சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 14 ...

131. தலைவன் கூற்று

     'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
     பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
     வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
     சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
5   இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என
     வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
     நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
     நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
     கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
10  பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
     பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
     வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
     வெருவரு தகுந கானம், 'நம்மொடு
     வருக' என்னுதி ஆயின்,
15  வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது
பாலை
மதுரை மருதன் இளநாகனார்

132. தோழி கூற்று

     ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து,
     ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
     ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின்,
     களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
5   வால் நிணப் புகவின், கானவர் தங்கை
     அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
     ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின்,
     கொண்டனை சென்மோ - நுண் பூண் மார்ப!
     துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
10  கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
     வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
     தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
     இருங் கவுள் கடாஅம் கனவும்,
     பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, வரைவு கடாயது
குறிஞ்சி
தாயங்கண்ணனார்

133. தலைவி கூற்று

     'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
     புன் தாள், வெள் எலி மோவாய் ஏற்றை
     செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
     நல் நாள் வேங்கை வீ நன்களம் வரிப்பக்,
5   கார் தலைமணந்த பைம் புதல் புறவின்,
     வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
     கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
     கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
     எரி பரந்தன்ன இலமலர் விரைஇப்,
10  பூங் கலுழ் சுமந்த தீம் புனல் கான் யாற்று
     வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
     எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
     கொன் ஒன்று வினவினர் மன்னே தோழி!
     இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
15  கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
     மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவல் கலித்த
     வரி மரல் கறிக்கும் மடப் பிணைத்
     திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.

'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது பாலை
பாலை
உறையூர் மருத்துவன் தாமோதரனார்

134. தலைவன் கூற்று

     வானம் வாய்ப்பக் கவினி, கானம்
     கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
     மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
     செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
5   முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
     செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
     வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
     தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
     இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
10  வாழை வான் பூ ஊழ் உறுபு உதிர்ந்த
     ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
     கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
     கடுமான் தேர் ஒலி கேட்பின்,
     நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே.

வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது
முல்லை
சீத்தலைச் சாத்தனார்

135. தலைமகள் கூற்று

     திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
     புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
     பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
     எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
5   ஆதி மந்தியின் அறிவு பிறிது ஆகி,
     பேதுற் றிசினே காதல்அம் தோழி!
     காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
     ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
     கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
10  காடு இறந்தனரே, காதலர், அடுபோர்,
     வீயா விழுப்புகழ், விண் தோய் வியன் குடை,
     ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
     கழுவுள் காமூர் போலக்
     கலங்கின்று மாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது
பாலை
பரணர்

136. தலைவன் கூற்று

     மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
     வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
     புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
     அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கள்
5   சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
     கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
     படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
     வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
     பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
10  மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
     பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
     தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
     மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
     தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
15  தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
     மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
     இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
     தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
     'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
20  முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
     பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
     உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என
     ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
     உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
25  மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
     நாணினள் இறைஞ்சியோளே பேணி,
     பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
     சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
     இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
மருதம்
விற்றூற்று மூதெயினனார்

137. தோழி கூற்று

     ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
     சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
     களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
     சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
5   வென்று எறி முரசின் விறல் போர்ச் சோழர்
     இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
     வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
     உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில்
     பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
10  வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
     தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
     பெரும் பாழ் கொண்டன்று, நுதலே; தோளும்,
     தோளா முத்தின் தெண் கடல் பொருநன்
     திண் தேர்ச் செழியன் பொருப்பின் கவாஅன்
15  நல் எழில் நெடு வேய் புரையும்
     தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது
பாலை
உறையூர் முதுகூத்தனார்

138. தலைமகள் கூற்று

     இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
     குவளை உண்கண் தெண் பனி மல்க,
     வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
     பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
5   வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,
     உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
     திருந்துஇலை நெடு வேல் தென்னவன் பொதியில்,
     அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
     ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
10  உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,
     கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
     தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
     ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
     நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
15  குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி,
     நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
     திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
     கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
     நல் நிறம் மருளும் அரு விடர்
20  இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.

தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது
குறிஞ்சி
எழூஉப் பன்றி நாகன் குமரனார்

139. தலைவி கூற்று

     துஞ்சுவது போல இருளி, விண் பக
     இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
     ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
     நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
5   ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;
     ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
     வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
     புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
     தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
10  வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
     வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,
     காமர் துணையொடு ஏமுற வதிய;
     அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
     பரப்பி யவைபோற் பாஅய், பல உடன்
15  நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ;
     இன்னும் வாரார் ஆயின் நல் நுதல்!
     யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
     கருவிக் கார்இடி இரீஇய
     பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.

பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
இடைக்காடனார்

140. தலைவன் கூற்று

     பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
     இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
     வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
     என்றூழ் விடர குன்றம் போகும்
5   கதழ் கோல் உமணர் காதல் மடமகள்
     சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
     'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்
     சேரி விலைமாறு கூறலின், மனைய
     விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
10  மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு,
     இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
     மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
     எவ்வம் தீர வாங்கும் தந்தை
     கை பூண் பகட்டின் வருந்தி,
15  வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது
நெய்தல்
அம்மூவனார்