http://www.chennailibrary.com


சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி ...

2. தோழி கூற்று

     கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
     ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
     சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
     பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
5   அறியாது உண்ட கடுவன் அயலது
     கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது,
     நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
     குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
     பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
10  குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய?
     வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,
     நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,
     இவளும், இனையள் ஆயின், தந்தை
     அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,
15  கங்குல் வருதலும் உரியை; பைம் புதல்
     வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;
     நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.

பகற்குறிக் கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது
குறிஞ்சி
கபிலர்

3. தலைவன் கூற்று

     இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
     கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
     கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
     கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5   மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
     வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
     துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
     ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
     புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10  கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
     புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
     கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
     பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
     வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15  கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
     அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
     கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
     நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?

முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான் தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது
பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார்

4. தோழி கூற்று

     முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
     பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
     இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
     பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
5   மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
     கருவி வானம் கதழ் உறை சிதறி,
     கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
     குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
     நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
10  பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
     தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
     மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
     உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன்,
     கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
15  நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்
     போது அவிழ் அலரின் நாறும்
     ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.

தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது
முல்லை
குறுங்குடி மருதனார்




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ettuthogai/akananooru2.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.