34. மரண சாசனம்

     சங்கர் சொன்னது உண்மை! - பெரும்பாலும் தனிமையையே விரும்பிய மணி, சற்றே குழப்பம் ஏற்பட்டாலும் கடற்கரைக்குச் சென்றுவிடுவது வழக்கம். அன்றோ, அவனைப் பொறுத்தவரை குழப்பத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆகவே, பதட்ட நிலை கொஞ்சம் தணிந்ததும் அவன் கடற்கரையை நோக்கி நடையைக் கட்டிவிட்டான்!

     அதே கடல், அதே அலை, அதே ஒலி...

     அதே வானம், அதே பிறை, அதே நட்சத்திரக் கூட்டங்கள்...

     உலகம் எங்கே மாறியிருக்கிறது, அது அப்படியேதான் இருக்கிறது!

     இந்த அன்னபூரணியம்மாள் - யார் மாறினாலும் இவர்கள் மாறமாட்டார்கள் என்றுதான் இத்தனை நாளும் நான் எண்ணிக் கொண்டிருந்தேன்; இப்பொழுது அவர்களும் அல்லவா மாறிவிட்டார்கள்!

     நான் கேட்பது, ‘மோகன் இல்லையா வீட்டில்?’ என்பது; அதற்கு அவர்கள் நேரியையாகப் பதில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்லியிருக்க வேண்டும்? - ‘இருக்கிறான், இல்லை’ என்று இரண்டில் ஒன்றுதானே சொல்லியிருக்க வேண்டும்? அப்படிச் சொல்லவில்லை அவர்கள் - அவன் வந்ததும் ஓட்டலுக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்கிறார்களாம்!

     அத்துடனாவது நின்றார்களா? - அதுவும் இல்லை; நான் ‘வருகிறேன்!’ என்று சொல்வதற்கு முன்னாலேயே, ‘நீ போ!’ என்று வேறு அவர்கள் என்னை வழியனுப்ப வருகிறார்கள்!

     இதிலிருந்தே தெரியவில்லையா, அவனை உள்ளே வைத்துக்கொண்டே அவர்கள் ‘இல்லை’ என்று சொல்கிறார்கள் என்று?

     ஒருவேளை அவனே சொல்லியிருப்பானோ, ‘இல்லை’ என்று சொல்லச் சொல்லி? - சீச்சீ, அப்படி இருக்காது! - நேற்றைய மோகனாயிருந்தால் ஒருவேளை அப்படிச் சொல்லியிருக்கலாம்; இன்றைய மோகன் ஒருநாளும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான்!

     ஆம், அன்றிருந்த மோகன் வேறு; இன்றிருக்கும் மோகன் வேறு.

     ஆனாலும், ‘யாரோ ஒருத்தி’க்காக நான் எடுத்துக் கொண்ட சிரமம் அன்றுதான் பிடிக்கவில்லையென்றால், இன்றும் பிடிக்கவில்லை போலிருக்கிறதே, அவனுக்கு? - ஒரு வேளை அந்த ‘யாரோ ஒருத்தி’ தன் ‘தங்கை’தான் என்று தெரிந்தால் பிடிக்குமோ?

     பிடிக்கும்; சந்தேகமில்லாமல் பிடிக்கும் - ஆனால் அதற்காக அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி அவளை அவனிடமும் அவனைச் சேர்ந்தவர்களிடமும் காட்டிக் கொடுத்துவிட முடியுமா, என்னால்? - அது முடியாது; அது என்னால் முடியவே முடியாது.

     அதற்காக வேறு வழியில் என்னை ஒழித்துக் கட்ட முயன்ற அந்த சுந்தரை அவர்களுக்கு முன்னால் உதைக்காமலாவது இருந்திருக்க முடியுமா, என்னால்? - அதுவும் முடியாது; அதுவும் என்னால் முடியவே முடியாது!

     நான் என்ன, ஏசுவா? ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்ட?

     நான் என்ன, புத்தரா? கொல்லவிருப்பது ஆட்டுக்குட்டியா யிருந்தாலும், அதற்காகக் குனிந்து என் கழுத்தை நீட்ட?

     நான் என்ன, காந்தியா? செருப்பால் அடித்து என் பல்லை உடைத்தாலும், ‘அனுதாபத்துக்குரிய அவனை விட்டு விடுங்கள்!’ என்று அப்போதும், ‘அஹிம்ஸா தர்ம’த்தைக் கடைப்பிடிக்க?

     இல்லை! நான் ஏசு இல்லை; நான் புத்தர் இல்லை; நான் காந்தியும் இல்லை!

     சாதாரண மனிதன்; மிகமிகச் சாதாரண மனிதன்!

     நான் என்ன செய்வேன், தெரியுமா?...

     அதைச் சொல்ல ஆரம்பிக்கும்போது அவன் நெஞ்சில் மூண்டது வெஞ்சினம்; அந்த வெஞ்சினத்தோடு அவன் சொன்னான்:

     என்னை எவனாவது ஒரு செருப்பால் அடித்தால், அவனை நான் இரண்டு செருப்பால் அடிப்பேன்; என்னுடைய பற்களில் இரண்டை எவனாவது உதிர்த்தால், அவனுடைய பற்களில் நான்கை நான் உதிர்ப்பேன்! ஆமாம்!

     பல்லை நறநறவென்று கடித்தபடி இதைச் சொல்லி முடித்ததும், அவன் ஒரு காலை சட்டென்று தூக்கித் தன் பலம் கொண்ட மட்டும் பூமியை ஓர் உதை உதைத்தான்!

     அத்துடன் நிற்கவில்லை அவன்; தன் கால்களில் இருந்த செருப்புகள் இரண்டையும் கழற்றி எடுத்து, அந்தக் கையில் ஒன்றும் இந்தக் கையில் இன்னொன்றுமாக ஏந்தி, தனக்கு முன்னால் நிற்கும் எதிரியை அடிப்பதுபோல் அப்படியும் இப்படியுமாக ஓங்கி ஓங்கி அடித்தான்! - அதன் பலன்? - ஒன்று கடலில் விழுந்தது; இன்னொன்றுக் கரையில் விழுந்தது!

     அப்பாடா! இப்போதுதான் தன்னையும் மீறித் தனக்கு வந்த ஆத்திரம் கொஞ்சம் தணிந்தது போலிருந்தது அவனுக்கு! கரையில் விழுந்து கிடந்த ஒற்றைச் செருப்பைப் பரிதாபத்துடன் பார்த்தான்; பார்த்துவிட்டுச் சொன்னான்:

     இனி உன்னால் எனக்குப் பிரயோசனமில்லை! உன்னால் மட்டும் என்ன, இந்த உலகத்தில் ஒற்றையாயிருக்கும் எதனாலுமே யாருக்கும் எந்தவிதமான பிரயோசனமும் இருக்காது போலிருக்கிறது! அப்படிப் பார்த்தால், நானும் தான் ஒற்றையாயிருக்கிறேன் இந்த உலகத்தில்; என்னாலும் எந்தவிதமான பிரயோசனமும் இருக்காதோ?

     ஏன் இருக்காது? இரட்டையாயிருக்கும் செருப்பைப் போலவே ஒற்றையாயிருக்கும் குடையும் மனிதனுக்கு உதவியாய்த்தானே இருக்கிறது? அதே மாதிரி நானும் இருப்பேன்; என்னில் ஒருவனாயிருகும் என் ஆன்மா என்னை விட்டுப் பிரியும் வரை, அதே மாதிரி நானும் இருப்பேன்!

     ஆனால் நீ? உன்னால் அப்படி இருக்க முடியாது; உன்னில் ஒருவன் உன்னை விட்டுப் பிரிந்த பிறகு, உன்னால் அப்படி இருக்கவே முடியாது! வா, வந்துவிடு! உன்னில் ஒருவன் எங்கே போய்ச் சேர்ந்தானோ, அங்கேயே நீயும் போய்ச் சேர்ந்துவிடு! வா, வந்துவிடு!

     இவ்வாறு சொல்லிக்கொண்டே சென்று அவன் அந்தச் செருப்பை எடுக்கப் போனபோது...

     நாலைந்து புத்தகங்கள்; அதற்கு நடுவே தலை நீட்டிக் கொண்டிருந்தது ஒரு நீண்ட கடிதம்!

     இவற்றை யார் இங்கே வைத்துவிட்டுப் போயிருப்பார்கள்? சுற்றுமுற்றும் பார்த்தான் அவன்; கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லை - பொன்னா, பொருளா, எடுத்துத்தான் பார்ப்போமே?

     இப்படி நினைத்து அவற்றை எடுத்துப் பார்த்தான்; எல்லாம் பாடப்புத்தகங்கள்! - எந்த மாணவனாவது இவற்றை இங்கே மறந்து வைத்துவிட்டுப் போயிருப்பானோ? அப்படியிருந்தால் இந்தக் கடிதம் ஏன் இவற்றுக்கு நடுவே தலையை நீட்டிக் கொண்டிருக்கிறது?

     கடிதத்தை எடுத்துப் பார்த்தான்; இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. வெளிச்சத்துக்கு வந்தான்; முத்துக் கோர்த்தாற்போல் அதில் எழுதியிருந்ததாவது:

     அன்பு! அப்படி என்று ஒன்று உங்களுக்கும் எனக்கும் இடையில் இருந்தால், அந்த அன்புள்ள அப்பாவுக்கு!

     இறுதி வணக்கம்...

     இறுதி வணக்கமாவது? இப்படி எழுதி வைத்துவிட்டு எவனாவது இந்தக் கடலில் விழுந்து கிழுந்து செத்துத் தொலைத்தானா, என்ன? அடப்பாவி, இன்னும் கொஞ்சம் முன்னாலேயே இந்தக் கடிதத்தை நான் பார்த்திருக்கக் கூடாதா?

     கடிதத்தை மடித்து அவன் வைத்தபடியே வைத்துவிட்டுக் கரையோரமாகச் சிறிது தூரம் ஓடிப் பார்த்தான்; ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

     கடலில் குதித்துச் சிறிது தூரம் நீந்தியும் பார்த்தான்; எதுவும் தட்டுப்படவில்லை, அவன் கைக்கு?

     “நல்லது, ரொம்ப நல்லது, காணாமற்போனதே ரொம்ப ரொம்ப நல்லது. உன்னை நான் கண்டுபிடித்ஹ்டிருந்தால், உனக்கு நான் உயிர்பிச்சை அளித்திருந்தால், அதற்காக என்னை நீ அடிக்கக் கூட வந்திருப்பாய் - ‘இந்த அழகான உலகத்தில் மறுபடியும் என்னை நீ ஏன் வாழவிட்டாய்?’ என்று! ஓம் சாந்தி, ஓம் சாந்தி!” என்று சொல்லிக் கொண்டே, எந்தவிதமான ஏமாற்றமுமின்றி அவன் மறுபடியும் கரைக்கு வந்தான்; கடிதத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படித்தான்:

     “நீங்கள் சொன்னீர்களே, ‘நாலும் தெரிந்த நாற்பத்தெட்டு’ ஒன்றைப் பற்றி, அந்த நாற்பத்தெட்டை நீங்கள் சொல்வதற்கு முன்னாலேயே தெரியும், எனக்கு! தெரியும் என்றால், ஆளை நீங்கள் காட்டுவதற்கு முன்னால் எனக்குத் தெரியாது; அவருடைய குணாதிசயங்கள் மட்டுமே தெரியும்!

     “எப்படித் தெரியும் என்கிறீர்களா? சொல்கிறேன்:

     அந்த ‘நாற்பத்தெட்டு’க்கு ‘இருபத்து நா’லில் ஒரு செல்வம் இருக்கிறது. அந்தச் செல்வத்தைத் துரதிர்ஷ்டவசமாக நான் காதலித்தேன். அது என்னிடம் காதல் உரையாடுவதாக எண்ணிக்கொண்டு, வாயில் வந்தபடி என்னவெல்லாமோ பிதற்றும். அந்தப் பிதற்றல்களிலிருந்துதான் ‘நாற்பத்தெட்’டின் அருமை பெருமைகளைப் பற்றி நான் ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.

     அவற்றையெல்லாம் இங்கே விவரிக்க நான் விரும்பவில்லை; சுருக்கமாகச் சொல்லப்போனால், அது ஒரு நாய் - சொரி பிடித்த நாய். வெறி பிடித்த நாய்! அவ்வளவே!

     அந்த நாயை உங்களுக்கு எதிர்த்தாற் போலேயே என்னுடன் விளையாட விட்டு நீங்கள் வேடிக்கை பார்த்த போது கூட உங்கள் மேல் நான் கோபம் கொள்ளவில்லை; மாறாக, வருத்தமே கொண்டேன் - இப்படியும் ஓர் அசட்டு அப்பா நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறாரே என்று!

     அதே நாயை அதன் விருப்பத்துக்கு இணங்க நான் மணக்க வேண்டுமென்று அடுத்த நாளே நீங்கள் வந்து சொன்ன போது கூட, உங்கள் மேல் நான் ஆத்திரம் கொள்ளவில்லை; மாறாக, அனுதபாமே கொண்டேன் - பாழும் பணம் உங்களை என்ன பாடு படுத்துகிறது என்று எண்ணி!

     அத்துடன் நில்லாமல், அதற்காக என்னை நீங்கள் அறைய வேறு வந்துவிட்டீர்களே, அப்போதுதான் அந்த அறை என் கன்னத்தில் விழவில்லை அப்பா, இதயத்திலேயே விழுந்துவிட்டது!

     அதுவும் எப்போது விழுந்தது என்கிறீர்கள்? எந்த ‘இருபத்து நாலு’ என்னை மனப்பூர்வமாகக் காதலிப்பது போல் நடித்து, எந்த ‘இருபத்து நாலு’ என்னை மனப்பூர்வமாக ஏமாற்ற நினைத்ததோ, அந்த ‘இருபத்து நா’லை எண்ணி நான் குமுறிக் கொண்டிருந்தபோது, உங்கள் அறை விழுந்தது என் இதயத்தில்!

     அதையும் தாங்கியிருப்பேன், ‘மணி என்றோர் அண்ணா இருக்கிறார்’ என்ற தைரியத்தில்! ஆம் அப்பா, ‘இருபத்து நா’லிடமிருந்து மட்டுமல்ல; ‘நாற்பத்தெட்’டிடமிருந்தும் அந்த அண்ணாவால் என்னைக் காப்பாற்ற முடியும்! ஆனால் என்ன பிரயோசனம்? உங்களுக்குள்ளப் பணப் பைத்தியம் எங்களை மானத்தோடு வாழவிடாது போலிருக்கிறதே, இந்த உலகத்தில்?

     அதனால்தான் வாழ்வைத் தழுவ வேண்டிய இந்த வயதிலே நான் சாவைத் தழுவுகிறேன். என்னுடைய சாவாவது உங்களுடையப் பணப் பைத்தியத்தைத் தெளிய வைக்கட்டும்; அதன் பலனாக அண்ணன் மோகனுக்காவது அவனுடைய விருப்பப்படி கல்யாணம் நடக்கட்டும்.

     அம்மாவை எனக்காக அழ வேண்டாமென்று சொல்லுங்கள்; அவர்கள் எனக்காக அழுவதைக் காட்டிலும் உங்களுக்காக அழுவது நல்லது!

     நான் வருகிறேன்! இந்த நேரத்தில் கூட என் மரணத்தைப் பற்றிய கவலையை விட, என்னுடைய நகைகளைப் பற்றிய கவலை அதிகமாயிருக்கும் உங்களுக்கு! விடுங்கள், அந்தக் கவலையை; அவையனைத்தும் ‘இன்சூர்’ செய்யப்பட்ட ‘பார்சல்’ மூலம் நாளை உங்களுக்குக் கிடைக்கும்!

     இது உங்களுக்குத் தவிர்க்க முடியாத ஏமாற்றம்தான்; இருந்தாலும் தாங்கிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

     நான் வரட்டுமா? டாடா!

     அளவு கடந்த மகிழ்ச்சியுடன்

     உங்களை விட்டுப் பிரியும் அருமைக் குமாரி,

     அருணா.”

     பின் குறிப்பு: ‘இந்தக் கடிதத்தையும் பார்சலிலேயே வைத்திருக்கக் கூடாதா?’ என்று நீங்கள் நினைக்கலாம்; அப்படி வைத்தால் ஊர் சிரிக்காமல் போய்விடுமே என்றுதான் வைக்கவில்லை - அது சிரித்தாலாவது புத்தி வராதா, உங்களுக்கு?’

     கடிதத்தைப் படித்து முடித்ததும் மணி அழவில்லை - சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

     ஊர் சிரிக்க வேண்டும் என்பது உன்னுடைய எண்ணமானால், இந்தக் கடிதத்தை நான் மறைப்பது தவறு! - இதோ வைத்துவிட்டேன் அருணா. உன்னுடைய இதோ நான் இருந்தது இருந்தபடி இருந்த இடத்திலேயே வைத்து விட்டேன்!

     தன்னையும் மீறிக் கரகரத்த குரலில் இவ்வாறு சொல்லிக் கொண்டே, அந்தக் கடிதத்தை இருந்தது இருந்தபடி இருந்த இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினான் மணி.

     அப்போது, “என்ன கடிதம், ஏன் இந்தக் கோலம்?” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் மோகன்.

     “என்னை ஒன்றும் கேட்காதே; அந்தக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார், தெரியும்!” என்றான் மணி, அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், கடிதத்தை மட்டும் முதுகுப்புறமாகக் கையை நீட்டி அவனுக்குச் சுட்டிக் காட்டி.

     மோகனும் அதற்குமேல் அவனை ஒன்றும் கேட்கவில்லை; குனிந்து கடிதத்தை எடுத்தான்.