-->
tamil thirai ulagam    tamil thirai ulagam    tamil thirai ulagam
gws
எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம்
எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank
எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
(நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்)
எட்டுத் தொகை | பத்துப்பாட்டு | பதினெண் கீழ்க்கணக்கு | ஐம்பெருங்காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் | வைஷ்ணவ நூல்கள் | சைவ சித்தாந்தம் | மெய்கண்ட சாத்திரங்கள் | பண்டார சாத்திரங்கள் | சித்தர் நூல்கள் | கம்பர் | ஔவையார் | ஸ்ரீ குமரகுருபரர் | திருஞானசம்பந்தர் | திரிகூடராசப்பர் | ரமண மகரிஷி | முருக பக்தி நூல்கள் | நீதி நூல்கள் | இலக்கண நூல்கள் | நிகண்டு நூல்கள் | சிலேடை நூல்கள் | உலா நூல்கள் | குறம் நூல்கள் | பள்ளு நூல்கள் | அந்தாதி நூல்கள் | கும்மி நூல்கள் | இரட்டைமணிமாலை நூல்கள் | பிள்ளைத்தமிழ் நூல்கள் | நான்மணிமாலை நூல்கள் | தூது நூல்கள் | கோவை நூல்கள் | கலம்பகம் நூல்கள் | சதகம் நூல்கள் | பிற நூல்கள் | தினசரி தியானம்



3. கை கொடுத்த தெய்வம்

     “காதலில் வெற்றியடைய வேண்டுமானால், எடுத்தவுடன் இணங்கிவிடும் பெண்களைக் காதலிக்காதே; எதிர்த்து நிற்கும் பெண்களைக் காதலி!” என்பது, மோகன் தன் சக தோழர்களிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு பொன்மொழி!

     பொன்னின் மாற்று இருபத்திரண்டு காரட்டிலிருந்து பதினாலு காரட்டுக்கு வந்து விட்டாலும், அந்தப் பொன்மொழியின் மாற்று மட்டும் அப்படியேதான் இருந்தது என்பது அன்று மாலையே தெரிந்தது அவனுக்கு. ஆம், அலுவலகத்திலிருந்து வெளியே வந்து பாமாவை அன்றும் வழக்கம் போல் அவன் தொடர்ந்து சென்ற போது, அவள் அன்றும் வழக்கம் போல் அவனைத் திரும்பிப் பார்க்காமல் சென்று விடவில்லை; திரும்பிப் பார்த்தாள். முதல் தடவையாகத் தன் மேல் வீசப்பட்ட அந்த ‘ஐஸ்-கிரீம் பார்வை’யால் அவன் ஒரு கணம் மூச்சு விடக்கூட மறந்து நின்ற போது, “உங்களுக்கு மூளையிருக்கிறதா?” என்று அவள் வழக்கம் போல் அவனை உரத்த குரலில் கேட்கவில்லை; வழக்கத்துக்கு விரோதமான ரகசியக் குரலில் கேட்டாள். அடுத்தாற்போல் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள், “இல்லை, உங்களுக்கு மூளையிருக்கிறதா என்று கேட்கிறேன்!” என்றாள் அவள், மறுபடியும் அவனுடைய கன்னத்தில் இடித்துக் கேட்காத குறையாக!

     “இருக்கிறது என்று தான் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்! - ஏன் இல்லையா?” என்று அவனும் அதே ரகசியக் குரலில் அவளையே திருப்பிக் கேட்டான், அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே.

     “இருந்தால் அந்தப் பியூன் நம்மைப் பார்த்துச் சிரித்தானே, அவனை நீங்கள் சும்மா விட்டிருப்பீர்களா?”

     “அதைச் சொல்கிறாயா? உத்தியோகத்தில் எப்படியிருந்தாலும் வயதில் நம்மைவிட மூத்தவர் அல்லவா, அவர்? அதனால் அவருடைய ஆசீர்வாதம் நல்லதுதானே என்று பேசாமல் இருந்துவிட்டேன்!”

     “ஐயோ! ஆசீர்வாதமா வேண்டும் ஆசீர்வாதம்? மூஞ்சைப் பார், மூஞ்சை!” என்று அவள் தன் முகத்தை அஷ்ட கோணல்களாக்கி ‘அழகு’ காட்டியபோது, அந்த ‘அஷ்டகோணல்’களும் ‘அஷ்ட லட்சணங்க’ளாகத் தோன்றியது அவனுக்கு. ஆகவே, “எங்கே இன்னொரு தரம், எங்கே இன்னொரு தரம்!” என்றான் அவன், அவளைக் கெஞ்சாக் குறையாக.

     “எதைக் கேட்கிறீர்கள்?” என்றாள் அவள், ஒன்றும் புரியாமல்.

     அவன் பெருமூச்சு விட்டான்!

     “என்ன, உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள் அவள், மீண்டும்.

     “அதெல்லாம் ஒன்றுமில்லை; ‘எதைக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்கிறாய் - நான் கேட்பதையெல்லாம் நீ கொடுத்து விடவாப் போகிறாய்?” என்றான் மீண்டும் அதே பெருமூச்சுடன்.

     “அப்படியா சமாசாரம்/ நான் தான் நீங்கள் கேட்பதற்கு முன்னாலேயே கொடுத்து விட்டேனே?” என்றாள் அவள், தன் கையைக் காட்டி.

     அவன் தன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டே சொன்னான்:

     “அதில் கூடப் படுசிக்கனம் நீ; ஒன்றுக்கு மேல் கொடுக்கவில்லை யல்லவா?”

     அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்:

     “பாவம், உங்களை நான் அடித்திருக்கக் கூடாது!”

     அதுதான் சமயமென்று, “அடிக்காத கை அணைக்காது!” என்றான் அவன்!

     “அணைக்கும், அணைக்கும்!” என்று சொல்லிக் கொண்டே அவள் நடந்தாள்; அவன் அவளைத் தொடர்ந்தான் - ‘ஸ்கூட்ட’ரைத் தள்ளமுடியாமல் தள்ளிக் கொண்டுதான்!

     இந்தச் சமயத்தில் அவனைப் பார்த்துக் கொண்டே அவனுக்குப் பின்னால் சைக்கிளில் வந்த மணி, “என்னடா, ரிப்பேரா?” என்றான், தன் கால்களில் ஒன்றையே ‘பிரேக்’காகப் போட்டுத் தன்னுடைய சைக்கிளை நிறுத்தி.

     “ரிப்பேரும் கிடையாது; அதை நீ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் கிடையாது!” என்றான் மோகன், அவனைப் பழிக்குப் பழி வாங்குவது போல!

     அப்போதுதான் அவனுக்கு முன்னால் போகும் பெண்ணைப் பற்றி அன்றொரு நாள் அவன் தன்னைக் கேட்ட போது, தானும் அதே மாதிரி சொல்லி அவளை மட்டம் தட்டிவிட்டுப் போனது அவனுடைய நினைவுக்கு வந்தது. உடனே வழக்கத்துக்கு விரோதமாக அவன் முதுகில் லேசாகத் தட்டி, “கோபித்துக் கொள்ளாதேடா! இந்த நாட்டுக் காளைகளையும் கன்னிகளையும் காதல் கோழைகளாக்கி விடுகிறது என்று நினைப்பவன் நான்; என்னிடம் வந்து நீ அந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கலாமா?” என்றான் மணி.

     “அதற்காக அவளுக்கு முன்னால் நீ என் முகத்தில் அடித்தாற் போல் அப்படிப் பதில் சொல்லிவிட்டுப் போவதா?”

     “அந்த மான உணர்ச்சியாவது இன்னும் உன்னை விட்டுப் போகாமல் இருப்பது நீ பிறந்த மண்ணின் விசேஷம்; அதற்காக நான் மகிழ்கிறேன் - வரட்டுமா?” என்றான் மணி.

     “தாராளமாக!” என்றான் மோகன்.

     மணி அவனுக்காக இரங்குவது போல் அவனை மேலுங் கீழுமாகப் பார்த்தான். அது பிடிக்கவில்லை அவனுக்கு; “நீ ஒன்றும் எனக்காக இரங்க வேண்டாம்!” என்றான் அவன். ”இரங்கவில்லை; எச்சரிக்கிறேன் - ஸ்கூட்டர் ரிப்பேராகா விட்டாலும் உடம்பு ரிப்பேராகி விடப் போகிறதென்று!” என்றான் மணி.

     “சரிதான் போடா. மகாப் பெரிய மனுஷன் மாதிரிச் சொல்ல வந்துவிட்டான்!” என்று அலட்சியமாகச் சொல்லிக் கொண்டே ஸ்கூட்டரின் மேல் ஏறி அமர்ந்த மோகன், தன்னுடைய பார்வையிலிருந்து வெகு தூரம் சென்று விட்ட பாமாவைப் பிடிப்பதற்காக மணியைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் விரைந்தான்!

     மணியோ அவனுக்காகத் தன் அடிவயிற்றில் அடித்துக் கொண்டு மேலே சென்றான்.

     மயிலையில் இருந்த தன்னுடைய வீட்டுக்குச் செல்வதற்காகக் கடற்கரையோரமாக இருந்த ஒரு பஸ்-ஸ்டாப்பில் வழக்கம் போல் வந்து நின்றாள் பாமா - ஆம், அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகம் சேப்பாக்கத்தில் தான் இருந்தது.

     முதல் பஸ் வந்து நின்றது - அதில் வழக்கம் போல் ஏறி உட்கார்ந்து விடவில்லை, அவள் - நின்றாள்!

     இரண்டாவது பஸ் வந்து நின்றது - அதிலும் வழக்கம் போல் ஏறி உட்கார்ந்து விடவில்லை, அவள் - நின்றாள்!

     மூன்றாவது பஸ் வந்து நின்றது - ‘இதையுமா அந்த பைத்தியத்துக்காக விட்டுவிட்டு இங்கேயே நிற்பது?’ என்று அவள் கொஞ்சம் யோசித்தாள் - அதற்குள், ‘ரைட்’ என்றான் கண்டக்டர்; அவளும் ‘ரைட்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள், அவனுடன் சேர்ந்து!

     ‘ஏன் இப்படி? எதற்காக இன்று தனக்கு இந்த நிலை?’ - அதுதான் தெரியவில்லை, அவளுக்கு?

     அதற்குள் அங்கே வந்து சேர்ந்த மோகன், “எனக்குத் தெரியும், எனக்காக இன்று நீ இங்கே காத்துக் கொண்டிருப்பாய் என்று!” என்றான் செயற்கையான ‘சினிமாச் சிரிப்’புடன்.

     “நான் ஒன்றும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை; பாழாய்ப் போன பஸ் வந்திருந்தால் எப்பொழுதோ பறந்து போயிருப்பேனாக்கும்?” என்றாள் அவள், தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு.

     “பொய்! அந்தப் ‘பெரிய மனுஷ’னுடன் அங்கே பேசிக் கொண்டிருந்தாலும், எனக்காக நீ இங்கே கோட்டை விட்டுக் கொண்டிருந்த பஸ்களை எண்ணத் தவறவில்லை நான்! - வேண்டுமானால் இன்னொரு முறை எண்ணிக் காட்டட்டுமா? - ஒன்று, இரண்டு, மூன்று!” என்று அவன் கை விரல்களை ஒவ்வொன்றாக விட்டு எண்ணிக் காட்டிவிட்டு, “என்ன சரிதானா?” என்றான் அவள் முகத்துக்கு நேராகக் குனிந்து.

     அவ்வளவுதான்; அதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை அவளால் - ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள்!

     “அகப்பட்டுக் கொண்டாயா? வா, கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்துவிட்டுப் போவோம்!” என்றான் அவன்.

     “ஏன் உடம்பை ரிப்பேராக்கிக் கொள்ளவா?” என்றாள் அவள், குறுநகையுடன்.

     “ஆனால் என்ன, அதைச் சரிப்படுத்தத்தான் நீ இருக்கிறாயே?” என்றான் அவன், அதற்கும் விட்டுக் கொடுக்காமல்.

     அப்போது, ‘இப்போதாவது ஏறுகிறாயா, இல்லையா?’ என்பது போல் நாலாவது பஸ் வந்து அவளுக்கு முன்னால் நின்றது. அதைப் பார்த்ததும், “ஆசையைப் பார், ஆசையை!” என்பது போல் மீண்டும் ஒருமுறை ‘அழகு’ காட்டிவிட்டு, அதில் ஏறிக் கொண்டாள் அவள்!

     ஏன் இப்படி? எதற்காக இந்த அவசரம்? - அதுவும் தெரியவில்லை, அவளுக்கு!