறந்த செயலால் புண்பட்ட மனநிலைமையினள் தலைவி என்பதும் இதனால் உணரப்படும். உள்ளுறை: 'இழந்த வேழம் கரும்பிற் பூக்கும்' என்றது, பூத்தலான இயல்பிலே அவற்றிற்குள் இழிவு உயர்வு என்பதேதும் இல்லை. அஃதேபோலத் தலைமகனுக்கு, யாமும் பரத்தையரும் இன்பம் கோடற்குரிய பெண்டிரென்று மட்டுமே சமமாகத் தோன்றினதன்றி, எம் உயர்வும், பரத்தையர் தாழ்வும் உணரும் தெளிவு இல்லை என்பதாம். மேற்கோள்: 'கருப்பொருளாகிய 'வேழம்' தானே உவமமாய் அமைந்து உள்ளுறை பொருள் தந்தது' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத்: 46). இதனுள், தலைமகன் கொடுமை கூறியதல்லது, அக்கொடுமைக்கு ஏதுவாகியதென்று விளங்கக் கூறியதிலள். ஆயினும், 'இழந்த வேழம் உயர்ந்த கரும்பிற் பூக்கும்' எனவே, அவற்றிற்கும் இழிவு உயர்வாம் என்பது ஒன்றில்லை; எல்லாரும் தலைமகற்கு இன்பம் கோடற்கு உரியர் என்றமையின் அவை கூறினாள் என்பது' என்று கூறி, எடுத்துக் காட்டுவர் பேராசிரியர் (தொல். உவம. 25). ஆகவே, இதனை பயவுவமப் போலி என்பர் அவர். 13. யாமத்தும் துயிலறியார்! துறை: 'வாயிலாப் புக்கார்க்குத், தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. (து.வி: வாயில் வேண்டி வந்தார்க்கு, அவன் மனம் தெளிந்திலன்; பரத்தையர் வீடே கதியாகத் துயில்பவன் எனக்கூறி, வாயில் மறுத்தது இதுவாகும்.)
பரியுடை நன்மான் பொங்குளை அன்ன அடைகரை வேழம் வெண்பூப் பகரும் தண்துறை ஊரன் பெண்டிர், துஞ்சு ஊர் யாமத்தும், துயிலஅறி யலரே! தெளிவுரை: விரைந்து செலவினையுடைய நல்ல குதிரையின் தலைக்கணிந்த வெண்ணிறக் கவரியைப் போல, அடைகரைக் கண்ணே படர்ந்துள்ள வேழமானது வெண்ணிறப் பூக்களைக் கொடுத்திருக்கும், தண்ணிய நீர்த் துறையினைக் கொண்ட ஊரன் தலைவன். அத் தலைவனின் பெண்டிர், ஊரே அயர்ந்து துயிலும் இரவின் நடுயாமத்தினும், தாம் மட்டும் துயிலினை அறியாரா யிருப்பரே! கருத்து: ஆகவே, அவரைப் பிரிந்து அவன் எம்பால் மீள்வான் என்பதும், எம்மோடு அன்புடன் கூடிவாழ்வான் என்பதும், இனி நடக்காததொன்றாம் என்று சொல்லி வாயில் மறுத்தனள் என்க. சொற்பொருள்: பரி - குதிரைச் செலவு; பொங்கு உளை - பொங்கிக் கிடந்து நெற்றியிற் புரளும் தலைக்கு அணி. அடைகரை - அடையும் கரை; இரு பெயர் ஒத்துப் பண்புத் தொகை. பகரும் - ஒத்தலர்ந்து பிறரைக் கவர்ந்து அழைத்திருக்கும். பெண்டிர் - பரத்தையர்; இழிவாகச் சுட்டியது. அவன் பெண்டிர் - அவனோடும் உறவுடையாரான பரத்தையர்; இவர் பலராக, இவன் ஒரு வீட்டில் இருப்பப் பிறர் துஞ்சாராவர் என்று கொள்க. கூடாமுன்பு அவன் கூட்டம் வாய்ப்பதனைக் குறித்து நினைந்து ஏங்கியும், கூடிய பின்னர் அடுத்துத் தொடரும் அவன் பிரிவைக் கருதியும், அவர் துயிலறியாராயிருப்பர் எனக் கொள்க. விளக்கம்: 'பரியுடை நன்மான் பொங்குளை' என்றது, அக்குதிரை ஓடுங்காலத்தே, தலையணியான உளையானது மேலெழுந்து அசைந்தாடுவதைக் குறிக்கலாம். அவ்வாறே, வேழத்தின் வெண்பூக்களும் காற்றிலே அசைந்தாடியபடி தோன்றும். இதுபற்றியே 'பகரும்' என்றனர். 'ஊரன் பெண்டிர்' என்றது அவனுக்கே உரியவரான காதற்பரத்தை, உரிமைப் பரத்தை போன்றாரை என்பதும் பொருந்தும். உள்ளுறை: 'வேழத்தின் வெண்பூவானது பரியுடை நன்மானின் உளைபோல் தோற்றும் அடைகரை' என்றனர்; அவ்வாறே பரத்தையரும் தலைவனக்குக் குலமகளிர் போலவே நலமுடையவராகக் காணப்படுவர் என்பதாம். மேற்கோள்: 'இஃது ஊடல் நிமித்தம்' என்பர் நச்சினார்க்கினியர் (தோல். அகத்: 14). 14. பனித்துயில் செய்யும்! துறை: தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது, அவன் மார்பை நினைந்து ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்றாள். அவட்கு, 'அவன் கொடியனே ஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து; அதனாற் காண்' எனச் சொல்லியது. (து.வி: அவன் கொடுமையறிந்திருந்தும் தலைவிக்கு அவனிடத்தே மனம்போக, அது குறித்துத் தோழி வினவுகின்றாள். அவட்குத் தலைமகள், தன் மனநிலையை இவ்வாறு புலப்படுத்துகின்றாள். 'நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்' என்றாற்போல்வது இது.)
கொடிப்பூ வேழம் தீண்டி, அயல வடிக்கொள் மாஅத்து வண்தளிர் நுடங்கும் அணித்துறை ஊரன் மார்பே பனித்துயில் செய்யும் இன்சாயற்றே! தெளிவுரை: வேழத்தின் நீண்ட வெண்பூவானது தீண்டுதலாலே, வடுக்கள் கொண்ட மாமரத்தின் வளவிப தளிர்கள் அசையும். அழகிய நீர்த் துறையினையுடையவன் தலைவன். அவன் மார்பானது, க உளிர்ந்த துயிலினைச் செய்யும் இனிய சாயலையும் உடையதாகுமே! கருத்து: அது பற்றியே என் உள்ளமும் அதனை நாடிச் சென்றது என்பதாம். சொற்பொருள்: கொடி - ஒழுங்கு; நீட்சி. வடி - வடு - பிஞ்சு. வணிதளிர் - வளவிய தளிர். நுடங்கும் - அசையும். அணித் துறை - அழகிய துறை; 'மணித்துறை' பாடமாயின் நீலமணி போல் தெளிந்த நீர் கொண்டது துறையெனக் கொள்க. பனி - குளிர்ச்சி. சாயல் - அழகு; மென்மை. விளக்கம்: வேழம் தீண்ட வளவிய மாந்தளிர் அசைதல் போல, தலைவன் பொருட்கொடையால் அணுகப் பரத்தையரும் அவனுக்கு இசைந்தாராகும் தளர்ந்த இயல்பினராவர் என்று கூறியதாகக் கொள்க. பனித்துயில் - குளிர்ச்சியான துயில்; கூடியின்புற்ற களிப்பிலே, அவன் மார்பே பாயலாகக் கொண்டு அயர்ந்து கிடந்து துயிலல்; இன்சாயல் - சாயல் காட்சிக்கும் கருத்துக்கும் இனிமை தருவது என்பதும் ஆம். உள்ளுறை: வேழப்பூத் தீண்டலால் வடிக்கொள்மாஅத்து வண்தளிர் அசைதல்போல, அவன் அவர்பாலே செல்லும் மனத்தனாகத் தலைவியின் உள்ளம் மெலிவுற்று ஆற்றாமை கொண்டது' என்பதாம். மேற்கோள்: தோழியிடத்துத் தலைவனைத் தலைவி உவந்து கூறியது என்பர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு - 6). 15. ஊரன் அல்லன்! துறை: சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்றனன் தலைவன்; அவனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினால் உணர்ந்து தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, அவன் உடனுறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது. (து.வி: 'அவன் உடனுறையும் போதும், பரத்தையர் உறவை நாடுகின்ற மனத்தனாகவே உள்ளனன்' என்று அவனது போக்கினைக் குறிப்பால் உணர்ந்த தலைமகள், தோழியிடம் இப்படிக் கூறுகின்றனள்.)
மணலாடு மலிர்நிறை விரும்பிய, ஒண்தழை, புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழ மூதூர் ஊரன் ஊரன் ஆயினும், ஊரன்அல் லன்னே. தெளிவுரை: மணலை அலைத்துச் செல்லும் நீர்ப் பெருக்கினிடத்தே, விரும்பிய ஒள்ளிய தழையுடைகளை உடுத்தவராகப் புலனாட்டு அயர்வர் மகளிர். அவ்வாறு அயரும் மகளிர்க்குப் புணர் துணையாக அமைந்து உதவுகின்றவன் வேழம் நிறைந்த மூதூரனாகிய ஊரன். அவன் நம்மோடிருப்பதனாலே நம்மூரினிடத்தேயே உள்ளவன் என்றாலும், புறம்போன நெஞ்சத்தால், அவன் நம் ஊரம் அல்லன்காண்! கருத்து: அவன் மனம் மாறினானே போலக் காட்டினும், முற்றவும் தன் பரத்தமையைக் கைவிடத் திருந்தினவன் அல்லன். சொற்பொருள்: மணலாடு - மணலை அலைத்தல்; வெள்ளம் மிகும்போது அதன் வேகத்தால் மணல் அரிக்கப்பட்டுப் போவது இது; 'ஆட்டு' என்பது 'ஆடு' என்று வந்தது. மலிர் நிறை நிறைந்து பெருகிச் செல்லும் நீர்; 'மலர்நிறை' பாடமாயின், மலர்களை வாரிக் கொண்டுவரும் புது வெள்ளம் என்க. ஒண்தழை - ஒள்ளிய தழையாடை; ஒண்மையான தளிர்களையும் மலர்களையும் கொய்து ஆடையாக்குவது இயல்பு; 'வெண்தழை' என்பதும் பாடம். துணை - துணையாகும் பொருள். வேழம் - வேழத்தண்டால் அமைந்த புணை; இது நீர் விளையாட்டுக்கு ஏற்ற மிதவையாக உதவுவது; 'வேழ வெண்புனை தழீஇ' என அகத்தும் வரும் (அகம் - 6). அல்லன் - அல்லாதவன்; ஊரிடத்தானாயினும் மனம் ஒன்றிக் கலவாமையால், அருகே இருந்தும் இல்லானாயினன் என்பதாம். விளக்கம்: 'புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழ மூதூர் ஊரன்' என்பதற்கு, புனலாட்டயரும் மகளிர்க்குத் துணையாக அவரோடு சேர்ந்து தானும் நீராடி அமைந்து உதவும்' வேழமிகுதியுடைய ஊரன்' என்பதும் பொருந்தும். 'மலரார் மலிர்ந்திறை வந்தெனப் புனலாடு புணர்துணை ஆயினள் எமக்கே' (ஐந். 72) எனத் தலைவன் கூற்றாக வருவதும், தலைமகன் இவ்வாறு பரத்தையரோடு சேர்ந்து புனலாடிக் களித்ததலைக் காட்டும். உள்ளுறை: வேழம்புணையானது புனலாடும் மகளிர்க்குப் பற்றும் துணையாகி விளங்குதலே போலத் தலைவனும் பற்றும் துணையாகி ஒழுகுதலால், அவன் அவர்பாற் செல்லும் மனத்தினனன்றி, நம்பாற் கலந்த உளத்தன் ஆகாமையின் 'ஊரன் அல்லன்' என்கின்றாள். 16. கண் பொன் போர்த்தன! துறை: வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. (து.வி: 'அவனை நினைந்து நினைந்தும், அவன் வரவை நோக்கி நோக்கியும் சோர்ந்து தளர்ந்ததனால், இவள் கண்களும் பண்டை ஒளியற்றுப் பொன்னிறப் பசலை படர்ந்தன; இனி அவன் வந்துதான் இவள் பெறுவது என்னவோ?' எனக் கூறி மறுத்துரைத்தது இது.)
ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால் சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் பூக்கஞல் ஊரனை யுள்ளிப் பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே. தெளிவுரை: 'ஓங்கி உயர்ந்தெழுந்த பூவையுடைய வேழத்தின், துளையுடைய திரண்ட தண்டினிடத்தே, சிறுமியரான ஏவல் மகளிர்கள், தம் கண்ணுக்கு இடுதற்குரிய அஞ்சனத்தைப் பெய்து வைப்பர். அத்தன்மையுடைய பூக்கள் நிரம்பிய ஊரனையே நினைதலால், இவளுடைய குவளைப் பூப் போலும் மையுண்ட கருங்கண்களும், பொன்னிறப் பசலையினைப் போர்த்தவை ஆயினவே!' கருத்து: 'இவளுடைய கண்ணொளியானது கருமை கெட்டுப் பொன்போற் பசலையும் படர்ந்ததன் பின்னர், அவன் மீண்டும் வந்துதான் இவட்குப் பயன் என்னையோ' என்று கூறி வாயில் மறுத்தனள் என்பதாம். சொற்பொருள்: தூம்பு - உள்ளே துளையுடைமை சிறு தொழு மகளிர் - குற்றேவல் செய்யும் சிறு மகளிர்; இவர், தம் அஞ்சனச்சிமிழாக வேழத்தின் திரண்ட தண்டினை ஏற்றபடி அறுத்துப் பயன்படுத்துவர். பூக்கஞல் ஊரன் - பூக்கள் மலிந்துள்ள ஊரன். பொன் - பொன்னிறப் பசலை. விளக்கம்: 'சிறு தொழு மகளிரே தம் கண்ணழகினைப் பேணுதற்கான அஞ்சனத்தை வேழத்தண்டுச் சிமிழிலிட்டுப் பேணிவைக்கும் போதிலே, பூப்போல் உண்கண்ணுடையாளான தலைவியோ, நின்னை நினைந்து நினைந்து தன் கண்கள் பொன் போர்த்த நிலையினளாயினள்; இத்தகு கொடுமை செய்தவன் இனி வந்து அருள் புரிந்துதான் பயன் என்னையோ?' என்பதாம். கண் 'பொன்போற் பசத்தலை', 'உண்கட்கு மெல்லாம் பெரும் பொன் உண்டு' எனவும், 'பொன்னெனப் பசந்த கண்' எனவும் வரும் கலித்தொகையடிகளாலும் காணலாம். (கலி - 64, 77). உள்ளுறை: வேழத்தண்டு சிறுதொழு மகளிரின் கண்ணழகு கெடாமைக்கான அஞ்சனச் சிமிழாகப் பயன்படுதலே போலத், தலைவனும், பரத்தையரின் அழகு கெடாதவாறு உடனுறைந்து இன்புறுத்தி அவரைக் களிப்பிப்பான் ஆயினன் என்பதாம். தனக்குரிய அவனைப் பிரிந்து, தன் கண்ணழகினையும் இழந்தாள் தலைவி; இனி அவனால் அவளைப் பண்டுபோல் அழகுண்டாக்க இயலாது; ஆகவே, அவன் வரவை இனி விரும்போம் என்பாதம்; அதனாற் பயனேதுமில்லை என்றதுமாம். 17. நெஞ்சு வறிதாகின்றது! துறை:'தலைமகன். பரத்தையிற் பிரிந்தவழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. (து.வி: 'ஆடவரின் இயல்பே இவ்வாறு தலைவியரைப் பிரிவாலே வருந்தி வாடச் செய்து, பரத்தையரின் மயக்கிலே கட்டுண்டு திருவதுதானே! இதற்காக, நீயும் நொந்து நெஞ்சழியலாமோ?' என்று சொல்லித் தேற்ற முயலுகின்றாள் தோழி. அவட்குத் தலைவி சொல்வது இது.)
புதல்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகின் தோன்றும் ஊரன் புதுவோர் மேவலன் ஆகலின், வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே. தெளிவுரை: 'புதரின் மேலாகச் சென்று அசைந்தாடும் வேழத்தின் வெண்பூவானது, விசும்பிடத்தே பறந்து செல்லும் வெண்குருகே போலத் தோன்றும் ஊருக்குரியவன் தலைவன். அவன், இதுகாறும் செய்த கொடுமைகட்கும் மேலாக, இப்போதும், புதியரான பரத்தையரையே வதுவை செய்தற்கு விரும்புகின்றவனாக உள்ளனன். ஆதலினாலே, என் மடமை நிரம்பிய நெஞ்சமானது அறவே நம்பிக்கைழியந்து, மிகமிக வறுமையாகின்றது! கருத்து: இனி, அவன் நம்பால் அன்புடையனாவான் என்னும் நம்பிக்கையினையே முற்றவும் இழந்து விட்டேன் என்பதாம். சொற்பொருள்: புதல் - புதர்; சிறு தூறு. நுடங்கும் - அசையும். குருகு - நாரைபோலும் வெண்ணிற நீர்ப் பறவை. புதுவோர் - புதியவரான பரத்தையர்; புதிதாகப் பரத்தைமைத் தொழில் மேற்கொண்டோர். மேவலன் - விரும்புதலை உடையான்; விருப்பம் - அவரை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல். மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகின்ற பெண்மைப் பண்பு; அது கற்பறம் பேணிக் காப்பதும் ஆம். வறிதாகின்றது - வறுமைப் பட்டதாகின்றது; வறுமை, கணவனைப் பரத்தை கொள்ளத்தான் அவனை இழந்துவிடலான நிலை. விளக்கம்: அவன், நம்மை இப்போது மறந்து திரியினும், என்றாவது நம்பால் அன்புடையனாகி மீள்வான் என்று நம்பியிருந்தோம். அவனோ, நாளும்நாளும் புதுவோரை வதுவை மேவலே தன் நினைவாகத் தொடர்ந்து திரிகின்றமையின், என் நெஞ்சம் அவனன்பை இழந்ததாகவே கொண்டு வறுமையுற்றது என்பாதம். புதர் வானம் போலக் கரிதாகவும், அதன்மேல் அசையும் வேழவெண்பூ வானிற் பறக்கும் குருகு போலவும் தோற்றும் என்க. 'வறிதாகின்று' என்றது, கொஞ்சம் உணர்விழந்து நினைப்பொழிந்து மகிழ்வழிந்து செயலற்றது என்றற்காம். உள்ளுறை: புதன்மிசை ஆடும் வேழ வெண்பூவானது, விசும்பாடு குருகு போலத் தோன்றுமாறு போல, சேரிக்கண்ணே திரியும் பரத்தையரும், தலைமகனுக்கு, நம்போற் குலமகளிராகவே தோன்றுவர் என்று கூறியதாகவும் கொள்க. புதன்மிசை நுடங்கும் வேழவெண்பூப் போலத் தலைவன் மிக அண்மையானாயினும், நம்மளவில் விசும்பாடும் குருகே போலச் சேணோன் ஆயினன் என்று வருந்திச் சொல்வதாகவும் கொள்ளலாம். நனவிலே வானவெண்குருகாக நமக்கு எட்டானாயினும், கனவிலே புதன்மிசை வேழ வெண்பூப்போல அணியனாகத் தோன்றி நம்மை மயக்கி, மேலும் நலிவிப்பவன் என்பதும் ஆம். நனவிலே அன்பாற்றானாயினும், கனவிலே அன்புடையனாகத் தோன்றி நம்மை நலிவிப்பான் என்பதும் ஆம். மேற்கோள்: தலைவனைப் பிரிந்ததற்கண்ணே தோழியிடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு - 6). 18. கண் அழப் பிரிந்தனன்! துறை: பரத்தையிற் பிரிந்து வந்து, தெளித்துக் கூடிய தலைமகற்குப், பின் அவ்வொழுக்கும் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. (து.வி: பரத்தைமையாற் பிரிந்தவன் இல்லத்திற்கு மீண்டு வந்து, தலைவிக்குச் சமாதானம் கூறிக் கூடியிருந்தான். பின்னரும், முன்போலவே விட்டுப் பிரிந்தவன், மீண்டும் தலைவியை விரும்பித் தன் வாயில்கள் மூலம் செய்தியனுப்ப, தலைமகள் மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி யூரன் பொருந்து மலர் அன்ன, என் கண்அழப் பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே. தெளிவுரை: கருங்கோரையைப் போன்ற செருந்தியோடு, வேழமும், கரும்பைப் போலக் காற்றினால் அசைந்தாடும் கழனிகளையுடைய ஊரன் தலைவன். அவன் என்னைத் தெளிவித்துக் கூடியபோது, 'இனிப் பிரியேன்' என்று உறுதிமொழி கூறியவன். இப்போதில், இணைமலர் போன்ற என் கண்கள் அழும்படியாக என்னைப் பிரிந்து போயினான் அல்லனோ! கருத்து: அவன் சொல்லை அந்நாள் மெய்யெனக் கொண்டதற்கே இப்போது நோவேன். சொற்பொருள்: இருஞ்சாய் - பஞ்சாய்க் கோரை; கருநிறத் தண்டுடைமை பற்றி 'இருஞ்சாய்' என்றனர். செருந்தி - நெட்டிக் கோரை, தண்டாங் கோரை, வாட்கோரை எனக் கூறப்படும் கோரை; இதன் தண்டு சற்றுப் பெரியது; கனம் அற்றது; ஆகவே 'நெட்டிப் புல்' எனவும் சில பகுதியினர் கூறுவர். பொருந்து மலர் - இணையாக விளங்கும் மலர்; அழகு பொருந்திய மலரும் ஆம். 'நெருந்தி' என்றொரு மரமும் உள்ளது; அது நெய்தல் நிலத்து மரம். 'கரும்புபோல அசைந்தாடும் என்றது, அவரும் தலைவனின் உரிமை மகளிர் போலவே தம்மைக் காட்டித் திரிவர் என்றற்காம்.' உள்ளுறை: வேழம் செருந்தியோடு சேர்ந்து, காற்றிற் கரும்பு போல அசைந்தாடும் என்றது, தலைவனின் ஆதரவால் பரத்தையர் தம் தோழியரோடும் கூடியவராக, ஊர்க் கண்ணே செருக்கித் திரிகின்றனர் என்றும் கூறியதாம். பிரியெலன் என்றவன் பிரிந்தனனாகி அவர்பாற் சென்றனன்; - ஆதலின் தகுதியற்ற புல்லியரான அவரும் தருக்கித் திரிகின்றனர் என்றதாம். 19. கண் பனி யுகுமே! துறை: "பன்னாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றயுளையாகிய நீ, சிலநாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?" என்ற தோழிக்கு, 'எதிர்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. வாயிலாய்ப் புகுந்தார் கேட்டு, நெருக்காது மாறுதல் கருத்து. (து.வி.: முன்னர், அவன் வேற்றுப்புலம் போயவழி, நெடுங்காலம் அவன் பிரிந்திருந்ததனைப் பொறுத்திருந்ததனை, இப்போது நேரும் சிறு பிரிவுக்கு மட்டும் எதனால் ஆற்றாயாய்த் துடிக்கின்றாய்?' என்று கேட்கின்றாள் தோழி. அதற்கு தலைவி, ஒரே ஊரிலே இருந்து கொண்டும், என்பால் வராதிருக்கும் அந்தக் கொடுமையைப் பொறுக்க இயலவில்லையே' என்று கூறிப் புலம்புகின்றாள்.)
எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம்மணம் கமழும் தண்பொழில் வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும் ஊரன் ஆகலின், கலங்கி மாரி மலரிற் கண்பனி யுகுமே! தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள மாமரத்திலே புதிதாகப் பூத்துள்ள பெரிய அரும்புகள், தலைவரைப் புணர்ந்தோரின் மெய்யிடத்தே நின்றும் எழுகின்ற மணம் கமழ்கின்றதான குளிர்ச்சியான பொழிலினிடத்தே, வேழத்தின் வெள்ளிய பூவாகிய வெண்மையான உளை போன்ற மலரானது எழுந்து, அம் மணத்தைத் தோன்றாவாறு துடைக்கும் ஊரன், தலைவன். ஆதலினாலே, கலக்கமுற்று, மாரிக் காலத்தே மழையிற்பட்ட மலரிலிருந்து துளிகள் வீழ்தல் போலக் கண்களினின்றும் கண்ணீர் துளிகள் விழுவேமாயினேம் யாம். கருத்து: அவன்பால் நம்பிக்கை இழந்தோம் என்பதாம். சொற்பொருள்: எக்கர் - இடுமணலால் அமைந்த மணல் மேடு; நெய்தற்கண் கடலலைகளாலும், மருதத்தின் கண் ஆற்று வெள்ளத்தாலும் இத்தகைய மணல்மேடுகள் அமையும்; புதுப்பூம் பெருஞ்சினை -- புதிதாகப் பூத்துள்ள பெரிய பூவரும்புகள்; புதுப்பூக்கள் உடைய பெரிய கிளையும் ஆம். புணர்ந்தோர் - கூடிக் கலந்தோர். வெள்ளுளை - வெள்ளிய உளைபோல்வதான வேழப்பூ. சீக்கும் - கெடுக்கும்; போக்கும். மாரிமலர் - மாரியிற் பட்ட மலரினின்றும் உதிரும் நீரைக் குறித்துக் கூறியது. விளக்கம்: கலந்தோர் மேனியிலேயிருந்து எழுகின்ற கலவியால் தோன்றிய புதுமணத்திற்கு மாவரும்பின் நறுமணத்தைப் பொருத்தமாக உவமித்தனர். வண்டினமும் இதன்பால் மயங்கி வந்து மொய்க்கும் என்பதனை, "பொறிகிளர் ஆகம் புல்லத், தோள் சேர்பு, அறுகாற் பறவை அளவில் மொய்த்தலின், கண்கோளாக நோக்கிப் 'பண்டும் இனையையோ?' என வினவினாள் யாயே" என வரும் நற்றிணையாலும் அறியலாம் (நற். 55). கண்பனி உகும் - கண்துளி சிதறும். உள்ளுறை: மாம்பூவின் நறுமணத்தைத் தன் தீமணத்தால் வேழவெண்பூ ஒழித்தலேபோல, தலைவன் என்னோடு இல்லறமாற்றி இன்புறுத்திய தண்ணளியைப், பரத்தையர் தமது அன்பற்ற பொய்ம் முயக்கத்தாலே ஒழித்தன் என்பதாம். மாம்பூ, புணர்ந்தோர் மெய்ம்மணம் கமழும் தண் பொழிலின் இனிமையினை, வேழ வெண்பூ தோன்றிக் கெடுத்தாற்போல, எம் இல்லறத்தின் இனிய வாழ்வினைத் தலைவனின் புறவொழுக்கம் சிதைத்தது என்பதும் ஆம். 'வேழ வெண்பூவின் தீமணம் மாவின் நறுமணத்தை அழுக்குமாறு போலப், பரத்தையரின் பொய்ச் சாகசங்கள் என் பெருமையைத் தலைவனுக்கு மறைப்பவாயின என்பதும் ஆம்.' குறிப்பு: பரத்தையரின் புணர்குறியோடு இல்வந்தானைக் கண்டதனாலே வெதும்பிக் கலங்கிக் கண்ணீர் உகுத்தனள் என்பதும், அன்னவனோடு மீண்டும் ஒன்றுபடுதல் இலையென்று வாயின் மறுத்தாள் எனவும் கொள்த 'பெருஞ்சினைப் புரணர்ந்தோர்' என்பதற்கு, பெருஞ்சினையின் நீழற்கண்ணே கூடினோர் எனவும் பொருள்கொள்வது ஏலுமேனும், அது களவுப் புணர்ச்சியாகலின், பொருள் சிறவாமையாகி விடும். 20. நெகிழ்பு ஓடும் வளை! துறை: தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாது ஒழிதல் வேண்டும்' என்று முகம் புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது. (து.வி: 'காதலர் செயல் கொடியதே யாயினும், அவர், நமக்கு முன் செய்த தண்ணளியை நாம் மறத்தல் கூடாது; அவரை மீண்டும் ஏற்பதே நின் கற்பறக் கடமை' என்கின்றாள் தோழி. அவளுக்கு, 'அவரை நெஞ்சிற்கொண்டதன் பயன் கைவளைகள் இதோ கழன்றோடுகின்றன காண்' என்று கூறுகின்றாள் தலைவி.)
அறுசில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் காம்பு கண் டன்ன தூம்பிடை, வேழத்துத் துறைநணி யூரனை உள்ளி, என் இறையோர் எல்வளை நெகிழ்போ டும்மே. தெளிவுரை: ஆறாகிய சிறிய கால்களையும் அழகிய சிறையையும் உடைய தும்பியானது, நூறு மடல்களை யுடைய தாமரப் பூவின் கண்ணே இட்டுள்ள முட்டைகளைச் சிதைக்கும், மூங்கிலைக் கண்டாற் போன்ற உள்ளே துளையினையுடைய வேழம் செறிந்த துறைக்குரிய ஊரன், தலைவன். அவனை நினைந்து, என் முன்கையிற் பொருந்திய, அழகும் ஒளியும் உடைய வளைகளும் நெகிழ்ந்து கழன்று தாமே வீழ்கின்றனவே! கருத்து: 'அவனை இனி யாம் ஏற்பதுதான் எதன் பொருட்டோ?' என்பதாம். சொற்பொருள்: சில் - சிறிய. சிறை - சிறகு. தும்பி - வண்டு வகை. சினை - தும்பியின் சினை. நூற்றிதழ்த் தாமரை - உயர்வகைத் தாமரை; இதசைன் சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலர் (புறம் - 27) என்பதாலும் காண்க. காம்பு - மூங்கில். இறை - முன்கை. நெகிழ்பு ஓடும் - தாமே நெகிழ்ந்து கழன்று ஓடா நிற்கும். உள்ளுறை: தாமரைப் பூவிடத்துள்ள தும்பிச் சினையை, வேழப் பூவானது மோதிச் சிதைப்பது போல, தலைவி மாட்டு மீண்டும் வந்தானான தலைவனைப், பரத்தையர் மீளவும் நெருங்கிப் பிரித்துத் தம்பாற் கொண்டேகுவர் என்பதாம். வேழம், தாமரப் பூவிடத்துத் தும்பிச்சினையைச் சிதைக்குமாறு போல, தலைவன், தன் பொருத்தாச் செயலால், தலைவியின் இல்லற வாழ்வைச் சிதைப்பானாயின் என்பதும் ஆம். விளக்கம்: அறுசில் கால அஞ்சிறைத் தும்பியானது நூற்றிதழ்த் தாமரயிடத்தே தேனையுண்டு இன்புற்ற தேனும், அடுத்துத் தன் கால்களால் அப்பூவின் சினைகளையும் சிதைக்கின்ற கொடுமையையும் செய்யும் ஊரம் அவன். ஆதலின், அவனை இன்புறுத்திய நம் நலனையே அவனும் கொடுமை செய்து சிதைப்பானாயினான் என்பதும் ஆம். பாடபேதம்: 'நிறையே போல் வளை' என்பதாம். இதற்கு, நிறுப்ப நில்லாது அவன்பால் நெகிழ்ந்து செல்லும் என் நிறையினைப் போலவே, என் கைவளையும் நிறுப்ப நில்லாதே தானே கழன்றோடும்' என்று பொருள் கொள்க. |