(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

தளிர்

6

     அப்பாவை ஸ்டேஷனில் காணாமற் போகவே நான் ஒரு விநாடி வெலவெலத்துப் போய்விட்டேன். கடிதம் போய்ச் சேர்ந்திருக்காது என்ற நினைப்பே எழவில்லை. ‘உடம்பு மிகவும் அசௌகரியமாக இருக்குமோ ஒருவேளை? அப்படியானால் சுந்துவாவது வந்து நிற்பானே; ஏன் அவனையும் காணோம்?’ என்று ஒரு கணத்துக்குள் மனம் எண்ணாதவெல்லாம் எண்ணிவிட்டது.

     வண்டி புங்கனூரில் இரண்டு நிமிஷத்திற்கு மேல் நிற்காது. நீண்ட பிரயாணக் களைப்புடன் எற்பட்டிருக்கும் இப்போதைய கவலையும் என்னைக் கலக்க “ஒருவரும் வரவில்லையே!” என்று கையைப் பிசைந்தேன். தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி, “நன்றாகப் பார்த்தாயா? பயப்படாமல் நிதானமாகப் பார். யாரும் வரவில்லையானால், நானும் இறங்கி விடுகிறேன். அடுத்த வண்டிக்குப் போனால் போகிறது” என்றான்.

     ‘அவனுக்கு எதற்கு என்னால் வீண் சிரமம்? ஊர் வரை வந்தாயிற்று. எனக்குத் தெரியாத இடமில்லையே!’ என்று எண்ணிய நான், “வேண்டாம், நானே ஒரு வண்டியை வைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் விடுவேன்” என்றேன்.

     “அப்படியானால் உங்கள் ஊருக்குள் நான் வரவேண்டாம் என்கிறாயாக்கும்?” என்று முறுவலித்தான் அவன்.

     நான் அவனுக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்துச் சொன்னதை அவன் அப்படி வித்தியாசமாக நினைத்துப் பேசியது எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது.

     “ஓ! அப்படி நான் நினைக்கவில்லை. எங்கள் ஊருக்குள்ளும் வீட்டுக்கும் நீங்கள் விஜயம் செய்வதில் எனக்கு மிகவும் சந்தோஷம்” என்று பதிலுக்கு நானும் நகைத்தேன். அவசர அவசரமாகச் சாமான்களைக் கீழே தள்ளினோம். அந்தப் பாழாய்ப் போன ஊரில் சாமான்களைக் கொண்டு செல்ல ஒரு கூலி கூடக் கிடையாது. ஸ்டேஷன் கட்டிடத்திற்கு வெளியே நாலைந்து குதிரை வண்டிகள் மட்டும் நிற்கும். “இருங்கள்” என்று மூர்த்தியிடம் கூறிவிட்டு நான் வெளியே நின்ற வண்டிக்காரனை அழைத்து வரப்போன போது ஸ்டேஷன் மாஸ்டர் என்னைப் பார்த்து விட்டுப் புன்னகை செய்தார்.

     பிறகு, “ஏம்மா அப்பா வரவில்லை? முதன் முதலில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஊரிலிருந்து வரும்போது இப்படியா அலட்சியமாக இருப்பது?” என்று கேட்டார் அந்த மனிதர்! மூர்த்தி மாப்பிள்ளையாகத்தான் இருக்க வேண்டுமென்று எவ்வளவு சுளுவாக அவர் ஊகித்து விட்டார்!

     ‘அவர் மாப்பிள்ளை அல்ல!’ என்று கூறிவிட என் வாய் துடித்தது. ஆனால் பின் அவன் யார் என்பார்; வெறித்துப் பார்ப்பார். இந்த அநாவசிய வளர்த்தலுக்கு இடம் வைத்துக் கொள்வதைக் காட்டிலும் பேசாமல் போவது உத்தமம் என்று மௌனமாக நான் வண்டிக்காரனை அழைத்து வந்தேன். அவனுக்குச் சாமான்களைக் காட்டிவிட்டு நான் மூர்த்தியுடன் ஸ்டேஷன் கட்டிடத்தை விட்டு வெளியேறினேன். அவன் கொடுத்த நாகை டிக்கெட்டுக்கு விவரம் கேட்ட ஸ்டேஷன் மாஸ்டர், நாங்கள் சற்று அப்பால் வந்ததும், புக்கிங் கிளார்க் சுந்தரேசனிடம், “வைத்தியநாதையர் மாப்பிள்ளை கல்யாணத்தின் போது மாநிறமாக இருந்தாற் போல் இருந்ததே; இப்போது சிவப்பாக இருப்பது போலத் தோன்றுகிறதே! ஏனையா, என் கண் தான் கோளாறா! அல்லது கல்யாணம் ஆன பிறகு பிள்ளையாண்டான் சிவந்துவிட்டானா?” என்று தம் ஹாஸ்யத்திற்குத் தாமே நகைத்துக் கொண்டு அபிப்பிராயம் கேட்டது எனக்கு மட்டுமின்றி, மூர்த்திக்கும் காதில் விழுந்து விட்டது. ‘களுக்’ என்று அவனுக்குச் சிர்ப்புக் கூட வந்துவிட்டது. எனக்கோ வெட்கம், கோபம், அவமானம் எல்லாம் மேலிட்டன. ‘உங்கள் ஊர் ஜனங்கள் என்ன இப்படி இருக்கிறார்கள்?’ என்று அவன் கேட்டு நகைப்பது போல இருந்தது. ஏதோ குற்றம் செய்துவிட்டவளைப் போல நான் வண்டியில் முதலில் ஏறிக் கொண்டேன்.

     ‘ஜல், ஜல்’ என்று அக்கிரகார வீதியில் குதிரை வண்டிச் சத்தம் கேட்டு விட்டால் போதும், யார் வீட்டிற்கு யார் வருகிறார்கள் என்ற சங்கதிகளை ஆவலாக அறியும் பொருட்டு அக்கிரகார மகாஜனங்கள் அவ்வளவு பேரும் தெரு வாசற்படியில் ஏதோ ஊர்வலம் காணுவதைப் போல வந்து நிற்பதும், பின் வண்டி சென்றதும் ஒவ்வொருவரும் தத்தம் அண்டை அயலாருடன் கூடி எதற்காக, யார், எப்படி வந்திருக்கிறார்கள் என்பன போன்ற விவரங்களைக் குறித்து விவாதம் செய்துவிட்டுத்தான் உள்ளே செல்வார்கள் என்பதும் என்னை இன்னும் கலக்கும்படி நினைவுக்கு வந்து தொலைத்தன.

     மூர்த்தி வேறு, வண்டி தெருவுக்குள் நுழைந்ததுமே, “இவ்வளவு பேர்கள் நம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பார்கள் என்று நான் எண்ணவில்லை, சுசீலா! இரட்டைச் சாரி வீடுகளிலும் ஜனங்கள் அமோகமாக வரவேற்புக் கொடுக்கிறார்கள்” என்று எனக்குத் தகவல் கொடுத்தான். நானே பின்புறம் உட்கார்ந்திருந்தால் அவ்வளவு தெரிந்த முகங்களையும் பார்க்க நேர்ந்து வழியிலேயே அவர்களிடையே குசல ப்ரச்னங்களுக்குப் பதில் கொடுக்கவும் வேண்டி வரும்! அதற்கு இது தேவலைதான்.

     வீட்டு வாசலில் வண்டி நின்றது. அப்பாவுக்கு அன்று ஏதோ காரணம் கொண்டு காரியாலய விடுமுறை என்று எண்ணுகிறேன். திண்ணையில் உள்ள பழைய சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு சுந்துவுக்குக் கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தவர், வண்டி நின்றதைப் பார்த்து ஆச்சரியத்துடன் வந்தார். பின்னால் ஜகது, அம்மா எல்லோருமே வண்டிச் சத்தம் கேட்டு வந்து விட்டார்கள். பக்கத்து வீட்டில் ஜானி வந்திருக்கிறாள் போல் இருக்கிறது. அவள் வேறு என் கண்களில் முதல் முதலாகத் தட்டுப்பட்டு விட்டாள். அவள் இதழ்களில் இலங்கிய கேலியும் குறும்பும் கலந்த அர்த்த புஷ்டியான நகை, நான் ‘அவருடன்’ வந்திருப்பதாக அவள் எண்ணியிருப்பதை எனக்கு அறிவித்தது!

     “வருகிறோம் என்று கடிதம் போடவில்லையே! திடீரென்று புறப்பட்டீர்களா?” என்று அப்பா கேட்டார்.

     அம்மாவும் ஜகதுவும், “இந்தப் பிள்ளையாண்டான் யார்?” என்று என்னைக் கேட்காமல் கேட்டார்கள். “உள்ளே வாருங்கள், விவரமாகக் கூறுகிறேன்” என்று ஜாடையாக நான் விடுவிடென்று உள்ளே நுழைந்தேன். மூர்த்தியை அப்பா திண்ணையிலேயே ஐக்கியமாக்கிக் கொண்டு சங்கதிகளை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.

     “ஹேமாவுக்கு அத்தை பிள்ளையம்மா இவன். நாகப்பட்டினத்திலிருந்து தங்கையைப் பிரசவத்துக்கு அழைத்து வரப்போவதாக முந்தாநாள் வந்து சொன்னான். தற்சமயம் என்னைக் கொண்டு விட வருவதற்கு யாரும் இல்லை என்று இவனுடன் அனுப்பினார்கள். கடிதம் போட்டிருக்கிறதென்று அத்தை சொன்னாளே? அப்பா ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போவார் என்று நான் நினைத்திருந்தேன். யாருமே வராதது எனக்கு எத்தனை கவலையாகிவிட்டது தெரியுமா அம்மா? அப்பாவுக்குத்தான் உடம்பு சுகமில்லையோ என்று பயந்துவிட்டேன்” என்று நான் மடமடவென்று ஒரே மூச்சில் கூறி முடித்தேன்.

     “ஏன், உன் பாட்டிக்கு என்னவாம், உன்னை அழைத்து வர முடியாமல்? இந்த மாதிரி அறிந்த பேர் பின்னும் அறியாத பேர் பின்னும் அனுப்ப வேண்டுமா?” என்றாள் அம்மா. எனக்கு அவள் அபிப்பிராயம் வேதனையைக் கொடுத்தது.

     “இவன் ரொம்பத் தங்கமானவன் அம்மா. இவனை விட வேறு நல்ல துணை கிடைக்கவே கிடைக்காது. மிகவும் சரளமாகப் பழகும் வெகுளியான சுபாவம்” என்று அழுத்தம் திருத்தமாக நான் தெரிவித்ததைக் கண்டு ஒரு கணம் ஜகதுவும் அம்மாவும் அசந்து போய்விட்டார்கள்.

     அம்மா வெறுப்பை மாற்றிக் கொள்ளாமலேயே, “போதும்! உன் அத்தையின் காரியம் உனக்குத்தான் பிடிக்கும். என்ன செய்தாலும் மெச்சிக்கொள்ள! ஏதோ மதிப்புக்கு ஒரு வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு குதி போட்டுக் கொண்டு ஓடினாயே?” என்று இடித்தது மல்லாமல் அத்தையின் பேரிலுள்ள வெறுப்பால் மூர்த்தியையும் மட்டமாக எடை போட்டது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. “நான் ஒன்றும் மெச்சிக் கொள்ளவில்லை. உங்களுக்குப் பிடிக்காமல் நான் போனது தப்பு தப்பு என்று ஆயிரம் தடவை சொன்னால் கூடப் போதாது. அத்தையாம் அத்தை! ஆனால் இந்தப் பிள்ளையுடன் அனுப்பியது தவறு என்று மாத்திரம் நினைக்காதேயுங்கள். இவன் மிகவும் நல்லவன்” என்றேன் நான். மூர்த்தியின் கபடமற்ற தனத்தை அதற்கு மேல் அவர்களிடம் எப்படிச் சொல்வது என்று அப்போது எனக்குப் புரியவில்லை.

     அப்பாவுடன் சாப்பிட உட்கார்ந்த மூர்த்தி, “உங்கள் பெண் என்ன சொன்னாள் தெரியுமா? நீங்கள் வரவேண்டாம், நானே வண்டி வைத்துக் கொண்டு போய் விடுகிறேன் என்றாள். நான் அப்படியே போயிருந்தால் தேவலை என்று அவள் உள்ளூர நினைத்துத்தான் கூறியிருக்கிறாள் என்பது எனக்கு அப்புறந்தான் தெரிந்தது! ஏனென்றால் நான் யாரென்று தெரிந்தால் இந்த ஊர்க்காரர்கள் என்னை விரட்டி அடித்திருப்பார்கள் போல் இருக்கிறது” என்று நகைத்தான். அப்பா அவன் பேச்சை சட்டென்று புரிந்து கொள்ளாமல் விழித்துவிட்டு, “என்ன சொல்லுகிறாய்?” என்றார்.

     மூர்த்தி என்னை நோக்கிவிட்டுப் பின்னும் சிரித்தான்.

     உதடுகள் துடிக்க நான், “ஆமாம் அப்பா! வண்டியை விட்டு இறங்கினதுமே ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து வண்டிக்கார முனியன் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் முதல் முதலில் வரும் போது நீங்கள் ஸ்டேஷனுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டால்... இந்த ஊர்க்காரர்களுக்கு கொஞ்சமும் விவஸ்தையே கிடையாது!” என்றேன்.

     சூதுவாது ஏதும் தோன்றாத வெள்ளை உள்ளம் படைத்த என் தந்தைக்கு இது பெரிய ஹாஸ்யமாக இருந்தது. “அப்படியா கேட்டார்கள்” என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

     உள்ளே வந்த என்னிடம் ஜகது, “இப்படி ஓர் அந்நிய புருஷனுடன் நான் சிரித்துப் பேசினாலோ அல்லது தனி வழிப் பிரயாணம் வந்ததாகத் தெரிந்தாலோ என்னை வீட்டு வாயிற்படி ஏற்ற மாட்டார்கள். என்னதான் நாகரிகம், நாகரிகம் என்றாலும் ஒரு வரையறை வேண்டியிருக்கிறது. ஊர்க்காரர்கள் கேட்பது எப்படித் தப்பாகும்? கல்யாணம் சமீபத்தில் ஆகியிருக்கிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் வருகிறார்கள் என்று தான் எண்ணிக் கொள்வார்கள்” என்றாள்.

     கிராமத்தைத் தவிர நாலு படித்த மனிதர்களுடன் பழகி அறியாதவள் தானே அவள்? கிராமத்தோடு கிராமமாக வயல்வெளியைக் கட்டிக் கொண்டு கிடக்கும் அத்திம்பேருடைய குறுகிய மனப்பண்பு அவளுக்கு ஒத்து வருகிறது. நான் அப்படியா?

     ஆறு வயசுக் குழந்தையும் எட்டு வயசுக் குழந்தையும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் போது தாங்கள் குழந்தைகள் என்பதையே முற்றும் மறந்து விடுவார்கள். அப்பா அம்மாவை ‘ஆபீஸுக்கு நேரமாச்சு’ என்று விரட்டுவது போலவே அவன் விரட்டுவான். அம்மா நிஜமாக அப்பாவைக் கோபித்துக் கொள்வது தோற்று விடும்படி அவ்வளவு அபாரமாக அம்மாவாக இருக்கும் குழந்தை கோபித்துக் கொள்வாள். பெரியவர்களாகும் ஆசை, அவர்களுக்கு குழந்தை நினைப்பையே மறைத்து விடும்.

     இந்தக் குழந்தைகள் நிலையில் தான் வாழ்க்கையில் இன்னும் முதற்படி கூட எடுத்து வைத்திராத நான் இருந்தேன். அக்கா, அம்மா இவர்களை விட மிகவும் பதம்பட்ட மனமும் நாகரிகப் பண்பாடும் அடைந்து விட்டதாக எண்ணி இறுமாப்பு கொண்டிருந்தேன் என்றால் மிகையாகாது. அதுவும் மூர்த்தியுடன் ஒரு நாளைப் பழக்கத்திற்குப் பிறகு என் அறிவு பின்னும் அதிகமாகி விட்டது போலும். புதுமனிதர்கள் சங்கத்தில் பழகும் மெருகு பெற்று விட்டேன் போலும் பெருமை கொண்டிருந்தேன். எனவே, ஜகதுவின் அபிப்பிராயம் தவறு, பெண்கள் முன்னேற்றம் என்ற ஆசையால் அவள் மனம் விரிவடைய வேண்டும் என்று அவளுக்கு உறைக்கும்படி, அவளை மடக்கி நான் வாயாடினேன்.

     “உன்னைப் போல் இப்படி நாமே நம் அறிவையும் ஆற்றலையும் பயந்து பயந்து குறுக்கிக் கொண்டால் எப்படியடி பெண்கள் முன்னேற முடியும்? நாலு பேருடன் மனம் விட்டுப் பழகி, நாலு புது விஷயங்களை அறிந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது? அந்நிய புருஷனுடன் பேசுவதே ஆபத்து என்ற கெடுதலான முறையில் ஏன் நினைக்க வேண்டும்? உங்களுக்கெல்லாம் இந்தக் குதர்க்க புத்திதான் முன்னுக்கு வரும் போல் இருக்கிறது! எங்கள் வீட்டில் எல்லாம் இப்படி இல்லையம்மா. எல்லோருடனும் சகஜமாகப் பழகுவதை வித்தியாசமாக நினைக்க மாட்டார்கள். அதுவும் அவருக்கு எடுத்ததற்கெல்லாம் அடுப்பாங்கரையில் போய் ஒளிந்து கொண்டால் பிடிக்கவே பிடிக்காதாம்!” என்று விடுவிடென்று உணர்ச்சி வேகத்தில் அவர் சொன்னதை எல்லாம் உளறிவிட்டேன்.

     அவள் ஒரேயடியாக மலைத்து விட்டாள்.

     “அடியம்மா! இப்போதே என்னவெல்லாம் பேசுகிறாள் இவள்? அவருக்கு அப்படி இருந்தால் பிடிக்காது, இப்படி இருந்தால் பிடிக்காது என்று அதற்குள் என்னவெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?” என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயித்தாள்.

     அத்துடன் நான் விட்டேனா? அம்மாவிடம் அத்தை வீட்டு சம்பிரமங்களையும் பாட்டி கூறிய கசப்பு மொழிகளையும் ஓர் அட்சரம் விடாமல் தெரிவித்து விட்டு, “ஏனம்மா, போயும் போயும் பணத்திற்கு அவர்களிடமா எழுத வேண்டும்? எங்கள் வீட்டில் தான் அது வேண்டாம், இது வேண்டாம் என்று கூறியிருக்கிறார்களே. நீங்கள் அத்தையிடமிருந்து எதையும் பெற்றுக் கொண்டு என்னைக் கொண்டு விட வேண்டாம். அதை விட நான் ஒன்றும் இல்லாமலே போய்க் கொள்வேன். அவர்கள் எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார்கள்!” என்று எல்லாம் தெரிந்த அநுபவசாலியைப் போலப் பேசினேன்.

     இவைகளுக்குப் பலன் கை மேலேயே உள்ளது என்பதை அப்போது நான் அறியவில்லையே!

     “அவர்களிடத்தில் யார் தானம் கேட்டார்கள்? சமயத்தில் கொடுத்தால் நாளைக்கு அப்பா ரிடையர் ஆனவுடனே ‘பிராவிடண்ட் பண்டு’ பணம் வரும்; வட்டியும் முதலுமாக ஒரு சல்லிக்காசு மிச்சம் வைக்காமல் விட்டெறிந்து விடப் போகிறோம். உறவு மனுஷர் செல்வாக்காக இருந்தால் ஒரு சமயம், போது என்று ஒத்தாசை கேட்பது உலகத்தில் இல்லையா? நான் புடவை வாங்கிக் கொடுத்தால் அகலமில்லை, சரிகையில்லை என்று பாத்திரக்காரிக்குப் போட்டேன், கூட்டுகிறவளுக்குக் கொடுத்தேன் என்று முகத்திலடித்தாற் போல உன் அத்தை சொல்லுவாள். தங்கத்தின் கல்யாணத்தின் போது அப்படித்தான் நேருக்கு நேர் மட்டம் தட்டினாள். இப்போதுதான் ஆகட்டும், சுமங்கிலிப் பிரார்த்தனைக்கு வரச் சொல்லி ஆயிரம் தடவை வரிந்து வரிந்து எழுதச் சொன்னேனே! மதிப்பு வைத்து வந்தாளா உன் அத்தை? உன் பாட்டிக்கு என்னைச் சொல்லாவிட்டால் சாப்பிடுவது ஜெரிக்காது. அவர்களுக்கு அதே வழக்கம். அதே தொழில்” என்று அம்மா காரசாரமாகப் பேசியதுமன்றி, உன் அத்தை, உன் பாட்டி என்று அழுத்திக் கூறினாள். அங்கேயானால் பாட்டி, உன் அம்மா, உன் அப்பா என்றாள். இவர்களுக்கு நடுவே நான் இப்படியா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? அநாதி காலம் தொட்டே இருக்கும் இந்த விரோத மனப்பான்மை காரணமில்லாமலே வளர்ந்து வரும் சக்தி வாய்ந்தது. இந்தச் சிக்கலைப் பிரிக்க பிரிக்க இன்னொருபுறம் தாறுமாறாக நமக்குத் தெரியாமலே பின்னிக் கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதை அறிய எனக்கு இன்னும் அநுபவம் கிட்டவில்லையே!

     “அத்தையிடமிருந்து இத்தனை நிஷ்டூரங்களைக் கட்டிக் கொண்டு வந்தாயாக்கும்?” என்றாள் ஜகது.

     எனக்கு அந்தப் புடவைகளின் ஞாபகம் வந்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்றிருந்த என் தயக்கம், அத்தை இரண்டாம் வகுப்புச் சீட்டுக்கு மட்டம் தட்டிய போது, ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தது. ‘அவள் அகங்காரத்துடன் அம்மா அளித்த விலையுயர்ந்த புடவையையே அலட்சியம் செய்யலாமானால், நான் நிராகரிக்கக் கூடாதா? சொன்னதெல்லாம் உறைந்திருக்கிறது. நானும் மழுங்குண்ணி மண் பொம்மையல்ல என்று தெரிந்து கொள்ளட்டுமே! இப்போது அவைகளை மூர்த்தியிடம் கொடுத்து விட்டால் என்ன? ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லித் தந்திரமாக அவைகளைத் தட்டிக் கழித்து விட வேண்டும். ஆனால் அதற்குள் இவர்களிடம் சமாசாரத்தைக் கூறிவிடக் கூடாது. முடித்து விட்டுச் சொல்லிக் கொள்ளலாம்’ என்று முடிவு செய்து கொண்டவளாக, மூர்த்தி திண்ணையில் இருக்கிறானா, அப்பாவும் கூட இருக்கிறாரா என்று அறிந்து கொள்ளும் பொருட்டு வாசற் பக்கம் வந்தேன்!

     அவ்வமயம் தபால்காரன் வந்துவிட்டுப் போயிருக்கிறான் போல் இருக்கிறது.

     புன்னகையுடன் ரேழியிலே எதிர்ப்பட்ட மூர்த்தி, “ஸ்ரீமதி சுசிலா ராமநாதனுக்குக் கடிதம் இருக்கிறது” என்றான் என்னைப் பார்த்து.

     அவனிடமிருந்து சாய்ந்த கையெழுத்திலே அச்சுப் போலிருந்த மேல் விலாசத்தைத் தாங்கிய கடிதத்தைப் பெற்றுக் கொண்ட போது, ஆனந்த மிகுதியால் என் உள்ளத்துடன் உடலின் ஒவ்வோர் அணுவும் துடித்தது. நடுங்கிய கரங்களுடனும், ஒளி மிகுதியால் அசைவற்ற விழிகளுடனும் நான் கடிதத்தை வாங்கிக் கொண்டவள், அத்துடன் இன்னொரு கார்டும் வந்திருக்கிறது என்பதைக் கவனிக்கவில்லை. அவனாகவே, “இது, நீ வருவதைக் குறித்து மாமா எழுதியிருந்த கடிதம் போலிருக்கிறது” என்று கூறிவிட்டுக் கொடுத்தான். அவனிடம் கூற வந்த விஷயத்தை நான் அடியுடன் மறந்து விட்டேன்.

     நான் சற்றும் எதிர்பாராத விதமாக கடிதம் ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு வரியிலும் கரை புரண்ட அவரது அன்புப் பிரவாகத்திலேயே ஊறியவளாக நின்று விட்ட எனக்கு, ஜகது வந்து எட்டிப் பார்த்து, “ஆபீஸ் கடுதாசி போலிருக்கிறதே! ஏதடி? எங்கிருந்து வந்திருக்கிறது?” என்று கேட்டதோ, நடையிலிருந்து மூர்த்தி, “ஐந்து மணி வண்டியில் கிளம்பலாம் என்றிருக்கிறேன். வண்டி ஒன்று வேண்டுமே” என்று கேட்டதோ கனவு உலகத்திலேயிருந்து கேட்பது போல் இருந்ததில் அதிசயம் இல்லையே! அத்தையைச் சொல்லப் போனேனே? இன்னும் கொஞ்சம் கூடிவிட்ட பெருமையில் கர்வம் தலைதூக்க, ஜகதுவின் அறியாமையை ஏளனம் பண்ணும் முறையிலே, “அடி மக்கு! டைப் அடித்திருந்தால் ஆபீஸ் கடிதமாக்கும்!” என்று புங்கனூர் எலிமெண்டரி பாடசாலையில் மூன்றாம் வகுப்புக்கு மேல் எட்டிப் பார்த்திராத அவளுக்கு துணைப் பாடங்கள் யாவையும் ஆங்கிலத்திலேயே படித்து வெற்றிகரமாக உயர்தரப் பள்ளிப் படிப்பை முடித்திருந்த நான் பட்டம் சூட்டினேன்.

     பெட்டியைத் திறந்து விலை மதிப்பற்ற பொக்கிஷமாகிய அந்தக் கடிதத்தைப் பத்திரம் செய்யப் போன போது தான் புடவைகள் கண்களைக் கவர்ந்து கவனத்தில் நுழைந்தன. எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அப்பா வெளியில் எங்காவது போயிருந்தாரோ என்னவோ, காணவில்லை. ஜகதுவும் முகத்தைச் சுளுக்கிக் கொண்டு பின்கட்டுக்குப் போய்விட்டாள். “அத்தை எனக்கு இரண்டு புடவைகளும், ஹேமாவுக்கு இரண்டும் வாங்கி வந்தாள். பேச்சு வாக்கில் என்னிடம் கொடுத்த போது நான் நாலையும் கவனியாமல் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு விட்டேன் போல் இருக்கிறது. இப்போதுதான் கவனித்தேன். நீங்கள் திரும்பிப் போவீர்கள் இல்லையா அங்கு? இதை தயவு செய்து கொண்டு கொடுத்து விடுகிறீர்களா?” என்று புடவைப் பொட்டலத்தை அவனிடம் நீட்டினேன்.

     அவன் வாங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்தான். “நாலும் உனக்கே தான் வாங்கினாளோ என்னவோ” என்றான்.

     “இல்லை, இல்லை. ஹேமாவுக்கு என்று சொன்னாளே” என்றேன் நான். அழுத்தம் திருத்தமாக.

     “இம்மாதிரி புடவைகள் கூட அவள் உடுத்துகிறாளா என்ன! ஸில்க்கும் ஜார்ஜெட்டும் தவிர அவள் நூல் புடவைகள் உடுத்தியே நான் பார்த்ததில்லையே?” என்று அவன் முறுவல் செய்தான்.

     என் முகத்தில் அசடு தட்டியிருக்க வேண்டும் என்று நான் ஊகித்துக் கொண்டாலும், வேண்டாத சுமை ஒன்று கழிந்தது என்று திரும்ப எத்தனித்தேன். அப்பா வெளியிலிருந்து வந்தார்.

     “என்னது? புடவையா?” என்று கேட்டு அவர் அதைக் கைகளில் வாங்கு முன்னரே என் நெஞ்சம் குற்றமுள்ளதைப் போலக் குறுகுறுத்தது. தூண்டித் தூண்டி அவர் ஏதாவது கேட்டு, மூர்த்தி வாயை விட்டு விட்டால் குட்டு உடைந்து விடுமே என்ற பயத்துடன் நான் முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொண்டு, “ஒன்றுமில்லை அப்பா. அவர் தங்கைக்கு வாங்கிப் போகிறாராம்!” என்று துணிந்து ஒரு பொய்யை, எப்படித்தான் என் நாவில் வந்தது என்று அறியவில்லை, சொல்லிவிட்டேன்.

     அதிகம் எனக்குப் பழக்கமும் சொந்தமும் உரிமையும் கொண்ட அப்பாவின் கேள்விகளுக்குப் பயந்து ஒரு நாள் பழக்கமுள்ள மூர்த்தியிடம் அதிக சுவாதீனம் கொண்டாடும் முறையில் ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் புகன்றது எனக்கே பிறகு எண்ணிப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.

     அப்பா புடவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவன் என்னை விழிகள் அகலப் பார்த்தான். நான் என்ன காரணம் கொண்டு அவ்விதம் பொய் கூறினேன் என்று அவன் எப்படி ஊகித்துக் கொண்டிருக்க முடியும்? எப்படியோ பளுவை அவன் மீது சுமத்திவிட்டு நான் ஒன்றும் அறியாதவள் போல் உள்ளே வந்து விட்டேன்.

     அவனும் குட்டை குழப்பவில்லை. சற்று நேரத்தில் கிளம்பிப் போய் விட்டான். அசட்டுத் துணிச்சலுடன் காரியம் செய்து விட்டேனே ஒழிய அந்த நிமிஷத்திலேயே மனம் நிம்மதியை இழந்து விட்டது.

     பெரியவர்களிடம் மறைந்து அவசரப்பட்டு விட்டேனே! நான் கூறிய பிரகாரம் மூர்த்தி அவைகளை அத்தையிடம் கொண்டு கொடுத்தால் வேண்டுமென்று நான் செய்திருக்கும் காரியத்திற்கு என்னவெல்லாம் சொல்லுவாளோ? அவளுக்கு வேறு இந்தச் சங்கதியெல்லாம் தெரிந்து விடுமே!

     சே... சே... என்ன பிசகு செய்தேன்? ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பதற்குச் சரியாக ஒரு நாழிகை வேகத்தில், இந்தக் காரியம் என்ன பலனைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்காமல் ஒன்றும் அறியாத அவனை மாட்டி வைத்தேனே? நான் சொன்ன பொய்யைக் கேட்டு அவன் என்ன நினைத்தானோ? பார்க்கப் போனால் அற்ப விஷயந்தான்.

     ‘ஏன் கொடுக்கக் கூடாது? அவள் குத்திக் காட்டுவது போல் எங்கள் எளிய நிலையை இடித்து விட்டு அளித்திருக்கும் பரிசை நான் நிராகரித்தது தான் சரி’ என்று ஒருபுறம் மனம் விவாதித்தது.

     அப்பா அம்மாவிடம் பிறகு தெரிவிக்கலாம் என்றிருந்தவள் கடைசியில் யாரிடமுமே தெரிவிக்கவில்லை.