முன்னுரை - பெண் குரல் - Penn Kural - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

மலர்

4

     மறுநாள் சனிக்கிழமையாதலால் லீலா வீட்டிலேதான் இருந்தாள். எனக்கு வெளியில் எட்டிப் பார்க்கக் கூட அவகாசம் இல்லாதபடி சமையலறை அலுவல்கள் அத்தனையும் வெகு சுவாதீனமாக அதற்குள் என்னைப் பற்றிக் கொண்டு விட்டன. முன்னாள், அவர் வீட்டிலேயே தங்கவில்லை. சிகிச்சை இல்லமும், குழந்தையும் அவரைப் பிடித்துப் பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டன. கர்ப்பிணியாக இருந்த பட்டுவை டாக்டர், ‘இரவு கண் விழிப்பது கூடாது’ என்று கூறி விட்டதனால் அவள் முழுப் பொறுப்பையும் அவர் தலையிலேயே கட்டிவிட்டு வீடு வந்து விட்டாள். “ஏற்கனவே உன் உடம்பு பூஞ்சை. இராக் கண் பகல் கண் முழித்தால் உனக்கு ஆகாது. ராமுதான் இருக்கிறான். குழந்தைக்கு உடம்பு சரியாகும் வரை பார்த்துக் கொள்கிறான். குழந்தையும் அவனிடமே தானே ஒட்டிக் கொண்டு இருக்கிறாள்?” என்று என் மாமியார் வேறு செல்ல மருமகளுக்கு இதமாகப் பரிவு காட்டினாள்.

     ‘குழந்தையின் அருகில் இருக்கத் தாய்க்குப் பதில் வீட்டிலே வேறு பெண் மக்களே அஸ்தமித்து விட்டார்களா? அவர் நர்ஸ் வேலை செய்ய வேண்டுமா? ஏதோ வீட்டில் அன்பு காட்டுபவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள் உண்டுதான். அதற்காக அவரே அதைத் தொட்டிலிட்டுத் தாலாட்டும் நிலைமையில் முழுக்க முழுக்க ஐக்கியமாகி விட வேண்டுமா?’ முதல் நாள் அமுங்கிக் கிடந்த என் குரோத உணர்ச்சி கொதிக்கலாயிற்று.

     முழுசாக மூன்று நாட்கள் ஆவதற்குள், பாம்புக்கு விஷம் இல்லாமல் போகாது என்றபடி தன் குணத்தை இப்போது காண்பித்து விட்டாள். எங்கோ வெளியே அழைத்துப் போனாளாக்கும் என்றில்லாமல் லீலாவை என்னைச் சொல்லாதவள் போலத் தேள் கொட்டுவது போல் சுள்ளென்று கடிந்து கொண்டாளே! கொட்டினது அவளைத் தான் என்றாலும் நெறி எனக்குத் தான் ஏறியது. ஏண்டி அழைத்துப் போனாய் லீலா என்றாலும் நீ ஏண்டி போனாய் சுசீலா என்று தான் அர்த்தம்.

     என்னைப் பார்ப்பதற்கு என்று மயிலாப்பூரில் தனியாக இருக்கும் என் டாக்டர் மைத்துனரும், அவர் மனைவி விஜயமும் வந்திருந்தார்களாம். எனக்காகக் காத்துப் பார்த்து விட்டு இன்னொரு நாள் வருவதாகக் கூறிப் போய் விட்டார்களாம். இடித்துக் காட்டுவதைப் போல இதை என் காதுகள் கேட்கவே மும்முறை சொன்னாள். நான் லீலாவுடன் வெளியே சென்றிருக்கும் செய்தியை அவர் வீடு வந்தவுடனேயே அறிவித்திருக்க மாட்டாளா?

     இரவு சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன் நான். சிகிச்சை இல்லம் செல்லுமுன் ‘பிளாஸ்க்’ அலம்ப வந்த என் கணவர், “லீலாவுடன் எங்கெல்லாம் போயிருந்தாய்?” என்று கேட்டார்.

     “எங்கும் இல்லை, ஒரு சினிமாவுக்குப் போயிருந்தோம்” என்று மெதுவான குரலில் பதில் அளித்தேன்.

     “தேவலையே! எந்தப் படத்திற்குப் போனீர்கள்? அதற்குள் நீயும் லீலாவும் இத்தனை சிநேகம் பூண்டு விட்டீர்களே!” என்று மனத்தில் ஏதும் மாசின்றிச் சந்தோஷமாக எங்கள் நட்பை உற்சாகப்படுத்தும் பாவனையில் கூறினார் அவர்.

     தாம் இன்றி, தமக்குத் தெரிவிக்காமல் வெளியே சென்றதற்காக அவர் என்னைக் கண்டிக்கட்டும் என்று பட்டு எண்ணியிருந்தாளோ என்னவோ? கோபத்தின் ரேகை கூட அவரிடம் காணவில்லை. மதனியிடம் அவர் அளவு கடந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கலாம். ஆனால் லீலா கூறியது போல மரியாதை கொடுத்திருந்தான். மரியாதை வாங்க வேண்டும் என்று என் அவளுக்குத் தெரியவில்லை. அவருடைய அத்தனை மதிப்பையும் குலைத்துக் கொள்ளும் வகையில் அவள் நடந்து கொண்டு அவருக்குக் கோபமூட்டி விட்டுப் பிறகு என் மீதே குற்றம் சாட்டுவாளோ என்னவோ? ஊர்வலத்தின் போது நான் அவளைப் பற்றி அவ்வளவு உயர்வாக எண்ணிப் பெருமைப்பட்டேன்! அந்த அறியாமையை நினைத்துக் கொண்டால் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. மனத்தில் எது நல்லது என்று படுகிறதோ அதற்குத் தோற்றப் பொலிவும் இருந்தால் அதற்கு அதிக மதிப்பு உண்டாகிவிடும். சர்க்கரைப் பண்டத்துக்கு வலம் ஊட்டுவது போல ஆகிவிடும். அப்படி அவள் அகன்ற குங்குமப் பொட்டும், கம்பீரமான முகமும், நகை தவழும் இதழ்களும் நான் அவள் அன்பின் அவதாரம் என்று எண்ணியதற்கு இன்னும் அநுசரணையாக இருந்தனவே! ஒரு தரம் சிறு வயசில் எனக்கு மலேரியாக் காய்ச்சல் வந்திருந்தது. அப்போது வைத்தியரிடமிருந்து அப்பா இரண்டு மாத்திரைகள் வாங்கி வந்து எனக்குக் கொடுத்தார். வெண்மையாக, உருண்டையாக, பார்ப்பதற்குச் சர்க்கரை மிட்டாயைப் போல் இருந்த அம்மாத்திரையை நான் முரணேதும் செய்யாமல் வாயில் போட்டுக் கொண்டேன். நாவில் பட்டதும் அசல் மிட்டாயைப் போலத் தித்தித்தது. அந்த உற்சாகத்தில் நான் அதைக் கடைவாய்ப் பற்களால் கடித்ததுதான் தாமதம், விஷமாகக் கசந்தது! தொண்டை மூக்கெல்லாங் கூட நெடியேறியது!

     பட்டு என்னைக் கண்டு செய்யும் புன்னகையும் இப்படித்தான் போலும்! உண்மை அன்பு செயல்களினாலன்றோ வெளிப்பட வேண்டும்? உள்ளத்தில் கசப்பை வைத்துக் கொண்டு மேலுக்குக் காட்டும் இனிப்பு உண்மையானதல்ல என்று வெளிப்பட எத்தனை நேரமாகும்?

     ஒரு கொடியில் காய்த்திருக்கும் லீலாவுக்கும் பட்டுவுக்கும் எத்தனை வித்தியாசம்! ஒருத்தி இரண்டு நாட்களுக்குள் எனக்குக் கசப்பை உண்டாக்கும்படி நடந்து கொள்வானேன்? இன்னொருத்தி இரண்டு நாட்களுக்குள் என் இருதயத்தையே கவர்ந்து விடுவானேன்?

     வைரமும் கரியும் ஒரே மூலப் பொருளிலிருந்து உண்டாகவில்லையா? சேற்றில் செந்தாமரையும் முளைக்கிறது! பாசியுந்தான் படருகிறது!

     ‘மூர்த்தி வேறு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். அவன் இன்னும் என்ன பூகம்பத்தைக் கிளப்பி விடுவானோ? ஒரு விஷயம், ஒரு விஷயம் என்று புடவைச் சங்கதியை அப்படி மழுப்பினானே! இங்கே தனியாகக் கண்டு என்ன சொல்லப் போகிறானோ?’ என்ற கவலை வேறு என் மனச் சஞ்சலத்திற்குச் சூடேற்றியது.

     பகலில் கல்லூரியில் அரிசி அரைத்துக் கொண்டிருந்தேன். லீலா வந்து, “மூர்த்தி வந்திருக்கிறார், சுசீ” என்று எனக்கு செய்தி தெரிவித்தாள்.

     கலவரத்துடன் நான், “எங்கே? கீழேயா மாடியிலா?” என்று கேட்டேன்.

     “கீழேதான் நிற்கிறார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு உன்னிடம் கூறத்தான் வந்தேன். நீ போ. நான் அரைக்கிறேன்” என்று லீலா என்னை எழுப்பினாள்.

     அவள் என் ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டாள். கையை அலம்பித் துடைத்துக் கொண்டு புடவையைச் சரி செய்து கொண்டு உமிழ்நீரை விழுங்கி மனத்தைத் திடம் செய்து கொண்டவளாக நான் சமையலறையைத் தாண்டி வந்த போது, அவன் பக்கத்தில் உள்ள சாப்பிடும் அறையிலேயே வந்து நின்று புன்முறுவல் பூத்தான். அவன் கையிலிருந்த அந்தப் புடவைப் பொட்டலத்தைக் கண்டதும் எனக்குத் ‘திக்’கென்றது. அத்தை திருப்பி அனுப்பி விட்டாளா என்ன? நன்றாகத்தான் இருக்கிறது. அந்தப் புடவைகள் அவனுடன் போவதும் வருவதும்!

     “மாமி இவைகளை உனக்காகவே வாங்கினாளாம். நீயே அவளிடம் திருப்பிக் கொண்டு கொடுத்து விடு என்று சொல்லி விட்டாள்” என்றான் அவன்.

     என் அசட்டுத்தனத்தையும் அத்தை யகத்து அவமரியாதையையும் அவன் அறிந்து கொண்டிருப்பானா, அல்லது அவனுக்கு அறிவிக்காமலே அத்தை உள்ளூற விஷயத்தைக் கிரகித்துக் கொண்டு நாசுக்காகத் திருப்பியிருப்பாளோ என்ற நடுக்கத்துடன் நான் புடவைகளைப் பெற்றுக் கொண்டேன்.

     பின்னாலேயே வந்து நின்ற என் மாமியார், “என்ன அது? யார் இந்தப் பிள்ளை?” என்றாள். அவள் படபடத்த கேள்வியிலே இரும்பின் கடினமும் வேம்பின் கைப்பும் எனக்குப் புலனாயின.

     “அத்தை இரண்டு புடவைகள் வாங்கி அனுப்பியிருக்கிறார். அத்திம்பேருக்குத் தமக்கை பிள்ளை இவர்” என்றேன் நான் சுருக்கமாக.

     உடனேயே அவள் அவனிடம் மலர் முகத்துடன் குலம், கோத்திரம் முதற்கொண்டு விசாரிக்க ஆரம்பித்து விட்டாள். தன்னைப் பற்றிய விஷயங்களை மூர்த்தி கூறும் போது, தன்னுடைய கண்கள் நாலு புறமும் சுற்றி அலைந்ததை நான் கவனிக்காமல் இல்லை. அவனை அங்கேயே நிற்க வைத்துப் பேசியது எனக்கு ஏதோ போல் இருந்தது என்றாலும் பெரியவளான மாமியார் பேசாமல் இருக்கும் போது நான் உட்காருங்கள் என்று உபசரிக்கலாமா? ஒரு தம்ளர் காபி கொண்டு கொடுக்கலாமா?

     சங்கடத்துடன் கையைப் பிசைந்த வண்ணம் சிறிது நேரம் நின்றேன். அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த சமயம் எனக்கு எத்தனையோ சுதந்திரம் இருக்கும் என்று மனப்பால் குடித்திருந்தேன். இப்போது என்னுடைய சுதந்திரத்தைப் பரிசோதிக்கக் கூடிய சந்தர்ப்பம் வந்திருப்பதாகத்தான் எனக்குப்பட்டது. நிஜமாக எனக்கு அவ்வளவு சலுகை இருப்பதாக நான் நினைக்கும்படியான சூழ்நிலை இருக்கவில்லை.

     எனினும் தைரியத்துடன் உள்ளே வந்து அவனுக்குக் காபி தயாரித்தேன். அரைக்கும் வேலையை முடித்து விட்டு லீலா கையை அலம்பிக் கொண்டிருந்தாள்.

     “அவருடைய கண்கள் உங்களைத் தேடுகின்றன” என்று அவள் காதோடு கூறிவிட்டு நான் செல்லுவதற்குள், உட்காராமலேயே பேசிவிட்டு மூர்த்தி, “நான் வரட்டுமா சுசீலா?” என்று அங்கு இருந்தபடியே கூவினான்.

     “இல்லை இருங்கள். இதோ காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று நான் தம்ளரும் கையுமாக விரைந்தேன். அவன் கவனம் என் மாமியாரின் கையிலே லயித்திருந்தது. நான் அப்படியே கீழே வைத்துப் போயிருந்த புடவைப் பொட்டலம் அவள் கையில் இருந்தது. மேலே இருந்த காகிதத்தை நீக்கி அவள் புடவைகளை எடுத்தாள். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து ஒரு கடித உறை கீழே விழுந்தது.

     “கடிதாசு ஏதோ எழுதி வைத்திருக்கிறாள் போலிருக்கிறதே? அதை எடு, சுசீலா” என்று என் மாமியார் கூறு முன் நான் குனிந்து அதை எடுத்தேன்.

     கொட்டை கொட்டையாக ‘லீலா’ என்று விலாசமிடப்பட்டிருந்தது அதில்! விஷமச் சிரிப்புடன் நான் அதைத் திருப்பி வைத்துக் கொண்டு மூர்த்தியைப் பார்த்தேன். நீரில் முழுகி எழுந்தவனைப் போல அவன் முகபாவம். ‘நல்லவேளை! தப்பினேனே!’ என்று சொல்வது போல் தென்பட்டது. கவனித்திருந்தால் கூட என் மாமியாருக்கு ஆங்கிலம் புரிந்திருக்காதுதான். என்றாலும் ஆபத்து ஆபத்துதானே?

     “நான் வரட்டுமா மாமி” என்று விடைபெற்றுக் கொண்ட அவனைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அறையின் வாயிற்படியிலே ‘பிளாஸ்’கும் கையுமாகப் பட்டு, ‘சிகிச்சை இல்லத்’திலிருந்து வருபவள் எதிர்ப்பட்டாள். மூர்த்தியைக் கண்டு “யார் இவன்?” என்ற கேள்வி அவள் முகத்தைச் சிணுக்கியது. நானாக அவன் யாரென்பதையும், வந்த காரியத்தையும் அவளுக்கு அறிவித்தேன்.

     வாசல் வரை அவனைத் தொடர்ந்து சென்ற என்னிடம் அவன் மெதுவான குரலில், “லீலாவிடம் அதைக் கொடுத்து விடுகிறாயா?” என்றான் கெஞ்சும் பாவனையில்.

     “இல்லை கொடுக்க மாட்டேன்” என்று சிரித்த வண்ணம் மொழிந்துவிட்டு, குதூகலம் பொங்கக் குதித்துக் கொண்டே இரண்டு படியை ஒரு படியாகத் தாண்டி மச்சுப் படியில் ஏறினேன். ஒன்றுபட்ட இரண்டு உள்ளங்களின் தவிப்பு எனக்கு அவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது. பின்கட்டு வழியாகவே அவள் மாடிக்குச் சென்றுவிட்டாள் என்று எனக்குத் தெரியும். அறையின் வாசற்புறம் முதுகைக் காட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள்.

     கடிதத்தைப் பின்னால் மறைத்துக் கொண்டு நான், “அவர் உங்களைத் தேடு தேடு என்று தேடினார். நீங்கள் இங்கு வந்து கோபித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே! பாவம்! அவரை வரச்சொல்லிவிட்டு இப்படி ஒரு வார்த்தைக் கூட அவரிடம் பேசாமல் இங்கு வந்து உர்ரென்று நீங்கள் உட்கார்ந்திருப்பது எனக்கு நியாயமாகவே படவில்லை. நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களாக்கும்! அதுவும் சாமானியமான நண்பர்கள் கூட இல்லை...!” என்று இழுத்தேன்.

     “என்ன உளறுகிறாய், சுசீலா? சாமானிய நண்பர்கள் இல்லாமல் பின் என்னவாம்! சங்கக் கூடங்களில் சந்திக்க நேரிட்டிருக்கிறதே ஒழிய சேர்ந்தாற் போல் அவருடன் பத்து வார்த்தைகள் பேசியதே நேற்றுத்தான்” என்று மூடி மறைத்து லீலா என்னிடம் மெழுகினாள்.

     “ஓகோ! ஆனால் வாய்ப் பேச்சை விடக் கண்களின் உறவுக்கு அதிகச் சக்தி உண்டு என்று தெரியாதா எனக்கு? சொந்த விஷயம் என்று அவர் பேச வந்திருக்கிறாரே. இங்காவது வரச் சொல்லி இருக்கக் கூடாதா? அவர் ஏமாற்றத்தை எனக்குப் பார்க்கவே சகிக்கவில்லை!”

     “நீ மிகவும் அதிகப்பிரசங்கி, சுசீலா! கண்கள் பேசுவது, காதுகள் உறவாடுவது எல்லாம் உனக்குத்தான் தெரியும். சொந்த விஷயம் ஒன்றும் இருக்காது. அடுத்த கூட்டத்தில் யார் எதைப் பற்றித் தலை வேதனைப் பிரசங்கம் செய்யப் போகிறார்கள் என்று சொல்வார். மூடி மூடிப் பேசுவதே அவர் வழக்கம். உன் அத்தை கொடுத்து அனுப்பி இருக்கும் புடவைகளையும், ஊரில் எல்லோரும் சௌக்கியம் என்று நெல்லுக்குள் அரிசி சமாசாரத்தையும் வைத்துக் கொண்டு உன்னிடம் அப்படி கூறினாரே” என்று முகத்தை நான் பார்க்க முடியாதபடி லீலா திருப்பிக் கொண்டாள்.

     “அது போன்ற சங்கதிகளுக்குக் கடிதங்கூட எழுதுவாராக்கும்?” என்றேன். சூடுண்ட உடம்பில் உஷ்ணமானியை வைத்த உடனே பாதரசம் விறுவிறு என்று ஏறுவதில்லையா? என் கேள்வி அவள் அமுக்கி வைத்திருந்த ஆவலையும் துடிப்பையும், அவளுடைய பாசாங்கை மீறிக் கொண்டு எழுப்பி விட்டது. “ஏன் சுசீலா, ஏதாவது கடிதம் கொடுத்தாரா?” என்று பரபரப்போடு கேட்ட அவள் என் கையில் இருந்த கடிதத்தைப் பார்த்து விட்டாள்.

     “அப்படி வாருங்கள் வழிக்கு!” என்று நகைத்த நான், “நல்ல வேளையாகத் தப்பினீர்கள்! அத்தை அனுப்பிய புடவைப் பொட்டலத்தில் அதைப் பத்திரப்படுத்தி இருக்கிறார் என்று நான் கண்டேனா? அலட்சியமாகக் கீழே வைத்து விட்டு வந்தேன். அம்மா எடுத்துப் பார்த்து விட்டார். நல்லவேளை! விலாசம் புரியவில்லை. அத்தை எனக்குக் கடிதம் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மூர்த்தியின் முகத்தை நீங்கள் பார்க்கவில்லையே அப்போது!” என்று அவளிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.

     “சுசீலா!” என்று கீழிருந்து வந்த குரல் என்னை உலுக்கியது. கீழே ஓடி வந்த என்னை மாமியார், “ஓடி ஓடிப் பச்சைக் குழந்தையைப் போல நாலும் கிடக்க நடுவில் போய் விடுகிறாயே? இந்தா! புடவையை வாங்கிக் கொண்டு வைத்துவிட்டு, அடுப்பில் தோசைக் கல்லைப் போடு” என்று கடிந்து கொண்டாள்.

     இரவு, வேலைக்காரி கவனியாமல் போய்விட்டிருந்த எங்கள் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்தேன் நான். ‘சிகிச்சை இல்ல’த்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என் கணவர் உள்ளே வந்தார். அன்று மாலை காரியாலயத்திலிருந்து வந்த பின் அவருக்கு என்னுடன் எதுவுமே பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. “உன் அத்தை உனக்குப் புடவைகளை வாங்கி அனுப்பி இருக்கிறாளாமே, சுசீ? என்னிடம் நீ காட்டவே இல்லையே?” என்று கேட்டார்.

     நான் தலையைத் தூக்காமலேயே சுருதி கலைந்த வீணையைப் போல் “ஆமாம்” என்றேன். அவர் மட்டும் சக்தியுடையவராக இருந்தால் அந்த ஓர் ஆமாமிலேயே என் ஆற்றாமை அவ்வளவையும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

     “அப்புறம், மூர்த்தி உனக்கு உறவினனாமே? நீ என்னிடம் இதுவரை சொல்லவே இல்லையே! அவன் இன்று வந்திருந்ததாக மன்னி சொல்லுகிறாளே?” என்று கேள்விகளை என்னை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர் அடுக்கினார்.

     மன்னிதான் எல்லாவற்றையும் சொல்லுகிறாளே; நான் வேறு சொல்ல வேண்டுமா? பெட்டியைத் திறந்து, மௌனமாகவே புடவைகளை எடுத்துக் கொடுத்தேன். தடவிப் பார்த்துவிட்டு அவர், “நன்றாக இருக்கிறது. நிறங்கூட உனக்குப் பொருத்தமாக இருக்கும். அத்தைக்கு உன்னிடத்தில் பிரியம் அதிகமோ? நாளை ஞாயிற்றுக்கிழமைதானே. மூர்த்தியை வரச் சொல்லுவது தானே? மன்னி யாரோ என்றாள். அப்புறந்தான் லீலா, மூர்த்திதான் வந்தவர் என்று சொன்னாள்” என்று கூறி என் மனத்தைக் குலைத்த மாயப் புன்னகை ஒன்று புரிந்தார்.

     “உங்களுக்கு அவனைத் தெரியுமா?” என்று நான் கேட்டேன்.

     “லீலா தான் எனக்கு ஒருதரம் அவனை அறிமுகம் செய்வித்தாள். அதிலிருந்து எப்போதாவது சந்தித்தால் புன்னகை செய்வான். நானும் நின்று இரண்டொரு வார்த்தைகள் பேசுவேன். இனிமேல் நெருங்கிப் பழக்கம் செய்து கொண்டால் போகிறது” என்றார் அவர்.

     நான் பதில் ஏதும் கூறவில்லை.

     இந்த ஆண்களுக்கே பெண்களின் பேதை உள்ளத்தின் பலவீனம் நன்கு தெரிந்திருக்கிறது. கெஞ்சலிலும் கொஞ்சலிலும் முகஸ்துதியிலும் பெண்கள் மயங்கி விடுவார்கள் என்பதை நன்கு அறிந்திருப்பதால் தான் சமயத்திற்கு அவர்களை ஆட்டி வைக்கும் ஆயுதங்களாக அவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

     சுவரோரமாகச் சாய்ந்து நின்ற என் தோள் மீது கையை வைத்து அவர் என் காதில், “குழந்தைக்கு இன்னும் நாலைந்து நாட்களில் உடம்பு சரியாகி விடும். மன்னிக்கு உடல்நிலை சரியாக இல்லை. பார்! இந்தச் சமயத்தில் விட்டுக் கொடுக்கலாமா? கோபமா சுசி, உனக்கு? எனக்கும் எவ்வளவு சங்கடமாக இருக்கிறது தெரியுமா? நாளை ஞாயிற்றுக்கிழமை. உன்னிடம் சாவகாசமாக நாலு வார்த்தைகளாவது பேச முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.

     அழும் பிள்ளைக்கு மிட்டாய் கொடுப்பதைப் போல இது என்ன, எனக்குக் கண் துடைப்பா? பேசாமலே அவர் போயிருந்தால் தேவலையே! இந்தக் குழைவும் கொஞ்சலும் என் மனத்தை இன்னமுமல்லவோ நெளிய வைக்கின்றன?

     நான் வாயைத் திறந்து சொல்ல என்ன இருக்கிறது?

     “பார்த்தாயா? உனக்குக் கோபந்தான் போல் இருக்கிறது!”

     “கோபமும் இல்லை, ஒன்றும் இல்லை. கோபப்படுவானேன்?” என்று நான் முணுமுணுத்தேன்.

     “நீ இப்படிச் சொல்லும் போதே கோபம் தொனிக்கிறதே! கோபம் இல்லை என்றால் என் மனத்தை இழுக்கும் உன் புன்னகை எங்கே போயிற்று, சுசி?”

     இந்த நாடக மேடைப் பேச்சு, ‘பக்’கென்று என்னைச் சிரிக்க வைத்தது.

     “கொஞ்ச நாளைக்குப் புன்னகை புரிந்து உங்கள் உள்ளத்தைக் கவர்ந்து சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று தான் இருந்தேன்.”

     “பொல்லாதவள் சுசி, நீ!” என்று சிரித்துக் கொண்டே போய்விட்டார். அவர் சென்ற திக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நான் நின்றேன்.

     வந்து இரண்டு தினங்களிலேயே அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்றெல்லாம் ஆனந்த வானத்திலே சஞ்சரித்த நான் கனவுகள் கலைந்து உண்மையை நிதரிசனமாகக் கண்டுவிட்டேன். அன்பில்லாத மாமியார், அதிகாரம் செலுத்தும் ஓரகத்தி, கடமையில் உழலும் கணவன், இவர்களுக்கு மத்தியில் நான் தறியிலே ஓடும் குழல் போல ஓடி ஓடி உழைக்க வேண்டும்!

     ஏமாற்றமும் வெறுப்பும் மேலிட்டவளாக நான் சாளரத்தண்டை திரும்பி நின்றேன்.

     அடுத்த வீட்டில் காதல் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அன்று எனக்குப் பார்க்கப் பிடித்த காட்சி இன்று காணத் தகாத காட்சியைப் போல அருவருப்பைத் தந்தது. விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்தேன். குழந்தைகள் உறங்கிச் சந்தடி ஓய்ந்து விட்டதே ஒழிய மைத்துனரும் பட்டுவும் கூடத்திலேதான் இருந்தார்கள். ரேடியோ ஏதோ புரியாத ஹிந்துஸ்தானி இசையைப் பரப்பிக் கொண்டிருந்தது.

     சங்கீதம், கூத்து, கொம்மாளம், கேளிக்கை எல்லாம் அவர்களுக்குத் தான். எனக்கு அவற்றை எல்லாம் அனுபவிக்க ஓர் உரிமையும் கிடையாது. அத்தை வீட்டில் அன்று பாட்டி என்னை நேரிலேயே சுட்டு விடும்படி சொன்னாள். அதாவது ஒரு விதத்தில் தேவலை போலிருந்தது. இங்கே என்னை எல்லோரும் சொல்லாமலேயே நான் ஒன்றுக்கும் தகுதியற்றவள் என்று எப்படியோ அறியச் செய்தார்கள். இந்த வீட்டில்... இதே சூழ்நிலையில் இப்படியே என்றால் வாழ்நாள் முழுவதும்... அம்மாடி! நினைத்தாலே எனக்கு ஏதோ என் தலையில் மலையை ஏற்றுவது போலப் பளுவாக இருந்தது.

     இருட்டிலே ஏதோ உருவம் நிழலாடியது. குலுங்கிய வளையல் ஒலி லீலா என்று கட்டியம் கூறியது. வாயிற்படியில் காலை வைத்த அவள், “விளக்கை அணைத்து விட்டு இருட்டிலே உட்கார்ந்திருக்கிறாயே, நீ தூங்கி விட்டாயாக்கும் என்றல்லவா எண்ணினேன்?” என்றாள்.

     “ஆமாம், கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருப்பேன். தூக்கம் வந்தவுடன் அப்படியே படுத்து விடலாம். அப்புறம் எழுந்து விளக்கை அணைக்கச் சோம்பலாக இருக்காதா?” என்று மெல்ல நகைத்த நான் விளக்கை ஏற்றி விட்டு அவளை வரவேற்றேன். அப்போதைய என் நிலையில் அவள் வருகை சூடுபட்டுக் கன்றிப்போன தோலின் எரிச்சலில் தேங்காயெண்ணெய் பட்டது போன்ற இதத்தைக் கொடுத்தது. மேஜையடியில் கிடந்த நாற்காலியில் அமர்ந்த அவளை நான் மூர்த்தியின் கடிதத்தைக் கொடுத்த பிறகு அப்போதுதான் கவனித்தேன். மனத்திலே கரைபுரளும் அவள் மகிழ்ச்சி அவள் முகவழகை மிகைப்படுத்திக் காண்பித்தது. நிதானம் இல்லாமல் துள்ளித் திரியும் அவளுடைய படபடப்புச் சுபாவம் அடங்கி நிறைகுடத்தின் பொலிவை நினைப்பூட்டியது. நான் அவளை ஆராய்ந்து கொண்டிருக்க, அவள் என்னை ஆராய்ந்திருக்கிறாள்.

     “ராமு இத்தனை முட்டாளாக இருப்பான் என்று நான் எண்ணவில்லை சுசி” என்றாள் மெதுவாக.

     நான் பேச்சை மாற்றி, “மூர்த்தி உங்கள் இளைஞர் மன்றத்து விஷயமாகத்தான் எழுதியிருந்தாராக்கும்” என்றேன்.

     அவள் நான் கேட்டதை விடுத்து, “நீ மிக நன்றாகப் பாடுவாயாமே சுசீ? ராமு சொல்லியிருக்கிறானே!” என்றாள்.

     “அப்படிப் பெருமையடித்துக் கொண்டாராக்கும். நான் கேட்டதை விட்டுவிட்டீர்களே! மூர்த்தி இத்தனை சாமர்த்தியக்காரராக இருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உல்லாசமான வானம்பாடி போல் பறந்து திரிந்து கொண்டு இருப்பதாக நான் நினைத்த லீலாவைத் தந்திரமாக மனச்சிறைக்குள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாரே!”

     பொய்க் கோபம் கொண்டவளாக என் கையைப் பிடித்து அழுத்திய லீலாவின் சூடேறிய முகம் பார்க்க இன்னும் அழகாகத்தான் இருந்தது.

     “ஆமாம்... இல்லை. நான் தப்பாகச் சொல்லி விட்டேன். கோபப்படாதீர்கள். அவர் தந்திரம் ஏதும் செய்யவில்லை. தானாகவே பறவை கூண்டுக்குள்...”

     நான் முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள். “சுசி, நீ இந்த மாதிரி எல்லாம் பேசக் கூடாது. பழக்க தோஷத்தால் அப்புறம் நீ பாட்டில் அம்மா, அத்தை, அக்கா எல்லோரும் இருக்கும் சமயத்தில் ஏதாவது உளறி வைத்து விடப் போகிறாய்!” என்று என்னை எச்சரித்தாள்.

     “தெரிந்தால் என்னவாம்? ஒரு நாளைக்குத் தெரிய வேண்டியதுதானே. தலைவியின் களவொழுக்கத்தைக் குறிப்பாகப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டியது தோழியின் கடமை இல்லையாக்கும்?”

     “வெகு அழகுதான்! அப்புறம் சங்ககாலத்துப் பெற்றோர்களைப் போல உடனே அழைத்து மணம் நடத்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறாயாக்கும்! எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரதன் என்ன ஆவது? அவர் மூன்று வருஷங்களாகப் பார்த்துப் பார்த்து எனக்காக ஊட்டியில் கட்டும் பங்களா என்ன ஆவது? இந்தச் சமாசாரம் ஏதும் என் பெரியோர்களுக்குத் தெரிந்தால், மூர்த்தியை அப்புறம் இந்த வீட்டுக்குள்ளேயே ஏற்ற மாட்டார்கள்!” என்ற அவள் குரலிலே பேச்சுக்கு உரிய பாணி தொனிக்கவில்லை. நகை இருக்க வேண்டிய இடத்தில் சோகம் ஒளிந்திருந்தது. பாகவதர் சுகமாக ஆலாபனம் செய்யும் போதும் அபஸ்வரம் விழுந்து விட்டது போல் நான் உணர்ந்தேன்.

     “அது யார் அந்த வரதன்? அவர் கட்டும் பங்களாவிற்காக மூர்த்தியைப் பற்றி பிரஸ்தாபிக்கக் கூடாது என்று வாய்ப்பூட்டும் போடுகிறீர்களே!”

     “நீ விளையாடுகிறாய் சுசி. ராமுவிடங்கூடப் பேச்சு வாக்கில் பிரஸ்தாபித்து விடாதே. ஏனெனில் அவன் சும்மா இருக்க மாட்டான். விஷயத்தை ஆலோசியாமல் அக்காவிடமும் அத்திம்பேரிடமும் பரப்பி விடுவான். தவிரவும், அவராக முனைந்து வரவேண்டுமே ஒழிய, ஊருக்கு முன் எல்லோருக்கும் தெரிய வைப்பது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். முதல் முதலாக அக்கா காலேஜுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள். எனக்கு அதுதான் பயமாக இருக்கிறது. வரதன் அம்மாவுக்குச் சிறிய தகப்பனார் பிள்ளை. தலைமுறை தலைமுறைக்கு உட்கார்ந்து சுகம் அனுபவிக்கக் கூடிய அளவுக்குச் சொத்து இருக்கின்றது. சின்ன வயசிலே தூர உறவிலே ஒரு குழந்தையைப் பிடித்துப் பொம்மைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். அது கொடுத்து வைக்கவில்லை. திரண்ட ஐசுவரியங்கள் இப்போது ஓர் எஜமானிக்கு ஏங்கி நிற்கின்றன. வரதனுடைய தகப்பனார் ஒரு காலத்தில் என் தந்தைக்கு உதவி செய்தார். ஏற்கனவே தாம் செய்த பொம்மை விவாகத்தால் மனம் விட்டுப் போயிருந்த அவர் இறக்கும் தறுவாயில் வரதனுக்கு என்னை மனைவியாக்கும்படி என் தந்தையிடம் வாக்கு வாங்கிக் கொண்டார். இப்போது அவரும் போய் விட்டார் என்றாலும் வரதனுக்குத்தான் நான் என்று எல்லோரும் உறுதியாக முடிந்து வைத்திருக்கிறார்கள். படிக்க ஆசைப்படுகிறாள் என்று விவாகத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அத்திம்பேர் முதல் முதலாக வியாபாரம் ஆரம்பித்த போது கூடப் பண உதவி அந்தக் குடும்பத்திலிருந்து தான் கிடைத்தது. எனவே அவர்களுக்கும் அங்கே மிகுந்த மதிப்பு இருக்கிறது. நான் எல்லாம் தெரிந்தும் இப்போது மூர்த்தியைப் பற்றிப் பிரஸ்தாபித்தால் எத்தகைய பூகம்பம் எழும் என்று நீயே யோசித்துப் பார்!” என்றாள் லீலா.

     மெதுவாக நான், “மூர்த்திக்கு இதெல்லாம் தெரியுமா?” என்று வினவினேன்.

     “ஊஹூம்! நீ நினைக்கும் மாதிரியில் நாங்கள் மனதில் உள்ளதை இதுவரை பேசியதில்லை. நீ கொடுத்தது அவர் உள்ளத்தை அறிவிக்கும் முதல் கடிதம், சுசி.”

     நான் அசைவற்று அவளையே வைத்த கண் இமைக்காமல் நோக்கினேன்.

     “எனக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தோளிலே கைகளை வைத்துக் கொண்டு என்னை உற்றுப் பார்த்தாள்.

     என்னை விட வயசிலும் கல்வி கேள்வியிலும் வெளி உலக அனுபவத்திலும் மூத்தவள். என் கண்களுக்கு நான் சரிசமமாக நினைக்க முடியாதபடி மரியாதைக்கு உகந்த பாத்திரம் அன்பு ஒன்றினால் தான் அவளிடம் நெருங்கிப் பழக முடிகிறது என்று என்னை விட ஒருபடி மேலாக நான் கருதியிருக்கும் அவள், கிராமத்து மக்களிடம் குருட்டு நம்பிக்கைகளிடையே பக்குவம் அடைந்திருந்த என்னிடம் யோசனை கேட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. வெகு சுலபமாக, “அதனால் என்ன? வரதனை என்னால் மணம் புரிந்து கொள்ள முடியாது என்று பயப்படாமல் சொல்லி விடுங்களேன். என்னைப் பயங்கொள்ளி என்று கூறிவிட்டு நீங்களே பயங்கொள்ளியாக இருக்கிறீர்களே?” என்றேன் நான்.

     “போ சுசீலா. உனக்கு விளையாட்டாக இருக்கிறது. நாகரிகம், நாகரிகம் என்பதெல்லாம் நடை உடை பாவனையில் தான் இருக்கிறது. மனத்திலே வரவில்லை. ராமுவுடன் நான் வித்தியாசமின்றி விளையாட்டாகப் பேசுவதையே அக்கா நொடிக்கு நூறு தரம் கண்டிப்பாள். வரதனை நான் மறுத்தால் நிச்சயமாக எல்லோருடைய விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வகுத்த வழியிலே வாழ் நாள் முழுதும் துயரக் கடலில் உழல வேண்டும்” என்று தன் மனத்தைத் திறந்து அவள் கொட்டினாள். கதைகளில் மட்டுமே அதுவரையில் காதலைப் பற்றிப் படித்திருந்த எனக்குக் கண் முன் அதில் சிக்குண்டு வாடும் லீலாவைக் காண மனத்திலே மகிழ்ச்சி கிளம்பியது.

     காதல் காதல் என்று கதாசிரியர்களும், காவிய கர்த்தாக்களும் புகழும் அந்த அனுபவம் நமக்குக் கிட்டவில்லையே என்று தோன்றியதோ இல்லையோ, உடனே உள்ளிருந்து இன்னொரு குரல், ‘ஏன் கிட்டவில்லை? அவருடைய பேச்சும் பார்வையும் ஏன் இப்படிச் சிந்திக்கச் சிந்திக்க இனிக்கின்றனவாம் பின்? காதல் என்று தேவலோகத்திலிருந்து தனியாக வந்து குதிக்குமோ? பெரியவர்கள் சுட்டிக்காட்டிய திசையில் அன்பு எனக்கு உதித்திருக்கிறது. வாழ்வில் தடுமாறாமல் ஒரே நிலையில் இன்பமாகப் பிரயாணம் செய்ய அவள் அப்படி இல்லை. தன் மனம் போலச் செல்லும் திசையில் அன்பு கண்டு விட்டது. அதுதானே வித்தியாசம்? என்றது. இந்த எண்ணம் வந்ததும், என் உள்ளத்திலே அலாதியான ஒளி பிறந்தது. லீலாவை மறந்து என் வாழ்வின் விமரிசனத்தில் ஈடுபடும்படி சிந்தனைக் குதிரை வேறு திசையில் திரும்பி விட்டது. என் வீட்டிலும் சாதாரணமாக ஜகது, தங்கம் இருவரும் விவாகமாகிக் கணவன் வீடு சென்றிருந்தனர். தங்கத்தைப் பற்றி என்னால் அவ்வளவாக அறிய முடியவில்லை. ஆனால் ஜகது என்னைப் போலில்லை என்பது நிச்சயம். “இந்த மாப்பிள்ளைக்காகத் தந்தியடித்து, தபாலனுப்பி ஆயிரம் பாடுபட்டீர்களே, எதற்கெடுத்தாலும் அம்மாவிடம் உம் கொண்டிருக்க!” என்று எத்தனையோ முறைகள் அவள் அம்மாவிடம் புகார் கூறியிருக்கிறாள் என்றால் அந்த மாதிரி சொல்ல முடியாதே! அவள் ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தால் கூட அவரை நான் மணந்திருப்பது மகத்தான பேறு என்றல்லவா களிப்புறுகிறேன்? என் வாயாலேயே அவரை இழிவு செய்வேனா? இத்தகைய அழுத்தமான பிடிப்பு இந்தக் கொஞ்ச நாட்களிலேயே என்னை அறியாமல் என் உள்ளத்தில் வளர்ந்திருப்பதன் காரணம் என்ன? லீலா அவள் அறைக்குச் சென்ற பின் புதிதாகத் தோற்றமிட்டிருந்த மன ஒளியிலே என்னை மறந்து நான் சொக்கி விட்டேன். என்னுடைய அந்தப் புதிய உலகிலே கற்பனை விமானமேறி மனம் போனபடி சஞ்சரித்தவளை எப்படி நித்திரை அரசி ஆட்கொண்டாள் என்பதே தெரியவில்லை.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247