பட்டுப்பூச்சி - Pattupoochi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



14. வியப்புக்குரிய பெண்

     நான் சிந்தனையில் மூழ்கியவனாக என்ன செய்கிறோம் என்ற நினைப்பே இன்றி இலையிலிருப்பதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் மனத்தில் சுகுணா நினைவூட்டிய பழைய சிறுகதைகளும், அவற்றை நான் எழுதியிருந்த காலத்துச் சூழ்நிலைகளும், அவற்றின் சம்பவங்களுமே எங்கும் நிறைந்த திரைப்படம் போல ஓடிக் கொண்டிருந்தன. பழகிப் போன கை இலையிலிருந்து தனக்கு வேண்டியதை எடுத்துச் சாப்பிட்டும் வேண்டாததை மறுத்தும், வயிற்றை நிரபும் வேலையைக் குறைவின்றிச் செய்து கொண்டிருந்தது. சுகுணாவும் என் எதிர்ப்புறத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சாப்பிடும் போது அவளும் என்னிடம் குறுக்கிட்டுப் பேசவில்லை. என் மனைவி மௌனமாக இருவருக்கும் வேண்டியவற்றைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

     சாப்பாட்டை விடச் சுவாரஸ்யமான அநுபவங்களை மனம் நினைவு கூர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கும் போது சாப்பாடு எவ்வளவு தான் சுவை நிரம்பியதாக இருந்தாலும் அதன் அறுசுவையைப் பற்றிய நினைவே இல்லாமல் ‘ஏதோ இதையும் செய்தாக வேண்டும்’ - என்று நிர்பந்தமாக செய்தாக வேண்டிய காரியத்தைச் செய்வது போலச் செய்கிறோம். பல சந்தர்ப்பங்களில் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. மனம் துக்கத்தினால் நிரம்பியிருக்கும் போதும் சரி, களிப்பினால் நிரம்பியிருக்கும் போதும் சரி, பல சமயங்களில் நான் இந்த அநுபவத்தைக் அடைந்திருக்கிறேன். சாப்பிடும்போது சாப்பிடுகிறோம் என்ற நினைவு இல்லாமலும் சாப்பிட்டு விட்ட பின்பு சாப்பிட்டு முடித்துவிட்டோம் என்ற ஞாபகம் இல்லாமலும் வேறு ஏதோ முக்கியமான நினைவில் நானும் என் உணர்வுகளும் ஒடுங்கிப் போயிருந்தாற் போன்ற அநுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது எனக்கு.

     கடைசியில் நான் இலையிலிருந்து எழுந்து கை கழுவப் புறப்படுவதற்கே என் மனைவியும் சுகுணாவும் என்னை நினைவு படுத்த வேண்டியிருந்தது.

     “முக்கால்வாசி நாட்கள் இலையில் உட்கார்ந்து சாப்பிடும் போது இவர் இப்படித்தான் எங்கோ நினைப்பாக இருந்து விடுகிறார். சாப்பிடும் போது கூட வாழ்க்கையை மறந்து இது என்ன கதை போல கற்பனையோ?”

     சாப்பாட்டு அறையிலிருந்து நான் கை கழுவிக் கொண்டு முன்பக்கம் வந்துவிட்ட பின்பு சமையலறைக்குள் என் மனைவி மேற்கண்டவாறு சுகுணாவிடம் என்னைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருந்தாள். உட்பக்கத்திலிருந்து சுகுணா திரும்பி வருவதற்குத் தாமதமாகவே அவள் என் மனைவியை இலையில் உட்காரச் செய்து பரிமாறிக் கொண்டிருக்கிறாள் என்று அநுமானம் செய்து கொண்டேன் நான். தொடர்ந்து என் மனைவியும் சுகுணாவும் தங்களுக்குள் உரையாடிக் கொள்கிற குரலும் எனக்குக் கேட்டது. விடைபெற்றுக் கொண்டு சென்றவள் பெண்ணாயிருந்தால் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பிய ஆண்களே அவளைப் பற்றிய பேச்சுக்கும் விடை கொடுத்து அனுப்பாமல் தங்களுக்குள் அவளைப் பற்றிய அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொள்வதும், விடை கொடுத்தவர்கள் பெண்களாகவும், விடை பெற்ற ஆணைப் பற்றிய அபிப்பிராயங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதும் வழக்கம் தான். இதில் புதியது ஒன்றும் இல்லை. அப்போது அவர்களுடைய பேச்சைத் தொடர்ந்து மேலும் கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்குச் சிறிதும் கிடையாது.

     முன்புறத்து அறைக்குள் நான் வேறு சிந்தனையில் மூழ்கினேன். ‘தெருவோடு போனவன்’ என்ற என்னுடைய சிறுகதையைப் படித்து விட்டு அவள் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு தனியே குமுறி குமுறி அழுததாகக் கூறினாளே, அதைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பால்ய விதவை ஒருத்திக்குக் குங்குமம் வைத்துக் கொண்டு சுமங்கலி கோலத்தில் தன்னை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ள ஆசை ஏற்படுவதைப் பற்றிய சிறுகதை அது. அதைப் படித்துவிட்டு ஒருத்தி அழ வேண்டுமானால் அவளும் ஏறக்குறைய அதே துயர நிலையை அனுபவிக்கிறவளாக இருக்க வேண்டும். பதினெட்டு வயதிலிருந்து முப்பது முப்பத்திரண்டு வயதுக்குள் வாழும் எந்த இளம் விதவையும் அந்தக் கதையைப் படித்தால் கண்கலங்காமல் தப்பி விட முடியாதுதான். எழுதும் போது அந்தக் கதையைப் பற்றி நான் இப்படி எண்ணியிருந்ததும் உண்டு. ‘அந்தக் கதையைப் படித்து விட்டு இவள் அழுததாகச் சொல்லுகிறாளே; அதற்கு என்னதான் அர்த்தம். சுகுணா என்னும் இந்தப் பெண்ணும் அப்படிப் பிஞ்சிலேயே வாடி உதிர்ந்தவளா? ஆசைகள் நிறைந்த மனமும் அந்த ஆசைகளில் ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையுமாக வாழ்கிறவளா? பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் ஆசையும் ஒரு முறை தனக்கு ஏற்பட்டிருப்பதாக வேறு இவள் சொல்கிறாள். இந்த மெருகு அழியாத இளமையிலேயே இவளுடைய வாழ்க்கையில் இத்தனை அநுபவங்கள் இவளுக்குக் கிடைத்திருப்பது ஆச்சரியந்தான். வாழ்க்கையில் விதவிதமான அநுபவங்களை அடைகிறவர்களிடம் எனக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. ‘அநுபவங்களை அடைகிறவர்கள் உயிருள்ள வாழ்வைக் கற்கிறவர்கள். அவர்களுக்கு அந்த அநுபவங்களே செல்வம்’ என்று எண்ணுகிறவன் நான். சுகுணாவுக்கு இத்தகைய அநுபவங்கள் மிக இளமையிலேயே தான் ஏற்பட்டிருந்தன. ஆயினும் அவளுடைய வாழ்வில் ஆச்சரியங்கள் நிறைந்திருப்பதை நான் மதிக்கத்தான் வேண்டும்! முப்பது வயதுக்குள்ளேயே தன்னுடைய சொந்த வாழ்வில் வாழவும் சாகவும் மாறி மாறி ஆசைப்பட்டிருக்கிற பெண் ஒருத்தியின் அநுபவங்களில் நிறைந்த துன்பங்கள் இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. இதற்கெல்லாம் ஒரே காரணத்தைத்தான் சொல்ல முடியும்.

     நீண்ட காலமாக இந்த தேசத்துப் பெண்கள் ஒரே விதமான பாதையில் சிந்திக்கும்படி பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். வண்டியிழுப்பதற்குப் பழக்கப் படுத்தப்பட்ட குதிரைகளுக்குக் கண்களை நிரந்தரமாக மூடி மறைத்து விடுகிறார் போல, நான்கு பக்கமும் நோக்கிச் சுதந்திரமாகவும் புதுமையாகவும் சிந்திக்கவே இடமில்லாதபடி பெண்களின் கண்களை மறைத்து வந்த காலமும் உண்டு. வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் சிந்திக்க இந்த நாட்டின் பழைய தலைமுறைப் பெண்களின் மனங்கள் அநுமதிக்கப் படவில்லைதான். இந்த நூற்றாண்டு ஒரு விநோதமான சூழ்நிலையை நம்மிடையே படைத்து விட்டது. பழைய தலைமுறையும் புதிய தலைமுறையும் சந்திக்கின்ற நூற்றாண்டில் இரண்டு தலைமுறையின் எண்ணங்களுமே மோதுகின்றன. முற்போக்கு எண்ணமும் வெள்ளை மனமும் கொண்ட தூய பெண்களுக்கு இது ஒரு சோதனைக் காலமாக இருக்கிறது. அவர்களுடைய நல்ல எண்ணங்களும் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. சில சமயங்களில் அவர்களே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விடுகிறார்கள். பட்டுப்பூச்சி என்னும் குறுநாவலில் நான் விளக்க முயன்றதும் இதைத்தான். அழுகிப் போன எண்ணங்களோடு மாறவும் மாற்றவும் முடியாமல் நாறிக் கொண்டிருக்கிற ஒரு தலைமுறைக்கும், புதிய எண்ணங்கள் மலரும் ஒரு தலைமுறைக்கும் உள்ள போராட்டம் தான் இந்த பிரச்சனைகள்.

     இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே என் மனைவிக்கு உணவு பரிமாறி முடித்து விட்டுச் சுகுணாவும் முன் பக்கத்து அறைக்கு வந்திருந்தால். அவள் பதறாமலும், விடை பெற்றுக் கொண்டு போவதற்கு அவசரப்படாமலும் நிதானமாக இருந்ததைப் பார்த்தால் அன்றிரவு என் வீட்டிலேயே தங்கி விடுகிற நோக்கத்தோடுதான் வந்திருக்கிறாள் என்று எனக்கும் புரிந்தது. எனக்கும் அவளிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருந்தன. வியப்புக்குரிய பெண்ணாகவே எனக்குத் தோன்றினாள் அவள்.

     ‘நல்ல படிப்பும் மறுமலர்ச்சி நோக்கமும் கொண்ட ஆண் பிள்ளைகளிடம் கூட இன்று இந்த நாட்டில் புதிய சிந்தனைகளையும் முற்போக்கான எண்ணங்களையும் பார்ப்பது அரிதாயிருக்கிற போது ஒரு பெண் அத்தகைய சிந்தனைகளோடும் அத்தகைய எண்ணங்களோடும் வந்து நிற்பதை வியக்காமல் வேறு என்ன செய்வது? என்னைப் போன்ற இலக்கிய ஆசிரியர்கள் இன்று இந்தத் தேசத்தில் முழு அநுதாபத்தையும் செலுத்தத் தகுதி வாய்ந்தவர்கள் இத்தகைய பெண்கள் தான் என்று நான் எண்ணினேன். என்னைப் போன்றவர்கள் எழுதுகின்ற எழுத்துக்களில் இருந்து தூண்டுதல் பெற்றுத்தான் இப்படி ஓரிரு பெண்கள் சமூக சேவையில் ஆசையும் புதிய எண்ணங்களில் பற்றும் கொள்கிறார்கள். இவர்களுடைய புதிய நம்பிக்கைகள் என் போன்றவர்களே அங்கீகரிக்க வில்லையானால் என்ன பயன்?’ என்று எண்ணும் போது சுகுணாவின் மேல் எனக்கு அநுதாபம் அதிகமாயிற்று.

     “தெருவோடு போனவன் என்ற கதையில் வருகிற வாத்தியாரம்மாவுக்கு இருந்த எல்லா குறைகளும் உங்களுக்கும் உண்டு என்று தான் நினைக்கிறேன் சுகுணா! இந்தக் கேள்வியை உங்களிடம் நான் இதை விட நாசூக்காக கேட்டிருக்கலாம் என்று இப்போது உங்களுக்குத் தோன்றினால் அதற்காக என்னை மன்னியுங்கள். இதைக் காட்டிலும் தெளிவாக உங்களிடம் என் சந்தேகத்தைக் கேட்பது அநாகரிகம் என்று தோன்றியதால் தான் நானே இப்படிக் கேட்டேன். இதில் தெரிந்து கொள்ள முடியாமல் சந்தேகப்படுவது எது என்ற குறிப்பை நீங்களாகவே தெரிந்து கொண்டு மறுமொழி சொல்லிவிட்டால் நாம் இருவரும் மேலே பேசிக் கொள்வதற்கு வசதியாக இருக்கும்.” -

     என்று அவளைக் கேட்டேன். என்னுடைய கேள்வியில் நான் அவளிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிக நுணுக்கமாக வினாவப்பட்டிருந்தது.

     “அந்தக் கதையில் வருகிற வாத்தியாரம்மாவுக்கும் எனக்கும் எல்லா வகையிலும் ஒற்றுமை தான். நான் அந்த வாத்தியாரம்மாவின் நிலையில் தான் இப்போதும் இருக்கிறேன். அவளுக்கு ஏற்பட்ட ஆசை எனக்கும் ஒரு நாள் ஏற்பட்டதுண்டு. விளையாட்டாக ஏற்பட்டதுதான். ஆனால் விளையாட்டு ஆசையாலே நான் வேதனைப்படவும் நேர்ந்தது” என்று சுகுணா அப்போது எனக்குக் கூறிய பதிலில் தான் கூர்மையான புத்திசாலி என்பதை அழகாக நிரூபித்து விட்டாள். நான் எவ்வளவு குறிப்பாக அந்தக் கேள்வியைக் கேட்க விரும்பினேனோ அவ்வளவு குறிப்பாகவே அவளும் அதற்குப் பதில் சொல்லியிருந்தாள்.

     எனக்கு இப்போது சுகுணா ஒரு பால்ய விதவைதான் என்பது தீர்மானமாகத் தெரிந்து விட்டது. பட்டுப்பூச்சியின் கற்பனைக் கதாநாயகியான சுகுணாவுக்கு நல்ல இடத்தில் திருமணமாக வேண்டுமென்று ஆசைப்பட்டு வரன் பார்க்கும்படி நான் வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். உண்மைக் கதாநாயகியோ வரன்பார்த்து வாழப் பார்த்து மங்கலம் மடிந்து இந்தத் தேசத்தின் பழைய தலைமுறையின் நினைப்பில் அழிந்தவளாகவும், புதிய தலைமுறையின் நினைவில் மலர்ந்து நிற்பவளாகவும் வியப்புக்குரிய பெண்ணாய் என் எதிரே வந்து வீற்றிருந்தாள்.

     “அது போகட்டும்! ‘முத்துச்சாவடி’யில் வருகிற கனகத்தைப் போல் பாம்பன் பாலத்தில் இரயில் ஓடிக் கொண்டிருந்த போது கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டதாகக் கூறினீர்களே, அது என்ன? முத்துச்சாவடி என்ற கதைக்கும் உங்களுடைய வாழ்க்கைக்குமே ஒற்றுமை இருக்கிறதா? அல்லது குறிப்பிட்ட தற்கொலை நிகழ்ச்சிக்கு மட்டும் அந்தப் பகுதி உங்களுக்குத் தூண்டுதல் தருவதாக அமைந்ததா?” -

     என்று மேலும் அவளைக் கேட்டேன் நான். அவள் இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்லிவிடவில்லை. எதையோ உடனே பதில் சொல்ல வருவது போல் பேச்சைத் தொடங்கி அதைச் சொல்லக் கூடாது என்று தனக்குத் தானே முடிவு செய்து கொண்டவள் போல் உதட்டைக் கடித்துக் கொண்டு மழுப்பி விட்டாள். நான் விடவில்லை. அவளை மேலும் தூண்டிக் கேட்டேன்.

     “என்ன எதையோ சொல்ல வந்தாற் போலிருந்தது. ஒன்றும் சொல்லாமல் அடக்கிக் கொண்டு விட்டீர்களே? என் மந்த்தைப் புண்படுத்துகிற கருத்தாக இருந்தாலும் என்னிடம் நேருக்கு நேர் கூசாமல் சொல்லுகிற சுதந்திரத்தையும் உரிமையையும் உங்களுக்கு நான் அளிக்கிறேன்.”

     “ஐயையோ! அப்படியெல்லாம் பயப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை. உங்கள் மனத்தைப் புண்படுத்துவதற்கு இதில் ஒன்றுமே கிடையாது. ஆனால், எந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்களோ, அதை இரண்டாவது முறை நினைப்பதனாலேயே என் மனத்தை நானே புண்படுத்திக் கொள்ள நேருமோ என்று தான் பயப்படுகிறேன். தற்கொலை செய்து கொள்ள ஆசைப்படுவதற்கு முன்பே எண்ணங்களால் பல முறை செத்தும் பிழைத்தும் என்னை நானே சாக அடித்துக் கொண்டிருக்கிறேன். நம்முடைய ஆசைகளையும் எண்ணங்களையும், மனமறிந்து நாமே கொன்று கொள்வதையும் தற்கொலை என்று தானே சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வது பிழையில்லையானால் முன்பே நான் பலமுறை செத்துப் போய் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்.”

     “அது சரி! நீங்கள் இரயிலிலிருந்து பாம்பன் கடலில் குதிக்கத் துணிந்த காரணத்தை மட்டும் தான் நான் இப்போது கேட்கிறேன்” என்று மறுபடி நான் வற்புறுத்திக் கேட்ட போது தான் அவளிடமிருந்து எனக்கு உண்மையான பதில் கிடைத்தது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247