அகநானூறு - Akananooru - எட்டுத்தொகை - Ettu Thogai - சென்னை நூலகம் - ChennaiLibrary.com


சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 18 ...

171. தோழி கூற்று

     'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும்
     அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
     பணை எழில் அழிய வாடும்; நாளும்
     நினைவல் மாது அவர் பண்பு' என்று ஓவாது
5   இனையல் வாழி, தோழி! புணர்வர்
     இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து
     அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
     மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
     கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
10  திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை
     எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின்,
     கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்
     பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய,
     கருங் கோட்டு இருப்பை ஊரும்
15  பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே!

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது
பாலை
கல்லாடனார்

172. தோழி கூற்று

     வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
     பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
     இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக்
     கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
5   காம்பு தலை மணந்த ஓங்கு மலைச் சாரல்;
     இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
     விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
     வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
     இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்
10  புல் வேய் குரம்பை புலர ஊன்றி,
     முன்றில் நீடிய முழவு உறழ் பலவின்,
     பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து,
     சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
     குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
15  அறியேன் யான்; அஃது அறிந்தனென் ஆயின்
     அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
     மணி ஏர் மாண் நலம் சிதைய,
     பொன் நேர் பசலை பாவின்று மன்னே!

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது
குறிஞ்சி
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

173. தோழி கூற்று

     'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
     கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
     வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
     செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்
5   மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
     சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்
     நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
     வருவர் வாழி, தோழி! பல புரி
     வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ,
10  பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
     உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
     காடு கவின் அழிய உரைஇ, கோடை
     நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
     கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
15  கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
     இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
     விண் பொரு நெடு வரைக் கவாஅன்
     பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
பாலை
முள்ளியூர்ப் பூதியார்

174. தலைமகன் கூற்று

     'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
     ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
     செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என,
     பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
5   செல்வேம்ஆதல் அறியாள், முல்லை
     நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து,
     காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
     முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
     பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
10  யாங்கு ஆகுவள்கொல் தானே - வேங்கை
     ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
     ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
     நல் மணல் வியலிடை நடந்த
     சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
முல்லை
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

175. தலைவி கூற்று

     வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
     வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
     விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
     ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,
5   பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
     வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர
     அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
     தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
     வருதும்' என்றனர் அன்றே - தோழி!
10  கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
     ஆலங் கானத்து அமர் கடந்து உயர்த்த
     வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
     மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
     நேர் கதிர் நிறைத்த நேமிஅம் செல்வன்
15  போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
     திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
     மண் பயம் பூப்பப் பாஅய்,
     தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?

பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்
பாலை
ஆலம்பேரி சாத்தனார்

176. தோழி கூற்று

     கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
     நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
     கழை கண்டன்ன தூம்பு உடைத் திரள் கால்,
     களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கின்,
5   கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை
     முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க,
     பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
     வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
     இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
10  ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,
     திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
     நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
     மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
     அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
15  விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
     மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
     குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
     உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
     புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
20  நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,
     என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
     எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
     அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
     நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
25  கூர்நுனை மழுகிய எயிற்றள்
     ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.

தோழி தலைமகனை வாயில் மறுத்தது
மருதம்
மருதம் பாடிய இளங்கடுங்கோ

177. தோழி கூற்று

     'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
     இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
     பெரும் புலம்பு உறுதல் ஓம்புமதி சிறு கண்
     இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
5   ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்
     தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்புஇன்
     கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
     கதிர் கதம் கற்ற ஏகல் நெறியிடை,
     பைங் கொடிப் பாகல் செங் கனி நசைஇ,
10  கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
     அயிரி யாற்று அடைகரை வயிரின் நரலும்
     காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
     வல்லே வருவர் போலும் - வெண் வேல்
     இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
15  மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த
     கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
     நிழல் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
     தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
     அணங்குடை வன முலைத் தாஅய நின்
20  சுணங்கிடை வரித்தல் தொய்யிலை நினைந்தே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
பாலை
செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்

178. தோழி கூற்று

     வயிரத் தன்ன வை ஏந்து மருப்பின்,
     வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
     பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி,
     நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின்
5   பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி,
     பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு,
     யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
     பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன,
     வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
10  அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக,
     பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர,
     கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து,
     கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு
     உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட்
15  பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும்,
     தவல் இல் உலகத்து உறைஇயரோ - தோழி!
     எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
     கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத்
     தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என,
20  கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை
     முன் தான் கண்ட ஞான்றினும்
     பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே.

தோழி வரைவு மலிந்து சொல்லியது
குறிஞ்சி
பரணர்

179. தோழி கூற்று

     விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
     வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,
     துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டுச்,
     சிறு கண் யானை நெடுங்கை நீட்டி
5   வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது,
     கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
     விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்
     நல் நிலை பொறித்த கல் நிலை அதர,
     அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
10  சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை,
     முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்,
     குவளை நாள் மலர் புரையும் உண் கண், இம்
     மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
     பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?

பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது
பாலை
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

180. தோழி கூற்று (அ) தலைவி கூற்று

     நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக,
     கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி,
     வீ ததை கானல் வண்டல் அயர,
     கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து,
5   தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை
     அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
     பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி,
     நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து,
     நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
10  புலவு நாறு இருங் கழி துழைஇப், பல உடன்
     புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத்
     தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப்,
     படப்பை நின்ற முடத் தாள் புன்னைப்
     பொன் நேர் நுண் தாது நோக்கி,
15  என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே.

இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக் குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்
நெய்தல்
கருவூர்க் கண்ணம் பாளனார்






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247