-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்




24

     காரசாரமான விவாதங்களுக்குப் பின்னர் வந்திருந்த பேராசிரியரையும் அவருடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு சிண்டிகேட் சிதம்பரநாதனைப் பார்க்கப் போனான் ரகு.

     “இந்த மாறுதல் விஷயமாக் கவனிக்க வேண்டியது ‘டைரக்டரேட் ஆஃப் காலேஜியேட் எஜுகேஷன்ஸ்’ - ஆபீஸ் தான். சிண்டிகேட்டோ, யூனிவர்ஸிடியோ இதிலே எதுவும் பண்ண முடியாது” - என்று புறப்படும்போதே தயங்கினாற் போலச் சொன்னார் வந்தவர்.

     “நம்ம சிண்டிகேட் சாரைச் சாதாரணமா நெனைக்காதீங்க. அவராலே முடியாததுன்னு எதுவுமே இல்லை. டைரக்டரேட் ஆஃப் காலேஜியேட் எஜுகேஷன் ஆபீஸ்லியும் அவர் யாரையாவது பிடிச்சு வச்சிருப்பாரு. எதுக்கும் அவரை முதல்லேயே பார்த்துட்டோம்னா நல்லது” என்று ரகு கூறியதும் வந்தவரும் அவர் மனைவியும் தட்டிச் சொல்லாமல் அவனோடு உடன் புறப்பட்டார்கள்.

     “இன்னிக்குக் காமர்ஸ் சுப்பையன் வர மாட்டாரு! லீவு. அதனாலே பி.காம். ஸ்டூடண்ட்ஸ் வந்தா வேற எங்கேயாச்சும் உட்கார்ந்துக்கச் சொல்லுங்க. இல்லாட்டி வீட்டுக்குப் போகச் சொல்லிடுங்க...” என்று போகிற போக்கில் ரகு சொல்லியதைக் கேட்டுச் சரி என்பது போல் தலையை ஆட்டினான் சுதர்சனன்.

     காமர்ஸ் ஆசிரியர் சுப்பையனுக்குச் சொந்தமாக வண்ணாரப் பேட்டையில் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் இருந்தது. அதையும் நடத்திக் கொண்டேதான் ரகுவின் டூட்டோரியல் காலேஜிலும் வேலை பார்த்தார். அவர். இன்ஸ்டிடியூட்டில் பண வசூல் -சம்பளம் - வசூலிக்கும் நாட்களில் இங்கு அவர் வரமாட்டார். வருகிற நாட்களில் மாணவர்களுக்குக் கத்தை கத்தையாக ‘சைக்ளோஸ்ட்’ செய்த நோட்ஸ்களைக் கொடுத்து விடுவார். சுப்பையனுக்குப் பயங்கரமான பணத்தாசை. சென்னை நகரின் ஒவ்வொரு பேட்டையிலும் ஒரு கமர்ஷியல் இன்ஸ்டிட்யூட்டைத் திறந்து நடத்தி ஏராளமாகப் பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை அவருக்கு உண்டு! “பணம் பண்ணத் தெரியணும் சார்! பணம் பண்ணத் தெரியாட்டி இந்த ஊர்லே ஒருத்தன் உங்களை மதிக்க மாட்டான். பல சரக்கு வியாபாரி எப்பிடிப் பேட்டைக்குப் பேட்டை புதுப் புது பிராஞ்ச் திறந்து வியாபாரம் பண்றானோ அப்பிடியே படிப்பையும் அங்கங்கே விற்கத் தெரியணும்” என்பது தான் சுப்பையன் அடிக்கடி பிறரிடம் உதிர்க்கும் பொன்மொழி.

     சுப்பையனுடைய படிப்பு விற்பனைத் தத்துவத்தை, நினைத்துவிட்டு இரண்டு நாட்களுக்கு முன் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் தான் கேட்ட ஒரு நயமான உரத்த சிந்தனைக்குரிய சொற்பொழிவையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்த்தான் சுதர்சனன்.

     “இந்தியாவில் விளைய வேண்டிய முன்னேற்றங்களும், வளர்ச்சிகளும் விளையாமல் இருக்கத் தடைகளாயிருப்பவர்கள் வெளியே வேறெங்கும் இல்லை. அவர்கள் இந்தியாவுக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். குடிசைகளும் சேரிகளும், இருக்கிறவரைதான் அவற்றைச் சரி செய்வதாக ஒவ்வொரு தேர்தலிலும் மக்களிடம் ஏதாவது பேசிக் கொண்டிருக்கவும் உறுதியளிக்கவும் வாய்ப்பு உண்டு என்று எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் அவற்றை அதாவது குடிசைகளையும் சேரிகளையும் அப்படியே இன்னும் பேணி காக்க விரும்புகிறார்கள். அறியாமை அறவே ஒழிந்து விட்டால் பின்பு தங்களுடைய தனித்துவமும் சிறப்பும் போய் விடுமோ என்று கருதி அறிவாளிகள் ஒரளவு ‘அறியாமை’ எக்காலத்திலும் நாடு முழுவதும் ‘ஸ்டாக்’ இருக்கும்படி ஒரு சீராகக் கவனித்துக் கொள்கிறார்கள். தாங்கள் செழிப்பை உண்டாக்குவதாகப் பிரச்சாரம் செய்யப் போதுமான ‘வறுமை’ நாட்டில் எப்போதும் ‘ஸ்டாக்’ இருக்கும்படி வறுமையை ஒழிக்கப் பாடுபடவென்றே அவதாரம் செய்திருப்பவர்கள் நினைக்கிறார்கள். சாதி வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பவர்களின் கதையும் இதுதான். ஒரு சில மாதங்களிலோ, வருடங்களிலோ சாதிகளும், ஏற்றத் தாழ்வுகளும் போய்விட்டால் அப்புறம் தாங்கள் எதை ஒழிக்கப் போவதாகச் சவால் விடுவது என்று தயங்கியே அவற்றை முழுமையாக ஒழித்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் போட்டி போட்டுக் கொண்டு நாட்டில் அறியாமையையும் சாதி பேதங்களையும் வளர்க்கின்றன. நான் வெற்றி வாகை சூடுவதற்காகவே பிறர் தோற்கும் வாய்ப்புக்கள் நேரவேண்டும் என்று ஒவ்வொரு வெற்றி ஆசைக்காரனும் நினைக்கிற நாடு இந்தியா. வறுமை, சாதி வேறுபாடு, ஏற்றத்தாழ்வு. கல்வியறிவின்மை, குழப்பங்கள், இவை எல்லாம் ஒவ்வொரு தேர்த விலும் ஜெயிக்க விரும்புகிறவர்களுக்குத் தேவைப்படுகின்றன. ஆகவே வறுமை, சாதி வேறுபாடு, அறியாமை இவை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நாட்டிலிருந்து ஒழிந்து விடாமல் அவர்கள் இங்கே முனைந்து கவனித்துக் கொள்கிறார்கள். பலர் அறியாதவர்களாக இருந்தால்தான் ஒருவனை அறிவுமேதையாக நம்புவார்கள் என்று கருதும் நாடு இது. மற்றவர்களுக்கு முழு வளர்ச்சி வந்து விட்டால் தங்களை அப்புறம் மதிக்க மாட்டார்களோ என்று தயங்கித் தயங்கிச் செயல்படுகிற ஐந்தாம்படை அறிவாளிகள் நிறைந்திருப்பதும் இங்கேதான். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடாது. ஆனால் உலகமே இருண்டு விட வேண்டும் என்று கருதித் திட்டமிட்டுத் தவம் போலக் கண்ணை மூடிக் கொள்ளும் பூனைகள் இங்கே அதிகம். இரட்டை வேடமும் வெளிப்பூச்சான போலித் தியாகமும், உள்ளார்ந்த சுயநலமும், ஒளி வருவதை எதிர்த்துக் கூசும் இருண்ட மனநிலையும் உள்ள வரை இந்தியா உருப்படாது” - என்று அந்தச் சொற்பொழிவாளர் பேசியிருந்தார். வடக்கே ஒரு பல்கலைக் கழகத்தில் சோஷியாலஜிப் பேராசிரியராக இருப்பதாக அந்தச் சொற்பொழிவாளரைப்பற்றி விசாரித்து அறிந்து கொண்டான் சுதர்சனன். அவர் கூறிய கருத்துக்கள் அவன் சிந்தனையைத் தூண்டின.

     பகல் ஒன்றரை மணிக்குச் சுதர்சனன் அலுவலக அறையில் இருந்தபோது ரகுவும், பேராசிரியரும், அவர் மனைவியும் சிண்டிகேட் சிதம்பரநாதனும் ஒரு டாக்சியில் வந்து இறங்கினார்கள். டாக்சிக்கு வெளியூரிலிருந்து வந்திருந்த அந்தப் பேராசிரியர்தான் பணம் கொடுத்துக் கணக்குத் தீர்த்தார். அவர்கள் அனைவரும் தனிப் பயிற்சிக் கல்லூரியின் அலுவலக அறைக்குத்தான் வந்திருந்தார்கள். அறைக்குள் நுழைந்ததும் சிதம்பரநாதன் சுதர்சனனுக்குப் பெரிய கும்பிடாக ஒன்றைப் போட்டுவிட்டுச் “செளக் கியமா இருக்கீங்களா?” என்று வினவினார். சுதர்சனன் தலையை ஆட்டினான். ரகு உள்ளே நுழைந்ததும் அடுத்தடுத்து இரண்டு டெலிஃபோன்கள் செய்தான் - ஒரு ஃபோன் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு. மற்றொன்று கோட்டையில் செகரெட்டேரியட்டுக்கு.

     “டைரக்டர் ஆபீசுக்கோ, கோட்டைக்கோ புறப்படறத்துக்கு முந்தி இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்குச் சில்லறை மாத்தி வச்சுக்குங்க. தேவைப்படலாம்” என்றார் சிண்டிகேட் சிதம்பரநாதன்.

     “முன்னாடியே மாத்தி வச்சிருக்கேன்! கவலைப்படாதிங்க” - என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் டிரான்ஸ்ஃபர் தொல்லைக்கு ஆளாகி வந்திருந்த பேராசிரியர். சிதம்பரநாதனே மேலும் விளக்கினார்:

     “சில்லறைத் தேவதைகளுக்குச் சில்லறையாகக் காணிக்கை செலுத்தினாலொழிய மூலஸ்தானத்தில் போய்த் தரிசனம் பண்ண முடியாது சார்.”

     “புரிகிறது! இது கூடப் புரியாதா என்ன?” என்றார் வந்தவர். சுதர்சனன் குறுக்கிட்டுக் கேட்டான்:

     “சுதந்திரம் வந்து முப்பது வருசமான பின்னாலும் இந்த ‘சம்திங்’ போகலியே? ‘சம்திங்’ இனாம், இலஞ்சம் எல்லாம் ஒரு மரபாகவே ஆகிவிட்டனவே!”

     “இனாம் வேறே; லஞ்சம் வேறே. ஏதோ உள்ளே விடறதுக்காக வாட்ச்மேன், பியூனுக்கு ஒண்ணு ரெண்டு கொடுக்கிறது லஞ்சமாயிடாது.”

     “கொஞ்சமாச் சம்பளம் வாங்கறவனுக்குக் கொடுக்கிறது லஞ்சமாயிடாது.”

     “கொஞ்சமாச் சம்பளம் வாங்கறவனுக்குக் கொடுக்கிறது இனாம் அல்லது ‘சம்திங்’. அதிகச் சம்பளம் வாங்கறவனுக்குக் கொடுக்கிறது லஞ்சம். ஊரறிய மேடையிலேயே சொல்லி ‘ஓதியிடறது’ போலப் பண்டமாக் கொடுத்துடறது அன்பளிப்பு இல்லியா சிண்டிகேட் சார்?”

     “அட சும்மா இரும் ஐயா! நீர் ஒரு வம்புக்கார ஆளாயிருப்பீர் போல இருக்கே” - என்று பாதி வேடிக்கையும், பாதி கண்டிப்பும் கலந்த குரலில் சுதர்சனனை நோக்கிச் சொல்லியபடி அவன் முதுகில் சற்று அழுத்தமாகவே தட்டினார் சிண்டிகேட் சிதம்பரநாதன்.