(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

கனி

5

     பொட்டல் செல்லும் வெளியிலே சூனியப் பாதை வண்டி ஓட்டிக்கு உற்சாகமாக ஒத்துழையாத சகா. பாதை எப்போது முடியுமோ, கலகலப்பான காட்சிகள் கண்களில் படுமோ படாதோ என்று உறங்கிய வண்ணம் நம்பிக்கை இழந்தவனாக வண்டியோட்டி கடனே என்று செலுத்திக் கொண்டு போகையில் சற்றும் எதிர்பாராத வண்ணமாக் நீள நெடுக்க கலகலப்புக் கூடிய வேறொரு பாதைத் தென்படுகிறது. சிரித்த முகத்துடனே வேற்று ஆள் ஒருவன், ‘அவளை இறக்கிவிட்டு என்னை ஏற்றிக் கொள். உனக்குத் துணையாக வருகிறேன். இந்த வழியிலே வெகு சந்தோஷமாகச் செல்லலாம் என்று அழைக்கும் போது வண்டியோட்டிக்குப் பழைய வழியில் தளர்ச்சி தென்படாமல் இருக்குமா? ஆனால் ஒத்துழையாமற் போனாலும் அந்த ஆள் நம்பகம் உள்ளவன். சூனியமானாலும் நாலு பேர் நம்பிக் காட்டிக் கொடுத்த வழி அது. புதியவன் எப்படியோ? புதிய வழியில் அபாயம் இருக்காது என்று நம்பிவிட முடியுமா? எங்கே கொண்டு போகுமோ?

     ஆதி அந்தமற்ற பரம்பொருளுடன் ஜீவன் ஐக்கியமானதைச் சிருங்கார ரசத்தில் விளக்கும் ஜயதேவ மகாகவியின் கீதகோவிந்த காவியத்தை இசை நிகழ்ச்சியாகத் தயாரித்திருந்தவன் வரதனேதான். பிரதம பாகமாக கண்ணன் பாத்திரத்தை ஏற்றுக் கீதங்களை அவன் இசைக்க, நான் ராதையாகப் பாட வேண்டும். வந்திருந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆம். சமய சந்தர்ப்பங்கள், முன்னேறியிருக்கும் என்னுடைய சரள மனப்பான்மை, கூட என் சகியாகப் பங்கு கொள்ள வந்திருக்கும் சரளா இருக்கும் தைரியம், எல்லாமாக என்னை ஒப்புக் கொள்ளச் செய்ய, ஓர் ஒத்திகைக்கும் போய் வந்துவிட்டேன்.

     அவரோ? என்னைப் புகைவண்டி நிலையத்திலிருந்து அழைத்து வந்ததுடன் சரி. முன் போலக் காலை ஒன்பது மணிக்குக் காரியாலயம் சென்றால் இரவு ஒன்பது மணிக்கு வீடு, சாப்பாடு, பத்திரிகை, தூக்கம் என்ற வரையறையிலிருந்து இம்மி கூட இப்படியோ அப்படியோ அசையவில்லை. வானொலி நிலையத்திற்கு நான் எப்போதும் சரளாவுடன் கூடத்தான் செல்லுவது வழக்கம். இப்போதும் நான் வருவதை அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தவள் நான் ஊருக்கு வந்த அன்றே என்னைச் சந்தித்து விட்டாள்.

     “இசை நிகழ்ச்சியா? உனக்கு என்ன பங்கு? கூட யார் பாடுகிறார்கள்? இன்று ஒத்திகையா?” என்று அவர் என்னை ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை. யார் யார் எல்லாமோ என் குயிலிசையைப் புகழ்கிறார்கள். ஆனால் என் கணவர் என் உடலுக்கும் உள்ளத்துக்கும் தலைவராய். அவர், என் கானத்தை ரசித்தோ ரசிக்காமலோ கூட ஒரு முறையேனும் விரும்பிக் கேட்கவில்லையே! என்னை எப்படி வேண்டுமானாலும் அவர் நிராகரிக்கட்டும். ஆனால் என் கலையில் கொஞ்சங் கூடத் தாரமாக அவர் ஆர்வங் கொள்ளாத குறை, எல்லாக் குறைகளையும் விட மாபெருங் குறையாக இருக்கிறதே! ஆனால் நான் வருந்தி என்ன பயன்?

     ‘நானாகப் போய் அவரிடம் என்னைப் பற்றியும், இசை நிகழ்ச்சியைப் பற்றியும், ஏன், வரதனைப் பற்றியும் கூடத்தான் எதற்காகக் கூறவேண்டும்? அவர் அவ்வளவு அலட்சியமாக இருக்கும் போது நானும் பொருட்படுத்தாமலே தான் இருக்க வேண்டும். அவர் மட்டும் தம் விஷயங்களை, முக்கியமாக எனக்குத் தெரிவிக்க வேண்டிய காரியாலய மாற்றம் போன்ற சங்கதிகளை, என்னிடம் கூறாமல் மறைத்து வைக்கவில்லையா! இப்போது இது என் சொந்தக் காரியம் என்று அவர் தலையிடாமல் இருக்கும் போது நானாக ஏன் தெரிவிக்க வேண்டும்’ என்று சிறுவர் சிறுமியர் வீம்பு கொண்டு குரோதம் பாராட்டுவது போலக் குரோதத்தை வளர்த்துக் கொண்டேன்.

     என்றாலும் வரதன், நகரத்துக்கு வந்திருப்பவன் இங்கு வராமல் இருந்து விடுவானா? இல்லை, தமையன் வீட்டிலே அவர் அவனைச் சந்திக்காமல் இருந்திருப்பாரா? எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் வரதனுடன் பாடுகிறேன் என்று பட்டுவும் மாமியாரும் வேறு அவரிடம் என்ன என்ன எண்ணங்களைக் கற்பிக்கக் கூடுமோ!

     என் உள்ளே வித்திட்டிருந்த அச்சம் மெல்லத் தலை தூக்கி என்னைக் கிடுகிடுக்க வைத்தது. ‘வரதனுடன் நீ ராதையாகப் பாட ஒப்புக் கொண்டது பிசகு!’ என்று ஒரு குரல் என்னை இடித்தது. அதற்கு உரமூட்டுவது போல முன்னாள் நடந்த ஒத்திகை என்னுள்ளே படம் எடுத்தது.

     தன்னைச் சினம் கொண்டு வெருட்டிய ராதையிடம் தாபம் கொண்டு கெஞ்சும் கண்ணனாக அவன் என்னை நோக்கிப் பாடிய போது, அவன் குரலிலே இருந்த குழைவு, விழிகளிலே தோன்றிய கனிவு எல்லாம் பாடலுக்கு உணர்ச்சியூட்டுவதுடன் மட்டுமா நின்றன?

     அந்தக் கீதத்துக்குரிய பாத்திரமாக அவன் அவ்வளவு பாவத்துடன் இசைத்தது, நானும் அவனுக்குச் சற்றும் குன்றா வகையில் பாட வேண்டும் என்ற ஆர்வத்தை அன்றோ தூண்டி விட்டது? அந்த நிமிஷத்தில் என் கண் முன் அவன் மாதவனாகவும் நான் ராதையாகவும் மனத்துக்குத் தோன்றவில்லை எனினும், நான் கேட்ட குரல் - உருக்கம் நிறைந்த, உணர்ச்சி செறிந்த குரல் - என்னை ராதையாகக் கிளர்த்தித்தான் விட்டது. ஒத்திகையிலே நான் என்னை மறந்து இசைத்தேன்.

     ‘இந்தக் கிளர்ச்சிக்கு நீ இடம் கொடுக்கலாமா?’ என்று என் அந்தராத்மா இப்போது நியாய ஸ்தலத்து வழக்கறிஞர் போடும் கேள்வியைப் போலக் குறுக்குக் கேள்வி விடுத்தது.

     ‘ஏன் ஒப்புக் கொண்டது பிசகு? பிசகா? பிசகாகுமா? இல்லை. கலை உலகு இந்த விபரீதங்களை அடிப்படையாகக் கொண்டதன்று. அதுவும் இந்த உயரிய காவியம், மிகவும் சிறந்த பொருளைக் கொண்டதாயிற்றே! இனிய இசையிலும் உருக்கம் கொண்ட கீதத்திலும் யார் மனமும் இளகிவிடுவது சகஜம். ரசிகத் தன்மையும் கலைப் பண்பும் பெற்ற என் உள்ளம் இளகியதில் தவறு இல்லையே! அவன் குரலுக்கு எதிர்க் குரலாக, பக்திப் பரவசத்திலே தன்னை மறந்த ராதையைப் போல என்னை நினைத்துக் கொண்டு நான் கானம் செய்ததில் கல்மிஷத்திற்கு எங்கே இடம் இருக்கிறது?’

     ‘இந்தக் கலைப் பிணைப்பையன்றி வரதனிடம் வேறு எனக்கு என்ன பேச்சு இருக்கிறது? பார்க்கப் போனால் அவன் சாதாரணமாக க்ஷேமம் விசாரிப்பதைத் தவிர வேறு எந்த வகையிலும் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. ‘ராமுவை வந்து பார்க்க வேண்டும். வருகிறேன் ஒருநாள். வேறு வேலைகள் இருக்கின்றன. இரண்டு மாதங்கள் நான் இங்கே தான் இருப்பேன்’ என்பதுடன் முடித்துக் கொண்டான் அவன். யோசித்துப் பார்த்ததில் முந்திய வளவளக்கும் வரதனாகவே தோன்றவில்லை. உண்மையில், “நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று மறுத்து இருந்தால் தான் என் பிற்போக்கான மனப்பான்மை நகைப்புக்கு இடமாக இருந்திருக்கும். கலைச் செல்வத்தை வைத்துக் கொண்டு முற்போக்குக்கு முட்டுக்கட்டை போடும் மனம் படைத்திருப்பது கண்டு வரதன் என்னைக் கேவலமாக எண்ணியிருப்பான்’ என்றெல்லாம் என் கூனிய மனத்தை நிமிர்த்திக் கொண்டேன். என்னதான் நான் நிமிர்ந்து நின்றாலும், என் குறைக்குச் சப்பைக் கட்டுக் கட்டியதாகவே எனக்குத் தோன்றியது.

     அவர் மட்டும் வரதனைப் போல் இருந்தால்? ஆகா! அந்த வாழ்வு எனக்கு எப்படி இருக்கும்! வரதனுடைய குரல் கிளர்ச்சியை உண்டாக்கியது. என் மனசாட்சியை இடிக்கிறதே இப்போது! அந்தச் சக்தி அவர் குரலுக்கு இருந்து விட்டால்? அந்த ராதையைப் போலவே என்னை என் நாயகருடன் ஒன்றுபடுத்தி விடாதா? என்னிடம் அன்பு கொள்ளாமல் அவர் உள்ளம் இருந்தால் கூட இருவருக்கும் ஒன்றாக இருக்கும் கலை உணர்ச்சி இருவரையும் எந்த வகையிலேனும் ஒன்று சேர்க்க ஏதுவாக இருக்காதா? விழுந்து விழுந்து ஜாதகப் பொருத்தம் பார்க்கும் பெரியவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

     தம்பதிகள் இருவருக்கும் ஒருவிதத் தன்மையுடைய மனப்பான்மை இருக்க வேண்டும். கூடுமானவரை இருவருடைய விருப்பு வெறுப்புகளும் ஒற்றுமை உள்ளனவாகவே இருப்பது நல்லது. வாழ்க்கையை வெற்றிகரமாக்கும் முக்கியமான அடிப்படை அம்சங்கள் இவை.

     எங்கள் இல்லற வாழ்வின் மத்தியிலே இருக்கும் மாபெரும் பிளவு இந்த வேறுபட்ட இயல்புகளாலேயே பெரியதாக அகன்று வருகிறது.

     வானொலிப் பெட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்த என்னை, படுக்கையில் சாய்ந்து கொண்டு பத்திரிகையை மடித்துவிட்டுக் கூப்பிட்டார். “ஏன்?” என்று நான் திரும்பிப் பார்த்தேன்.

     “வரதன் இன்று காரியாலயத்தில் என்னைப் பார்த்தான். நீ என்னிடம் சொல்லவேயில்லையே! அவன் தயாரித்திருக்கும் இசை நிகழ்ச்சியிலே நீ பங்கு கொள்கிறாயாமே? ஏன் சுசி? என்ன பெயர் அதற்கு? ஏதோ சமஸ்கிருத காவியம் என்று கூறினான். அதற்குள் மறந்து விட்டேனே!” என்று அவர் தலையைத் தடவிக் கொண்டு யோசனை செய்தார்.

     இந்த வகையிலே அவருடைய ஒன்றுமறியாத தன்மை என்னைப் பின்னும் கோல் கொண்டு குத்தியது. “கீதகோவிந்தம் என்று பெயர். நீங்களாக விசாரிக்கவில்லை. நானும் அசிரத்தையாகச் சொல்லவில்லை. இன்றுதானா அவரைப் பார்த்தீர்கள்? அண்ணா வீட்டில் பார்க்கவில்லை, இதற்கு முன்பு?” என்று நான் வினவினேன்.

     “இல்லையே. அவன் அங்கே தங்கியிருக்கவில்லையே! எங்கோ ஹோட்டலில் இருப்பதாக அல்லவோ சொன்னான்? பாவம்! லீலா இப்படி நடந்து கொள்ளுவாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பெண்களுக்கு இத்தனை தான் தோன்றித்தனும் துடுக்குத்தனமும் இருக்கக் கூடாதுதான்” என்று எங்கோ ஆரம்பித்தவர் எங்கோ கொண்டு போய் முடித்தார்.

     எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. லீலாவைப் பற்றி நான் அது நாள் வரை சிந்திக்கவேயில்லையே? என் தந்தையின் முடிவின் போது வந்திருந்த போதே என் கணவர், “லீலா காசி சர்வகலாசாலையில் வேலையாகப் போய் விட்டாள், தெரியுமா” என்று கேட்டார். அப்போதைய மன நிலையில் அதையும் அலட்சியமாக நினைத்து நான், ‘உம்’ கொட்டினேன். நான் அவளைப் பற்றி நினைக்கவில்லை. ஆனால் அவர் அவளையே எண்ணிக் கொண்டு இருக்கிறாரே? மனத்திலே எது தாண்டவமாடுகிறதோ அதுதானே சொல்லிலும் வெளிப்படும்.

     வரதனுடன் அவள் விவாகம் என்ன ஆயிற்று? மூர்த்தி இங்கு வந்திருக்க வேண்டும்! அத்தை கூட அங்குமிங்கும் அலைந்ததனால் ஹேமாவின் கல்யாணம் இன்னும் நிச்சயப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டாளே!

     இந்தக் கேள்விகளெல்லாம் என்னுள் எழுந்தன.

     “ஏன், சாதாரணமாகத்தானே லீலா வேலைக்குப் போய் விட்டாள் என்கிறீர்கள்? பின் எம்.ஏ. படித்து விட்டு ஒருத்தி அடுப்பங்கரையில் சரண் புகுவாளா? இது தான் தோன்றித்தனமாக்கும்!” என்றேன்.

     “இல்லை, சுசி. நான் அதைச் சொல்லவில்லை. அவள் வரதனை மணம் செய்து கொள்ள மறுத்து விட்டாள். மறுநாளே கிளம்பியும் போய் விட்டாள். பெரியவர்களை முறித்துக் கொண்டு, ‘நான் கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன்’ என்று அவள் போயிருக்கக் கூடாது. படித்து விட்டாலே சில பெண்களுக்கு இத்தகைய துணிச்சல் வந்து விடுகிறது” என்று இன்னும் ஏதோ கூற வந்தவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார்.

     நான் ‘வெடுக்’கென்று பதில் கூறினேன்.

     “ஏன்? அவளுக்கு அவரை மணந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனாலேயே கல்யாணம் வேண்டாம் என்று கூறியிருக்கக் கூடாதா? அதைத் தான் தோன்றித்தனம் என்பதா? பெண்களுக்குச் சுதந்திரம், சமத்துவம் எல்லாம் படிக்கவும் வெளியே வாசலில் செல்லவும் கொடுத்தால் மட்டும் போதாது. இத்துடன் மண விஷயத்திலும் சுதந்திரம் கொடுக்க வேண்டும். பண்டைய நாளைப் போல ஐந்து வயசிலேயா விவாகம் செய்து கொள்கிறார்கள்? அவரவர்கள் வயசு வந்த பின், தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் சக்தி வந்த பின், ‘இவளைத்தான் மணந்து கொள்ள வேண்டும்’ என்ற நிர்பந்த முறை ஏற்படுத்துவது தவறு” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய என்னை அவருடைய விழிகள் உற்றுக் கவனித்தன.

     பிறகு, “நீ கூறுவது சரிதான் சுசீலா” என்று எங்கோ பார்த்துக் கொண்டு நெடுமூச்செறிந்தார்.

     உலைக்களத்து உஷ்ணத்தைப் போல அவருடைய நெடுமூச்சு என்னை வேதனைக்கு உள்ளாக்கியது. எதற்காக இப்படி ஏதோ பறிபோனது போல நெடுமூச்சு எறிய வேண்டும்? லீலா கை நழுவிவிட்டாளே என்றா? பேச்சை மறைத்து நான் “மூர்த்தி இங்கே என்று வந்தார்? எத்தனை தினங்கள் எல்லோரும் இருந்தார்கள்?” என்று கேட்டேன்.

     “நீங்கள் சென்ற மறுதினமே வந்தான். அடுத்த இரண்டு நாட்களுக்குள் கிளம்பியும் விட்டார்கள். எனக்கும் அடுத்த தினமே தலைமைக் காரியாலயத்துக்குச் செல்ல வேண்டி வந்துவிட்டது. ஒரு நாளிலேயே நான் கவனித்தேன். ஹேமாவை மணந்து கொள்ள அவனுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்று எனக்குத் தோன்றியது. இரண்டு வருஷங்களுக்கு முன் எப்படி இருந்தானோ அப்படியேதான் சிரித்துப் பேசிக் கொண்டு இருக்கிறான். மேல்நாட்டு வாசம் அவனை ஒன்றும் மாற்றிவிடவில்லை. முதல் முதலாக ‘சுசீ பெரிய இசைக் குயிலாக ஆகிவிட்டாளாமே?’ என்று உன்னைப் பற்றிக் கடிதங்கூட எழுதியிருந்தான் போல் இருக்கிறதே?” என்றார் அவர்.

     “ஆமாம்” என்ற நான் ஆவலுடன், “ஹேமாவை மணக்க விருப்பம் இல்லை என்று உங்களிடம் அவன் ஏதாவது பிரஸ்தாபித்தனா?” என்று விசாரித்தேன்.

     “இல்லை, பார்த்தால் எனக்குத் தோன்றுகிறது” என்று முணுமுணுத்த மாதிரியில் பதிலளித்த அவர், பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். “விளக்கை அணைத்து விடுகிறாயா?” என்று அவர் விடுத்த வேண்டுகோள் அதற்கு மேல் அவர் ஏதும் பேச விரும்பாததை அறிவித்தது.

     ஜ்வாலை அணைந்தவுடன் புகை சூழ்வதைப் போல என் மனத்தில் பழைய சந்தேகப் புகைகள் சூழ்ந்து கொண்டன. லீலா மூர்த்தியைக் காதலிக்கிறாள் என்ற உண்மையை அவரிடம் அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே நான் அவளுக்கு வரதனை மணந்து கொள்ள இஷ்டமில்லாமல் இருக்கலாம் என்று கோடி காட்டினேன். லீலா என்னிடம் நெருங்கிப் பழகுபவள். அந்தரங்கமான நேசம் கொண்டவள் என்பது அவர் அறியாததல்லவே! நான் கோடி காட்டியதும் என்னிடம் மேற்கொண்டு தூண்டி விடப்பட்டவராக, “அப்படியா சுசீ! அவள் அபிப்பிராயம் உனக்குத் தெரியுமா?” என்று என்னிடம் ஏனோ கேட்கவில்லை. அப்படி எதிர்பார்த்துத் தானே நான் மெல்ல ஆரம்பித்தேன்? ஆனால் அவரோ ஆவலெல்லாம் வறண்டவராக, சப்பென்று, ‘நீ சொல்வது சரி’ என்று நெடுமூச்செறிகிறார்! ஒரு நாளில் மூர்த்திக்கு ஹேமாவிடம் பிடிப்பு இல்லை என்பதைக் கண்டுவிட்டவருக்கு லீலாவின் போக்கை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லையாம். அவர் மனம் தடுமாடுகிறது என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்?

     கதவிடுக்கு வழியாகச் சிறு வெளிச்சம் தென்பட்டாலே போதும், உள்ளிருக்கும் சாமான்கள் ஒவ்வொன்றாகத் தென்பட்டுவிடும். அவள் என் கணவரை எப்போதுமே அந்த நிலையில் நினைத்திருக்க மாட்டாள். ஆனால் அவர் விஷயம் அவளுக்கு முன்னமேயே தெரிந்திருப்பதால் தான் என்னிடம் அளவுக்கு மீறிய அனுதாபம் கொண்டு அன்பு காட்டியிருக்கிறாள். கடைசியாக அவள் என்னைச் சந்தித்துப் பேசிய போது கூட அவள் காட்டிய அக்கறையின் மர்மம் எனக்கு இப்போது தானே வெட்ட வெளிச்சமாக விளங்குகிறது.

     லீலாவிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது. என் தந்தையின் மறைவுக்கு என்னிடம் அநுதாபம் விசாரித்து விட்டு, பழைய தோரணையிலேயே மூர்த்தி அவளை ஏமாற்றி விட்டதை வைத்துக் கொண்டு ஓர் அத்தியாயம் ஆண் வர்க்கத்தைக் கடிந்து கொட்டியிருந்தாள். அவன் அவளைக் கடைசித் தறுவாயிலும் தனியே சந்திப்பான் என்று நம்பி எதிர்பார்த்து இருந்தாளாம். ‘அவராக எனக்கு ஒரு கல்யாணப் பத்திரிகை அனுப்பாவிட்டாலும், நீயாவது ஒன்று கேட்டு வாங்கி அனுப்பு’ என்று என்னைக் கேட்டிருந்தாள். ஏனோ இத்தனை ஆதுரம்?

     “நான் தைரியமாக வரதனை மறுத்து விட்டேன், சுசீ. பெண்ணான எனக்கு இருக்கும் உறுதி கூட இல்லாத கோழையான அவர் தம் காதலை அந்தரத்திலே பறக்க விட்டு விட்டு உன் அத்தை மகளை மணக்கப் போகிறார்? என்னுள் ஊறியிருக்கும் அன்பை விட அவர் அன்பு லேசானது என்று எனக்கு இப்போதானே தெரிகிறது. எனக்கு அவர் தகுதியானவர் அல்ல. அவரை நான் மணந்து கொண்டிருந்தால் கூடப் பின்னால் எங்களுக்குள் எத்தனையோ வேற்றுமைகள் மனஸ்தாபத்துக்கு அடிகோலுபவையாக இருக்கும்” என்று அவள் கூறுவதிலும் உண்மை இருக்கத்தானே இருக்கிறது?

     மூர்த்தி ஏன் இப்படி இருக்கிறான்? அவன் மீது எனக்குச் சீற்றம் பெருகியது.

     கையிலே கடிதத்துடன் நேரம் போனதே தெரியாமல் உட்கார்ந்திருந்த எனக்குக் கடிகாரத்தில் மணி இரண்டு அடித்த பின் தான் வீட்டு வேலை நினைவுக்கு வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. முன்னறையில் ஏதோ காகிதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த என் கனவர், மூன்று மணிக்குக் காபியருந்திவிட்டுக் காரியாலயம் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். எழுந்து சென்றேன். காபி தயாரித்து அவர் முன் கொண்டு வைத்துவிட்டு, பின் கட்டில் வேலைக்காரி வந்திருந்ததால் அங்கே போய்விட்டேன். சாதாரணமாக அவர் வெளியே செல்லும் போது சொல்லிக் கொண்டு போவது வழக்கமில்லை. நான் வேலையெல்லாம் முடித்து விட்டு, சரளாவைப் பார்க்கக் கலா மந்திரம் செல்லுவதாக இருந்தேன். ஒரு மணி கழித்து வந்து பார்த்த போது அவர் வெளியே போய்விட்டார் என்று சாத்தியிருந்த அறைக் கதவு அறிவித்தது. வெளியே இழுத்துத் தாழிட்டு விட்டுக் கிளம்பலாம் என்ற யோசனையுடன் வந்த நான் ஒரு விநாடிக்குள் யோசனையை ஏனோ மாற்றிக் கொண்டு விட்டேன். மனமே குரங்குதானே.

     உள்ளறையிலே ஒத்திகையில் இசைத்த கீதங்களைப் பாடிப் பார்க்கும் நோக்கத்துடன் உட்கார்ந்தேன். விரல்கள் தம்புராத் தந்தியை ஜீவனற்று மீட்டினவே ஒழிய மனசு குறளி அந்தத் திசையிலும் செல்லாது போல் இருந்தது.

     ‘அவருக்கு இசை நிகழ்ச்சியில் நானும் வரதனும் எந்த எந்தப் பாகங்கள் கொள்கிறோம் என்று தெரிந்தால்?’

     ‘தெரிந்தால் என்ன? அவர் தாம் விசால நோக்குக் கொண்டவராயிற்றே. இருந்தாலும் நான் சொல்லாமல் இருப்பது ஏமாற்றுவது போல ஆகுமா?’ மனம் கொட்டிக் கொண்டிருந்தது.

     டக்டக்கென்று ஜோட்டின் ஒலி என் விரல்களின் அசைவை நிறுத்தியது. கண்கள் பின்புறம் திரும்பிப் பார்த்தன. வெளியே செல்லும் போது அவர் வாசல் கம்பிக் கதவைப் பூட்டிப் போவது உண்டு. ஏனெனில் நான் உள்ளே வேலையாக இருந்திருப்பேன், கவனிக்க மாட்டேன். என்னிடம் ஒரு சாவியும் அவரிடம் ஒரு சாவியும் இருப்பது வழக்கம்.

     ‘இன்று மறந்து விட்டாரோ? ஒருக்கால் அவரே வருகிறாரோ என்னவோ! அவர் ஜோடு சத்தமே கேட்காதே.’

     நான் எழுந்திருக்காமல் சிந்திக்கும் போதே, வரதன் என் முன் காட்சி அளித்தான்.

     நிஜார்ப் பைகளில் கைகளை விட்டுக் கொண்டு புன்னகை செய்த அவன், “கதவு திறந்திருக்கிறது. நீ இங்கே உன்னை மறந்து உட்கார்ந்திருக்கிறாய்! யாராவது வந்து கொள்ளை கொண்டு போனால் கூடத் தெரியாது போல் இருக்கிறதே! ராமு இல்லையா?” என்று கேட்டான்.

     “அவர் ஒரு மணி முன்புதான் ஆபீஸுக்குப் போக வேண்டும் என்று போனார். கதவைப் பூட்டிப் போவாரே? மறந்து விட்டார் போல் இருக்கிறது. உட்காருங்கள். நீங்கள் இன்று வருவதாகக் கூறியிருந்தால் இருந்திருப்பாரே!” எனக் கூறிக் கொண்டே நான் எழுந்தேன்.

     நாற்காலியில் அமர்ந்து அவன், “நான் சொல்லியிருந்தால் தான் இருப்பானாக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை யாயிற்றே, வீட்டில் இப்போது வந்தால் தான் இருப்பான். இன்னும் சற்றுப் போனால் இருவருமாக எங்காவது கிளம்பி விடுவீர்களோ என நினைத்துக் கொண்டு வந்தேன். ஆனால்... எப்போது வருவான்?” என்று வினவினான்.

     என் உள்ளம் படபடத்தது.

     ‘தனிமையில் வந்திருக்கிறானே; இம்மாதிரி கேள்வியிலிருந்து இன்னும் என்ன என்ன வளர்த்துவானோ!’ என்று அச்சமாக இருந்தது. ஏனோ தெரியவில்லை, வரதனைக் காணும்போது எனக்கு அப்படி இனந்தெரியாத பயம் தோன்றியது.

     “இல்லை, அவருக்குச் சில சமயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை இருக்கும். அதுவும் இன்று சபாவில் கூட எனக்குப் பிடிக்காத நடனக் கச்சேரி. மெதுவாகவே வழக்கம் போல் ஒன்பது மணிக்கு வந்தாலும் வருவார்” என்றேன்.

     இப்படிக் கூறினால் அவன் நாசூக்காகப் போய்விடுவான் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.

     “உம். இன்னும் அப்படியேதான் இருக்கிறான். எங்கே எழுந்து விட்டாய், சுசீலா! நான் வந்துவிட்டேன் என்றா? ஒத்திகையில் பாடிய கீதங்களைப் பாடிக் கொண்டிருந்தாயா?”

     “இல்லை, தம்புராச் சுருதி கலைந்திருந்தது” என்று நான் முணுமுணுத்தேன்.

     “பரவாயில்லை, நான் வந்தது சௌகரியமாகப் போய்விட்டது. அந்த கீதங்களை இன்னொரு முறை பாடு” என்றான் அவன்.

     “அதுதான் சரியாக வந்துவிட்டதே; எதற்கு உங்களுக்கு வந்த இடத்தில் சிரமம்?” என்று நான் நழுவப் பார்த்தேன்.

     “சிரமமா? எனக்கு என்ன சிரமம்? உன் குரலைக் கேட்டாலே சிரமம் பறந்து விடுமே!” என்று அவன் நகைத்தான்.

     ஐயோ! இப்படிப் பிற புருஷன் புகழவா நான் இனிய சாரீரமும் கலையும் படைத்திருக்கிறேன்.

     “நீங்கள் அளவுக்கு மீறிப் புகழுகிறீர்கள். எனக்கு இதுதான் பிடிப்பதில்லை” என்றேன் கோபம் தொனிக்க.

     “உண்மைக் கலைஞர்களுக்குப் புகழ் பிடிக்காதுதான். ஆனால் என்ன செய்வது சுசீலா? அவர்களை நாடித்தானே அது வருகிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் உன் குரலை இசைத் தட்டிலே பதிய வைக்க வேண்டும் என்று நேற்று என்னிடம் வந்து மன்றாடினார். ‘நான் சொல்லுகிறேன். அவள் ஒப்புக் கொள்வாளோ, மாட்டாளோ?’ என்று கூறி அனுப்பி வைத்தேன். ஒன்றும் இல்லாதவர்கள் எல்லோரும் கந்தர்வ ரூபிணி, கோகில சரஸ்வதி என்று முன்னுக்கு வந்து தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். உயர்தரமான பொக்கிஷத்தை வைத்துக் கொண்டு இன்னும் இருட்டறையிலேயே உட்கார்ந்திருக்கிறேன் என்கிறாயே? எனக்கு இதுதான் பிடிக்கவில்லை” என்றான் அவன்.

     வசிய மருந்து, மயக்கம் என்றெல்லாம் சொல்லுபவர்கள் மீது எனக்கு என்றுமே நம்பிக்கை இல்லை. ஆனால் இந்தப் புகழ் வார்த்தைகள் வசிய மருந்தாக இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் தோன்றுகிறது. எவ்வளவு கெட்டியாக மனத்தை வைத்துக் கொண்டிருந்த போதிலும் இதன் சக்தியிலே பிடி தளர்ந்து விடுகிறது. கடுமையான பேச்சு ஏதும் எழாதபடி நான் நின்றேன்.

     “சுசீலா, அன்று நீ நிலையத்திலே மாதவனை அழைத்து வரச் சொல்லத் தோழியிடம் கெஞ்சும் கீதத்தை இசைத்தாயே, அதில் நான் நிஜமாக என் மனத்தை முற்றும் பறிகொடுத்து விட்டேன். கவிதையின் பெருமை அதை இசைப்பதில் தான் முழுக்க இருக்கிறது என்பதை நிதரிசனமாக நீ காட்டிவிட்டாய். எப்போதுமே உருக்கமும் சோகமும் உன் குரலில் அலாதிச் சோபையுடன் மிளிர்கின்றன சுசீலா!” இப்படி அவன் கூறிய போது என் மனம் குருடாகி விட்டது. புகழ், நெருப்பின் ஜ்வாலையைப் போன்றது. அதன் அருகிலே அண்டாமல் இருக்கும் வரைக்கும் ஒளி மனத்துக்கு உவப்பாகத்தான் இருக்கும். ஆனால் அறியாமை நிறைந்த குழந்தை விட்டிற் பூச்சியைப் போல் அதைத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுகிறதில்லையா?

     என்ன பேசுகிறோம் என்று அறியாமலே, “என்னைச் சொல்கிறீர்களே, நீங்களும் அன்று உணர்ச்சி வசப்பட்டுக் கவிதையிலே லயித்துத்தான் பாடினீர்கள். என்னை மட்டும் வறட்டு வறட்டென்று புகழாதீர்கள். இனி மேல் நானும் அத்தனையையும் உங்களுக்கே திருப்பி விடுவேன்” என்று மெல்ல நகைத்தேன்.

     “அப்படியா சுசீலா! உன்னுடைய வாயிலிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையிலே நான் இப்போதெல்லாம் என்னை மறந்துதான் விடுகிறேன். என் கண்முன் பாதையாக நீ தோன்றும் போது என்னை எனக்கு அறியாமலே பாவம் வந்து விடுகிறதே” என்று கூறி அவன் என்னை ஊடுருவிப் பார்த்தான்.

     ஜ்வாலையைத் தொட்டு விட்டேன். ‘சுசீ’ என்று என்னுள் நெருப்புப் பட்டு உறைத்து விட்டது. திடுக்கிட்டு நடுநடுங்கித் தடுமாறினேன்.

     “ஏன் இப்படி நடுங்குகிறாய் சுசீலா! என் மனத்தை நீ வெகுவாகக் கவர்ந்து விட்டாய். என்னுடைய லட்சியப் பெண்ணுக்கு எந்த எந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என்று நான் கனவு கண்டிருந்தேனோ, அவை அத்தனையும் உருக்கொண்டவளாக நீ இருக்கிறாய். போற்றிக் கொண்டாடுபவரிடத்திலேதான் கலை வளரும். அதன் அருமையை, ஏன், உன் அருமையை உணராதவனிடத்திலே நீ வாடிக் கிடப்பதை நினைக்குங்கால் என் உள்ளம் நோகிறது, சுசீலா! கணவன், மனைவி, இருவருக்கும் விருப்பு வெறுப்புக்களும், குணங்களும் ஒரே தன்மையாக இல்லாவிட்டால் மன ஒற்றுமை எங்கிருந்து வரும்! ராமுவுக்கு ஏற்ற மனைவி நீ அல்ல. உனக்கு ஏற்றவன் அவன் அல்ல. கலாவல்லியான மனைவியின் அருமையை உணராத ஜடமாக அல்லவோ அவன் நேற்று, ‘அப்படியா, என்னது! இசை நிகழ்ச்சியா!’ என்கிறானே! இவ்வளவு சிரத்தை கூட இல்லாமலா இருப்பான் என்று நான் நம்பவில்லை.”

     ‘என்னுள்ளே தோன்றுவதெல்லாம் இவனுக்கும் தோன்றியிருக்கிறதே! நான் அவருக்கு ஏற்றவள் அல்லவா!’

     யாரோ வெளியே நடமாடுவது போலத் தோன்றியது. பிரமையோ, என்னவோ! ஒருவேளை அவர் வந்துவிட்டாரோ! வரட்டுமே! தூணாக அசைவற்று நின்ற எனக்கு என்ன நினைக்க வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்று எதுவுமே புரியவில்லை.

     “ஏன் சுற்றி வளைக்க வேண்டும். சுசீலா? என் உள்ளக் கோயிலிலே நீ இஷ்ட தெய்வமாக உறைந்து போயிருக்கிறாய். லீலா என்னை மணந்து கொள்ள மறுத்தாள். நானும் அவளை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அதுதான் முன்னமே கூறினேனே, கணவன் மனைவி இருவரும் ஒரே இயல்பினராக இருந்தால் தான் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் விழ ஏது இருக்காது என்று.”

     என்னால் பொறுக்க முடியவில்லை. எங்கிருந்தோ துணிச்சலும் தைரியமும் என் குரலை எழுப்பின.

     “வரதன்! நீங்கள் ஏதேதோ பேசுகிறீர்கள். கலை நட்பின் வரம்பிலிருந்து நழுவி விட்டீர்கள்! உயர்ந்த நோக்குடன் பார்க்கிறீர்கள் என்றல்லவா நான் எண்ணியிருந்தேன்! நான் பிறன் மனைவி என்பதை மறந்து இந்த விதத்தில் என்னுடன் பழக வருவீர்கள், அதற்குச் சந்தர்ப்பங்களைக் கருவியாக உபயோகித்துக் கொள்வீர்கள் என்று நான் அறியாமற் போனேனே! உங்கள் கலை கிலை எல்லாம் வேஷந்தானா?” என்று கத்தினேன்.

     அவன் மெதுவான குரலில் நகைத்தான்.

     “கோபித்துக் கொள்ளாதே, சுசீலா. நான் கேவலமாக எண்ணிக் கொண்டு உன்னிடம் பேசவில்லை. விலை மதிப்பு அற்ற ரத்தினம் ஒன்றைப் பெற நான் கனவு கண்டேன். அதன் அருமையை அறியாமல் சாதாரணக் கல்லாக மதிக்கும் ஒருவனிடத்தில் அது ஒளியிழந்து இருக்கும் போது நான் அதைப் பெற ஆவல் கொள்வது இயற்கைதானே! நீயே உண்மையைச் சொல், சுசீலா! ராமு உன்னிடம் அளவிட முடியாத அன்பு கொண்டா நடத்துகிறான்! பெண்மையைப் போற்றி மதிக்கும் உயர் குணம் அவனுக்கு இருந்தால் உன்னை கேசவனுக்கும் பட்டுவுக்கும் அடிமை போல் உழைக்க விட்டிருப்பானா; அன்று நான் உன்னிடம் அவன் பேசிய தோரணையைக் கேட்கவில்லையா! நீ ஏதும் என்னிடம் ஒளித்துப் பயனில்லை சுசீலா!” என்றான்.

     “நீங்கள் கூறுவது உண்மை. அவருக்கு என் மீது அன்பு இல்லை. நிம்மதியில்லாத வாழ்விலே நான் உழலுகிறேன்” என்ற வார்த்தைகள் என்னை அறியாமல் வெளி வந்திருக்கும். ஒரு நிமிஷ நெகிழ்ச்சியில் மாபெரும் பிழையை, மன்னிக்க முடியாத பிழையை நான் இழைத்திருப்பேன். ஆனால் மனக் குதிரையின் லகானைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தேன்.

     இந்தப் போராட்டத்தை என்னால் தாள முடியவில்லை. குழந்தை போல முகத்தைக் கண்களால் மூடிக் கொண்டு தேம்பினேன். என்னுடைய இந்த நிலையும் அவனுக்குச் சாதகமாகிவிட்டது. தான் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தான்.

     “என்ன சுசீலா இது! பாவம்! உன் நிலைமை எப்படி இருக்கிறதென்று எனக்கு இப்போதல்லவா தெரிகிறது? அழாதே. இதோ பார். உன்னை நான் மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். என்றும் உனக்கு நன்மை புரிய நான் காத்திருப்பேன். மனம் முதிருமுன்பே சுவைக்கு உதவாத சாஸ்திரமும், யோசனை செய்யத் திறனில்லாத சுற்றமும், அதற்கேற்ற மெருகடையாத கிராமத்துச் சூழ்நிலையும் உன்னை விவாக பந்தத்திலே மாட்டித் தகுதியில்லாத கணவனுடன் சிறை வைத்தால் அதற்கு நீ பந்தப்பட்டவளா? நீயே யோசித்துப் பார் சுசீலா. ராமநாதனை நீ மணம் புரிந்து கொண்ட போது சுயமாக இது சரி, இது நல்லது, இது தவறு என்று நிர்ணயித்துக் கொள்ள உனக்குச் சக்தி இருந்ததா? இயற்கையாக இருவரும் அன்பு வசப்பட்டிருந்தீர்களானால், இத்தகைய நிலையிலா இருப்பாய்?”

     ஆம், அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. ‘இவன் தான் உன் கணவன். இவனிடந்தான் நீ உன் வாழ்நாளைக் கழிக்க வேண்டும்’ என்று பெரியவர்கள் சுட்டிக் காட்டினார்கள். வழிவழியாக வந்த குலப் பண்பாடு, எங்களுக்குள் பிணைப்பை உண்டு பண்ணி வைக்கக் கூடிய புனித ஒப்பந்தம் எல்லாமாக எனக்கு, ‘அவரே தெய்வம், அவரைப் போற்ற வேண்டும்’ என்று மனத்தை ஒரு முகப்படுத்தின. ஆனால் காதல் - அன்பு - இயற்கையாக எனக்கு, அவர் மீது எழுந்ததா?

     அவருடைய மனத்தை ஆராய்ந்து அலுத்துப் போன என்னையே நான் ஆராய இப்போது வழி வைத்து விட்டான் வரதன்.

     “சுசீலா, யோசிக்கிறாயா?” என்று அவன் மீண்டும் நான் இருக்கிறேன் என்று குரல் கொடுத்தான்.

     “யோசனை என்ன? நீங்கள் இம்மாதிரிப் பேசுவது தவறு. நடந்து கொள்வது தவறு. அவர் இப்போது வந்தால் என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்? இந்த வகையிலே நீங்கள் சிநேகம் பாராட்டுவதனால் இப்போதே வெளியே போங்கள், மரியாதையாக!” என்றேன் கடுமையாக.

     “அநாவசியமாக நீ பயப்படுகிறாய். அவனுக்கு ஒரு நீதி, உனக்கு ஒரு நீதியா? உன்னை அங்கே உதகையில் தனியே விட்டு விட்டு, லீலா இங்கே தனிமையில் இருக்கிறாள் என்று தானே வந்தான்? அது சரியா? நான் உன்னை என் மனைவியாக்கிக் கொள்ள எந்த நிலையிலும் சித்தமாக இருக்கிறேன். உன் மனத்தைப் பொறுத்தது.”

     பூமி பிளந்து என்னை அப்போது விழுங்கி இருக்கக் கூடாதா? அல்லது கூரை இடிந்து என் மீது விழுந்திருக்கக் கூடாதா?

     “என்னைத் தனிமையில் விட்டுப் போக மாட்டீர்களா!” என்று ஆத்திரத்துடன் நான் கிறீச்சிட்டேன்.

     “நான் போகிறேன், சுசீலா. போகிறேன். நான் கூறியவற்றில் தவறு இருக்கிறதா என்று ஆற அமர வேண்டுமானால் யோசியேன்” என்றான் அவன்.

     “போக மாட்டீர்களா!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு நான் வெகுண்டேன். அடுத்த கணம் டக் டக் என்ற ஜோட்டொலி, வாயிற் கதவு திறக்கும் ஓசை எல்லாம் அவன் போய் விட்டான் என்று எனக்கு அறிவித்தன.

     நிமிர்ந்து அறையை வெறித்து நோக்கினேன். மேஜை மீது கிடந்த லீலாவின் கடிதம் என்னைத் தாயற்ற குழந்தை போல் பரிதாபமாக நோக்கியது. தொப்பென்று மேஜை மீது கவிழ்ந்து கொண்ட நான் நெஞ்சு பிளக்க விம்மினேன்.

     கண்ணீர் மேஜையை நனைத்தது.

     இரண்டு மூன்று விநாடிகள் தாம் சென்றிருக்கும். மெதுவான காலடிச் சத்தம் என் கவனத்தைத் தாக்கியது.

     ‘அவர் தாம் வந்து விட்டாரோ?’ என்று துணுக்குற்று நான் நிமிர்ந்தேன்.

     மூர்த்தி! மூர்த்தி எப்போது வந்தானோ தெரியாது.

     அநுதாபம் தோய்ந்த விழிகளில் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றான்.