பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



27. பிறந்த மண்ணை நோக்கி

     துறைமுகம் கண்ணுக்கு மறைகிறவரை மேல் தட்டின் கிராதியைப் பிடித்துக் கொண்டு நின்றான் அழகியநம்பி. துறைமுகத்தில் சபாரத்தினம், மேரி, லில்லி, வோட்ஹவுஸ் தம்பதிகள் - ஆகியோர் விடை கொடுக்கும் பாவனையில் அவனை நோக்கிக் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தனர். அவனும் தன் வலது கையை உயர்த்தி ஆட்டினான். புதிதாக அவன் விரல்களில் ஏறியிருந்த மோதிரங்கள் மின்னின. எதிர் வெயிலில் கண்கள் கூசிப் பார்வையை மறைத்து மங்கச் செய்தது. கப்பலின் போக்கில் துரிதமான வேகம் ஏற்பட்டது. தூரத்துச் சுவரின் மேல் தெரியும் ஒளி மங்கிய ஓவியம் போலத் துறைமுகமும், கொழும்பு நகரமும் மெல்ல மெல்லப் பின் தங்கிவிட்டன. கிராதியருகே நின்று கொண்டிருந்த அவன் கண்களில் தேங்கியிருந்த இரண்டு சொட்டுக் கண்ணீர் கடலின் உப்பு நீரில் சிந்திக் கலந்தன. கண்களைத் துடைத்துக் கொண்டு தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான்.

     தன்னைத் தானே ஏற இறங்கப் பார்த்துக் கொண்டபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. வலதுகை விரல்களில் மோதிரம், இடதுகை மணிக்கட்டில் 'பளபள'வென்று பொன் நிறம் மின்னும் புத்தம்புதுக் கைக்கடிகாரம். யாரோ பணக்கார மனிதர் ஊர் திரும்புகிற மாதிரிப் பழக்கூடைகள், துணிமணிகள் எல்லாம் தன்னைச் சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அவன் எதை நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டானோ, அதையே கேள்வியாகக் கேட்டுவிட்டார் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு கிழவர்.

     "தம்பிக்குக் கொழும்பிலே ஏதாவது பெரிய வியாபாரமோ?"

     "இல்லை! தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். சும்மா ஊர் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன். வந்து இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு ஊர் திரும்புகிறேன்." - 'பிழைப்புக்காக வந்திருந்தேன்' - என்று சொல்ல விரும்பவில்லை இப்போது அவன். அதனால் வேன்றுமென்றே ஊர் சுற்றிப் பார்க்க வந்ததாகப் புளுகினான்.

     "கடிகாரம் புதிதாகத் தெரிகிறதே! கொழும்பில் வாங்கினதோ?"

     "ஆமாம்! இங்கே இருப்பவர்கள் பிரியப்பட்டு வாங்கிக் கொடுத்தார்கள்."

     அந்தக் கிழவர் அதற்கப்புறமும் தொண தொணவென்று உப்புச் சப்பில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவனுக்கு எரிச்சலாயிருந்தது. எழுந்து மறுபடியும் கிராதியருகே போய் நின்றான். கப்பலின் அடிப்புறத்தில் வேகமாகக் கிழிபட்டு விலகும் நீரலைகளைக் குனிந்து பார்க்கத் தொடங்கினான். ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் யார் யாரிடமிருந்து எத்தகைய வரவேற்புக் கிடைக்குமென்ற சிந்தனை அவனுக்கு ஏற்பட்டது. அம்மாவுக்கு ஒரு முன் கடிதமாவது எழுதிப் போட்டிருக்கலாம். இப்போதைக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு என் முகத்தையே பார்க்க முடியாதென்று அவள் நினைத்துக் கொண்டிருப்பாள். நான் திடுதிப்பென்று போய் நிற்கப் போகிறேன். பாவம்! என்னவோ, ஏதோ, என்று பதறிப் போவாள். இங்கு நடந்ததொன்றும் அவளுக்குத் தெரிந்திருக்காது. நான் இப்படித் திரும்பி வந்துவிட்டது அம்மாவுக்கும், வள்ளியம்மைக்கும் பெருத்த ஏமாற்றமாகக் கூட இருக்கும். "அதிர்ஷ்டங் கெட்டபிள்ளை. உனக்கு ஒரு நல்ல காரியத்திலும் கைராசி கிடையாது. நீ போன வேளை - பிரமநாயகமும் இந்தக் கதிக்கு ஆளாக வேண்டுமா?" - என்று இப்படி ஏதாவது சொல்லி அம்மா தன்னைக் கோபித்துக் கொள்வாளென்று நினைத்தான்.

     முதல் ஒரு வாரத்தில் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்லி மீளமுடியாது. சிலர் உண்மையான அனுதாபத்தோடு, 'ஏன் தம்பி அதற்குள் திரும்பிவிட்டாய்?' - என்று கேட்பார்கள். 'என்ன தம்பீ? கொழும்புக்குப் போய் இரண்டு மூன்று வாரத்திற்குள்ளேயே பணக்காரனாகத் திரும்பி வந்து விட்டாய் போலிருக்கிறதே' - என்று கிண்டலும், குத்தலுமாகக் கேட்பார்கள் வேறு சிலர். நான் ஏதோ பணத்தை மூட்டை கட்டி வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு பன்னீர்ச்செல்வம் தம்முடைய கடன் பாக்கியை வசூலிப்பதற்கு வந்து விடுவார். தூத்துக்குடியில் போய் இறங்கியதும் முதல் காரியமாக முருகேசனுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட வேண்டும். நான் கொழும்பிலிருப்பதாக நினைத்துக் கொண்டு அவன் தொடர்ந்து அங்கே கடிதம் எழுதிக் கொண்டிருக்கப் போகிறான். 'முடிந்தால் குறிஞ்சியூருக்கு வந்து ஒரு நடை சந்தித்து விட்டுப் போ! நான் இனிமேல் ஊரிலேயே தான் இருப்பேன். வேறெங்கும் போகப் போவதில்லை.' - என்று எழுதினால் அவன் கூட இங்கே வந்துவிட்டுப் போவான். அது தான் சரி! அப்படியே அவனுக்கு ஒரு கடிதம் எழுதி விடுவோம்.

     'கப்பல் தூத்துக்குடிக்குப் போகும்போது சாயங்காலமாகி விடும். அத்தறுவாய்க்கு மேல் தூத்துக்குடியிலிருந்து குறிஞ்சியூருக்குப் பஸ் கிடைக்குமோ? கிடைக்காதோ? ஒரு சுமையும் இல்லாமலிருந்தால் டிரங்கைக் கையில் பிடித்துக் கொண்டு கால் நடையாகவே பஸ் ஸ்டாண்டிற்குப் போய் விடலாம். அப்பப்பா! இந்தச் சபாரத்தினமும், வோட்ஹவுஸ் தம்பதிகளும் சேர்ந்து கொண்டு இல்லாத கூத்தெல்லாம் செய்திருக்கிறார்களே. கடை வீதியிலுள்ள பழங்களையெல்லாம் வாங்கிக் கட்டிவிட்டிருக்கிறார்களே. இவ்வளவு பழக்கூடைகளையும், புதுத் துணிமணிகளையும் கொண்டு போய் நான் என்ன செய்யப் போகிறேன்?

     காந்திமதி ஆச்சியின் குடும்பத்தைப் பற்றி நினைத்துக் கொண்டான். பகவதியின் அழகிய கண்கள் அவன் நினைவில் தோன்றின. அந்தப் பெண்ணைக் குளத்திலிருந்து காப்பாற்றிய நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொன்றாக அவன் நினைத்தான். தான் ஊரிலிருந்து புறப்படுகிற அன்றைக்குக் கடைவாசலில் நின்று பகவதியும், அவள் தங்கை கோமுவும் தன்னைப் பார்த்த ஏக்கம் நிறைந்த பார்வை இன்னும் அவன் கண்களுக்குள்ளேயே இருந்தது. பின்பு கொழும்பிலிருக்கும்போது ஆச்சியிடமிருந்து தனக்கு வந்த கடிதத்தில், 'அக்காவுக்கும் எனக்கும் சதா உங்கள் நினைவாகவே இருக்கிறது.' - என்று கடைசியில் ஒரு ஓரத்தில் கோமு கிறுக்கியிருந்த எழுத்துக்களை நினைத்தான் அவன். வோட்ஹவுஸ் வாங்கிக் கொடுத்திருக்கும் துணிமணிகளில் இரண்டொரு நல்ல வாயில் சிற்றாடைகளையும், பட்டு இரவிக்கைத் துணிகளையும் கோமுவுக்கும், பகவதிக்கும் கொடுக்க வேண்டும் என்று அழகியநம்பி தனக்குள் தீர்மானம் செய்து கொண்டான். 'பழக்கூடைகளைத் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் கொஞ்சம், கொஞ்சமாகப் பங்கு வைத்துக் கொடுத்துவிட வேண்டியதுதான். பெருமாள் கோவில் மணியம் நாராயணபிள்ளை, முன்சீப் புன்னைவனம், புலவர் ஆறுமுகம், வாசகசாலைக் கந்தப்பன், காந்திமதி ஆச்சி, - எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தால் சரியாக இருக்கும். பன்னீர்ச்செல்வம், கரிவேட்டை, விறகு வேட்டைக்காக மலைப்பக்கம் போகாமல் ஊரில் இருந்தாரானால் அவரைக் கூடப் போய்ப் பார்த்துக் கொஞ்சம் பழங்களைக் கொடுத்துக் கடனுக்கு அவசரப்படுத்தி விரட்டாமல் சமாதானப்படுத்திவிட்டு வரலாம்!

     'முருகேசனும், மற்ற நண்பர்களும் கோடை விடுமுறையின் போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுற்றிப் பார்க்கப் போவதாக அவன் எழுதியிருந்தானே? முடிந்தால் நாமும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாமே!'

     'அடடா! நான் என்ன முட்டாள்தனமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் குடும்ப நிலையென்ன? என் தலையில் சுமந்திருக்கும் கடன் சுமை எவ்வளவு? 'வேடிக்கையாக ஊர் சுற்றலாமா? உல்லாசப் பிரயாணம் போகலாமா?' - என்று விளையாட்டுப் புத்தியில் நினைத்துக் கொண்டிருக்கிறேனே! என் திட்டங்கள் நிறைவேறி, நான் உருப்படியாக வாழ்ந்து குடும்பத்தைக் கடன் தொல்லைகளிலிருந்து மீட்க வேண்டுமே! தங்கை வள்ளியம்மைக்கு நல்ல இடத்தில் நல்ல படியாகத் திருமணம் செய்து அனுப்பி வைக்க வேண்டுமே! நான் நாலைந்து வருஷங்கள் கொழும்பில் பிரமநாயகத்தின் கடையில் வேலை பார்த்து மிச்சம் பிடித்து ஆயிரக்கணக்கிலே சேர்த்துக் கொண்டு வந்து இதையெல்லாம் குறைவின்றிச் செய்து முடிக்கப் போகிறேன் என்று என் தாய் சொப்பனம் கண்டு கொண்டிருப்பாளே; நான், முருகேசனோடும், மற்றவர்களோடும் ஊர் சுற்ற வேண்டுமென்று நினைக்கலாமா?' - அவனுடைய சிந்தனைக்கு ஒரு முடிவே இல்லை.

     கப்பல் கிராதியருகே வெயில் கடுமையாக உறைத்தது. சபாரத்தினத்தின் அன்பளிப்பான கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். மணி பதினொன்று ஆவதற்கு இருந்தது. வெயிலின் சூடு பொறுக்காமல் இடத்தில் வந்து உட்கார்ந்தான். கப்பலின் ஆட்டத்தில் சோர்வடைந்து சுருண்டு போய்ப் படுத்திருந்தார் கிழவர். அநேகமாக எல்லோரும் அதே நிலையில் தான் இருந்தனர். கப்பல் செல்லுகிற ஒலியைத் தவிர அதில் பிரயாணிகள் இருக்கிறார்கள் என்பதற்குரிய எந்த அடையாளமும் தெரியாதது போல் சந்தடியற்றிருந்தது.

     அழகியநம்பிக்குப் பசியாக இருந்தது. கப்பலில் குழாய் இருந்த அறைக்குப் போய் முகம், கைகால் கழுவிக் கொண்டு கீழ்த்தட்டிலிருந்த உனவு விடுதிக்கு இறங்கிச் சென்றான் அவன். சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்ததும் அவனுக்கு அசதியாக இருந்தது. முதல் நாள் இரவும் அவனுக்கு நல்ல தூக்கமில்லை. கப்பலில் தான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலேயே நீட்டி முடக்கிக் கொண்டு சாய்ந்தான். அந்த வசதிக் குறைவான சூழ்நிலையிலும் நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டான்.

     மாலை ஐந்தேகால் மணி சுமாருக்குக் கப்பலின் சங்கொலி அவனை எழுப்பியது. எழுந்திருந்து கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்த்தான். கப்பலைத் தூத்துக்குடித் துறைமுகத்தில் இழுத்து நங்கூரம் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். தூங்கியெழுந்திருந்த அசதி உடல் முழுதும் பூட்டுப் பூட்டாக வலித்தது. கைகளை உதறிச் சோம்பல் முறித்துக் கொண்டு இறங்குவதற்குத் தயாராகச் சாமான்களை வரிசையில் எடுத்து வைத்தான். அன்றொருநாள் இதே மாதிரிக் கலகலப்பான மாலை நேரம் ஒன்றில் இதே துறைமுகத்திலிருந்து பிரமநாயகத்தோடு கொழும்புக்குக் கப்பலேறிய நினைவு வந்தது அவனுக்கு. தான் அன்று புறப்பட்டது, இன்று திரும்பி வந்தது, இரண்டையும் இணைத்துப் பார்த்தபோது அவனுக்கே சிரிப்பு வந்தது. அன்றிருந்த ஆர்வமும், நம்பிக்கையும், இன்று திரும்பும் போதிருக்கும் வெறுப்பும், அவநம்பிக்கையும் - ஒன்றோடொன்று ஒட்டாத பண்புகளாக அவன் மனத்தில் தோன்றின.

     அவன் கைகளில் புதுக்கடிகாரமும், மோதிரங்களும், மின்னியதால் அவனைப் பசையுள்ள பணக்காரப் பேர்வழியாக நினைத்துக் கொண்டு விட்டார்களோ, என்னவோ; மூட்டை தூக்கும் கூலிகள் ஈக்களை போல வந்து மொய்த்துக் கொண்டார்கள். ஒரு கூலியாளிடம் தன் சாமான்களை ஒப்படைத்தான்.

     துறைமுகவாயிலுக்கு வந்ததும் அன்று தனிமையில் தன்னைப் பசியோடு தவிக்க விட்டுவிட்டுப் பிரமநாயகம் நுழைந்து சாப்பிட்டுவிட்டு வந்த அதே ஹோட்டலுக்குள் இன்று கூலிக்காரனையும் சேர்த்து அழைத்துக் கொண்டு சென்றான் அழகியநம்பி. தான் காப்பி அருந்தியதோடு கூலிக்காரனுக்கும் வாங்கிக் கொடுத்தான்.

     பஸ் ஸ்டாண்டை அடையும் போது மணி ஐந்தேமுக்கால். குறிஞ்சியூருக்கு ஆறேகால் மணி சுமாருக்குக் கடைசியாக ஒரு பஸ் இருக்கிறதென்று கூலியாள் சொன்னான்.

     "சரி! இனிமேல் நான் பஸ் ஏறிப் போய்க் கொள்கிறேன்" - என்று சொல்லி அவனுக்குப் பேசிய கூலியை எடுத்துக் கொடுத்தான்.

     "இருக்கட்டும் ஐயா; கூலி எங்கே ஓடிப்போகிறது? பஸ் வந்ததும் உங்களை ஏற்றிவிட்டுப் பிறகு வாங்கிக் கொள்கிறேன்." - என்றான் அவன். 'படித்தவனாயிருந்தாலென்ன? படிக்காத பாமரனாயிருந்தால் என்ன? யார் தன் மேல் அன்பைச் செலுத்துகிறானோ? அவன் மேல் தானும் பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டுமென்று மனிதனுக்குத் தெரிந்திருக்கிறது' - ஒரு குவளைக் காப்பிக்காக அந்த மூட்டை தூக்கும் கூலிக்காரன் காட்டியை நன்றியைக் கண்டதும் அவனுக்குப் பெருமையான எண்ணங்கள் உண்டாயின. அப்போது, 'இறங்கியதும் முருகேசனுக்குக் கடிதம் போட வேண்டும்' - என்று தான் தீர்மானித்திருந்ததை அவன் நினைத்துக் கொண்டான்.

     "தபாலாபீஸ் பக்கத்தில்தானே இருக்கிறது? பஸ் வருவதற்குள் நீ போய்விட்டு வந்துவிடலாமா?" - என்று கூலியாளைக் கேட்டான். "ஆகட்டும் ஐயா! போய்விட்டு வந்து விடலாம்." - என்று பதில் சொன்னான் கூலியாள். அழகியநம்பி காசை எடுத்து கொடுத்து அந்தக் கூலியாளை அனுப்பினான். தான் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டு கார்டில் நாலுவரி அவசர அவசரமாகக் கிறுக்கி முருகேசனுடைய விலாசத்தையும் எழுதி அதை அந்தக் கூலியாளிடமே சொல்லித் தபால் பெட்டியில் போடச் செய்து விடலாம். - என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது. திடீரென்று அவன் எதிர்பாராத விதமாக முருகேசனே அவன் முன்னால் வந்து நின்றான்.

     "என்னப்பா இது? நான் என் கண்களால் இங்கே பார்ப்பது அழகியநம்பியைத்தானா? நீ எப்போது திடீரென்று கொழும்பிலிருந்து இங்கே வந்து குதித்தாய்?" - என்று சிரித்துக் கொண்டே கேட்டான் முருகேசன். திடீரென்று அவனை அங்கே சந்தித்த வியப்பிலிருந்து தெளிவடைந்து பேசுவதற்கே சிறிது நேரம் பிடித்தது அழகியநம்பிக்கு.

     "நீ எப்படித் தென்காசியிலிருந்து திடீரென்று தூத்துக்குடியில் வந்து குதித்தாயோ; அதே மாதிரித்தான்..." என்றான் அழகியநம்பி.

     "விளையாட்டுப் பேச்சு அப்புறம் இருக்கட்டும்! நீ எப்போது கொழும்பிலிருந்து திரும்பினாய்? என்ன காரணம்? இவ்வளவு அவசரமாகத் திரும்பிவிட்டாயே! போய் இரண்டு மூன்று வாரம் கூட ஆகவில்லையே?" - என்று பரபரப்பாக முருகேசன் கேள்விகளைத் தொடுத்தான்.

     "முருகேசா! எல்லாம் பின்பு விவரமாகச் சொல்லுகிறேன். நானே உனக்கு என் வரவு தெரிவித்துக் கடித மூலமாகக் குறிஞ்சியூரில் வந்து சந்திக்கச் சொல்லி எழுதலாமென்று இப்போதுதான் என்னோடிருந்த கூலியாளைத் தபாலாபீஸுக்கு அனுப்பினேன். உனக்கு ஆயுள் நூறுதான்! போனவன் கார்டு வங்கிக் கொண்டு வருவதற்குள் நீயே வந்து விட்டாய்." -

     "இன்றைக்கு எங்கள் உறவு முறையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த ஊரில் கல்யாணம். அதற்காக வந்தேன். முகூர்த்தம் காலையிலேயே முடிந்துவிட்டது. இதோ ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பஸ்ஸிற்கு டிக்கெட் கூட வாங்கியாகி விட்டது." - என்று முருகேசன் கூறிய போது "நீ இப்போது ஊருக்குப் போக வேண்டாம். என்னோடு குறிஞ்சியூருக்கு வந்து இரண்டு நாள் இருந்துவிட்டுப் போ. உன்னிடம் சில முக்கியமான விஷயங்கள் கலந்து பேச வேண்டும் எனக்கு" - என்று இடைமறித்துச் சொன்னான் அழகியநம்பி.

     "டிக்கெட் வாங்கிவிட்டேனே?"

     "வாங்கினால் என்ன குடி முழுகிப் போயிற்று? பணம் வேணுமானால் நான் தருகிறேன்."

     "பணத்திற்குச் சொல்லவரவில்லை! வீட்டில் எதிர் பார்ப்பார்களே என்று தயங்கினேன். பரவாயில்லை! நான் வருகிறேன். குறிஞ்சியூருக்கே போவோம். எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து விடு." - என்று ஒப்புக் கொண்டான் முருகேசன்.

     கூலியாள் கார்டு வாங்கிக் கொண்டு வந்தான். பஸ்ஸும் வந்தது. சாமான்கள் ஏற்றப்பட்டன. முருகேசனும் அழகியநம்பியும் ஏறிக்கொண்டனர். கூலியாள் சில்லறையை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தான். அழகியநம்பி இருவருக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கினான். சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247