(நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது - 1953)

மலர்

5

     மனித வாழ்வுக்குச் சுவை கூட்டும் அதிமுக்கியமான வியஞ்சனங்களாகிய நம்பிக்கையும் ஏமாற்றமும், புடவை ஒன்றில் பின்னிப் போகும் சரிகையும் நூலையும் போல் வாழ்க்கையிலே பின்னிக் கொண்டிருக்கின்றன. சரிகையின் ஒளிக்கு நூல் ஆதாரம். நூலின் மேன்மையைக் காட்டவும் சரிகை உதவுகிறது. ஒரு பொருளையோ, எதிர்காலத்தையோ குறித்துத் துடிக்கும் ஆவலுடன் தொங்கும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கை வைத்திருப்பதுதான் எத்தனை இன்பமூட்டுகிறது! அடுத்து வரும் ஏமாற்றம் வாழ்க்கையின் ஏடுகளிலே இல்லாமலே அழிந்து விட்டால் துடிப்பு ஏது? ஆவல் ஏது? எனவே ஏமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டேதான் இன்பம் எழுகிறது. அன்று எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இன்று எத்தகைய இன்பத்தில் கொண்டு வந்து விட்டது.

     “குழந்தைக்கு உடம்பு குணமாகிவிட்டது. இன்று வீட்டுக்கு அழைத்து வரலாம்” என்று மைத்துனர் சொல்லிக் கொண்டிருந்தது என் செவிகளில் தேன்மாரியைப் பொழிந்தது. ‘சங்கடமூட்டும் முகத்துடனே கொஞ்சும் விழிகளுடன் அவர் என்னைப் பார்த்து விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் அன்றிரவு போய்விட மாட்டார். தயங்கித் தயங்கி நாலு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் மனம் விட்டு நான் கேட்க வேண்டிய சமாசாரங்களை எல்லாம் கேட்க முடியும்’ என்றெல்லாம் களிப்பிலே மிதந்தேன்.

     அடுப்படியில் ஒரு காலும், குழாயடியில் ஒரு காலுமாகப் பல வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில் சுகுமார், “சித்தி, இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்களேன்?” என்று அடுப்பங்கரையில் நோட்டைப் பிரித்து வைத்துக் கொண்டான். ‘எனக்கு வெள்ளைப் பாவாடை வேணும் சித்தி. டீச்சர் வெள்ளை டிரஸ் போட்டுக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறாள்” என்று மழலை மாறாத குரலில் மைதிலி தன் கோரிக்கையைச் சமர்ப்பித்தாள்.

     “அம்மா, சுசீலா, அடுப்பில் இந்தச் சுக்குக் கஷாயத்தைப் பொங்க வைத்துக் கொடேன். காலையிலிருந்து வயிற்றைப் புரட்டுகிறது” என்று கெஞ்சும் முறையில் வேண்டுகோள் விடுத்தாள் லீலாவின் தாய்.

     “வெந்நீரடுப்புப் புகைகிறது. கொஞ்சம் விசிறி கொடு. சுசீலா” என்று மைத்துனர் சமையலறை வாசற்படியில் வந்து நின்றார்.

     “ராமு குளித்து விட்டு வேஷ்டியை எறிந்து விட்டுப் போயிருக்கிறான். மைதிலியின் சிவப்புப் பாவாடைச் சாயம் முழுவதும் அதில் ஏறிக் கிடக்கிறது. இதை எல்லாம் கவனிக்க வேண்டாமா, சுசீலா?” என்று கண்டிக்கும் தோரணையில் என் காதில் போட்டு வைத்தாள் மாமியார்.

     ‘இன்னும் யார் பாக்கி, சுசீலாவைக் கூப்பிட?’ என்று நான் எண்ணி முடிப்பதற்குள் பின்புறத்தின் வழியாக மாடியிலிருந்து வந்த என் கணவர், “மன்னி ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் கரைத்துக் கொண்டு வரச் சொன்னாள் சுசீ!” என்று சமாசாரம் கொண்டு வந்தார்.

     லீலாதான் பாக்கி என்று நான் நினைத்து விடும் படி அவள் தன் பங்குக்குச் சோடையாகி விடவில்லை. “சுசீலா எங்கே? மயிலாப்பூரிலிருந்து ஜயம் மாமி வந்திருக்கிறாள். இங்கு யாரோ சிநேகிதி வீட்டு ஆண்டு நினைவுக்கு வந்தாளாம். ‘குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அன்றைக்கே பார்க்கவில்லை. சுசீலாவை வரச் சொல். பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று மாடிக்குப் போகிறாள் இப்போதுதான்” என்று தகவல் கொடுத்தாள்.

     நான் மூச்சு விடக் கூடச் சாவகாசம் இல்லாமல் பறப்பதைப் பார்த்து என் கணவருக்குப் பெருமை பிடிபடவில்லை. “ஏதேது? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இந்த வீட்டில் சுசீலாவுக்கு இத்தனை கிராக்கி வந்து விட்டதே!” என்று என்னை நோக்கி இளநகை செய்தார்.

     லீலாவின் சமாசாரத்துக்குத்தான் நான் முதலில் பணிந்தேன். மாடிக்கு ஓடினேன். விறகின் ஈரப்புகை என்னை அசல் செந்தாமரைக் கண்ணாளாக்கியிருந்தது. கசங்கிய புடவை கீழே புரளாதபடி தூக்கிச் செருகியிருந்தேன். தலைவாரிக் கொள்ள நேரம் இல்லாமையால் கையால் கோதிவிட்டுக் கொண்டிருந்தேன். இப்படி மாடியில் அலமாரியில் இருந்து பெரிய கண்ணாடி என் தோற்றத்தை எனக்கு விளக்கியது.

     சோபா ஒன்றில் பட்டு சாய்ந்து கொண்டிருந்தாள். மஞ்சள் பட்டுப் புடைவைக்கு மேலே கழுத்தில் நட்சத்திரமாலை டாலடிக்க, மல்லிகைப் பூவும் சந்தப் பூச்சும் அவள் விசேஷ வீட்டிலிருந்து வந்திருக்கிறாள் என்பதை எடுத்துக்காட்ட பருமனான தன் தேகத்தை நாற்காலி ஒன்றில் அடக்கிக் கொண்டு என்னைப் புன்னகை வதனத்துடன் வரவேற்கிறாள் சின்ன மதனி ஜயம்.

     “உன்னைப் பார்க்க அன்று வந்திருந்தேன். ம்! அடுப்பில் ரொம்ப வேலை போல இருக்கிறது!” என்றாள்.

     நான் பேசாமலே சிரித்து வைத்தேன். ஆனாலும் உள்ளுக்குள்ளே, அவர்கள் இருவரும் சரிக்குச் சமானமானவர்கள். நானோ? என் காதுகளில் வைரம் பளபளக்கவில்லை. இடுப்பிலே பட்டு மின்னவில்லை. என் கணவர் காரிலே காரியாலயம் போய்விட்டு வந்தாலும், அவர்களுக்கு வண்டி ஓட்டியின் ஸ்தானத்தில் தான் இருக்கிறார் என்ற உண்மை அழுத்தியது.

     “மன்னி வந்திருக்கிறாள் என்று தெரிந்து தானே வந்தாய்? காப்பி கொண்டு வரக்கூடாது? இது தெரிய வேண்டாமா?” என்று பட்டுவின் சொற்கள் வேறு என்னுடைய தாழ்வை எனக்கு உணர்த்தின.

     “வேண்டாம் மன்னி இப்போதுதான் அவர்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகச் சாப்பிட்டேன். நான் வெறுமே பார்க்கலாம் என்று வந்தேன்” என்று ஜயம் சம்பிரதாயமாக மறுத்தாள். என்றாலும் அவள் ‘ஹார்லிக்ஸ்’ கேட்டாளே!

     நான் பின்புறம் படிக்கட்டுகள் வழியாகக் கீழே விரைந்தேன். அவர் அறையில் - நிஜாருக்குப் பொத்தான் போயிருக்கிறது போலிருக்கிறது - தாமாகத் தைத்துக் கொண்டிருந்தார். யார் யாருக்கெல்லாமோ ஏவலாளாக இருக்கிறோமே, நீ தைத்து வை என்று கூடச் சொல்லாமல் தாமே செய்து கொள்கிறாரே! என்று அவரது பணிவான சுபாவத்தை வியந்தேன்.

     இரு தம்ளர்களைக் கையில் ஏந்திய வண்ணம் முன்புறப் படிகளின் வழியாக நான் ஏறிய போது பட்டுவின் குரல் என் காதில் பட்டது. என்னையும் அறியாமல் நான் அசைவற்றுப் படியிலேயே நின்று விட்டேன். “என்னவோ பிச்சைக்காரப் பிராமணனைப் போலப் படுக்கையைத் தைத்துப் பெண்ணைக் கொண்டு விட்டுப் போய்விட்டான்! ஒரு பாத்திரம் நகை என்று ஒன்றைக் காணோம்! கையிலே புல்லுப்போல் ஒத்தை வளையைப் போட்டு எப்படித்தான் அனுப்பினாளோ? அதையாவது அழித்து நல்லதாக இரண்டு பண்ணிப் போடட்டும் என்று தானே ஜாடையாக நான் அநாவசியமாகப் பாத்திரம், வேஷ்டி என்று வாங்க வேண்டாம் என்று சொன்னேன்?”

     அடுத்தாற் போல் ஜயம், “அத்தை அவ்வளவு பணக்காரியாக இருக்கிறாளே, ஆசையாக இருக்கிறாள், பெண்ணுக்குச் செய்வாள் என்று அம்மா சொல்லிக் கொண்டு இருந்தாரே?” என்று கேட்டாள்.

     “என்ன ஆசையோ! மைசூர்ப் பட்டுப் பேர் போனது. நறுக்கென்று நல்லதாக ஒரு புடவை வாங்கி அனுப்பக் காணோம். இல்லாவிட்டால் பேசாமலாவது இருக்க வேண்டும். மெனக்கெட்டு வெள்ளைக் கோடு போட்ட நூல் புடவை. நம்ம வீட்டு முனியம்மா உடுத்துவது போல வாங்கி அனுப்பியிருக்கிறாள்” என்றாள் பட்டு ஏளனமாக.

     மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது போல் நெஞ்சம் சுருங்கியது. உடல் நடுங்கியதைத் தம்ளர்களைத் தாங்கியிருந்த கைகள் உணர்த்தின.

     ‘பிச்சைக்காரப் பிராமணன்! அப்பா! நீங்கள் என்னை வளர்த்து அறிவூட்டி இந்த வீட்டில் கொண்டு விட்டதற்கு இது பட்டப் பெயரா?’

     அன்பில்லாத உள்ளம் என்பதை நான் ஒருவாறு எதிர்பார்த்திருந்தாலும் நேராகப் பேச்சில் உண்மை தெளிந்து விட்ட பின்னர் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்னால் பொறுக்க முடியாததாகவே இருந்தது. பழுதையோ பாம்போ என்று சந்தேகப்படும் போது உண்டாகும் அச்சத்திற்கும், உண்மையாகவே அது நெளியும் போது ஏற்படும் உடல் நடுங்கும் அச்சத்திற்கும் வித்தியாசம் இல்லையா?

     சற்று ‘நக்’கென்று வைப்பது போலவே தம்ளர்களை மேஜையில் வைத்தேன். அவர்கள் பேசியதை நான் கேட்டு விட்டதாக என் முகபாவம் உணர்த்தியதோ என்னவோ? கபட நெஞ்சைப் போர்வையிட்ட புன்னகை நெளிய பட்டு, “அதற்குள் கொண்டு வந்து விட்டாயா?” என்று அன்புடன் கேட்பது போல் வினவினாள்.

     “எனக்கு எதற்கு இப்போது காப்பி? நான் தான் வேண்டாமென்று சொன்னேனே! ராமு எங்கே?” என்று ஜயம் கேடுக் கொண்டிருந்த போதே அவர், “என்ன மன்னி, காலங் கார்த்தாலே திடீர் விஜயமாக இருக்கிறதே. அண்ணா வந்திருக்கிறானா?” என்று விசாரித்த வண்ணம் அங்கு வந்தார்.

     “இல்லை, நான் மட்டுந்தான் வந்தேன். உங்களை எங்கே கண்ணிலேயே காணாம்? அண்ணா கம்பெனியில் சேர்ந்தாலும் சேர்ந்தீர்கள், ஆளைக் காண்பதே அபூர்வமாக இருக்கிறதே? அன்று வந்தேன். சுசீலாவை லீலா அழைத்துப் போய்விட்டாள். ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் அவளை அங்கு அழைத்து வரக்கூடாதோ? ‘ஏன் அம்மா, சிற்றப்பாவைக் காணவே காணோம்? வரவே இல்லையா?’ என்று நேற்று சரோஜ் கூடக் கேட்டாள். ‘சித்தி வந்துட்டாளோ இல்லையோ, இனிமேல் எங்கே வரப்போகிறார்?’ என்றேன் நான்” என்று மடமடவென்று கூறி நகைத்தாள் அவள்.

     அவர் எங்கே உத்தியோகம் செய்கிறாரோ? அண்ணாவின் காரியாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறதாக்கும் என்றெல்லாம் ஏதேதோ குருட்டு யோசனைகள் செய்தேனே. எனக்குத் தெரியாத சமாசாரம் யாருக்கெல்லாம் தெரிந்திருக்கிறது! பட்டு என்னை ஏன் தாழ்மையாக நடத்த மாட்டாள்? அவர்கள் கீழ் வேலை செய்யும் கையாள்தாமே அவர்? ஏற்கனவே என் அந்தஸ்த்தைத் தூக்கவே முடியாதபடி நகை நட்டும் துணிமணிகளும் இல்லாத பிறந்தகத்து வறுமை வேறு இருக்கிறது. அன்பு, ஆசை, சீர்திருத்த மனப்பான்மை, நாகரிகம் என்றெல்லாம் என்ன என்னவோ பைத்தியம் போல் எண்ணினேனே! அந்த வீட்டை விட்டாவது உடனே வர முடிந்தது. இந்தச் சுதந்திரமற்ற சூழ்நிலையில் எனக்குத் துளியும் ரத்தப்பந்தம் இல்லாத ஒருத்தியின் அலட்சியத்தையும் அகம்பாவத்தையும், ஏளன சொற்களையும் சகித்துக் கொண்டா நாட்களைத் தள்ள வேண்டும்? அத்தை வீட்டிலே அத்தை கூட என்னை நேருக்கு நேர் எதுவும் கூறவில்லை. பாட்டி, என் தந்தையைப் பெற்றவள். என்னை அடிக்கவும் அணைக்கவும் உரிமை கொண்டவள் சொன்ன சொற்களுக்கே அத்தனை ரோசம் கொண்டேனே! இங்கோ?

     இந்த வீடுதான் எனக்குப் புகலிடம். இதை விட்டு எங்கும் போகவும் முடியாது. வாழ்நாள் முழுவதும்... சுழன்று சுழன்று இருதயத்தைத் தாக்கிய கிலேசத்தால், ஜயம் விடைபெற்றுப் போகும் வரை நான் எப்படித்தான் சமாளித்துக் கொண்டு நின்றேனோ? பின்புறமாக நடந்தவள் எங்கள் அறைக்கு வந்தேன். அடுத்த வீட்டில் காரியாலயத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவனிடம் அவள் குழைந்து கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தது என் கண்ணில் பட்டது. இனம் தெரியாத துயரம் உந்திக் கொண்டு வர, சுற்றி வைத்திருந்த படுக்கையில் சாய்ந்தேன். இருதயத்தில் இருந்த பளுவை அழுது அழுது கரைத்தால் தான் இதமாக இருக்கும் போல இருந்தது. அடுப்படி அலுவல்கள், மாமியார் எல்லாவற்றையும் மறந்தவளாக விம்மல்களுடன் கண்ணீர் பெருக்கினேன்.

     “சுசீலா? சுசீ! சுசீ!” என்று பதறும் குரலுடன் அவருடைய அன்புக் கரங்கள் என் மேல் பட்டன.

     உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாத என் பலவீனம் எனக்கு அப்போதுதான் புலனாயிற்று. அசட்டுத்தனமாக அழுதுவிட்டேனே? அவர் இப்போது கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வேன்? என்னுடைய செய்கை அடுத்த நிமிஷத்தில் எப்பேர்ப்பட்ட பலனைக் கொடுக்கும் என்று சற்றும் சிந்தியாமல் அல்லவோ பலவீனத்திற்கு ஆளாகிவிட்டேன்.

     தலையைத் தூக்கி என் அமுத முகத்தை அவருக்குக் காட்டவே எனக்கு லஜ்ஜையாக இருந்தது.

     “சரி, என்னம்மா இது? என்ன சமாசாரம்?” என்று துடிதுடிக்கும் கண்களுடன் அவர் என் முகத்தைத் திருப்பினார். “என்ன வருத்தம் உனக்கு சுசீலா? சொல்லி விட்டு அழேன். என்ன நேர்ந்தது?” என்றெல்லாம் அடுக்கியவாறு அவர் என் கண்களைத் துடைத்த போது எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

     “ஒன்றுமில்லை...”

     “ஒன்றுமில்லையா? குலுங்கக் குலுங்க விம்மினாயே, சுசீ! என்னிடம் சொல்லக் கூடாதா? இன்னுமும் உன் விம்மல் ஒலி என் நெஞ்சைத் தாக்குகிறது. நீ ஒன்றுமில்லை என்கிறாயே?”

     ஆனாலும் நான் எத்தனை அசடு? அவரிடம் என்ன சொல்லுவது? உங்கள் மதனி என் தந்தையைப் பிச்சைக்கார பிராமணன், நகை செய்து போடவில்லை என்று சொன்னாள் என்று சொல்வதா? சீ, சின்னக் குழந்தைகள் சண்டையா இது? அவள் என்ன சொன்னால் எனக்கு என்ன? விலைமதிப்பற்ற அன்புச் சுரங்கமாகிய அவர் எனக்குச் சொந்தமாக இருக்கும் போது, வேறு என்ன குறை எனக்கு, இந்த அற்பச் சங்கதிகளை எல்லாம் அவர் காதில் போடுவது தப்பு.

     என் கிலேசப் புகையினூடே அப்பாவின் உபதேசம் பளிச்சிட்டது.

     ‘ஒவ்வொருவர் குணம் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவரவர்கள் இயல்புக்கு ஒத்தபடி இணைந்து போக வேண்டும்’ என்றாரே!

     கொடுக்கக் கூடாத பொருளை விரும்பிக் குழந்தை அழுதால் தாய் எத்திப் பேச்சு வாக்கில் ஒளித்து விடுவாள். ஆனால் சற்றே சமாதானம் அடைந்தது போல் தூங்கும் குழந்தை, நித்திரையில் அந்த நினைவு வந்தால் கூடக் கேட்டு அலற ஆரம்பிக்கும். அப்படித்தான் அப்பாவின் நினைவு மறுபடியும் என் நெஞ்சில் வேதனையைக் கிளர்த்தியது. பட்டுவின் இழிவுச் சொல், அவரது பரிதாபமான எலும்பெடுத்த உருவம் - எல்லாம் என்னைத் திரும்பவும் உணர்ச்சிக்கு அடிமையாக்கின. மீண்டும் விசும்பல் எழும்பியது.

     அவர் என் நெஞ்சை அமுக்கிக் கொண்டார். “ஒன்றும் இல்லை என்று திரும்பவும் தேம்புகிறாயே, சுசீ? உனக்கு மனக் கஷ்டம் என்ன என்று சொல்ல மாட்டாயா?” என்று கெஞ்சினார்.

     இந்த அயனான கட்டத்தில், “ஏண்டி சுசீலா?” என்று கூப்பிட்டுக் கொண்டே மாமியார் வந்து விட்டாள்.

     எக்கச்சக்கமாக எங்காவது நரம்பு பிசகிக் கொண்டிருந்தால் மளுக், மளுக் என்று வலிக்கும். சில சமயங்களில் அது எவ்வித மருந்தும் இன்றிச் சட்டென்று திரும்பும் போதோ சோம்பல் முறிக்கும் போதோ பிசகிய விதம் போல விட்டுவிடுவது உண்டு. மாமியாரின் குரல் சாட்டையடி போல என் துயரத்தைக் களைந்து மேலே வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்ற என் பழைய நிலைக்குக் கொணர்ந்தது என்றாலும், கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட திருடனைப் போல் அல்லவா அழுத கண்களுடனும், ஆதரவு காட்டும் அவருடனும் தென்பட்டு விட்டேன்? ஏதோ சொல்ல வந்தவள் திக்பிரமை அடைந்து விட்டவள் போல் எங்களை வெறித்துப் பார்த்த வண்ணம் அவள் நின்றாள்.

     நிமிர்ந்து பார்க்காமலேயே புடவைத் தலைப்பால் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு “எனக்கு ரொம்பத் தலை வலிக்கிறது” என்று சமயோசிதமாகப் புளுகினேன்.

     “நன்றாக இருக்கிறது! தலைவலிக்கா இப்படி முகம் சிவக்க அழுதிருக்கிறாய்? என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேனே! ஆயிரம் மருந்துகள் இருக்குமே இங்கு? எதையாவது கொஞ்சம் கேட்டு வாங்கிப் போட்டுக் கொள்வதற்கென்ன? என்னவோ அம்மா! எங்கள் நாட்களில் இந்த வயசில் மங்கு மங்கென்று காரியம் செய்வோம். இங்கு என்ன இடுப்பில் ஒரு குடமும் கையில் ஒரு குடமும் தூக்க வேண்டுமா? வீடு மெழுக வேண்டுமா? மாடு கறக்க வேண்டுமா, என்ன இருக்கிறது? இந்த அடுப்பில் ஏற்றி இறக்குவது ஆகாமல் பூஞ்சையாக இருக்கிறதுகள்” என்று பொழிந்து தள்ளிக் கொண்டு போனாள் அவள்.

     என் கணவர் அப்போது ஒன்றும் கேட்கவில்லை. மாமியார் சென்ற பின், “நிஜமாக உனக்கு என்ன வருத்தம் சுசீலா? தலைவலி என்று பொய் தானே சொன்னாய்?” என்று கேட்டார். அவர் கூரிய பார்வை என் மனதைப் பிளந்து கொண்டு போகும் போல் இருந்தது.

     “ஒன்றும் இல்லை. நிஜமாகவே தலைவலிதான். ஏதோ நினைத்துக் கொண்டேன். ஊரின் ஞாபகம் வந்துவிட்டது” என்று என் பொய்க்குக் குஞ்சலம் பொருத்தி விட்டேன் நான். கஷ்டப்பட்டுச் சிரிப்பை வரவழைத்துக் கொள்ளக் கூட முயன்றேன். மேகங்களிலிருந்து வெளிப்படும் சந்திரனைப் போல் அவர் நகைத்தார். “அட அசடு! அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டா குழந்தை அப்படி அழுது விட்டது. இந்தச் சில நிமிஷங்களில் நான் எப்படித் துடித்து விட்டேன். தெரியுமா சுசீ? நான் இருக்கும் போது நீ இப்படி அழலாமா? இனிமேல் இம்மாதிரி உன் முகம் கன்றக் கூடாது. தெரியுமா சுசீ?” என்றார். சிறு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல. இந்நிலையில் மாமியார் அமிர்தாஞ்சன் டப்பி ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். “இந்தா! இதைத் தடவிக் கொண்டு சற்று படுத்திரு. தானாகப் போய்விடும். நன்றாக அழுதாய்? பச்சைக் குழந்தையைப் போல், தலையை வலிக்கிறதென்று!” என்று கூறி, அதைக் கொடுத்துச் சென்றாள்.

     படுக்கையை விரித்து அவர், “நீ படுத்துக் கொள். நான் மருந்து தடவி விடுகிறேன்” என்று உபசாரம் செய்தார். “எல்லோரும் சாப்பிடக் காத்திருப்பார்களே, நான் போகிறேன்” என்று நழுவ முயன்ற என்னைப் பலவந்தமாகப் படுக்கையில் தள்ளி, அமிர்தாஞ்சனத்தைத் தடவி விட்டு அவர் சாப்பிடப் போய்விட்டார்.

     என் அசட்டுத்தனத்துக்காக என்னையே நொந்து கொண்டேன். அருங்குணக் குன்றாக அவர் இருக்கும் போது அவசரக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்தேனே என்று குன்றிப் போனேன். சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அவர் கூறிய வார்த்தைகள் அன்று முழுவதும் அவர் அன்பையே எண்ணி வியக்க வைத்தன!

     “சுசீலா, உன்னால் எனக்கு எத்தனை பெருமையாக இருக்கிறது தெரியுமா? இந்த வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் அதற்குள் நீ எப்படி கவர்ந்து விட்டாய்! வந்த மறுகணமே புக்ககத்து மனிதர்களிடம் வெறுப்புக் காட்டும் பெண்களே மலிந்து இருக்கும் போது, நீ எனக்கு மனைவியாகக் கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம் என்றெண்ணி மகிழ்ந்திருக்கிறேன். உன் கண் கலங்க நான் எப்படிச் சகிக்க முடியும்?” என்று புகழ் வார்த்தைகளால் போர்வை இட்டு விட்டார். ‘கணவன் வீட்டாரிடம் நான் காட்டும் பணிவுக்கு எனக்கு இவ்வளவு தூரம் நன்றி காட்டும் அவரன்றோ உண்மையில் ஆதர்ச புருஷர்? அவருடைய மனம் கோணாமல், அவர் என்னிடம் வைத்திருக்கும் பெருமையையும் மதிப்பையும் நான் நிலைநாட்டிக் கொள்ள வேண்டாமா? அது ஒன்று தான் என் வாழ்வின் குறிக்கோள். வைரத்திலும் புள்ளியுண்டு. முத்திலும் சொத்தையுண்டு எனக் கேட்டதில்லையா நான்? அவர் எனக்கு இங்கு இருக்கும் போது, இந்த அற்பமான தோஷங்களைப் பொருட்படுத்தக் கூடாது’ என்று சங்கற்பம் செய்து கொண்டேன்.

     அன்றிரவு பட்டு சாப்பிடுவதற்காகக் கீழே வரவில்லை. அதற்குப் பதில் தன் பர்வத உடம்பைத் தூக்கிக் கொண்டு அவள் தாய் மேலும் கீழும் போய் வந்தாள். என் கணவர் காரியாலயத்திலிருந்து வந்ததிலிருந்து டாக்டர் வீட்டுக்கும், மருந்துக் கடைக்கும் அலைந்த வண்ணமாக இருந்தார். இரவு பத்து மணிக்குப் பிறகே சந்தடி குறைந்திருந்தது. ‘பிரசவத்திற்கு இன்னும் போதிருக்கிறது’ என்று சொல்லி டாக்டர் போய்விட்டதாக மாமியார் சொல்லிக் கொண்டாள்.

     வேலைகளை முடித்துக் கொண்டு நான்மாடிக்கு வந்த போது தான் எனக்கு எத்தகைய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று புரிந்தது. எங்களுடைய அறை தான் பிரசவத்திற்கு ‘ஆகி’ வந்ததாம்! அங்குள்ள சில சாமான்கள் கூடத்துக்கு வந்திருந்தன. குழந்தைகள் கூடத்தில் உறங்கிக் கொண்டிருக்க என் கணவர் முன்புற வராந்தாவில் படுக்கை மீது சாய்ந்தவாறு ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். வழக்கம் போல் மைத்துனர் தம் அறைக்குள் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். லீலா மேஜை விளக்கு எரிய ஏதோ எழுதிய வண்ணம் இருந்தாள். அவள் அறைக்குள் வைத்திருந்த என் பொருள்கள், நான் அன்றிரவும் அதற்கு மேலும் எத்தனை நாட்களோ அவளுடன் கழிக்க வேண்டும் என்று யாரும் சொல்லாமல் விளக்கின. அர்த்தமற்ற, யாரிடமென்று சொல்ல முடியாததொரு கோபம், படபடப்பு, கவலை, ஏமாற்றம், துயரம் முதலிய எல்லா உணர்ச்சிகளும் என்னை வென்று அடிமையாக்கி விடும் போல் இருந்தன. போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு வெளிக்குத் தெரியாமல் மௌனமாகக் கண்ணீர் பெருக்கினேன்.