முன்னுரை - பெண் குரல் - Penn Kural - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

மலர்

6

     அன்று வீடு திமிலோகப்பட்டது. கார்களின் சப்தமும் டாக்டர், நர்ஸ்களின் பாதரட்சை ஓசையும், காபி, வென்னீர் என்று சமையலறையில் எனக்கு வந்து குவிந்த உத்தரவுகளும், என் மாமியார் அடிக்கொரு தடவை மாடிக்கு ஏறிச் சென்றதும் அவசரத் தேவைக்கு வெளியே செல்வதற்காக என் கணவர் அன்று காரியாலயத்துக்குச் செல்லாமல் இருந்ததும், அந்த வீட்டுக்கே பட்டு முடிசூடா மன்னிதான் என்று விளக்கின. என்னதான் நல்லெண்ணங்கள் மூலம் நான் நிச்சலனமாக இருக்க முயன்றாலும், பலத்த மழைக்கும் புயலுக்கும் அறிகுறியாக அகலாமல் வந்து குவியும் கார் மேகங்களைப் போல் என் இருதயத்தே வந்து எல்லா உணர்ச்சிகளும் சூழ்ந்து கொண்டன. இளம் தம்பதிகள், துடிக்கும் ஆவலுடன் தனிமைக்கு ஏங்கி நிற்பார்கள் என்று ஏன் இந்த வீட்டில் யாருமே தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை? என் மாமியார் தான் ஆகட்டும், வாழ்ந்து சுக துக்கங்கள் அனுபவித்தவள் அல்லவா? என் மைத்துனருக்குத்தான் எங்கள் விஷயத்தில் கண் குருடாகி விட வேண்டுமா?

     நான் ஏழையாக இருக்கலாம். ஆபரணங்களும், பட்டாடைகளும் என்னை அலங்கரிக்காமல் இருக்கலாம். காரிலே உல்லாசச் சவாரி போகவும், இசை விருந்துகளை அனுபவிக்கவும், மின்சார விசிறியின் அடியில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்தவும் உரிமை அற்றவளாக இருக்கலாம். ஆனால் அன்பே உருக்கொண்ட கணவனைக் கைப்பிடித்திருக்கும் பெண் அல்லவா நான்? என்னிடம் உயிரையே வைத்திருப்பதாகத் தோன்றும் அவருடன் தோழமை பெற உரிமை உள்ளவன் அல்லவா நான்.

     விதை இல்லாவிட்டால் பூ ஏது, கனி ஏது? முதல் முதலாக இந்த வீட்டில் சகலமான பேர்களும் என்னை அளவற்ற சுவாதீனத்துடன் சுசீலா, சுசீலா என்று அழைத்துச் சர்வ சுவாதீனமாகக் கட்டளை இடுவது எதனால் வந்தது? அவரை நான் மணந்திருப்பதால் தானே? கணவனுடைய வீட்டிலே போய் அமைதியாக உழைப்பதுடன் திருப்தி அடைந்து விட வேண்டும் என்று பரம ஏழையாக இருக்கும் பெண்ணாக இருந்தால் கூட, ஏன் அங்கஹினம் அவலட்சணம் என்ற குறைபாடுகள் உள்ள பெண்ணாக இருந்தால் கூட எண்ண மாட்டாளோ! வெளியே செல்லக் கூடாது, எவருடனும் அளவளாவக் கூடாது, பிறந்த வீட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்பன போன்ற சுதந்தரங்களில் வேண்டுமானாலும் தடை விதித்து உரிமைகளைப் பறித்துக் கொள்ளட்டும். மணவாழ்வின் ஜீவநாடியான உரிமைக்குக் கூட இடம் இல்லாத வீட்டிலே நான் என்றென்றும் சலனம் இல்லாமல் எப்படி வாழ முடியும்?

     என் பேதமை எனக்கு நன்றாக விளங்குகிறது. எனக்கு இங்கே சகல சுதந்திரங்களும் இருக்கும், ஜகதுவைப் போல எவ்வித இன்னலுக்கும் ஆளாக வேண்டாம் என்று எண்ணினேனே, அது எத்தனை அறியாமை!

     உள்ளே வலுக்கும் புயலோடு நான் போராடிக் கொண்டிருந்தேன்.

     அவரோ, எப்போதும் போன்ற சாந்த முகத்துடன், இதழ்களிலே வழக்கம் போன்ற நகையுடன் குழந்தைகளுடன் சரளமாகப் பேசிக் கொண்டு நிச்சலனமாக வளைய வந்தார். இதைக் கண்ணுற்ற போது என்னுள்ளே புயலுக்கான எதிர்ப்புக் குறைந்து விடும் போல இருந்தது.

     அவரும் இது போன்ற மனநிலையில் இருக்க வேண்டியவர் தாமே? இப்போது என்னைப் பாதித்திருக்கும் சங்கடங்கள் அவரையும் பாதித்திருக்க வேண்டுமல்லவா? பின் அவற்றின் ரேகைகள் கூட அவரிடம் தென்படவில்லையே! என்னைப் பார்க்கும் போது கூடச் சஞ்சலமற்றுப் புன்னகை செய்கிறாரே!

     பொன்னொளியைப் பூசிக் கொண்டு விரிந்து பரந்திருக்கும் வானத்தில் இருள் தேவன் ஆட்சி புரிய வந்து விட்டானானால் சற்று முன்னால் ஜகஜ் ஜோதியாக மனத்தை மயக்கும்படி ரம்மியமாகத் தோன்றிய வானந்தானா என்று சம்சயிக்கும்படி பொன்னால் பூசப்பெற்ற ரேகை கூட இல்லாமல் அந்தகாரம் கப்பிக் கொண்டு விடும். அவர் அன்பின் அவதாரம். காவியங்கள் போற்றும் காதல் தெய்வம். அருங்குணக் குன்று என்றெல்லாம் போற்றியிருந்தேனே; கிடைத்தற்கரிய ஆதர்ச புருஷர் என்று உள்ளே பூரித்திருந்தேனே. அவை யாவும் உண்மைதானா, அல்லது புக்ககத்து வாழ்வைப்பற்றி நான் மனப்பால் குடித்திருந்ததைப் போல பேதமைக் கண்ணாடி பூண்டிருக்கும் என் கண்களின் தோற்றந்தானா? இந்தச் சந்தேகம் அவரிடம் நான் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கை என்ற கற்கோட்டையிலே சிறு நெகிழ்ச்சிக்கு இடமளித்து விட்டது போலப்பட்டது. எனக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதைப் போல. பிரமையோ என்னவோ, நான் எத்தனை முயன்றும் அவருடைய முதல் நாளைய அரவணைப்பு, நெஞ்சைத் தொட்ட கனிவுச் சொற்கள், எல்லாம் என் மனத்திரையில் தெளிவாக விழாமல் திறக்கப்பட்ட கதவுக்கு முன் காணும் ‘மாட்டினி’க் காட்சியைப் போல ஒளியிழந்து வெளிறித்தான் தோன்றின.

     உண்மையைச் சொல்லப் போனால் பெண் நாணத் திரைக்குள் இருப்பவள். ஊர்வலத்தின் போது என் கையை அழுத்தித் துணிச்சலுடன் என்னைப் பேச்சுக்கு இழுத்தவருக்கு இப்போது தாமாக முயன்றால் என்னுடன் தனிமையை ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? பெரியவர்கள் மனதிற்கு ஏற்ப இணைந்து தான் போக வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு வரையறை வேண்டாமா? இவ்வளவு தூரம் அடிபணிந்து போகும் பயங்கொள்ளியா அவர்? மரியாதை என்றே வைத்துக் கொண்டாலும் விட்டுக் கொடுப்பதற்கு ஓர் எல்லையே இல்லையா? அப்படி என்றால் என்னிடம் அவருக்குக் கரை காணாத அன்பு இருக்கிறதென்பதற்கு அத்தாட்சியே காணவில்லையே? அவர் மனம் முழுவதும் அவர் சொல்லுவது போல என் மீதுள்ள பிரேமை வியாபித்திருக்குமானால் இத்தகைய அர்த்தமற்ற மரியாதைக்கு இடம் விட்டிருக்குமா?

     கணவன் வீடு இந்திரலோகமாக இருக்கும் என்ற என் மனக்கோட்டை மண்ணோடு மண்ணாகப் போனதில் எனக்கு ஏற்பட்ட சங்கடம் என்றால் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. வற்றாத ஜீவநதி போல என்னிடம் பெருக்கெடுத்து வரக்கூடியது அவர் பிரேமை என்று நான் எண்ணியிருப்பது கானல் நீராக... இருந்துவிட்டால்... இருந்துவிட்டால்...?

     அம்மம்மா? என் மனம் தாளாது. ஆமாம், அதன் ஜீவநாடி அறுந்து விட்டது போல விண்டு விரிந்தாடும். மண்டை உடைந்தாலும் பொறுக்கலாம், மனம் உடைந்தால் பொறுக்க முடியாது.

     அன்று பகல் பட்டுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மழை ஓய்ந்த பூமியைப் போல வீட்டின் அமளி எல்லாம் மாலை அடங்கியிருந்தது. கல்லூரியிலிருந்து வந்து விட்ட லீலா, என்னிடம் அந்தரங்கமாகப் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்ததைப் போலச் சமையலறை மேடை மீது வந்து உட்கார்ந்தாள். யாருமே அப்போது அங்கு இருக்கவில்லை. நான் என் கை வேலையிலிருந்து கவனத்தை அவள் மீது திருப்பினேன். எத்தனை தான் எனக்குச் சங்கடம் இருக்கட்டும். வேதனை இருக்கட்டும். அவள் முகத்தைக் கண்டவுடன் அவ்வளவும் பஞ்சாய்ப் பறந்துவிடும். உள்ளங்கள் இணைந்து தோழமை பூண்டிருப்பதன் இன்பம் இதுதான் போலும்.

     “என்ன, மூர்த்தியை அப்புறம் பார்த்தீர்களா? என்ன பதில் கொடுத்தீர்கள்? எனக்கு ஒன்றுமே தெரிவிக்கவில்லையே! இன்னொரு தரம் அவர் இம்மாதிரி கடிதம் எழுதி அசட்டுத்தனம் செய்து வைக்கப் போகிறார்! அன்றே தப்பியது தம்பிரான் புண்ணியம். மன்னியாக இருந்திருந்தால், எனக்கு அப்பா எழுதும் கடிதத்தையே படித்து விட்டுக் கொடுப்பவர். உங்களுக்கு வரும் கடிதத்தை அவ்வளவு லகுவில் பார்க்காமல் கொடுத்திருக்க மாட்டார்?” என்று நான் மெதுவாக, பட்டுவின் தகாத செய்கையை அவளுக்குத் தெரிய வைத்தேன்.

     “சிலர் தெரிந்து வேண்டுமென்றே தகாத காரியம் செய்கிறார்கள். இதிலெல்லாம் நீ பொறுத்துப் போவது சரியல்ல, சுசீ! இன்னொரு முறை அப்படிச் செய்தால் முகத்தில் அடித்தாற் போல், ‘என்ன விசேசம், மன்னீ? நீங்களே சொல்லி விடுங்கள்’ என்று கேள். அக்காவின் சர்வாதிகார மனப்பான்மை எனக்கு ஒவ்வொரு சமயத்தில் எரிச்சலை மூட்டுகிறது. பயப்பட வேண்டும் என்றால் அதற்கு வரம்பு இல்லையா? இதிலெல்லாம் உனக்குத் துணிச்சலே போதவில்லை” என்று என்னைக் கோபித்து விட்டு அவள், “போன வாரம் ராமு, மூர்த்தியைப் பார்த்தானாமே, சொன்னானா?” என்று கேட்டாள்.

     “ஊஹூம்!” என்று நான் தலையை ஆட்டினேன்.

     “ஹோட்டல் ஒன்றில் பார்த்தானாம். ‘சுசீலாவுக்கு நீ உறவு என்றே தெரியாதே! அடிக்கடி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிரு’ என்று அழைத்தானாம்” என்றாள்.

     “நீங்கள் அழைக்கத் தேவையில்லை. என்னை அங்கே இழுக்கக் கூடிய காந்தம் இருக்கிறது என்றாராக்கும்!”

     “ஏய்! சுசீ?” என்று கோபக் குரலில் அடக்குவது போல் விளித்து அவள், “அவர் இங்கு வருகிறார் என்றாலே ஏனோ எனக்குப் பயமாக இருக்கிறது. நாலைந்து நாட்களுக்கு முன்பு நான் காலேஜ் முடிந்து வருகையில் கடற்கரையில் என்னைச் சந்தித்தார். இன்று கூட அங்கே பார்ப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் நான் காத்துப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. என்ன அசௌகரியமோ என்பது ஒரு புறம் இருக்க, இங்கு எல்லோருக்கும் தெரிந்து விட்டால் என்ன நேருமோ என்று வேறு திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்றாள்.

     “ஓகோ! அதுதான் இப்போதெல்லாம் நீங்கள் வீடு வர இருட்டும் சமயம் ஆகி விடுகிறதாக்கும்! அன்று, ‘இப்போதுதான் காலேஜிலிருந்து வருகிறாயா, லீலா!’ என்று மைத்துனர் கேட்டதற்கு, ‘ஆமாம், காலேஜிலே ஏதோ மீட்டிங்’ என்று புளுகினீர்களே, நிஜமாகவே அலுத்துக் கொள்வது போல் அப்படி நடித்தீர்களே!” என்று நான் வியப்பும் குறும்பும் கலந்த பார்வையில் அவளை நோக்கினேன்.

     “உஷ்! வாயை மூடிக் கொள், சுசீ! ராமு வருகிறான்” என்று என்னை அவள் எச்சரித்தாள்.

     “என்ன, இங்கே அந்தரங்க மந்திராலோசனை. பூவுடன் சேர்ந்து நாரும் மணம் பெற்ற கதையாக! லீலாவை முன்பெல்லாம் இந்தச் சமையலறைக்குள் பார்க்கவே முடியாது. இப்போது என்னடா என்றால் அடுப்பங்கறையிலேயே ஐக்கியமாகிக் கிடக்கிறாளே? பேசு பேசு என்று பேச உங்களுக்கு அப்படி என்னதான் சமாசாரம் இருக்கிறதோ, தெரியவில்லையே!” என்று அவர் நகைத்தார்.

     “பார்த்துக் கொள், சுசீ! நீ பூவாம், நான் நாராம், நீதான் புது மனைவியாயிற்றே என்று சற்றைக்கொருதரம் வந்து கவனிக்காமல் இருக்கிறாயே நானாவது வந்து பார்த்து உற்சாகப்படுத்தலாம் என்று வந்தேன். நல்லதுக்குக் காலமில்லை!” என்று பதிலுக்கு நகைத்தாள் லீலா.

     “சுசீலா, சொல்ல மறந்துவிட்டேனே. இப்போதுதான் ஸென்ட்ரல் அருகில் மூர்த்தியைப் பார்த்தேன். அவன் தங்கை இறந்து விட்டாளாம். ஊருக்குப் போகிறான். பாவம்! பெண் பிள்ளை மாதிரி அழுகிறான். ஒரே தங்கையாம்!” என்று பரபரப்புடன் சமாசாரத்தை அவிழ்த்தார் அவர் எனக்குத் துணுக்குற்றது.

     அவளைத்தானே அப்போது பிரசவத்துக்கு அழைத்துச் சென்றான்? “அடபாவமே! பிரசவித்தா இறந்து போனாள்?”

     “அப்படித்தான் போல் இருக்கிறது. ஐந்து மணிக்குத்தான் தந்தி கிடைத்ததாம். உடனேயே மெயிலில் கிளம்புகிறான். அவனைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. அவன் தகப்பனார் வேறு நாலைந்து மாதங்களாகப் பாரிச வாயுவால் படுக்கையில் இருக்கிறாராமே; அதையும் சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டான்.”

     லீலா கல்லாகச் சமைந்து போயிருந்தாள்.

     எனக்கோ செய்தி கேட்டதிலிருந்து எதுவுமே ஓடவில்லை. அந்தப் பெண்ணை நான் பார்த்தது கூட இல்லை. எந்த விதத்திலும் எனக்கு ஒட்டு உறவு என்று பந்தமும் இல்லை. ஆனால் மூர்த்தி அவளைக் காணாமல் இருக்கும் போதே நொடிக்கு நூறு முறை, ‘மஞ்சு, மஞ்சு’ என்று அன்று சினிமாப் பார்க்கும் போது பேசியபோது அண்ணன் தங்கை என்ற பாசத்தின் மென்மை வெளிப்பட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது எனக்கு. என்ன இருந்தாலும் சகோதர பாசம் அலாதியான மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதுதான். ‘ஓர் அண்ணா எனக்கும் இப்படி இருந்தால்?’ என்று கூட நான் எண்ணிக் கொண்டேன். அந்த மஞ்சு இறந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்கு அதிர்ச்சியூட்டியதில் வியப்பு ஏதுமில்லையே? அதனால் தான் அவன் லீலாவிடம் கூறியிருந்தபடி அவளைச் சந்திக்கவில்லை.

     அன்றிரவு லீலாவின் செய்கை என் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைக்கக் கூடிய விதமாக இருந்து விட்டது. முன்னாள் போல அவள் எழுதிக் கொண்டிருக்கையில் வேலை முடிந்து வந்த நான் அலுப்புத் தாங்காமல் படுத்து விட்டேன். சற்றுத்தான் அசந்திருப்பேன். நான் விழித்துக் கொண்ட போது விளக்கு அணைந்திருந்தது. அறையிலே லீலா படுத்திருக்கவில்லை. அவள் கீழே படுக்கையைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறாள் என்பது எனக்கு முன்னே தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஏதோ அருவருக்கத்தக்க செய்கை செய்து விட்டவள் போல மனத்தில் வெறுப்பு, கசப்பைப் பரப்பியது. மணி என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பத்தரைதான் ஆகியிருந்தது. விளக்கை அணைத்து விட்டு அவள் சற்று முன் தான் போயிருக்க வேண்டும். சே! என்ன வெட்கக் கேடு? இத்தனையும் அவருடைய அர்த்தமற்ற மரியாதையால் வந்ததுதானே? அவரே அப்படிச் சலனமற்று இருக்கையில் என் மாமியார் என் ஏற்பாடு என்று என்னைக் கேவலமாக நினைக்கமாட்டாளா? கோபமும் வெறுப்பும் அளவுக்கு மேலிட்டன. அந்தப் பழைய நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் நிகழக் கூடியவைகளை முன்கூட்டியே எனக்கு உணர்த்திய துர்ச்சகுனங்கள், என் மனத்தின் மேல் பரப்பில் மிதந்தன. கசப்பை விழுங்குவது போல எல்லாவற்றையும் விழுங்கியவாறு நான் தூங்க முயன்றேன்.

     வசந்தத்தின் தென்றல் எங்கும் வாசம் வீசியது. சுற்று முற்றும் என் கண்களுக்குத் தென்பட்ட இடமெல்லாம் வண்ண வண்ண மலர்களைத் தாங்கி நின்ர செடிகளும் கொடிகளும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பச்சை இலைகளுடன் மிளிர்ந்த மரங்கள் ஆயிரமாயிரம் உயிர்த் துளிகள் பச்சை உருவத்தில் பூமிதேவியின் மடியிலிருந்து எழுந்து விட்டன போல் தோன்றின. புறாக்கள் தகதகவென்று வெளுப்பும் கறுப்புமாகப் பிரகாசிக்கும்படி இப்படியும் அப்படியும் வெண் சிறகுகளை வீசிக் கொண்டு வான வீதியிலே பறந்து சென்றன. பசும்புல் தரை - என்னைப் போதை வெறி கொள்ளும்படி செய்த புல்தரை - நான் என்றுமே பார்த்திராத காட்சியாகத் தோன்றியது. இயற்கை அன்னையின் எழிலிலே ஒன்றிப் போன நான் இன்னும் அதற்கு உறு துணையாகி இன்பம் பெற மனம் போனபடி பாட ஆரம்பித்தேன். ஆனால், ஏனோ மனத்தின் களிப்பிலிருந்து எழும்பிய கீதம் எனக்குச் சோக ரஸமாக ஒலிக்கிறது? என் தீங்குரலிலிருந்து மகிழ்ச்சி பொங்கும் நாதமே எழும்பவில்லையே!

     பாடிவிட்டு நான் குலுங்க குலுங்க அழுதேன். எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது.

     “சுசீலா...!” கண்ணீரிடையே நான் நிமிர்ந்து பார்த்தேன்.

     ஆகா! குரலில் தான் எத்தனை அன்பு, எத்தனை இதம்!

     “இங்கே வா அம்மா சுசீலா!” என்று அன்பே உருவெடுத்த இரு கரங்கள் என்னை அழைத்தன.

     குழைந்து போல நான், நீட்டிய கரங்கள் முன்பு என்னை மறந்து ஓடி விடப் போனேன்.

     ‘சே! என்ன பிரமை? யாரையும் காணவில்லைஎயெ? அந்தக் கைகள் எங்கே?’ நான் கண்களைத் துடைத்துக் கொண்டு நெஞ்சம் துடிக்கப் பார்த்தேன்.

     ஆ! இது என்ன? மின்னல் ஒன்று கண்களை வெட்டியது. கார் மேகங்கள் காது செவிபடும்படி கர்ஜித்தன. பார்க்க அதிபயங்கரமாக நெருப்புக் கண்களும் கோரப்பற்களுமாக ஓர் உருவம் எங்களூர்க் குளத்தங்கரைப் பிடாரி கோயிலுக்கருகில் நிற்கும் கறுப்பண்ணனின் சிலையைப் போன்ற நிஜ உருவம் ‘ஹஹ்ஹஹஹா!’ என்று இடி முழக்கக் குரலில் நகைத்தது. கண்களை இறுக மூடிக் கொண்டு நான், “நீ யார்? என்னை அன்புடன் அழைத்தவர் எங்கே? அந்தக் கைகள் எங்கே?” என்று கத்தினேன்.

     “நான் தான்... நான் தான்...” என்ரு மீண்டும் பேய்ச் சிரிப்பு என் செவிகளில் பாய்ந்தது. நான் கிரீச்சிட்டேன்.

     உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரையில் வேர்த்துக் கொட்டியது. என் இதழ்களில் ஏதோ சில்லென்று பட்டது. உடல் கிடுகிடென்று நடுங்கியது.

     திடுக்கிட்டவளாக நான் விழித்துக் கொண்டேன்.

     “பயந்து போனாயா சுசீலா?” என்று என் கன்னத்தை ஆதரவுடன் வருடினார் என் கணவர்.

     ‘இது இரவு. நான் சற்று முன் கண்டது கனவு. கதவைத் திறந்து கொண்டு அவர் வந்திருக்கிறார்’ என்று நான் அறியச் சில விநாடிகள் சென்றன.

     அந்தக் கனவுதான்... அம்மம்மா! எத்தனை பயங்கரம்! அந்த அன்புக் கரங்கள் உண்மையில் அன்புக் கரங்கள் அல்ல.

     என்னுடைய பலம் அவ்வளவையும் பிரயோகிப்பது போல அவர் கையை என் கன்னத்திலிருந்து அகற்றித் தூரத் தள்ளினேன்.

     “சுசீ! நான் தான் சுசீ... இதோ பார்” என்று அவர் தம் முகத்தை எனக்குச் சமீபமாகக் கொணர்ந்தார்.

     என் வெறுப்பு, கோபமாக உருவெடுத்தது. நாகப் பாம்பு போல் சீறியவளாக அவர் தோளைப் பிடித்துத் தள்ளினேன்.

     “என்னம்மா சுசீலா? தூக்கக் கலக்கமா?” என்று மேலே தொங்கிய மங்கலான விளக்கொளியில் புன்னகை செய்த அவர் என்னை மீண்டும் தொட வந்தார். “சீ! என்னைத் தொடாதீர்கள்! ஆமாம். இவ்வளவு கீழ்த்தரமான மனசு படைத்த நீங்கள் என்னைத் தொட அருகதை அற்றவர்! உங்கள் ஆசைக்குப் பலியாக மாட்டேன்! இப்போதே வெளியே போகிறார்களா... இல்லை நான்...” என்ற ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் படபடத்தேன்.

     “சுசீலா...!” என்ற அவர் குரல் விழிகள் எல்லாம் அசைவற்றுக் கெஞ்சின போல் இருந்தன.

     என்னுடைய அப்போதைய மனநிலைக்கு அவை பின்னும் ஆத்திரமூட்டின.

     “போகிறீர்களா, இல்லையா?” என்று எழுந்து நான் வெறி கொண்டவளைப் போன்று அவர் கைகளைப் பிடித்து வெளியேற்றப் போனேன். அவராகவே தலையைக் குனிந்து கொண்டு வெளியே போய்விட்டார். நான் மடாரென்று கதவைச் சாத்திக் கொண்டேன். ‘ஒரு பெண்ணுக்குள்ள தைரியங்கூட இல்லாத பயங்கொள்ளி அவர்! காதலுக்கு மதிப்புக் கொடுப்பவர். பெண்மையைப் போற்றுபவர் என்று நான் மனப்பால் குடித்தது அத்தனையும் கனவுதான். பிறர் தயவில் அடிமையாக உலவும் கோழை அவர்!’ என் நெஞ்சம் துடித்தது. உதடுகள் படபடத்தன. கண்கள் பொங்கு மாங் கடலைப் போலக் கண்ணீரைப் பெருக்கின.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247