22. உள்ளம் துள்ளுகிறது சபாரத்தினம் சொன்னபடி தம் வீட்டில் அழகியநம்பியை அதிக நேரம் தாமதிக்கச் செய்யாமல் ஆறேகால் மணிக்குள் வெள்ளவத்தையில் கொண்டு போய் விட்டுவிட்டார். மேரி, லில்லி, இருவரும் அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய தந்தை வோட்ஹவுஸும், தாய் திருமதி வோட்ஹவுஸும் அவனை அன்புடன் கைகுலுக்கி வரவேற்றனர். அழகியநம்பிக்குத் தங்கள் தாய் தந்தையரை - முறைப்படி அறிமுகம் செய்து வைத்தனர் மேரியும், லில்லியும். "மேரியும் லில்லியும் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார்கள். உங்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கும் என் மனைவிக்கும் அவர்கள் சொல்லிய தினத்திலிருந்து ஆசை. கூட்டிக் கொண்டு வரச் சொல்லி அவர்களிடம் வற்புறுத்திக் கொண்டே இருந்தேன். இன்றைக்குத்தான் ஆசை நிறைவேறியது." - கம்பீரமான உயர்ந்த தோற்றத்தையுடைய வோட்ஹவுஸ் சிறு குழந்தையைப் போல் களங்கமில்லாமல் சிரித்துச் சிரித்துப் பேசினார். சபாரத்தினம் அவனைக் கொண்டு வந்து விட்டவுடன் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். "நீங்களும் இருந்து இரவு சாப்பிட்டுவிட்டுப் போகலாமே" - என்று கூறினாள் மேரி. "இல்லை! இன்றிரவு ஏழு மணிக்கு விவேகாநந்த சபையில் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் புலவர் ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நான் கேட்கப் போக வேண்டும்." - என்று அவளிடமும் அழகியநம்பியிடமும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார் சபாரத்தினம். நிறத்தினாலும், பிறந்த நாட்டினாலும், பண்பினாலும் வேறுபட்டு அன்பினால் ஒன்றுபட்ட அந்த வெள்ளைக் குடும்பத்திற்கு இடையே அழகியநம்பி தனித்து விடப்பட்டான். இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்கு ஒருவராக நாற்காலையைப் போட்டுக் கொண்டு அவனருகே மேரியும் லில்லியும் உட்கார்ந்து விட்டார்கள். சிரிப்பும் வேடிக்கையுமாகக் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பொம்மை கிடைத்துவிட்டால் அவர்கள் அதை வைத்துக் கொண்டு விளையாடுகிற மாதிரி அவனை வைத்துக் கொண்டு விளையாடத் தொடங்கி விட்டார்கள். திருமதி வோட்ஹவுஸ் இரவு விருந்துக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாள். வோட்ஹவுஸ் அவர்களோடு உட்கார்ந்து சிரிப்பிலும், பேச்சிலும் கலந்து கொண்டார். அவரைப் பார்த்தால் இராணுவ உத்தியோகஸ்தர் மாதிரியே தெரியவில்லை. முரட்டுச் சுபாவம், கடுகடுப்பான முகச்சாயல், - இப்படி இராணுவத் துறையில் இருப்பவர்களுக்கு உரியனவென்று அழகியநம்பி நினைத்து வைத்திருந்த குணங்களில் ஒன்று கூட அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
வயதானவராயினும், இளைஞர் போலக் காட்சியளித்தார். பேச்சு, சிரிப்பு, முகம், நடை, உடை - எல்லாவற்றிலுமே அவரிடம் இளமை இருந்ததை அவன் கவனித்தான். தம் பெண்களுக்கு முன்னால் தாம் தகப்பன் என்ற தனிக்கௌரவம் கொண்டாட முயலாமல் அவரும் ஒரு குழந்தையாக மாறிக் குறும்புகளிலும், விளையாட்டுப் பேச்சுக்களிலும் பங்கு கொண்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"என்ன? மிஸ்டர் அழகியநம்பி! பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே! எனக்கு இது சுத்தமாகப் பிடிக்காது. மனிதன் என்றிருந்தால் நன்றாகச் சிரித்துப் பேசி எல்லோரோடும் கலகலப்பாகப் பழக வேண்டும். இதோ என்னைப் பாருங்கள். என்னுடைய பெண்களைப் பாருங்கள். நாங்கள் இப்படிப் பழகுவதையே ஒரு நல்ல குணமாக வழக்கத்தில் கொண்டு வந்து விட்டோம்." அழகியநம்பி அவர் கூறியதைக் கேட்டுச் சிறிது நாணமடைந்தான். மேரி தன் குறும்புப் பேச்சால் அவன் வாயைக் கிளறினாள். அழகியநம்பி வாயைத் திறந்தான். "மேரி தப்புக் கணக்குப் போடுகிறாள். உங்களை ஒரு இராணுவ அதிகாரியென்றே என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் மலர்ந்த முகமும், சிரிப்பும், பேச்சும் - இராணுவத்துக்கே பொருத்தமற்றவை." - சிரித்தவாறே அவரிடம் கூறினான். "நீங்கள் அந்த மாதிரி எண்ணுவது தவறு. உத்தியோகம் பார்க்கிற இடத்தில் உத்தியோக நேரத்தில் தான் அந்தப் பொறுப்புக்கள், கடமைகள், எல்லாவற்றுக்கும் நான் அதிகாரி. வீட்டுக்கு வந்து விட்டால் எல்லோரையும் போல் நான் சாதாரண மனிதன். மனிதனுக்குரிய எல்லா உணர்ச்சிகளையும் அனுபவிக்கத் துடிப்பவன்." "உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கிறது." இதன் பின் அவர்கள் மறுநாள் காலை பிரயாணம் தொடங்கப் போவது பற்றிப் பேச்சு எழுந்தது. இலங்கை மலைகளின் இயற்கை வனப்பைக் கவிதை பொழிவது போன்ற அழகான ஆங்கில நடையில் அவனுக்கு வர்ணித்தார் அவர். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இறுதியில் குறும்புத் தனமாக ஒரு போடு போட்டார் வோட்ஹவுஸ். "இதென்ன பிரமாதம்? என்னால் இவ்வளவு தான் முடியும். நாளைக்கு நீங்கள் பிரயாணம் செய்கிற போது ஒரு பக்கம் மேரியும், இன்னொரு பக்கம் லில்லியும் உட்கார்ந்து கொண்டு உங்களை என்ன பாடு படுத்தப் போகிறார்கள்; பாருங்கள்!" - "மிஸ்டர் அழகியநம்பி! உண்மையென்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அப்பா எங்களைக் கேலி செய்கிறார். வேறொன்றுமில்லை." - என்றாள் லில்லி. திருமதி வோட்ஹவுஸ் வந்து எல்லோரையும் உணவுக்கு அழைத்தாள். நீண்ட மேஜையில் அழகிய விரிப்பு விரித்துப் பழங்கள், ரொட்டி, வெண்ணெய், - பலவகைக் கரண்டிகள், பிளேட்டுகள் - யாவும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இரு புறமும் வரிசையாக நாற்காலிகள் போட்டிருந்தார். திருமதி வோட்ஹவுஸ் மெதுவாக அழகியநம்பியின் அருகே வந்து, "பயமோ, கூச்சமோ வேண்டாம். உங்கள் வரவை முன்னிட்டு இன்று இங்கே எல்லோருக்குமே மரக்கறி உணவுதான்." - என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். "பரவாயில்லை! உங்கள் அன்பு எப்படிச் செய்தாலும் ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவன் நான்." - என்று உபசாரமாகப் பதில் சொன்னான் அவன். சாப்பிடும்போதும் வேடிக்கைதான்; சிரிப்புத்தான்; கேலிதான்! அழகியநம்பி நினைத்தான்:- 'ஆகா! இந்த வெள்ளைக்காரர்கள் வாழ்க்கையையே ஒரு இன்பப் பொழுது போக்காகப் பழகியிருக்கிறார்களே! கவலையும், மனத்துயரமும் இல்லாமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இவர்களால் எப்படி வாழ முடிகிறது.' திடீரென்று வோட்ஹவுஸ் கூறினார்:- "நீங்கள் மூன்று ஆப்பிள்களையாவது சாப்பிடவில்லையானால் உங்களை ஒரு ஆண்பிள்ளை - ஒரு இளைஞர் - என்று நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்." "இருங்கள் அப்பா! நீங்கள் குறைவாகச் சொல்லுகிறீர்கள். என் கையால் நான் நறுக்கிக் கொடுத்தால் இந்த மனிதர் ஆறு ஆப்பிள் கூடச் சாப்பிடுவார்." - என்று மேரி ஆப்பிள்களை நறுக்கி அவன் பிளேட்டில் குவிக்கத் தொடங்கினாள். இன்னொரு பக்கத்தில் லில்லி அவன் பிளேட் தாங்காமல் ரொட்டியை அடுக்கி வெண்ணையையும், சர்க்கரைப் பாகையும் (ஜாம்) தடவிக் கொண்டிருந்தாள். "ஏதேது? நீங்கள் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு உபசரிக்கிற தடபுடலில் அவரை நிதானமாகச் சாப்பிட விடமாட்டீர்கள் போலிருக்கிறதே?" - என்று பெண்களைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள் திருமதி வோட்ஹவுஸ். "இன்னும் ஐந்தாறு நாட்கள் மலைநாட்டு ஊர்களில் சுற்றப் போகிறார்கள். போகிற இடங்களில் ஹோட்டல்களிலும் ரெஸ்ட் ஹவுஸ்களிலும் இப்படிப் போட்டி போட்டுக் கொண்டு உபசரிக்க முடியாதே! அதனால் தான் இங்கேயே செய்கிறார்கள்?" - வோட்ஹவுஸ் கூறினார். சாப்பிட்டு முடிந்த பின்பும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். காலையில் பிரயாணத்துக்காக விரைவில் விழிக்க வேண்டுமென்று திருமதி வோட்ஹவுஸ் எச்சரித்து அவரவர்களைப் படுத்து உறங்க அனுப்பினாள். மேல் மாடியில் தனித்தனியாக இருந்த விருந்தினர் அறையில் அழகியநம்பி படுத்தான். பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் கடல் இருந்தது. சுகமான கடற்காற்றின் தழுவலில் கட்டுண்டு நன்றாக உறங்கினான் அவன். காலையில் ஐந்து ஐந்தரை மணிக்குத் தேநீர்க் கோப்பையோடு வந்து அவனை எழுப்பினாள் லில்லி. ஐந்து முக்கால் மணிக்கு அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள். "வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த பிரயாணம் உங்களுக்கு வாய்க்கட்டும்." - என்று வோட்ஹவுஸும், திருமதி வோட்ஹவுஸும் மலர்ந்த முகத்தோடு வாழ்த்துக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்கள். காலை நேரத்துக் குளிர்ந்த காற்றுக் காரினுள் புகுந்து முகத்தில் மோதியது. வெள்ளவத்தையின் கலகலப்பான கடைவீதிகளில் எழுச்சியும் ஆரவாரமும் தொடங்காத நேரம் அது. அந்த அமைதியான நேரத்தில் ஆரவாரமும் ஒடுங்கியிருந்த வீதிகளைக் கடந்து சென்றது அவர்கள் கார். கதிரவன் ஒளி பரவவில்லை. அவனுடைய வரவுக்கு ஒளி மிகுந்த நடை பாவாடை விரிப்பது போல் கடல் நீர்ப்பரப்பு, கண்ணுக்கெட்டிய தூரம் பளபளத்துக் கொண்டிருந்தது. இலங்கை மலைக் காட்சிகளைப் பற்றிய வர்ணனைகளும், வர்ணப் படங்களும், வழி விவரங்களும் அடங்கிய ஒரு வழிகாட்டிப் புத்தகத்தை அழகியநம்பியின் கையில் கொடுத்தாள் மேரி. 'தன்னோடு மட்டுமே அவன் பேச வேண்டும். தான் சொல்வனவற்றை மட்டுமே அவன் கேட்க வேண்டும். தனக்குத்தான் அவன் உரியவன்.' - என்று உரிமை கொண்டாடி ஆதிக்கம் செலுத்த முயன்றாள் மேரி. லில்லியும் அதே உரிமையையும், ஆதிக்கத்தையும், அவனிடம் கொண்டாடத் துடித்தாள். தன்னால் அந்தப் பெண்களுக்குள் மனமுறிவு ஏற்பட்டுவிடுமோ என்று கூடப் பயந்தான் அவன். கார் நகர் எல்லையைக் கடந்து இயற்கை வளம் பொலியும் பசுமைக் காட்சிகளுக்கு நடுவே குளிர்ந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. பச்சைப் பசுந்தோகைகள் மினுமினுக்க அசைந்தாடும் தென்னை மரங்கள், செடிகள், கொடிகள் வயல் வெளிகள், வானத்து மேகங்கள், தூரத்து மலைச் சிகரங்கள், - அப்போது அந்த அருங்காலை நேரத்தில் கார் செல்லும் போது இரு புறத்திலும் தெரிந்த எல்லாக் காட்சிகளும் கண்ணுக்குத் தெரியாததொரு பேராற்றலின் விரிந்த வனப்பைச் சிறிது சிறிதாக மறைத்து ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பின்னங்களாக அவன் கண்களில் தோன்றின. அவன் உள்ளம் துள்ளியது. "இப்போது நாம் போய்க் கொண்டிருக்கும் பகுதிக்குக் கடுவிளை என்று பெயர். இதோ இந்த ஆற்றுக்குக் கழனி கங்கை என்று பெயர். புத்தகத்தை விரித்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் தெரியும்." - என்று மேரி கூறிய போது. "புத்தகமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், எல்லா விவரமும் நான் சொல்லிக் கொண்டு வருகிறேன் உங்களுக்கு. கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" - என்று லில்லி ஆத்திரத்தோடு குறுக்கிட்டுக் கூறினாள். மேரி தனது கவர்ச்சிகரமான வட்ட விழிகளை உருட்டிக் கோபத்தோடு லில்லியை உறுத்துப் பார்த்தாள். அழகியநம்பிக்கு இருபக்கமும் தர்மசங்கடமாக இருந்தது. "நீங்கள் இரண்டு பேரும் இந்த மாதிரி சண்டை போட்டுக் கொண்டால் நான் எதையும் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு வரவேண்டியதுதான்." - என்று விளையாட்டாகச் சொன்னான் அவன். அதுவரை பேசாமல் வந்த டிரைவர் பின்புறம் திரும்பி அழகியநம்பியைப் பார்த்துச் சிரித்துவிட்டு, "நீங்கள் ஒரு சட்டம் போட்டு விடுங்கள் ஐயா! கார் போகிற சாலையின் வலது புறம் வருகிற முக்கியமான காட்சிகளைப் பற்றி மேரி அம்மா மட்டும் தான் கூறலாம். அதே மாதிரி இடது புறம் வருகிற காட்சிகளைப் பற்றி லில்லி அம்மா மட்டும் தான் சொல்லலாம். இப்படிப் பிரித்துக் கட்டுப்பாடு செய்து விட்டீர்களானால் அவர்களுக்குள் சண்டையே வராது! எப்படி நான் சொல்லுகிற யோசனை?" - என்றான். அந்த டிரைவர் உண்மையாகவே அப்படிச் சொல்கிறானா? அல்லது கேலி செய்கிறானா? என்று புரிந்து கொள்வதற்குச் சிறிது நேரமாயிற்று அழகியநம்பிக்கு. விளையாட்டோ, கேலியோ, - அதே ஏற்பாட்டைச் சிரித்துக் கொண்டே அவர்களிடம் சொல்லி ஒப்புக் கொள்ள வைத்தான் அழகியநம்பி. கார் டிரைவரும் நகைச்சுவை இயல்பு வாயந்த இளைஞனாக இருந்தான். அவன் திருத்தமாக தமிழ் பேசியதைக் கேட்டு, "உனக்கு எந்தப் பக்கம்?" என்று விசாரித்தான் அழகியநம்பி. "மட்டக் களப்புப் பக்கம். நானும் தமிழன் தான். நீங்கள் தமிழ் நாட்டுத் தமிழர். நான் ஈழத்தமிழன்." - என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்த்துப் பதில் சொன்னான் டிரைவர். மலைநாட்டுக்குச் செல்லும் பல தனித் தனிச் சாலைகள் பிரியக்கூடிய இடமான அவிசாவெளையை அடைந்ததும் கார் நின்றது. காரின் இடதுகைப் புறம் ஒரு மரத்தடியில் சிமெண்டு மேடையில் சிறிய கோவிலும், காசு போடுகிற உண்டியலும் இருந்தன. டிரைவர் காரிலிருந்து இறங்கிப் போய் அருகிலுள்ள கடையில் கற்பூரம் வாங்கிக் கொண்டு வந்தான். அந்தச் சிமெண்டு மேடையில் கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்கி உண்டியலில் ஏதோ காசும் போட்டு விட்டுத் திரும்பினான். திரும்பினவன் என்ன நினைத்துக் கொண்டானோ, மறுபடியும் கடைகள் இருந்த பக்கமாகச் சென்று ஒரு தேநீர்க் கடையில் மூன்று கிளாஸ்களில் ஆவி பறக்கும் தேநீரைச் சூடாக வாங்கிக் கொண்டு வந்தான். அழகியநம்பி - மேரி - லில்லி - ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கிளாஸை நீட்டினான். "இதென்ன? திடீரென்று..." - அழகியநம்பி டிரைவரின் முகத்தைச் சிரித்துக் கொண்டே ஏறிட்டுப் பார்த்தான். "சும்மா... வாங்கிக் குடியுங்கள்... மலைப்பகுதியில் பிரயாணம் செய்யும்போது சுறுசுறுப்பாக இருக்கும்." - "உனக்கு வேண்டாமா?" "நான் அங்கே போய்ப் பருகிவிட்டு வருவேன்! நீங்கள் குடியுங்கள்." - அவர்கள் மூவரும் டிரைவரின் அன்பான உபசாரத்தை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டனர். அவிசாவெளையிலிருந்து கார் புறப்பட்ட போது, "அதென்ன கோவில்? அந்த மரத்தடியில் கற்பூரம் கொளுத்தி வைத்து உண்டியலில் காசு போட்டு வணங்கினாயே?" - என்று அழகியநம்பி டிரைவரைக் கேட்டான். "இதுவா? இங்கே இது ஒரு வழக்கம். மலைப்பகுதிகளில் ஏறுமுன் விபத்து முதலிய துன்பங்கள் எதுவும் ஏற்படாமல் சௌக்கியமாகத் திரும்பி வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொள்வோம். எல்லோருமே அநேகமாக இந்த இடத்தில் இதைச் செய்யாமல் போக மாட்டார்கள்." - டிரைவர் கூறியதைக் கேட்டு அழகியநம்பி குறும்புச் சிரிப்புச் சிரித்தான். "டிரைவர்! உன்னைவிட நான் தான் அதிக விபத்துக்களில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்." - என்று சொல்லிக் கொண்டே லில்லியையும், மேரியையும், ஓரக் கண்களால் விஷமப் பார்வை பார்த்தான் அவன். பெண்கள் இருவரும் முகம் மலரப் புன்னகை செய்தனர். "அடேடே! அப்படியானால் நீங்களும் இறங்கி உண்டியலில் காசு போட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கலாமே?" என்று வேடிக்கையாக மறுமொழி கூறினான் டிரைவர். கார் மலைப் பிரதேசத்தில் ஏறிக் கொண்டிருந்தது. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |