(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

முடிவுரை

     இசையுலகில் சுடர்விடும் நட்சத்திரமாக ஒளிரும் ஸ்ரீமதி சுசீலா ராமநாதன் ஏற்கனவே எனக்குப் பழக்கமானவள் என்பதை எப்படியோ அறிந்திருந்த பெண்கள் சங்கக் காரியதரிசி, அவள் கோடைக்காக உதகைக்கு வந்திருக்கிறாள் என்று அறிந்ததிலிருந்து சங்கத்தின் கட்டிட நிதிக்காக உதவும் ஓர் சங்கீதக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யக் கோரி என்னைத் தொந்தரவு செய்தாள். எனவே நான் சுசீலாவைத் தேடிப் போனேன். நான் எங்கள் சங்கத்தைப் பற்றி அவளிடம் பேச்சை ஆரம்பித்ததுதான் தாமதம் - கோபம் அவளுக்கு அசாத்தியமாக வந்து விட்டது. “ஓகோ! பெண்கள் முன்னேற்றத்துக்காகக் கைப்பையைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக ஏறி இறங்கி உதவிக் கச்சேரிக்கு டிக்கெட் விற்பனை செய்து உழைக்கும் பெண்கள் திலகங்களில் நீயும் ஒருத்தியா?” என்று எடுத்த எடுப்பில் அவள் கேட்டதும் நான் அயர்ந்து போய் விட்டேன்.

     அவள் அத்துடன் விடவில்லை.

     “ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஏற்றத் தாழ்வு மனப்பான்மைகளைக் களைந்து ஒற்றுமையுடன் குடும்பப் படகை வலித்துச் செல்வது தான் பெண்கள் முன்னேற்றத்தில் முதல் முக்கியமான அம்சம் என்று தெரியுமா உங்களுக்கு? வெளி உலகில் வந்து ஆண்களுடன் சரிசமமாகப் போட்டியிடும் நீங்கள், அப்படிப் பழகும் போது ஏற்படும் சுழல் போன்ற அபாயங்களிலே அகப்படாமல், பெண்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் துறைகளிலே முன்னேற வழி சொல்வீர்களா?” என்றெல்லாம் ஆவேசமாக அடுக்கிக் கொண்டு போனவள், விடுவிடென்று உள்ளே சென்று, ஒரு காகிதக் கற்றையைக் கொண்டு வந்து என் முன் போட்டாள்.

     “இதைப் படித்துப் பார்! பொய்யும் புனை சுருட்டுமாக நீயும் எழுதுகிறாயே? இந்தக் கதையைப் படித்துவிட்டு எப்படி இருக்கிறதென்று சொல்!” என்றாள்.

     அந்தக் கதைதான் பெண் குரல்.

     ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டு நான் மறுநாளே சுசீலாவைத் தேடிப் போனேன். என்னைக் கண்டதுமே வேலைக்காரன் ஒரு கடித உறையை நீட்டி, “அம்மாவும் ஐயாவும் காலமே மைசூர் புறப்பட்டுப் போனாங்க. உங்களிடம் இந்தக் கடிதாசைக் கொடுக்கச் சொன்னாங்க” என்றான்.

     நான் பரபரப்பாக உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுக்கப் போனேன். ஒரு திருமண அழைப்பிதழ் கீழே விழுந்தது. அழைப்பிதழின் முகப்பிலே, சௌ. ஹேமா - சிரஞ்சீவி வரதராஜன் என்ற ஆங்கில எழுத்துக்கள் மின்னின.

     வியப்புடன் கடிதத்தைப் பிரித்தேன்.

     “கல்யாணத்துக்குத்தான் புறப்பட்டுப் போகிறோம். நாளது ஜூன் 10ந் தேதி மணமக்கள் இங்கு வருகிறார்கள். வரவேற்பு வைபவத்துக்கு அவசியம் வந்து சேர். பெண் குரலில் நீ சந்தித்த, மூர்த்தி, லீலா மற்றும் எல்லோரையுமே அநேகமாக நீ நேர் அறிமுகம் செய்து கொள்ள முடிவதுமின்றி, பிரபல் டென்னிஸ் நட்சத்திரமான ஹேமாவும் வரதனும் காதல் மணம் புரிந்து கொள்வதற்குக் காரணமான விவரங்களையும் அறிய முடியும். அதற்குக் கண், காது, மூக்கு வைத்தாயானால் ஒரு கதையாகுமே உனக்கு” என்று சுசீலா எழுதியிருந்தாள். நான் உள்ளூற நகைப்பும் மகிழ்ச்சியுமாக வீடு திரும்பினேன்.

(முற்றும்)