-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்



11. வீரத்துக்கு ஒரு சோதனை!

     காதல் விவகாரம் எதுவாயிருந்தாலும் மேல் நாடுகளில் அதைப் பற்றிப் பகிரங்கமாகவே விவாதிக்கிறார்கள்; பகிரங்கமாகவே தீர்வும் காண்கிறார்கள். அதற்குக் குறுக்கே பெண்ணைப் பெற்றவர்களோ, பிள்ளையைப் பெற்றவர்களோ நிற்பதில்லை; அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகமும் அதை அவமானத்துக்கு உரிய ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவதிப்படுவதுமில்லை. இதனால் பல காதல்கள் அங்கு வெற்றி பெறுகின்றன; காதலர்களும் வெற்றி பெறுகிறார்கள். அத்துடன், கல்யாணத்துக்கு முன்பே காதலன் காதலியைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போவதோ அங்கே குறைவு. அதைவிடக் குறைவு, காதலிக்காக காதலன் தற்கொலை செய்து கொள்வதும், காதலனுக்காக காதலி தற்கொலை செய்து கொள்வதும், இருவரும் சேர்ந்தாற் போல் தற்கொலை செய்து கொள்வதும், இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இல்லை என்று கூடச் சொல்லி விடலாம்.

     இங்கேயோ நிலைமை அப்படி இல்லை. இலக்கியத்தில் காதல் என்றால் இதயம் குளிர வரவேற்கிறோம். கலையில் காதல் என்றால் கண் குளிர வரவேற்கிறோம்; வாழ்க்கையில் காதல் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு வம்புக்கு நிற்கிறோம். இதனால் காதல் விவகாரம் எதுவாயிருந்தாலும் இங்கே அது ரகசியமாகவே வைக்கப்படுகிறது; ரகசியமாகவே தீர்வும் காணப்படுகிறது. அந்தத் தீர்வுகள் பெரும்பாலும் காதலுக்கு விரோதமாயிருக்கின்றன. காதலர்களுக்கும் விரோதமாயிருக்கின்றன. பெண்ணைப் பெற்றவர்களுக்கு விரோதமாயிருக்கின்றன. பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் விரோதமாயிருக்கின்றன - அவர்களைச் சுற்றியிருக்கும் சமூகத்துக்கோ அவை முழுக்க முழுக்க விரோதமாயிருக்கின்றன. இதன் காரணமாக, உலகத்தில் எத்தனை விதமான அயோக்கியத்தனங்கள் உண்டோ, அத்தனை விதமான அயோக்கியத்தனங்களும் இங்கே அந்தரங்கமாகவே நடைபெற வேண்டியிருக்கிறது. இதுவே நமது பெருமைக்குரிய பாரம்பரியம்; இதுவே நமது மதிப்புக்குரிய பண்பாடு! - வேடிக்கையாயில்லையா?

     கல்யாணமாகும் வரை இந்த ‘வேடிக்கைக்குரிய காதலி’யாகத்தான் இருக்க விரும்பினாள், பாமா. அதற்கு ஆபீசிலுள்ள அதிகாரிதான் இடம் கொடுக்கவில்லை யென்றால், வீட்டிலுள்ள அக்காவுமா இடம் கொடுக்கக் கூடாது?

     அவள் என்ன செய்வாள் பாவம், எல்லாம் அந்த மீனாட்சியம்மாளால் வந்த வினை! - காதலுக்காக அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை ஆகியவர்களை யெல்லாம் துறந்துவிட்டு ‘ஐயா’வோடு வந்தவரல்லவா அவர்? அவருக்காக அவருடைய தந்தையார் தற்கொலை செய்து கொண்ட போது கூட ‘மடிந்தது என் தந்தையல்ல; மடமை!’ என்று கொஞ்சங் கூடக் கூசாமல் சொன்னவரல்லவா, அவர்? - அவரைப் போலவே நானும் எங்கே அக்காவைத் துறந்து, தம்பியைப் பலி கொண்டு விடுவேனோ என்று அஞ்சி, ‘ரகசியம் ஒன்றும் வேண்டாம், எல்லாம் பகிரங்கமாகவே இருக்கட்டும்!’ என்று சொல்லி விட்டாரோ, என்னமோ? - அதைக் கேட்டுக் கொண்டு இந்த அக்கா என்னை என்ன பாடு படுத்திவிட்டது!

     கேட்டதையே திருப்பித் திருப்பிக் கேட்டு, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி - அப்பப்பா! கல்யாணம் எனக்கா, அதற்கா என்று எனக்கே அல்லவா சந்தேகம் வந்து விட்டது?

     அம்மாவும் அக்காவும் தான் அப்படியென்றால், ஐயாவாவது சும்மா இருக்கக் கூடாதா? - அவர் எனக்கு நிஜக் கல்யாணம் பண்ணிப் பார்க்கப் போகிறாராமே, நிஜக் கல்யாணம்!

     அதற்கெல்லாம் இவர் தகுதியுடையவரா யிருப்பாரா என்று நான் அப்போதே சந்தேகப்பட்டேன் - அந்தச் சந்தேகம் சரியென்றல்லவாத் தோன்றுகிறது, இப்போது?

     எனக்கென்னமோ இவர் சொன்னதில் அன்றே நம்பிக்கையில்லை தான்! - ‘அவனுக்கு உன் மேல் ஒரு கண்’ - இதை அவர் அந்த முரடனை அடித்து வீழ்த்துவதற்கு முன்னால் இவர் சொல்லியிருந்தால் நான் நம்பியிருப்பேன். ஏனெனில், ‘கோழைகள் காதலிக்கிறார்கள்; ஆனால் காதலிக்கப்படுவதில்லை!’ என்பது எனக்குத் தெரியும். ஆனால் வீரர்களோ? - அவர்கள் ஒரு நாளும் காதலிப்பதில்லை; ஆனால் காதலிக்கப்படுகிறார்கள்!

     அத்தகைய வீரர்களில் ஒருவர் அவர்! - அவராவது, என் மேல் ஒரு கண் வைப்பதாவது?

     இதில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும். அந்தச் சூழ்ச்சி இன்னதென்று தெரியும் வரை இவருடன் நாம் கொஞ்சம் எச்சரிக்கையுடனேயே பழக வேண்டும்...

     இந்தத் தீர்மானத்துடன் அவள் அவனை நெருங்கிய போது, “வா பாமா, வா! என்ன இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே ஆபீசில் வேலை பார்ப்பவர்கள் அல்லவா? அவன் என்னமோ அன்று நடந்துவிட்ட அந்த அசம்பாவிதத்துக்காக என்னைக் கண்டதும் ஒதுங்கி ஒதுங்கித்தான் நடந்தான். நான் தான், ‘அவள் அழகு உன்னை அப்படிச் செய்யச் சொன்னால் அதற்கு நீ என்னடா செய்வாய்? ஆசை எல்லோருக்கும் பொதுவானதுதானே? வா வா!’ என்று அவன் தோளில் கையைப் போட்டுத் தள்ளிக் கொண்டு வந்தேன்; அதற்குள் நீ வந்து விட்டாய்!” என்றான் அவன், வழக்கம் போல் அசடு வழிய.

     “உங்களுக்கு இருக்கும் பெருந்தன்மை எனக்கு இருக்காது என்று நீங்கள் ஏன் நினைக்க வேண்டும்? என்னைக் கண்டதும் அவருடைய தோளின் மேல் இருந்த கையை நீங்கள் ஏன் எடுக்க வேண்டும்?” என்றாள் அவள்.

     அவ்வளவுதான்; “என்னை மன்னித்துவிடு பாமா, உன்னைப் பற்றி நான் அப்படி நினைத்தது தப்புத்தான்!” என்று உடனே அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டான் அவன் - அவனைப் பொறுத்தவரை அதற்குத்தான் மதிப்பே கிடையாதே!

     அன்று மாலை, ‘இனி நம் காதலை எங்கே வளர்ப்பது? ஆபீசில் வளர்க்கலாமென்றால் அதற்குக் குறுக்கே பரந்தாமன் வந்து நிற்கிறார்; கடற்கரையில் வளர்க்கலாமென்றால் அதற்குக் குறுக்கே யாராவது ஒரு முரடன் வந்து நிற்கிறான்! - இந்த நிலையில் எஞ்சி நிற்பது சினிமா ஒன்றுதான்! - அங்கே போனால் மனம் விட்டுப் பேசவா முடிகிறது? ‘கிசு கிசு’வென்று பேசினால் கூட, ‘ஸ், ஸ்!’ என்று சீறுவார்கள், அங்கே வருபவர்கள் மகா ரசிகர்கள் மாதிரி! நகரத்தை ஆளுகிறவர்களும், ‘காதலர் பூங்கா, காதலர் பாதை’ என்று வெறும் போர்டுதான் அங்கங்கே போட்டு வைக்கிறார்களே தவிர, பாதுகாப்பு ஏதாவது செய்கிறார்களா, காதலர்களுக்கு? அன்று அவன் சொன்னது போல, நாம் தான் துணைக்குப் போலீசாரை அழைத்துக் கொண்டு போக வேண்டும் போலிருக்கிறது!’ என்று எண்ணிக் கொண்டே மோகன் ஆபீசை விட்டு வெளியே வந்த போது, “இனிமேல் நீங்கள் என்னைக் கடற்கரைக்கு அழைக்கவே மாட்டீர்கள், இல்லையா?” என்றாள் பாமா, அவனுக்குப் பின்னால் வந்து கொண்டே.

     எப்படியிருக்கும் மோகனுக்கு? ‘என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணுக்காக, தான் பின் வாங்குவதாவது!’ இப்படி நினைத்த அவன் தன்னைத் தானே ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “அப்படியொன்றும் இல்லையே? இப்போது கூட நீ விரும்பினால் நான் வரத் தயார்!” என்றான், ‘எங்கே அவள் வந்து விடுவாளோ?’ என்ற அச்சத்துடன்!

     அவள் விடவில்லை; “அதற்குத்தான் மறுபடியும் மணியுடன் சிநேகமாகப் போய்விட்டீர்கள் போலிருக்கிறது?” என்றாள் அவனைத் தன் பார்வையால் ஊடுருவி.

     அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான் என்றாலும், அதை அவளிடம் ஒப்புக் கொள்ள அவன் விரும்பவில்லை. எனவே, “அவன் என்னை முந்திக் கொண்டு விட்டால் அதற்கு நான் என்ன செய்வேனாம்?” என்றான் எங்கேயோ பார்த்தபடி.

     “பாவம், உங்களையும் உங்களுடைய வீரத்தையும் நான் ஏன் அனாவசியமான சோதனைக்கு உள்ளாக்க வேண்டும்? பேசாமல் வீடு போய்ச் சேருகிறீர்களா?” எண்றாள் அவள், அனுதாபத்துடன்.

     அவளுடைய அனுதாபம் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, “என்னை வீணாகப் பயமுறுத்தாதே, உனக்குப் பயமாயிருக்கிறதென்று சொல்!” என்றான், வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு.

     “உண்மைதான்; என்னை யாரிடமாவது விட்டு விட்டு நீங்கள் ஓடிவிட்டால் என்ன செய்வது என்று நான் பயப்படத்தான் பயப்படுகிறேன்!” என்றாள் அவள், அதற்கும் சளைக்காமல்.

     நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே வருவதை உணர்ந்த மோகன், “போ, பாமா! என்னிடம் நீ இப்படியெல்லாம் விளையாடினால் எனக்குக் கெட்ட கோபம் வரும், தெரியுமா?” என்று குழைவோடு இழைந்து, பாதையையே அடியோடு மாற்றப் பார்த்தான்!

     அவள் சிரித்தாள்; சிரித்து விட்டுச் சொன்னாள்:

     “பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியவர், நீங்கள்!”

     அவன் சொன்னான்; அதற்கு நேராகப் பதில் சொல்ல முடியாமல் தான் சொன்னான்:

     “இப்படியெல்லாம் பேசினால் உன்னை நான் அடித்தாலும் அடித்து விடுவேன்!”

     “மிக்க மகிழ்ச்சி; பெண்களையாவது உங்களால் அடிக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது பற்றி!”

     அவ்வளவு தான்; ஆத்திரம் தாங்கவில்லை அவனுக்கு - “ஏ பாமா, என்னை நீ விரும்புகிறாயா? இல்லை, வெறுக்கிறாயா?” என்று கத்தினான்.

     “அந்தக் கேள்விக்கு இனி இடமில்லை; வாருங்கள், போவோம்!” என்றாள் அவள், போனாற் போகிறதென்று அத்துடன் விட்டுவிட்டு.

     “எங்கே?” என்றான் அவன்.

     “என் வீட்டுக்கு!” என்றாள் அவள்.

     “என்னை உங்கள் வீட்டுக்கு அழைக்கும் அளவுக்குக் கூட உனக்குத் துணிவிருக்கிறதா, என்ன?”

     “எனக்கு இல்லை; என் அக்காவுக்கு இருக்கிறது!”

     “உன் அக்காவுக்கு இருக்கிறதா?”

     “ஆமாம்; அதற்கு வேண்டிய தைரியம் தான் உங்களுக்கு இருக்க வேண்டும். இருக்கிறதோ, இல்லையோ?” என்றாள் அவள், அவனை ஒரு தினுசாகப் பாத்துக் கொண்டே.

     “ஏன் இல்லை? இருக்கிறது. இருக்கிறது!” என்று அவன் தன் மார்பைத் தடவி விட்டுக் கொண்டான்; அவளும் அவனுடன் சேர்ந்து அவனுடைய மார்பைத் தடவி விட்டு விட்டு, அவனுக்குப் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

     ‘ஸ்கூட்டர்’ அவள் வீட்டை நோக்கி நகர்ந்தது. ஆம், அவனுக்கிருந்த தயக்கம் அதற்கும் இருந்தது!

     இங்கே இப்படியென்றால், அங்கேயோ ஆரத்தி ஒன்று தான் பாக்கி. அதைத் தவிர, தன் தங்கையின் எதிர்காலக் கணவனை வரவேற்பதற்காக எத்தனை ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ, அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தாள் ராதா.

     அவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த மீனாட்சி, “ஏன், ஆரத்தியையும் தான் கரைத்து வைத்து விடேன்!” என்றாள் சிரித்துக் கொண்டே.

     “இப்போது ஏன் அம்மா அது, கல்யாணத்துக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன்!” என்றாள் ராதா, அவள் சொன்னதை உண்மையாக எடுத்துக் கொண்டு!

     “அதுதான் சரி; ஆனால் இங்கே உள்ள தரை விரிப்பைக் கொண்டு போய் அங்கே விரித்து, இங்கே உள்ள நாற்காலிகளைக் கொண்டு போய் அங்கே போட்டு, அவனை நீ அங்கே வரவேற்பதை விட இங்கேயே வரவேற்றிருக்கலாமே?”

     “அப்படித்தான் நினைத்தேன் நான்; ஐயா என்ன நினைப்பாரோ என்னமோ என்று...”

     “உனக்குத் தெரியாதா, அவனை வரவேற்பதற்காக அவர் அவனுக்கு முன்னாலேயே வந்து உட்கார்ந்திருக்கிறார்!”

     “போம்மா, நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!”

     அதற்குள், “ஏன் ராதா, நான் வரக்கூடாதா?” என்றார் அவர், மேலே இருந்தபடி அவளை எட்டிப் பார்த்து.

     அவ்வளவுதான்; வெட்கமாகப் போய்விட்டது அவளுக்கு. ஓடிப்போய் அங்கே விரித்த விரிப்பை எடுத்துக் கொண்டு இங்கே வந்தாள் விரிக்க; மீனாட்சி அதைத் தடுத்து, “உனக்கென்ன, பைத்தியமா? எங்கே வரவேற்றால் என்ன, நாங்கள் அங்கே வந்து விடுகிறோம்!” என்றாள்.

     “சரி” என்று ராதா திரும்பிய போது யாரோ ஒரு மாணவி வந்து, “அம்மா இருக்கிறார்களா?” என்று அவளை விசாரித்தாள். “இருக்கிறார்கள்!” என்று அவள் சொல்வதற்குள் மீனாட்சியே அங்கு வந்து, “வாடி வா! இன்று நாங்கள் இங்கே ஒரு காதல் ஜோடியை வரவேற்கப் போகிறோம்!” என்று அவளை வரவேற்றபடி, தனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த தன் கணவரையும் தன்னுடைய கண்ணால் அவளுக்குக் காட்டினாள்.

     அப்போது அன்றொரு நாள் பார்த்த அதே ‘ஸ்கூட்டர்’ அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க, “இந்தக் காதல் ஜோடிதானா நீங்கள் சொன்னது?” என்றாள் அவர்களுடன் இருந்த மாணவி.

     அவ்வளவுதான்; பாமாவை அவசர அவசரமாக இறக்கிக் கீழே விட்டு விட்டு, “இன்று வேண்டாம்; இன்னொரு நாளைக்கு!” என்று சிட்டாய்ப் பறந்தான், மோகன்.

     காரணம் வேறொன்றுமில்லை; அவனைப் பார்த்த அந்த மாணவி, அவன் தங்கை அருணாவாயிருந்தது தான்!