20. எப்படியோ முடிந்தது அந்தப் பார்சலையும் அதற்குள் இருந்த கடிதத்தையும் கூடச் சுகுணாதான் அல்லியூரணியிலிருந்து அனுப்பியிருந்தாள். முதல் நாள் மாலை அந்தத் தந்தி கொடுக்கப்படுவதற்கு நாலைந்து மணி நேரத்துக்கு முன்னதாக இந்தப் பார்சல் அவளால் அல்லியூரணித் தபாலாபீசில் பதிவு செய்யப்பட்டிருந்தது. என் உடம்பை பாதாதிகேச பரியந்தம் நடுங்கச் செய்த அந்தக் கடிதத்தையும் அதனோடிருந்த பிறவற்றையும் இரண்டாவது முறையாகவும் படித்தேன். என் நெஞ்சில் உணர்வுகள் எல்லாம் துடிதுடித்தன. அவள் எழுதியிருந்தாள்: இன்று இந்த விநாடியில் உண்மையாகவே நான் தற்கொலை செய்து கொள்ள உறுதி செய்து கொண்டிருக்கிறேன். நாளைக்குப் பகலில் உங்களுக்கு இந்தக் கடிதமும் இதனோடு இருக்கும் நாற்றம் எடுத்த மஞ்சள் பத்திரிகைப் பிரதிகளும் கிடைக்கிற போது இந்த அல்லியூரணியின் பழமையான லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் வடக்கு மூலையில் தூசி படிந்து கவனிப்பார் அற்று கிடக்கும் ‘போஸ்மார்ட்டம் அறையில்’ என் உடம்பைப் போஸ்மார்ட்டம் செய்து கொண்டிருப்பார்கள். இரண்டு பொட்டலம் மூட்டைப்பூச்சி மருந்தைச் சாப்பிட்டு விட்டுச் சாவதற்கு இது போதும் என்று நிம்மதியாகப் படுத்துத் தூங்கிவிட்டுக் காலையில் மறுபடி இந்த நாசகார உலகத்தைக் கண் விழித்துப் பார்க்க அவசியமிராது என்ற நம்பிக்கையோடு சாகிறவளுக்குக் கவலை ஏது? நான் வாழ்வதற்கு ஆசைப்பட்டது கனவு ஆகிவிட்டது. இப்போது சாவதற்கு முடிவு செய்து விட்டேன். பொழுது புலர்ந்து அல்லியூரணியின் தெருக்களில், ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ - இசைத் தட்டுக்கள் முழங்க, வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கும் நாளைக் காலையில் என் உயிர் தான் நிஜமான ஆனந்த சுதந்திரத்தை அடைந்திருக்கும். சமூகப் பிரச்சனைகளுக்குச் சுமூகமான முடிவு காண வக்கில்லாத வரை இந்தச் சுதந்திர தினத்தை இப்படிச் சாகும் தினமாகக் கொண்டாடுவதைத் தவிர வேறு வழி இல்லையென்றே எனக்குத் தோன்றுகிறது.
நான் சாவதற்குக் காரணம் தெரிய வேண்டுமானால் இதனுடன் இருக்கும் மஞ்சள் பத்திரிகைகளைப் படித்துப் பாருங்கள். படித்துப் பட்டம் பெற்றுத் தங்கள் கிராமத்தைத் தேடி உழைக்க வந்த ஒரு பெண்ணுக்கு இங்குள்ள பழம் பெருச்சாளிகள் அளித்த பரிசுகள் தாம் இந்தப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் துஷ்பிரசாரமான செய்திகள். இவற்றைத் தெரிந்து கொண்ட பின் எனக்கு மானம் போகிறது. வெளியே தலையைக் காட்ட முடியவில்லை. சிறு கிராமமாதலால் இரண்டு பேர் சந்திக்கிற இடங்களில் எல்லாம் இந்த மஞ்சள் பத்திரிகைச் செய்திகளைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத என் தாயிடம் பக்கத்து வீட்டு வாயாடி அம்மாள் ஒருத்தி இவற்றைக் கொண்டு வந்து படித்துக் காட்டி விட்டு, “இப்படி மாடு வளர்ப்பது போல் பெண்ணை வளர்க்காதீர்கள். கண்டித்து அடக்கி வையுங்கள்” - என்று முறையிட்டிருக்கிறாள். அதை நம்பி என் தாயே என்னை, ‘மானங்கெட்டவளாக’ - நினைக்கிறாள், பேசுகிறாள்.
உங்கள் பட்டுப்பூச்சியின் கதாநாயகியான கற்ப்னைச் சுகுணா பாக்கியசாலி! இப்படிச் சீரழைந்து தற்கொலை செய்து கொள்ளத் துணியும் வரை அவள் கிராமத்தில் தங்கவில்லை. விரைவில் கிராமத்தைப் புரிந்து கொண்டு வெளியேறி விட்டாள். நான் இந்த அசூயை இருளிலிருந்து வெளியேற முடியாமல் இங்கேயே செத்துவிட்டேன். உங்கள் கற்பனைக்கும் என் வாழ்வுக்கும் இதுதான் வேறுபாடு. ‘நான் பெரிய தைரியசாலி’ என்று எனக்குள்ளேயே நேற்று வரை நம்பிக் கொண்டிருந்தேன். இன்று தெருவில் போகிறவர்கள் எல்லாம் என்னைச் சுட்டிக் காட்டுவதையும் பேசுவதையும், மெல்ல மெல்லச் சிரித்துக் கொள்ளுவதையும், கண்டு என் உடம்பு கிடுகிடுவென்று நடுங்குகிறது. எதிரே தென்படுகிறவர்கள் எல்லாம் நரமாமிசம் தின்னும் பேய்களாக மாறி நின்று என்னைப் பயமுறுத்துகிறார்கள். இப்படிக்கு துர்பாக்கியவதியான உங்கள் சகோதரி சுகுணா. இத்துடன் கடிதம் முடிந்திருந்தது. சமூகநேசன், நியாயவாதி, ஒழுக்க முர்சு என்ற பேரை வைத்துக் கொண்டு கேட்கும் போது பணம் தராதவர்களைப் பற்றி அபாண்டமாக எழுதுவதற்கு என்றே நடத்தப்படும் அந்த மஞ்சள் பத்திரிகைகளில் சுகுணாவைப் பற்றி எழுதியிருந்தவற்றைப் படிக்கும் போது எனக்கு அருவருப்பாயிருந்தது. அதில் கண்டவற்றை நம்பி அவற்றில் நினைவு ஒன்றிவிடாமல் மலம் நிறைந்த தெருவில் கீழே கவனித்து நடப்பதைப் போல என் மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள நான் முயல வேண்டியிருந்தது. கேட்ட போது பணம் கொடுக்கிறவர்கள், ‘இன்னாரைப் பற்றி ஆபாசமாக எழுதி அவர்கள் பேரைக் கெடு’ என்று குறிப்பிட்டு ஏவுகிறவர்களையும் கேவலப்படுத்துவது தான் இந்தக் காகித மலங்களின் மானங்கெட்ட பிழைப்பு முறை. சுகுணாவின் கடிதத்தை மட்டும் என்னிடம் வைத்துக் கொண்டு உடனிருந்த இந்தக் குப்பைகளுக்கு நெருப்பிட்டுக் கொளுத்தினேன். மதுரையில் அந்த நடுப்பகல் வேளையிலே வெளியூருக்குச் சவாரி வருகிற வாடகைக்காரைத் தேடுவதென்பது முடியாத காரியம். அல்லியூரணி மதுரையிலிருந்து இருநூறு மைல் தொலைவு இருந்தது. போய்ச் சேரும் போது, மணிக்கு அறுபது மைல் போகிற பெரிய காரில் போனாலும் மூன்றரை மணி நேரம் ஆகிவிடும். கார் அவசரமாக வேண்டுமென்று திரைப்பட விநியோக உரிமையோர் ஒருவருக்கு சொல்லி அனுப்பினேன். அவர் என் நிலையையும் அவசரத்தையும் புரிந்து கொண்டு இரவு ஒன்பது மணிக்குள் திரும்பிவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு காரை அனுப்பினார். பரபரப்போடு புறப்பட்டேன். நான் புறப்பட்டுச் சென்ற கார் அல்லியூரணியை அடையும் போது பிற்பகல் நாலேகால் மணி. ஆனால் அதற்குள் அந்தப் பாவிப் பெண் சுகுணா தான் எழுதியிருந்தபடியே செய்து விட்டாள். காரியம் கைமீறி விட்டது. உலகத்தில் அந்த அழகான வார்த்தைக்கு இனிமேல் அர்த்தமே இருக்க முடியாது. வார்த்தைகளாகிய பெண்களுக்கு அர்த்தம் தாம் நாயகன். அர்த்தத்தை இழந்த வார்த்தையும் விதவையைப் போன்றதுதான். சுகுணா என்ற பெயருக்குரியவள் விதவையாயிருந்த வசந்தகாலம் முடிந்து விட்டது. அதனால் இன்று முதல் இனிமேல் அந்தப் பெயரே அர்த்தமிழந்த விதவையாகப் போய்விட்டது என்று எண்ணிக் குமுறினேன் நான். அங்கே எனக்கு யாரையும் தெரியாத போது நான் யாரிடம் போய் அவள் சாவுக்குத் துக்கம் கேட்பேன்? எல்லா ஊரிலும் எல்லாருக்கும் தெரிந்த ஒரே ஒரு பொருளாகிய தெய்வத்திடம் மட்டும் துக்கம் கேட்டுவிட்டுத் திரும்பினேன். லோகல் பண்டு ஆஸ்பத்திரி வாசலில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்து என்னென்னவோ விதமான அநுதாபப் பேச்சுக்களும் என் காதில் விழுந்தன. “இந்தப் பாழாய்ப் போன மூட்டைபூச்சி மருந்தாலே சாவு தான் பெருகுது” - என்று ஒரு பல்போன கிழப்பிரகிருதி மற்றொரு கிழப்பிரகிருதியிடம் முறையிட்டுக் கொண்டிருந்தது. ‘சமூகத்திலுள்ள கொடியவர்களின் எண்ணங்களே நல்லவர்களைக் கொல்லும் விஷமருந்தாக இருக்கும் போது மூட்டைப்பூச்சி மருந்தின் மேல் மட்டும் வருத்தப்பட்டுப் பயன் இல்லை’ - என்று நினைத்துக் கொண்டேன் நான். அந்தக் கிராமம் முழுவதும் அன்று சுகுணாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தது. சுகுணாவைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தது. அவள் சாவு ஊரைக் கலக்கியிருந்தது. வாழ்வால் முடியாது போயிருந்த காரியம் அல்லவா அது? கிராமத்துத் தெருவெல்லாம் சுதந்திரத்தின் அலங்காரம் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. ‘பாரத நாட்டுக் கிராமங்கள் கரி மூடிய தங்கச் சுரங்கம்’ என்று பட்டுப்பூச்சி முடிவுரையில் முன்பு நான் எழுதிய வாக்கியத்தை நினைத்துக் கொண்டேன். ‘இன்று அந்தக் கரிக்கு அடியில் மெய்யாகவே சுகுணா என்னும் இந்தத் தங்கத்தை வைத்து மூடிவிட்டார்களே’ - என்று என் வாய் முணுமுணுத்துக் கொண்டது. மறுபடி கார் மதுரை திரும்பிய போது இரவு ஒன்பதரை மணி ஆகியிருந்தது. தல்லாகுளம் நண்பர் விவேகானந்த மூர்த்திக்கு ஊர் சுற்றிக் காண்பித்த பின் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுச் சென்றிருந்தார். அவரைக் கட்டிக் கொண்டு பெண்கள் துக்கம் கொண்டு அழுவது போல் வீடதிரக் கதறிக் கதறி அழ வேண்டும் போலிருந்தது அப்போது. ஆனால் செய்ய முடியவில்லை. “நாம் கொடுத்து வைக்கவில்லை. நல்லபடியாக நினைத்து ஏதோ செய்தோம்; அது எப்படியோ முடிந்துவிட்டது. இந்தக் கடிதத்தைப் பாருங்கள்” - என்று சுகுணாவின் கடிதத்தை விவேகானந்த மூர்த்தியிடம் கொடுத்தேன். கடிதத்தை அவர் படிக்கலானார். மாலை மாலையாக அவருடைய கண்களிலிருந்து நீர் சரிந்தது. அவர் ஏறக்குறைய அழுது கொண்டே தான் அந்தக் கடிதத்தின் கடைசிப் பகுதியைப் படிக்க முடிந்தது. சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டு மெல்ல விசும்பி அழுதார் அந்த இளைஞர். நான் ஒடுங்கிய குரலில் அவருடைய காதருகே சென்று சொன்னேன். துக்கம் என் குரலையும் அடைத்தது. “மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி! பெண்ணை இழந்து ஆண் மகன் அவள் இழப்புக்காகக் கைம்மை நோற்கத் துணிவது போன்ற புதிய கற்பு நெறியைப் பேசும் கதாநாயகனை புதுமையானதொரு நாவல் புனைய வேண்டும் என்று அன்று கோயம்புத்தூரில் நம்முடைய சந்திப்பின் போது நீங்கள் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தீர்களே அது இப்போது நினைவுக்கு வருகிறது எனக்கு. அப்படி ஒரு கதையை எழுதுவதற்கு வேண்டிய நிகழ்ச்சியினைத்தான் இப்போது என் முன்னால் நான் காண்கிறேன்.” “எழுதலாம் சார்? ஆனால் அந்தக் கதைக்குக் கதாநாயகி வாழத் தொடங்குவதற்கு முன்பே கொன்று விடுவீர்கள் அல்லவா?” - என்று சொல்லி புலம்பினார் அந்த இளைஞர். அப்போது அவரைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது எனக்கு. “நண்பரே இரத்தமும் சீழும் வடிகிற கோரமான நாற்றப் புண்களை மேனியெல்லாம் கொண்டிருக்கிற இந்தச் சமூகத்தின் மாமிச உடம்பை மூடி மறைத்துப் போர்த்துவதற்குப் பட்டுப் போர்வைகளை நெய்வதற்காகத்தான் இப்படி அழகு அழகான வண்ணப்பட்டுப் பூச்சிகள் பலவற்றை வாட்டி வெதும்பச் செய்து சமூகத்தில் அழிக்கிறார்கள் போலிருக்கிறது” - என்று கூறிவிட்டு விரக்தியோடு நகைத்தேன் நான். சமூகத்தின் மனத்துக்கு டாக்டராகிய நான் அன்று என்னுடைய மனத்தில் ஏற்பட்ட துக்கத்துக்கு எந்த மருந்தும் தெரியாமல் கலங்கினேன். எதிரே வந்து என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நிற்கும் அந்த இளைஞருடைய துக்கத்துக்கும் நான் மருந்தைத் தர முடியவில்லை. இரண்டு பேருமே மருந்தில்லாத நோய்களாக மாறி நின்றோம். வேறு என்ன செய்வது? துக்கத்துக்கு மருந்து ஏது? காலம் தான் மருந்தாக முடியும் என்று நம்பினோம். |