சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 31 ...

நித்திலக் கோவை

301. தலைமகள் கூற்று

''வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி,
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
சிறு நனி ஆன்றிகம்'' என்றி தோழி!
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, 5
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து,
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை,
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, 10
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை,
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, 15
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப,
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து,
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு 20
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென,
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர்,
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின், வழி நாள்,
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்; 25
அதுவே மருவினம், மாலை; அதனால்,
காதலர் செய்த காதல்
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே?

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.
பாலை
அதியன் விண்ணத்தனார்

302. தோழி கூற்று

சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், 5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி!
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், 10
கிளி பட விளைந்தமை அறிந்தும்,'' செல்க'' என,
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை,
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு,
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. 15

பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
குறிஞ்சி
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

303. தலைமகள் கூற்று

இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை 5
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே,
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் 10
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்! 15
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே. 20

தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
ஒளவையார்

304. தலைமகன் கூற்று

இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, 5
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, 10
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, 15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
''ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
அறவர்அல்லர், நம் அருளாதோர்'' என,
நம் நோய் தன்வயின் அறியாள், 20
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
முல்லை
இடைக்காடனார்

305. தலைமகள் கூற்று (அ) தோழி கூற்று

பகலினும் அகலாதாகி, யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, 5
பருகுவன்ன காதலொடு திருகி,
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ;
அருளிலாளர் பொருள்வயின் அகல,
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து 10
யான் எவன் உளெனோ தோழி! தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனை எரி பிறப்ப ஊதும் 15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.
பாலை
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்

306. தோழி கூற்று

பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் 5
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி 10
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி,
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. 15

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது
மருதம்
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

307. தோழி கூற்று

''சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய்,
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட,
பகலும் கங்குலும் மயங்கி, பையென,
பெயல் உறு மலரின் கண் பனி வார,
ஈங்கு இவள் உழக்கும்'' என்னாது, வினை நயந்து, 5
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து,
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை,
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் 10
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில்,
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது,
இரும் புறாப் பெடையொடு பயிரும்
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? 15

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது.
பாலை
மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்

308. தலைமகள் கூற்று

உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்,
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, 5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து,
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, 10
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட,
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, 15
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே.

இரவு வருவானைப் ''பகல் வருக'' என்றது.
குறிஞ்சி
பிசிராந்தையார்

309. தலைமகள் கூற்று

வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், 5
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார், கோடியர்
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் 10
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் 15
தண் பெரு படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?

பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை
கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்

310. தோழி கூற்று

கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு 5
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப! 10
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து 15
உரும் இசைப் புணரி உடைதரும்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.

தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி சொல்லியது.
நெய்தல்
நக்கீரனார்