(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

தளிர்

4

     இரவில் சரியாகத் தூங்காததனாலோ என்னவோ, பொழுது விடிந்ததும் தலை ஒரே கனமாகக் கனத்தது. உள்ளத்தில் குடைந்த வேதனையின் பிரதிபலிப்புப் போல உடம்பெல்லாம் குடைச்சலாக இருந்தது. வெகுநேரம் எழுந்திருக்காமல் படுத்துக் கொண்டு இருந்தேன். குளித்து விட்டுப் பாட்டி ஈரப்புடவையை உலர்த்துவதற்காகக் கொடிக்கோல் சகிதம் வந்தாள். “ஏண்டி சுசீலா, இன்னும் எழுந்திருக்க வேளையாகவில்லையா? புக்ககம் போகும் பெண் விடிந்து ஏழு மணி வரையுமா படுத்துக் கொண்டிருப்பாள்?” என்று கடிந்து கொண்டாள்.

     அவள் கடுமையினால் கண்களிலே நீர் நிறைந்து விட்டது. பழக்கமுள்ள அம்மா எத்தனை கடிந்தாலும் எனக்கு உறைக்காது. பாட்டிதான் என்றாலும் என் மனத்தை விட்டுக் காத தூரத்துக்கு அப்பால் இருக்கிறவளாயிற்றே! பழக்கம் இல்லாத இடத்தில், அன்பு செய்ய யாரும் இல்லாத இடத்தில் வந்து முள்வேலிக்குள் அகப்பட்டுக் கொள்வது போல அகப்பட்டுக் கொண்டோமோ என்று வேதனை நெஞ்சை வந்து மறித்தது.

     “இல்லை பாட்டி, தலையைப் பாறாங்கல்லாகக் கனக்கிறது. உடம்பெல்லாம் வலிக்கிறது” என்றேன் மெதுவாக.

     “அது வாயை விட்டுச் சொன்னால் தானே தெரியும்? எழுந்து வா. குளிக்க வேண்டாம். சுக்குக் கஷாயம் போட்டுத் தருகிறேன்” என்றாள் அருமந்தப் பாட்டி.

     ஹேமா அன்று தலைவலி என்று படுத்துக் கொண்டது, என் ஞாபகத்தில் வராதே என்று நெட்டித் தள்ளியும் கேட்காமல் வந்தது. சே சே! அவள் யார், நான் யார்? ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கும் செல்வச் சீமானின் அருமைப் புதல்வியாகிய அவள் எங்கே? கேவலம் ஐநூறு ரூவாய்க்குத் தாளம் போடும் ஏழை குமாஸ்தாவுக்கு வேண்டாம் என்று சொல்லும்படியாக மூன்றாம் பெண்ணாகப் பிறந்த நான் எங்கே? இந்தச் சுக்குக் கஷாயமே பெரிதாயிற்றே!

     ஊருக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை என்னை உந்தித் தள்ளியது. கைகளையும் காலையும் நீட்டி முறித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்த நான், “என்னை ஊரிலே யார் கொண்டு போய் விடுவா?” என்று கேட்டேன்.

     “ஏன்? இங்கே முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கா? ஊரிலே என்ன வச்சிருக்கு? மெதுவாகப் போனால் போச்சு” என்று அவள் முடித்து விட்டாள்.

     ‘போல் என்ன? முள்ளின் மேல் தான் இருக்கிறேன்’ என்று கூறிவிட வாய் துடித்தது. ஆனால் பேசாமல் படுக்கையைச் சுற்றி வைத்துவிட்டுக் கீழே இறங்கிச் சென்றேன். உடம்பு கணகணவென்று இருப்பது போல் வேறு உணர்ந்தேன்.

     “ஹேமாவைப் போல நான் இங்கே படுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வேன்?”

     என்னைப் பயம் பற்றியது. ஊடே இந்த நினைவு மனத்திலே வந்தது.

     அன்று ஒரு கணம் மயங்கி விழுந்ததற்கு அவர் அந்தப் பாடு பட்டாரே; இப்போது நான் இருக்கும் நிலை தெரிந்தால்...? இந்த அத்தையகத்தை இனிமேல் ஆயுளிலும் எட்டிப் பார்க்கக் கூடாது என்று உத்தரவு போட்டாலும் போடுவார்!

     அச்சமும் கவலையும் சூழ நான் பாட்டி கொடுத்த சுக்குக் கஷாயத்தைக் குடித்து விட்டு மாடிக்கு வந்த சமயம், அத்தை ஓர் இளைஞனுடன் வராந்தாவில் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

     “இனிமேல் பயம் இல்லை என்று டாக்டர் சொல்கிறார். இனிமேல் ஜாக்கிரதையாக அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நானும் ஊரிலிருந்து வந்த நாட்களாக அங்கே வந்து எட்டிப் பார்க்க வேணும், பார்க்க வேணும் என்று குட்டிக்கரணம் போட்டுப் பார்க்கிறேன். எங்கே முடிகிறது? நாளைக்கு நீதான் மஞ்சுவைப் போய் அழைத்து வரப் போகிறாயாக்கும்? அப்பா உடம்பு எப்படி இருக்கிறது? அம்மாவுக்குச் சாதாரண ஜுரந்தானே?” என்று அத்தை விசாரித்தாள்.

     “அப்படித்தான் டாக்டர் சொல்கிறார். அப்பா உடம்புக்குப் புதிதாக என்ன வந்திருக்கிறது. அதே நிலைதான். ஊரிலிருந்து மாமா பெண் வந்தாளே, அவளுக்கு இருமல். அவள் கைக்குழந்தைக்கு மாந்தம். அதை ஏன் கேட்கிறீர்கள், மாமி? வீடே ஆஸ்பத்திரியாக இருக்கிறது இப்போது. சிவனேயென்று நான் டாக்டருக்காவது படித்திருந்தால் லாபமாக இருந்திருக்கும். இன்னும் மஞ்சு வேறு வந்துவிட்டால் கேட்க வேண்டாம். ஏற்கனவே துர்ப்பலம். அதிலும் இப்போது கர்ப்பிணி” என்று சிரித்துக் கொண்டே கூறிய அவன் பார்வை என் மீது பட்டு விட்டது.

     “இது யார் மாமி?” என்று நான் சென்ற பிறகு விசாரிக்காமல் நேரிடையாகவே அவன் கேட்டது வெகுளியான உள்ளத்தை எனக்கு அறிவித்தது.

     “இவள் தான் சுசீலா. இவளுக்குத்தான் கல்யாணம் நடந்தது” என்றாள் அத்தை.

     “ஓகோ! இவள் தான் கல்யாணப் பெண்ணா? பார்க்க ஹேமாவை விடச் சின்னவளாக இருக்கிறாளே; அதற்குள்ளாகவா கல்யாணம்? மாப்பிள்ளை என்ன பண்ணுகிறார்?” என்று அவன் விசாரித்த போது எனக்கு வெட்கமாக இருந்தது. நேருக்கு நேர் ஓர் இளைஞன் என்னைப் பற்றிக் கேட்பது இதுதான் முதல் தடவை.

     “சின்னவள் என்ன? வயசு பதினாறு ஆகிறது. ஹேமா பார்க்கச் சற்றுத் தாட்டியாக இருக்கிறாளே ஒழிய, அவளை விட இவள் தான் பெரியவள். மாப்பிள்ளை பட்டணத்தில் தான் வேலையாக இருக்கிறான்” என்று பதிலளித்தாள் அத்தை.

     அவன் பின்னும், “இவள் உங்களுடன் வந்தாளாக்கும்! பாவம் ஹேமா படுத்துக் கொண்டு விட்டாளே; இவளுக்கு எப்படி போது போகிறது? ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தாளோ?” என்று தூண்டித் துளைத்து விசாரித்தது, எனக்கு அவன் யாரென்று அறியும் ஆவலை மூட்டியது. அங்கு வந்து நான் ஒரு மாதத்திற்கு மேலாகியும் யாருமே என்னைப் பற்றி நினைக்காததை, அப்போதுதான் என்னைக் கவனித்தவன், ஒரு நொடிக்குள் இவளுக்கு எப்படிப் போது போகிறதென்று சரியாகக் கேட்டானே! இங்கு யாருக்கும் தோன்றாததை அறிந்து விட்ட இவன் யாராக இருக்கும்? என்று நான் வியந்தேன்.

     “அவள் வந்த வேளையேதான் சரியாக இல்லையே! இத்தனை களேபரமாக இருக்கிறதே! ஓரிடத்துக்கும் இவளை அழைத்துப் போகவில்லை. நாளைக்கு மஞ்சுவை அழைத்துக் கொண்டு வந்து விட்ட பிறகு தான் நீ பட்டணம் போகிறாயாக்கும்” என்று அத்தை சமத்காரமாகப் பேச்சை மாற்றி விட்டாள்.

     “ஆமாம், நாளையே கிளம்பிப் போய் அவளை அழைத்துக் கொண்டு இங்கே விட்டுவிட்டு மறுபடியும் நான் புறப்பட வேண்டும். காலேஜ் திறந்து விடுகிறது. வெங்கிட்டு இல்லையாக்கும்! நான் வரட்டுமா மாமி?” என்று அவன் கிளம்பலானான்.

     “போகிறாயா? மஞ்சு வந்த பிறகு முடிந்தால் வந்து விட்டுப் போ. இரேன், சாப்பிட்டுவிட்டுப் போயேன்” என்று அத்தை உபசாரம் செய்தாள்.

     “இல்லை, இல்லை. எனக்குக் கொள்ளை வேலை கிடக்கிறத். இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவதற்கும் இல்லை. நான் வருகிறேன்” என்று கைபிடிச்சுவர் ஓரமாக நின்ற என்னைப் பார்த்துக் கூட அவன் விடை பெற்றுக் கொண்டான். அவனைத் தொடர்ந்து அத்தையும் கீழே சென்றாள். நான் வராந்தாவிலிருந்து அவன் வாயிலில் வந்து சைக்கிளில் ஏறிச் சென்றதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அவன் யார் என்று அத்தையிடம் கேட்க எனக்குத் துணிவு வரவில்லை. அத்தையை ‘அம்மாமி’ என்று அழைத்தானே; ஹேமாவினுடைய அப்பா வழியில் சொந்தமாக இருக்கலாம்.

     மெள்ள மெள்ள எனக்கு நினைவு வந்தது. ஹேமாவுக்கு அத்தை பிள்ளை இவனாகத்தான் இருக்க வேண்டும். மகாராஜா காலேஜில் புரொபஸராக இருப்பவர் இவன் தந்தையாகத்தான் இருக்க வேண்டும். அம்மா ஒருமுறை பேச்சுவாக்கில் அப்பாவிடம் கூறியது கூட என் ஞாபகத்திற்கு வந்தது. “உங்கள் தங்கை யகத்துக்காரருக்கு உடன் பிறந்தவள் உண்டே, அவளுக்குப் பிள்ளை இருக்கிறான். அவா மனசு வச்சா நம் சுசீலாவைப் பண்ணிக் கொள்ளக் கூடாதா? அவளுக்கு என்ன, அழகு படிப்பு எதில் குறைவு? எல்லாம் பணத்தில் மறைந்து கிடக்கு. அப்படி ஒன்றும் அது எட்ட முடியாத சம்பந்தம் இல்லை. சொத்து, சுதந்திரம் ஒன்றும் கிடையாது. அவர் வேலையுடன் சரி. அவர்கள் பண்ணிக் கொள்கிறேன் என்றாலும் உங்கள் தங்கையும் அம்மாவும் முட்டுக்கட்டை போடுவார்கள்” என்று அவள் குறிப்பிட்டது இவனாகத்தான் இருக்க வேண்டும். “சின்னவளாக இருக்கிறாளே? அதற்குள்ளா கல்யாணம்?” என்று அவன் கேட்டதை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வந்தது. பார்ப்பதற்கு நான் அப்படியா இருக்கிறேன்?

     தொடர்ந்து அத்தை முதல் நாள், “இத்தனை வயசா வித்தியாசம்? மாப்பிள்ளைக்கு முப்பது வயது இருக்கும் கிட்டத்தட்ட” என்று கொடுத்த அபிப்பிராயம் ஏனோ என் நெஞ்சில் வந்து குறுக்கிட்டது.

     ஹாலின் ஒரு புறமாக இருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் என் உருவம் தெரிந்தது. அவன் கூறியது உண்மைதானா என்று ஆராயும் பொருட்டோ என்னவோ அதையே பார்த்துக் கொண்டு நின்றேன். உண்மையில் நான் அப்போது பூரணப் பொலிவுடன் விளங்கினேன் என்று சொல்ல வேண்டும். நானே என்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளவில்லை. கதைகளிலே வரும் கதாநாயகி போல நீண்ட கூந்தல், பளபளத்த சிவந்த மேனி, அகன்ற கருவிழிகள் எல்லாவற்றிலும் என் முற்றாத இளமை நன்றாகத் தெரிந்தது. நிலைக்கண்ணாடியில் என் உருவத்தில் ஆழ்ந்திருந்த நான், மனக் கண்ணாடியிலுள்ள என் கணவரிடம் எப்படிப் போனேனோ?

     முதல் முதலாக அவர் என்னைப் பார்க்க வந்த போது நான் கண்ட அவர் உருவத்துக்கும், பின் கண்ட காசி யாத்திரைக் கோலத்திற்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருந்தன போல் எனக்குத் தோன்றியது. உண்மையைக் கூறப் போனால் அந்த இரு தோற்றங்களிலும் அவர் உருவம் என் மனத்தில் பதியவே இல்லை. ஆனால் ஊர்வலத்தின் போது நான் கண்ட அவர் கோலம் என்னுள் அழியாமல் உறைந்து விட்டது. அந்த மேற்கத்திய உடையில் அவர் எனக்கு அதிக உயரமுள்ளவராகக் காட்சி அளித்தார். முன் நெற்றியை மட்டும் மறைத்துக் கொண்டு இருமருங்கிலும் சற்று உள்ளே தள்ளிய கிராப்பு, அடர்ந்த புருவங்களுக்குக் கீழே கருமை பாயாத பெரிய விழிகள், அளந்து பிடித்தாற் போன்ற கூரான நாசி, சற்றே தடித்த உதடுகள், வளைவாக இரட்டை மோவாயில் வந்து முடியும் முகவாட்டம் என்றெல்லாம் என் உள்ளம் ஒவ்வொன்றாக ஆராய்ச்சி செய்தது. எப்படியும் அவரைப் பார்த்தால் எனக்குப் பொருத்தம் இல்லாதவராக மதிக்க முடியாது. நாலு பேர் நாலு விதமாகத் தான் அபிப்பிராயம் கொடுப்பார்கள். யார் என்ன சொன்னால் என்ன? அவருக்கு என்னைப் பிடித்து விட்டது. எனக்கு... எனக்கு மட்டும் என்ன? இப்போது நாங்கள் இருவரும் வாழ்வு முழுவதும் எக்காரணம் கொண்டும் பிரிய முடியாதபடி புனித ஒப்பந்தமாகிய மணமுடிப்பில் பிணைக்கப்பட்டு விட்டோம். இனிமேல் அம்மாதிரி நினைப்பது தவறு; நினைப்பது பாவமுங்கூட!

     எத்தனை நேரம் இவ்விதச் சிந்தனைகளில் ஒன்றிப் போயிருந்தேனோ? ஒரு நாளும் இல்லாத திருநாளாக அத்தை என்னை அழைத்துக் கொண்டே வந்தவள், “ஊருக்குப் போக வேண்டும் என்று சொன்னாயாமே? பாட்டி சொல்லுகிறாளே” என்று கேட்டாள்.

     “ஆமாம், நானும் வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகவில்லையா?” என்றேன். அவள் குரலில் தோன்றிய பாவம் என்னை ஊருக்கு அனுப்புவதில் இஷ்டம் இருப்பதாக எனக்குத் தொனித்தது. எனக்கு அது சுதந்திர உணர்ச்சியின் மகிழ்ச்சியை அளித்தது.

     “இல்லை, போகிறதானால், யார் கொண்டு விட இருக்கிறார்கள் என்று பார்த்தேன். பாட்டியை இப்போது அனுப்புவதானால் சிரமமாகிவிடும். நாளைக்கு மூர்த்தி அந்தப் பக்கந்தான் போகிறான். உன்னை ஊரிலே கொண்டு விடச் சொன்னால் தங்கமாக விட்டுவிடுவான். நாகப்பட்டினம் நாலைஞ்சு ஸ்டேஷன் தானே அப்புறம்? அண்ணாவுக்குக் கடிதம் போட்டால் வந்து அழைத்துப் போகிறான்” என்று இழுத்தாள் அத்தை.

     இறக்கை கட்டிக் கொண்டாவது ஊரில் போய்க் குதித்து விட வேண்டும் என்று ஆவலுற்றுத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த நான் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுவேனா? ஏற்கனவே துணைக்கு வர யாரும் இல்லை என்ற பீடிகையை வேறு அத்தை போட்டு விட்டாள். அப்புறம் எப்போது நேருமோ? அதுவரை சிறைக் கைதி போல இங்கேயே எப்படி இருப்பது?

     “அப்படியானால் நான் நாளைக்கே போகின்றேன் அத்தை. ஊருக்கு இன்றைக்கு ஒரு கடிதம் போட்டு விட்டால் நாளைக்குப் போய்ச் சேர்ந்து விடும். அப்பா ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போய்விடுவார்” என்றேன் ஆவல் ததும்ப.

     “நிஜந்தானா? மூர்த்தியைப் பார்த்துத் தெரிவிக்க வேண்டும். அப்புறம் கடைக்குப் போய் உனக்கு... ஏதானும்” என்று இழுத்துக் கொண்டே அத்தை குண்டு குண்டென்று கீழே ஓடினாள்.

     “எனக்கு எதுவும் வேண்டாம், அத்தை” என்று அவள் வாக்கியத்தை முடிக்கு முன்னரே ஊகித்துக் கொண்ட நான் கத்தினேன்.

     சற்றைக்கெல்லாம் வெங்கிட்டு என்னைப் பார்த்தவன், “நாளைக்கு ஊருக்குப் போகிறாயாமே சுசீலா? அதற்குள் என்ன அவசரம்?... உம்... அவர் ஞாபகம் வந்து விட்டதாக்கும்?” என்று குறுநகை செய்தான்.

     பெரியவர்களைப் போல இவர்களுக்கு இன்னும் அந்தஸ்துக்கு வேண்டிய கபடம் உரமேறவில்லை. அதனாலேயே என்னைச் சமமாகப் பாவித்தார்கள். ஆனால் நான் அடுத்த தடவை வரும் போது இவர்களும் பெரியவர்களாகி விடுவார்கள். நிலைமைக்குத் தகுந்த கௌரவம் சமத்துவ மனப்பான்மையை ஒழித்துவிடும்!

     அசடு போல் எண்ணுகிறேனே. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம் பார்க்க வேண்டும்? ஒரு முறை வந்து விட்டுத்தான் எப்போது திரும்பப் போகிறோம் என்ற நிலையை அனுபவித்தேனே. “ஏதோ உடன் பிறந்தவன் பெண் வந்திருந்தாள் ஒரு மாதம்; நல்ல பெண்” என்ற மட்டிலும் வந்தேன். போகப் போகிறேன். முன்னும் இல்லை உறவு; பின்னும் இருக்கப் போவதில்லை.

     அத்தை, பாட்டி பின் தொடரக் கையில் இரண்டு புடவைகளுடன் ஓடி வந்தாள். “அங்கே போய் மூர்த்தியிடம் சொல்லிவிட்டுக் கடைக்குப் போய் விட்டு அவசர அவசரமாக ஓடி வருகிறேன்... அப்பா! மூச்சுத் திணறுகிறது” என்று காரில் போய்விட்டு வந்த அத்தை சாவகாசமாகக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டாள். பாட்டிக்குப் பொறுக்கவில்லை.

     “எதுக்கடி பாரு, இப்போது அவளுக்குப் புடவையும் கிடவையும்? அவசரமாகக் கிளம்பி வந்துட்டான்னா உன்னை யார் என்ன சொல்லப் போகிறார்கள்? நீ செய்து கொண்டே இருந்தால் ஒரு காலணாவுக்கு உனக்கு அங்கே திருப்பிக் கொடுக்கிறவர்கள் இல்லை!” என்று பெண்ணின் சொத்துப் பறி போகிறதே என்ற முறையில் எச்சரித்தாள்.

     எனக்குத் தர்மசங்கடமாக இருந்தது. என்னுடைய அத்தை வீட்டு வாழ்வின் இறுதிச் சோதனைக் கட்டம் வந்து விட்டதென நினைத்தேன்.

     “நீ சும்மா இருடி அம்மா. எனக்கு எல்லாம் தெரியும். கல்யாணம் ஆகி முதல் முதலாக வந்திருக்கிறாள். வெறுங்கையோடு அனுப்பினால் நாளைக்கு, அத்தை அழைத்துப் போனாளே சீராட, என்ன வாங்கிக் கொடுத்தாள்? என்று ஊர்க்காரர்களே கேட்பார்கள். இந்த கலர்கள் இரண்டும் நன்றாக இல்லை, சுசீலா?” என்று வினவினாள் அத்தை.

     “ஊர்க்காரர்களுக்கென்ன? வாய்க்கு வந்ததைக் கேட்பார்கள்” என்று சுவை குன்றியவளாக முகத்தைக் கோணிக் கொண்டாள் பாட்டி.

     இந்தப் புடவைகளை வாங்கிக் கொள்ளலாமா, வேண்டாமா என்ற பிரச்னை என்னுள்ளே பெரிய திண்டாட்டத்தைக் கிளப்பி விட்டுவிட்டது. அத்தை அன்பாய் மருமகளைச் சீராட்டிவிட்டு அன்பின் அடையாளமான பரிசாக உள்ளன்புடன் இவைகளை எனக்கு வாங்கி அளிக்கவில்லை. தான் பணக்காரி என்ற கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக, அவளுடைய அகம்பாவத்தின் சின்னமாக, எங்களுடைய எளிய நிலையைக் குத்திக் காட்டும் வார்த்தைகளுடன், ஊர்க்காரர்கள் வாய்க்குப் பயப்படுவது போல் நடித்துக் கொண்டு இவைகளை வாங்கி அளிக்கிறாள். இப்படிப்பட்ட பொருளை, என் மனத்துக்குச் சிறிதும் ஒவ்வாத வகையில் நான் எப்படிப் பெற்றுக் கொள்வேன்! எவ்வளவுதான் இல்லாமையால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் கண்ணியமுள்ள எவரும் தம் சுயமரியாதைக்குப் பங்கம் வரும் முறையில் தம்மை ஏளனப்படுத்திக் கொண்டு வரும் பொருளில் கொஞ்சமும் நாட்டம் கொள்ள மாட்டார்கள். கேவலம் அந்த நூல் புடவைகள் மிகச் சாதாரண ரகந்தான். இரண்டும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்தும் பத்தும் இருபது ரூபாய்க்கு மேல் பெறாது.

     நான் போராட்டத்தில் ஆழ்ந்திருந்த போதே அத்தை தன் பரிசுப் பொருளைப் பற்றி மிகவும் சிலாக்கியமான வர்ணனைகளில் மூழ்கி விட்டாள். “நல்ல நைஸ் புடவை. ஸில்க் மாதிரி வழுவழுப்பாகவும் இருக்கிறது. துவைத்துக் கட்டவும் உதவும். இந்தக் கலர்கள் இரண்டே இரண்டு தான் இருந்தன. எனக்கு ஒன்று கொடுத்தான் கடைக்காரன். இப்போதே ஒன்றைப் பிரித்துக் கட்டிக் கொள்” என்று எனக்கு உத்தரவிட்டாள். என்ன பதில் கூறுவது என்றே எனக்குப் புரியவில்லை.

     ‘எனக்கு வேண்டாம்’ என்று நறுக்குத் தெறித்தாற் போல் முகத்துக்கு நேரே கூறுவதா, இல்லையென்றால் கொஞ்சமும் பிடிக்காமல் அந்தப் புடவைகளை வாங்கிக் கொண்டு வியாதியஸ்தர் துணிபோல் கூசிக் கூசி அணிவதா?

     என் மனம் இரண்டுக்கும் இடம் கொடுக்கவில்லை. அந்த மட்டும் பாட்டி சமய சஞ்சீவி போல் எனக்கு உதவியாக, “செவ்வாய்க்கிழமையும் தானுமாக இன்று பிரித்துக் கட்டிக் கொள்ள வேண்டாம். புக்ககம் போகும் பெண்ணுக்கு இரண்டு சித்தாடை வாங்கும் குறை தீர்ந்தாச்சு. மாற்றி மாற்றி உடுபுடவையாக இருக்கும்” என்றாள். ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டவளாக நான் அவைகளை வாங்கிப் பெட்டியில் வைத்தேன். ஏதோ வாங்கி வைத்தேன் என்றாலும் முழு மனத்துடன் நான் அவைகளை அங்கீகரிக்கவில்லை.

     “நாளைக்கு மூர்த்தி இங்கேயே வந்து அழைத்துப் போகிறேன் என்றான். வேண்டாம் அப்பா, உனக்கு எதுக்குச் சிரமம். நானே ஸ்டேஷனுக்குக் கூட்டி வருகிறேன் என்றேன். எப்படியும் இந்த வழியாகத்தான் போக வேண்டும். வருகிறேன் என்றான். ஆனால் சாப்பாட்டிற்கே வந்துவிடு என்று சொன்னேன். காலை பத்து மணிக்கு வண்டி. ஊருக்கும் போகிறாள்; ஒரு பாயசம் பச்சடியுடன் காலையிலே சமையல் செய்து விடும்படி அந்த அஸமஞ்சத்தினிடம் சொல்லு, அம்மா. ஹேமாவை இன்று பூரா நான் பார்க்கவில்லை. எப்படி இருக்கோ?” என்று அவசரமாக மொழிந்த அத்தை விரைந்தாள்.

     பட்டணத்தின் நடுவே வந்து வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்ட பட்டிக்காட்டானைப் போன்று புடவையை எப்படிக் கழிக்கலாம் என்று வழி தெரியாமல் நான் விழித்தேன்.