26. பிரியா விடை வோட்ஹவுஸும், திருமதி வோட்ஹவுஸும் - அழகியநம்பியை ஆன மட்டிலும் கெஞ்சிப் பார்த்தார்கள். "வந்து முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் நீங்கள் இப்படி மனம் வெறுத்து ஊர் திரும்புவது எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் எந்த இடத்தை நம்பி எவரை அண்டிக் கொண்டு வந்தீர்களோ, அங்கே அவரிடத்தில் விபரீத விளைவுகளால் அவநம்பிக்கை அடைந்துவிட்டீர்கள். அவர் இல்லாவிட்டால், அவருடைய கடை இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய கொழும்பு நகரத்தில் உங்களுக்கு வேறு நல்ல வேலை கிடைக்காமலா போய்விடும்? நீங்கள் இருக்க மட்டும் சம்மதியுங்கள். நானாயிற்று; இன்னும் இரண்டே நாட்களில் உங்களுக்குச் சரியான இடத்தில் தகுதியான வேலை பார்த்துத் தருகிறேன். 'ஊருக்குப் போகவில்லை' - என்று மட்டும் ஒரு வார்த்தை சொல்லுங்கள்; போதும்" - என்று உள்ளம் உருக வேண்டினார் அந்த வெள்ளைக்கார இராணுவ அதிகாரி. சாப்பிடாமல் ஒரு மூலையில் உட்கார்ந்து அவன் ஊருக்குத் திரும்பக் கூடாதென்று அடம்பிடித்தாள் மேரி. லில்லி கண்கள் கலங்கி அவனை ஏக்கத்தோடு பார்த்த ஒவ்வொரு பார்வையும் நெஞ்சைப் பிடித்து உலுக்கியது. "இவ்வளவு பேர் சொல்லுகிறோமே! நீங்கள் கேட்டால் தான் என்ன? ஆனாலும் நீங்கள் இவ்வளவு முரண்டு பிடிக்கக் கூடாது." - என்று அவனைக் கண்டிப்பது போன்ற குரலில் கூறினாள் திருமதி வோட்ஹவுஸ். -இவ்வளவும், மாடியறையில் பேசி விட்டுச் சபாரத்தினமும், அழகியநம்பியும், கீழே இறங்கிவந்த பின்பு நடந்தது. சபாரத்தினமும் அப்போது அங்கே தான் அவர்களோடு இருந்தார். இருசாராருக்கும் நடுவில் ஒன்றும் குறுக்கிட்டுப் பேசாமல் சிரித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார். உலகமே தலைகீழாகக் கவிழ்ந்து நிலைகுலைந்து போனாலும் அந்த முகத்திலிருந்து அந்தச் சிரிப்பு மாறாது போலிருக்கிறது! "இவ்வளவு பேர், இவ்வளவு நேரமாகக் கூறியும் கேட்க மாட்டேனென்கிறாரே? நீங்கள் இவருக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறீர்கள். கொஞ்சம் விவரமாக எடுத்துச் சொல்லி இங்கே தங்கச் செய்யுங்களேன்?" - என்று சபாரத்தினத்தை வேண்டிக் கொண்டார் வோட்ஹவுஸ். "நான், 'இவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு ஊர் திரும்ப வேண்டாமென்று' இவருக்கு உங்களுக்கெல்லாம் முன்னாலேயே சொல்லிவிட்டேன். கேட்கமாட்டேனென்கிறார்! நாம் என்ன செய்யலாம்?" "மிஸ்டர் சபாரத்தினம்; நீங்களே கூறுங்கள் இப்போது உடனே ஊருக்குத் திரும்பிப் போய் இவர் என்ன சாதித்து விடப் போகிறார்?"
"தயவு செய்து நீங்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். நாலைந்து நாட்களாகவே என் மனநிலை சரியில்லை. உங்களிடம் வார்த்தைகளால் கோவைப்படுத்திக் கூறமுடியாத ஒரு பேருணர்ச்சி என்னை நான் பிறந்த பூமிக்கு இழுக்கிறது. உடனே, ஓடோடிப் போய் எனது அழகான கிராமத்து வயல் வெளிகளின் மேடும், பள்ளமுமான வரப்புகளில் கால்தேய நடக்க வேண்டும்போல ஒரு துடிப்பு உண்டாகிறது. 'பதினைந்து, இருபது நாட்களுக்குள்ளாகப் பச்சைக் குழந்தையைப் போல் இப்படி இந்தப் பிரிவினை உணர்ந்து ஏங்குகிறேனே!' - என்று என்னை நீங்கள் கேலி செய்தாலும் செய்யலாம். அல்லது விநோதமான எனது இந்தப் பலவீனம் உங்களுக்குப் புரியாததாகவோ, புதுமையாகவோ இருக்கலாம். ஏதோ ஒரு தனிமை வேதனை, ஏதோ ஒரு ஏக்கம், உங்களுக்கெல்லாம் நடுவில் - உங்களுக்கு மிகவும் வேண்டியவனாக உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் என் மனத்தின் ஒரு கோடியில் கன வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கிறது. என்னை வற்புறுத்தாதீர்கள். எனக்காக எந்த உத்தியோகமும் நீங்கள் பார்க்க வேண்டாம். பிறந்த மண்ணில் போய் நான் பிச்சையெடுத்தாவது பிழைத்துக் கொள்வேன். என் பாதங்கள் இங்கிருந்து பெயர்ந்து செல்வதற்குத் துறுதுறுக்கின்றன. என்னைப் போகவிடுங்கள்."
சிறுகுழந்தை கதறுவது போல் அவர்கள் எல்லோருக்கும் முன்னால் உணர்ச்சிமயமாக மாறிக் கதறினான் அழகியநம்பி. இன்னும் கொஞ்சம் வற்புறுத்தினால் அவன் வாய்விட்டு அழுதுவிடுவான் போலிருந்தது. அவனுடைய உதடுகள் துடித்தன. கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. முகத்தில் முத்துமுத்தாக வேர்வை அரும்பியது. கண்களில் தனிப்பட்ட தொரு ஒளி மின்னியது. அவன் தெய்வ சந்நதம் வந்தவனைப் போல் காணப்பட்டான். அதற்குமேல் யாருக்குமே அவனிடம், அவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடச் சொல்லத் தோன்றவில்லை. எப்போதும் சிரிப்பும், கலகலப்புமாக நடைபெறும் இரவுச் சாப்பாடு அன்று அங்கே மிக அமைதியாக நடந்து முடிந்தது. திருமதி வோட்ஹவுஸ் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். மேரி சாப்பிட வர மறுத்துவிட்டாள். லில்லி கண்ணீருக்கிடையே குனிந்த தலை நிமிராமல் ஏதோ சாப்பிட்டேனென்று பேர் செய்தாள். யாருமே அன்று சுவையுணர்ந்து விருப்பத்தோடு சாப்பிடவில்லை. சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் உட்கார்ந்து கொண்டிருந்து விட்டுச் சபாரத்தினம் புறப்பட்டார். "வீட்டிற்குப் போய்ப் படுத்துக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் துறைமுகத்திற்கு வழியனுப்ப வந்து விடுகிறேன்," - என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்தார் அவர். ஆனால், வோட்ஹவுஸ் அவரைப் போக விடவில்லை. "இல்லை மிஸ்டர் சபாரத்தினம். நீங்கள் இங்கேயே படுத்திருந்து காலையில் எங்களோடு வந்து துறைமுகத்தில் இவரை வழியனுப்பிவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போய்க் கொள்ளலாம்." "சரி! உங்கள் விருப்பம் அப்படியானால் இருக்கிறேன்." - சபாரத்தினம் அங்கேயே தங்கிவிட்டார். அப்போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. வோட்ஹவுஸ், திருமதி வோட்ஹவுஸ், சபாரத்தினம் மூவரும் சேர்ந்து அப்போது உடனே கடைவீதிக்குப் போய் அழகியநம்பிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பச் சில பொருள்கள், நல்ல பழவகைகள் - எல்லாம் வாங்கிக் கொண்டு வரத் தீர்மானித்தனர். மேரி, லில்லி, அழகியநம்பி, ஆகிய மூவரையும் தனிமையில் விட்டு விட்டு அவர்கள் காரில் கடைவீதிக்குப் புறப்பட்டுச் சென்றனர். கார் பங்களா வாசலைக் கடந்து சென்றதும் மேரியும், லில்லியும், அழகியநம்பியின் அருகே வந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு தங்கள் இதயத்தில் குமுறும் உணர்ச்சிகளைக் கொட்டத் தொடங்கிவிட்டார்கள். அந்த இரண்டு பெண்களின் நான்கு விழிகள் அவனுடைய காலடியில் கண்ணீரைச் சிந்தின. "நீங்கள் இருவருமே என்மேல் அளவுக்கு மீறிக் குழந்தைத் தனமாகப் போட்டி போட்டுக் கொண்டு அன்பைச் செலுத்தி விட்டீர்கள். இப்போது வேதனைபடுகிறீர்கள். உங்களுடைய வேதனையை உணர்வதைத் தவிர வேறெதுவும் கூற முடியாதவனாக இருக்கிறேன் நான்!" - என்று மனமுருகிக் கூறினான் அழகியநம்பி. "இரயில் பிரயாணத்தின் போது தற்செயலாகச் சந்தித்துப் பின் உடனே மறந்து விடுகிற எத்தனையோ பேர்களைப் போல எங்களையும் நீங்கள் மறந்துவிட நினைக்கிறீர்கள் போலிருக்கிறது" - மேரியின் இந்தக் கேள்வி அவனுடைய நெஞ்சைச் சுட்டது. சூட்டைத் தாங்கிக் கொண்டான். விவரமாக என்ன பதில் சொல்லி அவர்களைச் சமாதானப் படுத்துவதென்று அவனுக்குத் தெரியவில்லை. தன் மனம் இரக்கமற்ற கல்மனமென்று அவர்கள் நினைத்துக் கொள்வார்களோ, என்ற அச்சம் ஏற்பட்டது. "நான் தாய்நாட்டிற்குத் திரும்புகிற இந்த நேரத்தில் உங்கள் களங்கமில்லாத அன்பினால் என்னை வேதனைப்படுத்துகிறீர்களே ஒழிய எனக்கு நிம்மதியாக விடை கொடுக்க மாட்டேனென்கிறீர்கள்!" - அவன் ஏக்கத்தோடு அவர்களைக் கெஞ்சுவது போல் வேண்டிக் கொண்டு சமாதானப்படுத்த முயன்றான். அவன் முயற்சி பயனளிக்கவில்லை. அவன் காலடியில் அழுது கொண்டே வீற்றிருந்தனர் அவர்கள். அவனுக்கு அதற்குமேல் பேசத் தோன்றவில்லை. அவர்களுக்கும் பேசத் தோன்றவில்லை. அமைதியான நிலையில் மூன்று உள்ளங்கள் உணர்ச்சித் துடிப்பில் மூழ்கியிருந்தன. கடைவீதிக்குப் போயிருந்தவர்கள், ஒன்பதரை, ஒன்பதே முக்கால் மணிக்குத் திரும்பி வந்தனர். சபாரத்தினமும், அழகியநம்பியும் மாடியறையில் போய்ப் படுத்துக் கொண்டனர். இருவருக்கும் படுத்தவுடன் உறக்கம் வரவில்லையானாலும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளவில்லை. விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தனர். அன்று அந்தப் பங்களாவில் எல்லோருடைய நிலையும் ஏறக்குறைய இப்படியே தான் இருந்தது. உள்ளத்தில் இடம் பெற்று விட்ட அன்பான நண்பனைப் பிரியும் போது ஏற்படும் வேதனையின் அமைதி அது. காலையில் எட்டுமணிக்குக் கப்பல் புறப்படுகிறது. ஏழு மணிக்கே எல்லோரும் துறைமுகத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். காரில் போய்க் கொண்டிருந்த போது மேரியும், லில்லியும், அழகியநம்பியின் வலதுகையில் விரலுக்கு ஒன்றாக இரண்டு மோதிரங்களைத் தங்கள் கைகளிலிருந்து சுழற்றி அணிவித்தனர். அந்த மோதிரங்களில் எனாமல் எழுத்துக்களில் முறையே மேரி, லில்லி என்ற பெயர்கள் பொறிக்கப் பெற்றிருந்தன. அவனுடைய கையை அன்பாகப் பற்றி அந்த மோதிரத்தை அவர்கள் அணியும்போது அவற்றை மட்டும் அவன் கை தாங்கிக் கொள்ளவில்லை. சூடு நிறைந்த இரண்டு கண்ணீர்த் துளிகளையும் அவன் புறங்கை தாங்கிக் கொண்டது. "இது எங்கள் நினைவாக என்றும் உங்கள் கை விரல்களில் இலங்க வேண்டும்." - அந்தப் பெண்களின் உருக்கமான சொற்களுக்குப் பதில் சொல்ல நாவெழாமல் தலையை அசைத்தான் அழகியநம்பி. மனம் திறந்து உணர்ச்சியை வார்த்தைகளில் கொட்டிப் பேச முடியாமல் தொண்டையில் ஏதோ கெட்டியாக வந்து அடைத்துக் கொள்வது போல் இருந்தது அவனுக்கு. சபாரத்தினம் அன்பு ததும்ப அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "எங்கே? உங்களுடைய இடது கை மணிக்கடை இப்படிக்கொஞ்சம் நீட்டுங்கள்; பார்க்கலாம்." - என்றார். அவன் கையை நீட்டினான். அழகான புதிய கைக் கடிகாரம் ஒன்றை எடுத்து அவன் கையில் கட்டினார் அவர். "நேரத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வர வேண்டும்." - சொல்லிவிட்டுச் சிரித்தார் அவர். அவர்களுடைய அன்பளிப்புக்களை வேண்டாமென்று மறுக்கவும் துணிவில்லை. ஏற்றுக் கொண்டு எப்படித் தன் நன்றியைச் சொல்வதென்றும் தெரியவில்லை. அழகியநம்பி திகைத்தான். பலவகைப் பழங்கள் அடங்கிய இரண்டு மூன்று பழக்கூடைகளையும், இலங்கையில் மட்டுமே கிடைக்கும் நல்ல பட்டு, ஜப்பான் துணிகள், அடங்கிய அட்டைப் பெட்டிகளையும், அவனுக்கு வோட்ஹவுஸும், திருமதி வோட்ஹவுஸும் அன்பளிப்பாக அளித்தனர். சுங்கப் பரிசோதனை முடிந்து துறைமுகத்தின் உட்புறத்தை அடைந்தனர். "நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து என் சுமையை அதிகமாக்கி விட்டீர்கள்." - இந்தச் சொற்களைக் கூறும் போது அழகியநம்பிக்கு நாத் தழுதழுத்தது. கண்கள் கலங்கி ஓரங்களில் ஈரம் கசிந்தது. "கைச்சுமையை மட்டுமா? இதயச் சுமையையும் அதிகமாக்கி அனுப்புகிறோம்." - சொல்லிவிட்டுப் புன்னகை செய்தார் சபாரத்தினம். வோட்ஹவுஸ், கப்பலில் அவன் வசதியாகப் பிரயாணம் செய்வதற்காக முதல் வகுப்பு டிக்கட் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். லில்லியும், மேரியும் பறிகொடுக்க முடியாத, இழக்கக்கூடாத ஒரு பொருளைச் சிறிது சிறிதாகப் பறிகொடுத்து இழந்து கொண்டிருப்பவர்களைப் போல் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றனர். "எப்போதாவது மறுபடியும் இந்த நாட்டில் வந்து வேலை பார்க்கும் ஆவலோ, வாய்ப்போ ஏற்பட்டு, நீங்கள் இங்கே மீண்டும் வரநேர்ந்தால் எங்களையெல்லாம் சந்திக்கத் தவறி விடாதீர்கள்!" - என்றார் வோட்ஹவுஸ். "வருவேன்! வரலாம். ஆனால், அந்த வரவு உங்களையெல்லாம் பார்ப்பதற்காக இருக்குமேயொழிய, வேலைக்காகவோ, பிழைப்புக்காகவோ, இராதென்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்." - என்று உறுதியாகக் கூறினான் அழகியநம்பி. "ஏன் அப்படி? வேலைக்காக வருவதில் ஒன்றும் தவறு இல்லையே?" - அவர் கேட்டார். "தவறோ? தவறில்லையோ? - எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான் நான் கூறமுடியும். பிழைப்புக்கென்றோ, வேலைகள் உத்தியோகங்கள் பார்ப்பதற்கென்றோ என்னுடைய வளமான கிராமத்தின் எல்லையைக் கடந்து ஒரு அடி பெயர்த்து வைக்க மாட்டேன் இனிமேல். பிரமநாயகம் என்ற போலி மனிதருக்காக ஒரு முறை - ஒரே ஒரு முறை அந்தத் தவறைச் செய்தேன். இனி மறந்தும் அப்படிச் செய்யமாட்டேன்." - அழகியநம்பி பேசும்போது அவன் கண்களில் அற்புதமானதொரு ஒளி மின்னியது. "பின் என்னதான் செய்யப் போகிறீர்கள்? வாழ்க்கை நடப்பதற்கு ஏதாவது செய்து தானே ஆகவேண்டும்? ஒன்றும் செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு கிராமத்திலே போய் உட்கார்ந்து கொண்டுவிட்டால் போதுமா?" "எதைச் செய்தாலும், எப்போது செய்தாலும், எப்படிச் செய்தாலும் அதை நான் பிறந்த மண்ணின் நான்கு எல்லைகளுக்குள்ளேயே செய்ய விரும்புகிறேன். நிழலுக்கு ஒதுங்கிக் கொள்ள ஒரு வீட்டைத் தவிர வேறு எந்த ஆஸ்தியும் எனக்கு என்னுடைய கிராமத்தில் இல்லை. என் தகப்பனார் வைத்து விட்டுப் போனதெல்லாம் கடன்கள் தான். ஆனாலும், எனக்கு ஒரு புதிய நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. என்னால் உழைக்க முடியும், எனக்கு வலிமை வாய்ந்த இரண்டு கைகளும், ஒரு உள்ளமும் இருக்கின்றன. அறிவையும், படிப்பையும் நம்பிப் பிழைக்க விரும்பிய விருப்பம் இன்றோடு என் மனத்தைவிட்டு நீங்கிவிட்டது. நான் கைகளால் உழைக்கப் போகிறேன். என்னைப் பெற்றெடுத்த பூமியின் மேல் இரத்தத்தையும், வியர்வையையும் சிந்திப் பாடுபடப் போகிறேன். அதில் எனக்கு வெற்றி கிடைத்தால் எனது நம்பிக்கை, எனது புதிய வழி எல்லாமே வெற்றிபெறும். நான் தோற்றால் என்னுடைய பரிசுத்தமான - புனிதமான நல்ல ஆத்மாவை நான் பிறந்த மண்ணுக்குச் சமர்ப்பிப்பேன்." அழகியநம்பியின் பேச்சைக் கேட்டு அப்படியே மலைத்துப் போனார் வோட்ஹவுஸ். "இந்த எண்ணம் உங்களுக்கு முதன்முதலாக எப்போது ஏற்பட்டது என்பதை நான் அறிந்து கொள்ளலாமோ?" "பிரமநாயகத்தைப் போன்ற வியாபாரிகள் பணம் சேர்ப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகளைப் பார்த்து என் உள்ளம் குமுறிற்று. நேர்மைக் குறைபாடும் வஞ்சக மனமும் உள்ள பூர்ணாவைப் போன்றவர்கள் தான் உத்தியோக வாழ்வில் வெற்றி பெற முடியும் என்று அறிந்தபோது என் அறிவையும் படிப்பையும் எண்ணி நானே வெட்கப்பட்டேன். உங்கள் அழகான இலங்கையின் அருமையான மலைகளில் தேயிலைத் தோட்டங்களிலே, இரப்பர்த் தோட்டங்களிலே உழைத்து வாழும் ஆயிரமாயிரம் தமிழ்க் கூலிகளைப் பார்த்தபோது, என் உள்ளம் கொதித்தது. அந்த மலைகளின் பொன் கொழிக்கும் செல்வங்களைப் பார்த்த போது நான் கவிபாட நினைக்கவில்லை. கற்பனைகளில் இலயிக்கவில்லை. கனவுகள் காணவில்லை. உழைத்த - உழைக்கிற - உழைக்க இருக்கும் கைகளின் சக்தியை எண்ணி வியந்தேன். அந்த விநாடியிலிருந்து, என் மனம் மட்டும் மாறவில்லை. எனக்காக நான் வகுத்துக் கொண்டிருந்த இலட்சியமே மாறிப்போய் விட்டது. பிரமநாயகத்தின் கடையில் இந்த முறிவுகளெல்லாம் ஏற்படாமல் ஒழுங்காக இருந்திருந்தால் கூட நான் இங்கே வேலை பார்க்க மாட்டேன். இன்று கப்பல் ஏறுவது போல் இன்னும் நாலு நாள் கழித்துக் கப்பலேறியிருப்பேன்." சொற்பொழிவு போன்ற அவனுடைய நீண்ட பேச்சைக் கேட்டுப் பெருமூச்சுவிட்டார் வோட்ஹவுஸ். 'அழகியநம்பிதானா இப்படிப் பேசுகிறான்?' - என்று வியந்து போய் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் சபாரத்தினம். அப்போது கப்பல் புறப்படுவதற்கு அடையாளமான முதல் ஒலி முழக்கம் எழுந்தது. கூலிகள் சாமான்களைத் தூக்கிக் கொண்டுபோய் அவன் உட்காரவேண்டிய இடத்தின் பக்கத்தில் மேல் தட்டில் வைத்தார்கள். இரண்டாவது ஒலியும் முழங்கியது. அழகியநம்பி கப்பலில் ஏறி மேல் தட்டின் கிராதியைப் பிடித்துக் கொண்டு நின்றான். மூன்றாவது ஒலி முழங்கிக் கொண்டிருக்கும்போதே கப்பல் நகர்ந்தது. அவன் கீழே நின்று கொண்டிருந்தவர்களை நோக்கிக் கைகூப்பினான். "எப்போதாவது தமிழ்நாட்டிற்கு வந்தால் குறிஞ்சியூருக்கு வாருங்கள்." - அவன் சொல்லிய இந்தச் சொற்கள் கப்பல் புறப்படும்போது ஏற்பட்ட பலவகை ஒலிக்குழப்பத்தில் அவர்கள் செவிவரையில் எட்டினவோ, இல்லையோ? |