(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

மலர்

1

     தாயின் புனிதமான அன்பை ஆண்டவன் அடியிணையில் ஏற்படும் ஆனந்தத்துக்குச் சமமாக, அறிந்தோரால் தான் உணர முடியும். தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் சண்டமாருதமும் தென்றலும் கலந்து வீசும். மென்மையுடனும் தூய்மையுடனும் ஆழமும் சுழிகளும் இட்டு ஓட்ம். பனிக்கட்டியை ஒத்த ஜிலு ஜிலுப்புடன் கூடக் கொதி நீரில் பொங்கும் ஆவியும் தாயன்பில் பிணைந்து நிற்கும். கற்கண்டின் இனிமையுடன் கடலுப்பின் உவர்ப்பும் போட்டி போடும். முற்றும் அறியாத அஞ்ஞானிக்கும் நீரின் ஓட்டத்துக்கும் கம்பீரம் கொடுக்க ஆழமும் சுழலும் அவசியம் என்றும், சண்டமாருதம் இன்றித் தென்றலின் சுகம் அனுபவிக்க முடியாது என்றும் தெரியாது. கற்கண்டைச் சுவைத்து உப்பைத் தூவென்று துப்பும் இயல்பு வாய்ந்த குழந்தையால் எல்லையில்லாத, ஒப்புவமை கூற இயலாத உயர்தரமான தாயுள்ளத்தை உண்மையாக அறிய முடியாதுதான். என் நலனுக்காகவும் மேன்மைக்காகவுமே என்னைக் கண்டிக்கவும் கோபிக்கவும் அம்மா முன் வருகிறாள் என்ற உண்மை எனக்கு ஒரு போதும் உறைத்ததில்லை.

     “உனக்கு ஜகதுவும் தங்கமுந்தான் உயர்த்தி! அவர்கள் தாம் சாதிக்கப் போகிறார்கள்! என்னை இப்படிக் குட்டுவதைப் போல் அவர்களை நீ விரலாலாவது தொட்டிருக்கிறாயா? இப்படி வேண்டாப் பெண்ணாக நடத்துவதை விடக் குளத்தில் கிணற்றில் அப்போதே தள்ளியிருப்பதற்கு என்ன?" என்று பிஞ்சில் பழுத்த பழமாகப் பேசும் போது அவள் இருதயம் நோகும் என்று நான் உணர்ந்ததில்லை. என் முற்றாத இருதயம் இப்படி ஆத்திரத்தில் நொந்து வார்த்தைகளைக் கொட்டியதற்குக் காரணம், அவளுடைய அன்பில் என் சகோதரிகளுக்கும் எனக்கும் ஆனைக்கும் பூனைக்கும் உள்ள வித்தியாசம் இருந்ததுபோலத் தோன்றிய தோற்றந்தான். அவள் காட்டிய அன்பிலே வித்தியாசம் கண்ட நான், அவர்கள் வளர்ந்த விதத்திற்கும், நான் வளர்ந்த விதத்திற்கும் இடையே இருந்த வேற்றுமையைக் காணும் சக்தி படைத்திருக்கவில்லை.

     பள்ளிப் படிப்பு முடியும் வரையில், வீட்டு வேலை என்றால் என்ன என்பதையே நான் அறிந்திருக்க மாட்டேன். பொழுது விடிந்தால் பள்ளிப் பாடம் தயாரித்துக் கொள்ளவும், பாட்டு வாத்தியாரிடம் உட்காரவுமே எனக்கு நேரம் சரியாக இருக்கும். என் துணிமணிகளைப் பிறர் கவனிக்க வேண்டும். நான் சாப்பிட உட்காரும் போதே அம்மா தலைவாரிப் பின்னி விட வேண்டும். பள்ளிக்குக் கிளம்பு முன் தயாராக இடைவேளை உணவு கட்டி வைத்திருக்க வேண்டும். தள்ளாமையால் அம்மா சில சமயங்களில் முணுமுணுப்பாள். அப்பாவின் சலுகை எனக்கு அதிகம் என்று குற்றமும் சாட்டுவாள். அந்தச் சமயங்களில் அவள் உள்ளத்தை அறியாத நான், ஏதோ கடனே என்று எனக்கு எல்லாம் செய்ததாகப் பிரமை கொள்ளுவேன்.

     பள்ளிப் படிப்பு முடிந்ததும் அம்மாவின் குணம் ராட்சச குணமாகத் தோன்ற எனக்குச் சந்தர்ப்பங்கள் உதவின. அத்தனை நாட்களுக்குப் பின் என்னைப் பழி வாங்குவது போல, காலை வேளையில் குளித்துவிட்டு, வீட்டு வேலைகளை நானே செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டாள். சரியாகச் செய்யாவிட்டால் கோபிப்பாள். நான் வாயாடி அடித்தால் அடிக்கவும் அடித்து என்னை அடக்கினாள். அறியாமை அகலாத நான் எனக்கு அவள் மீது பாசமே இல்லை என்று மட்டுமல்ல, இந்த வீட்டை விட்டுப் போய்விட்டால் வருந்தி வருந்தி அவள் அழைத்தால்ம் வரக் கூடாது என்று முடிவு கட்டியிருந்தேன்.

     அந்த வேளை எனக்கு வந்து விட்டது. என்றென்றைக்கும் நான் வேறொரு புது வீட்டிற்கு, புது மனிதர்களின் நடுவே புது அன்புப் பிணைப்பில் குடிபுகப் போகிறேன்.

     உறுதியும் வைராக்கியமும், உண்மையை அஸ்திவாரமாகக் கொண்டு வளம் பெற்ற மனத்திலே எழுந்தால் தான் நிலைநிற்கும். அப்படி இருக்க, என் உள்ளமோ முற்றாதது. என்னுடைய முடிவில் பிரமையில் எழுந்தது, எப்படி நிலைநிற்கும்? நான் புக்ககம் செல்லும் வேளை நெருங்க நெருங்க என்னை மூடியிருந்த அஞ்ஞானமும் பிரமையும் விலக ஆரம்பித்தன. அவள் எதுவும் கோபித்தால் இனி நெஞ்சு புண்ணாகும்படி, சுடச்சுட ஏதும் பேசக் கூடாது என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் அம்மா என்னைக் கோபிக்கும் சந்தர்ப்பமே வரவில்லை. “இன்னும் கொஞ்ச நாள் தானே? அந்தப் பாட்டைப் பாடு; இந்தப் பாட்டைப் பாடு; அடுப்புப் பக்கம் நீ வர வேண்டாம்" என்று என்னை உள்ளூற வெட்கமுறச் செய்தாள்.

     ஏற்கனவே கல்யாணத்தின் அபாரச் செலவினால் அப்பா ஒரேயடியாகக் கூனிக் குறுகியிருந்தார். அதனுடன் அத்தையின் உதவியும் இன்றி அவர் மேலும் நெருக்கிய செலவுகளைச் சமாளிக்க அம்மாவின் ஒத்துழைப்பும் பரிபூரணமாகத் தேவையாக இருந்தன. அவளுடைய உடமைகள் முழுமையும் என்னைக் கணவன் வீடு கொண்டு விட வேண்டிய புதிய செலவுகள் கபளீகரம் செய்து விட்டன. வெறும் மஞ்சள் சரட்டுடனும் கம்பி வளையலுடனும் அவள் வளைய வரும் போது, என் குற்றமுள்ள நெஞ்சம் “அம்மா" என்று கட்டிக் கொண்டு கதற விழைந்தது. இதெல்லாம் என்ன கொள்கைகள்? தாயும் தந்தையும் ஆசையுடன் தங்கள் சக்திக்கு உகந்தபடி பெண்ணுக்குப் பரிசுகள் வழங்க வேண்டியிருக்க, இப்போது இப்படி நிர்பந்தமாகவும் கஷ்டப்பட்டுக் கொண்டும், கடன் பட்டுக் கொண்டும் செய்தே தீர வேண்டும் என்ற கடும் சம்பிரதாயமாக ஆகிவிட்டதே! இந்தப் பாசி படிந்த கொடிய சம்பிரதாயங்களை ஒழிக்க ஏன் யாரும் முன் வரவில்லை? பெண்ணிடம் உள்ள ஆசையும், அன்பும் குன்றும்படி இந்தச் சீர்ப் பிரச்சனைகள் மலை போல் அல்லவோ நிற்கின்றன?

     நானாகவே, “கெட்டிச் சரிகைப் புடவை வேண்டாம், அம்மா. இது போதும். பாத்திரம் பண்டங்கள் தாம் வேண்டாம் என்றார்களே. வேணுமானால் நான் எழுதுகிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றெல்லாம் மிகமிகக் குறைந்த செலவிலேயே என் தேவைகளை நிரப்பிக் கொண்டேன்.

     ‘அவரிடம் இந்த அசட்டுக் கொள்கைகளையும் அப்பாவின் நிலைமையையும் விளக்க வேண்டும். இதுவரை யாருமே கண்டிராதபடி புதுமையாக, எனக்காகச் செலவழித்து விட்டுக் கடனடைக்க வகையறியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அப்பாவுக்கு வரதட்சிணைப் பணத்தையாவது திருப்பி விடும்படி என் கணவரிடம் வேண்டிக் கொள்வேன். சுசீலா - ராமநாதன் என்றாலே அப்பா, அம்மா, ஏன் ஊர்க்காரர்களுக்குக் கூடப் பெருமை பொங்கும்படி என்னால் செய்து விட முடியும்’ என்றெல்லாம் மனக்கோட்டை என் அந்தரங்கத்தில் உயிர் பெற்றது.

     ஆயிற்று. வாசலில் வண்டி கூட வந்துவிட்டது. என்னைக் கொண்டு விட்ட பின் அப்பாவால் ஒரு நாள் கூடத் தங்க முடியாது. அன்று மாலையே திரும்பி விட வேண்டும். அவர் கஷ்டத்தைக் கண்ணுற்ற போது, என் இன்ப துன்பம், அபிலாஷைகள் எல்லாமே கரைந்து விட்டன. “பெண்களுக்காக உடலை ஓடாக உழைத்து உழைத்து அவர் என்ன பயன் காணப் போகிறார்? நாம அவர் கஷ்டத்துக்குப் பிரதியாக என்ன செய்யப் போகிறோம்? ஒரு நாளைக்கு அன்பாகக் கூப்பிட்டு மனம் குளிர உபசரிக்கக் கூடப் பிறர் முகத்தைக் கவனிக்க வேண்டி இருக்கிறது" என்று ஜகது சொல்வது வழக்கம். புறப்படும் சமயம், ‘நான் அப்படி இருக்க மாட்டேன். என்னுடைய வீட்டார் முன்னேற்றம் அடைந்தவர்கள். எனக்குச் சகல சுதந்திரங்களும் இருக்கும். ஏன் ‘ரிடையரா’கி விட்டால் அப்பாவை என்னிடமே கூட வைத்துக் கொள்வேன்!’ என்று பெருமிதத்துடன் எண்ணிக் கொண்டேன்.

     “போய் வருகிறாயா அம்மா சுசீ? சமர்த்தாக இரு. கடிதாசி போடு அடிக்கடி" என்று அம்மா கூறி என் நெற்றியில் சுவாமி விபூதியை இட்ட போது என் கண்கள் கலங்கி விட்டன. வெற்றிலை பாக்குப் பெற்றுக் கொண்டு, எல்லோரையும் வணங்கினேன். கடைசியாக அதுவரையில் ஆடி ஓடி வளர்ந்த வீட்டிலிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

     அப்பா வண்டியருகில் நின்றார். நான் ஓர் எம்பு எம்பி வண்டியில் ஏறப் போனேன். புடவையின் ஓரம் பாதம் வைக்கும் விளிம்பில் மாட்டித் தாறாகக் கிழிந்தது.

     “மெதுவாக ஏறக் கூடாது?" என்று அப்பா கடிந்து கொண்டார்.

     “என்ன? புடவையைக் கிழித்துக் கொண்டாளா. புறப்படும் சமயம் பார்த்து? கொஞ்சங் கூட நிதானம் கிடையாது! இறங்கி வா, ஒரு தம்ளர் தீர்த்தம் சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றாள் அம்மா, கோபமும் பதைபதைப்பும் கலந்த குரலில்.

     “அதெல்லாம் ஒன்றும் இல்லை. வண்டிக்கு நேரமாகி விட்டது. விடப்பா வண்டியை!" என்று அப்பா வண்டியில் ஏறிவிட்டார். சதங்கை ஒலிக்க வண்டி கிளம்பி விட்டது. பக்கத்து வீட்டில் நின்றிருந்த ஜானி உட்பட எல்லோருக்கும் “போய் வருகிறேன்!" என்று கத்தினேன். தெரு மறையும் வரை அம்மா, ஜகது, சுந்து, ஜானி எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என் பார்வையிலிருந்து மறைந்த பின் தான் கிழிந்த புடவையின் ஓரம் என் கண்களில் உறுத்தியது.

     புறப்படும் சமயத்திலே இது ஏன் கிழிய வேண்டும்?

     என் உள்ளத்து ஒலியிலே கீறல் விழுந்து விட்டது.

     ஊர்வலத்தின் இறுதியில் குமுறிய வானம், அந்தப் பாட்டு, இதோ புடவைக் கிழிசல்! இதெல்லாம் என்ன? வருங்காலத்தில் நிகழக் கூடிய சம்பவங்களை அறிவுறுத்தும் சூசகமோ?

     வண்டியின் ஓட்டத்தில் ஒரு குலுக்கல் உள்ளத்துடன் உடலும் குலுங்கியது. மண்டை ‘நங்’கென்று பிரம்புச் சட்டத்தில் இடித்தது. நான் கையில் பிடித்திருந்த கூஜா நழுவிச் சாய்ந்தது.

     “சற்று மெதுவாக ஓட்டப்பா" என்றார் அப்பா. வண்டிக்காரனைப் பார்த்து. தெளிவாகச் சிந்திக்கவே முடியாதபடி புகையைப் போல் என் மனதை நினைவுகள் கப்பிக் கொண்டன.

     அவள் ஏன் அந்தப் பாட்டைப் பாட வேண்டும்? வேறு நல்ல பாடல்கள் எத்தனையோ இல்லையா? அப்போதுதான் கட்டும் புடவை சற்று மாட்டிக் கொண்டதை வியாஜமாகக் கொண்டு கிழிய வேண்டுமா? இத்தனைக்கும் புடவை நைந்ததன்று. பழசு இல்லை; இரண்டு நனைப்புகளே ஆகியிருக்கும் புதுப் புடவை.

     முன் காலத்துக் கதைகளில் எல்லாம் வருமே, போர் வீரனைப் போருக்கு அனுப்பு முன் மனைவிக்கு ஹாரத்தி தாம்பாளம் கீழே விழுந்தது, மலர் மாலை வாடியது என்று; அவள் துணுக்குறுவாள். அவன் ‘சகுனமாவது மண்ணாவது! பீதியிலே கை நடுங்கித் தாம்பாளத்தைக் கீழே போட்டிருப்பாய்’ என்று சமாதானம் சொல்லிவிட்டுப் போவான். கடைசியில் முக்காலும் சகுனமே பலிக்கும். அவன் திரும்பியே வரமாட்டான். எப்படியாவது இதெல்லாம் மூட நம்பிக்கை என்று ருசுப்படுத்தும்படி பலியாமல், நல்லது நடந்திருக்குமோ? ஊஹூம், அல்லவே இல்லை!

     அப்படியானால் இவை எதைக் குறிக்கின்றன?

     “அவள் இந்தப் பெண்ணை ஆட்டி அம்பலத்தில் வைத்து விடுவாள்!"

     அத்தையின் வார்த்தைகள் என் காதுகளில் ரீங்காரம் செய்தன. ‘என்னை என்ன ஆட்டி வைப்பது அவள்? கிராமாந்தரமாக இருந்தால் அந்தக் காலத்தில் சொல்லுவார்கள்; புது மாட்டுப் பெண் பேசக் கூடாது, வாயிலில் வரக் கூடாது, வீட்டுப்பாடு என்று உழைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்கெல்லாம் இங்கு இடம் இல்லையே! மேலும் அன்று ஒரு நாழிகை உடல் நலம் கெட்டதற்கு அம்மாவைக் குற்றம் சொன்ன அவர், அவள் ஆட்டி வைக்கப் பார்த்துக் கொண்டு கல்லுப் பிள்ளையாராக இருப்பாரா?’

     ‘இதெல்லாம் சுத்த மனப்பிரந்தி காக்கை உட்காருவதும் பனம்பழம் விழுவதும் போல சில சமயங்களில் சில நிகழ்ச்சிகள் மனக் குரங்குகள் இணைந்தாற் போல அமைந்து விடுகின்றன. இதை வைத்துக் கொண்டு மனத்தில் அசட்டு எண்ணத்தை வளரவிட்டுச் சந்தோஷத்தைக் குறைத்துக் கொள்வார்களா? இப்படி நான் முட்டாள்தனமாக எண்ணினேன் என்பதைக் கேட்டால் கூட அவர் நகைப்பார்!’

     மழையுடன் சில சமயங்களில் வெயிலும் கலந்து அடிப்பது உண்டு. எந்த நிகழ்ச்சியையும் ஆழத்திலே அமுக்கி ஜீரணித்துக் கொள்ளச் சக்தியில்லாத பொறுமையற்ற இயல்பு படைத்த மனம் மாறி மாறி எண்ணமிட்டது. புங்கனூரிலிருந்து தஞ்சாவூர் ஜங்ஷன் வந்து தான் நாங்கள் சென்னை வண்டி ஏற வேண்டும். நல்லவேளை மாலையிலேயே இருட்டுகிறதென்று புறப்பட்டு விட்டோமே ஒழிய ஜங்ஷனில் அடைத்துக் கொண்டிருந்த ஜனக் கும்பலில் நாங்களும் இருவராக அமர்ந்து கொண்டோம். அப்போது எனக்கு மூர்த்தியுடன் சுகமாக மேல் வகுப்பில் பிரயாணம் செய்ததும், பெங்களூரில் சகல வசதிகளுடன் கூடிய ‘வெயிட்டிங் ரூமி’ல் இளைப்பாறியதும் தென்றலின் குளுமை போல நினைவில் பரவின. ஒருவேளை அடுத்த தடவை சென்னையிலிருந்து அவருடன் வரும்போது அப்படி வருவேனோ என்னவோ?

     அப்பா தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “சுசீ!" என்று அழைத்தார்.

     ஊரிலிருந்து கிளம்பியதிலிருந்து எதுவுமே பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருந்த அவர் திடீரெனக் கூப்பிட்டதும் நான் நிமிர்ந்து, “என்னப்பா?" என்றேன்.

     “நாளைக்கு நான் உடனே திரும்பி விடுவதால் உன்னுடன் பேச முடியுமோ முடியாதோ? நீ சில சமயங்களில் மிகவும் துடுக்காக நடந்து கொள்கிறாய். அன்றைக்கு அந்தப் பிள்ளையாண்டானிடம் புடவையைக் கொடுத்து விட்டு நீ என்னிடம் பொய் தானே சொன்னாய்?" என்றார். போகாமல் போன விருந்தைப் புளியிட்டு அழைத்த மாதிரியில் அவர் என்னிடம் அந்தப் பழைய சங்கதியை, தீர்ந்து போயிற்று என்று அதனுடன் நான் அறவே மறந்திருந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்குவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பதில் எனக்குச் சட்டென்று எப்படி வரும்?

     “அத்திம்பேர் நீ இந்த மாதிரி மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதைக் குறித்து வருத்தப்பட்டுக் கொண்டு எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவர்கள் பணம் பெருத்தவர்கள். நமக்கோ அது தேவையாக இருக்கிறது. எப்போது சுழலும் சக்கரத்தில் அகப்பட்டுக் கொண்டு விட்டோமோ, கஷ்டமோ நஷ்டமோ அதன் போக்குப்படித்தான் சுழல வேண்டும் அம்மா! நீ சிறு பெண். அவர்கள் ஏதேனும் கடுஞ்சொல் மூலம் உன் மனத்தை நோவ வைத்திருக்கலாம். என்றாலும் நீ செய்தது தவறு. இப்போதே இத்தனை ரோசம் வைத்துக் கொண்டிருப்பது பின்னாடி உனக்கே கஷ்டமாக ஆகிவிடக் கூடாதே என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. நாளை நீ பெரிய குடும்பம் ஒன்றில் காலெடுத்து வைக்கப் போகிறாய். உன் ஓரகத்தி, அவள் தாய், தங்கை, உன் மாமியார், மைத்துனர் என்று மூன்று குடும்பத்து மக்கள் அங்கு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது இருக்கும் நிலையுடன் நீயும் ஒட்டி இருக்க வேண்டும். ஒவ்வொருவர் அபிப்பிராயங்களும் குணமும் வெவ்வேறாக இருக்கலாம். நீயும் அவர்களுக்குத் தகுந்தாற் போல் இணைந்து போனால்தான் நலமாக இருக்கும். ஆயிரம் பேராக இருந்தாலும் புருஷர்கள் ஒத்துப் போய் விடுவார்கள். பெண் மக்கள் அப்படி அல்ல. அத்தியந்த சிநேகிதர்களாக இருந்தால் கூடச் சகஜமாகப் பழக மாட்டார்கள். குற்றம் கண்டுபிடிக்கும் நுண்ணிய சக்தி அவர்களுக்கு அபாரம். அதனாலேயேதான் அபிப்பிராய பேதம், மனத்தாங்கல் ஏற்படுவது பெண்களிடையே சுலபமாகி விடுகிறது. இந்த வழியில் நீ உன் அறிவை ஒரு போதும் செலுத்தி விடக் கூடாது. எந்த அபிப்பிராயத்தையும் மேலெழுந்த வாரியாகவே எடுத்துக் கொள். அடுத்தபடியாக உழைப்பைத் துச்சமாகக் கருதி நீ சோம்பேறியாகி விடக் கூடாது, சுசீலா. சந்தனக்கட்டை தேயத் தேயத்தான் மணம் பெறும். இன்னும் உன்னுடைய சௌகரியங்களை நீ எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொண்டு பழகுகிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உனக்கு நல்லது. ‘அது இல்லாவிட்டால் எனக்குச் சரிவராது’ என்று அபரிமிதமான சுகங்களுக்கும் சௌகரியங்களுக்கும் ஒரு போதும் நீ இரையாகி விடக் கூடாது. தியாக புத்தி கொஞ்சமும் இன்றி உண்மையான பெருமையும் இல்லை. இன்பமும் இல்லை. பெண்கள் குடும்பத்துக்குத் தூண் போன்றவர்கள். அதன் வாழ்வையும் தாழ்வையும் அவர்கள் தாம் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ‘நாட்டுப் பெண் வந்தாள்; மறுநாளே சட்டியைத் தூக்கி வேறு வை என்று சொல்லிவிட்டாளே’ என்று நாலு பேர் அபிப்பிராயம் கொடுக்கும் நிலையில் நீ நடந்து கொள்ளக் கூடாது. உன் புருஷன் அண்ணனிடமும் மதனியிடமும் அலாதியான மதிப்பு வைத்திருக்கிறான். அந்த மதிப்புக் குறைந்து, ஒட்டுதல் விட்டுப் போகும்படியான நிலைமை இனிமேல் எப்போது வந்தாலும் அது உன்னால் வந்ததாகத்தான் கருதும்படி இருக்கும். இத்தனை சிரமப்பட்டு உனக்கு உரிய இடத்தைத் தேடி மணம் செய்வித்தது கூட எனக்குப் பெரிதல்ல. நாளைக்கு உன்னால் ஒரு வார்த்தைக்கு இடம் இருக்கக் கூடாது. தெரிகிறதா அம்மா?" என்று முடித்தார்.

     எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்த்தால் பசுப்போல் இருக்கும் அப்பா என்னவெல்லாம் தெரிந்து கொண்டு சொல்லுகிறார்!

     “நீங்கள் இப்போது கூறியது அத்தனையும் எனக்கு எப்போதும் நினைவிருக்கும் அப்பா. அப்படியே நடந்து கொண்டு நல்ல பெயர் வாங்குவேன்" என்று உறுதியுடன் மொழியும் போது ஏனோ எனக்கு நாத் தழுதழுத்தது.

     “தங்கமும் புக்ககம் போனாள்; ஜகதுவும் புக்ககம் போனாள். அப்போதெல்லாம் நான் இவ்வளவு சிரத்தை கொள்ளவில்லை. சிரமமும் கொள்ளவில்லை. கவலையும் இருக்கவில்லை. உன் விஷயம் அப்படி எனக்கு எளிதாகத் தோன்றவில்லை. எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உனக்குக் கல்வி புகட்டினேன்; சங்கீதம் பயிற்றினேன். ‘சுசீலா ஆண் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டியவள். அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டாம் ஸார்! காலேஜில் சேர்த்து விடுங்கள்! மேலே படித்து உத்தியோகம் பண்ணி முன்னுக்கு வரட்டும்’ என்று கூட நீ படிப்பில் காட்டிய ஊக்கத்தைக் கண்டு என்னிடம் தலைமையாசிரியர் உட்பட எல்லோரும் உரையாற்றினார்கள். ஆனால் நான் ஜீவனத்துக்காகவும் விவாகச் செலவு குறைவதற்குமாகவா உனக்குக் கல்வி புகட்டினேன்? குடும்பப் படகை வலித்துப்போக ஓரளவாவது பெண்களுக்கு அறிவு கூர்மையாக வேண்டும் என்றே உனக்குக் கல்வி வசதி அளித்தேன். ஆனால் கல்வியறிவைப் பெண்கள் சீரிய முறையிலும், ஒழுக்கமான வழியிலும் பயன்படுத்த வேண்டும். ‘என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். நான் அதற்காக அடிமையாக இருக்க மாட்டேன்’ என்று கணவனை எதிர்த்து வாயாடுவதற்காக அந்த அறிவை உபயோகிப்பது முறை அல்ல. ஒருவருக்கொருவர் பலவந்தமான அதிகாரத்துக்குட்பட்ட அடிமைகளாக இருப்பதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் அன்பின் பின்னலுக்கு உட்பட்டு ஒருவருக்கொருவர் கட்டுப்பட்ட வாழ்க்கையைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சதிபதிகளே இன்பம் பெறுவார்கள் என்பது என் கருத்து. இந்தக் கணவனும் மனைவியும் தேர்ந்த அறிவுடன் தெள்ளிய மனமும் படைத்திருப்பதாக நடுநடுவே வாழ்க்கைக் கடலில் ஏற்படும் சிறு பூசல்களைக் குழப்பமோ கலக்கமோ இன்றி, ஆழ்ந்த சிந்தனையின் மூலம் தாங்களாகவே தெரிவித்துக் கொள்வார்கள். இத்தகைய மனமொத்த குழந்தைகளாக நீங்கள் வாழ வேண்டும் என்பது என் அவா, சுசீலா!" என்று கூறிவிட்டு என் முகத்தை அவர் உற்று நோக்கினார்.

     எங்கள் ஊரில் ஒரு குளம் உண்டு. அதன் வடக்கு மூலையில் ஒரு வடிகாலும் உண்டு. மழை அதிகம் பெய்து தண்ணீர் நிறைய வந்துவிட்டால் வடிகாலைத் திறந்து விடுவார்கள்.

     நான் பள்ளிக்கூடம் போகும் காலத்தில் குளத்திலிருந்து தண்ணீர் வடிகாலில் ‘கோ’ என்ற சத்தத்துடன் பீறி எழும் ஆவேசத்துடன் ஓடி உருண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே ஆச்சரியப்பட்டவள் போல் நிற்பேன். ‘குளத்திலே சலனமில்லாமல் சப்தமில்லாமல் தேங்கியிருக்கும் நீர் சிறிது வழி கிடைத்தவுடன் எப்படி ஆவேசமாக வருகிறது! அத்தனை தண்ணீரையும் திறந்து விட்டால் எப்படிப் போகும்?’ என்று சிந்திப்பேன். எனக்கு அது நினைவுக்கு வந்தது. அப்பாவின் மன ஆழத்திலே நிரம்பியிருக்கும் அன்புக்கும் அநுபவத்துக்கும் இப்போது சற்றுப் போக்குக் கிடைத்திருக்கிறது போலும்! ஜகதுவினிடமும் தங்கத்தினிடமும் அவருக்கு இல்லாத பாசம் என்னிடம் இருக்கிறது என்று அவர் வாயிலிருந்தே வந்ததே! குளத்து நீரைப் போல் அவர் உள்ளத்திலிருந்து பெருக்கெடுத்து வந்த அன்புணர்ச்சி என் மனத்தைக் கிளர்த்தி விட்டது. முழுதும் வழுக்கையாகிப் பளபளவென்று பிரகாசித்த தலையும், ஒட்டி உலர்ந்த முகமும், எப்போதோ வேலைக்கு வந்த போது தைத்துக் கொண்ட ஓரங்களில் விரிசல் விழுந்த கோட்டும் அவருடைய தன்னலமற்ற தியாகத்தை எனக்கு எடுத்துப் பறைசாற்றின. தம் உயிரின் அணுக்களால் ஆக்கப்பெற்ற எனக்காக அவர் தம் சொந்தச் சௌகரியங்களைக் கொஞ்சமாகவா தியாகம் செய்திருக்கிறார்? இதற்கெல்லாம் நான் பிரதி செய்யக் கூடிய காலம் வருமா?

     தூரத்தில் வண்டி வருவதன் அறிகுறியாகச் சத்தம் கேட்டது.

     “வண்டி வந்துவிட்டது போலிருக்கிறதே, அம்மா!" என்று எழுந்தார் என் தந்தை.

     என் வாழ்வின் நீண்ட யாத்திரையிலே என்னை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு முக்கியமான கட்டத்திற்குக் கடத்திப் போகும் அந்த வண்டி நள்ளிரவிலே தென்படும் கரும் பூதம் போல் அலறிக் கொண்டு வந்தது.