![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
2. அன்புமுள் மூன்று நாள் கழிந்த பின்பு வெள்ளம் ஒருவாறு வடிந்திருந்தது. பஸ் போக்குவரவு ஒழுங்காக நடைபெறலாம் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. புறப்படுவதற்குத் தயாராக மூட்டை முடிச்சுகளைக் கட்டி வைத்துவிட்டு அண்டை அயலாரிடம் சொல்லிக் கொள்வதற்காகப் புறப்பட்டான் அழகிய நம்பி. வெள்ளம் வடிந்து சேறும் சகதியும், வழுக்கலுமாக இருந்த தெருவில் காலைவைப்பதற்கே அருவருப்பாக இருந்தது. 'வீட்டிலிருந்து தெருவில் இறங்குவதற்கே இவ்வளவு அசிங்கமாக இருக்கிறதே! பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எந்தெந்த உயர் நிலைகளிலிருந்து எந்தெந்தத் தாழ்வான நிலைகளில் எல்லாம் இறங்கி நடக்க வேண்டியிருக்குமோ?' அவன் தெருவில் இறங்கிச் சேற்றில் கால்களைப் பதித்து வழுக்கி விடாமல் கவனமாக நடந்தான். தெருத்திருப்பத்தில் பெருமாள் கோவிலுக்கு முன்னால் இருந்த திருக்குளத்தில் படிக்கட்டுகளே தெரியாமல் வெள்ளத் தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. அழகிய நம்பி பெருமாள்கோவில் கோபுரத்தின் உச்சியைப் பராக்குப் பார்த்துக் கொண்டே குளக் கரையோரமாக நடந்து கொண்டிருந்தான். திரைகடல் கடந்து அந்நிய நாட்டுக்குக் கப்பலேறிப் போகப்போகிறவன் யாரிடம் சொல்லிக் கொண்டு போவது? யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் போவது? வேண்டியவர்கள் எல்லோரிடமும் தான் சொல்லிக் கொள்ள வேண்டும்! பெருமாள் கோவில் குறட்டு மணியம் நாராயணப்பிள்ளை, மேலத்தெரு வாசகசாலைச் செயலாளர் கந்தப்பன், முன்சீப் புன்னைவனம் பிள்ளை, புலவர் ஆறுமுகம் - சொல்லி விடை பெற்றுக் கொள்ள வேண்டியவர்கள், ஒவ்வொருவராக அவன் நினைவுக்கு வந்தனர். நினைத்துக்கொண்டே குளக்கரையோரமாக நடந்து கொண்டிருந்தவன், திடீரென்று அங்கே கிளம்பிய அந்தக் கூப்பாட்டைக் கேட்டுத் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தான். பத்து பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி, "ஐயோ, அப்பா" என்று அலறிப்புடைத்துக் கூச்சலிட்டுக் கொண்டே குளத்தின் பக்கம் கையைக் காட்டினாள். பயத்தினால் வெளிறிப் போயிருந்த சிறுமியின் முகத்தில் வாய் கோணியது. குளத்தின் உட்புறமாகக் கையைக் காட்டிக் கூச்சலிட்டாளே தவிரப் பயத்தினாலும் பதற்றத்தினாலும் நடந்தது என்ன என்று சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை. அந்த நேரத்தில் பனி நீங்காத வைகறைப் போதில் அந்தக் குளக்கரைப் பகுதியில் அழகியநம்பி ஒருவனைத் தவிர ஏறக்குறைய ஆள் நடமாட்டமே இல்லை என்று சொல்லலாம். "என்ன தங்கச்சி? என்ன நடந்தது? ஏன் கூச்சல் போடுகிறாய்?" என்று கேட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்றான் அழகியநம்பி. சிறுமிக்கு வாய் கேவியது. சொற்கள் திக்கித் திணறி வெளி வந்தன. "அக்கா... குடம்... தண்ணீரில்..." என்று ஏதோ சொல்லிவிட்டுக் குளத்தின் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டினாள். அழகியநம்பி ஒன்றும் புரியாமல் குளத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனுக்குப் பகீரென்றது. முக்குளித்து மேலெழுந்து மறுபடியும் முக்குளிக்கும் பெண் தலை ஒன்று நீர்ப்பரப்பில் தெரிந்தது. அதற்குச் சிறிது தொலைவு தள்ளிப் 'பள பள' வென்று தேய்த்து விளக்கிய ஒரு பித்தளைக் குடம் குப்புற மிதந்து தண்ணீரில் அலைப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. சிறுமியின் கேவுதல் அழுகையாக மாறிவிட்டது. "ஐயோ அக்கா... அக்கா..." என்று அழத் தொடங்கி விட்டாள். அழகிய நம்பிக்கு விஷயம் விளங்கிவிட்டது. மின்னல் மின்னி மறையும் நேரம் அவனுக்கு ஒரு சிறு தயக்கம் ஏற்பட்டது. பிரயாணத்துக்காக எடுத்து அணிந்து கொண்டிருந்த புதிய வெள்ளைச் சலவைச் சட்டை, பையில் செலவுக்கான பணத்தோடு கிடந்த மணிபர்ஸ் - இரத்தக் குழம்பு போலிருந்த குளத்தின் செந்நிறப் புதுவெள்ளம் - இவற்றை எண்ணி ஒரே ஒரு நொடி தயங்கினான். ஆனால், ஒரு நொடி தான் அந்தத் தயக்கம்! அடுத்த நொடியில் சிறுமியின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு குளத்தின் நீர்ப்பரப்பில் பாய்ந்தான். ஆள் பாய்ந்த அதிர்ச்சியில் தண்ணீரில் அலைகள் எழும்பிக் குதித்துக் கரையைப் போய்ச் சாடின. தண்ணீருக்குள் அவள் உடலை உடனே பற்றிக் கரைக்குக் கொண்டு வந்துவிட அவனால் முடியவில்லை. மூன்று நான்கு தடவைகள் முக்குளித்து, மூழ்கி, வெறுங்கையோடு எழுந்திருந்தான். ஐந்தாவது தடவையாக அவன் முக்குளித்தபோது அவளுடைய நீண்ட அளகபாரத்தின் ஒரு பகுதி அவனுடைய கையில் சிக்கியது. அப்படியே பிடித்து இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான். கரையில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி இப்போது அழுவதையும், கூச்சலிடுவதையும் நிறுத்திவிட்டு, அவன் அவள் அக்காவின் உடலையும் இழுத்துக் கொண்டு தண்ணீரில் நீந்தி வருவதை வியப்புடன் பார்த்தாள். கொடிபோல் துவண்ட அந்தப் பூவுடலைக் கரையில் கிடத்திவிட்டு நிமிர்ந்தான். அழகியநம்பி. நிறையத் தண்ணீரைக் குடித்து மூர்ச்சையாகியிருந்தாள் அவள். "அக்கா! அக்கா!" - என்று அருகில் வந்து குனிந்து தோளைப் பிடித்து உலுக்கினாள் அந்தச் சிறுமி. நீந்தத் தெரியாமல் தண்ணீரில் அகப்பட்டுக் கொண்டு அவள் விழுங்கியிருந்த தண்ணீரை முழுவதும் வெளியேற்றினாலொழிய அவளுக்குப் பிரக்ஞை வராதென்று அழகிய நம்பி உணர்ந்தான். தண்ணீரை வெளியேற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் அவனுக்குத் தென்பட்டது. ஆனால் அதைச் செய்வதற்கு அவன் கூசினான்; தயங்கினான். அந்தப் பெண்ணின் உடலை இரண்டு கைகளாலும் தீண்டி மேலே தூக்கிக் கரகரவென்று தட்டா மாலை சுற்றுவது போலச் சுற்ற வேண்டும். அப்படிச் சுற்றினால் தான் குடித்திருக்கிற தண்ணீர் முழுதும் குமட்டி வாந்தியெடுத்து வெளியேறும். குளக்கரையோரம், பெருமாள் கோவில் வாசல், தெருத் திருப்பம் - சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான் அழகியநம்பி. அவன் கண் பார்வை சுழன்ற திசைகளில் - இடங்களில் எங்கும் யாரும் தென்படவில்லை. சிறுமி முன்போலவே அக்காவின் உடலை அசைத்துப் புரட்டிக் கூச்சலிட்டு எழுப்புவதற்கு முயன்று கொண்டிருந்தாள். ஈரம் சொட்டச் சொட்ட நின்ற அழகியநம்பி ஒருகணம் கீழே கிடத்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்தான். பட்டுச் சேலை உடுத்திய தங்கச்சிலை ஒன்று தண்ணீரில் நனைந்து கிடப்பது போல் தோன்றியது. பதினேழு, பதினெட்டு வயதுக்கு மேலிருக்காது. வெண்சங்கு போலிருந்த அழகிய கழுத்தின் வெறுமை இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சொல்லியது. அவன் நிலை தர்மசங்கடமாயிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தச் சிறுமியை அவளுடைய வீட்டுக்கு அனுப்பி யாராவது பெரியவர்கள் இருந்தால் கூட்டிக் கொண்டு வரச் சொல்லலாமே என்று தோன்றியது. கீழே குனிந்து அந்தப் பெண்ணின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தான். சூடான மூச்சுக் காற்றின் மெல்லிய வெப்பம் கையில் உறைத்தது. 'பயமில்லை' என்று ஒடுங்கிய குரலில் தனக்குள் சொல்லிக்கொண்டு "தங்கச்சி! ஓடு... ஓடிப்போய் வீட்டில் யாராவது பெரியவர்கள் இருந்தால் உடனே அவசரமாகக் கூட்டிக் கொண்டு வா" என்று அந்தச் சிறுமியைத் துரத்தினான். ஆனால், அவள் போகவில்லை; தயங்கி நின்றாள். "சொன்னால் போகமாட்டாயா?" என்று அதட்டினான் அழகியநம்பி. "இல்லை மாமா... வந்து... வந்து..." என்று இழுத்துப் பேசினாள் சிறுமி. "போகாவிட்டால் உன் அக்கா உனக்குக் கிடைக்க மாட்டாள்." "வீட்டில் வயதான அம்மாதான் இருக்கிறாள். அவளாலே எழுந்திருந்து வரமுடியாது. முடக்குவாதம்." "அப்பா, அண்ணா, வேறு யாரும் இல்லையா உங்களுக்கு?" "எல்லாம் அம்மாதான்!" சிறுமி உதட்டைப் பிதுக்கினாள். பரிதாபகரமானதோர் ஏக்கம் அப்போது அந்தச் சிறுமியின் முகத்தில் படர்ந்தது. "உங்கள் அம்மா யார்?" "தெருக்கோடியிலே ஒரு இட்டிலிக்கடை இருக்கிறதே, அதுதான்!" அந்தச் சிறுமி இட்டிலிக்கடை அடையாளத்தைச் சொன்னவுடன் அழகியநம்பிக்கு அவர்கள் இன்னாரென்பது புரிந்துவிட்டது. "அடேடே! இட்டிலிக்கடைக் காந்திமதி ஆச்சி பெண்களா நீங்கள்?" "ஆமாம்! ஆச்சியைத் தெரியுமா உங்களுக்கு?" - சிறுமியின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் குபீரென்று கீழே குனிந்து கனமற்றிருந்த அந்தப் பெண்ணின் உடலைத் தூக்கிக் கிறுகிறுவென்று சுழற்றினான். இவ்வளவு நேரத்திற்குப் பின்பும், இவ்வளவு தெரிந்த பின்பும் தயங்கிக் கொண்டிருந்தால் அந்தப் பெண்ணின் உயிருக்கே ஆபத்தாகி விடுமோ என்று பயந்துதான் அவன் துணிந்து இப்படிச் செய்தான். குமட்டலும் ஓங்கரிப்புமாக அவள் வாயிலிருந்து கொட்டிய தண்ணீரெல்லாம் அவன் மேல் பட்டன. அந்தப் பெண் குடித்திருந்த தண்ணீர் முழுதும் துப்புரவாக அவள் வயிற்றிலிருந்து வெளியேறியிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதும் மெதுவாக அவள் உடலைக் கீழே வைத்தான். அத்தனை நேரம் சுற்றிய கைகள் தோள் பட்டையில் வலியைச் சேர்த்து வைத்திருந்தன. தோள்கள் இலேசாக வலித்தன. அவள் உடல் அசைந்து புரண்டது. பிரக்ஞை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. "உன் அக்காவின் பெயர் என்ன?" என்று அந்தச் சிறுமியைக் கேட்டான் அழகியநம்பி. "அக்காவின் பெயர் பகவதி. என் பெயர் கோமு" என்று அவன் கேட்காத தன் பெயரையும் கூறினாள் சிறுமி. அவள், "கோமதி என்று பேரு! அக்கா, அம்மா எல்லாரும் கோமு, கோமு என்றுதான் கூப்பிடுவார்கள்" என்று மறுபடியும் தானாக நினைத்துக் கொண்டு சொல்கிறவள் போல் சொன்னாள். அதைக் கேட்டு அழகியநம்பி மெல்லச் சிரித்துக் கொண்டான். "மாமா! மாமா! குடம். இன்னும் தண்ணீரிலேயே மிதந்துகொண்டு போகிறதே!" என்று தண்ணீரில் மிதந்து சென்று கொண்டிருந்த குடத்தைக் காட்டினாள் சிறுமி. "ஓ! மறந்து விட்டேன்" என்று சொல்லிக்கொண்டே குடத்தை எடுப்பதற்காக மீண்டும் தண்ணீரில் இறங்கினான் அழகியநம்பி. அதே சமயத்தில் அந்தப் பெண்ணுக்குப் பிரக்ஞை வந்தது. தூக்கம் விழித்துச் சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்திருக்கிறவளைப் போல் எழுந்திருந்தவள் தானிருக்கிற நிலையைப் பார்த்ததும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருந்தாள். "அக்கா! அக்கா! இந்த மாமா தான் குளத்தில் குதித்து நீந்தி உன்னைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தவர்" என்று அடக்கமுடியாத ஆவல் பொங்கக் கூறினாள் சிறுமி கோமு. குடத்தோடு கரையேறிய அழகியநம்பி கோமுவிடம் கொண்டு வந்து அதைக் கொடுத்தான். "ஊரே மூழ்கிப் போய்விடும்போல வெள்ளம் வந்து இப்போதுதான் ஒருமாதிரி வடிந்திருக்கிறது. குளம் நிமிர நிமிரத் தண்ணீர் இருக்கும் போது நீந்தத் தெரியாதவள் இப்படி வரலாமா?" - அழகியநம்பி அவளிடம் கண்டிப்பது போன்ற தொனியில் கேட்டான். "குடத்தில் தண்ணீர் முகப்பதற்காகப் படியில் கால் வைத்தேன். வழுக்கிவிட்டது" - அவனை நிமிர்ந்து பார்க்கும் திறனின்றிக் குனிந்து கொண்டே பதில் கூறினாள் அவள். நாணம் படர்ந்த அந்த மதிமுகத்தில் சிவந்த உதடுகள் இலேசாகத் துடித்தன. வனப்பே வடிவமாக இளமை கொழித்து நிற்கும் அந்தப் பெண்ணின் தோற்றத்தைக் கடைக்கண்களால் ஒருமுறை நன்றாகப் பார்த்தான். இப்போது அவள் குடத்தையும் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். கண்வருடைய ஆசிரமத்தில் செடிகொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காகச் சகுந்தலை குடமேந்தி நடப்பது போன்ற ஓவியம் ஒன்றை ஏதோ ஒரு கம்பெனியின் காலண்டரில் அவன் அடிக்கடி பார்த்திருந்தான். கொடிபோல் ஒசிந்து குடமேந்தி மருண்ட பார்வையோடு தன் முன் தலைகுனிந்து நிற்கும் காந்திமதி ஆச்சியின் பதினெட்டு வயதுப் பெண் பகவதியைப் பார்த்தபோது அந்தக் காலண்டரின் படம் நினைவில் புரண்டது. படியில் இறங்கிக் காலியாக இருந்த குடத்தில் தண்ணீர் முகந்து கொண்டு வந்தாள். அவனருகே வந்ததும் தயங்கி நின்றாள். தன்னிடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டு போக அவள் மனம் எண்ணுகிறது, அந்த நன்றியை எப்படிச் சொற்களால் வெளியிடுவதென்று தெரியாமல் கூசித் தயங்கி நிற்கிறாள் அவள் என்பதை அழகியநம்பி புரிந்து கொண்டான். இதயத்து உணர்ச்சிகளை ஒளிவு மறைவில்லாமல் வாரிக்கொண்டு வந்து வெளியே கொட்டும் அவளுடைய அந்த அழகிய கண்கள், அவற்றின் பார்வை - அவனுக்குப் புரியவைத்தன. "தங்கச்சி! அக்காவை அழைத்துக்கொண்டு பத்திரமாக வீடு போய்ச் சேர். தண்ணீர் குறைகிறவரை இன்னும் நாலைந்து நாட்களுக்குத் தனியாக இந்த மாதிரி காலை வேளையில் குளத்துப்பக்கம் வரவேண்டாம். பெருமாள் கோவில் பக்கமாகப் போய்விட்டுத் திரும்பும் போது உங்கள் ஆச்சியைப் பார்க்க வருகிறேன்" என்று அவள் தங்கை கோமுவிடம் பேசுவதுபோல் பேசி விடைகொடுத்தான் அழகியநம்பி. அப்போது மேலும் கீழுமாகப் பொருந்திய பவழத் துண்டங்களைப் போன்ற அவள் இதழ்கள் ஏதோ சொல்வதற்காக அசைவது போல் தோன்றியது. அழகியநம்பி அதைக் கவனித்தான். துடிக்கும் இதழ்கள், துழாவும் விழிப்பார்வை இந்த இரண்டும் அவனை - அவன் இதயத்தை என்னவோ செய்தன. "நாங்கள் வருகிறோம், மாமா". சிறுமி கோமு தன் அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். அழகியநம்பி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்ற இடத்திலேயே நின்றான். அவள் இரண்டொரு முறை திரும்பிப் பார்த்தாள். அவன் தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் தலையைத் திருப்பிக் கொண்டாள். அழகியநம்பி உள்ளத்தில் மிக மெல்லிய பாகத்தின்மேல் கொத்து கொத்தாகப் பூக்களை வீசி எறிவது போல் ஓருணர்ச்சி உண்டாயிற்று. முறுக்கி எழுந்த அந்த உணர்ச்சியைத் தனக்குள்ளேயே, புதைத்துக் கொண்டு பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து, ஊருக்குப் போவதைச் சொல்லிக் கொள்வதற்காகப் பெருமாள் கோவில் புறமாகத் திரும்பினான். "ஆ! ஐயோ!" சுரீர் என்று காலில் ஒரு சிறிய கருவேலமுள் தைத்துவிட்டது. குளத்தங்கரைக் கருவேல மரத்திலிருந்து உதிர்ந்து ஈரத்தில் மறைந்திருந்த முள் அது. காலைத் தூக்கி முள்ளைப் பிடுங்கினா. பாதி முள் முறிந்து உள்ளேயே தங்கிவிட்டது. பாதம் சிவந்தது. குருதி கசிந்தது. |