உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953) தளிர் 3 “சுசி கல்யாணம் ஆகிவிட்டதனால் என் தலை மேலிருக்கும் மலை இறங்கி விடும்” என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் இப்போது காரியம் முடிந்த பிறகு அம்மா, அப்பாவைப் பொறுத்தவரை மலை இன்னும் கொஞ்சம் பளுவுடன் உறைந்திருக்கும் என்று தோன்றியதே ஒழிய இறங்கியதாகக் காணவில்லை. அவளுக்குத் தொண்டை பாறாங்கல்லாக இருந்தது. அவரோ பத்து வருஷம் கூடி விட்டவர் போலப் பரிதாபமாகக் காட்சி அளித்தார். சாமானும் சட்டுமாக நிரந்தரமான வீட்டிலே காலை வைத்த போது எல்லோருக்குமே, ‘அம்மாடி’ என்று இருந்தது. சந்தை கலைந்து தத்தம் வீடுகளுக்குத் திரும்புவதைப் போல ஒவ்வொருவராகப் பயணம் கட்டினார்கள். கடைசியாகக் கிளம்பியவர்கள், அத்தை பாட்டி இவர்கள்தாம். அத்தை என் தந்தைக்கு ஒரே சகோதரி. அத்தை புருஷர் மைசூரிலே பெரிய வக்கீலாக இருந்தார். ஆசைக்கு ஒரு பெண் ஹேமாவும், அருமைக்கு ஒரு பிள்ளை வெங்கிட்டுவுந்தான் அத்தைக்குக் குழந்தைகள். வைரமாகவே உடம்பில் இழைத்துக் கொண்டு கெட்டிக்கரைப் பட்டுப் புடவையுடன் வெள்ளிக் கூஜாவைக் கையில் எடுத்துக் கொண்டு அத்தை வண்டியை விட்டு இறங்கி வருவதே ஓர் அலாதி பெருமையையும் கர்வத்தையும் விளக்கும். “மாப்பிள்ளை பணமாகக் கொண்டு வந்து கொட்டுகிறான். நச்சுப் பிச்சென்று நாலைந்து பிடுங்கலில்லை” என்று பெண்ணைப் பற்றிய ஒரு தனியான கர்வம் பாட்டிக்கு மிகவும் உண்டு. பெண்ணிடமே அவள் வாசம் செய்ததற்கு இதுதான் காரணம். என் தந்தை அவளுக்கு ஒரே பிள்ளை. அந்த அருமைக் குமாரர் வழி மக்கள் நாங்கள். எங்கள் மீது பாசம் இருந்ததோ என்னவோ. “ஏண்டா வைத்தி, பெண்ணாய்ப் பிறந்தவளை மாசம் மாசம் ஆறும் ஏழும் சம்பளம் கொடுத்துப் படிக்க வைக்கிறாயே, ஏதோ கேட்டுப் பாடுகிறாளே அது போதாதா? பாட்டு வாத்தியார் வைத்து அது வேறு செலவு செய்கிறாய். இந்தப் பணத்தைக் கொண்டு கையிலே இரண்டு வளையாவது அடித்துப் போடலாமே? வயது வந்த கோர்க்காலி ஏணி போல உயர்ந்துவிட்டாள்? இப்படிக் குன்றிமணித் தங்கம் இல்லாமல் நிறுத்தி வைத்திருக்கிறாயே?” என்று என்னைக் குறித்துச் சொல்லும் போது எங்களிடம் உள்ள அலாதி வெறுப்பு தொனிக்காமலிருக்காது. அம்மாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வரும். ஆனால் என்ன பயன்? பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கிக் கொள்வாள். எப்போதாவது இம்மாதிரி கல்யாணம், கார்த்திகை என்றால் தான் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். ஒரு தடவை சமீபமாகப் பாட்டி மட்டும் எங்கள் வீட்டுக்கே விஜயம் செய்தது எனக்கு நினைவை விட்டே அகலவில்லை. அண்டை அயலில் சிநேகம் பிடித்துக் கொண்டு நாள் முழுவதும் உட்கார்ந்து கிடந்தாள். “காபிக்கு முதற் கொண்டு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேணும்! போடி சுசீலா, பாட்டியை அழைத்துக் கொண்டு வா!” என்று என் தாய் கோபத்துடன் எனக்கு ஒரு நாள் உத்தரவிட்டாள். நான் சென்ற போது ஜானியின் தாயிடம் அவள், “பாரு கண்டும் காணாமலும் கொள்ளையாகத்தான் இவளுக்குச் செய்கிறாள். துணியாகவும் மணியாகவும் கொஞ்சமாவா கொடுத்திருக்கா? ஜகது வளைகாப்புக்கு வந்திருந்தாளே, குழந்தைகள் கையிலே சுளைபோலப் பத்துப் பத்து ரூபாய் குடுத்துட்டுப் போனா. நாளைக்கு சுசீலாவுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணப் போறான்? அவள் தான் ஒத்தாசை செய்யணும். என்ன செய்து என்ன நிறக்கிறதடி மீனு? அவளுக்குக் கொஞ்சமும் நன்றி விசுவாசம் கிடையாது. மஞ்சளும் குங்குமமுமா இருக்காளே, ஒரு கார்த்திகை, சங்கராந்தின்னு அஞ்சு ரூபா கொடுக்கணும்னு தோணுமா? மரியாதையே தெரியாது. வைத்தி தேமேனு அப்பாவித்தான். அவன் காலிலே இத்தனை சம்சாரத்தைக் கட்டி வச்சிருக்கு!” என்று பெண் பெருமையையும் நாட்டுப் பெண் சிறுமையையும் பிரலாபித்துக் கொண்டிருந்தாள். விளையாட்டுச் சிறுமியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த நான் அதுவரையில் எங்கள் குடும்பத்தையும் உள்ளேயுள்ள சச்சரவையும் கவனித்தவள் அல்ல. என் தாயைப் பற்றிப் பாட்டி இகழ்ச்சியாகக் கூறியது என் முற்றாத உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. ‘அத்தை இல்லாமல் நாம் இப்படி இருக்க முடியாதா? ஏன் இந்த அம்மாவுக்கு இதெல்லாம் தெரியவில்லை? பணக்கார அத்தையை விரோதித்துக் கொள்ளலாமா? பாட்டியின் மனத்தில் உள்ளதை அம்மாவிடம் தெரிவித்து விட வேண்டும்’ என்று அப்போது கவலைப்பட்டேன். இருந்தாற் போலிருந்து மறுநாளே பாட்டி, “இன்னிக்கு வண்டியிலே என்னை ஏற்றி விட்டுடு வைத்தி. எனக்கு என்னமோ இருப்புக் கொள்ளலே. அற்பசி மாதம் தலைக் காவேரிக்குப் போகணும்” என்றாள். பாட்டி சென்ற மறுகணமே அம்மா என் தந்தையைப் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள். “பார்த்தேளோ இல்லையோ உங்கள் அம்மா சொன்னதை? ஆமாம், நான் ஏழை, இங்கு மாட்டின் வயிற்றில் குடியிருக்க வேண்டுமென்றால் முடியுமோ? பஞ்சமோ, பட்டினியோ, உன் காலடியில் வந்து நிற்க மாட்டோம்” என்று என்ன என்னவோ சொல்லிக் கொண்டு போனாள். பாவம், அப்பாவி அப்பா. தெய்வமே என்று முகத்தில் கையை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்! அந்த நிமிஷத்தில் எனக்கும் அம்மாவைப் போல ரோசமாகத்தான் இருந்தது. தன் சொந்தக் குழந்தைகளிடமேயா தாய் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டுவாள்? அப்படி அவள் பாராட்டிச் சொல்லிச் சொல்லிக் காட்டும் போது, ‘அவர்களிடமிருந்து கை நீட்டி எதையும் வாங்கக் கூடாது’ என்ற சுரணை மேலிட முந்திரிக் கொட்டை போல நான், “அப்படியானால், நாளைக்கு எனக்குக் கல்யாணம் என்று அத்தையிடம் ஒத்தாசை கேட்கக் கூடாது அம்மா” என்றேன். உள்ளூற என் மனதில் அந்தப் பேச்சு, கோவையாகவே இருந்தது. ஆனால் வெளிக்குக் குடும்ப விவகாரம் அறியாத குழந்தையாக நடமாடி வந்த நான் சட்டென்று அந்த மாதிரி கூறியது, ஒரு சம்பந்தமுமின்றி அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தது. அம்மாவும் அப்பாவும் ஒரு கணம் அயர்ந்துதான் போய் விட்டார்கள். மறுவிநாடியே அம்மா என் தலையில் ‘நறுக்’கென்று ஒரு குட்டு வைத்தாள். “சிறிசா லட்சணமா இராமல் பெரியவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாயா நீ? இப்படி இருந்தால் நாளைக்குப் புக்ககத்தில் போய்க் குடித்தனம் பண்ணி எப்படிக் குப்பைக் கொட்டுவாய்?” என்று கோபித்தாள். குட்டுப்பட்ட தலையைத் தடவிக் கொண்டு நான் அப்பால் வந்துவிட்டேன். என்றாலும் மனத்தில், ‘அவர்கள் பணக்காரர்கள். ஹேமாவும் வெங்கிட்டுவும் எனக்குச் சமதையாக ஒரு நாளும் ஆக முடியாது’ என்ற வேற்றுமை வேரூன்றி விட்டது. அம்மா அப்போது வைராக்கியமாகப் பேசினாலும், என் விவாகத்திற்கு அத்தை தான் ஏதோ கடன் கொடுத்து உதவியிருக்கிறாள் என்பது எனக்கு உள்ளங் கை நெல்லிக்கனி போல் விளங்கியது. பிடிக்கவில்லைதான். எனினும் பெரியவர்கள் யோசிக்காமலா செய்வார்கள்? தவிர, அவர்களுக்கு இல்லாத பெருமையும் சிறுமையும் எனக்கு என்ன வந்தன? ‘குடும்பம் என்றால் இப்படிச் சிக்கல்கள் இருக்கத்தான் இருக்கும். இவற்றையெல்லாம் பாராட்டாமல் விட்டுவிடுவதுதான் உகந்தது’ என்று என் மனத்தில் படிந்திருந்த பழைய பாசியை அகற்றிக் கொண்டு புதுமைக் கண்களுடன் அவர்களைப் பார்த்தேன். அதுவும் இப்போது என்னுள்ளே ஒளிவிட ஆரம்பித்திருந்த புது அன்பு அந்தப் பழைய தாழ்வு மனப்பான்மையை என்னிடமிருந்து அடியுடன் கல்லி எரிந்து விட்டது. ஹேமா என்னோடொத்தவள் தான். “அம்மாமி, சுசீ எங்களுடன் ஊருக்கு வரட்டுமே? அப்புறந்தான் புக்ககம் போய் விடுவாள்” என்று அம்மாவிடம் அவள் கேட்டாள். நானும் சந்தோஷத்துடன் குதி போட்டுக் கொண்டு, “ஆமாம் அம்மா, நான் அவர்கள் ஊருக்குப் போனதே இல்லை” என்று கெஞ்சும் பாவனையில் சம்மதி கேட்டேன். பேசாமலே நின்ற அம்மாவிடம் அத்தையும், “ஆமாம் மன்னி, குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். அங்கே வந்து பத்து நாள் இருக்கட்டுமே” என்று ஆசைக்கு உரமூட்டினாள். தாய்க்கு அரைச் சம்மதம் என்று தெரிந்தும் பொங்கிய மகிழ்ச்சியில் அவ்வளவாக நான் பொருட்படுத்தவில்லை. பின்னாடி நினைத்துப் பார்த்துப் பார்த்து நான் ஆற்றாமையால் மனம் நொந்து போனேன். எவ்வளவு நன்றியற்றவள் நான்! பிறந்து வளர்ந்த இடத்தின் அந்தஸ்தையும் நிலைமையையும் உயரக் கொம்பில் இருந்து பார்ப்பதைப் போல அவ்வளவு துச்சமாகக் கருதும் அத்தை நமக்கு இனிச் சமமானவள் தான். அவளுடைய நிலைக்கு உயர்ந்து விட்டோம் என்று நினைத்தேனே! உல்லாசமாக ஒத்த சகியுடன் காலம் கழிக்கப் போகிறோம் என்று துள்ளிக் கொண்டிருந்த என் ஆசை அடியுடன் அணைந்து போகும்படி ஊர் வந்து சேர்ந்த அன்றே ஹேமா தலைவலி என்று படுத்தவள் தான். அவளும் நானும் சரிசமமாகத் தோள் மேல் தோள் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் கண்டு களிக்கவில்லை. சிரித்துச் சிரித்து விளையாட்டுக் கதைகள் புகன்று உண்டு மகிழவில்லை. தெருவையும் வீட்டு வாசலையும் தவிர ஒன்றையுமே அறியாமல் அலுத்துச் சோஒர்ந்து ஏனடா வந்தோம் என்று கிலேசமுறும்படி ஹேமாவின் தலைவலி டைபாயிடு சுரமாக வளர்ந்து வீட்டையே களையிழக்கும்படி செய்துவிட்டது. என்னுடன் பேசுவார் யாரும் இல்லை. சிரிப்பார் யாரும் இல்லை. என்னைக் கேலி செய்து அக மகிழ்விப்பாரும் எவரும் இல்லை. ஹேமா கண்ணையே விழிக்காமல் இருந்ததாகத் தெரிந்தது. டாக்டர் மணிக்கொரு முறை வந்து போனார். நர்ஸ் ஒருத்தி நோயாளிக்காக வீட்டுடனேயே அமர்த்தப்பட்டாள். அத்தைக்கு முகத்தில் ஈயாடவில்லை. பாட்டியோ கண்ட கண்ட தெய்வங்களுக்கு எல்லாம் நேர்ந்து முடிச்சிட்டு வைத்தாள். வந்து பதினைந்து தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. மாடி வராந்தாவில் நின்று கீழே தோட்டத்தையும், காம்பவுண்டில் கட்டியிருந்த மாடு கன்றையும் பார்த்துப் பார்த்து எனக்குச் சப்பிட்டுவிட்டது. ‘அரைச் சம்மதம் கொடுத்த அம்மாவைத் தட்டிக் கொண்டு வந்தேனே! இப்போது ஊரில் இருந்தால்? எனக்கு அவர் பேனாப் பரிசு கொடுத்ததை ஊர்க்காரர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு என்னைக் கண்ட இடத்தில் எல்லாம் கேலி செய்வார்கள். கோவிலிலும் குளத்திலும் இன்னும் ஒரு மாதத்திற்காவது என் விவாகத்தைப் பற்றியும் மாப்பிள்ளையைப் பற்றியுமே பேச்சு நடக்கும். ஆமாம் நான் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டனவே! கடிதம் எதும் எனக்கு வந்திருந்தால்? மதனி கூடத்தான் கடுதாசி எழுதி என்றாள். இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேனே!’ ஜகது இன்னும் ஊருக்குப் போகவில்லை. இரண்டு மூன்று மாசம் இருக்கப் போகிறாள் என்று எனக்குத் தெரியும். ‘அவளுக்கு வேணுமானால் எழுதலாமா? எனக்கு ஏதும் கடிதம் வந்தால்...’ நினைக்கவே எனக்கு வெட்கமாக இருந்தது. தவிரவும் பாட்டி அத்தைக்குத் தெரியாமல் கார்டு கவர் வாங்கி நான் எப்படி எழுதுவது? செய்வது நன்றாக இருக்குமா? புறப்படும் போது அவர்களிடம் இருந்த சகஜ மனப்பான்மை ஹேமாவுக்கும் எனக்குமிடையே நிலவியிருந்த நேசத்தால் தோன்றியது என்று நான் நினைக்கும்படி அத்தையாவது பாட்டியாவது என்னிடம் ஒரு வார்த்தை கூடத் தாராளமாகப் பேசவில்லை. ஹேமா திடீரென்று படுத்துக் கொண்டு விட்டதனால் இப்படி இருக்கிறார்களா அல்லது நான் வந்திருப்பதில் விருப்பம் கொள்ளவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. ஊரில் இருக்கும் போது பாட்டு மறந்து போகாமலிருக்கத் தினமும் பாடுவேன். இங்கு அவர்கள் கவனியாமல் இருக்கும் போது நானாகப் பாடுவதா? வீட்டிலே ரேடியோ, புத்தகங்கள், பொழுது போக்கு விளையாட்டிற்கான கேரம் பலகை போன்ற சாதனங்கள் எல்லாம் இருந்தன. இருந்தாலும் ஹேமா இல்லாமல் அவைகளைச் சுதந்தரமாக உபயோகிக்க எனக்குத் தைரியம் வரவில்லை. பிடித்து விட்டாற் போல் எப்படி நாட்களைத் தள்ளுவது என்று கவலை கொள்ளலானேன். அன்று வெங்கிட்டு வழக்கம் போல் ரேடியோவில் செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தான். நானும் அருகிலேயே இருந்தேன். செய்திகள் முடிந்ததும், “இருக்கட்டுமா? நிகழ்ச்சி முடிந்ததும் இந்த ஸ்விச்சைத் திருகி அணைத்து விடுகிறாயா?” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். யாரோ ஒரு பெண்மணி பாடிக் கொண்டிருந்தாள். அவள் பாடிக் கொண்டிருந்த பாட்டு எனக்கும் பாடம். எனவே என்னையும் அறியாமல் அதிலிருந்து வரும் குரலுடன் நானும் மெதுவாக இழைந்து பாட ஆரம்பித்து விட்டேன். பாட்டி அங்கே வந்ததை நான் கவனிக்கவே இல்லை. “ஏன்டி சுசீலா, குழந்தை கண்ணைத் திறக்காம கிடக்கிறா; வேதனை பிடுங்கித் தின்கிறது. இப்போ என்ன வேண்டியிருக்கு பாட்டும் கூத்தும்? வெங்கிட்டு எங்கே? அதை அணைக்கச் சொல்லு” என்று அவள் குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது எனக்கு. “இல்லை பாட்டி, வெங்கிட்டு வெளியே போய்விட்டான். நானே அணைத்து விடுகிறேன்” என்றேன் ரேடியோப் பெட்டியினருகில் சென்றவளாய். “எத்தையானும் திருகி ஒடிச்சுத் தொலைச்சுடாதே. பணம் பெற்ற சாமான்!” என்று அவள் சொன்ன வார்த்தைகள், எனக்கு எப்படி சுரீர் என்று உரைத்தன. கண்டபடி திருகி ஒடித்து விடும்படி அத்தனை பச்சைக் குழந்தையா நான்? எழுத்து வாசனையற்ற மூட ஜடமா நான்? அடேயப்பா! பணப்பெருமை, தன் வழிக் குழந்தை தானே என்பதையும் மறந்து எத்தனை நீசமாகப் பேசச் சொல்கிறது? ஹேமாவுக்குச் சமமாக நான் உயர்ந்து விட்டதாக மனப்பால் குடித்தது எத்தனை பேதமை! அந்தக் கணமே எனக்கு அங்கு விட்டு இறக்கை கட்டிக் கொண்டாவது பறந்து ஊரில் குதித்து விட வேண்டும் போலிருந்தது. பாலும் பழமுமின்றிப் பழையமுது சாப்பிட்டாலும் அந்த வீடு, அந்தச் சுதந்திரம் நினைக்கவே இன்பமாக இருந்தது. ரேடியோவும் புத்தகங்களும் இல்லா விட்டால் என்ன? ஜகது அக்கா வேறு இருக்கிறாள். தமாஷாக இரண்டு பேரும் சாயங்காலம் காற்றாடக் குளத்தங் கரைக்குப் போவதில் உள்ள ஆனந்தத்திற்கு ஏது ஈடு? பாவம், ஜகது! அவளோடு சேர்ந்து நான்கு நாட்கள் இல்லாமல் ஓடி வந்தேனே; வேண்டும் நன்றாக எனக்கு! ஹேமாவுக்குச் சிறிது ஜுரம் இறங்கியது. கண்ணை விழித்துக் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்கிறாள் என்று சொல்லிக் கொண்டார்கள். நாமும் பயணம் கட்ட வேண்டியதுதான். அத்தையிடம் மெதுவாகத் தெரிவிக்கலாம் என்று கீழே வந்தேன். பாட்டியும் அவளும் சாப்பிட உட்கார்ந்தனர் போலிருக்கிறது. உள்ளே நுழையுமுன்பே எனக்குப் பேச்சுக் குரல் கேட்டது. “அவளா? அடேயப்பா, பலே கெட்டிக்காரி. பேச்சும் வார்த்தையுந்தான் சர்க்கரையாக இருக்கு. இந்தப் பெண்ணை ஆட்டி அம்பலத்தில் வச்சுடுவாள். பிள்ளையாண்டானுக்கு வயசு கிட்டத்தட்ட முப்பதாகப் போகிறதாம். இளையாளைப் போலப் பதினாலு வயசா வித்தியாசம்? ஆயிரம் நட்டாங்க் சொல்லுவாளே மன்னி? தானாகப் பார்த்து இதை எப்பிடிப் பொறுக்கினாள்?” என்றாள் அத்தை. “இதுக்கேதான் ரூவாய் இரண்டாயிரத்தைந்நூறு கழற்றி இருக்காளே? பிள்ளையாண்டான் எங்கேயோ மாசம் அம்பது ரூபாய் சம்பாதிப்பதற்கு” - இது பாட்டி. “வேலை கூடக் காயமில்லை. பி.டபிள்யூ.டி.யில் டெம்ப்ரரியாகத்தான் இன்னும் இருக்கானாம்” என்றாள் அத்தை மறுபடியும். என்னைப் பற்றித்தான் இவை என்று கூடப் புரியாத முட்டாளா நான்? “சுசீலா அதிருஷ்டக்காரி. நல்ல வரனாகக் கிடைத்து விட்டது. அவர்கள் எல்லோரும் பெண்ணைத் தலைமேல் வைத்துத் தாங்கக் கூடியவர்கள்” என்று அம்மாவிடம் அபிப்பிராயம் கொடுத்த அதே அத்தையா இப்போது பேசுவது? எதற்காக இப்படி உள்ளொன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுகிறாள். நிஜமாக என் ஓரகத்தி அவ்வளவு பொல்லாதவளா? அவருக்கு நான் இளையாள் போல என்கிறாளே? அப்படியானால்... அவர் சீக்கிரமாக... நான்... சட்! எப்படி இருந்தால் என்ன? அவர் என் மீது அளவற்ற பிரியம் கொண்டிருக்கிறார். அது ஒன்றே எனக்குப் போதாதா? எப்பேர்ப்பட்ட குறைவும் மன நிறைவில் மறைந்து விடுமே! சந்தர்ப்பம் சரியில்லை என்று வந்த சுவடு தெரியாமலே நான் திரும்பி விட்டேன். ஆனால் களங்கமற்றிருந்த என் இருதய வானிலே ஒரு சிறு புள்ளி விழுந்து விட்டது. அத்தையின் அபிப்பிராயம் ஏற்கனவே அமிழ்ந்து கிடந்த அந்த அர்த்தமற்ற நம்பிக்கையைக் கிளப்பிவிட்டு என்னை உறுத்த ஆரம்பித்தது. குற்றங்கள் நம்மை அறியாமல் உள்ளே புதைந்து உணர முடியாமலே போவதற்குக் காரணம் அவைகளை அமுக்கி விடக் கூடியதாகச் சந்தோஷம் எழுப்பி விடுவதால் தான். என் புக்ககத்தாரின் மேற்படி குறைகள் நிஜமானவை தாமோ? ஏதோ உணர்ச்சி வசப்பட்ட புது ஆசையில் நான் அவைகளை நிறைவாகக் கருதலாம். நாள்பட்ட மெருகு அழிந்து போவதால் பல்லைக் காட்டும் முலாம் பூசப்பெற்ற பாண்டம்போல என் புது ஆசை மெருகும் அழியுமானால் குறை பெரிய மடுவாகக் காட்சியளிக்குமோ எனக்கு? தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சிகள், இடி, மின்னல், பாட்டு எல்லாம் சங்கிலித் தொடர் போல என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. நினைக்கவே பயம் கொடுத்த இவ்வேதனை கட்டி வைத்தாற் போன்ற அந்தச் சுழ்நிலையில் வளர்ந்து வளர்ந்து என்னை வருத்தியது. இரவு தூங்காமல் புரண்டு கொண்டிருந்த என்னை பக்கத்துப் பெஞ்சியில் வந்து படுத்துக் கொண்ட பாட்டி கூப்பிட்டாள். “ஏன் பாட்டி?” என்று கேட்ட நான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். “உன் அப்பா கடுதாசி போட்டிருக்கானாம்!” என்றாள் மெதுவாக. இதைச் சொல்லவா இந்த யோசனை? ஏன், வந்தவுடனேயே எனக்குச் சொல்லக் கூடாதா? “என்ன பாட்டி?” என்று ஆவலுடன் கேட்டேன். “உங்களாத்தில் உன்னைக் கொண்டு விடச் சொல்லி எழுதியிருக்கிறார்களாம்!” “என்னது?” என் நெஞ்சு ‘டப்டப்’பென்று அடித்துக் கொண்டது. “ஆமாண்டியம்மா, ஆமாம்! ஐந்நூறு ரூபாய்க்கு அடி போட்டிருக்கிறான் உன் அப்பா!” என்றாள் பாட்டி வேப்பங் காயைத் தின்று விட்டுத் துப்புவதுபோல். அப்பா இங்கே பணம் கேட்டு எழுதியிருக்கிறாரா? நான் புரியாமல் விழித்தேன். அவள், “புடவை, வேட்டி, பெட்டி, படுக்கைன்னு ரூபாய் அஞ்சு நூறுக்கு இங்கே எழுதியிருக்கானாம். கல்யாணத்துக்கேதான் வேண்டியது செய்தாளே. ஒருத்தரையே உருவி உருவிக் கேட்கணும்னு ஏன் புத்தி போகிறது? அப்படித்தான் ‘நறுக்’குனு நூறு ரூவாயிலே ஒரு புடவையை வாங்கி மங்கிலியப் பெண்டுகள் இட்டு, சபை நிற்கப் பாருவுக்குக் கொடுத்தாளா? எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. உன் அம்மாதான் எழுதச் சொன்னாள் என்றால் உன் அப்பாவுக்கு ஏன் இப்படி எழுதத் தோன்றுகிறது? இத்தனை வரதட்சிணை கொடுத்து, பி.ஏ. படிச்ச மாப்பிள்ளை பார்க்க வேண்டாமே? தன் விரலுக்குத் தக்கபடி வீங்கினால் போதுமே. குழந்தை மலை போலப் படுத்துக் கொண்டு விட்டாளே என்று அவாளுக்கு முகத்திலே ஈயாடலே. இப்பத்தான் பணத்துக்கு எழுதுவாளா?” என்று சரமாரியாகப் பொரிந்து தள்ளினாள். ஏற்கனவே அத்தையகத்து அந்தஸ்திற்கும் அகம்பாவத்திற்கும் முன் முதுமையின் தோலைப் போல் சுருங்கிப் போயிருந்த என் மனம். இப்போது அப்பா வேற எனக்குத் தேடித் தந்துவிட்ட அவமானத்தினால் கடுகிலும் கடுகாகப் போய்விட்டது போலிருந்தது. இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று தெரியாதோ? ஏன் இங்கு எழுதினார்? ஏதோ கல்யாண காலத்தில் நாலுபேருக்கு முன் சகஜமாக அளவளாவுவது போல காண்பித்துக் கொண்டால் அதையும் நிசம் என்ற நம்பி விடுகிறாரே இந்த அப்பாவி அப்பா! அம்மாவா எழுதச் சொல்லுவாள்? ஏற்கனவே தான் சமயம் வாய்த்த போது எல்லாம் பணக்காரத் தங்கை என்று குத்திக் காட்டுவாளே! இந்த ஐந்நூறு ரூபாய் எங்கும் கிடைக்காதா? இங்கு வந்து ஏன் முட்டிக் கொள்ள வேண்டும்? ஆனால் அப்பாவுந்தாம் என்ன செய்வார்? அவர் மீதில் என்ன தப்பு? ஐந்நூறு ரூபாய் இவர்களுக்குப் பெரிதா? இதோ ஹேமாவுக்குப் பணிவிடை செய்கிறாளே, அந்த நர்ஸுக்கு மட்டும் நாளைக்கு இருபது ரூபாய் என்று பேசிக் கொள்கிறார்களே! இன்னும் டாக்டர், மருந்து, என்று எத்தனையோ? ஆயிரம் ஆயிரமாக செலவழிக்கிறார்கள். அத்திம்பேருக்குத்தான் மாதம் ரண்டாயிர ரூபாய் போல் வரும் என்று கூறுகிறார்களே! ஐந்நூறு ரூபாய் கொடுக்க அப்பா என்ன அல்லா, அசலா? கூடப் பிறந்தவர்தாமே அத்தைக்கு? அப்படியாவது திராக்கிரகச் செலவுக்குக் கேட்கிறாரா? எனக்காக இந்த அற்பக் காசைக் கொடுப்பது இவர்களுக்குப் பிரமாதமில்லையே? அவர்களுக்கும் இந்தக் கடின சித்தம் வேண்டாம்; பாட்டிக்கும் இந்த ஏளனம் வேண்டாம். எப்படியாவது ஊருக்குப் போய் இவர்களுடைய மனப்பான்மையைத் தெளிவாக உடைத்து விட வேண்டும் போல் மனம் துடித்தது எனக்கு. அப்படித்தான் இருக்கும். பாட்டி இதெல்லாமா என்னிடமா பேசுவது? பெரியவர்கள் பாடு ஆயிரம் இருக்கும். இந்த நிஷ்டூரங்களை அம்மாவின் ஸ்தானத்தில் என்னை மதித்துக் கூறுவது அழகாகுமா? ‘ஐயோ பாவம்! சின்னச் சம்பளம். இரண்டு பெண்களுக்கு முதலிலேயே கல்யாணம் செய்து சளைத்து விட்டான். அவனுக்கு உதவி செய்யத்தான் வேண்டும்’ என்று இரக்க புத்தியும் அநுதாபமும் இந்தப் பாட்டிக்கு ஏன் தோன்றவில்லை? பெண் என்றாலே தாய்மார்களுக்கு அலாதி வாஞ்சை உண்டு என்று நான் கண்டிருக்கிறேன். அதிலும் அத்தை சாமானியப் பெண் இல்லையே! பாரபட்சம் அதனால் தான் மலையும் மடுவுமாக உருவெடுத்திருக்கிறது போலும்! இத்தகைய என் மனக்கிலேசங்களில் என்னைப் புக்ககத்தில் கொண்டு விடப் போகிறார்கள் என்ற நினைவு அமுங்கியே போய்விட்டது. ஐந்நூறு ரூபாய்ப் பிரச்னை இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வராமல் மலைபோல் என் முன் தோன்றிப் பயங்கரமாகக் காட்சி அளித்தது. ஈசுவரன் ஏன் இப்படிக் கடின புத்தியுடன் செல்வத்தையும் ஏழ்மையுடன் மக்களையும் படைக்க வேண்டும் என்று அநாதி காலம் தொட்டு மக்கள் ஆராய்ந்தும் விடை கண்டறியாத புதிருக்குள் தலையை விட்டுக் கொண்டு நான் குழம்பிப் போனேன். பெண் குரல் : முன்னுரை
1-1
1-2
1-3
1-4
1-5
1-6
2-1
2-2
2-3
2-4
2-5
2-6
3-1
3-2
3-3
3-4
3-5
3-6
4-1
4-2
4-3
4-4
4-5
4-6
முடிவுரை
|