http://www.chennailibrary.com




சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

     எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

     கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 5 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

     இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

கடவுள் வாழ்த்து

     கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
     தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
     மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
     நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
     கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
5   வேலும் உண்டு, அத் தோலா தோற்கே;
     ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
     செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
     இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
     எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
10  முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
     மூவா அமரரும் முனிவரும் பிறரும்
     யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
     வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
     யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
15  தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.

பாரதம் பாடிய பெருந்தேவனார்

களிற்றியானை நிரை

1. தலைவி கூற்று

     'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
     உருவக் குதிரை மழவர் ஓட்டிய
     முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
     அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
5   சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
     கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
     மறந்தனர் கொல்லோ தோழி! சிறந்த
     வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
     பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
10  அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்,
     நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,
     அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,
     உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்
     வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,
15  சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை
     நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்
     சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,
     உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்
     கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?

பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
மாமூலனார்




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ettuthogai/akananooru.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க




வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்

தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.