(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

கனி

2

     “வெயில் வேளை, படுத்து உறங்குகிறாயோ என்று நினைத்தேன்” என்று கூறிக் கொண்டே லீலா உள்ளே வந்தாள். பஸ் நிற்கும் இடத்திலிருந்து வருவதற்குள் முகம் கன்றிப் போயிருந்த குழந்தைகளைக் கண்டதும் அவர்களின் தூய அன்புக்கு முன் நான் ஏதோ குற்றவாளியாக நிற்பது போல் இருந்தது.

     “அப்பாடா! என்ன வெயில்! இவர்கள் இருவரும் என்னை இன்று சித்தியிடம் அழைத்துப் போனால் தான் ஆச்சு என்று தொந்தரவு செய்து சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெயில் கொஞ்சம் தாழட்டும் என்றால் கேட்டால்தானே? சரி என்று கிளம்பினேன்” என்று கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவள் உட்கார்ந்தாள்.

     “குழந்தைகளைப் பார்க்க வேண்டும், அங்கே அடிக்கடி வரவேண்டும் என்று ஆசை துடிக்கிறது. அவர் தாம் வீடு வரும் போதே மணி ஒன்பது அடித்து விடுகிறதே. அம்மாவும் மன்னியுந்தான் திரும்பிப் பார்ப்பதில்லை என்கிறார்கள். ஏதோ குழந்தைகளையாவது வர அனுமதித்திருக்கிறார்களே. நேற்று முதல் நாள் தான் அவர் வீடு வந்தவுடன், ‘இனிமேல் பள்ளிக்கூடம் லீவாயிற்றே? சுகுமார், மைதிலியையாவது அழைத்து வரக்கூடாதா? எல்லோரும் சௌக்கியந்தானே?’ என்று கேட்டேன். ‘நான் அண்ணாவைப் பார்த்தே பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன’ என்றார் அதற்கு. மைத்துனர் எங்காவது வெளியூர் போயிருக்கிறாரா, லீவா? காரியாலயம் வரவில்லையா?” என்று நான் வினவினேன்.

     “இல்லையே! தினமும் போகிறாரே ஆபீஸுக்கு? ஆனால் ராமு எப்படிப் பார்க்க முடியும்? டவுனுக்கு அண்ணாவைப் பார்க்க என்று போக ஓய்வு கிடைத்திருக்காது” என்றாள் லீலா.

     எனக்குப் புதிர் போடுவது போல் இருந்தது.

     “காரியாலயத்தை இரண்டு பண்ணிக் கிளை ஏதாவது திறந்திருக்கிறார்களா என்ன?” என்று அறியாமல் நான் கேட்டேன்.

     லீலா என்னை வியப்புறும் விழிகளால் ஏறிட்டுப் பார்த்தாள்.

     “இல்லையே. நிஜந்தானா சுசீ? உனக்கு ஒன்னும் தெரியாதா?” என்று என்னைத் திருப்பிக் கேட்டாள்.

     “எது?” என்றேன்.

     அவளுடைய ஆச்சரியம் பின்னும் அதிகமாயிற்று.

     “குடும்பத்திலிருந்து பிரிந்தது மன்றி இப்போது மூன்று மாதங்களாக அவன் உத்தியோகத்திலிருந்து கூட அவர்களிடமிருந்து விலகிக் கொண்டு விட்டானே! ‘அமார் அண்டு பிரதர்ஸி’ல் மானேஜராக இருப்பதாக அல்லவோ சொல்லிக் கொள்கிறார்கள்? அதற்குப் பிறகே அவன் வீட்டிற்குக் கூட இரண்டொரு தடவை தானே வந்தான்?”

     நான் கற்சிலையாக நின்றேன்.

     என்ன கணவர் இவர்? உத்தியோகம் செய்யும் இடத்தைக் கூட மனைவியிடம் கூறிக் கொள்ளாத இவரை எந்த விதத்தில் சேர்க்கலாம்?

     அன்று கணவன் வீடு வந்த புதிதில் அவராகத் தெரிவியாத அந்த உத்தியோக விஷயத்தை லீலாவிடம் கேட்டு அறிந்து கொள்ள வெட்கினேன். இன்று, எங்கள் மூன்று வருஷ மணவாழ்வுக்குப் பிறகு ‘அவர் எங்கே போகிறார், என்ன வேலை செய்கிறார், எத்தனை சம்பளம் வாங்குகிறார் என்பன போன்ற விஷயங்களை அறியாமல் நிற்கும் என்னை அவள் காணும் நிலை வந்துவிட்டதே! சே! ‘அண்ணாவைப் பதினைந்து நாட்களாகப் பார்க்கவில்லை’ என்று அவர் கூறிய போது, இப்போது லீலாவிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டிருக்கக் கூடாதோ?

     கேட்காவிட்டால் தான் என்ன? இது போன்ற விஷயங்களை அவராகத் தெரிவிக்க வேண்டாமா? உலகத்துப் பெண்களைப் போலக் கணவனின் தொழிலிலும் வருவாயிலும் முன்னேற்றத்திலும் ஆசையும் அக்கறையும் கொண்டு நான் விசாரிக்கவில்லை என்றும், எனக்கு சுவாரசியம் இல்லாத சமாசாரங்களை எதற்காகக் கூறவேண்டும் என்றும் இருக்கிறாரா? அப்படியே இருக்கட்டும். என்னை இந்த வெறுக்கும் நிலைக்கு ஆளாக்கியது யார்? அவர் தாமே? மாதம் பிறந்தால் ஏதோ ஜீவனாம்சம் கொடுப்பது போல முதல் தேதி என் கைச் செலவுக்குத் தேவையான பணத்தை மேஜை மீது வைத்து விடுவார். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அவ்வப்போது வந்து விழுந்துவிடும். தவிர, என் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் எனக்கு வரும் பொருள் வேறு செலவுக்குத் தலைக்கு மேல் வெள்ளமாகி விடும். நகையும் நாணயமும் வாங்கிக் குவித்துக் கொள்ளவோ மனத்துக்கு உற்சாகம் இல்லை. ‘அவருக்கு என்ன வருவாய், எப்படிப் போதும்?’ என்றெல்லாம் விசாரிக்க எனக்கு எப்படிச் சிரத்தை ஏற்படும்?

     “என்ன சுசி, கல்லாகச் சமைந்து விட்டாய்? உண்மையில் ராமு உன்னிடம் இதெல்லாம் தெரிவிப்பதில்லையா? அக்காவும் அத்தையுமானால் பொழுது விடிந்தால் பொழுது போகும் வரை, ‘நீ உருவேற்றியதனால்தான் அவன் இப்படி ஒரேயடியாகக் கத்திரித்துக் கொண்டு விட்டான்’ என்று உன் மண்டையை உருட்டுகிறார்கள்? விசித்திரமாக அல்லவோ இருக்கிறது?” என்று லீலா மடமடவென்று வினவினாள்.

     “நான் சிரத்தையுடன் கேட்கவில்லை. அவரும் நான் கேட்காததனால் சொல்லவில்லை போல் இருக்கிறது” என்று நான் சிரித்து மழுப்பினேன்.

     “என்ன விந்தைப் பெண்ணடி நீ? இந்த நவயுகத்திலே கணவனின் உத்தியோகம் அறியாமல் இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? அன்றன்றைய விஷயங்களைக் குடைந்து தள்ளுவார்களே. நினைத்து நினைத்துப் பார்த்தால் கூட உன் பொறுமை எனக்கு அளவில்லாத வியப்பை ஊட்டுகிறது. தனிக்குடித்தனம் வந்ததற்கும் உன் மீது பழி சுமத்தினார்கள். நீயோ ஒன்றும் அறியாமல் சிரித்து மழுப்புகிறாய். ராமுவுந்தான் ஆகட்டும், மூன்று மாத காலமாக உன்னிடம் வீட்டில் நடமாடும் ஒரே ஜீவனிடம் எப்படி இந்தச் சங்கதியைக் கூறாமல் இருந்திருக்கிறான்? புது விஷயம் ஏதும் இருந்து அன்புக்குரியவரிடம் தெரிவிக்காமற் போனால் தலை வெடித்துவிடும் போல் இருக்காதோ?” என்றாள் லீலா.

     “ஆம், அவரே விந்தைக் கணவர் தாம். எங்கள் வாழ்க்கையும் விந்தை வாழ்க்கைதான்” என்று கூறிய நான் இன்னும் பலமாக நகைத்தேன். கடையிலே அழகாகக் காணப்படும் பொம்மையை, வெளியிலிருந்து வாயைப் பிளந்து கொண்டு பார்க்கும் ஏழைச் சிறுமியைப் போல அவள் பேசாமலேயே என்னைப் பார்த்தாள்.

     இந்த நிலைமை என்னைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விடுமோ என்று நான் தவிக்கையிலேயே வாசற் கதவு தட்டும் ஓசையும், தொடர்ந்து ‘போஸ்ட்!’ என்ற குரலும் என்னை விடுவித்தன. நான் போவதற்குள் இரண்டு கடிதங்களை உள்ளே போட்டுவிட்டுத் தபால்காரன் போய்விட்டான்.

     நான் அவற்றை எடுத்துக் கையெழுத்தைக் கவனித்துக் கொண்டே உள்ளே வந்தேன். ‘சுசீலா ராமநாதன்’ என்ற விலாசம் எனக்கு இப்போது எத்தனை பழக்கமாகவும் அசுவாரசியமாகவும் ஆகிவிட்டது? ஒவ்வொரு முறையும் நான் வானொலியில் பாடிவிட்டு வந்த பிறகு தொடர்ந்து ஒரு வாரத்துக்கு யாரேனும் கடிதம் எழுதுவார்கள். என் பாட்டுக்கு விமரிசனம் என்ற பெயரில் அவை பெரும்பாலும் புகழுரைகளாகவே இருக்கும். அந்த அசுவாரசியமும் திகைப்பாக மாறும்படி ஒரு கடிதத்தில் மைசூர் முத்திரை இருந்தது. கீழே ‘ஹேமா’விடமிருந்து என்றும் காணப்பட்டது. நான் உறையைக் கிழித்தேன். உள்ளே இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று அத்திம்பேர் என் கணவருக்கு எழுதியிருந்தார்.

     மூர்த்தி பயிற்சி முடிந்து வரும் வாரம் வரப்போகிறானாம். அவர் அவனை வரவேற்பதை வியாஜமாகக் கொண்டோ என்னவோ, சென்னை வர இருக்கிறாராம். கூடவே அத்தையும் ஹேமாவும் வருவதற்கு ஆசையாக இருக்கிறார்களாம். மூர்த்தி வந்தவுடன் வேலை ஒப்புக் கொள்ள வேண்டி இருப்பதால் ஹேமாவின் கல்யாணத்தை அடுத்த மாதத்திலேயே நடத்தி விட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதை மடித்து விட்டு ஹேமா எனக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பிரித்தேன்.

     “இப்போதெல்லாம் நீ சாமானியமானவளா, சுசீலா! இசையுலகிலே வானொலி மூலம் வட்டமிடும் கந்தர்வ மங்கையாகி விட்டாய்! உன் புது விலாசங் கூட ஊரிலிருந்து மாமா எழுதியே எங்களுக்குத் தெரிந்தது. ஒரு கடிதம் எழுதவும் உனக்கு ஓய்வு கிடைக்கவில்லையா? பத்திரிகைகள் உன் சங்கீதத்தை மிகவும் சிலாகித்து எழுதியிருப்பதைக் கண்ணுற்ற பின் போன வாரந்தான் உன் நிகழ்ச்சியை நான் சிரத்தையுடன் உட்கார்ந்து கேட்டேன். உண்மையிலேயே உன் குரலில் அலாதி இனிமையும் கவர்ச்சியும் இருக்கின்றன சுசீ. வருங்கால இசையரசியான நீ என்னுடைய சகி என்று நினைக்கவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. அப்பா அங்கு வரப் போவதாகச் சொன்னவுடன் எனக்கும் உன்னைப் பார்க்க ஆசையாக இருப்பதால் நானும் வரத் தீர்மானித்து விட்டேன். உன்னுடன் ஒரு வாரம் சந்தோஷமாகக் காலம் கழிக்கக் கூடாதா?...” என்றெல்லாம் இரண்டு வருஷம் முன்பு என்னிடம் முகம் கொடுத்துப் பேசவும் கூசிய ஹேமா என்னையும் மதித்து இப்போது வரிந்து தள்ளியிருந்தாள்.

     அன்று என்னை வேலைக்காரியிலும் கேவலமாக மதித்த அதே மனிதர்கள் இன்று என்னைத் தேடி என் வீட்டிலே என் தோழமையை மதித்து வர விரும்புவானேன்? நான் என்ன மாறிவிட்டேன்? ஆம், உண்மைத் தோற்றம் அவர்களுக்குப் புலப்படாது. செல்வமும், இறுமாப்பும் கொண்ட கும்பலுக்கே வெளித் தோற்றந்தான் குறி. அன்றை விட நான் வெளியார் கண்களுக்கு மேலானவள் ஆகிவிடவில்லையா? அஞ்சி அஞ்சி வீட்டின் அதிகாரிக்குப் பணிவிடை புரியும் பரிதாபகரமான ஏழைச் சுசீலாவா நான் இப்போது? எனக்கும் ஒரு வீடு, வாசல் என்று சொந்தமாக இருக்கின்றன. புகழ் ஏணியிலே வேறு காலை வைத்திருக்கிறேன்.

     ஒரு கடிதத்திலேயே ஆழ்ந்து விட்ட என்னை லீலா, “என்ன சுசீ. ஒரே கடுதாசியில் அப்படி ஆழ்ந்து விட்டாயோ? யாராவது ‘கிரிட்டிக்’ உன் சங்கீதத்தைப் பற்றி எழுதியிருக்கிறாரா?” என்று என் கவனத்தைத் திருப்பினாள்.

     “இல்லை, மூர்த்தி அடுத்த வாரம் இங்கே வரப் போகிறாராம். அத்திம்பேரும் ஹேமாவும் இங்கே வரப் போவதாக எழுதியிருக்கிறார்கள்” என்று நான் கூறிய போது அவள் முகம் சடாரென்று கறுத்து விட்டது.

     அப்பா குதிருக்குள் இல்லை என்பதைப் போல, என்னைப் பார்க்கும் போதெல்லாம், ‘மூர்த்தியை நான் மறந்து விட்டேன்’ என்று முடிவு கூறியவளாயிற்றே?

     “ஏன் லீலா? ஒரேயடியாக இருண்டு விட்டீர்களே. ‘மூர்த்தியை நான் நினைவிலிருந்து அகற்றிவிட்டேன்’ என்று பெருமையடித்துக் கொள்வீர்களே!” என்று நான் பரிகாசமாக மொழிந்தேன்.

     என் கணவர் என் மீது எல்லையிலாப் பிரேமை வைத்திருக்கிறார் என்று நான் நம்பி, பிரேமை யுலகத்திலே மிதந்து கொண்டிருந்த நாட்களில் லீலா - மூர்த்தியின் காதலை எவ்வளவோ உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தேன். அப்புறமும் - என் வாழ்வில் இருள் புகுந்த பின் - காதலின் பேரில் எனக்கு மதிப்புக் குன்றிவிட்டது என்று கூறவில்லை. அவர்கள் இருவரையும் காணும் போதே எனக்கு அலாதி மகிழ்ச்சி உண்டாவது வழக்கம். மூர்த்தியைக் குணக்குன்று என்று நான் பழகிய மாதிரியிலிருந்து போற்றி வந்தேன். ஆனால் லீலாவிடம் நான் அறியக் காதல் மொழிகள் கூறி அவள் உள்ளத்தில் பிரேமையை வளர்த்துவிட்டு, ஹேமாவை மணந்து கொள்ள வாக்குறுதி கொடுத்திருப்பதாகத் தெரிந்த பிறகு நான் அவன் மேல் கொண்டிருந்த உயரிய மதிப்பிலே சற்று விரிசல் விழ ஏதுவாகி விட்டன. என்னுடைய அனுபவமும் கண் முன் அவன் லீலாவைப் புறக்கணித்திருப்பதும், ‘ஆண்களே நம்பத் தகாதவர்கள்’ என்ற அழுத்தமானதோர் எண்ணத்தை என் மனத்தில் ஊன்றி விட்டன. எனவே, லீலாவின் மன ஏக்கத்தைக் கண்டு, எனக்கு அத்தனை இரக்கம் ஏற்படவில்லை. ஒரு விதத்திற்குத் தப்பினாள் என்று கூட அபிப்பிராயப்பட்டேன். என்னைப் போல் இல்லையே அவள்?

     திடீரென்று கவனம் வரவே இன்னொரு கடிதத்தைப் பார்த்தேன். கையெழுத்துப் பரிசயம் இல்லாததாக இருந்தது. முத்திரை தெளிவாகத் தெரியவில்லை. வேறு ஏதாவது அசுவாரசியக் கடிதமாக இருக்கும் என்று பிரிக்காமலே மேஜை மேல் போட்டுவிட்டு, “அடுத்த மாதம் கல்யாணம் நடப்பதாக இருக்கிறதாம்” என்றேன் மெதுவாக.

     “என்னை இனிமேல் என்ன செய்யச் சொல்கிறாய் நீ, சுசி? அதைக் கேட்கவா நான் இந்த வேகாத வெயிலில் வந்தேன்” என்று எடுத்த எடுப்பிலேயே லீலா என்னிடம் கேட்டாள்.

     நான் இப்போதும் சிரித்தேன். அவளுக்குக் கோபம் வந்தது.

     “உனக்கு நகைப்பாக இருக்கிறது இல்லையா சுசீ? நீ கூட இப்படி என்னைக் கை விட்டுவிடுவாய் என்று நான் நினைக்கவில்லை” என்று சிணுங்கியபடியே அவள் எழுந்தாள்.

     “வெகு அழகுதான்? கை விடாமல் வேண்டுமானால் பிடித்துக் கொள்கிறேன். நான் ஒரே யோசனை தான் சொல்வேன். கேட்பீர்களா?” என்று சற்று உரக்க நகைத்தேன்.

     “உம் சொல்லு.”

     “பேசாமல் நடந்ததையெல்லாம் கனவு போல் மறந்து விட்டு வரதனை மணந்து கொள்ளுங்கள். அவருடைய ஆசையைக் கருக்கி விடாமல் அவருடைய வீட்டிற்கு எஜமானியாக ஆகுங்கள். காதல் கீதம் எல்லாம் கதையுடனும் காவியத்துடனும் சினிமாவுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு அது ஒத்து வராது. மனக்கோட்டை எதுவும் கட்டிக் கனவு உலகத்திலே பறக்காமல் சாதாரணமாக மணம் செய்து கொண்டீர்களானால் வாழ்க்கையில் அமைதி நிலவும்” என்று எனக்குப் பட்டதைக் கூறினேன்.

     “என்ன சுசீ? நிஜமாகவே இது உன் அந்தரங்க யோசனையா? தெரிந்தும் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளச் சொல்லுகிறாயா?”

     “இந்திரலோகம் போன்ற பங்களாவில் காலெடுத்து வையுங்கள் என்றேனா, குட்டிச் சுவர் என்றேனா? மூர்த்தி இல்லாவிட்டால் நீங்கள் வாழ்வையே துறந்து விடலாம் என்று எண்ணினீர்களா? அது சாத்தியமாகுமா?” என்றேன்.

     “சற்றும் பிடித்தம் இல்லாத ஒருவருடன் வாழ்க்கையில் பங்கு கொள்ள மனம் துணியாது போல் இருக்கிறதே சுசீ? வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் காணும் பொருட்டுத்தானே மணப் பந்தலில் இருவர் பிணைப்புறுவது? அது பூஜ்யம் எனத் தெரிந்ததும் ஒருவரோடு ஒருவர் மணவினையினால் பிணைப்புற்று என்ன பயன்? வேறு ஒருவரிடம் மனத்தைக் கொடுத்து விட்டு என்னால் தான் அவருடன் இன்பமாக வாழ முடியுமா? அல்லது நான் முழு மனத்துடன் அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்தால் அவருக்குத்தான் சந்தோஷம் உண்டாகுமா?” என்று பரிதாபமாக என்னை நோக்கி விழித்தாள் லீலா.

     எனக்கு இந்த விஷயம் அலுத்து விட்டது. பாவம்! புதிதுதானே? அவளுக்கு அதிர்ச்சி இன்னும் பழகவில்லை.

     “இருக்கட்டும், இருக்கட்டும். மூர்த்தி இங்கே வராமலா போகிறார்? மலரும் நகையுடன் எப்போதும் பிரகாசித்த லீலாவின் இருதயத்தை இருளச் செய்த அவரை நான் கண்டு சும்மா விடப் போவதில்லை. கவலையெல்லாம் மூட்டை கட்டித் தூர வையுங்கள். மனத்தை வீணே தளர விடுவதில் பலக் குறைவுதான் காணும் பலன். குழந்தைகள் எங்கே? நாலு மணிக்கு ‘டான்ஸ்’ நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. கலாமந்திரத்திலே போகலாமா? என்ன டிபன் பண்ணலாம். சொல்லுங்கள்” என்று நான் பேச்சை மாற்றி அவள் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தேன்.

     உள்ளே, தம்புராவின் தந்திகளை மீட்டிக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். என் குரல் கேட்டதும், “நான் இல்லை சித்தி, அவள் தான்!” என்று குழந்தைகள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஓடி வந்தனர். அன்று மாலை நேரத்தை அவர்களுடன் இன்பமாகக் கழித்த பின்னும், ‘போகிறார்களே’ என்று இருந்தது எனக்கு. குழந்தைகளை அணைத்து முத்தமிட்ட நான் பஸ் ஏறச் சென்ற லீலாவிடம், “குழந்தைகளையாவது விட்டுப் போகக் கூடாதா? இல்லாவிட்டால் நீங்களும் இரண்டு நாள் இங்கே இருக்கக் கூடாதா?” என்று கெஞ்சினேன்.

     “சொல்லாமல் கொள்ளாமல் நான் தங்குவது சரியில்லை சுசி. இப்போதே மணி ஆறரை ஆகிவிட்டது” என்று அவள் சொன்னாள். ‘ஈசுவரா!’ என்று மன அலுப்பும், உற்சாகமும் குன்றிய உடலுமாக உள்ளே வந்த என் கண்களில் பிரிக்கப் படாமல் இருந்த மற்றொரு கடிதம் பட்டது.

     அலட்சியமாகப் பிரித்தேன். உள்ளே கடிதத் தாளின் மேலே அச்சடிச்சிருந்த வரதன், எம்.ஏ., என்ற எழுத்துக்கள் என்னை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டன! சட்டென ஐயம் உந்த, கடித உறையைத் திருப்பிப் பார்த்தேன். சுசீலா ராமநாதனுக்குத்தான். என்னவாக இருக்கும் என்று படிக்கலானேன்.

     “இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியம் அளிக்கலாம், சுசீலா. ஆனால் இதை எழுத வேண்டியது என் கடமை. ரஸிகன் என்ற முறையிலும், அதே கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்றவன் என்ற முறையிலுந்தான் சொல்கிறேன். உன் வித்தையிலே நான் கொண்டிருந்த நம்பிக்கை நான் எதிர்பார்த்ததற்கு மேலாகச் சுடர்விட்டிருக்கிறது. வெறும் புகழ் வார்த்தைகள் என்று நினைக்காதே. இசைக்கென்றே பிரமன் உன் குரலைப் படைத்திருக்க வேண்டும். ஞானமும் இனிய குரலும் ஒன்று சேரும் இடத்தில் சங்கீதக் கலை தேனும் பாலும் சேர்ந்தது போல் பரிணமிக்கக் கேட்பானேன்? முக்கால் மணி நேரம் கந்தர்வ உலகத்தில் இருப்பது போல் இருந்தது எனக்கு. தோடி ராகத்தை விஸ்தாரம் செய்தாயே? அது இன்னும் என் செவிகளை விட்டு அகலவில்லை. ராகத்தின் ரஞ்சகத்தை மிகைப்படுத்திக் காண்பிக்கும்படி நீ கையாண்ட பிடிகைகளும், இழைந்து இழைந்து மனத்தைப் பரவசப்படுத்திய கமகங்களும், அநாயாசமாகப் பறவை போல் மூன்று ஸ்தாயிகளிலும் நீ வட்டமிட்டதும் உன்னைப் பெரிய வித்வாம்ஸினிகளின் வர்க்கத்தில் சேர்த்து விட வேண்டியதுதான் என்று உறுதிப்படுத்தி விட்டன. விருத்தம் என்று பாடினாயே? அது பிரமாதம். கல்யாணி ஜம்மென்று புதுவெள்ளத்தின் சுழிப்பைப் போல முழங்கினாள். பைரவி உன்னிடம் கெஞ்சிக் கொஞ்சினாள். காவேரி பாகாய் உருகினாள். மோகனமோ கேட்போர் மனங்களிலே மோகனக் கவர்ச்சியை நிரப்பினாள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டது நீ கடைசியாய்ப் பாடிய பதம். ‘யாரிடம் சொல்வேனடி’ என்ற அந்தப் பாடல் உண்மையான உள்ளத்திலிருந்து உருகிக் கரைந்து காற்றிலே வந்தது என்றால் மிகையாகாது. அந்த வேலவன் ஆறுமுகம் மட்டும் உன் கீதத்துக்குச் சற்றுச் செவி சாய்த்திருப்பானானால் உன் உருக்கத்துக்கு வசப்பட்டுக் கட்டாயம் பிரத்தியட்சமாகி இருப்பான்” என்று அக்கு வேறு ஆணிவேறாக அலசி அலசி ஆராய்ந்து எழுதியிருந்தான்.

     வரதனிடமிருந்து இத்தகைய கடிதம் ஒன்று வரும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் என் கானத்தைக் கேட்பான் என்ற எண்ணங்கூடத் தற்செயலாக வேணும் எனக்கு எழுந்ததில்லை. இப்போது அவன் அனுபவித்துவிட்டுத் தெரிவித்திருக்கும் பாராட்டுதல் என் உள்ளத்திலே அதுகாறும் நான் கண்டிராத போதையை நிரப்பிவிட்டது. உண்மையை நான் மறைக்காமல் சொல்லி விட வேண்டியதுதானே?

     நானோ மணமானவள். அவனோ அயல் ஆடவன். தெரிந்தும் அவன் இத்தனை நிர்ப்பயமாக, சுவாதீனமாக எழுதியிருப்பதைத் தவறுதலாக எடுத்துக் கொள்ளலாம் என்றே எண்ணம் உதிக்கவில்லை. வேறு ரஸிகர்கள் எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நேரிலும் அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள். அவைகளில் நிச்சயமாக இவ்வளவு சரளம் தொனித்ததில்லை. ‘பிரமன் உன் குரலை இசைக்கென்றே படைத்திருக்க வேண்டும்’ என்று யாருமே கையாண்டதில்லைதான். என்றாலும் வரதன் என்னுடன் பழகியவன் அல்லவா? எதையும் கொஞ்சம் மிகைப்படுத்தியே கூறுவது அவன் சுபாவம். இதில் என்ன தப்பு இருக்கிறது?

     அம்மாவுக்குத் தெரியாமல் தின்பண்டத்தை எடுத்துத் தின்னும் குழந்தைக்கு ருசியின் சுவாரசியத்தில், ‘பின்னால் தாய் கோபிப்பாள்’ என்றே தோன்றாது. உண்மை ரஸிகன் ஒருவனுடைய புகழ் மொழிகளைக் கண்டுவிட்ட எனக்கு எத்தகைய குறுக்கு எண்ணமும் தோன்றவில்லை. எப்பேர்ப்பட்ட அறிவாளிகளையும் புகழ்மொழிகள் மயக்கிவிடும் அல்லவா? இன்னும் உலகிலே முற்றிய அநுபவம் வாய்ந்திராத நான், அலுப்புச் சலிப்பு இயற்கையாகவே வந்து அடையும் அளவுக்குப் பழுத்திராத நான், புகழுக்கு வசப்பட்டு ஆசைப்பட்டது இயல்புதானே?