http://www.chennailibrary.com



6. உணர்வின் அலைகள்

     கருப்பு விரிப்பில் கைதவறிச் சிந்திய மல்லிகைப் பூக்களைப் போல் வானப்பரப்பு முழுதும் நட்சத்திரமணிகள் இறைபட்டுக் கிடந்தன. யானைத் தந்தத்தின் நுனிபோல் சிறிய பிறைச் சந்திரன் கருநீல வானத்தின் நெற்றிச் சுட்டிபோல் அழகாக இருந்தது. அழகியநம்பி கப்பலின் மேல் தளத்தில் நின்று கடலையும், வானத்தையும், அலைகளையும், நட்சத்திரங்களையும் சேர்த்து ஒரு புதிய அழகை உருவாக்க முயன்று கொண்டிருந்தான். அலைகளின் ஓசை, கப்பல் செல்லும் பொழுது ஏற்பட்ட ஒலி, இந்த இரண்டும் அவன் மனத்தில் ஒருவகைக் கிளர்ச்சியை உண்டாக்கின. எந்த வேகமாகச் செல்லும் வாகனத்தில் சென்றாலும் அந்த வேகத்தில் அடுக்கடுக்கான உயரிய சிந்தனைகள் சிலருக்கு ஏற்படும். கற்பனை வெளியில் எங்கோ, எதையோ நோக்கி உணர்வுக்கும் எட்டாததொரு பெரு வெளியில் பறப்பது போன்று உணர்ச்சி, பஸ்ஸில், இரயிலில், விமானத்தில் பிரயாணம் செய்யும்போது சிலருக்கு ஏற்படும். இப்போது கப்பலில் செல்லும்போது அழகியநம்பிக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டது.

     அந்த ஆழ்கடலின் பேரலைகளைப் போல அவன் மனத்தில் எண்ணற்ற நினைவு அலைகள் மோதின. நடந்தவை, நடக்கின்றவை, நடக்கவேண்டுமென்று அவன் விரும்பியவை - எல்லாவற்றையும் வஞ்சகமின்றி நினைத்தது அவன் மனம். அந்தச் சிறிய கப்பல் சில பல பிரயாணிகளையும் ஏற்றுமதிச் சரக்குகளையும் மட்டும் கொண்டு செல்வதாக அவனுக்குத் தோன்றவில்லை. தனக்கே தெரியாத தன்னுடைய எதிர்காலத்தை நோக்கித் தன்னை இழுத்துக் கொண்டு போவது போல் தோன்றியது.

     பிரமநாயகம் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தான். கப்பலின் ஆட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் சோர்ந்துபோய்ப் படுத்திருந்தார் அவர். மேல் தளத்திலிருந்த பிரயாணிகளில் பெரும்பான்மையானவர்கள் அதே நிலையில்தான் இருந்தனர். அதே கப்பலில் அவனோடு பிரயாணம் செய்த இரு ஆங்கிலோ இந்திய யுவதிகள் மட்டும் அவனைப் போலவே மேல் தளத்தில் கிராதி அருகே நின்று கடற் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தனர். மேல் தளத்தில் மின்சார விளக்கொளியில் கீச்சுக் குரலில் ஆங்கிலப் பேச்சும், கிண்கிணிச் சிரிப்புமாக அவர்கள் நின்று கொண்டிருந்த நிலை ஏதோ ஒரு நல்ல ஓவியம் போல் காட்சியளித்தது.

     அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கும், அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கும் நடுவே பத்துப் பன்னிரண்டு அடி இடைவெளி இருக்கலாம். பரங்கிப்பூ நிறம், சுருள் சுருளாக 'பாப்' செய்த கூந்தல், கையில் அலங்காரப் பை, முல்லை அரும்புகள் உதிர்வது போலச் சிரிப்பு. அழகிய நம்பியின் பார்வை இரண்டொரு விநாடிகள் அந்தப் பெண்களின் மேல் நிலைத்தது. அவர்களும் அவனைப் பார்த்தனர்.

     கூச்சம், வேறுபாடறியாத அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே நடந்து அவனருகே வந்துவிட்டனர். கப்பல் செல்லும் போது நடந்தால் தள்ளாடுமே; அந்தப் பெண்கள் குதிகால் உயர்ந்த பாதரட்சையைத் தளத்தில் ஊன்றித் தடுமாறித் தடுமாறி நடந்தது வேடிக்கையாக இருந்தது. அழகியநம்பி அவர்களுடைய புன்னகையை ஏற்றுக் கொள்வதுபோல் பதிலுக்குப் புன்னகைத்தான். இடுப்புப்பட்டைகள் இறுகித் தைக்கப்பட்டிருந்த அந்த கவுன்களோடு அவர்களைப் பார்க்கும் போது, 'இல்லையோ உண்டோவெனச் சொல்லிய இடை' என்று எப்போதோ கேள்விப்பட்டிருந்த இலக்கிய வரிகள் அவன் நினைவில் எழுந்தன.

     அந்த யுவதிகள் அவனருகே வந்து நின்றுகொண்டு சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்விகளைத் தொடுத்தனர். அழகியநம்பி சிரித்துக் கொண்டே அவர்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூறலானான்.

     "நீங்கள் இலங்கையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரப்போகிறீர்களா" - இது அவர்கள் அவனைக் கேட்ட முதல் கேள்வி.

     அழகியநம்பி ஒருகணம் தயங்கினான். அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவதென்று சிந்தித்தான். சொற்களையும் முந்திக் கொண்டு சிரிப்புத்தான் அவனுக்கு வந்தது. அவர்கள் முகங்களை ஏறிட்டுப் பார்த்ததுமே அவனுடைய இதழ்கள் நெகிழ்ந்து சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றன.

     "ஊர் சுற்றிப் பார்க்கப் போகவில்லை, பிழைப்புக்காக வேலை தேடிப் போகிறேன். சில ஆண்டுகள் தொடர்ந்து இலங்கையிலே இருக்க நேரிடும்," - என்று ஆங்கிலத்திலேயே அவர்களுக்கு மறுமொழி கூறினான். அதற்கு மேலும் அவர்களுடைய உரையாடல் தொடர்ந்தது. அவனைப்பற்றிய விவரங்களை அவர்கள் கேட்டார்கள். சிறுசிறு கேள்விகளுக்கு அழகியநம்பி கூறிய பதிலிலிருந்து அவனுடைய வாழ்க்கைச் சுருக்கத்தையே ஓரளவு தெரிந்து கொண்டார்கள் அவர்கள். அவனாவது அவர்கள் கேட்டுப் பதில் சொன்னான். அந்தப் பெண்களோ அவன் கேட்கவேண்டுமென்று காத்திராமல் தாங்களாகவே தங்களைப் பற்றிய விவரங்களைக் கூறத் தொடங்கி விட்டனர்.



பிறந்த மண் : 1  2  3  4  5  6   7   8   9   10   11   12   13   14   15
16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann6.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.