காதலும் கல்யாணமும் - Kaathalum Kalyaanamum - விந்தன் நூல்கள் - Vindhan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com



22. அருணா பெற்ற அனுபவம்

     பெரிய இடத்து விவகாரம்! - அதைப் பற்றிப் பேசக் கூடாது! பேசினால் பண்புக் குறைவு!

     அசிங்கத்தை எவ்வளவு அழகானத் திரையிட்டு மறைக்கிறார்கள், இவர்கள்! உண்மையில் இவர்கள் நேசிப்பது பண்பையா, பணத்தையா?

     இப்படிப் பேசும் இவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்? இல்லை, தாங்கள் அங்கம் வகிக்கும் சமூகத்தைத்தான் எங்கேத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்? சமுத்திரத்திலா, சாக்கடையிலா?

     அருவருக்கத் தக்க இவர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் இந்த அப்பாவுக்குத்தானா பெண்ணாய்ப் பிறந்திருக்கிறேன், நான்? மாசு படிந்த இவருடைய மடியில்தானா இத்தனை நாளும் வளர்ந்திருக்கிறேன், நான்? - வெட்கக் கேடு!

     தொடர்பென்றால் அந்தத் தொடர்பும் இன்று நேற்றுக் கொண்டத் தொடர்பாகவா இருக்கிறது? - இல்லையே, எத்தனையோ வருடங்களாகக் கொண்டத் தொடர்பாகவல்லவா இருக்கிறது?

     இல்லையென்றால் இந்த வீட்டுப் பெரிய மனிதரையும் தெரிந்திருப்பதோடு, அவருடையக் கார் டிரைவரையும் தெரிந்திருக்குமா இவருக்கு?

     பெரிய இடமாம், பெரிய இடம்! - இருக்க ஒரு குடிசைக் கூட இல்லாமல் இந்த உலகத்தில் தவிப்போர் எத்தனையோ பேர்! ஆனால் இந்த வீட்டுப் பெரிய மனிதருக்கோ ஒரு வீடல்ல, இரண்டு வீடல்ல - எத்தனையோ வீடுகள் இந்தச் சென்னை மாநகரிலே இருக்கின்றனவாம்!

     வீடுகள் என்றால் சாதாரண வீடுகளாகவா இருக்கும்? - இருக்காது; ஒவ்வொன்றும் ஒரு குட்டி நகரமாகவே இருக்கும்!

     உதாரணத்துக்கு இந்த ஒரு வீடே போதுமே? - தெருவிலுள்ள ‘கேட்’டுக்கும், பங்களாவை ஒட்டினாற் போலுள்ள ‘போர்டிகோ’வுக்கும் கிட்டத்தட்ட ஒரு பர்லாங் தூரமாவது இருக்கும். முன்னால்தான் இப்படியென்றால், பின்னாலோ? - ஒரு காடே உருவாகியிருக்கிறது! - எத்தனை மரங்கள், எத்தனைச் செடிகள், எத்தனைக் கொடிகள்!

     ஏன் இந்தக் காடு இங்கே? - ஒருவேளை தன் ஆசை நாயகியுடன் ஓடிப் பிடித்து விளையாடுவதற்காக இருக்குமோ? - அப்படியே விளையாடினாலும் அவள் அந்த டிரைவருடன் அல்லவா விளையாடுவாள் போலிருக்கிறது!

     விசுவாசமுள்ள வேலைக்காரன்! - எஜமான் இட்ட வேலையை மட்டுமல்ல; எஜமானி இட்ட வேலையையும் தட்டாமல் செய்யும் விசுவாசமுள்ள வேலைக்காரன்! - அந்த வேலையில் எந்த விதமான பேதமும் பார்ப்பதில்லை போலிருக்கிறது, அவன்!

     வேலையில் இருந்தபோது மட்டுமல்ல; இல்லாதபோதும் அவன் விசுவாசமுள்ள வேலைக்காரனாகவே இருக்கிறான்போல் இருக்கிறது! - ஒருவேளை இந்த வேலைக்கும் அவனுக்கு ஏதாவது கூலி கிடைக்கிறதோ என்னமோ, யார் கண்டது?

     இந்த லட்சணத்தில் வாசலில் ஒரு கூர்க்கா; அவனுக்கு ஒரு ‘காங்கிரீட்’ குடை! - எல்லாம் ஒரே வேடிக்கைதான், போ!

     அந்த வேடிக்கைகளில் ஒன்று அவர் டாக்சியில் வந்தார் என்பதற்காக அவள் கோபித்துக் கொள்வது! - கோபித்துக் கொள்வதாவது, அதில் ஒரு பெருமை அவளுக்கு! அதாவது, ‘நாங்கள் ஒன்றும் ஒரு காரோடு இல்லை; ஒன்று கெட்டால் இன்னொன்று இருக்கிறதாக்கும் எங்களுக்கு!’ என்று அவள் சொல்லாமல் சொல்கிறாள்!

     போகட்டும்; வேறு எந்தப் பெருமை இல்லாவிட்டாலும் அந்த ஒரு பெருமையாவது அவர்களுக்கு இருக்க வேண்டாமா? - இருந்துவிட்டுப் போகட்டும்!

     ஆனால், கார்களில் ஒன்று கெட்டால் இன்னொன்று இருப்பது சரி; காதலர்களில் ஒருவன் கெட்டால் இன்னொருவன் இருக்கலாமா? - ஒருவேளை இதுவும் அவர்களுடைய பெருமைகளில் ஒன்றாயிருக்குமோ? - இருந்தாலும் இருக்கும்!

     இருப்பவர்களுக்கு அந்தப் பெருமை தெரியும்; அந்தப் பெருமையின் அருமையும் தெரியும். இல்லாதவர்களுக்கு அந்தப் பெருமை எங்கே தெரியப் போகிறது? அந்தப் பெருமையின் அருமைதான் எங்கே தெரியப் போகிறது?

     ஐநூறு ரூபா ஒரு பொருட்டாகப் படவில்லை அவளுக்கு; அது ஒரு குறையாகப் படவில்லை அவருக்கு! - அந்த அளவுக்குப் பணத் திமிர் பிடித்த அவருக்குத்தான் பெர்மிட் வேண்டாமாம்; லைசென்ஸ் வேண்டாமாம்; கோட்டா வேண்டாமாம்! - அவையெல்லாம் இருக்கும்போதே இந்த நிலை என்றால் இல்லாவிட்டால் இன்னும் என்ன நிலையில் இருப்பாரோ?

     இப்படிப்பட்ட உத்தமோத்தமர்களைச் சட்ட திட்டங்களால் மாற்ற முயல்வது தவறு, தார்மீக ஆன்மீக உபதேசங்களால் மாற்ற முயலவேண்டும் என்று சிலர் சொல்கிறார்களே, அவர்களை என்ன செய்தால் தேவலை?

     அவர்கள் சொல்லும் தார்மீக ஆன்மீக உபதேசங்கள் எல்லாம் இந்தச் ‘சத்திய சீலர்’களுக்கு முன்னால் செயலற்றுப் போன பிறகுதானே சட்டதிட்டங்கள் வந்திருக்கின்றன, இவர்களை மாற்ற? அவையும் வேண்டாமென்றால், தலைமுறைத் தலைமுறையாக இவர்களால் கசக்கிப் பிழியப்பட்டு வரும் மக்கள், நசுக்கி மிதிக்கப்பட்டு வரும் மக்கள் என்னதான் ஆவது? - கொடுமை, கொடுமையிலும் கொடுமை!

     இவ்வாறு எண்ணி அவள் கொதித்துக் குமுறிக் கொண்டிருந்த போது, “என்னம்மா, இங்கேயே நின்று விட்டாய்?” என்றார் உள்ளே போன அவள் அப்பா, அவளைக் காணாமல் வெளியே வந்து.

     “கால் கூசுகிறது அப்பா, உள்ளே வர!” என்றாள் அவள், முகத்தைச் சுளித்து.

     “மனம்தான் கூசும் என்று சொல்வார்கள்; உனக்குக் காலும் கூசுகிறதா? - நல்ல பெண்தான், போ! இப்படிப்பட்ட இடங்களுக்கு வந்து உனக்குப் பழக்கமில்லை! அதனால்தான் கூசுகிறது! - வாழ்க்கை என்றால் இவர்கள் வாழ்வதுதான் வாழ்க்கை அம்மா, நாமெல்லாம் வாழ்வது ஒரு வாழ்க்கையா? வா உள்ளே; இன்னும் நீ இங்கே தெரிந்துக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது!”

     “வேண்டாம் அப்பா, தெரிந்து கொண்டவரை போதும்!”

     “எதைத் தெரிந்து கொண்டாய், நீ?”

     “எஜமான் இல்லாத வேளையில் மாஜி டிரைவரை எப்படி உள்ளே வரவழைப்பது, வந்துவிட்டால் அவனை எப்படி வெளியே அனுப்புவது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன், அப்பா!”

     “விட்டுத் தள்ளு, அதை! அவருக்குள்ள எத்தனையோ ‘ஸ்டெப்னிக’ளில் அது ஒன்று. அந்த ஸ்டெப்னி எக்கேடு கெட்டால் உனக்கு என்ன? நீ அவரைப் பார், அவர் காரைப் பார். அவருடைய பங்களாவைப் பார், அந்தப் பங்களாவின் மூலை முடுக்குகளையெல்லாம் அழகு படுத்தும் அகில உலக சித்திர விசித்திரங்களையெல்லாம் பார் அம்மா, பார்!”

     “எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், அப்பா!”

     “அதிலிருந்து என்னத் தெரிகிறது, உனக்கு?”

     “பணத்திமிர்!”

     “ஐயோ பெண்ணே, அப்படியா நினைக்கிறாய் நீ? வாழ்க்கை ஒரு கலை என்று சொல்கிறார்களே, அந்தக் கலையை நீ இங்கே பார்க்கவில்லையா?”

     “பார்த்தேன்! அது கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது, பாழும் பணம் தன்னையும் விலை கொடுத்து வாங்கி விடுகிறதே என்று!”

     “ஆச்சரியமாயிருக்கிறது, என்னுடைய பெண்ணா இப்படிப் பேசுகிறாள் என்று எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது!”

     இந்தச் சமயத்தில், “ஆச்சரியம் உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும்தான்! நீங்கள் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வாருங்கள்; பழகப் பழக எல்லாம் சரியாய்ப் போகும்!” என்றார், அப்போதுதான் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த சுகானந்தம்.

     அதற்குள் ஹாலிலிருந்த ‘ரேடியோ கிரா’மைத் திருப்பிப் பாட வைத்துவிட்டு, “காபி தயார்!” என்றாள் கீதா.

     எல்லோரும் உள்ளே சென்றனர்; அங்கிருந்த டீபாயின் மேல் இரண்டு கப் காபி மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

     “உங்களை விட்டுவிட்டா நாங்கள் காபி சாப்பிடுவது?” என்றார் ஆபத்சகாயம்.

     “காபி உங்களுக்கும் எனக்கும் இல்லை; கீதாவுக்கும் அருணாவுக்கும்தான்! நீங்கள் வாருங்கள், என்னுடன்!” என்று அவருடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் சுகானந்தம்.

     அங்கே, அதாவது பங்களாவின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு சினிமா தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அந்தத் தியேட்டருக்குள்ளே பத்துப் பதினைந்து சோபாக்களே போடப்பட்டிருந்தன. அந்த சோபாக்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் ஒரு டீபாய்; அவற்றுக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுதிரை; அந்தத் திரையின் இரு மருங்கிலும் ஓர் ஆணும் பெண்ணும் நிர்வாணக் கோலத்துடன் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டிருக்கும் ஓவியம்!

     அந்தச் சின்னஞ் சிறு சிங்காரத் தியேட்டருக்குள்ளே போய் அமர்ந்ததும் அங்கிருந்த ஒரு பொத்தானை ஓர் அழுத்தி அழுத்தினார் சுகானந்தம்; கீதா வந்து நின்றாள்.

     “சமையற்காரன் வந்துவிட்டானா?” என்றார் அவர்.

     “வந்துவிட்டான்!” என்றாள் அவள்.

     “கொண்டு வரச்சொல்!” - அவர் சொன்னது அவ்வளவுதான்; அடுத்த வினாடியே இரண்டு விஸ்கி புட்டிகள் வந்து அவர்களுக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தன. அவற்றைத் தொடர்ந்து நாலு சோடா புட்டிகள், இரண்டு கண்ணாடி டம்ளர்கள் ஆகியவையும் வந்து சேர்ந்தன.

     “துணைக்கு ஏதாவது...”

     சமையற்காரன் முடிக்கவில்லை; “வழித்துணை இல்லாமல் முடியுமா? கொண்டு வா, இரண்டு கோழி; ஒரு டஜன் முட்டை!” என்ற உத்தரவு பிறந்தது சுகானந்தத்தினிடமிருந்து.

     “இதோ கொண்டு வந்துவிட்டேன்!” என்று அவன் காற்றாய்ப் பறந்ததும், “இரண்டு பேரும் சேர்ந்தாற்போல் இப்படிப் பொழுதைப் போக்கி ரொம்ப நாட்களாகிவிட்டன இல்லையா?” என்றார் சுகானந்தம், விஸ்கி புட்டிக்குத் ‘திறப்பு விழா’ நடத்திக்கொண்டே.

     ஆபத்சகாயம் சொன்னார்; ஆற்றாமையுடன்தான் சொன்னார்;

     “என்று நான் பதவியிலிருந்து விலகினேனோ, அன்றிலிருந்து, நீங்கள் எங்கே என்னைக் கவனிக்கிறீர்கள்?”

     ஆம், அவர் இவரைக் கவனிப்பதில்லைதான்! - காரணம், இவர் பதவியில் இருந்தபோது இவருடைய உதவி அவருக்குத் தேவையாயிருந்தது; இல்லாதபோது தேவையில்லாமற் போய்விட்டது! - உண்மை இதுதான் என்றாலும் இதைச் சொல்லவில்லை அவர், சொன்னால் அன்புக்கும் குறைவு, பண்புக்கும் குறைவு என்று இப்படிச் சொன்னார்:

     “கவனிக்காமலென்ன, நான் சென்னையில் இருப்பதோ மாதத்தில் நாலைந்து நாட்கள், அந்த நாலைந்து நாட்களில் நான் எத்தனையோ வேலைகளைக் கவனித்தாக வேண்டியிருக்கிறது!”

     “எனக்குத் தெரியாதா, நேரமில்லாமல்தான் நீங்கள் என்னைக் கவனிக்கவில்லையென்று!”

     “அப்புறம் என்ன, எல்லாம் தெரிந்த உங்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?”

     இப்படியாக அவர்கள் இருவரும் பெரிய மனிதர்களின் வழக்கத்தையொட்டி, ‘மனமறிந்த பொய்’களால் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டு விஸ்கியில் சோடாவைக் கலந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கீதா வந்து தயக்கத்துடன் நின்றாள்.

     “என்ன?” என்றார் சுகானந்தம்.

     “ஒன்றுமில்லை. மேயருக்குப் பொழுது போகவில்லையாம்; தானும் வரலாமா, உங்களுடன் பொழுது போக்க என்று போனில் கேட்கிரார்!” என்றாள் அவள், சிரித்துக் கொண்டே.

     இதைக் கேட்டதும், “அவன் ஒருவன்! ஓசிக் குடியென்றால் உயிரையே விட்டுவிடுகிறான்!” என்றார் சுகானந்தம் எரிச்சலுடன்.

     “ஊற்றி வையுங்கள்; அவனாலும் உங்களுக்கு ஏதாவது காரியம் நடக்கலாம்!” என்றார் ஆபத்சகாயம்.

     “சரி, வரச் சொல்!” என்றார் அவர்; அவள் போய் விட்டாள்.

     அடுத்தாற்போல் பொரித்து எடுத்து உரித்த கோழி இரண்டுடனும், அவித்து எடுத்த முட்டை பன்னிரண்டுடனும் சமையற்காரன் உள்ளே நுழைந்தான். “ஏண்டா கிட்டா, அந்த ‘ஆபரேட்’டரைக் கொஞ்சம் இங்கே வரச்சொல்லேன்!” என்றார் சுகானந்தம் அவனிடம்.

     “இதோ வரச் சொல்கிறேன்!” என்று அவன் நடந்தான்.

     கீதா மறுபடியும் வந்து, “கலெக்டர் வேறு கவனிக்க முடியுமா என்று போனில் கேட்கிறார்; என்ன சொல்ல?” என்றாள் புன்முறுவலுடன்.

     “அவரை அவசியம் கவனிக்க வேண்டியதுதான்; அவரால் நமக்கு எத்தனையோ காரியம் நடக்கிறது - வரச் சொல்!” என்றார் சுகானந்தம்; அவள் போய்விட்டாள்.

     “குடிப்பது தீமை, தீமை என்கிறார்கள்; அதனால் எவ்வளவு பெரிய நண்பர்களெல்லாம் நமக்கு எவ்வளவு சாதாரணமாகக் கிடைக்கிறார்கள்!” என்றார் ஆபத்சகாயம், உள்ளே சென்ற ‘சரக்கின் சிறப்’பால் உயரப் பறக்காமல் பறந்துகொண்டே.

     “இல்லாதவனுக்கு எதுதான் தீமையில்லை, எல்லாம் தீமைதான். குடி மட்டும் என்ன, கூழும் அவனுக்குத் தீமைதான் செய்கிறது!”

     “நன்றாகச் சொன்னீர்கள்! வேளா வேளைக்கு அது அவனைப் பசியால் துடிக்க வைப்பதோடு, சில சமயம் செய்யத் தகாத காரியங்களையெல்லாம் கூடச் செய்ய வைத்து விடுகிறதே?”

     “ஆனால் ஒன்று. அந்தப் பசிதான் நமக்கு வரப்பிரசாதம்; இல்லாவிட்டால் அந்தப் பயல்களின் ரத்தத்தை அவர்களுக்குத் தெரியாமலே உறிஞ்சிக் குடிக்க நம்மைப் போன்றவர்களால் முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்றார் சுகானந்தம்.

     அதில் தனக்கு அப்படியொன்றும் சம்பந்தமில்லை யென்றாலும் சந்தர்ப்ப விசேஷத்தை ஒட்டி, “ஏது?” என்று சொல்லிவைத்தார் ஆபத்சகாயம்.

     இந்தச் சமயத்தில் ‘உச்ச கட்ட’த்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் இருவரையும் உசுப்பி விடுவதற்காக ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டே ‘ஆபரேட்டர்’ உள்ளே நுழைந்தார். ஒருவருக்கு இருவராகத் தெரிந்த அவரைக் கண்டதும், “வாப்பா வா! நான் பிரான்சிலிருந்து கொண்டு வந்திருந்தேனே, அந்தப் படத்தைக் கொஞ்சம் போடு; ஐயா பார்க்கட்டும்!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த பொத்தானை மறுபடியும் ஓர் அழுத்து அழுத்தினார் சுகானந்தம்.

     அவ்வளவுதான்; அந்தக் ‘கடைசி மணி’யை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் போல் கீதா உடனே வந்து அவருக்கு எதிர்த்தாற் போல் நின்றாள், அவருடைய ‘கடைசி உத்தர’வை எதிர்பார்த்து.

     “நீங்களும் எங்களுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டாமா? அழைத்து வா, அருணாவை!” என்றார் அவர், தன் கண்களில் ஒன்றை வழக்கம் போல் ஓர் அடி அடித்து.

     “சரிதான், இன்றையக் ‘காதல் விருந்து’ அருணா போலிருக்கிறது!” என்று அனுபவப்பூர்வமாக நினைத்துக் கொண்டே அவள் வெளியே சென்றாள்.

     அப்போது ‘நகரத் தந்தை’யான மேயரும், ‘நகரக் காவல’ரான கலெக்டரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உள்ளே நுழைய, “வாருங்கள், வாருங்கள்!” என்று அவர்களையும் வரவேற்று உட்கார வைத்துவிட்ட்டு, “ஏ கிட்டா, கவனி!” என்றார் சுகானந்தம்.

     இதைச் சொல்லி அவர் வாய் மூடுவதற்குள், மேலும் இரண்டு ‘விஸ்கி புட்டிக’ளையும், அதற்கு வேண்டிய ‘பக்க வாத்தியங்’களையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, அவன் ஒரு பக்கமாகப் போய் நின்றான், அடுத்த உத்தரவை எதிர்பார்த்து.

     அதற்குள் அருணாவை அழைத்துக் கொண்டு கீதா உள்ளே வர, சுகானந்தம் ‘கை படாத ரோஜா’வைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டு, ‘கை பட்ட ரோஜா’வை ஆபத்சகாயம் இருந்த பக்கமாகத் தள்ளிவிட்டார்.

     “ஐயோ, வேண்டாம். நான் அப்பாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்கிறேன்!” என்று அலறினாள் அருணா.

     அந்த ‘மிரண்ட மா’னைக் கண்டதும் கலெக்டர் உள்பட எல்லோரும் ‘கலகல’வென்று நகைத்தார்கள்!

     இதனால், தான் பெரிதும் அவமானத்துக்கு உள்ளாகிவிட்டதாக நினைத்த ஆபத்சகாயம், “என்னப் பெண்ணம்மா நீ, ஓர் இழவும் தெரியாமல்! வெள்ளைக்காரர்கள் எங்கேயாவது விருந்துக்குப் போனால் என்ன செய்கிறார்கள்? மரியாதைக்காக ஒருவருக்கொருவர் மனைவிமாரை மாற்றிக் கொண்டு உட்காரவில்லையா? அதே மாதிரிதான் இதுவும்! அது கூடத் தெரியவில்லையே, உனக்கு?” என்றார் அவள் கையைப் பற்றி அவருக்குப் பக்கத்தில் உட்கார வைத்து.

     ‘இது என்னக் கருமம்! ஒருவருக்கொருவர் மனைவிமாரை மாற்றிக் கொள்வது வேண்டுமானால் மரியாதையாயிருக்கட்டும்; அதற்காக இவர் மகளையா மாற்றி உட்கார வைப்பார்?’ அதைப் பொருட்படுத்தாமல் சுகானந்தம் அவள் முதுகைத் தடவ, அது பிடிக்காமல் அவள் நெளிய, அந்த ‘அபூர்வக் காட்சி’யை மேயரும் கலெக்டரும் கை தட்டி ரசித்தார்கள்.

     அதற்குள் விளக்குகள் அணைய, படம் ஆரம்பமாயிற்று - ஆகா! படமா, அது?

     ஆம், படம் தான்! - ஆனால் இளம் பெண்ணின் இச்சையைத் தூண்டி, அவர்களைப் பல வழிகளில் கெடுப்பதையேத் தங்கள் பொழுது போக்காகக் கொண்டிருக்கும் சுகானந்தத்தைப் போன்றப் பெரிய மனிதர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய படம் அது! - அதாவது ஆண் பெண் உடல் உறவைப் பற்றியது; அதையும் ஆடையோடு எடுத்தால் எங்கே புரியாமற் போய்விடுமோ என்று ஆடையில்லாமலே எடுத்திருந்தார்கள்!

     அந்த மேல் நாட்டுப் படம் இந்தக் கீழ்நாட்டு ரசிகர்களுக்கு எப்படிக் கிடைத்தது? - அருணாவுக்கு அது புரியவில்லை; அதைப் புரிந்துக் கொள்ள அவள் விரும்பவும் இல்லை - ஏனெனில், இருட்டு அந்தத் தியேட்டரை மட்டுமல்ல; தன் உள்ளத்தையும் - ஏன், இந்த உலகத்தையுமே ஆட்கொண்டிருப்பதாகத் தோன்றிற்று அவளுக்கு. சுற்றுமுற்றும் பார்த்தாள்; அந்த நிலையிலும் அவளுடைய மனக்கண் திறந்திருந்ததால் சுகானந்தம் அதற்குள் தன் நினைவை இழந்துவிட்டிருந்ததை அவள் உணர்ந்தாள். உணர்ந்து, மெல்ல எழுந்தாள்; எழுந்து, வெளியே நடந்தாள் - ஆம், தன் அப்பாவைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்தான்!

     ஏன் பார்க்க வேண்டும், அவரை விட இருளே தனக்கு உற்றத் துணையாயிருக்கும்போது?






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247