பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



19. மகிழ்ச்சிப் பயணம்

     அழகியநம்பி ஒரேயடியாக அதிர்ச்சியடைந்து போனான். பூர்ணா திரும்ப வருவாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் அவ்வளவு துணிவாக அவளுடைய நாற்காலியில் போய் உட்கார்ந்து பைல்களையும், கடிதங்களையும் புரட்டியிருக்க மாட்டான். ஆசிரியர் வராத சமயத்தில் அவர் உட்காரும் நாற்காலியில் ஒரு பையன் அவரைப் போலவே கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து அவர் மேசை மேல் வைத்துவிட்டுப் போயிருந்த மூக்குக் கண்ணாடியையும் தலைப்பாகையையும் எடுத்து அணிந்து கொண்டு அவருடைய பிரம்பைக் கையில் எடுத்து அவரைப் போலவே நடித்துக் கோணங்கி செய்யும் சமயத்தில் ஆசிரியர் திடீரென்று வகுப்புக்குள் நுழைந்து பார்த்து விட்டால் பையனுக்கு எப்படியிருக்கும்?

     எதிர்பாராத விதமாகப் பூர்ணா திடீரென்று அறைக்குள் நுழைந்த போது அழகியநம்பி இதே நிலையை அடைந்தான். அந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்கவும் தோன்றாமல், உட்காரவும் தோன்றாமல் தத்தளித்தான் அவன்.

     'பூர்ணா தன்னை அருகில் வந்து தாறுமாறாகத் திட்டப் போகிறாள். கூப்பாடு போட்டு இரைந்து பிரமநாயகம் உட்படக் கடையிலுள்ள அத்தனை பேரையும் அந்த அறைக்குள் கூட்டித் தன் மானத்தை வாங்கி விடப் போகிறாள்' என்றெண்ணிக் கலங்கிவிட்டது அழகியநம்பியின் மனம்.

     ஆனால், பூர்ணா அவனருகே வரவும் இல்லை, அவனைத் திட்டவும் இல்லை, கூப்பாடு போடவுமில்லை. அவள் புதிராக நடந்து கொண்டாள்.

     உள்ளே நுழைந்தவள் கதவிற்குப் பக்கத்திலேயே ஓரிரு விநாடிகள் அசையாமல் நின்றாள். அவன் தன்னுடைய இடத்தில் உட்கார்ந்து தான் முடித்து வைத்திருந்த பைல் கட்டுகளையும் கடிதங்களையும் உடைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை இமையாமல் உறுத்துப் பார்த்தாள். மறுகணம் வந்தது போலவே வெளியேறிச் சென்று விட்டாள். அவள் வந்த விதமும் போன விதமும் அவன் என்ன செய்கிறானென்று பார்த்து விட்டுப் போவதற்காகவே வந்தது போல் இருந்தது.

     ஒருவேளை பிரமநாயகத்திடம் தன் செயலைப் பற்றி ஏதாவது சொல்லுவதற்குப் போயிருப்பாள் என்று அவனும் எழுந்திருந்து அறைக்கு வெளியே வந்து பார்த்தான். அவள் பிரமநாயகத்தைத் தேடிக் கொண்டு போகவில்லை என்பது வெளியில் வந்து பார்த்ததுமே அவனுக்குத் தெரிந்துவிட்டது.

     பூர்ணா கடை வாசலிலிருந்து இறங்கித் தெருவில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள். திரும்பவும் அறைக்குள் வந்த அழகியநம்பிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

     பைல்களையும், கடிதங்களையும் முன்பு எப்படி அடுக்கி அவள் வைத்திருந்தாளோ, அப்படியே வைத்தான். கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு பின்கட்டுக்குச் சென்றான். சமையற்காரச் சோமுவைக் கூப்பிட்டுச் சபாரத்தினத்தை அழைத்துவரச் சொல்லி அனுப்பினான். சோமு சென்றதும் தன் அறைக் கதவைத் திறந்து குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தான் அழகியநம்பி.

     கவலைகளாலும், குழப்பங்களாலும் பயம் நிறைந்த எண்ணங்களாலும் தலையே வெடித்துச் சிதறிவிடும் போல இருந்தது அவனுக்கு. காலையில் பிரமநாயகம் தன்னைத் தனியே கூப்பிட்டு எச்சரித்தது, அதன் பின் தபாலில் வந்த பயமுறுத்தல் கடிதம், பூர்ணா அறைக்குள் வந்து பார்த்துவிட்டுப் பேசாமல் வேகமாக வெளியேறிச் சென்றது - எல்லாவற்றையும் சேர்த்து நினைத்த போது, 'பிழைப்பும் வேண்டாம். காசு சேர்க்கவும் வேண்டாம். ஊரில் போய்த் தெருப் பெருக்கியாவது பிழைக்கலாம். யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இப்படியே அடுத்த கப்பலில் ஏறி ஊர் திரும்பிவிட்டால் என்ன?' - என்று ஒருவகை வெறுப்பும் விரக்தியும் அவனுக்கு உண்டாயின.

     வேலைவெட்டி ஒன்றும் இல்லாமல் குறிஞ்சியூரில் தகப்பனார் காலமான பின் சில காலம் சும்மா இருந்து குந்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கூட அவன் மனத்தில் இவ்வளவு கவலைகளோ, வேதனைகளோ, பயமோ இருந்ததில்லை. வேலை கிடைத்த பிறகு, புதிய இடத்துக்குப் புதிய நம்பிக்கைகளோடு வந்த பிறகு கவலைகள் குறையும் என்பார்கள். ஆனால், அவனுக்குக் கவலைகள் பெருகியிருந்தன.

     "என்னைக் கூப்பிட்டு அனுப்பினீர்களாமே? என்ன செய்தி?" - என்று சிரித்துக் கொண்டே அறைக்குள் வந்தார் சபாரத்தினம்.

     அந்த நிலவொளி வீசும் முறுவல் சரிபாதிக் கவலைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டது போல் அழகியநம்பிக்கு ஒரு நிம்மது உண்டாயிற்று. எல்லோருக்கும் தான் வாய் இருக்கிறது! எல்லோருக்கும் தான் உதடுகளும், பற்களும் இருக்கின்றன! எல்லோரும்தான் சிரிக்கிறார்கள்!

     ஆனால், சபாரத்தினத்தின் இந்தச் சிரிப்பைச் சபாரத்தினம் மட்டும் தான் சிரிக்க முடியும்! நம்பிக்கை, அன்பு, கனிவு, கவர்ச்சி, ஒளி - எல்லாம் நிறைந்த சிரிப்பு அவருடையது.

     "சபாரத்தினம்! உங்களிடம் தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும். அதற்காகத்தான் கூப்பிட்டனுப்பினேன். உங்களுக்குக் கவலை ஏற்பட்டால் நீங்கள் திருக்குறள் புத்தகத்தைத் தேடுகிறீர்கள். எனக்குக் கவலை ஏற்பட்டால் நான் உங்களைத் தேடுகிறேன். எனக்குத் திருக்குறள் நீங்கள் தான்" - என்றான் அழகியநம்பி மெல்லச் சிரித்துக் கொண்டே.

     "நீங்கள் என்னிடம் தனியாகப் பேசவேண்டியதை இப்போதே சுருக்கமாகப் பேசிமுடித்து விடலாமானால் இங்கே பேசி விடுவோம். விரிவாகப் பேச வேண்டிய விஷயமானால் ஒரு மணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். கடைக்குள் என் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அன்று போல இருவரும் எங்காவது வெளியே போய் உட்கார்ந்து விரிவாகப் பேசுவோம்" - என்றார் சபாரத்தினம்.

     "அப்படியே செய்யலாம்! நீங்கள் போய் வேலையை முடித்துக் கொண்டு வாருங்கள்" - என்றான் அழகியநம்பி.

     "புறப்படத் தயாராக இருங்கள். நான் வந்துவிடுகிறேன்." - என்று சொல்லிவிட்டுக் கடைக்குள் சென்றார் சபாரத்தினம். சோமு காபி, சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். அழகியநம்பி அவற்றை வாங்கிக் கொண்டு, "சோமு! கடைக்குள் முதலாளி இருக்கிறாரா, பார்த்துவிட்டு வா. நான் கொஞ்சம் வெளியில் போய்விட்டு வரலாம் என்றிருக்கிறேன். அவர் இருந்தால் பார்த்து ஒரு வார்த்தை நேரில் சொல்லிக் கொண்டு போய்விடலாம்" - என்று சோமுவிடம் கூறினான். சோமு பார்த்துவரப் போனான். அவன் திரும்பி வருவதற்குள் சிற்றுண்டி - காபியை முடித்து விடலாமென்று அதில் கவனம் செலுத்தினான் அழகியநம்பி.

     சோமு திரும்பி வருவதற்குப் பத்து நிமிஷங்கள் பிடித்தன. அவன் வேறொரு செய்தியும் கொண்டு வந்தான். "தம்பி! முதலாளி வெளியில் போயிருக்கிறார். வாசலில் உங்களைத் தேடிக் கொண்டு அந்தப் பெண்கள் இரண்டு பேரும் வந்திருக்கிறார்கள். பார்க்க வேண்டுமாம்"

     "எந்தப் பெண்கள்?"

     "என்ன தம்பி தெரியாதது போலக் கேட்கிறீர்கள்? அன்றைக்குக் கடற்கரையில் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கவில்லையா? அதற்குள் மறந்துவிட்டீர்களே!" - சோமு இதைச் சொல்லிவிட்டு ஒரு தினுசாகச் சிரித்தான்.

     "ஓ! லில்லியும் மேரியும் வந்திருக்கிறார்களா? இதோ வந்து விட்டேன்... வாசலில் நின்று கொண்டா இருக்கிறார்கள்? அடேடே... கடைக்குள் கூப்பிட்டு உட்காரச் சொல்லேன்" - அழகியநம்பியின் பதிலில் ஆவலும் பரபரப்பும் ஒலித்தன.

     "வாசலில் நின்று கொண்டிருக்கவில்லை. அவர்கள் காரில் வந்திருக்கிறார்கள். கடை ஓரத்தில் காரை நிறுத்தி அதற்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறார்கள்." - என்று சொல்லி மறுபடியும் சிரித்தான் சோமு.

     "சோமு! சபாரத்தினம் வந்தால் இங்கே அறைக்குள் உட்கார்ந்திருக்கச் சொல்லு. நான் வாசலில் போய் அவர்களைச் சந்தித்து என்னவென்று கேட்டுவிட்டு வருகிறேன்."

     அழகியநம்பி பின்கட்டிலிருந்து விரைந்தான். அவனைக் காரிலிருந்து கீழே இறங்கிப் புன்முறுவல் பூத்த முகத்தோடு கைகுலுக்கினர் மேரியும், லில்லியும். அன்று அவர்கள் இருவருமே நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தனர். அவர்களுடைய அன்றையத் தோற்றம் அழகியநம்பியின் உள்ளத்தைக் கவர்வதாக இருந்தது.

     "என்ன காரியமோ? என்னைத் தேடிக் கொண்டு கடைக்கே வந்துவிட்டீர்களே!"

     "நாங்கள் எத்தனை முறை உங்களைத் தேடி உங்கள் இருப்பிடத்திற்கு வந்தால் என்ன? நீங்கள் ஒரு நாளாவது எங்கள் வீட்டிற்கு எங்களைத் தேடி வந்திருக்கிறீர்களோ?" - மேரி குறும்புத்தனமாக எதிர்த்துக் கேட்டாள்.

     "அதற்கென்ன? நீங்கள் வந்துதானாக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தால் இப்போதே வரத் தயாராயிருக்கிறேன்."

     "சரி! சரி! - போய்க் கொண்டே பேசலாம். பின் ஸீட்டில் ஏறிக் கொள்ளுங்கள்" - லில்லி பின் ஸீட்டின் கதவைத் திறந்தாள்.

     "எங்கே கூப்பிடுகிறீர்கள்; இப்பொழுது என்னை?"

     "ஏன்; கடற்கரைக்குத்தான்."

     "கடற்கரையைத்தான் அன்றைக்கே பார்த்துவிட்டேனே! தவிர இன்றைக்கு இன்னொரு நண்பரை மாலையில் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேனே!"

     "அவரை நாளைக்குச் சந்தித்துக் கொள்ளலாம். போகலாம் வாருங்கள். காலிமுகக் கடற்கரைக்குப் போக வேண்டாம். இன்னொரு வேறொரு அழகான கடற்கரைக்கு உங்களை அழைத்துக் கொண்டு போகிறோம்..."

     "வேறொரு கடற்கரையா, அது எங்கே இருக்கிறது?"

     "மவுண்ட் லெவினியா பீச் - என்று, இங்கிருந்து ஏழு மைல் தெற்கே இருக்கிறது! இயற்கையழகு சொட்டும் அற்புதமான கடற்கரை. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்..." - மேரி வருணிக்கத் தொடங்கி விட்டாள்.

     அழகியநம்பி யோசித்தான். தயங்கி நின்றான். 'சபாரத்தினத்தைச் சந்தித்துப் பேசுவதாகச் சொல்லிவிட்டோமே! இப்போது இவர்களோடு புறப்பட்டுப் போய்விட்டால் அந்த மனிதர் அநாகரிகமாக நினைத்துக் கொள்வார். அவரிடம் கலந்து பேச வேண்டிய விஷயமும் முக்கியமானது தானே? மனக் குழப்பமும், கவலைகளும் நிறைந்த இந்தச் சமயத்தில் எங்காவது வெளியில் போய்ச் சுற்றிவிட்டு வரவேண்டும் போலவுமிருக்கிறது.

     'சபாரத்தினத்தையும் உடன் கூட்டிக்கொண்டு போய்விட்டால் என்ன? போகிற இடத்தில் ஒரு அரைமணி நேர அவகாசம் லில்லியையும் மேரியையும் விட்டு ஒதுங்கிச் சபாரத்தினத்தோடு தனியாகப் பேசவேண்டியதைப் பேசிவிட்டால் என்ன?" - இந்த யோசனை சரியாகத் தோன்றியது அவன் மனத்திற்கு.

     "காரில் இன்னொருவருக்கும் இடம் இருக்குமோ?" அவன் அவர்களிடம் கேட்டான்.

     "ஓ! தாராளமாக... இன்னும் இரண்டு பேருக்குக் கூட இடம் இருக்கும்." - அந்த 'ஓ'வைச் சொல்லும்போது மேரியின் கொவ்வைச் செவ்விதழ்கள் குவிந்து விரிந்த அழகு அவன் கண்களுக்கு விருந்தாயிருந்தது.

     "ஒரு நிமிஷம் பொறுங்கள். இதோ வந்துவிடுகிறேன்." - சபாரத்தினத்தைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்காகக் கடைக்குள் சென்றான் அழகியநம்பி. உள்ளே சபாரத்தினம் அப்பொழுதுதான் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு புறப்பட இருந்தார்.

     "சபாரத்தினம்! எனக்குத் தெரிந்த இரண்டு ஆங்கிலப் பெண்மணிகள் காருடன் வந்திருக்கிறார்கள். மவுண்ட லெவினியா பீச்சுக்கு வரச்சொல்லி என்னைக் கூப்பிடுகிறார்கள் அவர்கள். நீங்களும் வாருங்கள். காரில் இடமிருக்கிறது. நாம் பேச வேண்டியதை அங்கேயே பேசிக் கொள்ளலாம்?" - என்று சபாரத்தினத்திடம் கூறினான்.

     அவன் கூறியதைக் கேட்டதும் சபாரத்தினம் சிறிது தயங்கினார்.

     "நான் உடன் வருவதை அவர்கள் விரும்புவார்களோ? என்னவோ?"

     "அதெல்லாம் ஒன்றுமில்லை! நான் அவர்களைக் கேட்டுக் கொண்டுவிட்டேன். அவர்களும் விரும்புவதால்தான் உங்களை உடனழைக்கிறேன்."

     "சரி! நானும் வருகிறேன். போகலாம்; வாருங்கள்." - சபாரத்தினமும் உடன் புறப்பட்டார். காருக்கு அருகில் வந்ததும் சபாரத்தினத்தை மேரிக்கும், லில்லிக்கும் அறிமுகப்படுத்தினான் அழகியநம்பி. சபாரத்தினம் மேரிக்கும், லில்லிக்கும், தன் வணக்கத்தைக் கூறினார்.

     எல்லோரும் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது. மேரியும் லில்லியும், முன் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு விட்டதால் பின்ஸீட்டில் அழகியநம்பியும், சபாரத்தினமும் தனித்து விடப்பட்டனர். அழகியநம்பி தன் சட்டைப் பையிலிருந்து மெல்ல அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துச் சபாரத்தினத்திடம் கொடுத்துக் காட்டினான். சபாரத்தினத்தின் கண்கள் அந்தக் கடிதத்தை மேலும், கீழுமாக உற்றுப் பார்த்தன. அழகியநம்பியோ சபாரத்தினத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

     அதைப் படித்துவிட்டுக் கேலியாகச் சிரித்தார் சபாரத்தினம். இதுவரை அவர்களுக்கிடையே நடந்த இவ்வளவும், குறிப்பாலும் கைச்சாடைகளாலும், மௌனமாகவே நடைபெற்றன. கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டே, "என்ன? சிரிக்கிறீர்கள்?" - என்று மிகவும் மெதுவான குரலில் கேட்டான் அழகியநம்பி. சபாரத்தினம் கூறினார்:-

     "இது ஒன்றோடு நின்றுவிடாது. இப்படி எத்தனையோ வரும். என்னென்னவெல்லாமோ நடக்கும்! பயப்படக் கூடாது."

     "நீங்கள் எனன் சொல்கிறீர்கள்? தெளிவாக எனக்கு விளங்கும்படி சொல்லுங்கள்?"

     "ஒன்றுமில்லை!... இப்போது வேண்டாம். தனியாகப் பேசுவோம்." - என்று சொல்லி முன்ஸீட்டின் பக்கமாகக் கையைக் காட்டினார் சபாரத்தினம். அவருடைய அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டு பேச்சை நிறுத்தினான் அழகியநம்பி.

     கார் லெவினியாவின் எழில் வளம் மிக்க கடற்கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. காலிமுகக் கடற்கரையைவிட லெவினியாக் கடற்கரை அதிகமான இயற்கை வனப்புடன் விளங்கியது. கரையோரமாக அணிவகுத்து நிற்கும் தென்னைமரக் கூட்டமும், சிறிதும் பெரிதுமான பாறைகளும், இன்னும் வருணணையிலடங்காத இயற்கைக் காட்சிகளும், அந்த மாலை நேரத்தில், அந்த இடத்தைத் தேவலோகமாக மாற்றிக் கொண்டிருந்தன. கடற்கரையில் வெள்ளைக்காரர்களின் கூட்டமே அதிகமாக இருந்தது. திறந்த உடம்போடு காற்று வாங்கிக் கொண்டிருந்தனர் சிலர். கடல் அலைகளில் பெரிதும் சிறிதுமாகப் பந்துகளை வீசி எறிந்து அவை கரைக்கு அடித்து வரப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர். வேறு சிலர் வீசி எறிந்த பந்துகளைப் பாய்ந்து சென்று எடுத்து வருவதற்காகத் தம்முடைய அழகான உயர்சாதி நாய்களை அலைகளிடையே துரத்தி வேடிக்கைப் பார்த்தனர். இன்னும் சிலர் அந்த மாலை நேரத்திலும் சோம்பலோ, சலிப்போ, இன்றிக் கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். வலைகளாலும் தூண்டிலாலும் மீன் பிடிப்பதிலும், கட்டு மரங்களில் ஏறி அலைமேல் மிதப்பதிலும் கூடச் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

     காரை நிறுத்திவிட்டு அமைதியான இடமாகப் பார்த்துப் போய் உட்கார்ந்தார்கள் அவர்கள். சபாரத்தினமும் அழகியநம்பியும் ஒருபுறமும் லில்லியும் மேரியும் மற்றோர் புறமுமாக நேர் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். மேரி தன் கையிலிருந்த பையைத் திறந்து சாக்லேட் பொட்டலங்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தாள்.

     லெவினியாக் கடற்கரையின் சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டே அந்தப் பெருமிதத்தில், "இலங்கை அழகாகத் தான் இருக்கிறது!" - என்று இருந்தாற் போலிருந்து நினைத்துப் பார்த்துக் கூறுவதுபோல் கூறினான் அழகியநம்பி. "இவைகளைப் பார்த்துவிட்டே இலங்கையின் அழகை இந்த மனிதர் இவ்வளவு வியக்கிறார். இயற்கைச் செல்வத்தின் பலவித நிலைகளும் செழித்துக் கொழித்துக் கிடக்கும் இலங்கையின் மலைப்பகுதிகளை இவருக்குச் சுற்றிக் காட்டிவிட்டால், மயங்கி விழுந்தே விடுவார்!" - என்று சிரித்தபடியே அழகியநம்பியைச் சுட்டிக் காட்டி மேரியிடம் கூறினார் சபாரத்தினம். அவருக்கு நன்றாக ஆங்கிலமும் பேசவரும் என்பதை அழகியநம்பி அப்போது கண்டு ஆச்சரியமுற்றான்.

     "வருகிற ஞாயிற்றுக்கிழமை, நானும், அக்காவும் மலைப்பகுதிகளுக்கு உல்லாசப் பிரயாணமாகக் கிளம்பலாம் என்று திட்டம் போட்டிருக்கிறோம். அதை இவரிடம் சொல்லி இவரையும் கூப்பிட்டுக் கொண்டு போவதற்காகத்தானே இன்றைக்கு இவரைப் பார்க்கவே புறப்பட்டோம்" - என்று மேரி சபாரத்தினத்திடம் கூறினாள்.

     "மிகவும் நல்ல காரியம்! இந்த மனிதரைக் கட்டாயமாக வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போயாவது மலைப்பகுதிகளைச் சுற்றிக் காட்டி விடுங்கள். இவர் அவசியம் அந்த இடங்களையெல்லாம் பார்க்க வேண்டும்!" - அழகியநம்பியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே குறும்புச் சிரிப்போடு அவர்களைப் பார்த்துச் சபாரத்தினம் கூறினார்.

     "அவர் வரமாட்டேன் என்று தான் சொல்லிப் பார்க்கட்டுமே! நாங்கள் விடவா போகிறோம்?" - அதுவரை பேசாமல் இருந்த லில்லி பேச்சில் கலந்து கொண்டாள்.

     "நீங்கள் என்னை வீணாகப் பிரமநாயகத்தின் கோபத்துக்கு ஆளாக்கப் பார்க்கிறீர்கள். நான் ஏழை! பிழைப்பதற்காக அவருடைய தயவை நாடி இங்கே வந்திருக்கிறேன். செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்யாமல் இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் நாளைக்கே சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து ஊருக்குக் கப்பலேறச் சொல்லிவிடுவார் அவர்." - அழகியநம்பி சபாரத்தினத்தை நோக்கி அவருக்கு மட்டும் தெரியும்படியாக வருத்தத்தோடு தமிழில் சொன்னான்.

     "கோபித்துக் கொள்ளாதீர்கள், நான் ஒரு காரணத்துக்காகத்தான் இவர்களோடு போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டு வருமாறு சொல்கிறேன்." - என்று சபாரத்தினமும் தமிழிலேயே பதில் கூறினார்.

     "நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் அவரோடு தனியே ஒரு கால் மணி நேரம் முக்கிய விஷயம் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது, பேசிவிட்டு வந்து விடுகிறோம்" - என்று மேரியிடமும், லில்லியிடமும் கூறிக் கொண்டு சபாரத்தினத்தை அழைத்துச் சென்றான் அழகியநம்பி. சிறிது தூரம் கடற்கரையோரமாகவே நடந்து சென்று மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் அவர்கள் இருவரும் அமர்ந்து கொண்டனர்.

     "சபாரத்தினம்! எனக்கு இருக்கிற தொல்லைகள் போதாதென்று இந்த அன்புத் தொல்லையில் வேறு அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறேன். ஏதோ தற்செயலாக நடுக்கடலில் கப்பலில் பழக்கமானவர்கள், அதோடு போகாமல் இங்கு வந்த பின்பும் என்னை அட்டை போல் பற்றிக் கொண்டு விட்டார்கள். இந்த விளையாட்டுச் சுபாவமுள்ள பெண்களின் அன்பு வெள்ளத்திலிருந்து எப்படிக் கரையேறுவது? எப்போது கரையேறுவது? - என்று தெரியாமல் நான் திகைத்துத் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னடாவென்றால் என்னை அதன் ஆழத்திலேயே பிடித்துத் தள்ளப் பார்க்கிறீர்கள்."

     சபாரத்தினம் பதில் சொல்லாமல் சிரித்தார். அழகியநம்பியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். சொல்லத் தொடங்கினார். "நான் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். விளையாட்டுக்காக எதையும் சொல்லவோ, செய்யவோ எனக்குத் தெரியாது. சற்று முன் காரில் வரும்போது என்னிடம் ஒரு கடிதம் காட்டினீர்களே; அதற்கும் உங்களை நான் சில நாட்கள் வெளியூரில் சுற்றச் சொல்வதற்கும் தொடர்பு உண்டு. தெரிந்து கொள்ளுங்கள்." - சபாரத்தினம் இப்படி கூறவும் அழகியநம்பி வியப்புடன் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தான். சபாரத்தினம் மேலும் அவனிடம் கூறினார்:-

     "முதலில் இன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை வரிசையாக எனக்குச் சொல்லுங்கள். அதைக் கேட்டுவிட்டு அப்புறம் என்னுடைய திட்டமான யோசனைகளை உங்களுக்கு நான் சொல்கிறேன்."

     அன்று காலையில் பிரமநாயகம் தன்னைத் தனியே கூப்பிட்டுப் பூர்ணாவைப் பற்றி எச்சரித்ததிலிருந்து மாலைவரை நடந்தவற்றை ஒன்றும் விட்டுவிடாமல் சபாரத்தினத்திற்கு விவரித்தான் அழகியநம்பி.

     முழுவதையும் கேட்டு முடித்துவிட்டுப் பெருமூச்சுவிட்டார் சபாரத்தினம். "உண்மையில் நீங்கள் மிகவும் பரிதாபப்பட வேண்டிய நிலையில் தான் இருக்கிறீர்கள் அழகியநம்பி!" - சபாரத்தினத்தின் வாயிலிருந்தே இந்த மாதிரி அவநம்பிக்கையூட்டும் சொற்கள் வெளிவந்ததைக் கண்டு அழகியநம்பியின் பயம் மேலும் அதிகரித்தது. சபாரத்தினம் மேலும் தொடர்ந்தார். "இரண்டு விதத்திலும் உங்களுக்குப் பிடிப்பில்லை. பூர்ணாவின் ஆளாக அவளுக்கு வேண்டியவர் போல் நடிக்க முயன்றீர்கள். அதே சமயத்தில் அவளிடம் அதிகமாக நெருக்கம் வேண்டாம் என்று நானும் அன்று கழனியாவில் எச்சரித்திருந்தேன். இன்று நடந்திருக்கும் நிகழ்ச்சிகளோ நம்முடைய எல்லாத் திட்டங்களையுமே குட்டிச்சுவராக்கிவிட்டன. பூர்ணா உங்களுடைய உண்மை நிலையைப் புரிந்து கொண்டு விட்டாளென்று தெரிகிறது. நேற்று மாலையில் உங்களுக்கு எழுதப்பட்டு இன்று காலைத் தபாலில் கிடைத்த பயமுறுத்தல் கடிதமே அதற்குச் சரியான சான்று. அலுவலகத்திலிருந்து அவள் வெளியேறிச் சென்ற பின் பிரமநாயகத்தின் சார்பில் அவளுடைய வேலைகளை இரகசியமாக மேற்பார்வையிடுகிறீர்கள் என்பதையும் இன்று மாலை நேரடியாகவே வந்து பார்த்துத் தெரிந்து கொண்டு போயிருக்கிறாள். இதன் விளைவுகள் இனிமேல் சிறிது பயங்கரமாகவே இருக்கும். இரண்டு புறத்திலுமே உங்களை முழுமையாக நம்பவில்லை. 'நீங்கள் பூர்ணாவின் ஆளாக மாறித் தமக்குத் துரோகம் செய்ய முற்பட்டுவிடக்கூடாதே' - என்று பிரமநாயகம் பயப்படுகிறார். அவரைப் போல் பூர்ணா உங்களைக் கண்டு பயப்படவில்லை. நீங்கள் அவளுடைய வலைகளில் சிக்காமல் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, - அவளை மீறிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தால் அவளுடைய அனுபவம் நிறைந்த தீய சக்திகள் எல்லாவற்றையும் - பயன்படுத்தி உங்களைக் கவிழ்த்து விட முயல்வாள் - முயல்கிறாள். இந்த எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும், சமாளிக்கப் பிரமநாயகம் உங்களுக்கு உறுதியாக உதவுவார் என்று நான் நம்பவில்லை. முதுகெலும்பில்லாத மனிதர் அவர். பூர்ணாவை நேரில் கண்டுவிட்டால் பேசுவதற்கே பயப்படுவார். அவள் இல்லாத சமயத்தில் அந்த விநாடியிலேயே அவளை வேலையை விட்டு துரத்தி விடப்போவது போலத் திட்டுவார். நாளைக்கே ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் பூர்ணாவுக்காக உங்களை வேலையைவிட்டு நீக்குவாரே யொழிய, உங்களுக்காக பூர்ணாவை வேலையிலிருந்து நீக்க மாட்டார். சோளக் கொல்லைக்குள் காக்கை, குருவிகள் நுழைந்து, தானியக் கதிர்களை அழித்துவிடாமல் மூங்கில் குச்சியில் துணிப்பொம்மை கட்டி நட்டுவைப்பது போல், கடையின் சொத்துக்களில், இலாபத்தொகையில் பூர்ணா ஏராளமாகச் சூறையாடி விடாமல் உங்களை ஒரு அரட்டலுக்காக உட்கார்த்தி வைத்திருக்கிறார். அவ்வளவுதான்."

     "நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டால் எனக்கு ஒரே பயமாக இருக்கிறது சபாரத்தினம்! நான் ஒன்று செய்து விடலாமென்று நினைக்கிறேன். பிரமநாயகத்திடம் சொன்னால் அவர் என்னை விடமாட்டார். எனக்கு இந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்டவர்களுக்கு நடுவே வேலை பார்க்கப் பிடிக்கவே இல்லை. நான் யாரிடமும் சொல்லாமல் ஊருக்குக் கப்பலேறிப் போய்விடுகிறேன். இதுதான் கடைசியாக எனக்குத் தோன்றுகிற வழி." - அழகியநம்பியின் பேச்சிலிருந்து அவன் ஏக்கமும், தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருக்கிறானென்று தெரிந்தது. சபாரத்தினத்தை நோக்கி அவன் கூறிய சொற்களில் அவநம்பிக்கையும், கையாலாகாத்தனமும் கலந்திருந்தன.

     சபாரத்தினம் அவன் கூறியதைக் கேட்டு அவருக்கே உரிய கவர்ச்சி முத்திரையோடு சிரித்தார். "அழகியநம்பி! நீங்கள் இப்போது பேசுவது நல்லதாக எனக்குப் படவில்லை. நீங்கள் வந்திருக்கும் இதே வேலைக்கு வேறொரு இளைஞர் வந்திருந்தால் இதற்குள் இருவது தடவையாவது பூர்ணாவின் வீட்டுக்குப் போயிருப்பார். அவளுக்குப் பின்னால் நாய்க்குட்டியாகச் சுற்றத் தொடங்கியிருப்பார். ஆனால், நீங்கள் அந்த விஷயத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். அழகுக்கும் மோகத்துக்கும் அடிமையாகும் பலவீனம் உங்களிடமில்லை. இன்னும் சிறிது காலம் அஞ்சாமல் அவநம்பிக்கைப்படாமல் பொறுமையோடு இருந்தீர்களானால் 'பூர்ணா' - என்னும் கொடுமையை முற்றிலும் வென்றுவிடலாம்."

     "நீங்கள் சொல்வது சரி; சபாரத்தினம்! அந்தப் பூர்ணாவை வெல்லுகிறவர நான் எப்படி இங்கே காலந்தள்ளுவது?"

     "அதற்கெல்லாம் வழி இருக்கிறது! நான் சொல்லுவதை அவ்வப்போது கேட்டு அதன்படி நடந்து கொண்டு வாருங்கள்."

     "என்ன வழி? இப்போது இந்தப் பயமுறுத்தல் கடிதம் வந்திருக்கிறதே; இதற்கு என்ன வழி சொல்கிறீர்கள்?"

     "வருகிற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரு நாலைந்து நாள் நீங்கள் எங்காவது வெளியூரில் தலைமறைவாகச் சுற்றிக் கொண்டிருப்பது நல்லது. அதற்குத்தான் இந்தப் பெண்களோடு மலைப் பகுதிகளுக்கு மகிழ்ச்சிப் பிரயாணம் போக வேண்டுமென்று உங்களை நான் கட்டாயப்படுத்துகிறேன். பிரயாணம் மனத்துக்கும் நல்லது. கவலைகள் மறைந்து புதிய ஊக்கம் பிறக்கும்."

     "சரி! அப்படியே செய்கிறேன்." - என்று தலையசைத்தான் அழகியநம்பி. அதே சமயத்தில், "இருட்டிவிட்டதே? நாம் புறப்படலாமா?" - என்று அங்கே வந்தனர் மேரியும், லில்லியும். "ஞாயிற்றுக்கிழமை உங்களோடு இவரும் வருகிறார்." - என்று அவர்களிடம் புன்னகையோடு கூறினார் சபாரத்தினம்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247