சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 16 ...

151. தலைமகன் கூற்று

     'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து
     இன் அமர் கேளிரோடு ஏமுறக் கெழீஇ,
     நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,
     மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
5   ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு
     உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
     கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த
     கோடுஅலம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
     தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
10  அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
     பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
     கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
     உறுவது கூறும், சிறு செந் நாவின்
     மணி ஓர்த்தன்ன தெண் குரல்
15  கணி வாய்ப், பல்லிய காடு இறந்தோரே!

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது
பாலை
காவன் முல்லைப் பூதரத்தனார்

152. தலைமகன் கூற்று

     நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
     குன்றுஉழை நண்ணிய சீறூர் ஆங்கண்
     செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
     நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
5   சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,
     இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை,
     தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
     சிறு வெள் இறவின் குப்பை அன்ன
     உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
10  முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,
     இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
     பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
     ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
     களி மயில் கலாவத்து அன்ன; தோளே
15  வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி
     சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
     கடவுள் காந்தளுள்ளும், பல உடன்
     இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
     வல்லினும், வல்லார் ஆயினும், சென்றோர்க்குச்
20  சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,
     மாஅல் யானை ஆஅய் கானத்துத்
     தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
     வேய் அமைக் கண் இடை புரைஇ,
     சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
குறிஞ்சி
பரணர்

153. செவிலித்தாய் கூற்று

     நோகோ யானே; நோதகும் உள்ளம்;
     அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
     பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
     வெம்புமன், அளியள் தானே - இனியே,
5   வன்கணாளன் மார்புஉற வளைஇ,
     இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
     உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்எனத்
     தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
     உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
10  பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்
     பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
     நல் அடிக்கு அமைந்த அல்ல; மெல் இயல்
     வல்லுநள் கொல்லோ தானே - எல்லி
     ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
15  மீனொடு பொலிந்த வானின் தோன்றி,
     தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
     கால் உறக் கழன்ற கண் கமழ் புது மலர்
     கை விடு சுடரின் தோன்றும்
     மை படு மா மலை விலங்கிய சுரனே?

மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது
பாலை
சேரமான் இளங்குட்டுவன்

154. தலைமகன் கூற்று

     படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
     நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
     சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
     குறும் புதல் பிடவின் நெடுங் கால் அலரி
5   செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
     வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
     தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
     திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
     காமர் துணையொடு ஏமுற வதியக்,
10  காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;
     ஓடுபரி மெலியாக் கொய்சுவல் புரவித்
     தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
     ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
     நம் வயிற் புரிந்த கொள்கை
15  அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது
முல்லை
பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்

155. தலைமகள் கூற்று

     அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
     பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
     பொருளின் ஆகும், புனையிழை! என்று, நம்
     இருள் ஏர் ஐம்பால் நீவி யோரே -
5   நோய் நாம் உழக்குவம் ஆயினும், தாம் தம்
     செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
     பய நிரை சேர்ந்த பாண நாட்டு ஆங்கண்
     நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
     கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
10  நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
     பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
     ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
     செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
     மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
15  விரல் ஊன்று வடுவின் தோன்றும்
     மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ

156. தோழி கூற்று

     முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
     மூட்டுறு கவரி தூக்கி யன்ன,
     செழுஞ் செய் நெல்லின் சேய் அரிப் புனிற்றுக் கதிர்
     மூதா தின்றல் அஞ்சி, காவலர்
5   பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,
     காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
     தீம் புனல் ஊர! திறவிது ஆகக்
     குவளை உண்கண் இவளும் யானும்
     கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
10  காயா ஞாயிற்று ஆகத்து, அலைப்பெய,
     'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
     நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
     கள்ளும் கண்ணியும் கையுறையாக
     நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
15  நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,
     தணி மருங்கு அறியாள், யாய் அழ,
     மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?

தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது
மருதம்
ஆவூர் மூலங்கிழார்

157. தலைமகள் கூற்று

     அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட
     பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
     அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
     செரு வேட்டுச், சிலைக்கும் செங் கண் ஆடவர்,
5   வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின்
     எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
     பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
     கான யானை கவளம் கொள்ளும்
     அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
10  நெஞ்சு உண மொழிப மன்னே - தோழி!
     முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
     பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
     வினை அழி பாவையின் உலறி,
     மனை ஒழிந்திருத்தல் வல்லு வோர்க்கே!

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது
பாலை
வேம்பற்றூர்க் குமரனார்

158. தோழி கூற்று

     'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
     பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்,
     மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
     பின்னு விடு நெறியிற் கிளைஇய கூந்தலள்,
5   வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
     மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
     அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
     சூர் உடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
     தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
10  நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
     கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
     சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
     மன்ற மராஅத்த கூகை குழறினும்,
     நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
15  புலிக்கணத் தன்ன நாய் தொடர்விட்டு,
     முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
     எந்தையும் இல்லன் ஆக,
     அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது
குறிஞ்சி
கபிலர்

159. தோழி கூற்று

     தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
     கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
     உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
     உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
5   வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்
     அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
     பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல் என
     அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
     கனை குரல் கடுந் துடிப் பாணி தூங்கி,
10  உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்
     கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
     அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
     விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
     நறும் பூஞ் சாரல் குறும் பொறைக் குணாஅது
15  வில் கெழு தடக்கை வெல் போர் வானவன்
     மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
     தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
     கொடுமுடி காக்கும் குரூஉக்கண் நெடு மதில்
     சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
20  ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்
     பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
பாலை
ஆமூர்க் கவுதமன் சாதேவனார்

160. தோழி கூற்று

     ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
     நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
     அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
     குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி,
5   நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
     கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
     பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
     கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்,
     முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
10  வாவு உடைமையின் வள்பின் காட்டி,
     ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
     செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
     நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
     பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
15  இரவந் தன்றால் திண் தேர், கரவாது
     ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
     அரவச் சீறூர் காணப்,
     பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.

தோழி வரைவு மலிந்து சொல்லியது
நெய்தல்
குமுழி ஞாழலார் நப்பசலையார்