![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
24. திடுக்கிடும் செய்தி "பிரமநாயகம் வருமான வரி - விற்பனைவரி - மற்றும் வியாபாரத் துறைகளில் செய்திருந்த மோசடிகளைப் பூர்ணா காட்டிக் கொடுத்துவிட்டாள். ஆத்திரத்தில் வெறிகொண்டு அவளை அவர் குத்திக் கொலை செய்துவிட்டார்." - பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த விவரமான செய்தி முழுவதையும் படிக்கிற அளவுக்கு அழகியநம்பியின் கண்களுக்கோ, மனத்துக்கோ பொறுமை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்து என்ன நடந்திருக்க வேண்டுமென்று மேலே கண்டவாறு சுருக்கமாக அனுமானித்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் தெரிவித்தான். கார் நகரெல்லையைக் கடந்து அனுராதபுரத்தின் அடர்ந்த பெருங் காடுகளுக்கிடையே போகும் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அந்தக் காட்டுப் பிரதேசத்திற்குள் மிருகங்களின் பயம் அதிகமாகையினால், அதைக் கடந்து செல்கிறவரை எங்கும் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுவிட வேண்டுமென்று டிரைவர் சொல்லியிருந்தான். ஆனால், அழகியநம்பியின் மனமோ, காரின் சக்கரத்தைக் காட்டிலும் வேகமாகப் பறந்து செல்ல முடியுமானால் சென்று விடலாமே, என்று விரைந்து கொண்டிருந்தது. "வியாபாரத்துறையில் சூழ்ச்சியும், மோசங்களும் செய்து முன்னுக்கு வருகிறவர்கள் எல்லோரும் இப்படித்தான் எதையாவது செய்து, எதிலாவது அகப்பட்டுக் கொண்டு திடீரென்று கவிழ்ந்து போகிறார்கள்." - என்றாள் மேரி. "அந்தத் தத்துவமெல்லாம் இருக்கட்டும். இப்போது இவர் என்ன செய்வார். அந்த மோசக்கார வியாபாரியை நம்பிக் கடல் கடந்து வந்து இவரல்லவா மோசம் போய் விட்டார்? இவருக்கு இங்கே வேறு ஏதாவது நல்ல வேலையாகப் பார்க்க வேண்டுமே?" - என்று லில்லி அனுதாபத்தோடு கூறினாள். அழகியநம்பி ஒன்றும் பேசத் தோன்றாமல் சிலையாகச் சமைந்து போய் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனம் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது. இந்த முடிவு அவன் எதிர்பார்த்ததுதான். சபாரத்தினம் அன்று குறிப்பாக அவனிடம் சொல்லியிருந்த உண்மையிலிருந்து என்றாவது ஒருநாள் பிரமநாயகத்துக்கும், அவருடைய வியாபாரத்துக்கும் இந்தக் கதி ஏற்படுமென்று அவன் எண்ணியதுண்டு. ஆனால், இவ்வளவு விரைவில் அது ஏற்படுமென்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை. மறுபடியும் சந்தேகத்தோடு பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான். கொலை கடைக்குள்ளேயே நடந்திருப்பதனால் கடை எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களும் பூட்டிச் சீல் வைக்கப்பட்டுப் போலீசார் வசம் இருப்பதாகப் போட்டிருந்தது. சிறைக் கதவுகளுக்கு உள்ளே விலங்கு பூட்டிய கைகளோடு நிற்கும் பிரமநாயகத்தை மானசீகமாகக் கற்பனை செய்து நினைத்துப் பார்த்துக் கொண்டான் அவன். "மிஸ்டர் அழகியநம்பீ! நீங்கள் எதை நினைத்தும் வருத்தப் பட வேண்டாம். அந்தக் கடையோடு உங்களுக்கிருந்த தொடர்பு இந்த விநாடியோடு விட்டுப் போய் விட்டதென்று நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். அப்பாவுக்கு எத்தனையோ பெரிய கம்பெனிகளில் செல்வாக்குள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்து தரச் சொல்லுகிறேன்." - என்று லில்லி கூறியபோதும் அவன் அவளுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. அவளால் இவனுடைய முகபாவத்திலிருந்து அதை விரும்புகிறானா; இல்லையா, என்பதைக் கண்டு கொள்வதற்கு முடியவில்லை. அவன் நீண்ட நேரமாகப் பேசாமல் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தது அந்த இரு பெண்களின் மனத்திலும் சொல்லொணாத வேதனையை உண்டாக்கிற்று. "இதோ பாருங்கள்! உங்களுக்கு எங்கள் மேல் கோபமா? நீங்கள் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள்?" - அவன் தோளைத் தன் வலது கைவிரல்களால் செல்லமாகத் தடவிக் கொண்டே சிறு குழந்தைபோல் வினாவினாள் மேரி. அழகியநம்பி அவள் கூறியதைக் கேட்டுத் தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான். "நான் என்னுடைய துன்பங்களையும், துரதிர்ஷ்டங்களையும் எண்ணி எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறேன். பிறந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் இங்கே வந்தால், இங்கே நான் வந்த வேளையில் பார்த்தா இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? உங்கள் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை." - என்று மேரியையும், லில்லியையும் பார்த்துச் சொன்னான் அவன். "வீண் வருத்தப்படாதீர்கள் ஐயா. நீங்கள் இந்தச் சமயத்தில் எங்களோடு இப்படிப் பிரயாணம் புறப்பட்டு வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று. அங்கே இருந்தால் மோசடி, கொலை, இவற்றுக்காக நடைபெறும் வழக்குகளில் நீங்களும் சிக்கிக் கொள்ள நேர்ந்திருக்கும்" - என்று டிரைவரும் அவனைத் திரும்பிப் பார்த்து ஆறுதல் கூறினான். "இனிமேல் அந்த கடையையோ, அதன் முதலாளியையோ, அதிலுள்ளவர்களையோ, உங்களுக்குத் தெரிந்ததாகவே வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள்! பேசாமல் எங்கள் வீட்டில் வந்து தங்கிவிடுங்கள். இன்னும் ஒரு வாரத்தில் அப்பாவிடம் சொல்லி உங்களுக்கு ஒரு அருமையான வேலை பார்த்துவிடலாம்." - லில்லி முன்பு கூறியதையே மீண்டும் வற்புறுத்திக் கூறினாள். அழகியநம்பி மனம் உடைந்து போய்விடக் கூடாதே என்பதற்காகத்தான் அந்த நம்பிக்கையை மீண்டும் மீண்டும், நினைவூட்டிக் கொண்டிருந்தாள் அவள். "மேரி! லில்லீ! நீங்கள் இருவரும் என் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பிற்கு நான் நன்றி செலுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்காக நீங்கள் உங்களுடைய தந்தையிடம் சொல்லி எந்த வேலையும் தேட முயற்சிக்கக் கூடாது. இனி நான் என்ன வேலையைச் செய்ய வேண்டுமென்பதை நானே தீர்மானித்துக் கொண்டு விட்டேன்." "என்ன செய்யப் போகிறீர்களாம்?" "தயவு செய்து நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்ற செய்தி என் மனத்தில் மட்டுமே இருக்கட்டும். அது இப்போது உங்களுக்குத் தெரிய வேண்டாம்." "நீங்கள் சொல்ல விரும்பாவிட்டால் நாங்கள் வற்புறுத்தவில்லை. உங்களுக்கு விருப்பம் இருக்குமானால் இதைவிட உயர்ந்த வேலையாக வசதியான வருவாய் உள்ளதாக அப்பாவிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லலாம் என்பதற்காகத்தான் சொன்னோம்." "இல்லை! அது வேண்டாம்" - அவன் மறுத்தான். அப்போது அவன் குரலில் தவிர்க்க முடியாத உறுதி இருந்தது. "அப்படியானால் நீங்கள் எங்கள் வீட்டிற்குக் கூட வர மாட்டீர்களா?" - இந்தக் கேள்வியைக் கேட்டதும் தன்னுடைய சொந்த மனத் துன்பங்களை மறந்து கலகலவென்று சிரித்து விட்டான் அழகியநம்பி. "ஏன் சிரிக்கிறீர்கள்?" "ஒன்றுமில்லை! உங்களுடைய கள்ளமில்லா மனங்களை நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது. எங்கோ தற்செயலாகச் சந்தித்துப் பழகிய ஒரு தமிழ்நாட்டு இளைஞனுக்கு உங்களிடமிருந்து இவ்வளவு அனுதாபம் கிடைப்பதை எண்ணும் போது உண்மையாக எனக்குப் பெருமிதம் உண்டாகிறது." - அவன் கூறியதைக் கேட்டதும் அந்தப் பெண்கள் தலையைக் குனிந்து கொண்டனர். பிரயாணம் தொடங்கிய எட்டாவது நாள் மாலை இருட்டுகிற சமயத்துக்கு அவர்கள் கொழும்பை அடைந்தனர். பிரமநாயகத்தின் கடையிருந்த தெருவழியேதான் டிரைவர் காரை விட்டுக் கொண்டு போனான். கடை இருக்குமிடத்தைக் கார் நெருங்கும் போது அவன் இதயம் 'படபட' வென்று வேகமாக அடித்துக் கொண்டது. ஒரு விநாடி காரை அந்த இடத்தில் வேகத்தைக் குறைத்து நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினான் அவன். கார் நின்றது. வெட்கத்தோடும், பயத்தோடும் தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். அந்தத் தெருவில் அப்போது நின்று கொண்டிருந்த அத்தனை பேரும் தன்னையே பார்ப்பது போல் அவன் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று. சாதாரணமாக அந்த மாலை நேரத்திற்கு அந்தக் கடை வாசலில் திருவிழாக் கூட்டம் தென்படும். அன்று மயான பூமி போலக் கலகலப்பிழந்து இருண்டு காணப்பட்டது. கடை பூட்டியிருந்தது. கொலை நடந்த இடம் என்பதற்காகக் காவல் வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் அந்தக் கடை வாசல் வந்தவுடன் ஏதோ விந்தைப் பொருளைப் பார்ப்பது போல் ஓரிரு விநாடிகள் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் இரகசியமாக ஏதோ பேசிக் கொண்டு செல்வதையும் அழகியநம்பி கண்டான். முதன் முதலாகக் கப்பலில் வந்து இறங்கிப் பிரமநாயகத்தோடு அவரைப் பின்பற்றி அந்தக் கடைக்குள் காலடி வைத்த போது எவ்வளவு நம்பிக்கைகளைத் தன் மனத்தில் உண்டாக்கிக் கொண்டான் அவன்? தன்னையும், தன் குடும்பத்தின் கடல் கடந்த ஏழ்மையையும், அந்தக் கடை போக்கி விடப் போகிறதென்று எவ்வளவு பெருமையாக நினைத்தான் அவன்? நான்கைந்து ஆண்டுகள் ஊரை மறந்து, பிறந்த மண்ணை மறந்து, பெற்றவள், உடன்பிறந்தவள், உற்றார், உறவினரை மறந்து ஊழியம் செய்தால் சில ஆயிரம் ரூபாய்களைத் திரட்டிக் கொண்டு தாயகம் திரும்பலாம் என்று கனவு கண்டானே அவன்? ஆனால், இப்போது காரிலிருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கடையின் இருண்ட முகப்பைப் பார்க்கும் போது அவன் உள்ளத்தில் என்ன உணர்ச்சி உண்டாயிற்றுத் தெரியுமா? உலகத்திலேயே மிக மட்டமான அருவருக்கத்தக்க ஒரு பொருளை, யாரோ தன்னைத் தன் கண்களினால் வற்புறுத்திப் பார்க்கச் செய்துவிட்டாற் போன்ற உணர்ச்சிதான் உண்டாயிற்று. தலையை உள்ளே இழுத்துக் கொண்டு டிரைவரிடம் காரைச் செலுத்துமாறு சொன்னான். கார் புறப்பட்டது. "கடைக்குள் உங்கள் பெட்டி, படுக்கை வேறு பொருள்கள் எவையேனும் அகப்பட்டுக் கொண்டு விட்டனவோ?" - என்று மேரி அவனைக் கேட்டாள். "இல்லை! அப்படி ஒன்றும் அதிகமான பொருள்களை இந்த நாட்டிற்கு வரும் போது நான் கொண்டு வரவில்லை" - என்று சுருக்கமாக அவளுக்குப் பதில் சொன்னான் அவன். கார் வெள்ளவத்தையில் உள்ள அவர்கள் பங்களாவை நோக்கிச் சென்றது. "எனக்கு இப்போது உடனே சபாரத்தினத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பம்பலப்பிட்டியாவில் உள்ள சபாரத்தினத்தின் வீட்டில் கொண்டு போய் விட்டால் நல்லது." - என்றான் அழகியநம்பி. "இப்படிச் செய்துவிட்டால் என்ன? நாம் எல்லோரும் இப்போது முதலில் நம்முடைய வீட்டிற்கே போகலாம். அங்கே போய் டிரைவரிடம் சபாரத்தினத்தின் முகவரியைச் சொல்லி அனுப்பிக் காரில் கூட்டிக் கொண்டு வரச் செய்யலாமே?" - என்றாள் லில்லி. அவனுக்கும் அந்த யோசனை சரியென்றே தோன்றியது. 'பாவம்! சபாரத்தினத்திற்கு வேலை போயிருக்கும். அவருக்கு மட்டுமா? கடையில் வேலை பார்த்து வந்த அத்தனை ஆட்களுக்கும் - சமையற்காரச் சோமு உட்பட வேலை போயிருக்கும். நிர்வாகத்தின் மோசடிகளால் ஒரு பெரிய வியாபார நிறுவனம் கவிழ்ந்து விட்டால் எத்தனை பேர் நடுத்தெருவில் நிற்க நேரிடுகிறது!' - அழகியநம்பி சிந்தித்தான். 'பிரமநாயகம் கொலை செய்கிற அளவுக்குப் பூர்ணாவின் மேல் எப்படி ஆத்திரமடைந்தார்? பூர்ணா அவரிடம் அப்படி மாட்டிக் கொள்கிற அளவுக்கு ஏமாளியாக இருந்தாளா? பிரமநாயகம் இனி என்ன ஆவார்? அவருடைய மோசடிக் குற்றங்களுக்கும், கொலைக் குற்றங்களுக்கும் என்ன தண்டனைகளை அடைவார்? கடை என்ன ஆகும்? வியாபாரம் என்ன ஆகும்?' - என்பதைப் பற்றி அழகியநம்பி அதிகம் சிந்தித்து மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கவில்லை. நடந்ததைப் பற்றி - இனி நடக்க இருப்பவற்றைப் பற்றித் தன்னுடைய சொந்தத் தீர்மானங்களைப் பற்றி - சபாரத்தினம் என்ற தன் உண்மை நண்பரிடம் சில மணி நேரம் அமைதியாகக் கலந்தாலோசித்துப் பேச ஆசைப்பட்டான் அவன். கார் பங்களா வாசலை அடைந்ததும் முன்புறத்தில் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்த வோட்ஹவுஸும், திருமதி வோட்ஹவுஸும், சிறு குழந்தைகளைப் போல் துள்ளிக் குதித்து ஓடி வந்து வரவேற்றனர். "பிரயாணம் முழுவதும் சுகமான அனுபவங்கள் ஏற்பட்டனவா?" - என்று முகம் மலரச் சிரித்துக் கை குலுக்கினார் அவர். திருமதி வோட்ஹவுஸ் மகிழ்ச்சிப் பெருக்கினால் தன் பெண்களை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார். லில்லி தன் தாயையும், தந்தையையும் ஒரு ஓரமாக அழைத்துக் கொண்டு போய் ஏதோ கூறினாள். வோட்ஹவுஸுக்கும், திருமதி வோட்ஹவுஸுக்கும் முகத்தில் இருந்த மலர்ச்சி மறைந்தது. அவர்கள் அழகியநம்பியின் அருகே வந்தனர். "நீங்கள் வேலை பார்த்து வந்த இடத்தில் இப்படி விபரீதமாக நடந்து கடையை மூடிவிட்டார்களாமே? இப்போதுதான் லில்லி எல்லா விபரமும் சொன்னாள். இரண்டு மூன்று நாட்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்திதான் பிரமாதப்படுகிறது. ஊர் முழுதும் இந்தப் பேச்சுத்தான். ஆனால், அதே கடையில்தான் நீங்கள் வேலை பார்க்கிறீர்களென்று எனக்குத் தெரியாது. லில்லி சொன்னபின் இப்போதுதான் அறிந்தேன். என் மனமார்ந்த அனுதாபங்கள்." - என்றார் வோட்ஹவுஸ். "பரவாயில்லை! அதைப்பற்றி நான் அதிக வருத்தம் அடையவில்லை." - என்று அழகியநம்பி அவருக்குப் பதில் கூறினான். "டிரைவரிடம் உங்கள் நண்பரின் முகவரியைச் சொல்லி அனுப்புங்கள். போய் அழைத்துக் கொண்டு வரட்டும்." - என்று நினைவூட்டினாள் மேரி. அழகியநம்பி காரின் அருகே சென்று பம்பலப்பிட்டியாவில் சபாரத்தினம் குடியிருக்கும் தெருவின் பெயரைச் சொல்லி அடையாளமும் கூறினான். "இருபது நிமிடங்களில் கூட்டிக் கொண்டு வந்துவிடுகிறேன். நீங்கள் உள்ளே பேசிக் கொண்டிருங்கள்." - டிரைவர் புறப்பட்டுச் சென்றுவிட்டான். பிஸ்கட்டும், தேநீரும் கொடுத்து அவனை உபசரித்தார்கள். வோட்ஹவுஸ் தம்பதிகள் மாறிமாறி அவனுக்கு ஆறுதல் கூறினர். அவர்கள் தன்னிடம் ஆறுதலையும், அனுதாபத்தையும் கூறுவதைவிடக் கூறாமல் இருந்தால் தன் மனம் கலங்காமல் அமைதியாக இருக்குமென்று அப்போது அழகியநம்பிக்குத் தோன்றியது. சபாரத்தினம் வரும் நேரத்தை ஆவலுடன் எதிர் பார்த்தான் அவன். |