37. வாழ்க்கையிலும் மாணவி

     ஞானி கடவுளை நெருங்குகிறானோ இல்லையோ, விஞ்ஞானி கடவுளை நெருங்குகிறான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

     அந்த விஞ்ஞானியாலேயே இதுவரை விவை காண முடியாத புதிர்கள் இன்னும் எத்தனையோ இந்த உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

     அவற்றில் ஒன்று, மனிதன் சாவைத் தழுவினாலும், சாவு மனிதனைத் தழுவாதது!

     எல்லோருடைய விஷயத்திலும் இது உண்மையாகி விடுவதில்லையென்றாலும், அருணாவின் விஷயத்தில் உண்மையாயிற்று. ஆம், அவள் சாவை விரும்பினாலும் சாவு அவளை விரும்பவில்லை. ஆகவே, ‘நீ போடியம்மா, உன்னை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராயில்லை!’ என்பது போல், கடல் அலைகள் அவளை எந்த வேகத்தில் பின்னால் இழுத்துக் கொண்டு சென்றனவோ, அதே வேகத்தில் முன்னால் தள்ளிக்கொண்டு வந்து விட்டுவிட்டுப் போய்விட்டன!

     பேச்சு மூச்சற்றுக் கரையிலே ஒதுக்கப்பட்டுக் கிடந்த அவளை, அந்தப் பக்கமாக அப்போது வந்து கொண்டிருந்த பரந்தாமன் பார்த்தார். பார்த்ததும் ‘இந்த ஊர் வம்பெல்லாம் நமக்கு எதற்கு?’ என்று அவர் அப்பால் போய்விடவில்லை; அவ்வாறு போவதற்கு இளம் பிராயத்தில் அவர் பெற்றிருந்த ‘சாரணர் பயிற்சி’யும் இடம் கொடுக்கவில்லை. ஆகவே, அவளுக்கு அளிக்க வேண்டிய ‘முதல் உதவி’யைத் தானே அளித்த பின், அவளைத் தன் காரிலேயே வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு போனார். வழியில் மூர்ச்சை தெளிந்து எழுந்த அருணா நடந்ததை ஒருவாறுப் புரிந்து கொண்டு, “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள்.

     “ஏன், மருத்துவமனைக்கு!” என்றார் அவர்.

     “ஐயோ, வேண்டாம்! அங்கே என்னைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்; இங்கேயே இறக்கி விட்டுவிடுங்கள்!” என்றாள் அவள்.

     “இங்கேயே இறக்கி விட்டுவிடுவதற்கா உங்களை நான் இவ்வளவு தூரம் கொண்டு வந்தேன்? சும்மா வருங்கள்; தற்செயலாக நேர்ந்த விபத்து என்று சொன்னால், உங்களை யாரும் அங்கே குற்றவாளியாக நினைக்க மாட்டார்கள்!”

     “மன்னியுங்கள்; அப்படியெல்லாம் சொல்லி என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் விரும்பவில்லை. அத்துடன்...”

     “அத்துடன் என்ன?”

     “நானே தற்கொலை செய்துகொள்வதாக அங்கே ஒரு கடிதம் வேறு எழுதி வைத்திருக்கிறேன்!”

     “எங்கே, கடற்கரையிலா?”

     “ஆமாம்!”

     “ஐயையோ! முதலில் அங்கே போய் அதை எடுத்துக் கொண்டு விடவேண்டுமே, நாம்? இல்லாவிட்டால் போலீசார் அனாவசியமாகத் தொந்தரவு கொடுப்பார்களே!”

     இப்படிச் சொல்லிக் கொண்டே வந்த வழியே காரைத் திருப்பினார் அவர். ‘ஏதோ ஒரு வழி; அந்த வழி மருத்துவமனைக்குச் செல்லாமலிருந்தால் சரி!’ என்பது போல் அருணா அமைதியானாள்!

     கடற்கரைச் சாலையில் காரை நிறுத்திவிட்டு, “நீங்களும் வருகிறீர்களா? இல்லை, நானே போய்ப் பார்க்கட்டுமா?” என்றார் பரந்தாமன்.

     “இந்த ஈர உடையில் நான் எப்படி உங்களுடன் வருவேன்? நீங்களே போய்ப் பாருங்கள்!” என்றாள் அருணா.

     “நீங்கள் கடிதம் எழுதி வைத்த இடத்தைப் பற்றிக் குறிப்பாக ஏதாவது...”

     “ஒன்றும் சொல்வதற்கில்லை, நாலைந்து பாடப் புத்தகங்களுக்கு நடுவே அதை நான் எழுதி வைத்தேன் என்பதைத் தவிர!”

     “அப்படியானால் நீங்கள்...?”

     “கல்லூரியில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் மாணவி!”

     வாழ்க்கையிலும் மாணவி! - வார்த்தை சிறிதாயிருந்தாலும் பொருள் பெரிதாயிருக்கிறதே?

     எந்தக் கசப்பான அனுபவத்துக்குப் பிறகு, இந்த ஞானோதயம் இவளுக்கு உண்டாகியிருக்கிறதோ? அந்தக் கசப்பான அனுபவம் என்னவாயிருக்கும்? - வேறு என்னவாயிருக்கப் போகிறது, இந்த வயதில்? காதல் அனுபவமாய்த்தான் இருக்கும்!

     அதற்குப் பரிகாரம் தற்கொலையைத் தவிர வேறு ஒன்றுமே கிடையாதா, இந்தப் பெண்களுக்கு?

     ஐயோ, பாவம்! உதிர்ந்த மலரும், திரிந்த பாலும் கூட ஏதாவது ஒரு வகையில் இந்தக் காலத்தில் உபயோகப்படும் போது, இவர்கள் மட்டும் உபயோகப்படக் கூடாதா?

     இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே, அவளைக் கண்டெடுத்த அதே இடத்திலேயே அவளுடைய கடிதத்தையும் கண்டெடுக்க முயன்றார் பரந்தாமன்; கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்து, “என்னுடைய முயற்சி வெற்றி பெறவில்லை. உங்களுடைய வீட்டு விலாசத்தைச் சொல்லுங்கள்; நான் உங்களைக் கொண்டு போய் அங்கே விட்டுவிட்டுப் போகிறேன்!” என்றார் அவர் காரில் ஏறி உட்கார்ந்து.

     பதில் இல்லை!

     “ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டே அவர் திரும்பினார்.

     அவள் உட்கார்ந்திருந்த இடம் காலியாயிருந்தது!

     அதற்குள் எங்கே போயிருப்பாள் அவள்? காரை விட்டுக் கீழே இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தார். சற்றுத் தூரத்தில் அவள் மறுபடியும் கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது! - விரைந்து சென்று அவளை வழிமறித்து நின்று, “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்.

     ‘இது என்னத் தொல்லை! இந்த உலகத்தை விட்டு அந்த உலகத்துக்கே போய்விட்டால் கூட இவர் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார் போலிருக்கிறதே?’ என்று நினைத்த அருணா, “அதற்குள் வந்துவிட்டீர்களா, நீங்கள்! எங்கே கடிதம்?” என்று கேட்டாள், ஏதாவது கேட்டு வைக்க வேண்டுமே என்பதற்காக.

     “கிடைக்கவில்லை; வாருங்கள் போவோம். உங்களை நான் உங்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போகிறேன்!” என்றார் அவர், மறுபடியும்.

     “நன்றி, இதுவரை செய்த உதவிக்கு. இனி நீங்கள் போகலாம்!” என்றாள் அவள்.

     அவர் போகவில்லை; “இந்த நிலையில் உங்களை விட்டு விட்டா? அதுதான் முடியாது!” என்றார், நின்ற இடத்திலேயே நின்று.

     “முடியாதென்றால் நீங்கள் போய்க் காரில் உட்காருங்கள்; நான் போய் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்!” என்றாள் அவள், அவரிடமிருந்து தப்ப.

     “காரை யார் எடுத்துக் கொண்டு போய்விடப் போகிறார்கள்? நானும் உங்களுடன் வருகிறேன்!” என்றார் அவர், அவளைப் புரிந்து கொண்டு.

     “என்னை மட்டும் யார் எடுத்துக் கொண்டு போய்விடுவார்களாம்?” என்றாள் அவளும், அவரைப் புரிந்து கொண்டு.

     “அலைகள்! ஏனெனில், அவை ஏற்கெனவே ஒரு முறை உங்களை எச்சரித்திருக்கின்றன!” என்றார் அவர்.

     “நாசமாய்ப் போகட்டும்! அவற்றை யார் எச்சரிக்கச் சொன்னார்கள், என்னை?” என்றாள் அவள்.

     “கடவுள்! ஏனெனில், அவர் நீங்கள் சாவதை விரும்பவில்லை!”

     “அதனால்தான் அவரோடு சேர்ந்து நீங்களும் என்னைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள் போலிருக்கிறது! சரி, காப்பாற்றுங்கள்; எத்தனை நாட்கள் உங்களால் என்னைக் காப்பாற்ற முடியுமோ, அத்தனை நாட்கள் காப்பாற்றுங்கள்!” என்று சொல்லிக் கொண்டே அவள் திரும்பினாள்.

     பரந்தாமன் அவளைத் தொடர்ந்தார். வெற்றிப் புன்னகையுடன் அல்ல; நீண்டப் பெருமூச்சுடன்!

     இருவரும் காரில் ஏறி உட்கார்ந்ததும், “எங்கே இருக்கிறது உங்கள் வீடு?” என்று கேட்டார் பரந்தாமன் மெல்ல.

     “என் வீடு எங்கே இருந்தால் உங்களுக்கென்ன? அங்கே நான் போக விரும்பவில்லை!” என்றாள் அருணா, இரைந்து.

     “வேறு எங்கே போக விரும்புகிறீர்கள்?”

     “நான் போக விரும்பிய இடத்துக்குத்தான் நீங்கள் என்னைப் போகவிடவில்லையே?”

     “இப்படியே நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் கடைசியில் நான் உங்களை என்ன செய்வேன், தெரியுமா?”

     “என்ன செய்வீர்கள்?”

     “போலீசாரிடம் கொண்டு போய் விட்டுவிடுவேன்!”

     “போலீசாரிடம் என்ன, தூக்குமேடைக்கே வேண்டுமானாலும் கொண்டு போய் விட்டுவிடுங்கள்!”

     இது என்ன தொல்லை! ஆம், சற்று நேரத்துக்கு முன்னால் அருணாவுக்குப் பரந்தாமன் தொல்லையாகத் தோன்றியது போலவே பரந்தாமனுக்கு அருணா தொல்லையாகத் தோன்றினாள் இப்போது! ஆனாலும், அதற்காக அவளைக் கீழே இறக்கிவிட்டு விடவும் அவர் விரும்பவில்லை; அப்படி இறக்கி விடுவதாயிருந்தால்தான் மருத்துவமனையின் வாசலிலேயே அவர் அவளை இறக்கி விட்டுவிட்டிருக்கலாமே?

     ஆகவே தன் மனத்தைத் தானே திடப்படுத்திக் கொண்டு, “என் வீட்டுக்கு வேண்டுமானால் வருகிறீர்களா?” என்றார் அவர்.

     “உங்கள் வீட்டுக்கா, நான் எதற்கு?” என்றாள் அவள்.

     “முதலில் உங்கள் உடையை மாற்றிக் கொள்ளலாம், பிறகு...”

     “பிறகு என்ன?”

     “உங்களை நீங்களே கொஞ்சம் சரி செய்து கொள்ளலாம்!”

     “ஏன், இப்போது நான் சரியாக இல்லையா?”

     “சரியாய்த்தான் இருக்கிறீர்கள்; மூளைதான் கொஞ்சம்...”

     “ஆமாம், மூளைதான் கொஞ்சம் பேதலித்திருக்கிறது! இல்லாவிட்டால் என்னை நீங்கள் உங்களுடைய வீட்டுக்கு அழைப்பீர்களா?” இதைச் சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்; “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார் அவர். பதில் வார்த்தையாக வரவில்லை; சிரிப்பாகவே வந்தது!

     இப்போதுதான் அவளுடைய மன நிலை மட்டுமல்ல, உடல் நிலையும் கெட்டுவிட்டதென்ற உண்மை அவருக்குத் தெரிந்தது. அவளைத் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவரிடம் கொண்டு போய்க் காட்டினார்.

     “ஏன், என்ன நடந்தது?” என்று டாக்டர் கேட்டார்; பரந்தாமன் நடந்ததைச் சொன்னார்.

     டாக்டர் அவளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “இவ்வளவு நேரம் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள், கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கக் கூடாதா?” என்று சொல்லிக் கொண்டே, ஒன்றுக்கு இரண்டாக அவள் உடம்பில் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு, இரண்டு மாத்திரைகளை வேறு எடுத்து வாயில் போட்டு வெந்நீரை ஊற்றினார்.

     சிரிப்பு நின்றது; ஆனால் நிலைகுத்தி நின்ற கண்கள் மட்டும் நிலைகுத்தி நின்றபடியே இருந்தன!

     “சரி, இவளை உடனே வீட்டுக்குக் கொண்டு போய் உடையை மாற்றுங்கள். இரவு முழுவதும் கோதுமைத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டே இருங்கள்; பொழுது விடிந்ததும் நான் வந்து பார்க்கிறேன்!” என்றார் டாக்டர்.

     “கவலைப்படும் அளவுக்கு ஒன்றுமில்லையே?” என்றார் பரந்தாமன்.

     “இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை; பொழுது விடிந்ததும் சொல்கிறேன்!” என்றார் அவர்.